காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி

 சீனப் புரட்சியும்  ட்ரொட்ஸ்கிச இயக்கமும்

WSWS : Tamil : நூலகம்
சீனப் புரட்சியும் ட்ரொட்ஸ்கிச இயக்கமும்
சீனப் புரட்சியும் ட்ரொட்ஸ்கிச இயக்கமும்
 
சீனப் புரட்சி

மூன்றாம் சீனப்புரட்சியும் அதற்குப் பின்னரும்


"சோசலிசத்திற்கான உலக வாய்ப்புகள்"
ட்ரொட்ஸ்கிசமும் சீனப் புரட்சியும்

டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்

1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்
 

விரிவுரை எண் ஆறு: தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா
 


The Lessons of October
 


 

Leon Trotsky

The Chinese Revolution

சீனப்
புரட்சி


லியோன்
ட்ரொட்ஸ்கி

1938 

use this version to print | Send feedback
 

எல்லாவற்றிற்கும் முதலாக, இந்த புத்தகத்தின் ஆசிரியர்  வரலாற்று சடவாத சிந்தனையைச் சேர்ந்தவர் என்ற வெறும் உண்மை மட்டுமே, அவருடைய படைப்புகளுக்கு ஒப்புதலை வென்றெடுக்க நம்முடைய பார்வையில் முற்றிலும் போதாமல் இருக்கலாம். இன்றைய கால நிலைமைகளில் மார்க்சிச முத்திரையானது, எமக்கு அதை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக முன்கூட்டியே அவநம்பிக்கையை உண்டாக்கிவிடுவதாக இருக்கலாம். சோவியத் ஆட்சி சிதைவோடு நெருக்கமாக இணைக்கப்பட்டதால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் மார்க்சிசம் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வீழ்ச்சியையும், அவதூறையும் கடந்து வந்துள்ளது. பகுப்பாய்வு மற்றும் விமர்சனத்தின் ஓர் கருவியாக இருந்த இடத்திலிருந்து, அது மலிந்த ஆதாரவாதத்திற்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. உண்மைகளை ஆராய்வதற்கு மாறாக, மாட்சிமையுள்ள கட்சிக்காரர்களின் நலன்களின் போலிவாதங்களைக் கண்டறிவதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது.

 1925-27 சீன புரட்சியில் கம்யூனிச அகிலம் ஒரு பிரமாண்ட பாத்திரம் வகித்தது, அது இந்நூலில் நன்கு விரிவாகவே விளக்கப்பட்டுள்ளது. ஆனால் சீன புரட்சியின் ஓர் ஒட்டுமொத்த சித்திரத்தையும் அளிக்கும் ஒரு புத்தகத்தையாவது கம்யூனிச அகிலத்தின் நூலகத்தில் தேடினால் அது பிரயோசனமற்றதாகவே இருக்கும். மாறாக கம்யூனிச அகிலத்தின் அரசியல்களில் இருந்த ஒவ்வொரு ஏற்ற-இறக்கங்களையும் மிருதுவாக எடுத்துக்காட்டும் அல்லது மிகச் சரியாக கூறுவதானால், சீனாவில் சோவியத்தின் இராஜாங்கவியலை மற்றும் ஒவ்வொரு ஏற்ற-இறக்க உண்மைகளுக்கும் அதை அடிபணிய வைத்தமை, அத்தோடு பொதுவாக கையாளப்பட்ட விதம் ஆகியவை குறித்த பல அக்காலத்திற்குரிய புத்தகங்களை கண்டுகொள்ளலாம். சிந்தனைரீதியான குழப்பங்களைத் தவிர வேறொன்றையும் கிளறிவிட முடியாத இவ்வாறான படைப்புகளுக்கு மாறாக இசாக்கின் நூல் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒரு விஞ்ஞானபூர்வ படைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இது பெரும் எண்ணிக்கையிலான மூல ஆதாரங்கள் மற்றும் துணை ஆவணங்களின் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட ஆய்வின் அடித்தளத்தில் அமைந்துள்ளது. இந்த வேலைக்காக ஐசக்ஸ் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் செலவிட்டுள்ளார். மேலும், முன்னதாக அவர் சுமார் ஐந்து ஆண்டுகள் சீனாவில் ஓர் செய்தியாளராகவும், சீன வாழ்க்கையை பார்த்தவராகவும் கடந்து வந்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.   

இந்நூலின் ஆசிரியர் புரட்சியை ஒரு புரட்சியாளராக அணுகுகிறார் என்பதோடு அதை மூடிமறைப்பதற்கும் அவர் எந்த காரணத்தையும் காணவில்லை. ஒரு பிலஸ்தீனியனின் (philistine) பார்வையில் ஒரு புரட்சிகர கண்ணோட்டமானது ஒரு விஞ்ஞானரீதியான புறநிலைமை இன்மைக்கு நடைமுறையில் சமமாக உள்ளது.  நாம் அதற்கு நேரெதிராக கருதுகிறோம்: உண்மையில் விஞ்ஞான அணுகுமுறையைக் கொண்டிருக்கும்பட்சத்தில் ஒரு புரட்சியாளர் மட்டுமே புரட்சியின் புறநிலை இயக்கவியலை வெளிப்படையாக எடுத்துக்காட்டக்கூடியவராக இருக்கிறார். பொதுவாக பொருளறிந்துகொள்ளும் சிந்தனையானது ஆழ்ந்த சிந்தனையாகாது, மாறாக அது செயல் திறமுடைய ஒன்றாகும். இயற்கை மற்றும் சமூக இரகசியங்களை ஊடுருவுவதற்கு உறுதியான தீர்மானம் உள்ள தன்மை இன்றியமையாததாக உள்ளது. ஒருவருடைய வாழ்க்கை யாருடைய சிறிய கத்தியில் தங்கியிருக்குமோ அந்தவொரு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு உறுப்பின் பல்வேறு திசுக்களை வேறுபடுத்திக் கண்டுகொள்வதைப்போல், ஒரு புரட்சியாளரும் தன்னுடைய கடமைபற்றி பொறுப்புணர்ச்சியை  கொண்டிருப்பாரேயானால், அவர் சமூக கட்டமைப்பையும், அதன் செயல்பாடுகளையும், பிரதிபலிப்புகளையும் மிகவும் கடமையுணர்ச்சியுடன் பகுத்தாராய கடமைப்பட்டுள்ளார்.

ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையிலான தற்போதைய யுத்தத்தைப் புரிந்துகொள்ள ஒருவர் கட்டாயமாக இரண்டாவது சீனப் புரட்சியை ஆரம்பப் புள்ளியாக எடுக்க வேண்டும். இரண்டு விடயங்களிலேயுமே ஒரேமாதிரியான சமூக சக்திகளை மட்டுமல்ல, மாறாக ஒரே நபர்களையும் அவ்வப்போது காண்கிறோம். அதை சுருக்கமாக கூறுவதானால், சியாங் காய்-ஷேக் என்பவர் இந்நூலின் முக்கிய இடத்தில் வருகிறார். இந்த வரிகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்தபோது, சீன-ஜப்பான் யுத்தம் எப்போது எவ்விதத்தில் முடியும் என்பதை கணிப்பது இன்னும் சிரமமாக உள்ளது. ஆனால் தூர கிழக்கு தேசங்களில் தற்போது நிலவும் முரண்பாட்டின் விளைவானது, எவ்விதத்தில் இருந்தாலும் ஒரு தற்காலிக குணாம்சத்தைக் கொண்டிருக்கும். தடுக்கமுடியாத பலத்தோடு வந்து கொண்டிருக்கும் உலக யுத்தம், சீன பிரச்சினையை காலனித்துவ ஆக்கிரமிப்பின் ஏனைய அனைத்து பிரச்சினைகளோடும் சேர்த்து மீளாய்வு செய்யும். அதற்காக அது, ஏகாதிபத்திய சக்திகளின் புதிய உறவுமுறைக்கிணங்க உலகத்தை புதிதாக பிரிக்கும் ஓர் எதார்த்தமான கடமையை இரண்டாம் உலக யுத்தம் கொண்டிருக்கும். போராட்டத்தின் ஆரம்பச்சூழல், நிச்சயமாக, குள்ளர்களின் குளியலறையாக இருக்கும் மத்தியதரைக்கடலாகவோ, அல்லது அட்லாண்டிக் பெருங்கடலாகவோ இருக்காது, மாறாக அது பசிபிக் பள்ளத்தாக்காக இருக்கும். மனித இனத்தில் சுமார் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டிருக்கும் சீனா, போராட்டத்தின் மிக முக்கிய இலக்காக விளங்கும். எதிர்வரவிருக்கும் யுத்தத்தில் மற்றொரு பெரிய பங்களிப்பாளராக இருக்கக்கூடிய சோவியத் ஒன்றியத்தின் கதியும், குறிப்பிட்டளவிற்கு தூர கிழக்கு தேசங்களால் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். மாபெரும் சக்திகளின்  மோதலுக்கான தயாரிப்பில், ஆசிய கண்டத்தில் தன்னைத்தானே மிகப்பரந்த சாத்தியமான பயிற்சிக்களமாக ஆக்கிக்கொள்ள டோக்கியோ இன்று முயன்று வருகிறது. அவ்வாறே பிரிட்டனும், அமெரிக்காவும் காலம் தாழ்த்தாது. ஆனால் உலக யுத்தம் இறுதி தீர்வை உருவாக்காது என்பதை நிச்சயமாக கணிக்க முடியும். மேலும் தீர்வை தீர்மானிக்கும் தற்போதைய தீர்மானிப்பவர்களாலும் இது சாரத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக புதிய புரட்சிகள் தொடரும். அவை யுத்தத்தின் விளைவுகளை மட்டுமின்றி மாறாக யுத்தத்தை உக்கிரப்படுத்திய அனைத்துவித சொத்துடைமை நிலைமைகளையும் மீளாய்விற்கு உட்படுத்தும்.   

வரலாறு ஒரு அமைதிவாதி அல்ல 

இந்த சாத்தியக்கூறு ஓர் அனுமானமாக இல்லை, மாறாக ஆழ்ந்த வரலாற்றின் ஆழ்ந்த ஆய்வாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அது ஒருபோதும் பெண்களின் சமாதான சங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கவில்லை. 1914-18 யுத்தங்களைக் கடந்துவந்த பழைய தலைமுறை அதன் கடமைகளில் தனி ஒன்றைக்கூட செய்து முடித்திருக்கவில்லை. அது யுத்தங்கள் மற்றும் புரட்சிகளின் சுமையை புதிய தலைமுறைக்கு ஒரு பாரம்பரிய மரபாக விட்டுச் சென்றுள்ளது. மனித வரலாற்றில் நிகழ்ந்த இந்த மிக முக்கியமான மற்றும் பரிதாபகரமான சம்பவங்கள் அநேகமாக ஒன்றோடு ஒன்றுசேர்ந்து நடந்து வந்தன. நிச்சயமாக அவை வரவிருக்கும் தசாப்தங்களின் பின்புலத்தையும் உருவாக்கும். ஆனால் புதிய தலைமுறை அது தன்னுள் கொண்டிருக்கும் நிலைமைகளிலிருந்து சுயாதீனமாக வெட்டிக்கொண்டுவிட முடியாது என்பதும், குறைந்தபட்சம் அதன் சகாப்தத்தின் விதிகளைச் சிறப்பாக புரிந்துகொள்ள பழகியுள்ளது என்பது மட்டுந்தான் நம்பிக்கையாக உள்ளது. 1925-27 சீனப் புரட்சியோடு அதனை அதுவே அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு, இந்த புத்தகத்தைவிட ஒரு சிறந்த வழிகாட்டியை இன்று அதனால் காணமுடியாது.

கேள்விக்கிடமின்றி ஆங்கிலோ-சாக்சோனிய மேதைகளின் மேதைமைகள் இருந்தபோதினும், ஆங்கிலோ-சாக்சோனிய நாடுகளில் புரட்சிகளின் விதிகள் துல்லியமாக மிகக் குறைந்தபட்சமே புரிந்துகொள்ளப்பட்டிருந்தன என்பதை கவனிக்காமல் விடுவது சாத்தியமில்லை. இதற்கான விளக்கம், ஒருபுறம், மிகநீண்ட காலத்திற்கு முன்னரே இந்நாடுகளில் புரட்சிகள் தோன்றியிருந்தன என்ற உண்மையிலும், மற்றும் குழந்தைத்தனமான குறும்புகளைப் போல உத்தியோகபூர்வமான "சமூகவியலாளர்களிடையே" அவை ஏளனப்படுத்தப்பட்டன என்ற உண்மையிலும் தங்கியுள்ளது. மறுபுறம், ஆங்கிலோ-சாக்சோனிய சிந்தனையில் மிகவும் குணாம்சப்பட்டிருக்கும் நடைமுறைவாதமானது, புரட்சிகர நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு ஒன்றும் பயனாக போவதில்லை என்பதாக உள்ளது.

பதினேழாம் நூற்றாண்டு பிரித்தானிய புரட்சி, பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு புரட்சியைப்போல் சமூக கட்டமைப்பை "பகுத்தறிவானதாக்கும்" வேலையைச் செய்தது. அதாவது நிலப்பிரபுத்துவ பிசுறுகள் மற்றும் படிமங்களிலிருந்து அதை துடைத்தெடுத்து, அந்த சகாப்தத்தில் "மனித புரிந்துகொள்ளலுக்கான" விதிகளாகப் பார்க்கப்பட்ட கட்டுப்பாடற்ற போட்டியின் விதிகளுக்குள் அதை கொண்டு வந்தது. இவ்வாறு செய்ததன் மூலமாக, Puritan revolution -இங்கிலாந்து திருச்சபைக்கு எதிரான புரட்சி- அதற்கு அதுவே புனித உடையைப் போர்த்திக் கொண்டது. அவ்விதத்தில் அது அதன் சொந்த முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள தூய-மழலைத்தனமான இயலாமையை வெளிப்படுத்தியது. அமெரிக்காவில் கணிசமான அளவிற்கு முற்போக்கு சிந்தனையின் தாக்கத்தை ஏற்படுத்திய பிரெஞ்சுப் புரட்சி, முற்றிலும் தீவிரத்தன்மை கொண்ட சூத்திரங்களால் வழிநடத்தப்பட்டது. இன்னமும்கூட அஞ்சி நடுங்கி கொண்டு விவிலிய தீர்க்கதரிசிகளின் வேஷத்தில் தங்கியிருக்கும் மனித புரிந்துகொள்ளலோ அல்லது சமூகத்தை ஒரு தீவிரமான "உடன்படிக்கையின்" விளைபொருளாக பார்க்கும் மதசார்பற்ற மனித புரிந்துகொள்ளலோ, இன்றைய நாட்களிலும் கூட மெய்யியல் மற்றும் சமூகவியல் களத்தில் ஆங்கிலோ-சாக்சனிய சிந்தனையின் அடிப்படை வடிவங்களாக உள்ளன

இருந்தபோதினும், நிஜமான சமூக வரலாறு, ரூசோவை (Rousseau) தொடர்ந்து வந்த ஒரு பகுத்தறிவு "உடன்படிக்கை" மீதோ அல்லது பென்தாம் (Bentham) கூறியதைப் போல, "சிறந்த நன்மை" கோட்பாட்டின் மீதோ கட்டமைக்கப்படவில்லை, மாறாக முரண்பாடுகள் மற்றும் விரோதங்களின் அடிப்படையில் "பகுத்தறிவின்மை" கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. புரட்சி தவிர்க்கமுடியாததாக ஆகவேண்டுமானால் வர்க்க முரண்பாடுகள் உடையும் புள்ளிக்கு இழுத்து வரப்பட வேண்டும். இது துல்லியமாக வரலாற்றுரீதியிலான தவிர்க்கமுடியாத முரண்பாட்டின் தேவையாக உள்ளது. அது நன்மையையோ அல்லது தீமையையோ சார்ந்திருப்பதில்லை, மாறாக அது வரலாற்று நிகழ்முறையின் "பகுத்தறிவற்ற" அஸ்திவாரத்தின் மிகவியத்தகு வெளிப்பாடாக, யுத்தத்தோடு சேர்ந்து புரட்சியை உருவாக்கும் வர்க்கங்களின் புறநிலையான உள்உறவுகளைச் சார்ந்திருக்கும்.

எவ்வாறிருந்தபோதினும், "பகுத்தறிவின்மை" என்பது ஏதேச்சதிகாரத்தைக் குறிக்காது. அதற்கு முரணாக, புரட்சியின் மூலக்கூற்றை தயாரிப்பதிலும், அதன் வெடிப்பிலும், அதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியிலும், ஓர் ஆழ்ந்த உள்ளார்ந்த புரிந்துகொள்ளக்கூடிய விதிமுறை உள்ளது. அதை விளங்கிக்கொள்ளவும் முடியும், மேலும் முக்கியமாக, அதை முன்கணிக்கவும் முடியும். ஒருமுறைக்குப் பலமுறை கூறப்பட்டுள்ளதைப் போல, புரட்சிகள் அவற்றின் சொந்த தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது அரிஸ்டாடிலின் தர்க்கமும் அல்ல, "மனித புரிந்துகொள்ளல்" என்கின்ற நடைமுறைவாத அரைகுறை-தர்க்கத்திற்கு குறைவானதும் அல்ல. அது சிந்தனையின் உயரிய செயல்பாடாக விளங்கும், நிகழ்வுகளினதும் மற்றும் முரண்பாட்டினதும் தர்க்கம், அதாவது இயங்கியல் ஆகும்

ஆங்கிலோ-சாக்சோனிய நடைமுறைவாதத்தின் பிடிவாதமும், இயங்கியல் சிந்தனையோடு அதற்கிருந்த விரோதமும் இவ்வகையில் அவற்றின் சடத்துவ காரணங்களையும் கொண்டிருக்கின்றன. ஒரு கவிஞர் அவரின் சொந்த தனிப்பட்ட அனுபவங்கள் இல்லாமல் புத்தகங்கள் மூலமாக மட்டுமே இயங்கியலை எட்டிவிட முடியாது. அவ்வாறே கொந்தளிப்புகளுக்கு உள்ளாகாத மற்றும் தடையற்ற "முன்னேற்றத்திற்குப்" பழக்கப்பட்ட நன்கு வளர்ந்த சமூகமும், அதன் சொந்த அபிவிருத்தியின் இயங்கியலைப் புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருக்காது. ஆனால், ஆங்கிலோ-சாக்சோனிய உலகம் பெற்றிருந்த இந்த தனிச்சலுகை அதை கடந்தகாலத்திற்குள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது என்பது மட்டும் மிகவும் வெளிப்படையாக உள்ளது. வரலாறு பிரிட்டனுக்கும், அத்தோடு அமெரிக்காவிற்கும் இயங்கியலின் ஆழமான பாடங்களை வழங்க தயாராகி வருகிறது.

சீனப் புரட்சியின் குணாம்சம்

இந்நூலின் ஆசிரியர், சீனப் புரட்சியின் குணாம்சத்தை முந்தைய வரையறைகளிலிருந்தும், வரலாற்று ஒப்புமைகளிலிருந்தும் ஊகித்துணர முயலவில்லை, மாறாக தற்போது நிலவும் சீன சமூகத்தின் வடிவமைப்பிலிருந்தும், அதன் உள்ளார்ந்த சக்திகளின் இயக்கவியலில் இருந்தும் தருவிக்கிறார். இதில்தான் இந்நூலின் தலையாய மதிப்பார்ந்த அணுகுமுறை தங்கியுள்ளது. வாசகர் வெறுமனே சம்பவங்களின் அணிவகுப்பு விளக்கத்தை மட்டுமின்றி, எது மிகவும் முக்கியமானதோ அத்தகைய, அவற்றின் சமூக மூலவிசைகளையும் புரிந்துகொள்ள பயில்வர். அரசியல் வேலைத்திட்டங்களும், மற்றும் போராடும் கட்சிகளின் முழக்கங்களும் அவை வெளிப்படையாக எவ்வாறு காட்டிக்கொண்டாலும் கூட  இவை, சுயாதீனமாகவோ அல்லது பகுப்பாய்வின் இறுதியில் நிகழ்சிப்போக்கினை தீர்மானிக்கும் காரணிகளாகவோ இருக்காவிட்டாலும்கூட, இந்த அடிப்படையில் மட்டும் தான் அவற்றை சரியாக மதிப்பிட முடியும்.

அதன் உடனடி நோக்கங்களில், பூர்த்திசெய்யப்படாத சீனப் புரட்சியானது ஒரு "முதலாளித்துவ" புரட்சியாகும். எவ்வாறிருந்தபோதினும், கடந்தகால முதலாளித்துவ புரட்சிகளின் ஒரு வெறும் எதிரொலியாக பயன்படுத்தப்படும் இந்த சொல் உண்மையில் நமக்கு மிகவும் குறைவாகத்தான் உதவுகிறது. வரலாற்று ஒப்புமையானது சிந்தனைக்கு ஒரு பொறியாக மாறாதிருக்கும்வரை, ஒரு திட்டவட்டமான சமூகவியல் ஆய்வின் வெளிச்சத்தில் அதனை பரிசீலித்துப்பார்ப்பது அவசியமாகும். சீனாவில் போராடி வரும் வர்க்கங்கள் எவை? இந்த வர்க்கங்களுக்கு இடையில் இருக்கும் உள்-உறவுகள் யாவை? எவ்வாறு, எந்த திசையில் இந்த உறவுகள் மாற்றப்பட்டு வருகின்றன? சீன புரட்சியின் புறநிலை கடமைகள், அதாவது நிகழ்வுகளின் போக்கால் கட்டளையிடப்படும் பணிகள் எவை? இந்தப் பணிகளை முடிப்பது எந்த வர்க்கங்களின் தோள்களில் தங்கியுள்ளது? எந்த முறைகளில் அவற்றை தீர்க்கமுடியும்? இத்தகைய முக்கியமான கேள்விகளுக்கு இசாக்ஸின் புத்தகம் பதில்களை அளிக்கிறது

மனிதயினத்தின் பெரும் பாகத்தைக் கொண்டிருக்கும் காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ --- அதனாலேயே பின்தங்கிய --- நாடுகள், அவை எந்தளவிற்கு பின்தங்கியுள்ளன என்பதில் ஒன்றுக்கொன்று அசாதாரணமாக வேறுபடுகின்றன. நாடோடிகளாக இருந்ததிலிருந்து, நரமாமிசவாதிகளாய் இருந்ததிலிருந்தும் கூட, மிக நவீன தொழிற்துறை கலாச்சாரம் வரையில் எட்டிய ஒரு வரலாற்று படிநிலையை அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எவ்வாறாயினும், ஒருவர் அத்தகையதொரு வார்த்தையை பிரயோகிப்பாரானால், ஒவ்வொரு காலனித்துவ நாட்டினதும் கலாச்சார வாழ்க்கையினதும் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தினதும் விஷேட சுமையின்  கூறுகளினால்தான் பின்தங்கிய நிலைமையின் படிநிலை தீர்மானிக்கப்படுகின்றது. பூமத்தியரேகை பிரதேச ஆபிரிக்கா, அல்ஜீரியாவிற்குப் பின்னாலும், பராகுவே மெக்சிக்கோவிற்குப் பின்னாலும், அபிஸ்சினியா இந்தியா அல்லது சீனாவிற்கு பின்னாலும் பின்தங்கியுள்ளன. பொதுவான பொருளாதாரத்திற்கு அவை ஏகாதிபத்திய தலைநகரை சார்ந்துள்ளதோடு, அவற்றின் அரசியல் சார்ந்துள்ள நிலை வெளிப்படையான காலனித்துவ அடிமைத்தனத்தின் தன்மைகளை சில உதாரணங்களில் கொண்டிருக்கின்றன. அதேவேளை ஏனையவைகள் (சீனா, இலத்தீன் அமெரிக்கா) சுதந்திர அரசுகள் என்ற கட்டுக்கதைகளால் மூடி

விவசாய உறவுகளில் நிலவும் பின்தங்கியநிலைமை, அதன் மிகவும் உள்ளார்ந்த மற்றும் கொடூரமான வெளிப்பாட்டைக் காண்கிறது. இந்த நாடுகளில் ஒன்றுங்கூட எவ்வித நிஜமான அளவிலும் அதன் ஜனநாயக புரட்சியை நடத்தவில்லை. அரைகுறை விவசாய சீர்திருத்தங்கள், எஞ்சிய-பண்ணையடிமை உறவுகளால் உறிஞ்சப்படுகின்றன. இவை தவிர்க்கவொண்ணாதபடி வறுமை மற்றும் அடக்குமுறையை மண்ணில் மீண்டும் தோற்றுவிக்கின்றன. விவசாயிகள் மீதான காட்டுமிராண்டித்தனம் சாலைகள் இன்மை, மாகாணங்கள் தனிமைப்படல், மத்தியகால" சொந்தநலவாதம், மற்றும் தேசிய நனவின்மை ஆகியவற்றோடு எப்போதும் கைகோர்த்து செல்கிறது. ஆதிகால எச்சசொச்ச சமூக உறவுகளைத் துப்புரவாக்குவதும், நவீன நிலபிரபுத்துவத்தின் மேல் ஓடுகளை உடைப்பதும் தான் இந்த அனைத்து நாடுகளிலும் செய்யப்பட வேண்டிய மிக முக்கிய வேலையாக உள்ளது.          

எவ்வாறிருந்த போதினும், ஒருபுறம் அடிமைத்தனம் மற்றும் பண்ணையடிமை முறையின் ஏனைய அனைத்து வடிவங்களையும் ஆதரித்துக் கொண்டும், மறுவாக்கம் செய்துகொண்டும், மறுபுறம் முதலாளித்துவ உறவுகளை உள்ளார்ந்து விதைக்கும் அன்னியநாட்டு ஏகாதிபத்தியத்தை சார்ந்திருப்பதை பாதுகாத்து கொண்டே, விவசாயகளின் புரட்சியை எட்டுவதென்பது சிந்திக்க முடியாததாக உள்ளது. சமூக உறவுகளை ஜனநாயகமாக்குவதற்கான போராட்டமும், மற்றும் ஒரு தேசிய அரசை உருவாக்குவதற்கான போராட்டமும் இவ்வகையில் தடையின்றி வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஒரு வெளிப்படையான எழுச்சிக்குள் நுழைகிறது.

வரலாற்றுரீதியான பின்தங்கியநிலைமை என்பது; ஒன்று, இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் தாமதத்தோடு, இங்கிலாந்து அல்லது பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளின் வளர்ச்சியை போன்றதை மீண்டும் எளிமையாக கொண்டு வரும் என்று அர்த்தப்படாது. அது முற்றிலும் ஒரு புதிய "ஒருங்கிணைந்த" சமூக உருவாக்கத்தை தோற்றுவிக்கிறது. அதில் முதலாளித்துவ நுட்பத்தின் மற்றும் வடிவமைப்பின் சமீபத்திய வெற்றிகள் தானாகவே நிலபிரபுத்துவ மற்றும் நிலபிரபுத்துவத்திற்கு முந்தைய காட்டுமிராண்டித்தனத்தின் உறவுகளுக்குள் வேரூன்றுவதோடு, அவை வர்க்கங்களின் தனியியல்பான உறவுகளை உருவாக்கி, அவற்றை அதற்குள் உட்படுத்தவும், மாற்றவும் செய்கிறது.

மக்கள் மீதான முதலாளித்துவ விரோதம்

"முதலாளித்துவ" புரட்சிக்கான கடமைகளில் ஒன்றேயொன்றைக் கூட, இத்தகைய பின்தங்கிய நாடுகளில் "தேசிய" முதலாளித்துவ தலைமையின்கீழ் தீர்த்துவிட முடியாது. ஏனெனில் பிந்தையது மக்களுக்கு அன்னியப்பட்ட ஒரு வர்க்கமாக அல்லது மக்களுக்கு விரோதமாக வெளிநாட்டு ஆதரவோடு திடீரென எழுகிறது. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அது முக்கியமாக எதனுடைய முகமையாக உள்ளதோ அந்த வெளிநாட்டு நிதியியல் மூலதனத்திற்கு இன்னும் மிக நெருக்கமாகவே அதனை பிணைத்துக் கொள்கிறது. காலனித்துவ நாடுகளில் உள்ள குட்டி-முதலாளித்துவம், அதாவது கைத்தொழில்கள் மற்றும் வர்த்தகம் தான், குறிப்பிட்டுக் கூறமுடியாத பொருளாதார வீழ்ச்சியோடு, வர்க்க சிதைவோடு, வறுமைக்குள் தள்ளப்பட்டு, வெளிநாட்டு மூலதனத்தோடு ஏற்படும் சமநிலையற்ற போராட்டத்தில் முதலில் பலியாகும். அதுவொரு சுயாதீனமான அரசியல் பாத்திரத்தை வகிக்கலாம் என்பதைக்கூட எண்ணிப்பார்க்கமுடியாது. பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக பெரும் எண்ணிக்கையிலும், பரவலாகவும் இருக்கும் விவசாயிகள் உள்நாட்டு எழுச்சிகளை செய்ய முடியும், கிளர்ச்சிகளில்  பங்கெடுக்க முடியும். ஆனால் முழுமையாக தேசிய அளவில் இந்த போராட்டத்தை உயர்த்த மிகவும் முன்னேறிய மற்றும் மத்தியத்துவப்பட்ட வர்க்கத்தின் தலைமை அதற்கு தேவைப்படுகிறது. இயல்பிலேயே இத்தகையதொரு தலைமையின் பணி, ஆரம்பத்திலிருந்தே, வெளிநாட்டு முதலாளித்துவத்திற்கு எதிராக மட்டுமின்றி மாறாக அதன் சொந்த தேசிய முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிற்கும்

புவியியல் ரீதியான நெருங்கிய தன்மையாலும், அதிகாரத்துவ கருவிகளாலும் ஒருங்கிணைந்த மாகாணங்களும் பழங்குடியினரும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், முதலாளித்துவ அபிவிருத்தியானது சீனாவை ஒரு பொருளாதார அலகு என்பதற்கு சமானமானதாக மாற்றிவிட்டுள்ளது. அதிகரித்துவரும் இந்த ஐக்கியம் மக்களின் புரட்சிகரப் போராட்டங்கள் முதன்முறையாக தேசிய நனவு (National Consciousness) என்ற மொழிக்குள் மாற்றிவிட்டது. 1925-27இன் வேலைநிறுத்தங்களில், விவசாய எழுச்சிகளில், மற்றும் இராணுவ படையெடுப்புகளில் ஒரு புதிய சீனா பிறந்தது. அதேவேளை தங்களின் சொந்த முதலாளித்துவம் மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவத்தோடு பிணைக்கப்பட்டிருந்த தளபதிகளால் நாட்டை துண்டுதுண்டாக்கத்தான்  முடியும். சீனத் தொழிலாளர்கள் தேசிய ஐக்கியத்தின் தடுக்கமுடியாத ஒரு உந்துதலின் அடையாளத்தை சுமப்பவர்களானார்கள். இந்த போராட்டம் சொந்தநலன்வாதத்திற்கு எதிரான சாமானிய பிரெஞ்சு மக்களின் போராட்டத்தோடும் அல்லது ஜேர்மானிய மற்றும் இத்தாலிய தேசிய ஐக்கியத்திற்கான பிந்தைய ஒரு போராட்டத்தோடும், விவாதத்திற்கிடமின்றி, ஓர் ஒத்ததன்மையை கொண்டுள்ளது. ஆனால் முதலில்-பிறந்த முதலாளித்துவ நாடுகளுக்கு முரண்பட்ட விதத்தில், தேசிய ஐக்கியத்தை எட்டும் பிரச்சினை குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் மீதும், பகுதியாக முதலாளித்துவ தலைமையின் மீதும், (புரூஸ்சியாவில்!) நிலச்சுவான்தார்கள் மீதும் கூட விழுந்தது. அதுவே சீனாவில் முதன்மை உந்துசக்தியாகவும், இந்த போராட்டத்தின் முக்கிய தலைமையாகவும் எழுந்த பாட்டாளி வர்க்கத்தின் மீது இருந்தது. ஆனால் துல்லியமாக அதன்மூலம், பாட்டாளி வர்க்கமானது ஐக்கியப்பட்ட தந்தைமண்ணின் தலைமை முதலாளித்துவத்தின் கரங்களில் இருக்காது என்ற ஆபத்தோடு அதை எதிர்கொண்டது. வரலாறு முழுவதுமே தேசப்பற்றானது, அதிகாரம் மற்றும் செல்வவளத்தோடு பிரிக்கவியலாதபடிக்கு பிணைந்துள்ளது. அபாயங்களுடைனேயே ஆளும் வர்க்கங்கள் தங்களின் சொந்த நாட்டை துண்டாடி அதன் ஒரு பாகத்திலாவது அதிகாரத்தைத் தக்கவைக்கும் வரை அவ்வழியை அவை ஒருபோதும் நிறுத்தியதில்லை. ஆகவே, சியாங் கேய்-ஷேக்கால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சீன முதலாளித்துவம், 1927இல் தேசிய ஐக்கியத்தின் அடையாளத்தை சுமப்பவர்களான பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக அதன் ஆயுதங்களைத் திருப்பியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இசாக்ஸின் நூலில் மத்திய இடத்தைப் பிடித்துள்ள இந்த திருப்பத்தின் விளக்கமும், வெளிப்பாடும் சீனப் புரட்சியின் மற்றும் அத்தோடு தற்போதைய சீன-ஜப்பான் யுத்தத்தின் அடிப்படை பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதற்கான திறவுகோலை வழங்குகின்றன

"தேசிய" முதலாளித்துவம் என்றழைக்கப்படுவது, அதன் சொந்த தனியுரிமை இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமென நம்பும் வரையில் அது தேசிய சீரழிவின் அனைத்து வடிவங்களையும் சகித்துக் கொள்ளும். ஆனால் வெளிநாட்டு மூலதனம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வவளத்தின் மீதும் மொத்தமாக ஆக்கிரமிக்க முனையும் அந்த கணத்தில், காலனித்துவ-நாட்டின் முதலாளித்துவம் அதன் "தேசிய" கடமைகளை நினைவுகூர நிர்பந்திக்கப்படும். மக்களின் அழுத்தங்களின்கீழ் அதனை அதுவே ஒரு யுத்தத்திற்குள் மூழ்கடித்திருப்பதையும் கூட காணக்கூடும். ஆனால் இந்த யுத்தம், பேச்சுவார்த்தைகளுக்கு குறைந்தபட்ச இடங்கூட தராத ஏகாதிபத்திய சக்திகளில் ஒன்றிற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு யுத்தமாக, மற்றொரு பிரமாண்ட சக்திக்கு சேவை செய்ய நுழைய முடியும் என்ற நம்பிக்கையோடு நிகழும். பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க ஆதரவாளர்களால் அவருக்கு காட்டப்பட்டிருக்கும் வரம்புகளுக்குள் இருந்து கொண்டு, சியாங் கேய்-ஷேக் ஜப்பானிய அத்துமீறல்காரர்களுக்கு எதிராக போராடுகிறார். ஆனால் தனது அடிமைத்தளைகளைத் தவிர வேறொன்றையும் இழப்பதற்கில்லாத பாட்டாளி வர்க்கம் மட்டுந்தான், இறுதிவரையில் தேசிய விடுதலைக்காக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான யுத்தத்தை நடத்த முடியும்.

பிரமாண்ட வரலாற்று பரிசோதனை

வரலாற்றுரீதியில் பின்தங்கிய நாடுகளில் "முதலாளித்துவ" புரட்சியின் சிறப்பு குணாம்சம் குறித்து அபிவிருத்தி அடைந்திருந்த மேற்கூறிய  கண்ணோட்டங்கள், வெறுமனே தத்துவார்த்த பகுப்பாய்வின் விளைபொருள் மட்டுமல்ல. இரண்டாவது சீன புரட்சிக்கு முன்னரே (1925-27) ஏற்கனவே அவை பிரமாண்டமான வரலாற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மூன்று ரஷ்ய புரட்சிகளின் (1905, 1917 பெப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சிகள்) அனுபவம், பத்தொன்பதாம் நூற்றாண்டை கிளித்தெறிந்த பிரெஞ்சுப் புரட்சியைவிட, இருபதாம் நூற்றாண்டில் குறைந்த முக்கியத்துவத்தை கொண்டிருக்கவில்லை. ஒரு வாசகர் நவீன சீனாவின் விதிகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் ரஷ்ய புரட்சிகர இயக்கத்தில் நிலவிய கருத்துருக்களுக்கான போராட்டத்தை அவரது கண்களின் முன்னால் கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த கருத்துருக்கள் சீனப் பாட்டாளி வர்க்க அரசியலின்மீது ஒரு நேரடியான மற்றும், அனைத்திற்கும் மேலாக, பலமான செல்வாக்கையும் மற்றும் சீன முதலாளித்துவ அரசியலின்மீது மறைமுகமான செல்வாக்கையும் உண்டாக்கி இருந்தன; இன்னமும் உண்டாக்கி வைத்துள்ளன.       

துல்லியமாக அதன் வரலாற்றுரீதியான பின்தங்கியநிலைமையினால் தான், மார்க்சிசத்தை ஒரு கோட்பாடாகவும், சமூக ஜனநாயகத்தை ஒரு கட்சியாகவும் கொண்டிருந்த ஓர் ஐரோப்பிய நாடான ஜாரிச ரஷ்யாவால் முதலாளித்துவ புரட்சிக்கு முன்னதாகவே பலமான அபிவிருத்தியைப் பெற முடிந்தது. மிக இயல்பாகவே, ரஷ்யாவில் தான், ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் இடையிலுள்ள தொடர்பின் அல்லது முதலாளித்துவ புரட்சிக்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பின் பிரச்சினை தத்துவார்த்த பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் ஸ்தாபகர் பிளெக்கானோவ்தான் கடந்த நூற்றாண்டில் எண்பதுகளின் தொடக்கத்தில் இந்த பிரச்சினையை முதன்முதலில் முன்கொணர்ந்தார். பல்வேறு விதமான சோசலிச கற்பனாவாதமான வெகுஜனவாதம் (நரோட்னிகிசம்) என்றழைக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில்,கீழைத்தேச நாடுகளைப் போல, முன்னேற்றத்திற்கான ஒரு பிரத்தியேக சிறப்பு வழியை எதிர்பார்க்க அங்கே எந்தவொரு காரணமும் இருக்கவில்லை. அது முதலாளித்துவக் கட்டத்தை கடந்து சென்றாக வேண்டும். அந்த பாதையில் அது முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியை அடையும்; அதில் தவிர்க்கவியலாமல் சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் அதீத போராட்டங்கள் வந்தடையுமென பிளெக்கானோவ் ஸ்தாபிதம் செய்து காட்டினார். முதலாளித்துவப் புரட்சியானது சோசலிசப் புரட்சியிலிருந்து (இதை அவர் காலவரையற்ற எதிர்காலத்திற்கு தள்ளிவைத்தார்) வேறுபட்ட ஒரு பணி என்பதை இதில் பிளெக்கானோவ் பிரித்துக்காட்டியது மட்டுமின்றி, அவர் முற்றிலும் வெவ்வேறு சக்திகளின் கூட்டுக்களை விபரித்திருந்தார். தாராளவாத முதலாளித்துவத்தின் கூட்டோடு பாட்டாளி வர்க்கத்தால் முதலாளித்துவப் புரட்சி எட்டப்பட வேண்டும்; அது முதலாளித்துவ வளர்ச்சிக்கான பாதைக்கு வழிகோலும்; பல தசாப்தங்களுக்குப் பின்னரும், முதலாளித்துவ அபிவிருத்தியின் மிகவுயர் மட்டத்தில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிரான நேரடிப் போராட்டத்தில் சோசலிசப் புரட்சியை இட்டுச்செல்லும் என்றார்.

லெனின் இந்த கோட்பாட்டை மீளாய்வு செய்தார் --- ஆனால் நிச்சயமாக உடனடியாக அல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பிளெக்கானோவை விட பெரும் பலத்தோடும், இணக்கத்தோடும், அவர் ரஷ்யாவில் விவசாயிகளின் பிரச்சினையை முதலாளித்துவப் புரட்சியின் மைய பிரச்சினையாக முன்னிறுத்தினார். இதன்மூலம் தாராளவாத முதலாளித்துவம் நிலச்சுவான்தார்களின் பண்ணைகளை கைப்பற்றுவதற்கு விரோதமாக உள்ளது, மேலும் துல்லியமாக இந்த காரணத்திற்காக அது ஒரு புரூஷ்ய வடிவ அரசியலமைப்பின் அடிப்படையில் முடியாட்சியோடு ஒரு சமரசத்தை கோரும் என்ற தீர்மானத்திற்கு அவர் வந்தார். பாட்டாளி வர்க்கத்திற்கும் தாராளவாத முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணி குறித்த பிளெக்கானோவின் கருத்திற்கு எதிராக, லெனின் பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டணி என்ற கருத்தை முன்வைத்தார். ஜாரிச சாம்ராஜ்ஜியத்தின் நிலபிரபுத்துவ-பொலிஸ் எச்சசொச்சங்களைத் துடைத்தழிக்கும், ஒரு சுதந்திர விவசாயிகள் அமைப்புமுறையைத் தோற்றுவிக்கும், அமெரிக்க போக்கிற்கு இணையாக முதலாளித்துவ அபிவிருத்தியின் பாதையிலிருக்கும் தடைகளை நீக்கும் ஒரேயொரு கருவியாக "பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் முதலாளித்துவ-ஜனநாயக சர்வாதிகாரத்தை" ஸ்தாபிப்பதே இத்தகைய இரண்டு வர்க்கங்களின் புரட்சிகர கூட்டணியின் நோக்கமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். பிளெக்கானோவிற்கு நேர்முரணாக லெனினுடைய சூத்திரம் அதில் ஒரு பிரமாண்ட படியை முன்னெடுத்து காட்டியது. அது மிகச்சரியாக புரட்சியின் மையப்பணியை, பெயரிட்டு கூறுவதானால், விவசாயிகள் உறவுகளின் ஜனநாயக திருப்பத்தைச் சுட்டிக்காட்டியது. அதேயளவிற்கு மிகச்சரியாக இந்த பணியை முடிக்கக்கூடிய ஒரே வர்க்க சக்திகளின் கூட்டுறவையும் வரைந்து காட்டியது. ஆனால் 1917 வரையில் லெனினின் சிந்தனையே கூட, "முதலாளித்துவ" புரட்சியின் பாரம்பரிய கருத்துருவிற்குள் பிணைந்திருந்தது. பிளெக்கானோவைப் போலவே லெனினும், "முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடந்து முடிந்த" பின்னர் மட்டும் தான் சோசலிசப் புரட்சியின் பணிகள் நிகழ்ச்சிநிரலுக்கு வரும் என்ற அனுமானத்திலிருந்தே முன்னேறினார். ஆனால், அந்த மேதைக்கும் மாறுபட்ட விதத்தில், அவரின் முன்னுதாரணங்களால் உருவாகி பின்னர் வந்தவர்கள், ஜனநாயக திருப்பம் முடிந்த பின்னர் விவசாயிகள், விவசாயிகளைப் போலவே, பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளாக இருக்க மாட்டார்கள் என்று கருதினர். லெனின் அவருடைய சோசலிச நம்பிக்கைகளை விவசாயத்துறை தொழிலாளர்கள் மீதும், தங்களின் உழைப்பு சக்தியை விற்கும் அரை-பாட்டாளி வர்க்க விவசாயிகள் மீதும் வைத்திருந்தார்.

ஓர் உள் முரண்பாடு

"பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் முதலாளித்துவ-ஜனநாயக சர்வாதிகாரத்தில்" உள்ளார்ந்திருந்த முரண்பட்ட கருத்தே லெனினின் கருத்துருவில் இருந்த பலவீனமான புள்ளியாக இருந்தது. ஓரளவு நலன்கள் மட்டுமே ஒத்துபோகும் இரண்டு வர்க்கங்களின் ஓர் அரசியல் கூட்டு சர்வாதிகாரத்தை கைவிடுகிறது. லெனின் அதை வெளிப்படையாக முதலாளித்துவம் என்றழைக்கும் போது, அவரே "பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரமானது" அடிப்படையில் மட்டுப்பட்டிருப்பதை வலியுறுத்தி கூறினார். இதனால், வரவிருக்கும் புரட்சியில், விவசாயிகளுடன் கூட்டினை தக்கவைப்பதற்காக, சோசலிசப் பணிகளை நேரடியாக முன்னிறுத்துவதைப் பாட்டாளி வர்க்கம் தவிர்த்து செல்ல வேண்டியதிருக்கும் என்று அவரே கூற வேண்டியிருந்தது. ஆனால் இது, துல்லியமாக, பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்தை கைவிட வேண்டியிருக்கும் என்பதையே குறிக்கும். அச்சமயத்தில் புரட்சிகர அதிகாரம் யாருடைய கைகளில் குவிந்திருக்கும்? விவசாயிகளின் கைகளிலா? ஆனால் அத்தகைய ஒரு பாத்திரத்தை வகிக்க அதற்கு மிகக்குறைந்தபட்ச தகுதியே உள்ளது.       

லெனின் அவருடைய பிரபல ஏப்ரல் 4, 1917 ஆய்வுகள் வரையில் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்தார். அதில்தான் முதல்முறையாக அவர் "முதலாளித்துவ" புரட்சியின் பாரம்பரிய புரிதலில் இருந்தும், பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் முதலாளித்துவ-ஜனநாயக சர்வாதிகாரத்தின்" சூத்திரத்திலிருந்தும் உடைத்துக் கொண்டார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டமே விவசாயிகளின் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலையைப் பாதுகாக்கும் ஒரே கருவி என்று அவர் அறிவித்தார். எவ்வாறிருந்தபோதினும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியானது, அதன் இயல்பிலேயே, முதலாளித்துவ சொத்துடைமையின் கட்டமைப்பிற்குள்ளே அதனை முடக்கிக்கொள்ள முடியாது. பாட்டாளி வர்க்க ஆட்சி தானாகவே சோசலிச புரட்சி நிகழ்ச்சிநிரலின்மீது அமைக்கப்பட்டது. அது இந்த முறையில் எந்த வரலாற்று காலத்திலும் ஜனநாயக புரட்சியிலிருந்து பிரிக்க முடியாததாகவும், ஆனால் தடையின்றி அது அதனோடு இணைந்துள்ளதாகவும், அல்லது, மிகத்துல்லியமாக கூறுவதானால், அதன் ஓர் அங்க வளர்ச்சியாகவும் இருக்கிறது. சமூகத்தில் சோசலிச மாற்றம் என்ன வேகத்தில் நிகழும், மற்றும் வெகுவிரைவில் அது எந்த மட்டத்தை அடையும் என்பது உள்நாட்டு நிலைமைகளை மட்டுமின்றி வெளி நிலைமைகளையும் சார்ந்துள்ளது. ரஷ்ய புரட்சியானது சர்வதேச புரட்சியின் ஓர் கண்ணியாகும். பரந்த விளக்கத்தில் கூறுவதானால், அத்தகையவொன்று நிரந்தர புரட்சி கருத்துருவின் சாரமாகும். துல்லியமாக இந்த கருத்துரு தான் அக்டோபரில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு உத்தரவாதமளித்தது.

ஆனால் வரலாற்றின் கசப்பான எதிர்பொருள் பின்வருமாறு உள்ளது: ரஷ்ய புரட்சியின் அனுபவம் சீன பாட்டாளி வர்க்கத்திற்கு உதவியதோடு மட்டுமல்ல, மாறாக, அதற்கு முரண்பட்ட விதத்தில், அதன் பிற்போக்குத்தனமான, நிலைகுலைந்த வடிவத்தில் அது அதன் பாதையிலிருந்த முக்கிய தடைகளில் ஒன்றாகவும் ஆகியிருந்தது. மூன்றாம் அகிலத்தில் பின்னர் வந்தவர்கள், அனைத்து நாடுகளின் ஐக்கியத்தை நெறிப்படுத்துவதற்காக, லெனின் அவரது வரலாற்று அனுபவ முதிர்வால் மதிப்பற்றது என எதை ஒப்புக்கொண்டிருந்தாரோ அதே "பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரத்தின்" சூத்திரத்தை புகழ்ந்துரைக்க தொடங்கினர். எப்போதும் போல வரலாற்றில், தகமையை இழந்துபோன ஒரு சூத்திரம் அதனது காலத்தில் சேவை செய்திருந்ததற்கு முற்றிலும்  எதிர்மாறான அரசியல் உள்ளடக்கத்தை மூடிமறைக்க உதவிசெய்கின்றது. சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்துக்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர கூட்டணியான நடவடிக்கையின் நேரடி அமைப்பாக இருந்த சாமானிய மக்களின் படையானது கட்சி மன்றங்களின் ஓர் அதிகாரத்துவ கூட்டத்தால் மூன்றாம் அகிலம் பிரதியீடு செய்யப்பட்டது. விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இந்த அணியின் உரிமை, எதிர்பாராவிதமாக கோமின்டாங்கிற்கு கொடுக்கப்பட்டது. அதாவது வெளிப்படையாகவே முதலாளித்துவ சொத்துடைமையை, அதுவும் உற்பத்தி கருவிகளை மட்டுமின்றி நிலவுடைமையையும் காப்பாற்ற ஆர்வங்கொண்ட ஒரு முழு முதலாளித்துவ கட்சியிடம் கொடுக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் கூட்டணி "நான்கு வர்க்கங்களின் கூட்டாக", தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்புற குட்டி முதலாளிகள், மற்றும் "தேசிய" முதலாளிகள் என்றழைக்கப்படுபவர்கள் என்று பரவலாக்கப்பட்டது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், பிளெக்கானோவின் அரசியலுக்கு, அனைத்திற்கும் மேலாக, ஒரு மறைமுகமான மற்றும் அதன்மூலம் மிகவும் அபாயகரமான வடிவத்தில் பாதையை திறந்துவிடும் என்பதற்காகவே லெனினால் கைவிடப்பட்ட ஒரு சூத்திரத்தை மூன்றாம் அகிலம் தேர்ந்தெடுத்திருந்தது.    

பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அரசியல்ரீதியாக அடிபணிய வைத்ததை நியாயப்படுத்த, மூன்றாம் அகிலத்தின் தத்துவார்த்தவாதிகள் (ஸ்ராலின், புக்காரின்) ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் காரணங்களை கட்டவிழ்த்துவிட்டனர். அது "நாட்டின் அனைத்து முற்போக்கு சக்திகளையும்" ஒரு கூட்டணிக்கு பலவந்தப்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்ய மென்ஷ்விக்குகளின் அன்றைய நாட்களின் வாதங்களில் துல்லியமாக இது வேறுவிதமாக இருந்தது. அவர்கள் விஷயத்தில் ஏகாதிபத்தியத்தின் இடத்தை ஜாரிசம் ஆக்கிரமித்திருந்தது. எதார்த்தத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டாங்கிற்கு அடிபணிய வைத்தமையானது, மக்கள் இயக்கத்துடனான அதன் முறிவையும், அதன் வரலாற்றுரீதியிலான நலன்களின் நேரடியான ஒரு காட்டிக்கொடுப்பையும் குறித்துக்காட்டியது. இவ்விதத்தில் இரண்டாம் சீன புரட்சியின் பேரழிவு மாஸ்கோவின் நேரடி தலைமையின்கீழ் தயாரிக்கப்பட்டிருந்தது.   

ரஷ்ய மார்க்சிசத்தின் முக்கியத்துவம்

அரசியலில் "மனித புரிந்துகொள்ளலை" விஞ்ஞானபூர்வமான ஆய்விற்கான மாற்றீடாக கொள்வதன் பக்கம் சாய்ந்துள்ள அரசியல் பிலிஸ்டைன்கள், புரட்சியின் இயல்பு மற்றும் அதன் வர்க்க சக்திகளின் இயக்கவியல் மீதான ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மத்தியில் நிலவிய கருத்துமுரண்பாடுகள் வெறும் மேதாவித்தனத்தை பற்றியதாக கண்டுகொள்கின்றனர். எவ்வாறிருந்த போதினும், ரஷ்ய மார்க்சிசத்தின் "கோட்பாட்டு சூத்திரங்களின்" ஆழமான அடிப்படை முக்கியத்துவத்தை வரலாற்று அனுபவம் வெளிக்காட்டியது. இன்றுவரையில் இதை புரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள், ஐசக்ஸின் புத்தகத்திலிருந்து நிறைய படித்து தெரிந்துகொள்ள முடியும். சீனாவில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அரசியலானது, மென்ஷ்விக்குகளும், சமூக புரட்சியாளர்களும் போல்ஷ்விக்குகளால் சரியான நேரத்தில் ஓரங்கட்டப்படாமல் இருந்திருந்தால் ரஷ்ய புரட்சி என்னவாக மாறியிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்நூல் எடுத்துக்காட்டுகிறது. சீனாவில் நிரந்தரப் புரட்சி கருத்துரு மீண்டுமொருமுறை உறுதி செய்யப்பட்டது; இந்த முறை ஒரு வெற்றியின் வடிவத்தில் அல்லாமல், மாறாக ஒரு பேரழிவின் வடிவத்தில் நடந்தது

நிச்சயமாக, சீனாவை ரஷ்யாவோடு அடையாளம் காண அனுமதிக்க முடியாது. அவற்றின் அனைத்து முக்கிய பொதுவான பண்புகளுக்கிடையில், அவற்றிற்கிடையில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் மிகவும் வெளிப்படையாக உள்ளன. ஆனால் இந்த வேறுபாடுகள் பலவீனப்படுத்தாது, மாறாக, அதற்கு முரணாக, போல்ஷிவிசத்தின் அடிப்படை தீர்மானங்களைப் பலப்படுத்தும் என்று ஒருவருக்கு புரியவைப்பது கடினமல்ல. ஒருவிதத்தில் ஜாரிச ரஷ்யாவும் ஒரு காலனித்துவ நாடாகவே இருந்தது. மேலும் அது வெளிநாட்டு மூலதனத்தின் மேலோங்கிய பாத்திரத்தில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. ஆனால் ரஷ்ய முதலாளித்துவம், சீன முதலாளித்துவத்தையும் விட அதிகமாக, வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திடமிருந்து அளவிலா பெரும் கட்டுப்பாடற்ற சுதந்திரமான நலன்களை அனுபவித்தன. ரஷ்யாவே ஓர் ஏகாதிபத்திய நாடு தான். ஆனால் அதனிடத்தில் அனைத்து பலவீனங்கள் இருந்தாலும்கூட, ரஷ்ய தாராளவாதமானது சீனாவை விட பல ஆழமான பாரம்பரியங்களையும், பெரும் ஆதரவிற்கான அடித்தளத்தையும் கொண்டிருந்தது. இடது தாராளவாதிகளை பொறுத்தவரையில், அவை ஜாரிசத்தோடு தொடர்புபட்ட விதத்தில் குட்டி-முதலாளித்துவ கட்சிகளாக மற்றும் புரட்சிகர அல்லது அரை-புரட்சிகர கட்சிகளாக வலிமையாக நின்றன. சமூக புரட்சியாளர்களின் கட்சிகளால், விவசாயிகள் மத்தியில், முக்கியமாக அதன் மேற்தட்டு அடுக்குகளிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெற முடிந்தது. சமூக ஜனநாயக கட்சி (மென்ஷ்விக்) நகர்புற குட்டி முதலாளித்துவ மற்றும் தொழிலாளர் பிரபுத்துவத்தின் பரந்த வட்டாரங்களை அதன் பின்னால் கொண்டு வந்திருந்தது. துல்லியமாக தாராளவாதிகள் சமூகப் புரட்சியாளர்கள், மற்றும் மென்ஷ்விக்குகள் ஆகிய இந்த மூன்று கட்சிகள் தான் நீண்டகாலமாக, நிச்சயமாக 1917இல், ஒரு கூட்டணியை தோற்றுவித்தன. அது அப்போது மக்கள் முன்னணி என்று அழைக்கப்படவில்லை என்றாலும் கூட, அது அவ்வாறான அனைத்து பண்புகளையும் கொண்டிருந்தது. இதற்கு முரண்பட்ட விதத்தில் போல்ஷிவிக்குகள், 1905இல் புரட்சிகர சூழலில் இருந்து, தாராளவாத முதலாளித்துவத்துடனான உறவில் சமரசத்திற்கிடமற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். 1914-17இன் "தோல்விவாதத்தின்" (Defeatism) மூலமாக அதன் மிகவுயர்ந்த வெளிப்பாட்டை எட்டிய இந்த கொள்கை மட்டுந்தான், போல்ஷ்விக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவியது

சீன முதலாளித்துவம் ஒப்பிட முடியாதளவிற்கு வெளிநாட்டு மூலதனத்தைப் பெரிதும் சார்ந்திருந்தமை, குட்டி-முதலாளித்துவத்தின் மத்தியில் சுயாதீனமான புரட்சிகர பாரம்பரியங்கள் இல்லாமல் இருந்தமை, மூன்றாம் அகிலத்தின் பதாகையின்கீழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பாரிய ஈர்ப்பு, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலிருந்த வேறுபாடுகள் அவ்வாறானது ஒருவேளை சாத்தியப்பட்டிருந்தால், அது ரஷ்யாவிலும் பின்பற்றப்பட்டிருப்பதைவிட அப்போது இன்னும் சமரசத்திற்கிடமில்லாத கொள்கையைக் கோரின. இருந்தபோதினும் மூன்றாம் அகிலத்தின் சீனப் பிரிவு, மாஸ்கோ கட்டளையின்படி, மார்க்சிசத்தைக் கைவிட்டு, பிற்போக்குத்தனமான மேதைமை கொண்ட சுன்- யாட்-சென் (Sun Yat-Sen) இன் கோட்பாடுகளை" ஏற்று, கோமின்டாங்கினுள் நுழைந்து, அதற்கு அடிபணிந்து கொண்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது ரஷ்ய மென்ஷ்விக்குகள் அல்லது சமூக புரட்சியாளர்கள் ஒருபோதும் செய்திராததையும்விட அதிகமாக முதலாளித்துவத்திடம் அடிபணியும் பாதையில் இன்னும் கூடுதலாக அடியெடுத்து வைத்தது. இதே அழிவுகரமான கொள்கை தான் இப்போது ஜப்பானுடனான யுத்த நிலைமைகளில் மீண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

அதிகாரத்துவத்தின் புதிய அணுகுமுறைகள்

போல்ஷ்விசத்திற்கு அடிப்படையில் எதிரான முறைகளை  கொண்டு போல்ஷிவிக் புரட்சியிலிருந்து எழுந்த அதிகாரத்துவத்தை எவ்வாறு சீனாவிலும், உலகெங்கிலும் பயன்படுத்த முடியும்? தனிப்பட்ட எந்த ஒருவரினதும் இயலாமை மற்றும் அறியாமை பற்றிய குறிப்புகளுடன் மட்டும் இக்கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் மேலோட்டமாகவே இருக்கும். அதிகாரத்துவ இருப்பிற்கான புதிய நிலைமைகள் புதிய சிந்தனை முறைகளைக் கைப்பற்றியதோடு சேர்ந்து, இந்த விஷயத்தின் சாரம், அதற்குள்ளேயே தங்கியிருந்தது. போல்ஷ்விக் கட்சி மக்களை வழிநடத்தியது. அதிகாரத்துவம் அவர்களுக்கு கட்டளையிடத் தொடங்கியது. வெகுஜனங்களின் நலன்களைச் சரியாக வெளிப்படுத்தியதன் மூலமாக தலைமைக்கான வாய்ப்பை போல்ஷ்விக்குகள் வென்றெடுத்தனர். அதிகாரத்துவம், வெகுஜனங்களின் நலன்களுக்கு எதிராக அதன் சொந்த நலன்களைப் பாதுகாக்க கட்டளைகளைப் புகலிடமாகப் பெற முனைந்தது. கட்டளையிடும் அணுகுமுறை இயல்பாகவே கம்யூனிச அகிலத்திற்கும் விரிவாக்கப்பட்டது. கிரெம்ளினால் வரையப்பட்ட மூலைவிட்டக்கோட்டின் அடித்தளத்தில், (Diagonals) சீன முதலாளித்துவத்தை அவற்றின் நலன்களுக்கு இடதில் நகர்த்த முடியுமென்றும், சீன தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அவர்களுக்கு வலதில் நகர்த்த முடியுமென்றும் மாஸ்கோ தலைவர்கள் தீவிரமாக கற்பனை செய்ய தொடங்கினார்கள். இருந்தபோதினும், சுரண்டப்படுவோரும், சுரண்டுவோரும் அவர்களின் நலன்களை மிகவும் தீவிர வெளிப்பாட்டில் வெளிக்காட்டியது, புரட்சியின் உண்மையான சாரமாக இருந்தது. விரோதமாக இருக்கும் வர்க்கங்கள் மூலைவிட்டக்கோடுகளோடு இணைந்து நகர்ந்திருந்தால், அங்கே ஓர் உள்நாட்டு யுத்தத்திற்கு அவசியம் இருந்திருக்காது. ஆனால் கம்யூனிச அகிலம் மற்றும் அக்டோபர் புரட்சியின் அதிகாரிகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த அளவில்லா நிதியியல் ஆதாரங்களைக் குறித்து குறிப்பிட வேண்டியதேயில்லை என்பதோடு, புரட்சியின் மிக முக்கிய தருணத்தில் அதிகாரத்துவம் இளம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை உந்துசக்தி என்ற நிலையிலிருந்து ஒரு தடையாக மாற்றியது. ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் திசைமாறியிருந்த அதிகாரத்துவம், சமூக ஜனநாயகத்திடம் தோற்றதில் பகுதியாக பொறுப்பேற்றிருந்ததைப் போலில்லாமல், முரண்பட்ட விதத்தில், சீனாவிலோ சமூக ஜனநாயகம் இருக்கவே இல்லை. சீன புரட்சியை சிதைப்பதில் மூன்றாம் அகிலம் மட்டுமே ஏகபோகத்தைக் கொண்டிருந்தது.  

சீன பிராந்தியத்தின் ஒரு கணிசமான பிரிவுகளிடையே தற்போது கோமின்டாங் பெற்றிருக்கும் செல்வாக்கு, 1925-27இல் வெகுஜனங்களின் சக்திவாய்ந்த தேசிய புரட்சிகர இயக்கம் இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. அந்த போராட்டத்தைப் படுகொலை செய்தமை, ஒருபுறம் சியாங் கேய்-ஷேக்கின் கரங்களில் அதிகாரத்தைக் குவியச் செய்தது; மறுபுறம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்த அரைகுறை-நடவடிக்கைகளால் சியாங் கேய்-ஷேக்கை தோல்வியடையச் செய்தது. சீனப் புரட்சியின் போக்கைப் புரிந்துகொள்வதென்பது இவ்விதத்தில் சீன-ஜப்பான் யுத்தத்தின் போக்கை புரிந்துகொள்வதோடு மிகவும் நேரடியான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆகவே இந்த வரலாற்று படைப்பு மிகவும் உண்மையான அரசியல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

யுத்தமும், புரட்சியும் விரைவில் வரவிருக்கும் எதிர்கால சீன வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளன. ஒரு பிரமாண்டமான நாட்டின் மூலோபாய மையங்களை ஆக்கிரமித்து அதை என்றென்றும் அல்லது குறைந்தபட்சம் நீண்டகாலத்திற்கு அடிமைப்படுத்தி வைக்க விரும்பும் ஜப்பானின் நோக்கம், வெறுமனே பேராசையில் மட்டுமல்ல, முட்டாள்தனத்திலும் குணாம்சப்பட்டுள்ளது. ஜப்பான் மிகவும் காலங்கடந்து வந்து சேர்ந்துள்ளது. உள்நாட்டு முரண்பாடுகளால் பிளவடைந்து போயுள்ள மிக்காடோ சாம்ராஜ்ஜியம், பிரிட்டனின் வளர்ச்சி வரலாற்றை போல மீண்டும் உருவாக முடியாது. மறுபுறம், பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தங்கியுள்ள இந்தியாவைக் கடந்து, சீனா மிகவும் முன்னேறியுள்ளது. இப்போதைய நாட்களில் பழைய காலனித்துவ நாடுகள் அவற்றின் சுதந்திர போராட்டங்களில் முன்னொருபோதும் இல்லாத வெற்றிகளை அடைந்துவருகின்றன. இத்தகைய வரலாற்று நிலைமைகளில், தொலைதூர கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய யுத்தம் ஜப்பானின் வெற்றியோடு முடியும் என்றாலும் கூட, அத்தோடு வெற்றிபெற்றவர் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய ஓர் உள்நாட்டு பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும் என்றாலும் கூட, இதில் முந்தையவருக்கும் சரி, பிந்தையவருக்கும் சரி குறைந்தபட்ச உத்திரவாதம் கூட இல்லை என்கின்ற நிலையில், சீனா மீதான ஜப்பானின் ஆதிக்கத்தை மிகவும் குறுகிய காலத்திற்குத் தான் மதிப்பிட முடியும். ஒருவேளை சீனாவின் பொருளாதார வாழ்க்கைக்கு ஒரு புதிய தூண்டுதலை அளிக்கவும், அதன் உழைக்கும் மக்களை மீண்டும் ஒருமுறை ஒன்றுதிரட்டவும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமாவது தேவைப்படும்.

இன்னமும் பாதுகாப்பற்று இருக்கும்  ஜப்பானின் பெரிய நிதியநிறுவனங்களும், தொழில்நிறுவனங்களும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை, இராணுவத்தின் துணையோடு பகிர்ந்து கொள்வதை ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வட சீனாவை துண்டுதுண்டாக பிளவடையசெய்யக்கூடிய நிதியியல் கோஷ்டிகளின் பசியினை, டோக்கியோ அரசாங்கம் நெறிமுறைப்படுத்த விரும்புகிறது. ஜப்பான் அது கைப்பற்றும் நிலையை சுமார் பத்து ஆண்டுகளுக்காகவது தக்கவைப்பதில் வெற்றி பெற வேண்டுமானால், அனைத்திற்கும் மேலாக, ஏகாதிபத்தியத்தின் இராணுவ நலன்களின்கீழ் வட சீனாவை தீவிரமாக தொழில்மயமாக்க வேண்டுமென்பதையே அது குறிக்கிறது. புதிய ரயில்வேக்களும், சுரங்கங்களும், மின் உற்பத்தி ஆலைகளும், வளங்களைத் தோண்டி எடுப்பதும் மற்றும் கனிமவள நிறுவனங்களும், மற்றும் பருத்தி சாகுபடியும் விரைவாக அதிகரிக்கக்கூடும். சீன தேசத்தின் சமூகத்துருவப்படுத்தல் ஓர் உணர்ச்சிபூர்வமான தூண்டுதலைப் பெறும். புதிய நூறு ஆயிரக்கணக்கான சீன பாட்டாளி வர்க்கத்தினர் ஒரு குறுகிய காலத்திற்குள் ஒன்றுதிரள்வர். மறுபுறம், சீன முதலாளித்துவம் இன்னும் அதிகளவிற்கு ஜப்பானிய மூலதனத்தைச் சார்ந்திருப்பதற்குள் விழும். கடந்த காலத்தில் ஒரு தேசிய யுத்தத்தின், ஒரு தேசிய புரட்சியின், தலையில் நின்றதைப் போல கூட அது நிற்க திறனில்லாமல் போகும். எண்ணிக்கையில் பெரிய, சமூகரீதியில் வலுவான, அரசியல்ரீதியில் முதிர்ந்த, சீன கிராமங்களுக்கு தலைமை கொடுக்க அழைப்புவிடுக்கும் சீனப் பாட்டாளி வர்க்கத்தை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளரை நேருக்குநேர் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். வெளிநாட்டு அடிமைப்படுத்துவோனை வெறுப்பதென்பது ஒரு வலிமையான புரட்சிகர போராட்டமாகும். புதிய தேசிய புரட்சியென்பது தற்போதைய தலைமுறையின் வாழ்நாளிலேயே இப்போதிருக்கும் நிகழ்ச்சிநிரலின் மீது நிறுத்தப்படும் என்று ஒருவர் யோசிக்கலாம். அதன்மீது விழுந்திருக்கும் பணிகளைத் தீர்க்க, சீனப் பாட்டாளி வர்க்கதின் முன்னணிப்படை சீனப் புரட்சியின் படிப்பினைகளை முற்றிலுமாக உய்த்துணர வேண்டும். இவ்விதத்தில் ஐசக்ஸின் நூல் மாற்றில்லாத ஒரு உதவியாக உதவக்கூடும். இந்த நூல் சீன மொழியிலும் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் என்று நம்பத் தோன்றுகிறது.

Coyoacan, D.F., 1938