World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

The Egyptian Revolution, the Muslim Brotherhood and the apologetics of the Revolutionary Socialists

எகிப்திய புரட்சியும், முஸ்லீம் சகோதரத்துவமும், புரட்சிகர சோசலிஸ்டுகளின் காரணவிளக்கங்களும்

Part 2

By Jean Shaoul
6 January 2012
Back to screen version

இது, எகிப்தில் முஸ்லீம் சகோதரத்திற்கு புரட்சிகர சோலிஸ்டுகளால் விவரிக்கப்பட்ட அரசியல் காரண விளக்கங்களின் மீது எழுதப்பட்ட மூன்று பாக கட்டுரையின் இரண்டாம் பாகமாகும். இதன் முதல்பாகம் தமிழில் ஜனவரி 19, வியாழனன்று பிரசுரிக்கப்பட்டது

1952 சுதந்திர இராணுவ அதிகாரிகளின் ஆட்சிகவிழ்ப்பு

முஸ்லீம் சகோதரத்துவத்தினர் "முற்போக்கானதாகவும்" இடது-சார்பான  குணாம்சத்தையும் கொண்டிருந்ததாக கருதப்பட்டனர் என்ற புரட்சிகர சோசலிஸ்டுகளின் வாதங்களை மறுத்துரைக்க, 1952இல் இராணுவத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்த அரசியல் மற்றும் சமூக சக்திகளை ஆராய்வது மதிப்புடையதாக உள்ளது. இது, தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சூழ்நிலைமையில் சுயாதீனமாக தலையீடு செய்வதைத் தடுப்பதில் புரட்சிகர சோசலிஸ்டுகளால் தற்போது முன்னெடுக்கப்படும் ஒருவித மக்கள் முன்னணிவாதத்தின் (Popular Frontism) பாத்திரம் மட்டுமல்லாமல், இன்றைய சம்பவங்களுக்கு இணையான பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வழங்குகின்றது

பல காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ நாடுகளைப் போலவே, எகிப்தும் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அரசியல் கொந்தளிப்பில் இருந்தது. அதன் பொருளாதாரம் பொறிந்து போயிருந்ததுடன், ஏறத்தாழ அனைத்து சமூக அடுக்குகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தளைகளை அறுத்தெறிய விரும்பின. எகிப்தின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பிற்கு பிரதான ஆதாரமாக விளங்கிய சூயஸ் கால்வாயை பிரான்ஸ் உடன் இணைந்து கொண்டு சொந்தமாகவும் கட்டுப்பாட்டிலும் கொண்டிருந்த தனது கைப்பாவை பரூக் அரசர் மூலமாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது.

பிரிட்டிஷிற்கு எதிராக 1919இல் எழுந்த எழுச்சிகளில் இருந்து தேசிய போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்திவந்ததும், 1924இல் அலெக்சாண்டிரியாவில் எழுந்த தொழிலாள வர்க்க எழுச்சிகளை கீழ்படிய செய்ததுமான மதசார்பற்ற முதலாளித்துவ தேசியவாத வாஃப் -Wafd-, அரசாங்கம் பதவியேற்றதும் முக்கிய சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலாயக்கற்று இருந்தது. இது பாரிய வேலைநிறுத்தங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், அரசியல் கிளர்ச்சிகளுக்கும் மற்றும் ஸ்திரமின்மைக்கும் இட்டுச் சென்றது. அந்த நிலைமை தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுப்பதற்கான கேள்விகளை முன்னிறுத்தியது

ஆனால் இது நிறைவேறும் சாத்தியக்கூறை தடுக்கும் விதத்தில், "தனியொரு நாட்டில் சோசலிசத்தைக்" கட்டியெழுப்பும் மோசடி போர்வையின்கீழ் ஸ்ராலினிய அதிகாரத்துவத்தின் சர்வதேச சோசலிச புரட்சி காட்டிக்கொடுப்பு இருந்தது

ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கையின் பொறிவு மற்றும் 1941இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி ஜேர்மனி படையெடுப்பை தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் நேசதரப்பு படைகளுடன் இணைந்து நின்று, யுத்தத்தை பிரிட்டிஷைத் தூக்கியெறிவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கண்ட அரை-காலனித்துவ நாடுகளின் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் அளித்து வந்த ஆதரவைக் கைவிடுமாறு ஸ்ராலின் உத்தரவிட்டார். சோவியத் ஒன்றியத்தால் பின்னர் பாலஸ்தீன பிரிவினை மற்றும் இஸ்ரேலின் ஸ்தாபகத்திற்கு அளித்த ஆதரவு, அரேபிய உலகம் முழுவதிலும் கோபத்தை எதிர்நோக்கியது.

எகிப்தில், கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் துணை அமைப்புகளும், 1930களில், ஒரு அதிதீவிர-இடது முன்னோக்கிற்கும் ஒரு மக்கள் முன்னணியில் முதலாளித்துவ கட்சிகளை அரவணைத்திருந்தமைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தன. சில சந்தர்ப்பங்களில், அவை இஸ்லாமிஸ்டுகள் அவர்களை தாக்காத போது அவர்களை புரட்சியாளர்கள் என்று புகழ்பாடின; அவர்களைத் தாக்கிய போது பாசிஸ்டுகள் என்றழைத்தன.  

இதற்கிடையில், எகிப்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தால் 1947இல் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சுதந்திரத்திற்கான ஜனநாயக இயக்கம் (DMNL), அப்போது கணிசமான ஆதரவைப் பெற்றிருந்தது. ஆனால் "தொழிலாள வர்க்கத்திற்காக போராடும் அமைப்பு" என்று கூறிக் கொண்ட போதினும், அது "தேசத்தின் அனைத்து வர்க்கங்களின் மற்றும் அனைத்து தேசியவாத குழுக்களின் நலன்களைப் பாதுகாப்பதாக வலியுறுத்தியது. எகிப்து போன்ற காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ நாடுகளில் சோசலிசத்திற்கான போராட்டம் முதலில் "ஜனநாயக முதலாளித்துவ" கட்டத்தைக் கடந்து வரவேண்டுமென வாதிட்ட ஸ்ராலினின் "இரண்டு-கட்ட" கோட்பாட்டை அது பின்பற்றியது

1948-54 சமூக எழுச்சிகளின் போது, மக்களின் புரட்சிகர போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு வாஃப் மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்துடனான "மக்கள்" முன்னணி மற்றும் "தேசிய" முன்னணி"க்கு அடிபணிய செய்யப்பட வேண்டுமென தேசிய சுதந்திரத்திற்கான ஜனநாயக இயக்கம் வாதிட்டது. முதலாளித்துவ ஜனநாயக புரட்சி வென்ற பின்னர் மட்டுமே, சோசலிசத்திற்கான போராட்டம் தொடங்கப்பட முடியுமென அது வாதிட்டது

எகிப்தில் நான்காம் அகிலத்தின் ஆதரவாளர்கள் இந்த போக்கிற்கு எதிராக போராடினர். ஆனால் அவர்களே முதலில் கைது செய்யப்பட்டு, ஒடுக்கப்பட்டனர்.

வாஃப் பொறிந்ததும், முதலாளித்துவத்தின் பரந்த அடுக்குகள் தொழிலாள வர்க்கத்திற்குள் கம்யூனிச செல்வாக்கை எதிர்கொள்வதற்குரிய ஒரு கருவியாக முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு மாறின. தொழிலாள வர்க்கத்தை வீழ்த்த அரசர் இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார். ஆனால் இராணுவம் பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட அதன் தோல்வியால் அதிருப்தியால் சீற்ற முற்றிருந்தது. 1949இல், இராணுவத்திற்குள் இருந்த பிரிவுகள் சுதந்திர இராணுவ அதிகாரிகளின் இயக்கத்தை (Free Officers Movement) ஸ்தாபித்தனர். தளபதி கமால் அப்தெல் நாஸர், அந்த அமைப்பில் ஓர் அங்கத்துவராக இருந்த பின்னைய ஜனாதிபதி அன்வர் சதாத் ஆகியோர் உட்பட பலர் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஆதிக்கத்திற்குள்ளாகியிருந்தனர்.    

பரூக் அரசருக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு ஒரு சோசலிச புரட்சிக்கு இட்டுச் செல்லக்கூடுமென சுதந்திர இராணுவ அதிகாரிகள் அஞ்சினர். எகிப்திய தேசியவாத பதாகையின்கீழ் அவர்கள் ஒரு முற்கூட்டிய தாக்குதலை நடத்தி, பரூக்கை பதவியிலிருந்து வெளியேற்றினர். அவர்கள், புரட்சிகர தளபதிகள் குழு (RCC) என்ற அவர்களின் ஜண்டாவின் தலைவராக ஜெனரல் முஹம்மது நாகூப்பை நிறுவினர்.

அதிகாரத்திற்கு வந்ததும் புரட்சிகர தளபதிகள் குழு, அலெக்சாண்டிரியாவில் நடந்த ஜவுளித்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கியது. புரட்சிகர தளபதிகள் குழு தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் எந்தவொரு சுயாதீனமான நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ளாது என்ற குறிப்பைக் காட்டும் விதத்தில், தொழிற்சாலை மைதானங்களிலேயே வேலைநிறுத்த தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

தேசிய சுதந்திரத்திற்கான ஜனநாயக இயக்கம் நாகூப் ஆட்சியை எதிர்க்க தொடங்குவதற்கு உள்ளாக, அது தொழிலாளர்களின் இயக்கத்தில் அதன் செல்வாக்கை பெருமளவிற்கு இழந்துவிட்டிருந்தது. முடிவாக, இதனால் தோன்றிய அரசியல் வெறுமை, நாகூப்பிற்கு எதிராக எழுந்த ஓர் அதிகார போராட்டத்தில் 1954இல் நாஸரை வெற்றிக்கு இட்டுச் சென்றது. நாஸர் ஸ்ராலினிய தலைவர்களை சிறையிலடைத்தும், தொழிற்சங்கங்களை கடுமையாக மட்டுப்படுத்தியும், தேசிய சுதந்திரத்திற்கான ஜனநாயக இயக்கம், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் வாஃப் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளையும்  தடைவிதிப்பதைத் தொடர்ந்தார்.  

முஸ்லீம் சகோதரத்துவம் மட்டுமே அரசியல் தடையிலிருந்து தப்பித்திருந்தது. சகோதரத்துவத்தின் தலைவர்கள் 1952 சுதந்திர இராணுவ அதிகாரிகளின் ஆட்சிகவிழ்ப்பிற்கு முதல் ஆதரவாளர்களாக இருந்தனர்; மேலும் இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டுவதிலும் வேலை செய்திருந்தனர். நாஸர் ஒரு மதசார்பற்ற அரசியலமைப்பை வலியுறுத்திய போது தான், சகோதரத்துவத்தினர் இராணுவத்திற்கு எதிராக திரும்பி, 1954 டிசம்பரில் அக்குழுவிற்கு தடைவிதித்த நாஸரை படுகொலை செய்ய முயன்றனர்.

ஓரளவிற்கேனும் மேலோட்டமான சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அவர்கள் தம்மைத்தாமே ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பினராக வர்ணமிட்டு காட்டிய கொள்கைகளைப் பின்தொடரவும் நாஸர் தரப்பினரின் போராட்டங்களால் சோவியத் ஒன்றிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான பனிப்போரைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்ததால், சகோதரத்துவம் பல ஆண்டுகளாக, அரசியல் வீழ்ச்சியுள் சென்றது. எகிப்தில் இது முடியாட்சியைத் தூக்கியெறிதல், பிரிட்டிஷ் துருப்புகளின் வெளியேற்றம், சூயஸ் கால்வாயை தேசியமாக்கியமை, மற்றும் 1956இல் சூயஸிலிருந்து பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் படைகளை வெளியில் துரத்தியமை ஆகியவற்றை உட்கொண்டிருந்தது. இது அரசின் மட்டுப்படுத்தப்பட்ட மதசார்பின்மை மற்றும் பெரும் பண்ணைகளுடன் முறித்து கொண்டமை, அத்தியாவசிய நிறுவனங்களை தேசியமயமாக்கியவை, மற்றும் கல்வி, அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகளின் வளர்ச்சி ஆகியவை உட்பட பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களின் ஒரு காலக்கட்டத்தைத் தொடங்கி வைத்தது.

இஸ்லாமியத்தின் மீள்-எழுச்சி

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைவதை நோக்கி, எகிப்திய முதலாளித்துவத்தின் தரப்பில் மீண்டும் தீர்க்கமான மறுதகவமைவிலிருந்து ஆதாயமடைந்த சகோதரத்துவம் உட்பட, 1970கள் இஸ்லாமிய குழுக்களின் ஓர் அரசியல் மீள்-பிரசன்னத்தைக் கண்டன. கேம்ப் டேவிட் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டமை மற்றும் 1978இல் இஸ்ரேலை அங்கீகரித்தமை ஆகியவை ஓர் ஒருங்கிணைந்த அரேபியா மற்றும் மத்திய கிழக்கிற்கான சோசலிஸ்ட் மாற்றீடு என்றும் கூட காட்டப்பட எகிப்திய போலிவேடங்களுக்கு ஒரு முடிவை குறித்தது.

தொழிலாள வர்க்கம் எவ்வித சுயாதீன அரசியல் பாத்திரமும் வகிக்க முடியாதென ஸ்ராலினிஸ்டுகளால் வலியுறுத்தப்பட்டதால் உருவான அரசியல் வெற்றிடம், மத்திய கிழக்கு முழுவதும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்கள் மீது ஆதிக்கம் செலுத்த இஸ்லாமிஸ்டுகளை அனுமதித்தது. இஸ்லாமிய குழுக்களுக்கு மக்களிடையே அதிலும் குறிப்பாக மிகவும் வறிய அடுக்குகள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் ஆதரவு வளர்ந்தது

ஈரானில் ஷாவின் கொடுங்கோல் ஆட்சியைப் பதவியிலிருந்து இறக்கியமை மற்றும் 1979 புரட்சி ஆகியவை லெபனானில் அமால் மற்றும் ஹெஸ்பொல்லா, ஈராக்கிய ஆட்சிக்கு ஷியட் எதிர்ப்பு பிரிவுகள் மற்றும் வளைகுடா அரசுகளில் இருந்த ஷியட் சிறுபான்மையினர் ஆகியோர் உட்பட ஷியட் குழுக்களின் ஒரு வலையமைப்பிற்கு தூண்டுதல் அளித்து, ஊக்கப்படுத்தியது.

முஸ்லீம் சகோதரத்துவம் உட்பட சுன்னி குழுக்களை ஊக்குவிப்பதில் உதவியதன் மூலம் வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளியான சவுதி அரேபியா விடையிறுப்பு காட்டியது. சவுதி அரேபியாவிலிருந்த ஆளும் மேற்தட்டும், வளைகுடா அரசுகளும் தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான அரசியல் போக்குகளை எதிர்கொள்ளவும், ஒடுக்கவும் சவுதி வாஹ்ஹாபிசத்திற்கு –Wahhabism- நெருக்கமாக இருந்த இஸ்லாமியத்தின் ஒரு வடிவத்திற்குள் ஒட்டிக் கொண்டிருந்த சகோதரத்துவம் மற்றும் சலாபிஸ்டுகள்-Salafists- இருதரப்பினருக்கும் பணத்தை வாரியிறைத்தன. அவை எகிப்து மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் இருந்த வியாபாரங்களில் முதலீடு செய்ததோடு, எகிப்து, இலண்டன் மற்றும் ஜெனிவாவில் வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளையும் அமைத்தன. செல்வவளமிக்க வியாபாரிகளையும், இஸ்லாமிய அரசியல்வாதிகளையும் மற்றும் இஸ்லாமிய கல்வித்துறை மேதைகளையும் ஒன்றுகூட்டி கொண்டு வருவதில் இஸ்லாமிய நிதியியல் பிரதானமாக இருந்தது. பொருளாதார சீர்திருத்தங்களின் மீது கெடுபிடியான நிபந்தனைகளோடு ரியாத் அரசுகளுக்கு உதவிகளை வழங்கியது

சோவியத்திற்கு சார்பாக இருந்ததாக கருதப்பட்ட சிரியா மற்றும் ஈராக்கில் இருந்த பாத் கட்சிகளைப் (Ba’ath Parties) போன்ற தீவிர தேசியவாதிகள் மற்றும் ஈரானுக்கு எதிராக ஓர் அரசியல் ஆயுதமாகவும், மாஸ்கோவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும் மற்றும் தீவிர-வார்த்தை ஜாலங்களோடு ஒடுக்கப்பட்ட மக்களைப் குழப்பத்திற்குள்ளாக்க ஒரு வெளிப்படையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்தியாகவும், சுன்னி இயக்கங்களின் வளர்ச்சியை வாஷிங்டன் ஆதரித்தது.

சோவியத் ஒன்றியத்தை நிலைகுலைக்க, அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, 1980-89இல் இருந்து, CIA மிகப்பெரியளவில் இரகசிய உதவிகளை ஆப்கானிஸ்தானிற்கு கொடுத்தது. சோவியத் ஆதரவு அரசுக்கு எதிராக காபூலில் சண்டையிட்டு வந்த, ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா வலையமைப்பு உட்பட, அதித்தீவிர முஜாஹிதீன் குழுக்களுக்கு அது நிதியுதவியும், ஆயுதங்களையும் வழங்கியது. அதேபோல், ஜோர்டானிய முடியாட்சி சகோதரத்துவத்தை ஊக்குவித்ததோடு, 1970 கறுப்பு செப்டம்பரில் (Black September 1970) பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு-PLO- எதிராக அவர்களை ஒன்றுதிரட்டியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை எதிர்கொள்ள, காசா மற்றும் மேற்கு கரையிலும் சகோதரத்துவம் தன்னை   நிலைநிறுத்திக்கொள்ள இஸ்ரேலும் அதற்கு உதவியது. சகோதரத்துவத்தினர் பின்னர் ஹமாஸிற்கு அடித்தளத்தை வழங்கியது. 1976இல் இருந்து 1982 வரையில் பாதிஸ்டு ஆட்சிக்கு எதிரான சிரிய சகோதரத்துவத்தினரின் உள்நாட்டு யுத்தத்தில் ஜோர்டானும், இஸ்ரேலும் அவர்களை ஆதரித்தன

எகிப்திற்குள், மீண்டும் வாஷங்டனின் தரப்பில் சாய்ந்திருந்த ஜனாதிபதி அன்வர் சதாத் கட்டுப்பாடற்ற சந்தை சீர்திருத்தங்களுக்கு பொருளாதாரத்தைத் திறந்துவிட விரும்பியதோடு, அன்னிய முதலீட்டையும் ஊக்குவித்தார். இது பரந்த மக்களின் வாழ்க்கை தரங்களை வேகமாக வீழ்ச்சிக்கு இட்டு சென்றது. அதேவேளையில், அது ஒரு புதிய வியாபார மேற்தட்டை அடைகாத்தது. அவர்களில் பலர் சகோதரத்துவத்தின் தரப்பில் சாய்ந்திருந்தனர் அல்லது அதற்கு அனுதாபிகளாக இருந்தனர்.   

1980களில், தனியார் வியாபாரங்களில்—முக்கியமாக நிலவியாபார மற்றும் அன்னிய செலாவணி ஊக வணிகம் ஆகியவற்றில்—ஏறத்தாழ 40 சதவீதம் அந்த குழுக்களோடு தொடர்புபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டது. வளர்ந்துவந்த இஸ்லாமிய வியாபார வர்க்கத்தில் பல, வங்கி மற்றும் நிதியியல்துறைகளில் முதலீடு செய்ததோடு, வளைகுடா எண்ணெய் பணத்தின் அடிப்படையில் முதலீட்டு நிறுவனங்களையும் அமைத்து வந்தன. புதிய இஸ்லாமிய விபாயார வர்க்கமானது சிறிய மற்றும் மத்திய வியாபாரங்கள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்ததாரர்களையும் (labour contractors) உள்ளடக்கி இருந்தது.

பொருளாதாரத்தில் 40 சதவீதம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்ததாக கணிக்கப்பட்ட மதிப்பீடுகளோடு, இந்த இரண்டு குழுக்களும் எகிப்திய முதலாளித்துவத்தின் பெரும் பகுதியாக உருவாகி இருந்தன.

1980இல், ஷரியாவை சட்டத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக ஒப்புக்கொண்டு சதாத்தும் சட்ட அமைப்புமுறையை திருத்தினார். முஸ்லீம் சகோதரத்துவத்தினர் மற்றும் இஸ்லாமிய மாணவ காரியாளர்களை நியமித்த அவர், மாணவர் போராட்டங்களின் தலைமையைப் பெறவும் அவர்களைப் பயன்படுத்தினார். மறு-சக்திபெற்ற முஸ்லீம் சகோதரத்துவத்தோடு, அல்-தாவாவைச் (al-Dawa) சுற்றியிருந்த சலாபிஸ்டு (Salafist) குழுக்கள் மற்றும் அல்-காமா அல்-இஸ்லாமியா (al-Gama’a al-Islamiya) போன்ற குழுக்களை ஒத்த ஏனைய இஸ்லாமிய குழுக்களும் எழுச்சி பெற்றன.  

முஸ்லீம் சகோதரத்துவம் அரசியலமைப்பின்கீழ் சட்டவிரோதமாக இருந்தபோதினும், மசூதிகளோடு இணைந்த சமூகநல உதவிகளில் அது ஒருமுனைப்பட்டிருந்த வரையில் அது செயல்பட அனுமதிக்கப்பட்டது. இது மக்கள் வறுமையில் மூழ்கியபோது இன்னும் மேலதிக முக்கியத்துவத்தைப் பெற்றது. சட்டபூர்வ அனைத்து எதிர்கட்சிகளும் இஸ்லாமிய குழுக்களை ஆதரித்து பெரிதும் சுருங்கியிருந்ததால், அவை மட்டுமே ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பாக வளரத்தொடங்கின.

இப்பிராந்தியத்தில் வாஷிங்டனினதும் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளின் மூலோபாய நலன்களும் மாறுபடத்தொடங்கியதுடன் இஸ்லாமிய போக்குகளுடனான வாஷிங்கனின் அணுகுமுறையும் மாறத்தொடங்கியது. 1979 நவம்பரில், சவுதி ஆட்சியால் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்பட்ட ஒரு எழுச்சியில் மெக்காவின் பெரிய மசூதியை இராணுவ இஸ்லாமிஸ்டுகளின் ஒரு குழு கைப்பற்றியது. அதற்கடுத்த ஒருசில ஆண்டுகளில், பல ஷியட் இராணுவ போராளிகள் அமெரிக்கர்களையும் மற்றும் ஏனைய மேற்கத்தியவர்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து கொண்டனர். அதேவேளையில் ஆக்கிரமிப்பு-தென்லெபனானில் இருந்த இஸ்ரேலிய துருப்புகளுக்கு எதிராக ஹெஜ்பொல்லாஹ் வேட்டைகளை நடத்தியது. 1983இல் இஸ்லாமிய ஜிஹாத்தும் லெபனானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை அழித்தது. பின்னர் 1984 வரையில் அமெரிக்க இராணுவம் பினவாங்குவதற்கு காரணமான அக்டோபரில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலை படைத்தாக்குதல் அமெரிக்க கடற்படை துருப்புகளின் முகாம்களை அழித்தது.    

எகிப்தில், சதாத் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த ஓர் ஆயுதந்தாங்கிய எழுச்சிக்கு அழைப்புவிடுத்த சிறிய குழுக்கள் சகோதரத்துவத்தின் கீழ் தோன்றின. செப்டம்பர் 1981இல், சதாத் அரசியல் எதிர்ப்புகளின் மீது ஓர் ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டார். பின்னர் வெகுவிரைவில், இஸ்ரேலுடனான எகிப்தின் அமைதி உடன்படிக்கையை எதிர்த்த இஸ்லாமிய ஜிஹாத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார். 1970களின் பிற்பகுதிக்கும் மற்றும் 2000கும் இடையில், எகிப்தில் குறிப்பாக பொருளாதார இலக்குகள் மற்றும் பண்டைய கிறிஸ்துவ எகிப்தியர்கள் மீது குறிவைத்து இராணுவ இஸ்லாமிய போராளிகள் 700க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதில் 2,000கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறிருந்த போதினும் சகோதரத்துவத்திற்கு அப்போதும் கூட கணிசமான அளவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல்களில் உத்தியோகப்பூர்வமாக வேட்பாளர்களை நிறுத்த அது அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சகோதரத்துவத்தின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்கள் தேர்தல்களில் "சுயேட்சையாளர்களாக" நிறுத்தப்பட்டனர். 1990களின் ஆரம்ப வாக்கில், இஸ்லாமிய தொழிற்கட்சியுடனான ஒரு கூட்டணியில், அது உள்ளூர் தேர்தல்களில் சில வெற்றிகளைக் கண்டது. இதற்கு ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஓர் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை, பாரிய கைதுகள், சிறையிலடைப்பு மற்றும் சித்திரவதை ஆகியவற்றோடு பிரதிபலிப்பை காட்டினார்.     

1990களின் இறுதியில், ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டு தன்னைத்தானே ஓர் அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ளத் தொடங்கிய சகோதரத்துவம், படிப்படியாக தேர்தல்களில் சட்டப்பூர்வ எதிர்கட்சிகளை ஓரங்கட்டியது. 2005 தேர்தல்களில், நாடாளுமன்றத்தின் ஐந்தில் ஒரு பங்கு அளவிற்கு 88 இடங்களை வென்று, தோற்றப்பாட்டளவில் முபாரக்கின் ஆளும் தேசிய ஜனநாயக கட்சிக்கு (NDP) எதிராக இருந்த ஒரே ஒழுங்கமைந்த எதிர்கட்சியாக இருந்தது. அரசாங்கம் அதன் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கைது செய்ததோடு, பலரை இராணுவ நீதிமன்றங்களின் முன் நிறுத்தியது. அது, பெரும் மோசடியாக குணாம்சப்படுத்தப்பட்ட நவம்பர் 2010 தேர்தல்களில் சகோதரத்துவம் நிற்பதை சாத்தியமில்லாமல் செய்யும் வகையில், நாடாளுமன்றத்திற்கு சுயேட்சைகள் வருவதைத் தடுக்கும் விதத்தில், அரசியலமைப்பு விதிகளைத் திருத்தி எழுத்தியது.

தொடரும்