World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police continue to detain SEP member

இலங்கை பொலிஸ் சோ.ச.க. உறுப்பினரை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கின்றது

By K. Ratnayake
20 September 2008

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அங்கத்தவர் வேலும்மயிலும் கமல்தாசனையும் அவரின் உறவினரான சந்திரலிங்கம் இளஞ்செழியனையும் இங்கைப் பொலிசார் விடுதலை செய்ய மறுத்துள்ளார்கள். எவ்விதமான குற்றச் சாட்டக்களும் இன்றி அவர்கள் ஐந்து நாட்களாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த தடுத்துவைப்புக்கான சாக்குப்போக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர்களுக்கு ஏதவது தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி "மேலதிக விசாரணை" செய்ய பொலிசாரை அனுமதிப்பதாகும். புலிகளுக்கு எதிராக உக்கிரமாக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் யுத்தத்தின் ஒரு பாகமாக, நாட்டின் கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்ட விதிகளின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் "புலி சந்தேக நபர்களாக" குற்றஞ் சாட்டப்பட்டு பாதுகாப்புப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

புதன் கிழமை, சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், கமல்தாசன் கட்சியின் உறுப்பினர் என உறுதிப்படுத்தி ஒரு கடிதத்தை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி இருந்த போதிலும் இந்த இருவரையும் பொலிசார் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கின்றனர். அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்க்கின்ற அதேவேளை, சோ.ச.க. நீண்ட காலமாக புலிகளின் பிரிவினைவாத வேலைத் திட்டத்தையும் மற்றும் பொதுவில் பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்ப்பதில் பிரசித்தி பெற்றதாகும்.

கமல்தாசனையும் இளஞ்செழியனையும் உடனடியாகவும் நிபந்தனை இன்றியும் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கை அதிகாரிகளுக்கு எழுதுமாறு, சோ.ச.க. யும் மற்றும் சமூக சமத்துவத்துக்கான மாணவர் அமைப்பும் (ஐ.எஸ்.எஸ்.ஈ) தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் அவசரமாக கோருகின்றது.

திங்கட் கிழமை காலை இருவரும் நீர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு பஸ்ஸில் பயணிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளை கைதுசெய்யப்பட்டார்கள். பஸ்ஸை சோதனை செய்த பொலிசார், அவர்களை விசாரிப்பதற்கு வெளியில் வருமாறு கட்டளை இட்டார்கள். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட பதிவு ஆவணத்தை பொலிசாரிடம் வழங்கிய போதிலும், அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

சோ.ச.க. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது, தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் சோமசிறி லியனகே, கமலதாசன் கட்சியின் அங்கத்தவர் என உறுதிப்படுதினால் அவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக வாக்குறுதியளித்தார். ஆயினும், திங்கட்கிழமை மாலை, அவர் தனது சுருதியை மாற்றிக்கொண்டார். லியனகேயும் புலனாய்வுதுறை கிளை அதிகாரியான ஹேரத்தும், இந்த இருவரதும் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருப்பதால், புலிகளுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தப்படல் வேண்டும் என சோ.ச.க. பிரதிநிதியிடம் கூறினார்கள்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடமிருந்தும் (டீ.ஐ.டி) யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் பொலிஸில் இருந்தும் தகவல்கள் வரும்வரை காத்திருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சோ.ச.க. அங்கத்தவராக இருப்பது புலிகளுடன் தொடர்பு இல்லை என்பதற்கு உத்தரவாதமாகாது எனத் தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸ் உயர் அதிகாரி பி.எஸ்.கே. விதான, கமலதாசனையும் இளஞ்செழியனையும் விடுதலை செய்ய வெளிப்படையாக மறுத்துவிட்டார். அவர் கெடுநோக்கமுள்ள பொய்யை நிரூபிக்க முயற்சி செய்யவில்லை.

கமல்தாசனின் உறவினர்களுடன் பேசியபோது, கட்சியின் தலையீடு "நிலமையை கெடுத்துவிட்டதாக" கூறி, சோ.ச.க. மீதான தமது பகையை பொலிசார் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த இருவருக்கும் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியத்தின் காரணமாக தடுத்து வைக்கப்படவில்லை. மாறாக சோ.ச.க. அவர்களுடைய விடுதலையை கோருவதனாலேயே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

கமல்தாசனும் இளஞ்செழியனும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானதும், அரசியல் பழிவாங்கலுமாகும் என்பது தெளிவான விடயமாகும். இலங்கைச் சட்டத்தின் படி, பொலிசார் ஒருவரை சந்தேகத்தில் 24 மணித்தியாலங்கள் வைத்திருக்க முடியும். அல்லது பயங்கரவாதம் தொடர்பான சந்தேகத்தில் அல்லது அரசுக்கெதிரான சதி நடவடிக்கை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை 48 மணி நேரமே தடுத்து வைக்க முடியும். அதற்கு பின்னர், எந்தவொரு கைதியையும் பொலிசார் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று தடுத்து வைப்பதற்கான கட்டளையைப் பெற வேண்டும். கமல்தாசனுக்கோ அல்லது அவரின் உறவினர்களுக்கோ அவர்கள் எந்த சட்டத்தின் அடிப்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது அவர்கள் நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்படாதது ஏன் என்பது பற்றி சொல்லப்படவில்லை.

கமல்தாசன் 1998ல் பூநகரியில் இருக்கும் போது சோ.ச.க. யில் இணைந்து கொண்டார். அவர் தனது சொந்த ஊரான காரைநகரில் இருந்து பூநகரியில் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அவர் மீண்டும் காரைநகருக்கு திரும்பிய பின்னர், மீன்பிடி மற்றும் ஃபைபர் படகு கட்டும் தொழிலும் செய்து தனது வாழ்க்கையை ஓட்ட முயற்சித்த போதிலும், மீன்பிடிக்கு கடற்படையினர் விதித்த கட்டுப்பாடுகள் அதை கடினமாக்கியது. ஏனைய பலரைப் போல், அவர் தனது குடும்பத்தாருக்கு உதவுவதற்காக மத்திய கிழக்குக்கு புலம்பெயர் தொழிலாளியாக சென்றார்.

கமல்தாசன் கடந்த வருடம் இலங்கைக்கு திரும்பி கொழும்புக்கு வடக்கே உள்ள நீர்கொழும்பில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தார். அவர் தனது மனைவி, வயோதிப பெற்றோர்கள் மற்றும் இரு சகோதரிகளை பராமரித்தார். அவரது ஒரு சகோதரி நோயாளி ஆவார்.

கமல்தாசனுடனும் இளஞ்செழியனுடனும் பேசிய சோ.ச.க. பிரதிநிதி, பொலிஸ் தடுப்புக் கூண்டில் கூட்டமானதும் கஸ்டமானதுமான சூழலிலும் திடமாக இருப்பதாக தெரிவித்தார். அவர்கள் தம்மைப் போலவே தடுத்து வைக்கப்பட்டுள்ள வேறு மூன்று தமிழ் இளைஞர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

2006ல் நாடு மீண்டும் யுத்தத்துக்குள் மூழ்கியதில் இருந்தே, அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படைகளும் குறிப்பாக நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமன்றி தனது கொள்கைகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளன. பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் இயங்கும் கொலைப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கடத்தல்கள், "காணாமல் ஆக்குதல்கள்" மற்றும் படுகொலைகளுடன் எதேச்சதிகாரமான தடுத்து வைப்புக்களும் தொடர்கின்றன.

கடந்த ஐந்து வருடங்களாக கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னாரைச் சேர்ந்த முழுத் தமிழர்களும் ஞாயிற்றுக் கிழமை பொலிசில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டளையுடன் பாதுகாப்பு அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் நடவடிக்கைகளை வியாழக்கிமை அறிவித்திருந்தது. கடந்த வாரம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இராஜபக்ஸ கருத்துக் கூறுகையில், "மக்களின் வருகையை கட்டுப்படுத்துவது" அவசியம் என கூறி புதிய "பாதுகாப்பு நடைமுறையை" நியாயப்படுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் கமல்தாசனதும் இளஞ்செழியனதும் உடனடியான விடுதலைக்காக பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளன. நாங்கள் எமது ஆதரவாளர்களையும், WSWS வாசகர்களையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமடைந்துவரும் தாக்குதல்களையிட்டு அக்கறை காட்டுபவர்களையும், அவர்களின் விடுதலைக்காக இலங்கை அதிகாரிகளுக்கு எழுதுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse
Secretary, Ministry of Defence
15/5, Baladaksha Mawatha
Colombo 3, Sri Lanka
Fax: 0094 112 541 529

Inspector General of Police
Police Headquarters
Colombo 1, Sri Lanka
Fax: 0094 112 446 174

Superintendent of Police
Office of Superintendent of Police
Negombo, Sri Lanka

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துக்கும் அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party
P.O. Box 1270
Colombo, Sri Lanka.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved