ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What is driving the stock market panic?

எது பங்குச் சந்தையில் பெரும் அச்சநிலையை உந்துகிறது?

Barry Grey
18 January 2016

வங்கிகளும், தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலுமான எல்லா அரசாங்கங்களும் நடுங்கியவாறு பீதியுடன் ஒரு புதிய வர்த்தக வாரத்தை தொடங்கியுள்ளன. அமெரிக்க சந்தைகள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் விடுமுறைக்காக திங்களன்று மூடியிருக்கும், ஆனால் புத்தாண்டின் இந்த இரண்டு வாரகாலமும் வரலாற்றில் மிக நாசகரமாக தொடங்கியதை அடுத்து, பெடரல் வங்கியும், பிரதான வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் ஒபாமா நிர்வாகமும் திரைக்குப் பின்னால் ஆழ்ந்த விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் என்பதில் ஒருவர் நிச்சயமாக இருக்கலாம்.

வெள்ளியன்று சீனா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வரையில் பங்குச் சந்தைகளில் பீதியுடன் கூடிய விற்றுத்தள்ளல், இரண்டு வாரங்களில், உலகளவில் பங்கு மதிப்புகளில் $5.7 ட்ரில்லியனை அழித்தது, அதில் டோவ் 391 புள்ளிகளை இழந்ததுடன் 16,000 புள்ளிகள் வரம்புக்கும் கீழே இறங்கியது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்குகளை உத்தியோகபூர்வமாக பின்னோக்கி தள்ளியுள்ள (சமீபத்திய உயர்வுகளை விட 10 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்துள்ளது) மற்றும் சீனச் பரிமாற்ற சந்தைகளில் பங்குப்பத்திர விலை வீழ்ச்சி நிலைக்குள் (20 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்துள்ளது) வீசியுள்ள நடப்பு விற்றுத்தள்ளல், நிஜமான பொருளாதாரத்தின் மந்தநிலை மற்றும் தேக்கநிலையின் அதிகரித்த அறிகுறிகளால் எரியூட்டப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் ஏனைய தொழில்துறை பண்டங்களது வீழ்ச்சியடைந்துவரும் விலைகள் மற்றும் அமெரிக்காவில் பொருளாதார சரிவுக்கான புதிய அறிகுறிகள் உட்பட சீனாவின் ஒரு கூர்மையான சரிவும் இதில் உள்ளடங்கும்.

நிதியியல் வட்டங்களுக்குள் பரவிவரும் மனோநிலையை ஸ்காட்லாந்தின் ராயல் வங்கியினது கடன்வழங்கல் குழு தொகுத்தளித்தது. 2016 ஒரு "பிரளயகரமான ஆண்டாக" இருக்கக்கூடும் என்று அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியும், “உயர் தர பத்திரங்களைத் தவிர வேறு அனைத்தையும் விற்குமாறு" அவர்களுக்கு வலியுறுத்தியும் ஒரு குறிப்பை அனுப்பி இருந்தது.

“கூட்டம் நிறைந்த ஒரு அரங்கில், வெளியேறுவதற்கான கதவுகள் சிறியதாக உள்ளன" என்று எச்சரித்த அக்குறிப்பு, பிரதான பங்குச் சந்தைகள் 20 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடையக்கூடும் என்றும், ஏற்கனவே வீழ்ச்சி அடைந்துள்ள அதன் பேரலுக்கு $29 என்ற தற்போதைய மட்டத்திலிருந்து எண்ணெய் $16 ஆக சரியக்கூடும் என்றும் முன்கணித்தது. “சீனா ஒரு பிரதான பின்னோக்கிய சரிவைத் தொடங்கி வைத்துள்ளது, அதுவொரு பனிப்பந்து போல் ஆகப்போகிறது,” என்பதையும் அக்குறிப்பு சேர்த்துக் கொண்டது.

தீவிரமடைந்துவரும் புவிசார்அரசியல் மோதல்கள் மற்றும் தீவிரமடைந்துவரும் போர்களுடன், பக்கவாட்டில் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் அரசியல் நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுடன், பொருளாதார கொந்தளிப்பின் இடைக்குறுக்கீடும் முன்னெச்சரிக்கை மனநிலையைச் சுற்றி சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் இரண்டு-கட்சி ஆட்சிமுறையின் ஓர் ஆழ்ந்த நெருக்கடியை ஏற்கனவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்னணியில் இந்த நிதியியல் வெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன என்ற உண்மையானது பொதுவான பய உணர்வை இன்னும் அதிகமாக உயர்த்துகின்றன.

சந்தைகளில் குறுகிய-கால திருப்பம் என்னவாக இருந்தாலும், புத்தாண்டை குறித்து காட்டிய இந்த கொந்தளிப்பு, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த மற்றும் ஆழமடைந்துவரும் முரண்பாடுகளைப் பிரதிபலிக்கிறது. வங்கிகள் மற்றும் நிதியியல் சந்தைகளுக்கு வழங்கப்பட்ட தோற்றப்பாட்டளவில் ட்ரில்லியன் கணக்கான வட்டி இல்லாத பணம் மற்றும் பிணையெடுப்புகள், அத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மத்திய வங்கிகளும் அரசாங்கங்களும் அளித்த உபசரிப்புகள் என இந்த ஏழுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர், நிஜமான பொருளாதாரமோ 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவிலிருந்து மீளவில்லை என்பது மட்டுமல்ல, அது துரிதமாக சீரழிந்தும் வருகிறது.

தொழிலாள வர்க்கம் பாரிய வேலைநீக்கங்கள், கூலி வெட்டுக்கள் மற்றும் சிக்கனத் திட்டங்களைக் கொண்டு தாக்கப்படுகின்ற அதேவேளையில் பணக்காரர்களும் மிகப்பெரும் பணக்காரர்களும் பங்கு வாங்கிவிற்றல்கள், ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் போன்ற ஒட்டுண்ணித்தனமான மற்றும் சமூகரீதியில் அழிவுகரமான நிதியியல் நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் இலாபங்களைத் தங்களுக்குத்தாங்களே விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் 154 கடைகள் மற்றும் 10,000 வேலைகள் உட்பட, வோல்-மார்ட் 269 கடைகளை மூடுவதாகவும், 16,000 வேலைகளை வெட்டுவதாகவும் வெள்ளியன்று அறிவித்தமை, பொருளாதார "மீட்சி" என்ற உத்தியோகப்பூர்வ பேச்சுக்குப் பின்னால் அமெரிக்காவின் நிஜமான பொருளாதார மற்றும் சமூக நிலை என்னவென்பதை எடுத்துக்காட்டுகிறது — இந்த அறிவிப்பானது, அமெரிக்க பொருளாதாரம் குறித்து ஜனாதிபதி ஒபாமாவின் ஏமாற்றுத்தனமான நாட்டுக்கான உரை சித்தரிப்புக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் மிகச் சிறந்த உதாரணமாக வெளிவந்தது. “அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது என்று யாரேனும் கூறுவது கட்டுக்கதையைப் பரப்புவதாகும்,” என்று அந்த ஜனாதிபதி பெருமை பாராட்டினார்.

Macy’s மற்றும் Sears-Kmart இன் பல்பொருள் அங்காடி மூடப்படுவது குறித்த அறிவிப்புகளது அடியொற்றி வந்துள்ள வோல்-மார்ட் கடைகளது மூடல்கள், வோல்-மார்ட் பிரதான வேலைவழங்குனராக இருக்கும் மற்றும் பிரதான சில்லரை விற்பனை அங்காடியாக விளங்கும் சமூகங்களது கடுமையான நிலைமையை அர்த்தப்படுத்துகிறது. சரக்குப் போக்குவரத்தைப் போலவே, அமெரிக்க தொழில்துறையும் மந்தநிலைமையில் உள்ளது. சுமார் 40,000 நிலக்கரி சுரங்க வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் 2008 க்குப் பின்னரில் இருந்து நிலக்கரி உற்பத்தி 15 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

எழுச்சியடைந்துவரும் சந்தை பெருநிறுவன பத்திரங்கள், எரிசக்தித்துறை பெருமதியற்ற பத்திரங்கள், செலாவணிகள் மற்றும் பண்டங்கள் மீதான ஊக பந்தயங்களின் வடிவில், இப்போது, சாதனையளவிலான உயர்ந்த கடன் மட்டங்கள் பணவிரய பங்கு மதிப்புகளுடன் ஒன்றுமில்லாமல் போக அச்சுறுத்தி வருகின்றன. உற்பத்தி சக்திகள் மற்றும் சமூக உள்கட்டமைப்பிற்கு முதலீடின்றி வறண்டு போய், நிஜமான பொருளாதாரத்திற்கு அடியில் ஆழமடைந்துவரும் நெருக்கடியானது ஊக வணிகம், கடன் மற்றும் ஒட்டுமொத்த மோசடித்தனத்தின் அடிப்படையில் கட்டமைந்துள்ள நிதியியல் சொத்துக்களின் பிரமாண்ட மாளிகைக்குக் குழிபறித்து வருகிறது.

வட்டிவிகிதங்களைப் படிப்படியாக சிறிதுசிறிதாக உயர்த்துவதென்ற நோக்கம் இருந்தாலும், வட்டிவிகிதங்களை அதிகரிப்பதென்ற பெடரல் ரிசர்வ் இன் முடிவு, கடன் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி, உலகெங்கிலுமான செலாவணி சந்தைகளுக்குள் புதிய அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது, இது ஏற்கனவே 2011 க்குப் பின்னர் டாலரின் 35 சதவீத அளவிலான உயர்வால் குழம்பி போயுள்ளது.

இதையும் விட கூடுதலாக அடைப்படையாக, இலாப விகிதங்கள் குறைந்து வருகின்றன. கடந்த திங்களன்று Alcoa நிறுவனம், 2015 இன் நான்காம் காலாண்டில் $500 மில்லியன் நிகர இழப்பை அறிவித்தது. ஸ்டாண்டர்டு & புவர்ஸ் 500 நிறுவனங்களின் வருவாய் இந்த காலாண்டின் போது 4.7 சதவீதம் வீழ்ச்சி அடையுமென மதிப்பிடப்படுகிறது, இது தொடர்ந்து இரண்டாவது காலாண்டு சரிவாக இருக்கும். எஸ்&பி 500 நிறுவனங்களில் 2015 இல் மொத்தமாக பூஜ்ஜிய இலாப வளர்ச்சி இருக்குமென கருதப்படுகிறது.

சீனாவின் வளர்ச்சிக் குறைவு மற்றும் நெருக்கடியில் கவனம் குவிந்துள்ளது, ஏனென்றால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் பிரதான மலிவு-தொழிலாளர் உற்பத்தி தளமான அது, குறிப்பாக 2008 முறிவுக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தைத் தூக்கி நிறுத்துவதில் அந்தளவிற்கு ஒரு மிகப்பெரும் பாத்திரம் வகித்திருந்தது. ஆனால் சீனப் பிரச்சினைகள் உலகளாவிய நெருக்கடியின் ஒரு வெளிப்பாடு தான், அதன் நிஜமான மையம் அமெரிக்கா ஆகும்.

உலகளாவிய பொருளாதார சக்தியாக சீனா எழுச்சி என்பது, உலக முதலாளித்துவ நெருக்கடியின் இதயதானத்தில் உள்ள அமெரிக்க முதலாளித்துவத்தினது படுபாதாள வீழ்ச்சியுடன் பிணைந்துள்ளது. அந்த மாவோயிச-ஆட்சி நாட்டை பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கான மலிவு-உழைப்பு மற்றும் அதீத-சுரண்டலுக்கான ஓர் கோட்டையாக-அரணாக- மாற்றியமை, அமெரிக்க தொழில்துறை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் நிதியியல் ஊக வணிகத்தின் அதிகரித்த மேலாதிக்க பாத்திரத்தின் ஒரு பக்கம் தான்.

"ஆசிய புலிகள்," டாட்.காம் வெறி, வீட்டு அடமானக் கடன் மோசடி என, தசாப்தங்களாக, வோல் ஸ்ட்ரீட் ஒன்று மாற்றி ஒன்றாக ஊக குமிழிகளுக்கு எரியூட்டியுள்ளது. இதில் ஒவ்வொன்றும் பொறிந்து போனதுடன் ஒன்று மற்றொரு நிதியியல் குமிழிக்குப் பாதை அமைத்தது. இதற்கிடையே, அந்நாட்டின் சமூக உள்கட்டமைப்பு அழுகி போய், தொழிலாள வர்க்கம் இன்னும் ஆழமாக பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகை பொறிந்து போகும் அச்சுறுத்தலுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கிய அடிப்படை காரணி, தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அதிகரிப்பாகும். ஊழல்பீடித்த அதன் எலும்புகளுடன் சீன ஆட்சி, சர்வதேச மூலதனத்தால் கோரப்படும் மற்றும் தற்போதைய ஆளும் குழுவால் ஆதரிக்கப்படுகிற, வாட்டிவதைக்கும் தனியார்மயமாக்கல் மற்றும் வேலை-குறைப்பு கொள்கைகளை நடத்துவதால் உண்டாகும் சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் குறித்து அஞ்சுகிறது.

மிகப்பிரமாண்டமான சீனத் தொழிலாள வர்க்கம் ஏற்கனவே போராட்டத்தில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டை அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர் போராட்டங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கு அதிகமாக அதிகரித்திருந்தது, அத்தகைய மொத்த போராட்டங்கள் டிசம்பரில் சாதனையளவிற்கு அதிகரித்திருந்தன.

அமெரிக்க ஆளும் வர்க்கம், மிகத் துல்லியமாக தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அதிகரிப்பை அறிந்து வைத்துள்ளது. 2015 இன் இறுதியில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் மூலமாக வேகவேகமாக நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களுக்கு வாகனத்துறை தொழிலாளர்களது பாரிய எதிர்ப்பிலும் மற்றும் டெட்ராய்டு ஆசிரியர்கள் சுயாதீனமாகவும் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்திற்கு எதிராகவும் ஒழுங்கமைந்த இம்மாத மருத்துவ விடுப்பு எடுத்த போராட்டத்திலும் இது பிரதிபலித்தது. தொழிலாள வர்க்கத்தின் போர்குணம் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வு அதிகரிப்பதும் மற்றும் வலதுசாரி பெருநிறுவன தொழிற்சங்க பிடி உடைந்து வருவதும், பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் ஊதுகுழல்களை பயத்தில் ஆழ்த்துகிறது.

இது, தொழிலாளர்களது சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முன்பினும் கூடுதலாக புதிய மூர்க்கமான தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யவும் அவர்களைத் தள்ளுகிறது. இதற்கு முதலாளித்துவத்தை அழித்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஓர் அரசியல் போராட்டமாக தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதைக் கொண்டு பதிலளிக்க வேண்டும்.