World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Israel’s border massacre and human rights hypocrisy

இஸ்ரேலின் எல்லை படுகொலைகளும், மனித உரிமைகள் என்ற போலித்தனமும்

Bill Van Auken
17 May 2011
Back to screen version

ஞாயிறன்று இஸ்ரேல் எல்லையோரங்களில் நிராயுதபாணியாக இருந்த பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய படுகொலைகளுக்கு ஒபாமா நிர்வாகத்தின் பிரதிபலிப்பானது, அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் சூறையாடும் கொள்கைகளை "மனிதாபிமான" நடவடிக்கைகள் என்று புனைந்து கூறும் போலித்தனத்தை அடிக்கோடிடுகிறது.   

இஸ்ரேலிய துருப்புகள் உயிர்பறிக்கும் படைத்தளவாடங்களுடன் தாக்குதலைத் தொடுத்தன. ஒரு சம்பவத்தில், சிரியா, லெபனான், மேற்குகரை மற்றும் காசா அருகிலிருந்த இஸ்ரேலிய எல்லையோரங்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்த பாலஸ்தீனியர்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. நக்பாவின்  (இதற்கு அரபிய மொழியில் பேரழிவு என்று பொருள்) 63வது நினைவுதினத்தை நினைவுகூற அழைக்கப்பட்டிருந்த அந்த போராட்டங்களில் பத்து ஆயிரக்கணக்கானவர்கள் அந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர். இஸ்ரேலின் சுதந்திர பிரகடனத்தையும், 1948இல் பாலஸ்தீனியர்களின் வீடுகளில் இருந்து ஒரு மில்லியனில் நான்கில் மூன்று பங்கினரை விரட்டியடித்த அந்த ஒட்டுமொத்த இனத்துடைப்பையும் குறிக்க பாலஸ்தீனியர்கள் நக்பா என்ற இச்சொல்லையே பயன்படுத்துகின்றனர்.      

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆண்டுகளில், பாலஸ்தீன அகதிகளின் மற்றும் உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்த நபர்களின் எண்ணிக்கை 7.1 மில்லியனாக அதிகரித்தது. அவர்கள் அண்டையிலிருந்த அரேபிய நாடுகளில் உரிமைகள் அல்லது குடியுரிமை இல்லாமலும், காசா மற்றும் மேற்குகரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழும், அல்லது இஸ்ரேலிற்குள்ளேயே கூட இரண்டாந்தர குடிமக்களையும் விட மோசமான நிலைமையிலும் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நேரடியாக அவர்களின் வீட்டிற்கும், மண்ணிற்கும் "திரும்பும் உரிமையை" வலியுறுத்தி கொண்டிருந்தனர். இது வாஷிங்டன் ஆதரவுடன் இஸ்ரேலினால் திட்டவட்டமாக மறுக்கப்பட்ட ஓர் உரிமையாகும். மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) முதலாளித்துவ தேசியவாத தலைமை, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆவலாக இருப்பதாக தெளிவுபடுத்தி இருந்தது.  

ஞாயிறன்று லெபனானில் உள்ள மௌரோன் அல்-ராஸின் எல்லையோர வேலிக்கு அருகில் இஸ்ரேலிய துருப்புகள் சுடத் தொடங்கியதில், 10 பாலஸ்தீனிய அகதிகள் கொல்லப்பட்டனர்; மேலும் 80 பேர் காயமுற்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோலன் குன்றுகளில் மஜ்தால் ஷாம்ஸ் எனும் சிரிய எல்லைக்கருகில் உள்ள கிராமத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; குறைந்தபட்சம் 30 பேர் காயமுற்றனர்.

காசா பகுதியின் வடபகுதியில் பெய்ட் ஹனனில் நிகழ்ந்த ஓர் எல்லையோர போராட்டத்தில் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளோடு இஸ்ரேலிய துருப்புகள் தாக்குதல் நடத்திய போது மற்றொரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்; அதில் குறைந்தபட்சம் 86 பொதுமக்கள் காயமுற்றனர். நிகழ்ந்த எல்லா சம்பவங்களிலும் சேர்த்து, 16 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 400 பேர் காயமுற்றனர்; இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிரதிபலிப்பு என்ன என்று கேட்கப்பட்ட போது, வெள்ளை மாளிகையின் தலைமை செய்திதொடர்பாளர் ஜே கார்னே "உயிரிழப்புகளுக்கு வருத்தம்" தெரிவிக்கும் பெயரளவு அறிவிப்பை வெளியிட்டு விட்டு, பின்னர் இஸ்ரேலின் படுகொலை வெறியாட்டத்திற்கு ஒரு மூடிமறைக்கும் ஆதரவை வெளியிட்டார்.

கார்னே  “ஏனைய நாடுகளைப் போலவே, இஸ்ரேலும் அத்துமீறி அதன் எல்லைகளைத் தாண்டி வருவதைத் தடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. அத்தகைய நடவடிக்கையைத் தடுக்கும் பொறுப்பு அதன் அண்டைநாடுகளுக்கும் உண்டு,” என்றார்.

 “ஏனைய நாடுகளைப் போலவே இஸ்ரேலும்,” “எல்லைகள்" போன்ற சொற்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு வாக்கியமும், அதன் வரைவிலக்கணத்திலேயே பொய்யாகும். ஒருபுறம், ஏனைய நாடுகளைப் போலில்லாமல், இஸ்ரேலின் எல்லைகள் இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன. மற்றொருபுறம், சியோனிச குடியிருப்புகள் வேகமாக பரவி வருகிறது. ஞாயிறன்று நிகழ்ந்த எந்தவொரு சம்பவத்திலும், இறந்தவர்கள் லெபனான், சிரியா, மேற்குகரை அல்லது காசா பகுதிக்குள்ளே தான் இறந்துள்ளனர்.       

ஞாயிறன்று இரத்த ஆறு ஓடியதற்கு இஸ்ரேலிய அரசாங்கத்தையோ அல்லது இராணுவத்தையோ முதன்மையாக குற்றஞ்சாட்டாமல், மாறாக கார்னே சிரியாவைக் குற்றஞ்சாட்டினார்.

 “கோலன் குன்றுகளில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவிட்டதில் சிரிய அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்ததை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்,” என்று கூறிய அவர், தொடர்ந்து கூறுகையில், “இதுபோன்ற நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அதன் சொந்த நாட்டிலேயே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் சிரிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒடுக்குமுறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இது உதவாது,” என்றார்

இந்த வகையிலான காரணங்காட்டுதல் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நிராயுதபாணியான போராட்டக்காரர்களைக் கொலை செய்யப்பட்டதையும் மற்றும் காயப்படுத்தப்பட்டதையும் இழிந்தமுறையில் நியாயப்படுத்துவதையே எதிரொலிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் லெபனிய எல்லையில் இறந்தனரே ஒழிய, சிரிய எல்லையில் அல்ல.   

பஷார் அல்-அசாதின் அரசாங்கம் அதன் உள்நாட்டு எதிர்ப்பில் நடத்திய அதன் சொந்த இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கொந்தளிப்பான கோலன் குன்றுகளின் எல்லையோர பகுதிகள் மூலமாக பாலஸ்தீன அகதிகள் எல்லையைக் கடந்து செல்வதற்கு வசதி செய்து அளித்திருந்தார் என்பது ஞாயிறன்று நிகழ்ந்த சம்பவங்களோடு தொடர்புபட்ட ஒரு முக்கியமான பிரச்சினையே அல்ல.  

பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிசூட்டை தைரியமாக எதிர்த்துநிற்க இளம் பாலஸ்தீனியர்கள் காட்டிய வீரதீரமும், மன உறுதியும் துனியா, எகிப்து, பஹ்ரெயின் மற்றும் அரேபிய உலகின் ஏனைய இடங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் சமீபத்தில் காட்டப்பட்ட புரட்சிகர பேரெழுச்சிகளின் ஒரு பகுதியாக உள்ளது. இஸ்ரேலிய அரசை எதிர்கொண்டதன் மூலமாக, பாலஸ்தீனியர்கள் அவர்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுத்தும், ஒடுக்கியும் வந்துள்ள எல்லா அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளையும் அதேயளவிற்கு எதிர்த்து செயல்பட்டிருந்தனர்.

ஞாயிறன்று லெபனானில், லெபனானிய துருப்புகளும் பாலஸ்தீன எதிர்ப்பாளர்களை அவர்களின் எல்லைகளில் இருந்து விரட்டியடிக்க துப்பாக்கிசூடு நடத்தின. அடுத்து எகிப்தில், அந்த இராணுவ-ஆதிக்க ஆட்சி பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கெய்ரோவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியில் கூடிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக துருப்புகளையும், பொலிஸையும் அனுப்பியது. கண்ணீர் புகைகுண்டுகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் உயிர்பறிக்கும் படைதளவாடங்களைக் கொண்டு பாதுகாப்பு படை நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது.

உண்மையில், பிற்போக்குத்தனமான அரேபிய ஆட்சிகளால் நடத்தப்படும் இந்த ஒடுக்குமுறையை வாஷிங்டன் ஆதரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டமிட்ட வன்முறை மற்றும் அடக்குமுறையில் அதை வாஷிங்டன் ஆதரிக்கிறது.

மத்தியகிழக்கில் அமெரிக்கா கொண்டிருக்கும் கொள்கையின் வெட்கக்கேடான இரட்டைவேஷமும், போலித்தனமும் வரும் வாரங்களில் முழுமையாக வெளிப்படும். இந்த "அரேபிய எழுச்சிக்கு" ஒபாமா வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவரின் அனுதாபத்தை முறையிடுகிறார். லிபியாவில் கடாபி ஆட்சியிலும், சிரியாவில் அஸாதின் ஆட்சியிலும் உள்ள அவர்களின் ஒடுக்குமுறையைக் குறை கூறுவார் என்பதில் சந்தேகமே இல்லை.    

பின்னர் இதைத் தொடர்ந்து பிரதம மந்திரி பென்ஜமின் நெடான்யாஹூ உடன் வெள்ளைமாளிகையில் ஒரு சந்திப்பும், பின்னர் அமெரிக்காவில் ஒரு முக்கிய சியோனிச தரகராக விளங்கும் அமெரிக்க-இஸ்ரேலிய அரசியல் நடவடிக்கை குழுவிற்காக (AIPAC) ஓர் உரையும் நிகழும். நிராயுதபாணியாக இஸ்ரேலிய எல்லைகளை நெருங்கிய அகதிகள் மீது தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுவீச்சுக்களைத் திருப்பியமைக்காக அங்கே எவ்வித கண்டனமும் இருக்காது என்பதில் ஒரு நிச்சயமாக இருக்கலாம். அதை வெள்ளைமாளிகையின் ஒரு செய்திதொடர்பாளர் வார்த்தைகளில் கூறுவதானால், “இஸ்ரேலியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையில் அசைக்கமுடியாத பிணைப்பும், அந்த உறவின் முக்கியத்துவமும் தான்" AIPAC உரையின் கருவாக இருக்கும்.  

எங்கெல்லாம், எப்போதெல்லாம் வாஷிங்டன் "மனித உரிமைகள்" மீது கவலைகளை எழுப்ப முடிவெடுக்கிறதோ, அந்நிலைப்பாடு சில உலகளாவிய நீதிநெறி கோட்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டிருக்காது, மாறாக அது தீர்க்கமான ஏகாதிபத்திய நலன்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்பது பட்டவர்த்தனமாக உள்ளது

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளமூலோபாய நோக்கங்களுடன் முரண்பட்டிருக்கும் கொள்கைகளைக் கொண்டிருக்கும் ஒரு நாடு உள்நாட்டு ஒடுக்குமுறையை நடத்தினால்-அதாவது லிபியாவில் நடப்பதைப் போல-வாஷிங்டனுக்கு முற்றிலுமாக அடிபணிந்த மற்றும் எண்ணெய் வளங்களின் மீது நேரடியாக அமெரிக்க கட்டுப்பாடுகளை ஸ்திரப்படுத்தும் ஓர் ஆட்சியை அங்கே கொண்டுவரும் நோக்கில் அந்த உள்நாட்டு ஒடுக்குமுறை ஏகாதிபத்திய தலையீட்டிற்கான போலிக்காரணமாக மாறிவிடும்.  

எந்தவொரு நாடாவது அமெரிக்க நலன்களோடு இணைந்திருந்தால், பஹ்ரெனில் நடப்பதைப் போல நிராயுதபாணியாக நிற்கும் பொதுமக்களை ஒடுக்கும் இரத்தந்தோய்ந்த அடக்குமுறைகள் நடந்தாலும், இந்த விஷயத்தில் இஸ்ரேலைப் போல, அந்நாடு மௌனமாகவும், வெளிப்படையாகவும் வாஷிங்டனின் ஆதரவைப் பெறுகிறது.

 “மனித உரிமைகள்" என்பது நீண்டகாலமாகவே ஏகாதிபத்திய யுத்தத்தை மிகவும் போலித்தனமாகவும், வஞ்சகமாகவும் நியாயப்படுத்த உதவியுள்ள உண்மை என்ற போதினும், இந்த அடித்தளத்திலேயே   அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா இரண்டிலும் "தாராளவாதிகள்" மற்றும் "இடதுகளின்" ஒட்டுமொத்த அடுக்குகளும் லிபியாவில் அமெரிக்க-நேட்டோ தலையீட்டிற்கு பின்னால் தொங்கி கொண்டிருக்கின்றன.

அவர்களில் முக்கியமானவர் மிசிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் ஆவார். அவர் பென்காஜியில் இருந்த "போராளிகள்" என்றழைக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு உதவுபவர்களின் (பெண்டகன் மற்றும் நேட்டோவின்) இராணுவ நடவடிக்கைகளைக் கொண்டாடவும் அவருடைய Informed Comment  வலைப்பதிவைப் பயன்படுத்தி உள்ளார்.

திங்களன்று, “The Arab Spring Comes to Israel,” என்ற தலைப்பில் கோல் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். எல்லையோர கொலைகளை விவரித்திருந்த அந்த பதிவு, 1948இன் வரலாற்று குற்றங்களையும் மதிப்பாய்வு செய்து, இஸ்ரேலிய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளைக் கண்டித்தது. ஆனால் வெளிப்படையாக அதில் கைவிடப்பட்டிருந்த விஷயம் என்னவென்றால், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக குற்றங்களை செய்வதை சாத்தியப்படுத்திவரும் பெரும் அமெரிக்க இராணுவ உதவி மற்றும் அமெரிக்க நிதியுதவி குறித்து அதில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.      

மேலும் இஸ்ரேலில் மக்கள் படுகொலைகள் மற்றும் ஒடுக்குமுறையை ஆதரித்து கொண்டே, லிபியாவில் எவ்வாறு "மனித உரிமைகளை" அமெரிக்கா ஆதரிக்க முடியுமென்பதையும் அவர் விவரிக்கவில்லை.

லிபியாவில் நடந்துவரும் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய தலையீட்டை தீவிரமாக ஆதரிக்க கடந்த இரண்டு மாதங்களைச் செலவிட்டுள்ள கோலும், அவரைப் போன்றவர்களும் அப்பிராந்தியத்தின் வேறு இடங்களில் வாஷிங்டனின் கொள்கைகளை எதிர்க்கும் தகுதியோ அல்லது  விருப்பமோ இல்லை.  

பாலஸ்தீன உழைக்கும் மக்களும், இளைஞர்களும் அவர்களின் நீண்டகால கசப்பான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான புதிய கட்டத்திற்குள் இப்போது நுழைகின்றனர். அவர்கள் தமது கூட்டாளிகளை  கடந்தகால "யுத்த எதிர்ப்பை" தூக்கிவீசிவிட்டு தம்மை ஏகாதிபத்தியத்தோடு சேர்த்து கொண்டுள்ள இந்த "இடதுகள்" மற்றும் "தாராளவாதிகள்" என்றழைக்கப்படுபவர்களின் மத்தியில் கண்டுகொள்ள மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் உட்பட மத்தியகிழக்கிலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து போராட்டத்தில் களமிறங்கும் தொழிலாளர்களின் மத்தியில் தான் அவர்கள் தமது கூட்டாளிகளைக் காணமுடியும்.