World Socialist Web Site www.wsws.org |
பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்கள்
Alex Lantier
and Barry Grey கடந்த வெள்ளியன்று இரவு 129 பேரைக் கொன்று, நூற்றுக்கும் அதிகமானவர்களை காயப்படுத்திய பிற்போக்குத்தனமான சக்திகளின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியதும் மற்றும் மத்திய கிழக்கின் ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்த சூறையாடல் போர் கொள்கைகளை தீவிரப்படுத்தவும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் பாரீஸில் ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) நடத்திய அந்த பயங்கரவாத அட்டூழியத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளன. வாஷிங்டன், பிரான்ஸ், சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற பிராந்திய கூட்டாளிகளே இத்தாக்குதலை நடாத்திய சக்திகளுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கின. ஆப்கானிஸ்தானில் ஆரம்ப சோவியத்-விரோத தலையீட்டின் விளைவாக உருவாகிய அல் கொய்தாவைப் போலவே, ISIS அமைப்பே கூட, லிபியா, சிரியா மற்றும் ஈராக்கில் ஏகாதிபத்திய சூழ்ச்சியின் விளைபொருளாகும். ISIS மற்றும் அல் கொய்தா தொடர்புபட்ட பயங்கரவாத குழுக்கள், லிபியாவில் ஆட்சி மாற்றத்தை நடத்த மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்த பினாமி இராணுவங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரீசில் அப்பாவி மக்கள் மீதான குற்றகரமான தாக்குதல், அனுமானித்தக்க அளவிற்கு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளின் ஈவிரக்கமில்லா தீவிரமயப்படுத்தலின் விளைபொருளாகும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பாரீஸின் அந்த பாரிய படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆழ்ந்த இரக்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் பாசாங்குத்தனமான அறிக்கைகள் அவர்களை ஏளனப்படுத்துவதாக மட்டுமே உள்ளன. கடந்த 14க்கும் அதிகமான ஆண்டுகளில் அவர்கள் நடத்திய மற்றும் ஆதரித்த போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். அவர்களது உண்மையான மனோபாவத்தை, ஆப்கானிஸ்தான் குண்டூஸில் கடந்த மாதம் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பின் மீது அமெரிக்கா குண்டுவீசியதில் குறைந்தபட்சம் 30 பேர் சாம்பலாக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட ஏனையவர்கள் காயமடைந்ததற்கு அவர்கள் காட்டிய அலட்சியத்தில் காணலாம். “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்பட்ட பதினான்கு ஆண்டுகள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை பரவுவதற்கு மட்டுமே எரியூட்டியுள்ளது, அத்துடன் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கானவர்களை கோரமான போர் பகுதிகளில் தப்பியோடிவரும் அகதிகளாக மாற்றியுள்ளது. இப்போது நவ-காலனித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் விளைவுகள் ஐரோப்பாவிற்குள்ளேயே வெடித்துள்ளது, இத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பான ஏகாதிபத்திய சக்திகள் மோசடியான மற்றும் மதிப்பிழந்த அந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப்" புதுப்பிப்பதன் மூலமாக இன்னும் அதிக குற்றங்களை நடத்த தயாரிப்பு செய்து வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், பாரீஸ் தாக்குதல்களை "போர் நடவடிக்கை" என்று குறிப்பிட்ட பின்னர், Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை அவற்றை "பிரான்ஸ் 9/11” என்று அழைத்தது. உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீதான 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் உடனடியாக உலக சோசலிச வலைத் தளத்தால் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையைக் கருத்தில் கொள்வது மதிப்புடையதாக இருக்கும். வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்பு மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைக் குறித்து எச்சரித்து, நாம் எழுதினோம்: “ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு சக்திமிக்க தாக்குதலைத் தொடுப்பதற்குப் பதிலாக, ஆளும் உயரடுக்கின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காக போர் நாடுவதை நியாயப்படுத்தவும் மற்றும் சட்டபூர்வமாக்கவும் இத்தகைய சம்பவங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும், அமெரிக்க ஸ்தாபகத்தினுள் உள்ள கூறுபாடுகளின் கரங்களில் பயங்கரவாதம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.... “இப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்கள் மீது அதன் மேலாதிக்கத்தை பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடாத முயற்சிகள்… அரபு மக்களின் நியாயமான மற்றும் ஒடுக்கமுடியாத ஜனநாயக, தேசிய மற்றும் சமூக அபிலாஷைகளுக்கு எதிராக வன்முறைரீதியிலான அமெரிக்காவை நிறுத்தி உள்ளது... “அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்\யுத்தக் கப்பல்கள் லெபனான், லிபியா, ஈராக், ஈரான், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை தாக்கியுள்ளன. யுத்தம் ஒன்றை பிரகடனப்படுத்தாமலேயே, 11 வருடங்களுக்கு அண்மித்தளவில் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது... இந்த இரத்தம் தோய்ந்த வரலாறு இருக்கும் பொழுது, அமெரிக்காவால் இப்படி குறிவைத்து தாக்கப்பட்டவர்கள் திருப்பித் தாக்குவது சம்பந்தமாக ஏன் எவராவது ஆச்சரியப்பட வேண்டும்?” செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போலவே, பாரீஸ் தாக்குதல்கள் திட்டங்கள் குறித்து யார்யாருக்குத் தெரிந்திருந்தது, எவ்வாறு அவர்கள் நடத்தினார்கள் என்பதைப் போன்ற பல கேள்விகள் உடனடியாக எழுந்துள்ளன. எங்கும் பரவலாக உளவுபார்க்கப்படும் இந்த காலத்தில், நேட்டோ நாடுகளின் எந்த உளவுத்துறை முகமைகளும் அந்த தயாரிப்பு குறித்து அறிந்திருக்கவில்லை என்ற வாதங்கள் நம்பக்கூடியதாக இல்லை. மிக மிக குறைந்தபட்சமாகவாவது, ஆளும் வர்க்கம் அத்தகைய அட்டூழியங்களை நீண்டகாலத்திற்கு முன்பே தயாரித்து வைத்திருந்த திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறது. பாரீஸ் தாக்குதல்களை ஆழமாக புலன்விசாரணை செய்வதற்கு முன்னரே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு போர்களுக்காக அலைகிறது. அரசுக்கு பரந்த புதிய பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே ISIS வசமிருந்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்க முடியுமென வலியுறுத்துகிறது. ஹோலாண்ட் பிரான்ஸில் மூன்று மாத காலத்திற்கு அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். அது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கி, எல்லைகளை மூடி, எதிப்பு போராட்டங்களுக்கு தடைவிதித்து, தனிநபர்கள் மீது தேடுதல் நடத்தவும் மற்றும் கைது செய்யவும் பொலிஸிற்கு அதிகரித்தளவில் அதிகாரம் வழங்கி, கிட்டத்தட்ட முழுமையாக பிரான்ஸை ஒரு பொலிஸ் அரசாக மாற்றுகிறது. பவேரிய மாநில நிதி மந்திரி மார்க்குஸ் ஷோடர் (Markus Söder) சிரிய அகதிகளுக்கு ஜேர்மன் எல்லைகளை மூட அழைப்புவிடுத்துள்ளார். பாரீஸ் தாக்குதல், “அனைத்தையும் மாற்றிவிட்டதாக" அவர் அச்சுறுத்தும் ரீதியில் அறிவித்தார். முன்னாள் நேட்டோ தலைமை தளபதி அமெரிக்க அட்மிரல் ஜேம்ஸ் ஸ்ராவ்டிரிஸ் (James Stavridis), “நேட்டோ தாக்குதல் செய்யவேண்டிய முறைவந்துள்ளது" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர், சிரியாவுடன் போருக்குச் செல்வதன் மூலமாக ISIS தாக்குதலுக்கு விடையிறுப்பு காட்ட வேண்டுமென நேட்டோ கூட்டணிக்கு அழைப்புவிடுக்கிறார். சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றுவதற்கான உந்துதல், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக வாஷிங்டனின் ஆக்ரோஷ வடிவமைப்புகளில் ஒரு கூறுபாடு தான். ஒட்டுமொத்த பூமி மீதும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இந்த நாடுகள் தடையாக இருப்பதாக அமெரிக்க ஆளும் உயரடுக்குப் பார்க்கிறது, ஆகவே பொருளாதார மற்றும், தவிர்க்கவியலாமல், இராணுவ அழிவுக்காக அவற்றைக் குறி வைக்கிறது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மூடிமறைப்பின் கீழ் ஏகாதிபத்திய போரின் தீவிரப்பாடு, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஈரவிக்கமற்ற தாக்குதலுடன் சேர்ந்துள்ளது, இந்த தாக்குதல் 200 உலக முதலாளித்துவ நெருக்கடி வெடிப்பிற்குப் பின்னரில் இருந்து கூர்மையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டிலும், இளைஞர்கள், மற்றும் குறிப்பாக புலம்பெயர்ந்த இளைஞர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள், தற்போதைய அமைப்புமுறையின் கீழ், பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் ஒரு கண்ணியமான எதிர்காலத்திற்கான எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையை முகங்கொடுக்கின்றனர். இராணுவவாதத்தின் விளைவுகள், தொழிலாள வர்க்கம் மற்றும் புலம்பெயர்ந்த இளைஞர்களின் அதிகரித்த அன்னியப்படலுடன் பேராபத்தானரீதியில் குறுக்கிடுகின்றன. ஏகாதிபத்திய போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இருந்தாலும், ஓர் ஒழுங்கமைந்த போர்-எதிர்ப்பு இயக்கம் இல்லாத நிலையில், இந்த கோபம் எந்தவித முற்போக்கான பாதையையும் காணமுடியாதுள்ளது. இது அவர்களில் சிலரை அல் கொய்தா மற்றும் ISIS போன்ற அமைப்புகளின் கேடுவிளைவுக்கும் மற்றும் வீராவேச உபதேசங்களுக்கு பலியாக்கிவிடுகிறது. போருக்கு எதிரான ஓர் இயக்கம் இல்லாதிருப்பதற்கான பிரதான பொறுப்பு, ஒரு காலத்தில் போராட்ட இயக்கங்களுக்குத் தலைமை கொடுத்த நடுத்தர வர்க்க முன்னாள்-இடது கூறுபாடுகளின் பல்வேறு அமைப்புகளையே சாரும். அவை அத்தகைய இயக்கங்களை ஆளும் வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திருப்பிவிட்டன. அதுமட்டுமல்லாது அவை கடந்த 15 க்கும் அதிகமான ஆண்டுகளில் பெரிதும் வலதிற்கு மாறி, நேரடியாக ஏகாதிபத்திய முகாமிற்குள் நகர்ந்துள்ளன. பிரான்ஸின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியின் இடது கட்சி, ஸ்பெயினின் பெடெமோஸ், கிரீஸின் சிரிசா மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற அமைப்புகள் லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான ஆட்சி மாற்ற போர்களுக்கு அவற்றின் ஆதரவை வழங்கி, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர்-வெறியூட்டலுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கின. பாரீஸ் குண்டுவெடிப்பும் மற்றும் அதையடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் ஏகாதிபத்திய வன்முறையின் தீவிரப்பாடும் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை அவசரமாக கட்டியெழுப்புவதன் அவசியத்தை அடிக்கோடிடுகிறது. ஏகாதிபத்தியவாதிகளை நிராயுதபாணியாக்கக் கூடிய மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய சமூக சக்தி, தொழிலாள வர்க்கமாகும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான புதிய இயக்கம், போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு புரட்சிகர போராட்டத்தில் எல்லா எல்லைகளையும் கடந்து ஐக்கியப்பட்ட மற்றும் ஒன்றுதிரண்ட, தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டதாக இருக்க வேண்டும். |
|