World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Apartheid-style law passed by Knesset

இஸ்ரேல்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இன ஒதுக்கல் பாணியில் அமைந்த சட்டம்

By David Cohen
13 August 2003

Back to screen version

ஜூலை 31 ந் தேதியன்று இஸ்ரேலிய நாடாளுமன்றம் (Knesset) 53 க்கு 25 என்ற வாக்கெடுப்பில், ''தேசிய இனம் மற்றும் இஸ்ரேலுக்குள் குடியேறுவது'' என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் அப்பட்டமான இன ஒதுக்கல் அடிப்படையில் அமைந்ததாகும். இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் வாழுகின்ற பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருக்கிற தங்களது கணவன் அல்லது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதையும் இஸ்ரேல் குடியுரிமை பெறுவதையும் இந்த சட்டம் தடுக்கிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றம் கோடைக்கால விடுமுறைக்காக ஒத்தி வைக்கப்படுவதற்கு முன் பிரதமர் ஏரியல் ஷரோன் அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்றிருப்பதுடன் தனது அரசாங்கத்திற்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளார். தற்போது புதிதாக இயற்றியுள்ள இச்சட்டத்தின்படி பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மட்டுமே இந்த சட்ட விதிகள் பயன்படுத்தப்படும் என்றாலும், இதர நாடுகளை சார்ந்தவர்கள் இஸ்ரேலிய குடிமக்களை திருமணம் செய்துகொள்ளும் போது தங்கியிருப்பதற்கும், இஸ்ரேல் குடியுரிமை பெறுவதற்கும் மனு செய்தாக வேண்டும்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இஸ்ரேலில் அரபு சிறுபான்மை உரிமைகள் காப்புச்சட்ட நிலையம் (Adalah organisation) இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது. இஸ்ரேல் இயற்றியுள்ள இந்த புதிய சட்டம் அந்நாட்டு அரசியல் சட்டப்படி செல்லுபடியாகாது என்பது இந்த அதாலா அமைப்பின் வாதமாகும்.

எல்சானா மற்றும் திபிலா குடும்பங்களை சாக்கி காத்தீம் குடும்பங்கள் என்று அழைப்பார்கள். இஸ்ரேலில் வாழும் இஸ்ரேலிய அரபு குடிமக்களின் மற்றும் இஸ்ரேலிய அரபு எம்.பிக்களின் உயர் அதிகாரம் படைத்த குழுவின் தலைவர் சாக்கி கத்தீப்பாகும்.

அதாலா அமைப்பின் கருத்துப்படி இந்த புதிய சட்டமானது, இஸ்ரேல் அரசியல் யாப்பிலுள்ள சமத்துவ, சுதந்திர மற்றும் தனிமனித உரிமைகளை மீறுவதாக அமைந்திருகிறது. ஏனென்றால் இஸ்ரேலிய குடிமக்கள் அதாவது இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீன குடிமக்கள் தங்களது கணவன் அல்லது மனைவியின் நாட்டை அடிப்படையாகக் கொண்ட உரிமைகளை அனுபவிப்பதை இந்த புதிய சட்டம் கட்டுப்படுத்துகிறது என்று உச்சநீதி மன்றத்திற்கு தாக்கல் செய்துள்ள மனுவில் அதாலா அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. அதாலாவின் வலைத் தளம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த செய்திக் குறிப்பில் இப் புதிய சட்டதை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது. இஸ்ரேல் குடிமக்கள் பாலஸ்தீன பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்து கொள்ளும்போது அவர்களுக்கு குடியுரிமை மற்றும் வாழும் உரிமையை வழங்குவதற்கு மாற்று நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்றும் அதாலா அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

எல்சானா குடும்பம் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற குடும்பமாகும். இந்த புதிய சட்டத்தால் அத்தகைய குடும்பங்கள் திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் குடிமகனாக உள்ள மூரத் அல்சானா என்பவர் அதாலா அமைப்பின் அலுவலக வழக்கறிஞர் ஆவர். அவர் 2003 மார்ச் மாதம் மேற்குகரைப் பகுதியிலுள்ள பெத்தலேகம் நகர வாசியான அபீர் எல்சானா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். திருமதி எல்சானா ஒரு சமூக சேவகர். அல் கதீஸ் பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார். அவர்களது திருமணத்திற்கு பின்னர் எல்சானா தனது புதிய மனைவியின் சார்பில் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பினார். அந்தக் கோரிக்கை மனு இஸ்ரேலில் தனது மனைவிக்கு வாழுகின்ற உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இஸ்ரேலிய உள்துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அதாலா அமைப்பு எல்சானா மற்றும் திபிலா குடும்பங்களான சாக்கி கத்தீப் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவோடு இணைத்து, அவரது வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. ''நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் இப்படி ஒரு சட்டம் இயற்றப் போகிறார்கள் என்பதும், அரசாங்கத்தின் இந்த முடிவினால் எங்களது தினசரி வாழ்க்கையில் குறுக்கீடு ஏற்படும் என்பதும் நாங்கள் அறிந்ததுதான். எனது மனைவி என்னோடு எனது வீட்டில் இருக்க முடியாது. அவளோடு நான் அவளது பெத்தலேகம் வீட்டில் வாழ முடியாது. சட்டம் இயற்றியவர்கள் நாங்கள் இருவரும் வாழ முடியாத அளவிற்கு செய்திருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளை அவர்கள் ரத்து செய்துள்ளார்கள். அப்படி ரத்து செய்வதற்கு நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. நான் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு கசப்பான ஓரு நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். நானும் எனது மனைவியும், கடந்த காலத்தில் எந்த விதமான குற்றச்சார்புடைய நடவடிக்கை எதிலும் இறங்கியது இல்லை. அல்லது பாதுகாப்பிற்கு குந்தகம் செய்கின்ற வகையில் நடந்து கொண்டதும் இல்லை. ஆனால் எனது மனைவி வாழுகின்ற பெத்தலேகம் நகரின் பிரதான இனத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறோம். ஆதலால் எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன''.

இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல் தொடர்பான இஸ்ரேலில் உள்ள தகவல் மையம் ''பீட்சலம்'' (B'Tselem) என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ''இந்த புதிய சட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த ஆணையோ, பெண்ணையோ, திருமணம் செய்துகொள்ள விரும்புகிற ஒவ்வொரு இஸ்ரேல் குடி மக்களுக்கும் தீங்கு செய்யும். இந்த மசோதா முன் தேதியிட்டு செயல்படுத்தப்படப் போவதால், ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உள்துறை அமைச்சகமானது, இந்தக் குடும்பங்கள் இணைந்து கொள்வதற்கு செய்து கொண்டிருக்கும் மனுக்களை முடிவு செய்வதில் நீண்ட தாமதத்தை செய்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், இஸ்ரேலில் சட்டப்பூர்வமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மற்றும் இணைந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள் தனித்து வாழ வேண்டும். இஸ்ரேலை விட்டு வெளியேறிவிட வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் இந்த அமைப்பு கூறியிருப்பதாவது:- ''இந்தச் சட்டம் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை மட்டும் பாதிக்காது. அவர்களது குழந்தைகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும். இஸ்ரேலின் உள்துறை அமைச்சக கொள்கைப்படி ஆக்கிரமிப்பு பகுதிகளில் பிறந்த குழந்தைகள், இஸ்ரேலின் நிரந்தர குடியுரிமை உள்ளவர்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் குடும்ப பிணைப்பு சான்றிதழ் பெற்றாக வேண்டும். அந்த சான்றிதழ்கள் கிடைத்தால்தான் அத்தகைய குழந்தைகள் இஸ்ரேலில் குடியுரிமைகளைப் பெறமுடியும். 2002 மே மாதம் முதல் இத்தகைய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்காக தாக்கல் செய்த மனுக்கல் அனைத்தும் பிரசீலணை இல்லாமல் முடக்கப்பட்டு விட்டதால் உள்துறை அமைச்சகம் அத்தகையை குழந்தைகளை பதிவு செய்ய மறுத்துவிட்டது.

''புதிய சட்டம் இந்த நிலவரத்தை மாற்றியிருக்கிறது. சட்டப்படி உள்துறை அமைச்சகமும், சிவில் நிர்வாகமும், இஸ்ரேலிய பிரஜைகளுக்கு மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பிறந்த குழந்தைகளில் 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிறப்பு அனுமதிகளை வழங்கும். அவர்கள் இஸ்ரேலில் வாழமுடியும். அந்த சிறப்பு அனுமதிகள் கொடுக்கப்படுவது எதற்காக என்றால் சட்டப்படி இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெற்றோரில் இருந்து குழந்தைகளை பிரித்து விடுவதை தடுப்பதற்காகத்தான்'' என்று அந்த அமைப்பு அறிக்கையில் கூறியிருக்கிறது.

பீட்சலம் எழுப்பியுள்ள வாதத்தின்படி இந்த புதிய சட்டமானது இந்தப் பிரிவை சார்ந்த குழந்தைகளுக்கு எதனைத் தரும் என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. சிவில் நிர்வாகத்துறை அனுமதி வழங்குமானால் அந்த அனுமதிகள் குறுகிய காலத்திற்குத்தான் செல்லுபடியாகும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொதுவான ''மூடும் நடவடிக்கைகள்'' மேற்கொள்ளப்படும் போது அத்தகைய குறுகிய கால அனுமதிகள் ரத்து செய்யபப்படுகின்றன. மேலும் சிவில் நிர்வாக அனுமதிகள் சுகாதார காப்பீடு போன்ற சமூக நலன்களை தருவதில்லை.

பீர் ஜீட் (Bir Zeit) பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 வயது மாணவர் அலி, உலக சோசலிச வலைத் தளத்திற்கு குறிப்பிடுகையில், ''நாட்டை பாதுகாக்கிறோம் என்று மிகுந்த அகந்தையோடு இந்த மசோதாவை நியாயப்படுத்துவதன் மூலம் இஸ்ரேல் எந்த அளவிற்கு சட்டத்தை மதிக்கிறது என்பதை அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இஸ்ரேலியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட பாலஸ்தீனியர்களின் குடும்பம் இணைவதற்கான அனுமதி வழங்கப்பட்டதை யாராவது எனக்கு காட்ட முடியுமா?

''பீட்சலம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். மிக ஆபூர்வமாக எங்காவது ஒரு இடத்தில் தேச பாதுகாப்பு தொடர்பான குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதற்காக, அந்த சமுதாயம் முழுவதையும் தண்டிக்கின்ற வகையிலும், எந்தவிதமான குற்றமும் செய்யாத மிகப்பெரும்பாலான மக்களது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற வகையிலும் மிகத் தீவிரமான சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.

இந்தச் சட்டத்தின் வலதுசாரி ஆதரவாளர்கள், ஓராண்டிற்குப் பின்னர் காலாவதியாகிவிடும் இச்சட்டம், பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவை என்று கருதப்படும் பட்சத்தில் புதுப்பிக்கப்பட முடியும். கிழக்கு ஜெருசலேத்தில் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில், குடும்ப ஐக்கியத்தின் மூலம் இஸ்ரேலில் வசிப்பிடம் பெறுவோர் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேலியர்கள் மீதாக 19 தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். பீட்சலம் இதற்கு ஆதாரம் இல்லை, அரசாங்கமும் அந்தவித ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையும் இச்சட்டத்தைக் கண்டனம் செய்திருக்கிறது. அதன் அறிக்கையில் "இஸ்ரேலின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள, பாலஸ்தீனிய மூலம் உடைய இஸ்ரேலிய குடிமக்களை இலக்கு வைக்கிறது. அவர்கள் பொதுவாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்களைத் திருமணம் புரிவதால்" என்று சுட்டிக்காட்டுகிறது. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தம்பதியர் இச்சட்டத்தால் பாதிக்கப்படுவர் என்று அது குறிப்பிட்டுள்ளது. குடும்ப இணைவிற்காக சில தம்பதியர் 10 ஆண்டுகள் வரை காத்திருந்து வருகின்றனர். மற்றும் பலர் தனியாக வாழும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது அனுமதி இன்றி மற்றும் எந்த நேரமும் நாடு கடத்தப்படும் ஆபத்தில் தங்களது மனைவியுடன் இஸ்ரேலில் வாழும்படியாக நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலின் பிரதான ஆதரவாளரான, அமெரிக்காவில் உள்ள புஷ் நிர்வாகம், தனது தீர்ப்பை வழங்குமுன் புதிய சட்டமியற்றலை ஆய்வு செய்யப்போவதாக மட்டும் கூறியது. "அதனை மிக நெருக்கமாகப் பார்ப்போம்'' என்று அரசுத்துறைப் பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் சுருக்கமாகக் குறிப்பிட்டார். "இனக் குழுவிற்காக, அல்லது இனத்திற்காக அல்லது பால், இயலாமை அடிப்படையில் தனிநபர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் எந்த சட்டத்தையும் நிச்சயம் நாம் எதிர்க்கிறோம் மற்றும் இந்த சட்டத்தை மிகக் கவனமாக நாம் பார்க்க இருக்கிறோம் மற்றும் இதன் மீதாக நாம் கொண்டிருக்கும் நிலையான கண்ணோட்டங்களின் கீழ் எவ்வாறு அது பொருந்துகிறது என்பதையும் பார்ப்போம்" என அவர் மேலும் கூறினார்.

யூத நாட்டிற்கு அதன் ''யூத தன்மை ஆபத்தில் இருப்பதாக'' இஸ்ரேல் ஆட்சி கவலை கொண்டிருக்கிறது என்பதில் ரகசியம் எதுவும் இல்லை. அரபு வம்சாவழியில் வந்த 10 லட்சம் இஸ்ரேல் மக்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 5 ல் 1 பங்காகும். 1990 களில் உருவான ஒஸ்லோ ஒப்ப்பந்தப்படி இஸ்ரேல் குடிமக்களாக இருக்கின்ற அரபிகள் திருமணம் செய்து கொள்கிற ஆண்கள் அல்லது பெண்கள் இஸ்ரேலின் குடியுரிமை பெறுவற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் குடிமக்களாக இருக்கும் அராபியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

எகிப்தின் முன்னணி செய்திப்பத்திரிகையான அல் அக்ரம்', இஸ்ரேலில் பல்வேறு அமைச்சகங்கள் இஸ்ரேலில் குடிமக்களாக இருக்கும் அரபியர்களின் எண்ணிக்கை வளர்வதை தடுப்பதற்கு, அல்லது யூதப் பெண்கள் அதிகளவில் பிள்ளைகளை பெறுவதை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக எழுதியுள்ளது.

இஸ்ரேலின் சமூகநல மற்றும் தொழிலாளர் அமைச்சகம் மக்கள் தொகை தொடர்பான கவுன்சில் கூட்டத்தை சென்ற ஆண்டு மீண்டும் நடத்தியது. அந்தக் கவுன்சிலில் இனவெறி அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே அந்த அலுவலகம் மூடப்பட்டு சீலிடப்பட்டது. அந்தக் கவுன்சிலில் வழக்கறிஞர்கள், கல்விமான்கள், மற்றும் பிள்ளைப்பேறு மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர். இஸ்ரேல் குடிமக்களாக உள்ள அரபு மக்களுக்கு இணையாக யூதமக்களது எண்ணிக்கையை உயர்த்துவதற்கான வழிவகைளை ஆராய்ந்தது என்ற விபரங்களை அல் அக்ரம் என்ற பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் சின்பெட் என்ற தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவோடு பிரதமர் ஷரோனும், அவரது அட்டார்னி ஜெனரல் ரூபியன் ஸ்பீனும், குடியுரிமை சட்டத்திற்கு மற்றொரு திருத்தம் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டனர். இஸ்ரேலில் பாலஸ்தீன இஸ்ரேலின் அரபு ஜோடிகளுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்ரேல் குடியுரிமையை மறுக்கின்ற வகையில் அத்தகைய சட்டதிருத்தம் அமைய வேண்டும் என்று பிரதமரும், அட்டார்னி ஜெனரலும் ஆலோசனை கூறியிருப்பதாகவும் அல் அகரம் பத்திரிகை தகவல் தந்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved