World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US sends senior diplomat to nuclear talks with Iran

ஈரானுடனான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மூத்த இராஜாங்க அதிகாரியை அனுப்புகிறது

By Peter Symonds
18 July 2008

Back to screen version

ஈரானின் மூத்த அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் சையத் ஜலீலி உடன் ஜெனீவாவில் நாளை நடைபெறவுள்ள சர்வதேச பேச்சுவார்த்தையில் அமெரிக்க இராஜாங்க அதிகாரி கலந்து கொள்வார் என்று புதனன்று வெளியிடப்பட்ட புஷ் நிர்வாகத்தின் அறிவிப்பு, இன்றைய பதட்டமான நிலைமைகளுக்கிடையில், தெஹ்ரானுடனான வெள்ளைமாளிகையின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் காட்டுகிறது. அணுசக்தி பிரச்சனை குறித்த எவ்வித பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்குபெறுவதற்கு முன்னால், ஈரான் அதன் யூரேனியம் செறிவூட்டலையும், பிற அணுசக்தி ஆலைகளையும் மூட வேண்டும் என புஷ் அதிகாரிகள் முன்னதாக வலியுறுத்தி வந்தார்கள்.

அரசியல் விவகாரத்துறை துணைசெயலர் வில்லியம் பேர்ன்ஸ், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் ஜேவியர் சோலானாவுடன் இந்த கூட்டத்தில் கலத்து கொள்வார். தடைபட்டு நிற்கும் அணுசக்தி பிரச்சனையை தீர்க்க கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மீதான தெஹ்ரானின் உத்தியோகபூர்வ பிரதிபலிப்பை ஜலீலி இதில் அறிவிப்பார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தரமாக அங்கத்தவரான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய அனைத்து நாடுகளின் (ஜேர்மனியுடன் சேர்த்து P5+1 என்று அழைக்கப்படுகிறது) பிரதிநிதிகளும் தற்போது இதில் கலந்து கொள்வார்கள். சலுகைகளை வழங்குவதற்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும், இதுபோன்ற கூட்டங்களில் பங்கு பெறுவதை அமெரிக்கா முன்னதாக நிராகரித்து வந்தது.

பேர்ன்ஸ் ஜலீலியுடன் பிரத்தியேக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தமாட்டார் என்றும், அமெரிக்கா கூட்டத்தில் ஒருவராக மட்டுமே கலந்து கொள்ளும் என்றும் வாஷிங்டன் குறிப்பிட்டிருந்தது. எவ்வித பேச்சுவார்த்தை முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னால் ஈரான் யூரேனியம் செறிவூட்டலை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை பேர்ன்ஸ் சுருக்கமாக விளக்கி, பிரதிபலிப்பை எதிர்பார்ப்பார். ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான புஷ்ஷின் அழைப்பு பேச்சுவார்த்தைக்கான தனது அழைப்பை உறுதிப்படுத்திக்காட்டுவதாக அறிவித்த ஜனாநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஓபாமாவின் அறிக்கைகளை தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டானா பெரீனோ குறிப்பிட்டதாவது: "கொள்கையின் சாராம்சம் அவ்வாறே உள்ளது, ஆனால் இதுவொரு புதிய தந்திரோபாயமாகும்" என்றார்.

ஆனால் அனைத்து எச்சரிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு, வெளிவிவகாரத்துறையில் முன்றாவது இடத்தில் உள்ள அதிகாரியான பேர்ன்ஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது வலியுறுத்தல்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. "அமெரிக்கா இந்த இராஜாங்க முறையின் பின்னணியில் உறுதியாக உள்ளது மற்றும் எங்கள் கூட்டினருடன் உறுதியாக ஐக்கியப்பட்டும் உள்ளது என்ற குறிப்பையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். மேலும் ஈரானியர்கள் இந்த செய்தியை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்." என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நேற்று அறிவித்தார். ஐரோப்பிய அதிகாரிகள் International Herald Tribune க்கு கூறுகையில், அமெரிக்கா வெறுமனே கூட்டத்தில் வந்து அமர்வது ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் பகட்டு பேச்சுக்களை விட உதவியாகவே இருக்கும்." என்று தெரிவித்தார்கள்.

இந்த முடிவு உயர்மட்ட அளவில் எடுக்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. "துணை ஜனாதிபதி டிக் ஷென்னி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஜே. ஹார்ட்லி, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஜோஸ்வா பி. போல்டன் மற்றும் பேர்ன்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட அண்மையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு தூதரை அனுப்புவதற்கான ரைஸின் பரிந்துரையை புஷ் ஏற்றுக் கொண்டார் என அது குறிப்பிட்டது. இஸ்ரேல் தாக்குதலின் ஆதரவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈரானுக்கெதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை உந்தும் ஷென்னியின் எதிர்ப்புகளை புஷ் நிராகரித்திருந்தார்.

ஈரானுடனான ஓர் இராஜாங்கரீதியான உடன்பாட்டை நோக்கிய எவ்வித முன்னெடுப்பும் பெரும் தடைகளை எதிர்கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் சோலானா ஒரு குறுகியகால ''உறையவைக்கும்'' தற்காலிக திட்டத்தை முன்வைத்துள்ளார். அதன்படி ஈரான் அதன் அணுசக்தி ஆலைகளின் எவ்வித விரிவாக்கத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும், அதற்கு பிரதிபலனாக முக்கிய சக்திகள் மேற்கொண்டு தெஹ்ரானுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபையின் எவ்வித தடைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். தொடர்ந்த நிலையான பேச்சுவார்த்தைக்கு அடித்தளமிடுவதே இக்கூட்டத்தின் நோக்கமாக இருக்கலாம். எவ்வாறிருப்பினும், ஈரான் யூரேனிய செறிவூட்டலை கைவிட்டால் மட்டுமே (இந்த நிபந்தனையை தான் தெஹ்ரான் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது) ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று வலியுறுத்துவதை அமெரிக்கா தொடர்கிறது.

எவ்வாறிருப்பினும், பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை குறிப்பிட அமெரிக்கா மற்றும் ஈரான் இரண்டுமே பல சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த சைகைகளை வெளிகாட்டியுள்ளன. அமெரிக்கா தன் பங்கிற்கு, ஜேர்மனி உட்பட பாதுகாப்பு சபை நாடுகள் (P5+1) அளித்த சலுகைகளின் ஒரு பகுதியாக பலாத்காரத்தை பயன்படுத்துவதை விலக்கிக் கொள்வதற்கான வாக்குறுதியை அளிக்க முன்வந்துள்ளது. இந்த முடிவு, சம்பிரதாயமாக குறைந்தபட்சம், "இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறை" மேசையில் இருந்து நீக்கும். அரசியல் மற்றும் பொருளாதார சலுகைகளுடன் தம்மால் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தை அனுப்பியதன் மூலம் ரைஸ் மேலும் அச்சலுகையை வலுப்படுத்தினார். யூரேனியம் செறிவூட்டல் பிரச்சனையை தவிர்த்திருந்த போதினும், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மெளனவ்செஹ்ர் மொட்டாக்கி தமது ஆரம்ப எழுத்து மூலமான பதிலில், "தர்க்கரீதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் பொதுவான அடித்தளத்தை" காண விரும்புவதாக அறிவித்திருந்தார்.

பிரிட்டனின் Guardian இதழின் கருத்துப்படி, தெஹ்ரானில் உள்ள சுவிசர்லாந்து தூதரகத்தில் அமெரிக்க நலன்களின் பிரிவினை அமைப்பது பற்றி அடுத்த மாதம் வெள்ளைமாளிகை அறிவிக்கலாம் என்பது வெகு விரைவில் மற்றொரு அமெரிக்க இராஜாங்க நடவடிக்கை இருக்கும். 1979 இல் ஷா ரேஜா பஹ்லவி தூக்கி எறியப்பட்டதில் இருந்து, ஈரானுடான தீவிர இராஜாங்க உறவுகள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் ஈரானில் இருத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதுபோன்றதொரு முன்னெடுப்பை தெஹ்ரான் எதிர்க்காது என்று அது அறிவித்துள்ளது.

உடன்படிக்கைக்கான அழுத்தங்கள்

இராஜாங்க நடவடிக்கைகள் எளிதில் உடையக் கூடியவையாக இருந்த போதினும், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இரண்டும் ஓர் உடன்பாட்டிற்கு வருவதற்கு தீவிர அழுத்தங்கள் உள்ளன. ஈரானின் எண்ணெய்க்கு உயர்ந்த சர்வதேச விலைகள் இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தடைகளால் அதிகளவில் தேவைப்படும் முதலீடுகள் மற்றும் சர்வதேச நிதி செயல்பாடுகளின் நுழைவு முடக்கப்பட்டுள்ளதால், ஈரானிய அரசாங்கம் அதன் நாட்டிற்குள் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய ஈரானிய வங்கிகள் மீது புதிய தடைகளை விதித்துள்ளதுடன், 10 பில்லியன் டாலர் திட்டமான ஈரானில் மிகப்பெரிய தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை மேம்படுத்தும் திட்டங்களில் இருந்து பிரான்ஸின் Total எண்ணெய் நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

புஷ் அரசாங்கத்தை பொறுத்த வரை, ஈரானில் சட்டவிரோத ஷியைட் போராளிகளை கையாள்வதற்கு ஈரானிய ஒத்துழைப்பை பெருமளவில் தங்கியுள்ளது. ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிரான போராளிகளுக்கு தெஹ்ரான் ஆயுதங்கள் அளிப்பதுடன், பயிற்சிகளும் அளித்து வருவதாக வாஷிங்டனிடம் இருந்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இருந்த போதினும், மார்ச்சில் இருந்து மொக்காதா அல் சதரின் ஷியைட் குழுவான மெஹ்தி இராணுவத்திற்கு எதிராக பாஸ்ரா மற்றும் பாக்தாத்தில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய படைகளின் அடக்குமுறைகளால் ஈரானிய உதவியில்லாமல் அவை அவமானமிக்க வீழ்ச்சியை அடைந்துள்ளன. ஆயுதங்களை கைவிட்டு விட்டு, மெஹ்தி இராணுவம் வலுவாக இருந்த இடங்களில் அமெரிக்கா மற்றும் ஈராக்கிய துருப்புகளை அனுமதிக்குமாறு சதர் தனது போராளிகளுக்கு அழைப்புவிடுமாறு தீவிர ஈரானிய அழுத்தமானது அவர்மீது கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை ஸ்திரப்படுத்த விரும்பும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் ஈராக்கை விட அதிகளவிலான அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் கிளர்ச்சிகளை அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது. அதற்கும் மேலாக, தலிபான் போராளிகள் என்றழைக்கப்படுபவர்களின் ஊடுருவல்கள் மீது பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் பதற்றங்களானது, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க விமான தாக்குதல்களுக்கான எதிர்கால சாத்தியப்பாடுகளும், எல்லையோர மோதல்கள் மற்றும் முக்கியமாக பாகிஸ்தானுடன் நேரடியான எழும் புதிய அபாயகரமான பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. மேலதிக படையினை அனுப்புவதற்கு நேட்டோ கூட்டினரிடம் இருந்து எதிர்ப்புகளை சந்தித்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பென்டகன் யோசித்து வருவதாக அமெரிக்க படைகளுக்கான இணைத் தலைவர் அட்மிரல் மிக்கெல் முல்லன் இந்த வாரம் குறிப்பிட்டார். ஏற்கனவே அமெரிக்க கடற்படை அதன் விமான தாக்குதலை மேம்படுத்த, அதன் USS ஆப்ரகாம் லிங்கன் எனும் யுத்த விமானத்தை பாரசீக வளைகுடாவில் இருந்து அகற்றி ஆப்கானிஸ்தான் கடற்பகுதியில் மீண்டும் நிறுத்தியுள்ளது.

அமெரிக்க மூலோபாய கவனம் மாற்றம் பெற்றிருக்கும் நிலையில், ஈரானிய ஆட்சியுடனான இசைவு மீதான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. "தற்போது மூன்றாவது முன்னணியை இப்பொழுது ஏற்படுத்துவது என்பது எங்களுக்கு தீவிர அழுத்தம் அளிக்க கூடியதாகும்... இதனால் எங்களிடம் திறன் இல்லை என்றோ அல்லது வளங்கள் இல்லை என்றோ அர்த்தம் ஆகாது, ஆனால் அது நிச்சயமாக மிகவும் சிரமமானதாக இருக்கும்." என்று ஈரானுக்கு எதிரான ஒரு புதிய யுத்தத்திற்கு அமெரிக்க இராணுவ தலைமைகளிடையே உள்ள எதிர்ப்பை குறித்து முல்லன் சமீபத்தில் விவரித்தார். சமீபத்திய வார பேச்சுவார்த்தைகளில் ஈரானை முக்கியமாக வைத்து, முல்லன் அவரின் இஸ்ரேல் தரப்புகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற கூட்டங்கள் குறித்த பெரும்பாலான அறிக்கைகளின்படி, ஈரானின் அணுசக்தி ஆலைகள் மீது இஸ்ரேலின் எந்த தாக்குதலையும் தடுத்து நிறுத்துவது முல்லனின் வேலையாக இருந்தது. இந்த மாத ஆரம்பத்தில் ஈரானின் ஏவுகணை சோதனைகளை தடுப்பதற்கான புஷ் நிர்வாகத்தின் பிரதிபலிப்பும், வலியுறுத்தல்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கான மற்றொரு அறிகுறியாக உள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஈரான் நீண்டகாலமாக அரசியல் உறவுகள் மற்றும் செல்வாக்கு கொண்டிருப்பதால், அங்கு ஈரானிய உதவிகளை அமெரிக்கா தெளிவாக எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானிய தூதர்களுக்கு இடையில் நடந்த கூட்டங்களில், ஈராக்கில் பாதுகாப்பு சூழல்கள் குறித்து மட்டுமின்றி, அதற்கு அப்பாற்பட்ட பல விடயங்களும் விவாதிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறிருப்பினும், ஈரான் அதன் தொடர்ச்சியான உதவிக்கு பிரதிபலனாக, அதன் அணுசக்தி திட்டங்கள் மீதான நீண்டகால எதிர்ப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு சமரச உடன்பாட்டையும், உறவுகளை சீராக்குவதற்கான நடவடிக்கைகளையும் மற்றும் அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின் மாபெரும் தாக்குதலுக்கான தொடர்ச்சியான அச்சுறுத்தலில் இருந்து விடுபடவும் விரும்புகிறது.

ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு பேர்ன்ஸை அனுப்பும் முடிவானது, சாத்தியக்கூறுகளை பயன்படுத்துக்கொள்ள ரைஸின் (குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது) முனைவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதன் ஓர் அறியாகும். ஈரான் அதன் அணுசக்தி ஆலைகளை மூடுவதற்கு இணங்காமல் இருப்பதும் மற்றும் சலுகை அறிவிப்புகள் மீதான பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் இருப்பதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மேலும் கடுமையான தடைகளை விதிக்கும்படியான புதிய நிர்பந்தத்திற்கு தள்ளும் என புஷ் நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. பலதரப்பு இராஜாங்கரீதியான முனைவுகளுக்கான அதன் ஆதரவை அமெரிக்கா வலியுறுத்தும் போது, ஜனாதிபதி புஷ் ஜூலை 2 இல், "அனைத்து சாத்தியப்பாடுகளும் மேசையிலுள்ளன" என்பதை உறுதி செய்தார்.

பேர்ன்ஸின் விஜயம் குறித்த அறிவிப்புக்கு, ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜோன் போல்டனின் பிரதிபலிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். அவர் அந்த முடிவை "ஒரு முழுமையான சரணடைவு" என்று முத்திரை குத்தினார். அவர் கூறியதாவது: "பின்னால் இழுப்பதற்கு நிர்வாகத்திடம் வேறெந்த வழிகளும் இல்லாத போது, அது மாற்றுவழியை கையாள்கிறது. நிர்வாகத்தின் அறிவுஜீவித்தனம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டதை எடுத்துக்காட்ட இது மற்றொரு ஆதாரமாகும்." என்றார். அமெரிக்க அரசியல் அமைப்பின் ஒரு பிரிவும், வெள்ளைமாளிகையும் ஈரானுடனான யுத்தத்தின் மீது விருப்பம் கொண்டுள்ளன என்பதை நினைவுபடுத்தும் ஒன்றாக இருக்கையிலும், பேர்ன்ஸின் விஜயம் வெறும் ஒரு சதி முயற்சியல்ல என்பதையும், அது கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் பாரிய அடிப்படை மாற்றம் என்பதேயே தீவிர வெறுப்புத்தன்மையுடன் கூடிய போல்டனின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved