ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Russian government prepares cuts as poverty surges

வறுமை அதிகரித்துச் செல்லும் நிலையில் ரஷ்ய அரசாங்கம் வெட்டுகளுக்கு தயாரிப்பு செய்கிறது

By Andrea Peters
20 January 2016

அதிகரித்துச் செல்லும் வரவு-செலவு திட்ட நெருக்கடிக்கான ஒரு பதிலிறுப்பில் அரசாங்க செலவினங்களில் முக்கிய வெட்டுகள் குறித்த அறிவிப்புடன் ரஷ்ய அரசியல் தலைவர்கள் புத்தாண்டைத் தொடங்கினர். ரஷ்ய பொருளாதாரத்தின் முக்கிய வருவாயான கச்சா எண்ணெயானது இப்போது பீப்பாய்க்கு 30 டாலருக்கும் குறைவான விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது, இது இரண்டு வருடங்களுக்கு சற்று குறைந்த காலம் வரையில் பீப்பாய்க்கு 100 டாலர்களுக்கும் அதிகமாய் வர்த்தமாகி வந்திருந்தது. ரஷ்ய எரிசக்தி பெருநிறுவனமான Gazprom 2015 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2 பில்லியன் ரூபிள்கள் இழப்பை சந்தித்துள்ளதை இப்போது அறிவித்திருக்கிறது, முந்தைய ஆண்டின் இதேசமயத்தில் இந்நிறுவனம் 105.7 பில்லியன் ரூபிள் லாபம் ஈட்டியிருந்தது.

வெள்ளியன்று அரசாங்க அதிகாரிகளின் ஒரு கூட்டத்தில் பேசிய ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ், “எண்ணெய் விலைகளின் அதிரடியான ஏற்ற இறக்கம் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முக்கியமான ஆபத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது” என்று எச்சரித்தார். வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை “எதிர்பார்க்கக்கூடிய வருவாய்களுக்கேற்ப” கொண்டு வருவதற்கும், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும், ”அரசு எந்திரத்தின் அளவை” குறைப்பதற்கு, அதாவது வார்த்தைகளை மாற்றிச் சொன்னால், அரசாங்க ஊழியர்களைக் குறைப்பதற்கும் அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத்தின் தலைவரான சேர்ஜி நாரிஷ்கின் ரஷ்ய செய்தி நிறுவனமான TASSயிடம் தெரிவித்த கருத்துகளில் மெட்வெடேவின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன. “ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது என்ற உண்மையை பொருளாதார யதார்த்தங்கள் சுட்டிக் காட்டுகின்றன” என்று நாரிஷ்கின் கருத்துத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் அத்தனை அமைச்சகங்களும் தமது செலவினங்களில் 10 சதவீதத்தை குறைப்பதற்கான திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்ற வாரத்தில் அரசாங்கம் உத்தரவிட்டது. இத்தகைய நடவடிக்கைகள் இல்லையென்றால், இப்போது 59 பில்லியன் டாலர் கையிருப்புடன் இருக்கக் கூடிய நாட்டின் முக்கியமான கையிருப்பு நிதிகளில் ஒன்று வெகுவிரைவில் காலியாகி விடும் என்று நிதி அமைச்சரான ஆண்டன் சிலுவனாவ் எச்சரித்தார்.

சென்ற ஆண்டின் சகல துறைகளிலுமான 10 சதவீத வெட்டுகளுக்கு மேலதிகமாய் புதிய வெட்டுகள் வரவிருக்கின்றன. கிரெம்ளினின் ஆங்கில மொழி ஊடகமான RT கூறுவதன் படி, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் விளையாட்டு அத்தனையுமே குறிவைக்கப்படுகின்றன. இத்தனை நடவடிக்கைகளுமே கூட வரவு-செலவுத்திட்ட நெருக்கடியை எதிர்கொள்ள போதுமானதாக இல்லாமல் போகலாம், ஏனென்றால் பீப்பாய்க்கு 40 டாலர் என்ற அளவில் எண்ணெய் விலை அனுமானிக்கப்பட்டு இந்த உத்தேச வெட்டுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, அது உண்மையில் எண்ணெய் இப்போது வர்த்தமாகிக் கொண்டிருக்கும் விலையை விட பீப்பாய்க்கு 10 டாலர் அதிகமாகும்.

உணவு மற்றும் உடைக்கு செலவிடுவதில் சிரமம் காணுவதைக் கொண்டு அளவிடப்பட்ட ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 22 சதவீதத்தில் இருந்து 2015 இல் 39 சதவீதமாக அதிகரித்திருந்தமையானது VTsIOM கருத்துக்கணிப்பு மூலமாக வெளியான அதேசமயத்தில் தான் வெட்டுகள் குறித்த செய்திகளும் வெளியாகின. சென்ற ஆண்டில் இன்னுமோர் இரண்டு மில்லியன் பேர் அதிகமாகி மக்களில் சுமார் 14 சதவீதத்தை எட்டியிருக்கும் உத்தியோகபூர்வ ஏழ்மை விகிதத்தை (தனிநபருக்கு மாதத்திற்கு 112 டாலர் என்ற அடிப்படையில்) காட்டிலும் இந்த புள்ளிவிவர எண்ணிக்கை அதிகமானதாகும். சென்ற ஆண்டின் மந்தநிலை சமயத்தில் பொருளாதாரம் 3.7 சதவீதமாக சுருங்கி உண்மையான ஊதியங்கள் ஒன்பது சதவீதம் வரை சரிந்த போது ரஷ்ய வாழ்க்கைத் தரங்களில் உண்டான கூர்மையான வீழ்ச்சி 2016 ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திங்களன்று நாட்டின் நாணய மதிப்பு மேலும் சரிந்து, டாலருக்கு 79 ரூபிள்கள் என்ற ஒரு புதிய சரிவுநிலையை எட்டியது. இது 2014 முதலாக பாதிக்கும் அதிகமாய் வீழ்ச்சி கண்டு, இறக்குமதி நுகர்பொருட்களுக்காகும் செலவை, குறிப்பாக உணவு மற்றும் மருந்துகளுக்காகும் செலவை அதிகரித்திருக்கிறது. எண்ணெய்-அல்லாத ஏற்றுமதிகளும் உற்பத்தியும் 2015 இல் வளர்ச்சி காணத் தவறியதால், ரூபிளின் ஒப்பீட்டளவிலான மலிவான விலையால் தொழிற்துறை பயனடைந்திருக்கவில்லை.

செலவின வெட்டுகள் தவிர, அரசாங்கம் ஓய்வூதிய அமைப்புமுறையையும் குறிவைத்துக் கொண்டிருக்கிறது. டிசம்பரில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், குடிமக்களின் சராசரி ஆயுள்காலம் 71 ஆக அதிகரித்திருந்ததை சுட்டிக் காட்டி, ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த ஆண்டில் ஓய்வூதியதாரர்களுக்கான தொகையளிப்புகள் ஆண்டின் முதல் பகுதியில் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட இருக்கிறது, இது பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் குறைவு என்பதோடு 2015 இன் அதிகரிப்பு சதவீதத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவானதாகும், ஆகவே அவற்றின் உண்மையான மதிப்பிலான ஒரு வெட்டினைக் குறிப்பதாகும்.

முன்னாள் நிதி அமைச்சரான அலெக்ஸி குட்ரின் - சிக்கன நடவடிக்கையின் ஒரு வலது-சாரி வக்காலத்துவாதியான இவர் மீண்டும் கிரெம்ளினுக்குத் திரும்ப தயாரித்துக் கொண்டிருப்பதாய் கிசுகிசுக்கப்படுகிறது - இந்த சிறு கொடுப்பையும் கூட விமர்சனம் செய்தார். ரஷ்யா ஒரு “சமூக அரசாக” - அதாவது அடையாளத்திற்கு சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் சமூகநல சேவைகளை வழங்குகின்ற ஒரு அரசாக - இருக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் வருடத்திற்கு ஐந்து சதவீத வளர்ச்சி வீதம் நாட்டிற்கு தேவை என்று அவர் கூறினார்.   

உணவு, மருந்துகள் மற்றும் பொருட்களின் விலையுயர்வும், அத்துடன் ஓய்வூதிய நிலுவைகளின் அதிகரிப்புமாய் சேர்ந்து ரஷ்யாவின் முதிய வயதினரை அனாதரவான நிலைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மாதாந்திர சராசரி ஓய்வூதிய வருவாய் வெறும் 13,132 ரூபிள்களாக அல்லது 166 டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது, இது உத்தியோகபூர்வ தனிநபர் ஏழ்மைக் கோட்டைக் காட்டிலும் வெறும் 50 டாலரே அதிகமானதாகும். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது ஓய்வூதியத் தொகைகள் பணவீக்கத்திற்கேற்றபடி சீர்செய்யப்படுவதில்லை என்பதால் இத்தொகை இன்னும் குறைவானதாய் இருக்கும். சைபீரிய நகரான Novosibirsk இல் ஜனவரியில் தங்களது மாதாந்திர காசோலையை சேகரிக்க அஞ்சலகம் சென்ற ஓய்வூதியதாரர்களுக்கு, “குறைந்தநிதி” மற்றும் “பணப் புழக்க” பிரச்சினைகளின் காரணத்தால், அன்று அவர்களால் தொகை பெற முடியாது என்று கூறப்பட்டது.

குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அடையாள அளவிலான உதவிகளைக் கொண்ட சமூகத் திட்டங்களால் முன்னர் பயனடைந்திருந்த வீடுகள் இப்போது சரிந்து செல்லும் கூலிகள் மற்றும் குறைந்துபோன சமூக நல உதவிகள் என இரட்டை நெருக்கடிக்கு முகம்கொடுத்து நிற்கின்றனர். ரஷ்யன் அகாதமி ஆஃப் சயின்சஸ் நிறுவனத்தின் ஒரு முன்னணி சமூக விஞ்ஞானியான சேர்ஜி ஸ்மிர்னோவ் Gazeta.ru இடம் இவ்வாறு விளக்கினார்: “வேலை செய்யும் ஒரு குடும்பத் தலைவர் இருக்கிறார், அவரின் சம்பளம் 10 சதவீதம் சரிகிறது, இரண்டு குழந்தைகளுடன் இல்லத்தரசியாக இருக்கும் தாயின் முழு ஆதாரமும் சமூக நலத் திட்டமாக இருக்கிறது என்றால், பணவீக்கத்திற்கேற்ப சரிசெய்யப்படாத நிலைமைகளின் கீழ், இந்தக் குடும்பமானது தனது வருவாயில் சுமார் கால்பங்கை இழக்கும்”. “இருபத்தைந்து சதவீதம் என்பது உணரக் கூடியதாகும். சமூக அதிருப்திக்கான முக்கியமான முகாந்திரமாகும்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

சம்பள நிலுவைகளும் பரவலானதாகி வருகின்றன. டிசம்பர் 2015 நிலவரப்படி, உத்தியோகபூர்வ புள்ளிவிவரத்தின் படி, நாடெங்கும் நிலுவையில் இருக்கும் ஊதியங்களின் அளவு 3.89 பில்லியன் ரூபிள்களாய் உள்ளது. இந்த எண்ணிக்கை 2012 ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியான வளர்ச்சி கண்டு வந்திருப்பதாகும். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கத் தவறிய முதலாளிகளுக்கான அபராதத்தில் ஒரு சிறு அதிகரிப்பை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இந்த நடவடிக்கையை சுதந்திர தொழிற்சங்கங்களின் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவர் கண்டனம் செய்தார். அவரைப் பொறுத்தவரை, இருக்கின்ற நடவடிக்கைகளே ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கிற நிலையில், அவற்றை அதிகரிப்பது என்பது “வேலைகளை அழித்து விடும்”.  

5.8 ஆக இருக்கும் ரஷ்யாவின் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதமானது ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும் அதேநேரத்தில், தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தரவு 631,000 தொழிலாளர்கள் உடனடி வேலைஇழப்பு அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. உழைக்கும் மக்களில் 18 சதவீதம் பேருக்கு வேலையளித்திருக்கும் 60,000க்கும் அதிகமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் தம் நோக்கத்தை அறிவித்துள்ளன. இதுதவிர, ஊதியமற்ற விடுமுறைக்கோ அல்லது குறைந்த மணி நேர வேலைக்கோ ஒப்புக்கொண்டிருக்கக் கூடிய 280,000 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் 74 சதவீதம் அதிகமாகும்.

ரஷ்ய குடும்பங்கள் மீதான பெரும் அழுத்த அதிகரிப்பின் ஒரு வெளிப்பாடாக, கடன்பட்ட நிலையும் நுகர்பொருள் கடன் திருப்பிச் செலுத்தலிலான தாமதச் செலுத்தமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. Ural Mountains இல் இருக்கின்ற ஒரு மாகாணமான Sverdlovsk Oblast இல் சென்ற ஆண்டில் நிலுவை பாக்கிகளின் அளவு 42 சதவீதத்திற்கும் அதிகமாய் அதிகரித்திருக்கிறது. இன்று இப்பிராந்தியத்தின் சராசரியான ஒரு நுகர்வோர் தனது மாத வருமானத்தின் 45 சதவீதத் தொகையை தனது நுகர்வோர் கடனுக்குப் பணம் செலுத்த செலவிடுகிறார். Novosibirsk Oblast இல் வங்கிக் கடன் அளவு 2015 இல் 440 பில்லியன் ரூபிள்களாக அதிகரித்திருந்தது, இது 63 சதவீத அதிகரிப்பாகும். Nezavisimaya Gazeta இல் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரையின் படி, இதே போன்ற காட்சிகளை ரஷ்யாவெங்கும் காணக்கூடியதாக இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியின் அழுத்தத்தின் கீழ் வாழ்க்கைத்தரங்கள் பொறிகின்ற நிலையில், மக்களிடம் எடுக்கப்படுகின்ற கருத்துக்கணிப்புகள் கவலையும் பிரமைவிலகலும் அதிகரித்துச் செல்வதை பதிவு செய்கின்றன. வெறும் 25 சதவீத ரஷ்யர்கள் மட்டுமே, தங்கள் வேலை போனால் கண்ணியமான இன்னோர் வேலையைத் தங்களால் கண்டு விட முடியும் என்று நம்புகின்றனர். அத்துடன் சமீபத்தில் வேலை இழப்பைப் பெற்ற இரண்டு அல்லது அதற்குக் கூடுதலான உறவினர்கள் மூன்று ரஷ்யர்களில் ஒருவருக்கு இருப்பதாக VTsIOM தெரிவிக்கிறது. மக்களிடையே, அதிலும் குறிப்பாக குறைவான வசதி படைத்தவர்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரும் நகர்ப்புற மையங்களுக்கு வெளியில் இருக்கும் மக்களிடம், எதிர்ப்பு மனோநிலை பெருகிக் கொண்டிருப்பதை ரஷ்ய சுற்றுச்சூழல் கொள்கை மையத்தின் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்தது. நவம்பர் மத்தியில், ரஷ்ய டிரக் ஓட்டிகள், சாலைப் பழுதுபார்ப்புக்கு நிதியாதாரம் திரட்டவும் கிரெம்ளின் நிதிப்பிரபுக்களின் - இவர்களே சுங்க வசூலிப்பு முறைக்கு உரிமம் கொண்டிருந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் - கஜானாக்களை நிரப்புவதற்குமான நோக்கத்தில் புதிதாகத் திணிக்கப்பட்டிருந்த ஒரு பெடரல் நெடுஞ்சாலை வரியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களைத் தொடக்கினர்.