Equality, the Rights of Man and the Birth of Socialism

 

   

WSWS : Tamil : நூலகம்

By David North
24 October 1996

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 24-ந்தேதி அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் டேவிட் நோர்த் ஆற்றிய உரைவருமாறு

ஜனாதிபதி தேர்தலின் வெறுமை

இப்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளது. நடப்பு அமெரிக்க அரசியல் தரத்தின்படி மதிப்பிட்டால் கூட, தற்போது நடைபெற்றுவரும் தேர்தல் அறிவிப்பூர்வமாகவும், தார்மீக அடிப்படையிலும், ஒன்றுமில்லாத வெறும் கண் துடைப்பு தேர்தலாகவே காணப்படுகின்றது. பிரச்சனைகள் எதுவுமில்லை. கருத்துக்கள் எதுவுமில்லை, செயல்திட்டங்கள் எதுவுமில்லை, எந்த நோக்கமும் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் இயக்கம் என்பது, லீப் வருட கொண்டாட்டங்கள் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது. சாதாரணமாக, இயல்பாக நடக்கின்ற சம்பவங்களுக்கு இணையாக ஜனாதிபதி தேர்தல் அமைந்துவிட்டது. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப்போல் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

இந்த தேர்தல் முறையில் பயன்பெறுபவர்களில் முக்கியமானவர்கள், கருத்துக்கணிப்புக்களை கூறுபவர்கள், விளம்பர ஏஜென்சிகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் விளம்பர நிறுவனங்கள் ஒரு வேட்பாளர், இன்னொரு வேட்பாளரை கண்டிப்பதற்கான விளம்பர உத்திகளை வகுத்துத் தருகின்றன. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், ஐனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு கோடிக்கணக்கான டாலர்களை செலவிட்டு வருகின்றன. தேர்தல் களத்தில் கடுமையான சமுதாய மற்றும் அரசியல் பிரச்சனைகளை ஆராய்வதற்கான அரங்கு எதுவும் உருவாக்கப்படவில்லை.

இன்றைய தேர்தல்கள் வெறும் சம்பிரதாயங்களாக, சடங்குகளாக ஆகிவிட்டன. அதற்குக் காரணம் தேர்தலில் எந்தவிதமான ஜனநாயக உயிர் துடிப்பும் இல்லை. முப்பது கோடி (300 million) மக்களைக்கொண்ட ஓர் நாட்டில் அரசியல் மாற்று என்பது இரண்டே கட்சிகள் என்ற எல்லைக்குள் அடங்கிவிட்டன. அந்த இரண்டு கட்சிகளுக்குமிடையில் நாம் விமர்சனம் செய்கிற அளவிற்கு அரசியல் வேறுபாடுகள் எதுவுமில்லை.

இரண்டு கட்சிகளைத் தவிர, வேறு கட்சிகளுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறுகின்ற உரிமையும் இல்லை. இந்த உரிமைகள் மறுக்கப்படுவதை, நியாயப்படுத்தி அதிகாரபூர்வமான தேர்தல் கமிஷன் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. வெற்றி பெறக்கூடும் என்ற சாத்தியக்கூறுகள், அல்லது வாய்ப்புகள் உள்ள வேட்பாளருக்கு மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெற அனுமதிக்கப்படுகிறார்கள் என அதிகாரபூர்வமான கமிஷன் விளக்கம் தந்து பெரோட் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி உட்பட "மூன்றாவது கட்சிகளை" பொது விவாதங்களிலிருந்து ஒதுக்கிவிட்டார்கள்.

இத்தகைய நடவடிக்கைக்கு ஜனநாயக நெறிமுறைகள்படி நியாயப்படுத்துவதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அமெரிக்க ஜனநாயகம் செல்லரித்துப்போய்விட்டது. அமெரிக்க வேட்பாளர்கள் விவாதங்களை நடத்துவதற்கும், விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளுக்குமிடையே, எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்பதைப்போல் களத்தில் இறங்கும் வேட்பாளர்களின் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், உண்மையான வேறுபாடு ஒன்று உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கத் தேர்தல்களைவிட நேர்மையான குறிக்கோள்கள் உள்ளன.

ஒரு வேட்பாளர் பொது விவாதங்களில் கலந்துகொள்வதற்கான தகுதி என்பது அந்த வேட்பாளர் வெற்றி பெறுவதற்குள்ள வாய்ப்பை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது, என்பது தேர்தல் முறையில் ஜனநாயக பாசாங்குகளின் பொய்த்தோற்றத்தை காட்டி இருக்கின்றன. முதலில் நாம் கருதிப் பார்க்க வேண்டியது, பல்வேறு வேட்பாளர்கள் தங்களது கருத்தை வாக்காளர்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னர் அவர் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளவரா? இல்லையா என்பது முடிவு செய்யப்படுகின்றன.

அல்லது இதை வேறு வகையில் சொல்வதென்றால், ஒரு வேட்பாளர் வெற்றி பெறக்கூடும் என்று, கருதப்படுவதற்கு காரணம் இருந்தால் தான், பொது விவாதங்களில் கலந்துகொள்ள இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லலாம். உண்மையான ஜனநாயகத்திற்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்பதை ஆழ்ந்து சிந்தித்து அறிய வேண்டியதில்லை.

"வெற்றிபெறுவது மட்டுமே" தேர்தல் அல்ல, தேர்தலின் மிக முக்கியமான நோக்கமே, நாட்டின் முக்கிய பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பொது அரங்கை உருவாக்குவதுதான். அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் ஜெரி வைட் ஒரு கலந்துரையாடலில் (PBS) மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் செய்தி ஊடகங்களால் எந்த அளவிற்கு நடத்தப்படுகின்றனர், என்பதை விளக்கினார். அப்போது அந்த நிகழ்ச்சியை குறிப்பெடுத்த டெட்ரோய்ட் நியூஸ் நிருபர் வாய்மூடி மௌனியானார். அதற்கு முன்னர் அந்த நிருபருக்கு இந்தக் கருத்து ஏற்பட்டதில்லை.

அமெரிக்க தேர்தல் முறையில் ஒதுக்கித் தள்ளுவதுதான், அதிகமாக உள்ளதே தவிர, சேர்த்துக்கொள்ளும் போக்கு இல்லை. ஏன் இப்படி அமெரிக்கத் தேர்தலில் பலரை விலக்கிக்கொண்டே போகிறார்கள் என்பதை நாம் தெளிவாக ஆராய்ந்தாக வேண்டும். இது தனிமனிதர்களை மட்டும் ஒதுக்கி விடுகின்ற சாதாரண பிரச்சனை அல்ல. பொதுமக்கள் முன்னர் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் வைக்கப்படுவதை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இரண்டு கட்சிகளை மட்டுமே தேர்தலில் செய்தி ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. இதில் இரண்டு வகையான பெரிதும் நெறிமுறைப்படுத்தப்பட்ட விவாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு விவாதத்திலும் ஒரே நடுவர்தான் பணியாற்றுகின்றார்.

இதை சற்று நிதானமாக சிந்தித்தால், இதிலுள்ள அபத்தம் பெரும்பாலும் உடனடியாகவே தெளிவாகத் தெரியும். அமெரிக்காவின் சமுதாய அமைப்பு, மற்றும் சமுதாய முரண்பாடுகள் என்ற கட்டுக்கோப்புக்குள் இந்த அபத்தமான தேர்தல் நிலை குறித்து ஆராய வேண்டும்.

அமெரிக்காவின் நடப்பு சமுதாய வாழ்வில் பொருளாதார துருவமுனைப்படலின் வேகமும், அளவும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது கடந்த அரைநூற்றாண்டில் வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு சமுதாய பிரிவுகள் நிலைபெற்றுவிட்டன. கடந்த கால் நூற்றாண்டில் செல்வம் எதிர்த்திசையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து செல்வம் தற்போது பெரும் மூலதனங்களை தங்கள் வசம் வைத்திருப்பவர்களது வங்கிக்கணக்குகளில் குவிந்து கொண்டிருக்கிறது.

நடந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம் குறித்து ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை மதிப்பீடுகளாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மிகப்பெரும் செல்வந்தர்களாக வளர்ந்துள்ள 2-சதவிகித மக்களிடம், மிகுந்த ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களது 40-சதவிகித செல்வம் குவிந்திருக்கிறது. பெரும்பணக்காரர்களான 10 சதவிகிதத்தினர் 90 சதவிகித மக்களது செல்வத்திற்கும் அதிகமான செல்வங்களை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

அமெரிக்க தேர்தல் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள இரண்டு பகிரங்க விவாதங்களிலும் அமெரிக்காவில் காணப்படும் சமூக மற்றும் துருவமுனைப்படல் குறித்து ஒரு கேள்விகூட, மறைமுகமாக கூட எழுப்பப்படவில்லை. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஆழமாக பரவிவரும் சமூக சமத்துவமின்மைகளின் கொடூரமான முக்கியத்துவத்தை விளக்கிக்காட்டும் பரந்த சமூக நிலைமைகளைக் குறித்து பொது விவாதங்களில் எந்தவிதமான கருத்தும் அரிதாகத்தான் இருந்தன.

ஏற்றத்தாழ்வுகளை ஆதரிக்கும் புதிய கொள்கைவாதிகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரண்டு அரசியல் கட்சிகளாலும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் பற்றிய விவாதங்கள் இல்லாமை கவனக்குறைவால் ஆனவையல்ல. முதலாளித்துவ வேட்பாளர்கள் இந்த ஏற்றத்தாழ்வுகள் குறித்து பெரும்பாலும் புறக்கணித்துவிட்டாலும், இதர வட்டாரங்களில் பெருமளவில் இப் பிரச்சனைகள் விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. உண்மையில், அண்மைய மிகவும் குறிப்பிடத்தக்க "அறிவுஜீவி" போக்குகளில் ஒன்று-- இந்த நிகழ்ச்சிப்போக்கை விவரிப்பதற்கு அது சரியான வழியாக இருந்தால்-- சமூக சமத்துவமின்மை பற்றிய தீவிரமான நியாயப்படுத்தல்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

ரிச்சார்ட் ஹெரன்ஸ்ரைன் மற்றும் சார்ல்ஸ் முர்ரே, எழுதிய பெல் கூர்வ் (The Bell Curve) என்ற நூல் மிகவும் வெறுக்கத்தக்க நூலாக கருதப்படுவதற்குக் காரணம் அதன் அப்பட்டமான இனவெறி கொள்கைதான். அந்த நூலாசிரியர்கள் இருவரும் நொண்டிச் சமாதானம் கூறுகின்ற வகையில் மறுப்புகளை வெளியிட்டாலும் அவர்கள் நிச்சயமாக இனவெறிக் கொள்கையை எழுதி இருக்கின்றனர். உண்மையில் சமூக சமத்துவமின்மையை பரந்த அளவில், அப்பட்டமாய் பிற்போக்கான வழியில் பாதுகாக்க, ஆதரவாக இனவாத விவாதங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

ஹெரன்ஸ்ரைன் மற்றும் முர்ரே இன் அடிப்படைக் கொள்கைகள், சமூக சமத்துவமின்மையானது மரபு ரீதியாய் (Genetically) தீர்மானிக்கப்பட்ட மூளைத் திறன்களின் இயற்கையான மற்றும் முறைமையான வெளிப்பாடு மற்றும் உற்பத்தி ஆகும். பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆக இருக்கின்றனர் ஏனென்றால் அவர்கள் உயரிய மரபு உயிரணுக்களைக் (ஜீன்களை) கொண்டிருக்கின்றனர். பணக்காரர்கள் திருமணம் செய்துகொள்வதும் சமுதாய உறவுகொள்வதும், அவர்களது குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றிபெறவும், செல்வந்தர்களாக ஆவதற்கும், உத்திரவாதம் செய்து தரும் பணக்காரர்களின் மரபு உயிரணுக்களின் சேர்மத்தைப் பாதுகாத்து வைத்திருக்க என்று கூறப்படுகிறது.

அந்த நூல் சமூக சமத்துவம் என்கின்ற குறிக்கோளை கடுமையாக சாடுவதுடனும் அடிப்படை ஜனநாயக அம்சங்களைக் கடுமையாக கண்டனம் செய்வதுடனும் முடிகின்றது. பழைய சமுதாய கொள்கைகளைப் புதுப்பிக்க அழைப்பு விடுக்கிறார்கள், அவற்றில் மனிதர்களுக்கிடையே சமத்துவம் என்ற கருத்திற்கே இடமில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்களது முன்மாதிரியாக சுட்டிக்காட்டியுள்ள பண்டைய கால நாகரீகங்களில் "சமுதாயத்தை நேர்மையான அறிவாளிகள் சிலர்தான் ஆண்டார்கள்" என்றும், அன்றாட சமுதாய வர்த்தகத்தை மதிப்புக் குறைந்த மக்கள் கூட்டம் செய்தது என்றும், அவ்வப்போது தேவைப்படும் குற்றேவல்கள் அடிமைகளுக்கு தரப்பட்டன" என்றும் எழுதியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, "நடப்பு சமத்துவ அரசியல் தத்துவம் மனிதர்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை குறைத்து மதிப்பிடுகின்றன" என்று ஹெரன்ஸ்ரைன் மற்றும் முர்ரே அறிவிக்கின்றனர். "அது மனிதர்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அரசியல் தலையீடுகள் மூலம் மனிதனது குணநலன்களையும், திறமைகளையும், வடிவமைப்பதில் அது மிகைமதிப்பீடு செய்கிறது" என்றும், ஹெரன்ஸ்ரைனும் முர்ரேயும் கூறுகின்றனர்.

றொபேர்ட் போர்க்கின் Slouching Towards Gomorrah எனும் நூல் சிறப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஆதரிப்பதற்கு அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படைகளையே வெளிப்படையாக மறுப்பது தேவைப்படுகிறது என்று அது எடுத்துக் காட்டுகிறது. அவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். றேகன் அவரை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக 1987ல் நியமித்தார். இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் அந்த நியமனம் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் எழுதியுள்ள Slouching Towards Gomorrah என்ற நூலில் மிக முக்கியமான பகுதி நான்காவது அத்தியாயம், அதில் முதல் இரண்டு பந்திகளை நான் அப்படியே படித்துக்காட்டுகிறேன்.

"சுதந்திர பிரகடனம் தெளிவில்லாத சொல்லலங்காரமாக இருப்பினும் அல்லது அதன் காரணமாக, அந்த பிரகடனத்தினால் அந்த காலத்திலும், இன்றைக்கும், அமெரிக்க மக்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர், ஈர்க்கப்படுகின்றனர். எல்லா மனிதர்களும் சரிசமமாக படைக்கப்பட்டு இருக்கின்றனர், என்ற தத்துவம் ஏற்கனவே, காலனி ஆதிக்கவாதிகள் நம்பியதுதான், கோர்டன் வூட் (Gordon Wood) கூறியதைப்போல் அனைவரும் சமம் என்ற கோட்பாடு 'அமெரிக்க வரலாற்றில் தனிப்பெரும் தீவிர சக்தியாகவும், மிகவும் செல்வாக்குள்ள கருத்தாக' வும், அமைந்திருக்கிறது. அது உண்மையும் கூட, மற்றும் அவ்வாறு கூறுவது முரண் சமயக்கருத்தை நோக்கி சரிவுற்ற போதிலும், அந்த உண்மை மிகவும் துரதிஷ்டவசமானது.

"உணர்வுபூர்வமான, ஆழமான, உண்மையிலேயே சமய ரீதியான, சமத்துவத்திற்கான வேண்டுகோள் அமெரிக்காவிற்கே உரித்தான தனிச்சிறப்பான நிகழ்வுப்போக்கல்ல. இந்தக் கொள்கை மேலை நாடுகள் முழுவதிலும் இடம் பெற்றிருக்கின்றது. இதில் வருந்தத்தக்க அம்சம் என்னவென்றால், அரசியல் மற்றும் சட்டபூர்வமான, உரிமைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் சமம் என்று கோருவது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. இந்த சிந்தனைகள் புதுமையானவை அல்ல, உண்மையில், ஒப்புக்காக சொல்லப்படுவது. இந்த சமத்துவ உணர்வை விடப்பிடியாக கடைப்பிடித்து வருவதால், ஏற்பட்டுவிட்ட தீங்குகளை பல்வேறு எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த உணர்வுக்கு அறிவுபூர்வமான அடிப்படை எதுவும் இல்லை என்பதை, பல எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நூலில் ஏதாவது புதுமை இருக்கிறது என்றால், நடப்பு சமுதாய மற்றும் பண்பாட்டுத்துறைகளில் சமத்துவ உணர்வு ஏற்படுத்தியுள்ள தீங்குகளை தெளிவாக எடுத்துக்காட்டுவது தான்."

இந்த ஆசிரியர் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தால் ஏற்பட்ட தீங்குகளை கண்டித்திருக்கிறார். ஒரு நீதிபதி கைது ஆணை அனுப்புவதைப்போல் அவரது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சமத்துவ உரிமை கோருவது அறிவுபூர்வமான அடிப்படையில் அல்ல என்று கூறுகிறார். போர்க் தனது அறிவு முதிர்ச்சியை, சிறப்பை மிகவும் வியப்பளிக்கின்ற வகையில் எடுத்துக்காட்டியிருக்கிறார். பெரும் செல்வத்தை கண்டிப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று கூறுகிறார். அத்தகைய கண்டனங்கள் வெறும் "பொறாமை" யின் அடிப்படையில் வருபவை என்று கூறுகிறார். "மற்றவர்களுடைய பெரும் செல்வத்தால், செல்வ வளம் குன்றியவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது" என்று அடித்துக் கூறுகிறார்.

ஆடம்பரம் தார்மீக நெறிக்கு ஏன் எதிரானதாக இருக்க வேண்டும் என்ற கருத்து தெளிவில்லாதது, என்று அவர் கூறுகிறார். ஆடம்பரம் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என்றால், நம்முடைய அரசியல் பண்பாட்டு வளர்ச்சியில் நமது ஜனநாயக "நெறிமுறைகள்" ஆடம்பரத்திற்கு எதிரான பொறாமை உணர்வால் உருவானவை என்று கூறுகிறார். அந்த பொறாமை உணர்வுதான் நமது அரசியல் பண்பாட்டை நிச்சயமாய் உருவாக்கியது, தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எனவேதான், "நியூயோர்க் டைம்ஸ் தனது முதல் பக்க செய்தியில் இதர தொழில்வள நாடுகளைவிட அமெரிக்காவில் செல்வத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. இந்த வெளிப்படையாக எழுதப்படாத அனுமானத்தின் அடிப்படையில் நியூயோர்க் டைம்ஸ் முதல் பக்க செய்திகளை வெளியிடுகிறது என்றால், தார்மீக அடிப்படையில் ஏதோ தவறு நடக்கிறது. அது வெட்கக்கேடானதும் கூட, மற்ற சமுதாயங்களைவிட நாம் செல்வ வளத்தில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கிறோம் என்பது, தார்மீக நெறிப்படி தவறு என்பது போல் செய்தி வெளியிடப்படுகிறது என்றெல்லாம் போர்க் கண்டிக்கின்றார்.

"நாட்டு மக்களிடையே செல்வ உடைமைகளில் பணக்காரர்கள், ஏழைகளுக்கிடையிலான பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்கு தடைக்கல்லாக அமையும், என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதிக்கம் பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் செல்வம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல."

இவ்வாறு போர்க் எழுதியுள்ள வாசகங்களை விமர்சனம் செய்வது அவரது கருத்தின் கேலிக்கூத்தை குறைத்துவிடும். அவரும், பெல் கூர்வ் நூலை எழுதியவர்களும் அவர்கள் "அறியும் ஆற்றலுடைய தட்டினர்" பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். பெல் கூர்வ் நூலிற்கு போர்க் எழுதியுள்ள கருத்துக்கள் நல்ல விளம்பரமாக அமையவில்லை.

பெல் கூர்வ் க்கும் Slouching Towards Gomorrah -க்கும் இடையில் மிகப்பெரிய ஒற்றுமைகள் உள்ளன. பெல் கூர்வ் புறநிலை ரீதியான அறிவியல் அடிப்படையில் அமைந்தது என்று கூறப்படுகிறது. இரண்டாவது நூல் தீவிரமான அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு வகையைச் சார்ந்தது. ஆனால் இந்த இரண்டு நூல்களுமே ஏற்றத்தாழ்வுகள் வளர்வதை நியாயப்படுத்தும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் ஏற்றத்தாழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்வது ஆக்கபூர்வமான சமுதாயக்கொள்கை என்று இரண்டு நூல்களுமே வலியுறுத்துகின்றன. சமூகவிடுதலை மற்றும் சமத்துவத்திற்கான ஒடுக்கப்பட்ட மனித சமுதாயத்தின் உலக -வரலாற்றுப் போராட்டத்திற்கான, தத்துவார்த்த மற்றும் விஞ்ஞான அடிப்படையை கடந்த 200 ஆண்டுகளாக வழங்கி வந்த --அறிவொளி காலந் தொட்டு-- முழு அறிவுஜீவித மரபை மறுப்பதற்கு இந்த இரண்டு நூல்களும் பகிரங்கமாகவே அழைப்பு விடுக்கின்றன.

இதில் போர்க் அப்பட்டமாகவே இந்த உரிமைகளை மறுக்கிறார். சுதந்திர உரிமைகள் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து உரிமைகளை செயல்படுத்தல், லாபங்களைக் கறந்தெடுத்தல் மற்றும் தனிநபர் செல்வத்தைக் குவித்தல் ஆகியவற்றுக்கு எந்தவிதமான சிறு கட்டுப்பாடுகளையும் விதிக்கும் எந்தவிதமான சமூகக் கொள்கையின் வடிவத்தையும் உண்மையில் குறிப்புணர்த்தும் --அனைத்து நோக்கங்களுக்குமான கீழ்த்தர சூளுரையாக "தாராண்மை வாதம்" என்ற பதத்தைப் பயன்படுத்துவதை, கடந்த இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக மேலை நாடுகளில் வளர்ந்து கொண்டிருக்கும்" ஆபத்தான அனைவருக்கும் சமத்துவம் கேட்கும் போக்கின் வெளிப்பாடாக அவர் பார்க்கிறார்.

போர்க்கைப் பொறுத்தவரை, இத்தகைய சமத்துவ உரிமை கேட்கும் சாபம் ஜெபர்சன் (Jefferson) சுதந்திர பிரகடனம் புதிய தேசத்தின் ஸ்தாபக கோட்பாடுகளின் அறிக்கையாக ஏற்ற காலத்திலிருந்து அமெரிக்காவை பிடித்து ஆட்டிக்கொண்டு வருகிறது. இந்த சுதந்திர பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள, அற்புதமான சொற்கள் பயனற்றவை என்று கூறுகிறார். அவை பொதுவில், அரசாங்கம் அல்லது தனியார் நடவடிக்கைக்கான வழிகாட்டியாக, எடுத்துக் கொள்ளப்பட்டால், உண்மையில் தீங்கு பயப்பவை. இவ்வார்த்தைகள் இறுதியில் சுதந்திர உரிமைகள் அதிகம் வழங்கவும் மகிழ்ச்சியைப் பெறவும் வலியுறுத்தும், தனி மனிதர்களது உரிமைகள் மித மிஞ்சிப்போய் சமுதாய சீர்குலைவுதான் ஏற்படும்" என்று போர்க் குறிப்பிட்டிருக்கிறார். ஜெபர்சனுடன் உள்ள பிரச்சினை, அவர் சுதந்திர உரிமைகளை ஆதரிக்கின்ற மனிதர், மற்றும் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை அவரின் தனி மனித விழிப்புணர்வின் அடிப்படையிலான பத்திரம்" என்று போர்க் எழுதுகிறார்.

அறிவொளி இயக்கத்தின் தோற்றம்

அறிவொளி போக்கிற்கு எதிராக போர்க் தெரிவித்துள்ள கண்டனங்களில் புதுமை எதுவுமில்லை. கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற பிற்போக்குவாதிகள் வீசிய குற்றச்சாட்டுகளைத்தான் அவர் திரும்ப கூறியிருக்கிறார். 18-ம் நூற்றாண்டில் முற்போக்கு மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. போர்க்கின் கண்டனம் இன்றைய ஆளும் வர்க்கத்தின் பொதுவான சமுதாய கண்ணோட்டத்தினை எதிரொலிப்பதாக அமைந்திருக்கின்றது. இதன் மூலம் வரலாற்றை நாம் ஆராய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஆராயும்போது கடந்த கால நிகழ்ச்சிகளை மட்டுமல்ல, நிகழ்கால நிகழ்ச்சிகளையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

மக்களது விழிப்புணர்வு (அறிவொளி) காலம் என்பது 18-வது நூற்றாண்டில் பல தலைமுறைகளை குறிக்கும். தோராயமாக 1710-களில் தொடங்கி 1780-கள் வரை உள்ள காலத்தை விழிப்புணர்வு காலம் என்று சொல்லலாம். வரலாற்று காலங்களை மிக எளிதாக, தேதி வாரியாக காலவரிசைப்படுத்தி பகுத்துவிட முடியாது. அறிவொளி என்பது, மனிதனது அறிவு எல்லை விரிவடைந்ததைக் குறிப்பதாகும். மிகப்பரவலாக இந்த எல்லை விரிந்து சென்றதற்கு காரணம் அசாதாரணமான அறிவியல் முன்னேற்றங்கள், அந்த அறிவியல் முன்னேற்றங்கள் அதற்கு முந்தைய 200 ஆண்டுகளில் நடைபெற்றவை. இந்த முன்னேற்றங்கள் பிரபஞ்சம் குறித்த மனிதனது அடிப்படை கருத்துருவை மாற்றி அமைத்தது. நம்முடைய பூமிக் கோள் பிரபஞ்சத்தில் எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பது தொடர்பாகவும், இப்பூமிக் கோளில் மனிதனது பாத்திரம் பற்றியும் அறிவை வளர்த்தது.

17-வது நூற்றாண்டின் தொடக்க காலம் வரை, படித்தவர்கள் கூட மனிதனது துன்பங்களுக்கு எல்லாம், பிரபஞ்சத்தின் புதிர்களுக்கெல்லாம் வேத ஆகமத்தின் பழைய ஏற்பாட்டில் விடைகள் கிடைக்கும் என்று பொதுவாக ஏற்றுக் கொண்டனர். இப்படிப்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கை படிப்படையாக சிதைந்து கொண்டு வந்தது. குறிப்பாக 1543-ம் ஆண்டு கோப்பர் நிக்கஸ் தனது இறுதி காலத்தில் வெளியிட்ட அறிவியல் ஆய்வான De Revolutionibus, அதற்கு முன்னர் பிரபஞ்சம் தொடர்பாக நிலவி வந்த கருத்துக்களுக்கு மரண அடி கொடுத்தது என்றால், அது மிகையல்ல. அவருக்குப் பின்னர் அறிவியல் மேதைகளான டைக்கோ பிராகி (Tycho Brahe 1546-1601), ஜோன் கெப்லர் (Johann Kepler 1571-1630), கலிலியோ கலிலீ (alileo Galilei 1564-1642) ஆகியோரின் எதிர்கால வெற்றிகளுக்கான அடிப்படைப் புறப்பாட்டுப் புள்ளியை வழங்கியது. அவற்றின் விளைவாக சமுதாய ரீதியில் இல்லாவிட்டாலும், அறிவுபூர்வமாக மனிதன் மத்திய கால மூடநம்பிக்கைகள், அவற்றைச் சார்ந்திருந்த அரசியல் கட்டுமானங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறத் தொடங்கினான்.

வானவியலில் கண்டுபிடிப்புகள் மனிதனது பொதுவான அறிவாற்றல் சூழ்நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக சிந்தனைகளின் சக்தி பற்றிய புதிய உணர்வு இருந்தது மற்றும் சோதிக்கப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத சமயக் கருத்துக்களின் செயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுமாயின் அது எதை சாதிக்க முடியும்.

மதத்திற்கு மிகப்பெரும் அவமரியாதை உருவாயிற்று. மதத்தின் சக்தி படிப்படியாக குறைந்து வந்தமையானது, புது நன்நம்பிக்கையை அறிமுகப்படுத்தியது. மனிதனது எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படை அவன் பழைய நெறிகளிலிருந்து வீழ்ச்சியடைந்ததுதான் என்று வேத ஆகமம் பல நூற்றாண்டுகளாக கற்பித்துக்கொண்டே வந்தது. இந்த நம்பிக்கைகளை சிதைக்கின்ற வகையில் புதிய விழிப்புணர்வுகளை உருவாக்குகின்ற வகையில் அறிவியில் மிக வேகமாக வளர்ந்தது. மனிதன் தனது வாழும் சூழ்நிலையை மாற்றியமைத்து சிறந்த உலகை உருவாக்க முடியாதா? என்ற சிந்தனை தோன்றியது. இந்த சிந்தனை, வேத ஆகமத்தின் அடிப்படைகளையே கேள்விக்குறியாக்கிற்று.

புதிய சிந்தனைகளின் செல்வாக்கு சேர்.ஐசக் நியூட்டன் (1642-1727) காலத்திற்குப் பின்னர் மிக அதிகரித்தது. சேர்.ஐசக் நீயூட்டன் இறைவனின் அதிகாரத்தை சிதைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அசாதாரணமான, சிக்கலான, கணிதவியலின் உதவி இல்லாமல் இறைவன் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியாது என்று சேர்.ஐசக் நியூட்டன் விளக்கினார்.

மேலும் இயற்கையின் இயல்நிகழ்ச்சி மர்மமானவை அல்ல; மனித சிந்தனைக்கு கிடைக்கின்ற விதிகளின்படிதான், இயற்கை செயல்படுகிறது. இந்த பிரபஞ்சம் உருவான முறையை வேத ஆகமத்தில் காணமுடியாது. ஆனால், அறிவியல் நிபுணர்களின் ஆராய்ச்சி நூல்களில்தான்- றிலீவீறீஷீsஷீஜீலீவீணீமீ Philosophiae Naturalis Principia Mathematica அவற்றை காண முடியும். நியூட்டனது அறிவியல் கண்டுபிடிப்புக்கள் அன்றைய அறிவுஜீவித வாழ்வில் எந்த அளவிற்கு சிந்தனை மாற்றத்தை உருவாக்கிற்று என்பதை அலெக்சாண்டர் போப் மிகவும் வேடிக்கையாக வர்ணித்திருக்கிறார்: "இயற்கையும் இயற்கையின் சட்டங்களும் இரவில் மறைந்து கிடக்கின்றன" கடவுள் கூறினார், "நியூட்டன் தோன்றட்டும்! என்று, அனைத்தும் வெளிச்சமாகக் காணப்பட்டது.

சிந்தனையின் சாதனைகள், மிகவும் தவிர்க்கமுடியாதவாறு அறிதல் நிகழ்ச்சிப்போக்குகளின் இயல்பில் ஆர்வம் வளர்ந்தோங்க வழிவகுத்தது. 1632 முதல் 1704 வரை வாழ்ந்த அரசியல் சிந்தனையாளர் லோக் அவரது நூலான Essay Concerning Human Understanding- ல் மனிதனது சிந்தனை ஆற்றல் வளர்ந்த விதத்தை தெளிவுப்படுத்தியிருக்கிறார். மனிதனுக்கு இயல்பாகவே சில கருத்துக்கள் உண்டு என்பதை லோக் மறுத்திருக்கிறார். வெளி உலகில் இருந்து உருவாகும் உணர்வு அலைகள் மூலம் மனிதனது சிந்தனைக்கு ஊற்றுக்கால் கிடைக்கிறது என்று, லோக் விளக்கம் அளித்தார். நியூட்டனது Principia பௌதீகவியலில் வகித்த புரட்சிகர பாத்திரத்திற்கு இணையான தாக்கத்தை லோக்கின் நூல் மெய்யியலில் உருவாக்கியது.

மனிதனுக்கு இயல்பாகவே சில கருத்துக்கள் இல்லை என்றால் மனிதனிடம் இயல்பாகவே தீங்குகள் எதுவும் இல்லை. ஆகையால், மனிதனது தார்மீக பண்புகள், இறுதி ஆய்வில், அவன் மீது செயல்புரியும் சடரீதியான சூழ்நிலையின் எதிரொலிப்பின் உற்பத்திதான். மனித அறிதலின் இந்த கருத்துருவின் அடிப்படையில்தான் மனிதனது இயல்பை மாற்றிவிட முடியும், மேம்படுத்த முடியும். அவன் வாழும் சூழ்நிலைகளை மாற்றி அமைத்தால், இந்த மாற்றங்களைச் செய்யமுடியும் என்ற கருத்து உருவாயிற்று.

பின்னர், எப்படி இந்த முன்னேற்றம் அடையப்பட இருந்தது? இந்தக் கேள்விக்கு வழங்கப்பட்ட விடை: வெல்லமுடியாத சக்தியான மனிதனது பகுத்தறிவு மூலம்தான் அதைச் செய்ய முடியும். அந்த பகுத்தறிவு அறிவியலின் புதிய வழிமுறை மூலம் யதார்த்தம் பற்றிய கடும் ஆய்வின் அடிப்படையில் தான் உலகைப் புரிந்து கொள்ள முயலும். உண்மையைக் கண்டு பிடிப்பதற்கான பகுத்தறிவின் சக்தி மீது கொண்ட இத்தகைய மிகப்பெரிய நம்பிக்கை அறிவொளியின் அறிவு ஜீவித கோட்பாட்டை ஒன்றிணைத்தது. கான்ட் என்ற மெய்யியலாரின் வரலாற்றை எழுதிய ஜேர்மன் நாட்டைச் சார்ந்த ஏர்னஸ்ட் காஸ்சிரெர் - மனிதனது அறிவு நாட்டத்தை கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்.

"18ம் நூற்றாண்டு முழுவதிலும் அறிவு நாட்டம் என்பது இந்த அர்த்தத்தில், அறிவு, கோட்பாடுகள் மற்றும் உண்மைகளின் முழுநிறைவான அங்கமாகப் புரிந்து கொள்ளப்படாமல், ஒரு வகையான சக்தியாக, உந்துவிசையாக புரிந்து கொள்ளப்பட்டது. அந்த சக்தியை அதன் ஏஜென்சியான மூளையில் மற்றும் அதன் தாக்கத்தில்தான் புரிந்துகொள்ள முடியும். பகுத்தறிவின் முடிவு என்ன, மற்றும் அது என்ன செய்ய முடியும் என்பதை அவற்றால் வரும் முடிவுகளால் அறியப்பட முடியாது. ஆனால், செயல்பாட்டின் மூலம்தான் தாக்கத்தை அறிந்துகொள்ள முடியும். அதன் மிக முக்கியமான தொழிற்பாடு இணைத்து வைப்பதும், மறைத்துவிடுவதும் ஆகும். நமக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தும் அனுபவங்களின் எளிதான புள்ளி விபரங்களை எல்லாம் அது மறைத்துவிடுகின்றது. இறைவனது வெளிப்பாட்டு சான்றின் பேரில், பாரம்பரியம் மற்றும் நிர்வாகத்திலுள்ளவர்களின் பேரிலான அனைத்து நம்பிக்கைகளும் மறைத்துவிடுகின்றது மற்றும். இதுபோன்ற எல்லா அம்சங்களையும் அதன் ஒரே மூலக் கூறான பகுதிப் பொருட்களாய் ஆய்வு செய்யும் வரை மற்றும் அவற்றின் நம்பிக்கை மற்றும் கருத்தை நுணுக்கமாக ஆராயும் வரை அதன் உள்ளடக்கத்தின் மீது நிற்காது."

இமானுவேல் கான்ட் (1724-1804) எழுதியவாறு, அறிவொளிப் போக்கின் "குறிக்கோள்", "அறியத் துணிவு கொள்" (Sapere aude) என்பது சிந்தனையின் சக்தி மிகப்பெரிது, எனவேதான், விழிப்புணர்ச்சி காலத்தைச் சேர்ந்த பல அறிஞர்கள் மனித இனத்தை பல காலங்களாக தொல்லைப்படுத்தி வரும் பிரச்சினைகளுக்கு எல்லாம் பகுத்தறிவு மூலம் தீர்வு காணமுடியும் மற்றும் மனித நிலைமையை முன்னேற்ற முடியும் என்று பொதுவாக நம்பினர். அறிவொளி சிந்தனையாளர்களின் படி, பகுத்தறிவின் மாபெரும் பணிகளுள், மனிதனது மறுக்க முடியாத, அசைக்க முடியாத உரிமைகளை உத்தரவாதம் செய்தல்--அவை வாழுகின்ற உரிமை, சுதந்திரம் மற்றும் சொத்துரிமை என ஏற்கனவே லோக்கேயால் ( Locke) இனங்காட்டப்பட்டது.

அறிவொளிப் போக்கு அறிஞர்களால் பகுத்தறிவுக்கு ஒதுக்கப்பட்ட அற்புத சக்திகளில் சூதறியாததாகத் தோன்றும் பலவற்றைக் கண்டு பிடிப்பது கடினமானதாக இருக்கவில்லை. இன்றைய தினம் பேராசிரியர் குழாமின் மத்தியில், ஆண்டுக்கணக்கில் இல்லாவிட்டாலும், தங்களின் அறிவு நுட்பத்திற்கும் அப்பால் பழைய அறிவொளி இயக்கத்தின் நன்னம்பிக்கையை ஒரேயடியாக (நையாண்டி) கேலி பேசுகின்ற, உடைமை உரிமைத்தனத்திற்கு அல்லது உடைமை உரிமை-ஊழிய கடுகடுப்பிற்கும் பஞ்சமே இல்லை. மொத்தத்தில், இன்றைக்கு இருப்பதை அப்படியே நிலைநாட்டுவதற்கான சப்பைக்கட்டுக்களை உருவாக்குவதற்காக, கவர்ச்சியான மானியங்களைக் கொடுத்து ஆராய்வதற்கு ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

அறிவொளி காலத்தின் மிகப்பெரும் சிந்தனையாளர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள், புரட்சிக்காரர்கள். அன்றைக்கு இருந்த உலகை கடுமையாக சாடினார்கள். நாட்டு நடப்புகளை மிகத் தெளிவாக ஆராய்ந்தனர். மனிதன் தனக்குரிய அசைக்க முடியாத உரிமைகளை பெறுவதற்கான வழிவகைகளையும் தார்மீக நெறிமிக்க சமுதாயங்களை உருவாக்குவதற்கும் பாடுபட்டனர்.

இந்தக்காலம் முழுவதிலும், தனி மனித நெறியும், நீதியும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக மொன்டெஸ்கியூ (Montesquieu-1689-1785) வின் எழுத்துக்களைச் சுட்டிக்காட்டலாம். எடுத்துக்காட்டாக, ஒரு அற்புதமான கதையில் மாண்டெஸ்க்யூ Troglodytes என்று அழைக்கப்படும் கற்பனை மனிதர்களின் விதியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நீதியை ஏளனம் செய்து, "எப்போதுமே மகிழ்வோடிருப்பேன்" என்ற குறிக்கோளால் அவர்களது நடவடிக்கைகள் வழிநடத்தப்படுகின்றன, மற்றும் அவர்களின் சமுதாயத்திற்குள்ளே நிலவும் கட்டுத்திட்டமில்லாத தனிநபர்களின் சுயநல நோக்கின் வெளிப்பாடு அதன் அழிவுகரமான வீழ்ச்சியாக இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் அறிவொளி காலம், அன்றைய சமுதாய அமைப்பு தொடர்பாக சற்று ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். இங்கிலாந்தில் குரோம்வெல்லியன் நடத்திய புரட்சியின் காரணமாக 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மன்னரது சர்வாதிகாரம் சிதைந்தது. முதலாளித்துவ அடிப்படையில் ஒல்லாந்தைவிட பிரிட்டன் வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டது. ஆனால் பிரான்ஸ் நாட்டில், அறிவொளி மையத்தில், பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவ ஆதிக்க முறைதான். இந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கமுறைதான். இந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கமுறை கேப்சியன் அரச பரம்பரை சார்பில் கத்தோலிக்க மத அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது. பிரான்ஸ் நாடு விழிப்புணர்வின் மையமாக இருந்தாலும் மிக சிக்கல் நிறைந்த மற்றும் பழமையான, சலுகை மிக்க மற்றும் சார்ந்திருக்கும் சமூக உறவுகளின் வலைப்பின்னலைக் கொண்டிருந்தது. பிரபுக்கள் அவர்களுக்கு வரி செலுத்தும் அடிமை விவசாயிகள் போன்ற பல்வேறு சமுதாய பாகுபாடுகள் பிறப்பு அடிப்படையிலும் குடும்ப உறவுகள் அடிப்படையிலும் நிலைநாட்டப்பட்டு வந்தன.

முழு நிலப்பிரபுத்துவ முறையின் அடிப்படையே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கேள்விக்குட்படுத்தாத மற்றும் இயல்பானதாக ஏற்கும் சமூகத் தளமுமாக இருந்தது. அரசன் முதல் கீழ்மட்டத்து அடிமைவரை, பூமியிலுள்ள ஆண் பெண் இருவருக்கும் சமுதாய உறவுகளை நிர்ணயிப்பது இறைவனது திட்டம்தான் என்று, எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

சமுதாயத்தின் பொருளாதார அடிப்படைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் உருவாயின. இந்த மாற்றங்கள் பழைய அரசியல் கட்டமைப்புக்களைக் கீழறுத்தன. 18-வது நூற்றாண்டு வாக்கில் பிரான்சில் பெருமளவிற்கு முதலாளித்துவ நிறுவனங்களின் பரவலான வளர்ச்சி முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ந்து வரும் அரசியல் சுய-நனவின் வெளிப்பாட்டில் பிரதிபலித்தது. இந்த வரலாற்று உள்ளடக்கத்திற்குள்ளே, பிரெஞ்சு சமுதாயத்தின் அறிவொளி விமர்சகர்கள், உற்பத்தியில் சம்பந்தப்படாத ஒட்டுண்ணிகளாக பிரபுக்கள் வர்க்கத்தின் அரசியல் மேலாதிக்கத்தின்பால் தோன்றிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

சிதைந்து வருகிற நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரின் குறுகிய வர்க்க நலனுக்கு மேலாக ஒன்றுமில்லை என்று அறிவொளி கால அறிஞர்களின் வேலைகளைப் பார்ப்பது, மேல் எழுந்த வாரியாக மற்றும் எளிமையாக முடிவு செய்வதாக இருக்கும். 18-ம் நூற்றாண்டு முதலாளித்துவ புரட்சிக்கு வித்திட்ட உயர்ந்த சிந்தனையாளர்கள், துன்பப்பட்டு வரும் மனித இனம் முழுவதற்குமாக சேர்த்து குரல் கொடுத்தனர் மற்றும் எழுதினர். மேலும் அவ்வாறு செய்கையில், மனித இனம் முழுவதும் ஒன்றுபட்டு விடுதலை பெறவேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோளைத் தாண்டி விட்டது. அது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கவர்ச்சி அற்ற குறிக்கோள்களுக்கும் அப்பால் சென்றது.

சொத்துரிமை பற்றிய விமர்சனம்

உலகளாவியதன்மை ரூசோவின் (1714-1778) எழுத்துக்களில் அசாதாரணமாக பளிச்சிட்டன. அறிவொளி இயக்க மாபெரும் சிந்தனையாளர்களுக்கு மாறாக, பகுத்தறிவைப் புகழ்வதில் ரூசோ பங்கேற்கவில்லை. அறிவியல் மற்றும் கலையின் சிறப்பை கடுமையாக விமர்சித்தார். மனிதனது ஊழல், கொடுமைப்படுத்தும் குணம், தாழ்ந்த குணம் ஆகியவற்றிற்கு, விஞ்ஞானமும் கலையும்தாமே மனிதனின் கருவிகளாக இருக்கின்றன என்று ரூசோ வாதிட்டார்.

கீழ் காணப்படும் இந்த உள்நோக்கின் தனிப்பண்பை உறுதிப்படுத்துவதற்கான ரூசோவின் வாதத்தின் இந்த அம்சத்தை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சமுதாயம் மனிதனது இயல்பான தூண்டுதல்களுக்கு பகையான, மிக மனிதத்தன்மை அற்ற வகையில் நிலவுகின்ற மற்றும் அபிவிருத்தி அடைந்திருக்கின்ற மற்றும் அது அவனது துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் மூலமாக இருக்கிறது.

இந்த உள்நோக்கின் ஆழமான புரட்சிகரமான விளைபயன்கள் 1755-ல் வெளியிடப்பட்ட, Discourse on the Origin and Foundation of Inequality Among Men என்ற மனிதனது ஏற்றத்தாழ்வுகள் குறித்து எழுதியுள்ள நூலில் மிகத்தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார். சொத்து என்பது மனிதனுக்கு இயல்பாக உருவாகின்ற அம்சம் அல்ல. மனிதன் உருவாகிய ஆரம்பக் கட்டங்களில் காட்டு மனிதனாக அவன் திரிந்த நேரத்தில் அவனுக்கு சொத்து எதுவுமில்லை. அது நாகரீக வளர்ச்சியின் உற்பத்திப் பொருளாகும், அது ஒரு முறை உருவானதும், மனிதத்தன்மையை அழித்தது, சொத்து அவனை அடிமைப்படுத்தியது என்று ரூசோ விளக்கம் தந்தார்.

முதல் மனிதன் ஒரு நிலத்தை சுற்றி வேலி அமைத்தான். இது எனக்குச் சொந்தமானது என்று சொல்லிக்கொண்டான். அப்போது வாழ்ந்த மற்ற மனிதர்கள் முதல் மனிதன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டனர். அவனை சிவில் சமுதாயத்தின் உண்மையான நிறுவனராக மற்றவர்கள் ஏற்றுக்கொண்டனர். எத்தனை குற்றங்கள், போர்கள், படுகொலைகள், எத்தனை துன்பங்கள் மற்றும் பயங்கரங்கள் அனுபவித்துள்ளது, அதில் தப்பிய ஒருவன் தனது சகமனிதனிடம் கூறினான், "இந்த வஞ்சகரையிட்டு எச்சரிக்கையாக இருங்கள், பூமியின் வளங்கள் அனைவருக்கும் சொந்தம் என்பதை மற்றும் பூமி ஒருவருக்கும் சொந்தமானதல்ல என்பதையும் மறந்தீர்களானால், நீங்கள் இழப்பீர்கள்."

சொத்துக்கள் இல்லாதபோது ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. சொத்தைப்போன்று ஏற்றத்தாழ்வும், நாகரீக வளர்ச்சியின் ஓர் உற்பத்திதான். ஏழைகள் சொத்தின் செல்வாக்கால் நசுக்கப்படுகின்றனர். சொத்து உள்ளவர்கள் மேலும் சொத்துக்களை குவிக்கவேண்டும் என்ற அடிப்படையில், தங்களைத் தாங்களே அறிவுபூர்வமாகவும், தார்மீக அடிப்படையிலும், இழிவுப்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு ரூசோ விளக்கம் தந்தார்.

சொத்து உரிமை வளர்ந்தது, சமத்துவ உரிமை மறைந்தது. இதன் விளைவாக மிகவும் அஞ்சத்தக்க குழப்பமும், கொந்தளிப்பும் உருவாயிற்று. சொத்துக்களை சேகரித்துக் கொண்டவர்கள் மனித தசையை ஒருமுறை ருசித்த, பசி எடுத்த ஓநாய் ஏனையவற்றை நிராகரித்தது போல், மனிதர்களை அடிமைப்படுத்துவதை தவிர வேறு காரியங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும், ரூசோ விளக்கம் தந்தார்.

அதற்குப் பின்னர் அவர் அரசியல் பொருளாதார நிலை குறித்து Discourse on Political Economy எனும் நூலில், 21-வது நூற்றாண்டு மக்களுக்கும் ஏற்புடைய கீழ்கண்ட கருத்துக்களை 18-வது நூற்றாண்டு நடுப்பகுதியில் எழுதியிருக்கிறார்.

"சமுதாயத்தில் கிடைக்கின்ற அனுகூலங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கும், பலமுள்ளவர்களுக்கும் மட்டுமே சொந்தமல்லவா? லாபம் தருகின்ற எல்லா பதவிகளையும், அவர்கள் மட்டுமே நிரப்பிக்கொண்டிருக்கவில்லையா? எல்லா சலுகைகளும், விதிவிலக்குகளும் அவர்களுக்காக மட்டும்தானே ஒதுக்கப்பட்டிருக்கின்றது? அரசின் அதிகாரம் முழுவதும் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லையா? உயர்ந்த நிலையில் வாழுகின்ற மனிதன் தனது கடன்காரர்கள் அனைவரையும் ஏமாற்றுவதுடன் இதர வழிகளிலும் மோசடி செய்யவில்லையா? தட்டிக்கேட்க யாருமில்லாததால், அந்த மனிதன் வன்முறைகளை இழைக்கிறான், கொலைகளை மற்றும் படுகொலைகளைக்கூட செய்கிறான், அவை பற்றி பல மாதங்கள் எவரும் மூச்சுவிடுவதில்லை. அதே செல்வாக்குள்ளவன் ஏதாவது ஓர் பொருளை இழந்துவிட்டால், அவன் சந்தேகப்படும் அப்பாவி மக்கள் அனைவரையும் நசுக்க போலீஸ் படை முழுவதும், ஏவிவிடப்படுகிறது. இதற்கு நேர் எதிர்மாறாக ஏழை மனிதனின் நிலை உள்ளது. ஏழை மனிதன் எவ்வளவு மனிதநேயம் உள்ளவனாகயிருந்தாலும் அவனை அந்த சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. அவனுக்கு உரிமைகள் இருந்தாலும், எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிடுகின்றன. சில நேரங்களில் அவனுக்கு நீதி கிடைத்தாலும் அது மிகவும் சிரமப்பட்டுத்தான் பெறவேண்டியுள்ளது. சிலர் மிக எளிதாக மன்னிப்பை பெற்றுவிடுகின்றனர்."

இன்னொரு குறைந்த முக்கியத்துவமுள்ள எண்ணிப்பார்த்தலாவது, "ஏழை மனிதர்கள் இழக்கின்ற சொத்துக்களை ஈடுகட்டுவது பணக்காரர்கள் இழக்கின்றதை ஈடுகட்டுவதைவிட மிக எளிதானது என்பது மற்றும் தேவைக்கு ஏற்ப சொத்துக்களை குவிப்பதில் சங்கடங்கள் அதிகரிக்கின்றன என்பதுமாகும். ஒன்றுமே இல்லாமல் எதையும் உருவாக்க முடியாது. பணம்தான், பணத்தை அறுவடை செய்வதற்கான வித்தாக பயன்படுகிறது. முதல் பத்து ரூபாய்களை சம்பாதிப்பது அடுத்த லட்சம் ரூபாய்களைவிட மிகவும் சிக்கலான காரியம் ஆகும். ஏழை மனிதன் சம்பாதிக்கின்ற பணம் முழுவதையும், அவன் நிரந்தரமாக இழந்துவிடுகிறான். அவை பணக்காரன் கைக்கு வந்து சேர்ந்துவிடுகிறது." இவ்வாறு ரூசோ, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து விளக்கம் தந்தார்.

அமெரிக்கப் புரட்சி

அறிவொளி காலத்து சிந்தனையாளர்களின் கருத்துக்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் எதிரொலித்ததுடன், வட அமெரிக்காவின் காலனிகளுக்குள்ளும் பரவியது. மான்ரெஸ்கியூ, டிடெரோத் (1713-1784) பெக்காரியா ஆகியோரது சிந்தனைகள் அமெரிக்க புரட்சிக்கு தலைமைதாங்கிய தலைமுறையினரை குறிப்பாக தோமஸ் ஜெபர்சன் (1743-1826) ஜோன் ஜாக் ரூசோ (Jean-Jacques Rousseau) போன்றவர்களை பாதித்தது.

அமெரிக்க சுதந்திர போரை முன் நின்று நடத்தியவர்கள் எத்தகைய கொள்கை, கோட்பாடுகளால், அரசியல், தத்துவ அடிப்படைகளால் வழிநடத்தி செல்லப்பட்டனர் என்பது குறித்து, இடைவிடாது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக, அமெரிக்க சுதந்திரப்போரின் தீவிர தன்மைகளை மறுக்க விரும்புகிறவர்கள் ஆங்கில நாட்டு தத்துவ சாயல்களின் தாக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அமெரிக்காவின் சுதந்திர பிரகடனம் ஆங்கிலேய சிந்தனையாளர் லோக்கின் இயற்கை உரிமைகள் தத்துவத்தின் மறுபதிப்பு என்று விளக்கம் தரப்படுகிறது.

1776-ம் ஆண்டில் வாழ்ந்த தலைவர்களிடம் லோக்கின் தத்துவங்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தன என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் லோக்கே அவரது Second Treatise on Civil Government என்ற நூலை எழுதிய பின் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்து விட்டது. மேலும் மனித மனத்தின் கருத்துரு ரீதியான உற்பத்திகள் நிலையானதாக இல்லை என்ற காரணத்தினால், புறநிலை யதார்த்தத்தின் செல்வாக்கின் கீழ் மாறுகிறது, அதில் அவை எதிரொலிக்கின்றன மற்றும் அருவ வடிவத்தில் மறு உற்பத்தி செய்யப்படுகிறது, லோக்கேயின் ஷிமீநீஷீஸீபீ ஜிக்ஷீமீணீtவீsமீ-லிருந்து மிகவும் முக்கியத்துவமுடைய ஒரு அம்சத்தில், சுதந்திரப் பிரகடனத்தில், இயற்கை உரிமைகள் பற்றிய தத்துவத்தின் சூத்திரப்படுத்தல் அடிப்படை ரீதியாக வேறுபட்டிருந்தது. லோக்கேயால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று இயற்கை உரிமைகள் வாழ்வுரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்து உரிமை அல்லது ஆதீன உரிமை ஆகும்.

ஜெபர்சன் தனிச்சொத்து உடைமை நிறுவனத்துக்கு எதிரான சோசலிச முன்னோடி என்று நான் கூறவில்லை. ஜெபர்சனின் பெருமையை பாராட்டுகின்றபோது அவருக்கு இல்லாத சிறப்பை நாமாக இட்டுக்கட்டி சேர்த்துவிடல் தேவையில்லை. அந்தக்காலத்து தலைவர்களை மதிப்பிடும்போது அப்போது இல்லாத சோசலிச கொள்கையை அவர்கள் எடுத்துரைத்தார்கள் என்று கூறுவது, வரலாற்றில் புதிய சாதனை படைத்தவர்களாக அவர்களைக் காட்டுவதாக அமைந்துவிடும்.

ஆயினும் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்கால சோசலிசப் புரட்சியின் முற்குறியாக விளக்கப்படுத்துதற்கு நாடாமல், அது ஜெபர்சன் காலத்து உலகச் சந்தையின் அபிவிருத்தி மற்றும் முதலாளித்துவ உற்பத்தி மற்றும் வணிகத்தின் விரிவாக்கம் உருவாக்கிய புதிய சமூகப் பதட்டங்களை- அக்காலத்திய மிகவும் அரசியல் ரீதியாய் நனவுள்ள மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. குறைந்த படசம் இந்தப் பதட்டங்களின் தொடக்க விழிப்புணர்வை, ரூசோவின் எழுத்துக்கள் மிகக் கலைநயத்துடன் வெளிப்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், சொத்து, சுதந்திரம் மற்றும் வாழும் உரிமை ஆகியன ஒன்றுடன் ஒன்று உள்ளூர இணைந்த மும்மைதானா என்பது முறைமையான அரசியல் விவாதத்திற்குரிய விஷயமாக ஏற்கனவே ஆகி இருந்தது.

ஜெபர்சன் இந்த நிலைகளை மிகத் தெளிவாக அறிந்திருந்தார் என்பதில், சந்தேகம் இல்லை. அன்றைய சமுதாயத்தில் வாழும் உரிமைக்கும், மனிதனது சுதந்திரத்திற்கும், நேரடியான முரண்பாடுகள் நிலவின என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். மொத்தத்தில் அவர் வேர்ஜினியராகவும் அடிமைகளின் உடைமையாளராகவும் இருந்தார். இருப்பினும், சுதந்திரப் பிரகடனத்தின் பூர்வாங்க வரைவில், மூன்றாவது ஜோர்ஜ் மன்னர் அடிமைகள் வர்த்தகத்தை காத்துப் பேணி வருவதற்கு எதிரான கடும் கண்டனங்களுள் ஒன்றை ஜெபர்சன் சேர்த்திருந்த்து வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

"மனித இயல்புக்கு விரோதமாக அவர் கொடுமையான போர் புரிந்து வருகிறார். மனிதனது மிக புனிதமான உரிமைகளான சொத்து உரிமையையும், வாழும் உரிமையையும் அத்துமீறல் செய்து, தனக்கு நேரடியாக எந்தவிதமான தீங்கையும் செய்யாத தொலைதூரத்தில் வாழுகிற மக்களை அடிமைப்படுத்தி மற்றொரு நாட்டில் அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கிறார், அவர்களை ஏற்றிச் செல்லும்போது கொடுமையான சாவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறார். இத்தகைய கொள்ளையடிக்கும் போர், இந்த இழிவான கிறிஸ்தவ சமயத்திற்கு மாறுபட்ட அதிகாரங்கள், பிரிட்டனின் கிறிஸ்தவ மன்னரின் போர்முறை, மனிதனை மனிதன் அடிமையாக பகிரங்க சந்தையில் விற்கவும் வாங்கவும் பகிரங்க சந்தையைத் திறந்து வைத்திருப்பதில் உறுதி கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வர்த்தகத்தை (அடிமை) கட்டுப்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொரு சட்டப்பூர்வமான முயற்சியையும் நசுக்குவதற்காக, அவரது எதிராளிகளை இழிவுபடுத்துகிறார்."

இந்த பந்திக்கு மாநிலங்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜெபர்சனின் பல சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மற்றும் அது இறுதி வரைவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கான காரணத்தை ஆராயவேண்டியதில்லை. அமெரிக்க அடிமை வியாபாரம் தொடர்பான மோசமான இக்கருத்தின் மீது செய்யப்பட்ட பல சமரசங்களுள் அதுவும் ஒன்று. ஜெபர்சன் எப்படி இந்த சமரசங்களை ஏற்றுக் கொண்டார் என்பது அவரது வரலாற்றுப் பாத்திரம் பற்றிய எமது மதிப்பீட்டை பாதிக்கும் என்பது விவாதத்திற்கான முறைமையான கருப்பொருள் ஆக இருக்கிறது, ஆயினும், அதற்காக, ஜெபர்சனை அகந்தை உள்ளவர், புரட்டர் என்று மதிப்பீடு செய்கின்ற மற்றும் அவர் தலைமையேற்று செய்த பிரகடனத்தின் உலக வரலாற்று முக்கியத்துவத்தினை அற்பமாய்க் கருதுபவர்களுள் நான் இல்லை, என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இந்த விவாதத்தின் உள்ளடக்கத்தில், சொத்து உரிமை என்ற சொல்லுக்கு பதிலாக "மகிழ்வைத் தேடுவது", என்ற வாசகம் சேர்க்கப்பட்டது. இது இந்த பத்திரத்திற்கு நீடித்த உலக வரலாற்று முக்கியத்துவத்தை உரிமையாக விட்டுச்சென்றது. தாய்நாட்டிற்கு எதிரான அமெரிக்க காலனிகளின் கிளர்ச்சியை நியாயப்படுத்துதற்கு இந்த சூத்திரப்படுத்தலைப் பயன்படுத்தியதன் மூலம், ஜெபர்சன் "மனிதனின் உரிமைகள்" உண்மையில் எதனைக் கொண்டிருக்கின்றன என்ற மிகப் புரட்சிகர,பிரபஞ்ச மற்றும் மனிதாபிமான கருத்துருக்கான தூண்டலை வழங்கினார்.

லோக்கேயைப் பொறுத்தமட்டில், வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை ஆகியன தனிச்சொத்துடைமையில் உறுதிப்படுத்துகின்றன. ஜெபர்சன் கூறியதில், அந்த உறவு விளக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், வாழ்வும் சுதந்திரமும் அவை என்னவாக இருந்தாலும், "மகிழ்ச்சியைப் பெறுவதில்" அர்த்தத்தைக் கண்டன.

பிரெஞ்சுப் புரட்சி

பிரிட்னின் ஆதிக்கத்தை முறியடித்த அமெரிக்க காலனிகளின் வெற்றி ஐரோப்பாவின் குறுக்கே அடித்துச் செல்லவிருந்த புரட்சிகரப் போராட்டங்களின் புதிய சகாப்தத்திற்கான எச்சரிக்கை மணியை அடித்தது. 1789-ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி வெடித்தது. அது உலக வரலாற்றில் புதிய யுகம் தொடங்கியதைக் குறித்தது. 1789க்கு முன்னர், அளவிலும், வீறார்ந்த தன்மையிலும், துன்பத்திலும் மற்றும் சோகத்திலும் கூடிய சம்பவங்களை ஒப்பிடக் கூடிய புரட்சி வரலாற்றில் எதுவும் நடைபெற்றதில்லை. 1789-மே மாதம் அவை Etats-General- கூட்டத்தாலும் பின்னர் இருமாதங்கள் கழித்து பாஸ்ரி (Bastille) சிறைச்சாலை தகர்ப்பாலும் இயக்கி வைக்கப்பட்டது.

அடுத்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் போக்கில், புரட்சியானது பிரான்ஸ் நாட்டினை மட்டும் மாற்றவில்லை, நவீன உலகு எனப்படுவதற்கு கருத்தியல், அரசியல் மற்றும் சமுதாய அடிப்படைகளை அமைத்தது மற்றும் அது இன்றைக்கு இருக்கும் பின் நவீனத்துவ வாதிகளின் மடைத்தனமான கூற்றுக்களைத் தாங்கவில்லை.

பிற்போக்குவாதிகளும் வரலாறு பற்றிய சதித் தத்துவத்தின் போலீஸ்புத்தியுள்ள பக்தர்களும் அடிக்கடி கூறி வருவதுபோல, பிரெஞ்சுப் புரட்சியானது அறிவொளியாளர்களால் "விளைந்தது" அல்ல. புரட்சியின் வேர்கள் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமுதாயத்தின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்குள்ளே ஆழமாய் பதிந்துள்ளன. ஆனால் அறிவொளி சிந்தனைகள் புரட்சியின் அத்தியாவசியத்தை ஏற்றுக்கொள்ள மற்றும் அதன் காட்சியை தெளிவாகப் பேசவைக்க மனிதர்களைத் தயாரித்தது.

அறிவொளி இயக்கம் மனித வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள மனிதனால் முடியும்; சமுதாயம் கடவுளின் படைப்பாக இல்லை, மாறாக மனிதனால் உருவாக்கப்பட்டது என்று சிந்திப்பதற்கு கற்பித்திருந்தது; சமுதாயத்தில் அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் நிலவுவது, மனிதன் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நடந்ததும் அல்ல. மனிதனுக்கு கடவுளின் கட்டளைப்படியான நிலவுலகத்து விளக்கிக்காட்டலும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இரண்டும் நிலவும் சமுதாய அமைப்பில் கோளாறுகள் உள்ளன என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன, காரண காரிய செயல்பாட்டை வடிவமைப்பதில் குறைபாடாய் இருக்கிறது. புரட்சியானது மனிதனது இயல்பான பகுத்தறிவைக் கொண்டு மனித நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்திக் கொள்ளும் வழிமுறையாக புரட்சி இருந்தது.

ஆனால் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பொருந்தா முரண்பாடு என்னவென்றால், புரட்சியின் வெற்றி, பகுத்தறிவின் வெற்றி என்று அந்த புரட்சியில் நனவுபூர்வமாக பங்கேற்றவர்களே நினைத்து பார்க்காத அளவிற்கு ஆதரவு ஏற்பட்டது. புரட்சியின் வேகம் பல தலைவர்களை சீரமைத்தது, செம்மையாக்கியது. வேறு பல தலைவர்களை ஒதுக்கித் தள்ளியது. வரலாற்றில் அதற்கு முன்னர் காணாத வேகத்தில் நிகழ்ச்சிகள் நடைபோட்டு வந்ததால் தலைவர்களும், அவர்களைச் சார்ந்துள்ள குழுக்களும் அந்த வேகத்திற்கு ஏற்ப தங்களது போக்குளையும், நோக்குகளையும் அமைத்துக்கொண்டு வந்தனர்.

புரட்சியானது, அரசியல் வாழ்வில் பரந்த பொதுமக்களின் பலாத்காரமான, தனித்த மற்றும் கட்டுப்படுத்தமுடியாத தலையீடாகும். மீண்டும் மீண்டும், நிகழ்ச்சிகளின் அடிப்படைப் போக்கு, புரட்சியை என்றுமில்லா அளவு தீவிரமாக ஆக்கிய, Parisian sans-coulottes -களின் எழுச்சிகர இயக்கத்தால் திடீரென்று மாற்றி அமைக்கப்பட்டன.

அமெரிக்க புரட்சியைவிட பிரெஞ்சுப் புரட்சி ஒப்பிடமுடியா அளவுக்கு மிகவும் தீவிரத்தன்மை கொண்டது. அது அமெரிக்க குடியேற்றக்காரர்களின் மிகவும் விவேகமுடைய மற்றும் அரசியற் சட்டரீதியாய் சிந்திக்கும் புரிட்டன்களின் (சமய சீர்திருத்தவாதிகள்) மனநிலை பற்றி குறிப்புக்களால் விளக்கப்படுத்த முடியாது. ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர், வேறுபட்ட சூழ்நிலைகளில், குரோம்வெல் தலைமையில் பிரிட்டனின் பியூரிட்டன் மதவாதிகள் அன்றைய மன்னனின் தலையை வெட்ட நன்கு தயாரிக்கப்பட்டனர் என்பதை எடுத்துக் காட்டினர். புதிய உலகில் நடைபெற்ற புரட்சிக்கும், பிரெஞ்சு புரட்சிக்கும் இடையே நிலவிய வேறுபாடுகள் புறநிலைமைகளில் வேரூன்றி இருந்தன.

முதலாவதாக, வட அமெரிக்காவில் நிலப் பிரபுத்துவ மரபுவழி நிலவவில்லை. ஆயினும் வல்லமை மிக்கதாய் பிரிட்டிஷ் அரசாங்கம் அமெரிக்க குடியேற்றக்காரர்களுக்கு தோன்றினாலும், கிளர்ச்சியை அடக்க அது வழங்கிய எதிர்ப்பு, ஐரோப்பாவில் இருந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு முற்பட்ட ஆட்சியும் (ancien regime) அதன்கூட்டாளிகளும் வழங்கிய எதிர்ப்புக்கு ஈடாகாது. பிரிட்டனைப் பொருத்தவரை, சுதந்திரத்திற்கான அமெரிக்கர்களது கோரிக்கையால் முன்வைக்கப்பட்ட விஷயம், இறுதி ஆய்வில், கொள்கை பற்றிய விஷயமாகும். பிரெஞ்சுப் புரட்சிக்கு முற்பட்ட ஆட்சியைப் பொறுத்தவரை (ancien regime), புரட்சியின் கோரிக்கையும் நோக்கங்களும் வாழ்வா சாவா பிரச்சினையை எழுப்பின. அதனால் அதன் எதிர்ப்பு எளிதில் விட்டுக் கொடுக்காதிருந்தது.

எதிர்ப்பானது, புரட்சிகர சக்திகளால் இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதற்கான அழைப்பை, பதிலுக்கு தூண்டி விட்டது. 1793 அளவில் பிரெஞ்சுப் புரட்சியானது மேற்குடி ஆட்சியின் எதிர்ப்பை மட்டுமல்லாது பிரான்சில் உள்ள அதன் கூட்டாளிகளின் எதிர்ப்பையும் சந்தித்தது, அதன் அதீத வெளிப்பாடு வெண்டே எழுச்சி ஆகும். அது பிரிட்டனுடன் கூட போரில் இருந்தது, உண்மையில் அனைத்து மேற்குடி ஐரோப்பாவுடனும் போரில் இருந்தது. அத்தகைய சூழ்நிலை திணயச்செய்வதை ஊக்குவிக்கவில்லை.

முதலாளித்துவ வர்க்கத்தினர் தங்களது சொந்த உயிர் பிழைப்பிற்காக, பிரான்ஸிலும் உண்மையில் இதர ஐரோப்பிய நாடுகளிலும் உலகிலும் உள்ள ஒடுக்கப்படுபவர்களுக்கு பரந்த வேண்டுகோளை விடாமல், பழமைவாதிகள் ஆட்சியின் (ancien regime) படைகளைத் தோற்கடிப்பதில் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. மனிதனது உரிமைகள் தொடர்பான பிரகடனம் புரட்சியின் முதற்கட்டத்தில் வெளியிடப்பட்டது. அது சொத்து உரிமையில் எவரும் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டது. ஆனால், சொத்து உரிமை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், செல்லுமானால் நகர்ப்புறங்களில் வாழுகிற மக்களுக்கு எதிராக அது அமைந்தது. நகர்புற மக்களது ஆதரவு இல்லாமல் பிரான்ஸ் நாட்டு முதலாளித்துவ வர்க்கம் பழைமைவாதிகளின் ஆட்சியை தோற்கடிக்க முடியாது.

"உரிமைகளின் சமத்துவத்தை" முற்றிலும் சட்டபூர்வமான வார்த்தைகளில் மற்றும் தத்துவார்த்த பதங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது மட்டுமே போதுமானது அல்ல; பரந்த பொது மக்களைப் பொறுத்தவரை, "சமத்துவம்" என்ற வார்த்தையானது அனைவரும் கொண்டிருக்கின்ற அருவ ரீதியான உறுதிப்பாட்டைவிட கூடுதலான ஒன்றை அர்த்தப்படுத்தியது. சில நுட்பமான அர்த்தத்தில், பொதுமக்களுக்கு நீதிமன்றங்களில் சம அந்தஸ்து வேண்டுமென்று அர்த்தப்படுத்தியது. இன்னும் சொல்லப் போனால், சமுதாயம் முழுவதுமாக சேர்ந்து உற்பத்தி செய்யும் செல்வத்தை நியாயமாக விநியோகிக்க வேண்டுமென்றும் அனைத்து மக்களும் நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்தியது. தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகம் வைத்திருக்கின்ற அடிப்படையில் சிறு எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் அனுபவிக்கும் சலுகையான திருப்தியும் பாதுகாப்பும், அனைவருக்கும் கிடைக்கச் செய்வது ஒரு உரிமையாக்கப்பட வேண்டும் என்றது.

வடஅமெரிக்காவில் பிரிட்டனுக்கு எதிரான போராட்டத்தில், புரட்சிகர இயக்கத்தின் கீழ்மட்ட அணிகளுள்ளே கடுமையான உள் எதிர்ப்புக்கள் எதுவுமின்றி காலனி நாட்டு முதலாளிகள் தலைமை தாங்கி நடத்தி இருந்தனர். ஆயினும், பிரான்சில், புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில், முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை நோக்கங்கள் பரந்த மற்றும் மிகவும் தீவிரமான சமூகப் பண்பின் கோரிக்கைகளால் அதிகரித்த அளவில் சவால் செய்யப்பட்டிருந்தன. இந்த புரட்சி நிலப்பிரபுத்துவ அடிப்படைகளை தகர்த்துவிட்டாலும், முதலாளித்துவ சொத்து உரிமையின் சர்வவியாபகத்தன்மை நகர்ப்புற மக்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகக் கோரிக்கைகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. புரட்சிகர ஜாக்கோபின் இயக்கத்தைச் சேர்ந்த ஜாக் று (Jacques Roux) 1793- ஜூன் 25-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில், "பணக்காரர்கள் தங்களது ஏகபோக உடைமைகள் அடிப்படையில் வசதியில்லாத சக மனிதர்களது வாழ்வையும், சாவையும், நிர்ணயிக்கின்ற உரிமையை பெறுகையில், சமத்துவ உரிமை என்பது வெறும் நிழலாகவே உள்ளது" என பிரகடனப்படுத்தினார்.

ரோபேர்ஸ்பியர் அரசாங்கம் முதலாளித்துவ சொத்து உரிமைகளை தற்காத்து வந்தாலும், மிகப்பெரும்பாலான பொதுமக்களது கோரிக்கைகளை ஏற்று கணிசமான சலுகைகளை வழங்குவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டது. 1793-ம் ஆண்டு விலைக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக் கல்வியை விரிவுபடுத்தும் சட்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. 1794-மே மாதம் புரட்சி அரசாங்கம் கருணை அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சட்டம் பொது மக்களின் சமூக பாதுகாப்புக்கான அடிப்படையை அம்சங்களை கொண்டிருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள், பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்கு மிகுந்த பீதியை உருவாக்கிற்று. கடுமையாய் காயமுற்ற பழைய நிலப்பிரபுத்துவ மேற்குடி ஆட்சியாளர்களின் மிச்சசொச்சங்களால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர அச்சுறுத்தலைவிடவும், பொதுமக்களது எதிர்ப்பைக் கண்டு முதலாளித்துவ வர்க்கத்தினர் பெரிதும் பயந்தனர்.

பிரெஞ்சுப் புரட்சியின் போது, மனிதனது உரிமைகள் மற்றும் சமத்துவம் பற்றிய கருத்துருக்கள், 1789ல்- க்கு முன்னர் எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு புதிய சிறப்பை பெற்றன. மனித உரிமைகள் மற்றும் சொத்து உரிமைகள் என்பன எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே கருதப்படுவதற்கு இல்லை. தற்போது இந்த இரு பதங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற வேறுபாடின் விளக்கம், உண்மையான சமூக சக்திகளின் வரலாற்று போராட்டத்தின்அடிப்படையில் உருவானதே தவிர, வெறும் தத்துவார்த்த ஊகத்தின் அடிப்படையில் உருவானது அல்ல. 18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு முதலாளித்துவ புரட்சியின் துயரமான முடிவையும் 19ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச புரட்சிகர போராட்டங்களின் வீரமிக்க எதிர்பார்ப்பையும் பிரதிநிதித்துவப்படுத்திய சம்பவங்களில் இது ஸ்தூலமான வெளிப்பாட்டைக் கண்டது. இது 1795ல் Gracchus Babeuf (1760-1797) -ல் தலைமை தாங்கப்பட்ட "சமங்களின் சதி" எனப்பட்டது.

Gracchus Babeuf- ன் வேலைத்திட்டம், எதிர்கால தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சோசலிச எதிர்பார்ப்புகளுக்கு, முதிராததாக இருந்தாலும், அற்புதமானது. 1795-ம் ஆண்டு கிரேக்கஸ் பபேஃப் எழுதிய நூலில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அவர் 1797-ம் ஆண்டு தூக்கிலிடப்படும் முன்னர், சதி செய்ததாகக் கூறப்படுவதுடன் தொடர்புடைய அனைத்து குறிப்புக்களையும் பத்திரங்களையும் பாதுகாத்து வைக்குமாறு தனது நண்பர்களைக் கேட்டுக் கொண்டார். "நாம் முன்மொழிந்த மகிழ்ச்சியை மனித சமுதாயம் அடைவதற்கான வழிகள் பற்றி மீண்டும் மக்கள் கனவு காணும்பொழுது, இந்தக் குறிப்புக்கள் மூலமாக நீங்கள், இன்றைய ஊழல் மிக்க மனிதர்கள் எனது கனவுகள் என்று அழைப்பவற்றை-- சமத்துவத்தின் சீடர்கள் அனைவருக்கும் முன்வைக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

நான் Babeuf- ஐ எதிர்கால சோசலிச இயக்கத்தின் "முதிரா எதிர்பார்ப்பு" எனக் குறித்திருக்கிறேன். நான் அதனை, சமூகசக்திகள் கம்யூனிச வேலைத் திட்டத்தை உணர்தல் அந்தக் கட்டத்தில் கருவடிவிலானதாக இருந்தது என்ற அர்த்தத்தில் முதிராதது எனக்குறித்தேன். அது விரைந்த தொழிற்சாலை அபிவிருத்தி மேற்கு ஐரோப்பாவில் பரந்த பாட்டாளி வர்க்கத்தின் தோற்றத்திற்கான சூழ்நிலைமைகளை உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களின் பொழுது மட்டுமே ஆகும்.

உண்மையில்,1828ல் Babeuf-ன் சமங்களின் சதி பற்றிய Buonarroti- ன் வரலாற்றுக் குறிப்பு வெளியிடப்பட்ட காலம் அங்கு கணிசமான தொழிலாள வர்க்கம் இருந்தது. அதன் முன்னேறிய பிரதிநிதிகள் இந்த தொகுதியை தோன்றிக் கொண்டிருந்த சோசலிச இயக்கத்தின் முதலாவது மாபெரும் படைப்புக்களுள் ஒன்று என இதனை ஏற்றனர். அடுத்த 20-ஆண்டு கழித்து நவீன சோசலிசத்தின் அரசியல் அடித்தளமான மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது.

மனித நடவடிக்கை மற்றும் சிந்தனை பற்றிய வரலாற்றில் இந்த அசாதாரண அத்தியாயங்களை மதிப்பீடு செய்கையில், ஒருவர் ஊக்கப்படவும் செய்கிறார் மற்றும் வெட்கப்படவும் செய்கிறார்-- அதன் மாட்சிமை, உலகளாவிய தன்மை மற்றும் காலத்தை வென்ற தன்மையில், 18வது நூற்றாண்டின் மாபெரும் சுதந்திரப் போராட்டங்களை உருவாக்கிய உணர்வுகள் கருத்துக்கள், இந்த நாட்டை ஸ்தாபிக்க பங்களிப்பு செய்த குறிக்கோள்கள் ஆகியவற்றால் ஊக்கப்படுத்தப்படுவோம். இவற்றோடு ஒப்பிடும்போது இன்றைய தினம் வெட்கி தலைகுனியும் அறிவுஜீவித வறுமையும், சுயநலப்போக்கும் நமது அரசியல் வாழ்வில் பரவலாகிவிட்டது கண்டு வெட்கப்பட வேண்டியும் இருக்கிறது.

நமது புரட்சிகர முன்னோடிகள் கனவு காணமுடியாத சடரீதியான வளங்களைப் பெற்றிருக்கிறோம். ஐக்கிய அமெரிக்க அரசுகளில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள வறுமையை ஒழித்துக்கட்டுகின்ற தொழில்நுட்ப அறிவியல் வல்லமையிருந்தும், சமுதாய மற்றும் அரசியல் தடைக்கற்கள் அத்தகைய உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இடையூறாக உள்ளன. இத்தகைய வளங்கள் இருப்பதனால் வறுமையை ஒழிப்பது என்பது வெறும் தொழில் நுட்பப் பிரச்சினையாக இருக்கும்.

இருந்தும், இன்றைய தினம் நிலவுகின்ற வறுமைகளை மற்றும் கழிசடை நிலையை நியாயப்படுத்துகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது 200 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சிந்தனையாளர்களால் மலைப்பாய் நோக்கப்பட்டிருக்கும் மற்றும் வெறுக்கப்பட்டிருக்கும். தற்போதைய எமது சமுதாயத்தில், எங்கும் காணப்படும் மனித துயரங்கள் மற்றும் சமூக அவல காட்சிகளைக் கண்டும் காணாது, நகர்ப்புற தெருக்களில் நடந்து செல்கின்ற நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் 200-ஆண்டுகளுக்கு முன்னர் டொம் பெய்ன் போன்ற சிந்தனையாளர்கள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் குறித்து வேதனையை தங்களது எழுத்துக்களில் தெளிவாக வெளியிட்டிருக்கின்றனர். "தற்போதைய நாகரிகத்தின்நிலை நியாயமற்றதாக இருப்பதால் அருவருப்பானதாக இருக்கிறது. எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு மாறாக இருக்கிறது, அதனைச் செய்வதற்கு புரட்சி அவசியமானதாக இருக்கிறது. நிலவுகின்ற செல்வ வளத்திற்கும் வறுமைக்கும் உள்ள வேறுபாடு தொடர்ந்து சந்தித்து வருகின்றது, மற்றும் நம்முடைய கண்களை உறுத்திக் கொண்டு வருகின்றது. இது இறந்தவர்களையும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் ஒரேசங்கிலியில் பிணைத்திருப்பது போல், வறுமையும், செழுமையும் சேர்ந்திருக்கிறது" என்று தோமஸ் பெய்ன் எழுதியிருக்கிறார்.

அத்தகைய வார்த்தைகளை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த "பெரிய" கட்சிகளின் வேட்பாளர்களும் கேட்டிருப்பர் என்று ஒருவரும், கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. தற்போதுள்ள சமுதாய அமைப்பில் காணப்படுகின்ற வேறுபாடுகளை மட்டும் ஒப்புக்காக பேசிவிட்டு சென்றுவிடுகிறார்கள். பரந்த மக்களிடமிருந்து இந்த முதலாளித்துவ ஆட்சியின் சாதனங்களால் அந்த சமூக நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. 18ம் நூற்றாண்டில் பழமைவாத ஆட்சியாக நிலப்பிரபுத்துவ சமுதாயம் இருந்தது போல, அந்த அளவுக்கு முதலாளித்துவ சமுதாயமானது, 20ம் நூற்றாண்டின் இறுதியில் பழமைவாத ஆட்சியாக இருக்கின்றது.

இத்தகைய குறைபாடுகளை நாம் எளிதாக சுட்டிக்காட்டிவிடலாம். இத்தகைய குறைபாடுகள் இல்லாத மக்களது விழிப்புணர்வு இயக்கத்திற்காகவே சோசலிச சமத்துவ கட்சி பாடுபடுகின்றது. நமது கட்சி மட்டுமே உழைக்கும் வர்க்கத்தின் அசைக்க முடியாத உரிமைகளுக்காக பாடுபட்டு வருகின்றது. புரட்சி இயக்கத்தின் மூலம் முதலாளித்துவத்திற்கு முடிவுக்கட்டி, சர்வதேச சோசலிச சமுதாயத்தை உருவாக்குவதற்காக சோசலிச சமத்துவ கட்சி பாடுபட்டு வருகிறது.

அறிவொளி மற்றும் புரட்சிகள் எமது சொந்த தலைமுறைக்கு தயாரித்தளித்த வேலையின் முக்கியத்துவம் என்ன? வரலாற்று சடவாதப் பள்ளியில் பயின்ற மார்க்சிஸ்டுகளாகிய நாம், 18ம் நாற்றாண்டு புரட்சியாளர்களின் மற்றும் சிந்தனையாளர்களின் மட்டுப்பாடுகளை, பொருள் தெளிவின்மையை மற்றும் முரண்பாடுகளை நன்கு அறிவோம் தான். ஒரு புத்தகப் படிப்பாளர், இந்த மட்டுப்பாடுகள் என்ன என்பதை குறைபாடுகளைக் காட்டுவதற்கு மேற்கோள்களைத் தொகுக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது அவர்களின் கருத்துக்களிலும் செயல்களிலும் நீடித்திருந்த்தை அங்கீகரிப்பதும் கௌரவிப்பதும் அவசியமானதாகும்.

அறிவொளி சிந்தனையின் புரட்சிகர உணர்வு சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உயிரூட்டுகின்றது. நமது கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் மாற்றிக் கொடுக்க முடியாத உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்காகப் போராடி வருகிறது. முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டவும் சர்வதேச சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிக்கவுமான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலமே அந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்த முடியும்.

 

 World Socialist Web Site
All rights reserved