World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel's plan to attack Iran confirmed

ஈரானை தாக்க இஸ்ரேல் திட்டம் தீட்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

By Jean Shaoul
30 September 2008

Back to screen version

சென்ற வசந்த காலத்தில் ஈரானின் அணு நிலையங்கள் மீதாக ஒரு இராணுவத்தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் தீவிரமாக ஆலோசித்தது என்பதை சென்ற வாரம் கார்டியன் செய்தித்தாள் உறுதிப்படுத்தியிருக்கிறது. சென்ற மே மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது, அப்போதைய பிரதமர் எகுத் ஓல்மெர்ட் இது குறித்து பேசியதாகவும், ஆனால் புஷ் அதனை நிராகரித்ததாகவும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

புஷ்ஷின் பயணத்திற்கு பிறகு ஓல்மெர்ட்டை சந்தித்த, ஐரோப்பிய அரசாங்க தலைமையிடம் வேலை செய்யும் ஒரு மூத்த தூதரக அதிகாரியை மேற்கோள் காட்டி, கார்டியன் பத்திரிகையின் மூத்த மத்திய கிழக்கு வர்ணனையாளர் ஜோனாதன் ஸ்டீலி இதனை தெரிவித்திருக்கிறார்.

குறிப்பு எடுப்பவர்கள் கூட அருகில் இல்லாமல் இந்த பேச்சுவார்த்தை மிக அந்தரங்கமாக நிகழ்ந்ததாக கார்டியன் வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா சம்மதிக்க மறுத்ததை உள்ளது உள்ளவாறே ஓல்மெர்ட் ஏற்றுக் கொண்டார் எனவும், புஷ் அதிகாரத்தில் உள்ளவரை இந்த அமெரிக்க நிலைப்பாடு மாறப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டார் எனவும் அவை கூறின.

தாக்குதலுக்கு ஒப்புதலளிக்க புஷ் மறுத்தது என்பதானது பல காரணிகளின் அடிப்படையிலானது. முதலாவதாக, இத்தகையதொரு தாக்குதல் ஈரானை பதிலடி கொடுக்க தூண்டும், இதில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க இராணுவ மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்களும் தாக்குதலுக்குள்ளாகும் என்ற கவலை அமெரிக்காவுக்கு. ஈராக்கில் அமெரிக்காவால் அமர்த்தப்பட்டிருக்கும் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் ஈரானுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருப்பதோடு அதனைச் சார்ந்தும் இருக்கிறது.

இரண்டாவதாக, டஜன்கணக்கான விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தினாலும் கூட ஈரான் முழுவதும் பரந்துபட்டு பாதுகாப்பான இரகசிய இடங்களில் இரகசியமாக அமைக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணு நிலையங்களை நொருக்குவதில் இஸ்ரேலின் விமான தாக்குதல் வெற்றி பெறுவது என்பது அநேகமாக சாத்தியமில்லாதது.

இதுதவிர, ஈரானின் யுரேனிய செறிவூட்டும் ஆலை அமைந்திருக்கும் நடான்ஸுக்கு செல்லும் குறைந்த தூர வழியானது இஸ்ரேலில் இருந்து 700 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் இருக்கிறது. இங்கு செல்வதென்றால் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஈராக்கின் வான்வெளிப் பகுதியை அது கடந்து செல்ல வேண்டி வரும். எனவே வெளிப்படையான அமெரிக்க ஒப்புதல் இல்லாமல் இத்தகையதொரு தாக்குதலை மேற்கொள்வது இஸ்ரேலுக்கு சாத்தியமில்லாதது.

தாக்குதல் குறித்து தனக்கு தெரியாது என்று உத்தியோகபூர்வமாக மறுப்பதற்கு அமெரிக்காவால் இயலாது போகும். புஷ் தான் இத்தகையதொரு போர் நடவடிக்கையை தூண்டியிருப்பதாக ஈரான் கருதி, அது பதிலடி கொடுப்பதற்கு இது காரணமாகி விடும்.

ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டும் தான் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிற, தனது அணு நிலைகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக தற்காப்பு நடவடிக்கையில் தான் ஈடுபடக் கூடும் என்பதை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. வான்வெளி தாக்குதல் நடந்தால் அது ஈரானைக் கடந்து ரொம்ப தூரம் செல்லக் கூடிய முழு அளவிலான போராக வடிவுறும், இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா அதிகமான அளவில் தனிமைப்படுத்தப்படுவதை விளங்கப்படுத்தும். இது இஸ்ரேல் மீது ஹெஸ்போல்லா தாக்குதல் நடத்துவதற்கும் அமெரிக்காவுக்கு உள்ளேயே கூட பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதற்கும் இட்டுச் செல்லக் கூடும்.

ஒரு அதிகாரி கூறினார்: "இஸ்ரேலுக்கு வெளியே ஹெஸ்போல்லாவின் கடைசி பயங்கரவாத தாக்குதலானது நிகழ்ந்து 10 வருடங்களுக்கும் அதிகமாகி விட்டது. பியுனோஸ் ஏர்ஸில் இருக்கும் ஒரு அர்ஜென்டினா-இஸ்ரேல் கூட்டமைப்பு கட்டிடத்தை இது தாக்கியது [85 பேர் பலியானார்கள்]. கனடாவில் லெபனானை சேர்ந்த மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இதில் சில ஹெஸ்போல்லா ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்து நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும்" என்று அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

எந்த ஒரு "செயல்பாட்டு கூட்டத்திலும்" ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்ட மறுத்ததாக கூறப்படுவதை ஓல்மெர்ட்டின் பத்திரிகை செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளது Guardian செய்தியை உறுதிப்படுத்தவே உதவியிருக்கிறது.

புஷ் மற்றும் ஓல்மெர்ட் இடையே நடந்த அந்தரங்க உரையாடலின் சாரம் குறித்து கருத்து கூற மறுத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் கோர்டான் ஜோன்ட்ரோ கூறினார்: "அனைத்து வாய்ப்புகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன; இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தான் எங்களது முதல் வகை நடவடிக்கைகளாக இருக்கும் என்பது தான் ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருக்கிறது".

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் திட்டத்தை புஷ் நிராகரித்ததாக மறைவில் காட்சியளித்தாலும், பொதுவில் ஈரானை நோக்கிய தனது முரட்டுத்தன மனோபாவத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். குறைந்தபட்சம் தற்சமயத்திற்கேனும் இராணுவ தாக்குதல் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று அவர் எந்த ஒரு குறிப்பும் கூறத் தயாராயில்லை.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போது புஷ் அவை உறுப்பினர்களிடம் கூறியதாவது: "ஈரானின் அணு ஆயுத அபிலாசைகளை எதிர்ப்பதில் அமெரிக்கா உறுதியாக உங்கள் பக்கம் உள்ளது. உலகில் பயங்கரவாதத்தை பரப்புவதில் தலைமையிடம் வகிக்கும் ஒரு நாட்டினை உலகின் அதிபயங்கரமான ஆயுதத்தை கொண்டிருக்க அனுமதிப்பது என்பது வருங்கால தலைமுறையினருக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். அமைதியின் நலன் வேண்டி, ஈரான் அணு ஆயுதம் கொண்டிருப்பதை உலகம் அனுமதிக்க கூடாது".

உண்மையில், ஈரான் தனது எந்த அணு ஆயுத திட்டத்தையும் 2003ம் ஆண்டிலேயே கைவிட்டு விட்டது என்கிற முடிவுக்கு வந்திருப்பதான தேசிய உளவுத்துறை அறிக்கை (NIE) நீண்ட தாமதத்திற்கு பின் சென்ற டிசம்பரில் வழங்கப்பட்டிருந்த பின்னரும் கூட, இஸ்ரேல் ஈரான் அணு நிலைகள் மீதான தனது தாக்குதல் திட்டங்களை தொடரவே செய்தது.

பிராந்தியத்தில் ஈரானை தனது முக்கிய எதிரியாகப் பார்க்கும் இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபனம் NIE மதிப்பீட்டை நிராகரித்ததோடு பதவியை விட்டு செல்வதற்கு முன்னதாக புஷ் நிர்வாகம் "ஈரான் விவகாரத்தை" முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மத்திய கிழக்கில் தனது இராணுவ மேலாதிக்கத்தை பராமரிப்பதிலும், ஈரானோ அல்லது அதன் அண்டை நாடு எதுவுமோ அணு சக்தி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று ஆயுதங்களை உருவாக்குவதில் இறங்கி விடக் கூடாது என்பதிலும் இஸ்ரேல் தீர்மானமாக இருக்கிறது. இஸ்ரேல் 200க்கும் அதிகமான அணு ஏவுகணைகளைக் கொண்டிருக்கிறது என்பது ஊரறிந்த இரகசியம். தனது அணு திறன் மேலாதிக்கத்தை தொடர்வதற்காக, ஈரான் மீது தூண்டலற்ற கிரிமினல் தாக்குதலை நடத்துவதன் மூலம் மொத்த பிராந்தியத்தையும் போருக்குள் தள்ள இஸ்ரேலின் ஆளும் மேற்தட்டு முழுமையான தயாரிப்புடன் இருக்கிறது.

ஈரானின் அணு நிலைகளால் எழுந்துள்ள "அச்சுறுத்தலை" முடக்கும் பொருட்டு, இஸ்ரேல் தனது சொந்த திறனில் இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று சென்ற நவம்பரில் ஓல்மெர்ட் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தனர். சென்ற செப்டம்பரில் ஆளில்லாத சிரிய இலக்கு ஒன்றினை இஸ்ரேல் சிதைத்தது. அந்த இலக்கு வட கொரியாவினால் கட்டப்பட்ட அணு நிலையம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறின. இந்த தாக்குதல் ஒரு தீவிரமான சர்வதேச கண்டனம் எதனையும் பெறவில்லை என்பதோடு, ஈரான் மீது வரவிருக்கும் தாக்குதலுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்தது.

இஸ்ரேலை தாக்கும் பட்சத்தில், ஈரான் முழுமையான சீரழிவைக் காண வேண்டியிருக்கும் என்று சென்ற ஏப்ரல் மாதத்தில் தேசிய உள்கட்டமைப்பு அமைச்சர் பெஞ்சமின் பென்-எலியேசர் அச்சுறுத்தல் விடுத்தார். இந்த அச்சுறுத்தலானது, பாரிய அளவிலான ஐந்து நாள் பொதுமக்கள் பாதுகாப்பு இராணுவ பேரணிக்கும் மற்றும் ஈரானிய அணு நிலைகள் மீதான முன்னரே தாக்கித் தனதாக்கிக்கொள்ளும் இராணுவ தாக்குதல் குறித்த தொடர்ந்த குறிப்புகளுக்கு இடையேயும் விடுக்கப்பட்டது.

புஷ் நிராகரித்ததன் பின்னரும் கூட, வாய்வழி அச்சுறுத்தல்களும் ஈரானுக்கு எதிரான உடனடியான வான்வெளி தாக்குதல்கள் குறித்த ஊகங்களும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஜூன் மாதத்தில், 100க்கும் அதிகமான F-15 மற்றும் F-16 போர் ஜெட் விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்களுக்கு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தொலை தூர பயிற்சியை இஸ்ரேல் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை ஈரான் மீதான தாக்குதலுக்கான ஒரு ஒத்திகையே என்று பெயர் கூறாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, நியூயோர்க் டைம்ஸ் தகவல் தெரிவித்தது.

துணை பிரதமரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஷால் மொபாஸ் சில வாரங்களுக்கு முன்னதாக, 'சர்வதேச தடைகள் பலனளிக்காத நிலைக்கு சென்று விட்டதால் ஈரான் மீதான ஒருதரப்பான தாக்குதல் "தவிர்க்கவியலாதது" என்று எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு இராஜதந்திர முயற்சிகளே ஈரானை கையாளுவதற்கான சிறந்த வழியாகும் என்பதாக இருக்கிறது. இந்த முரட்டு மிரட்டல்களும் போர் விளையாட்டுகளும் அணுச் செறிவூட்டும் வேலைத் திட்டத்தை கைவிடக் கோரும் அமெரிக்க நெருக்குதலுக்கு ஈரான் பணிவதற்கு செய்யப்படும் ஒன்றுபட்ட நெருக்குதல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஈரானின் அணு நிலைகள் மீது ஒரு வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடிக்கும் திறனை இஸ்ரேல் கொண்டிருக்கவில்லை என்பதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் செல்வாக்குள்ள மனிதர்களை பொறுத்த வரை, இத்தகைய அச்சுறுத்தல்களின் இறுதி நோக்கம் இத்தகையதொரு தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமெரிக்காவை கொண்டு வருவது தான்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈரான் குறித்த கேள்வி மிகவும் பிளவுபடுத்தும் விஷயங்களில் ஒன்றாக இருக்கும் நேரத்தில், இந்த பிராந்தியத்தில் இராணுவவாதத்தை அதிகரிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆளும் மேல்தட்டுக்குள் சில கூறுகள் நெருக்கி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை.

F-22 இரகசிய குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு இஸ்ரேல் சமீபத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கிறது. இந்த விமானங்கள் இஸ்ரேல் வான் படையால் திட்டமிடப்படும் இலக்கிட்ட குண்டுவீச்சு தாக்குதல் வகைகளுக்கு மிகப் பொருந்தும் வகையில் பலனளிக்கக் கூடியவையாகும். இஸ்ரேலிடம் இருக்கும் நடப்பு F-15 வகை விமானங்கள் கொண்ட கப்பலும் கூட ஈரான் மீதான ஒரு தாக்குதலை தொடங்குவதற்கு பயன்படுத்தப்படக் கூடும்.

ஈரானை சென்று தாக்கக் கூடிய F-161 போர் குண்டுவீசும் விமானங்கள் 90 ஐ இஸ்ரேலிய இராணுவம் வாங்கி வைத்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் இன்னும் 11 ஐ பெற இருக்கிறது. அணு ஏவுகணைகளை செலுத்தும் திறன் பெற்றதாக கருதப்படும் டால்பின் வகை நீர்மூழ்கிக் கலங்கள் இரண்டை புதிதாக ஜேர்மனியிடம் இருந்து வாங்கியிருக்கிறது. ஏற்கனவே இவ்வகையில் மூன்றை இஸ்ரேல் கொண்டிருக்கிறது.

இந்த மாத ஆரம்பத்தில், 90 செமீ இரும்பு உறுதியுடனான கான்கிரீட்டில் ஊடுருவும் வசதி கொண்ட 1,000 நவீன வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க, தான் முனைப்புடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை, காங்கிரசில் தெரிவித்தது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் எதனையும் குறித்து முன்கூட்டிய எச்சரிக்கையை அளிக்கவல்ல ஒரு மேம்பட்ட ராடார் அமைப்பை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கிறது என்று ஞாயிறன்று அறிவிப்பு செய்யப்பட்டது. FBX-T என்று அழைக்கப்படும் இது, அமெரிக்க இராணுவத்தின் இணைந்த மூலோபாய தரை வழி மையத்துடன் இணைக்கப்பட்டு, 120 அமெரிக்க இராணுவ படைவீரர்களால் இயக்கப்படும். இஸ்ரேலின் Arrow II என்னும் வெடிக்கும் ஏவுகணை கவசமானது தற்போது குறைந்த மேம்பாட்டுடனான ராடாருடன் தான் செயல்படுகிறது.

சென்ற மே மாதத்தில் ஈரான் மீதான தாக்குதல் அதீத கூர்மையான நடவடிக்கையாக இருந்திருக்க கூடும் என்பதால் புஷ் ஈரானைத் தாக்க இஸ்ரேலுக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டிருந்தாலும் கூட, பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது, இத்தகையதொரு தாக்குதல் திட்டம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. உண்மையில், நவம்பரில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீதான தூண்டப்படாத தாக்குதல் ஒன்றுக்கு, புஷ் நிர்வாகத்தில் இருக்கும் கூறுகள் இன்னமும் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved