ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Castroism and the Politics of petty-bourgeois nationalism

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

A lecture by Bill Vann

இந்த விரிவுரை, ஜனவரி 7 1998 ல் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் (அவுஸ்திரேலியா) ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கோடை பாடசாலையில் வளங்கப்பட்டதாகும்.

பில் வான் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் ஆவார். அவர் யுத்தத்திற்கு பின்னரான இலத்தின் அமெரிக்க, தென் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்கள் பற்றிய குறிப்பிடும்படியான விமர்சன படைப்புகளை எழுதியுள்ளார். அவரின் விரிவுரையை இங்கே பிரசுரிக்கிறோம்.

இந்த விரிவுரையின் கருப்பொருள், சீனாவிலும் இந்தியாவிலும் தேசிய போராட்டங்களின் மூலோபாய வளர்ச்சி பற்றிய படிப்பினைகளும் நிரந்தரப் புரட்சியும் என்பது பற்றி தோழர் விஜே டயஸ் ஆல் இன்று காலை வழங்கப்பட்ட சொற்பொழிவில் எழுப்பப்பட்ட விஷயங்களுடன் மிகவும் தொடர்புடையதாகும். மேலும் இருபதாம் நூற்றாண்டின் வடிவத்தை தீர்மானிப்பதில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவை வளர்த்தெடுப்பது பற்றியும் மார்க்சிச தலைமையாலும் முன்னோக்காலும் ஆற்றப்படும் தீர்க்கமான பாத்திரம் பற்றியும் இந்த பள்ளியில் தொடக்கத்திலிருந்து முன் வைக்கப்பட்ட அத்தியாவசிய பிரச்சினைகளுக்கும் காஸ்ட்ரோயிசம் பற்றிய ஆய்வுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

காஸ்ட்ரோயிசம் ஆழமான குழப்பத்தின் கருப்பொருளாக இருந்து வருகிறது. நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய பப்லோவாத திருத்தல்வாதப் போக்கினால் உண்டுபண்ணப்பட்ட இக்குழப்பம் கொஞ்சநஞ்சமல்ல! தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான பங்களிப்பு இன்றி சோசலிச புரட்சியை நிறைவேற்ற முடியும், ஒரு தொழிலாளர் அரசை ஏற்படுத்த முடியும் என்று உறுதிப்படுத்தும் காஸ்ட்ரோயிசத்தை சோசலிசத்துக்கான புதிய பாதை என அவர்கள் முன்வைத்தனர்; அவர்களுள் சிலர் இன்றும் முன்வைக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜோசப் ஹான்சனாலும் ஐரோப்பாவில் ஏர்னெஸ்ட் மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட பப்லோவாத திருத்தல்வாதிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்கான போராட்டத்தை கைவிட்டதுடன், பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகளை குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளிடம் விட்டுக் கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் செய்ததன் மூலம் இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தொழிலாள வர்க்கம் மிகவும் பயங்கரமான தோல்விகளால் பாதிக்கப்படுவதற்கு தயார் செய்து உதவினார்கள்.

இந்த முன்னோக்கிற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விட்டுக்கொடுக்காத போராட்டத்தை தொடுத்தது. அதன் மூலம் கடந்த காலகட்டம் முழுவதும் மார்க்சிசத்தால் அடித்து, உருவாக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் ஆயுதங்களை வளர்த்தெடுக்கவும் பாதுகாக்கவும் செய்தது. மார்க்சிஸ்டுகளின் பணிகளுடன் தொடர்புடைய மிக அத்தியாவசிய பிரச்சனைகள் இந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.

மார்க்சிசத்தை வெறுமனே கண்டுபிடிப்பதற்கான, விவரிப்பதற்கான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத புறநிலை நிகழ்வுப்போக்குகள் என்று கூறப்படுவனவற்றுக்கு தங்களை அனுசரித்துக்கொள்ளச் செய்வதற்கான வழிமுறைகளாக பார்த்தோருக்கு எதிராக எமது இயக்கம் போராடியது. இந்த தடுத்து நிறுத்த முடியாத புறநிலை நிகழ்வுப் போக்குகள் என்று கூறப்படுபவை ஏனைய தொழிலாள வர்க்கமல்லாத சக்திகளை சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு தலைமை வகிக்க நிர்ப்பந்தித்தன. அதிகாரத்துவங்களும், குட்டி முதலாளித்துவ தலைமைகளும் பலமானவர்களாக இருந்தாலும் அல்லது பிரபலமானவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான ஈவிரக்கமற்ற போராட்டத்தில் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட புரட்சிகரக் கட்சியை கட்டுவதில்தான் சோசலிசத்திற்கான பாதை அமைந்திருக்கிறது என்ற முன்னோக்கை எமது இயக்கம் பாதுகாத்தது.

35 ஆண்டுகளுக்கு பின்னர் காஸ்ட்ரோயிசத்தை கவனிக்கையில், இந்த விவாதத்தில் யார் சரியாக இருந்தது என்று கேட்க கடப்பாடுடையவர்களாக இருக்கிறோம். காஸ்ட்ரோயிசம் சோசலிசத்துக்கு புதிய பாதையை வழங்கியதா? அல்லது அது முட்டுச்சந்தாக மாறி, தொழிலாள வர்க்கத்திற்கு பொறிக்கிடங்காக ஆனதா? தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தையும் அதனது நனவுபூர்வமான புரட்சிகர முன்னணியின் பாத்திரத்தையும் பப்லோவாதிகள் துறந்துவிட்டதன் விளைபயன்கள் என்னவாக இருந்தன? தொழிலாள வர்க்க இயக்கத்துக்கான இந்த மூலோபாய அனுபவத்தினையும் அதன் படிப்பினைகளையும் மீள்பார்வை செய்வதற்கான வாய்ப்பினை இந்த சொற்பொழிவில் நாம் எடுத்துக் கொள்வோம்.

"சே"யின் புத்துயிர்ப்பு

நமது ஆய்வை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான இடம், காஸ்ட்ரோயிசத்துடன் இனம் காட்டப்படும், கெரில்லாயுத்த முன்னோக்கின் நடைமுறையாளரும் மிக முக்கியமான எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த எர்னஸ்டோ சேகுவாரா மரணிக்கப்பட்ட முப்பதாம் ஆண்டு நினைவை குறிக்கும் அண்மைய விழா ஆகும். அண்மைய மாதங்களில் ஆர்ஜண்டினாவில் பிறந்த கெரில்லா சேயை, அவருடைய மோசமான ஆவியுருவிலும்கூட எண்ணிப்பார்க்க முடியாத வகையிலான புத்துயிர்ப்பைக் கண்டோம். சே அவரது தீவிரத்திற்கு பெயர்பெற்றதுடன், முன்னுக்குப்பின் முரணாகத் தெரிகிறவாறு வியாபாரமாக்கலின் பொருள் ஆகியிருந்தார். அவரது உருவம் கூட ஒரு பண்டமாக மாற்றப்பட்டிருந்தது. சுவிஸ் கடிகாரத் தயாரிப்பாளர் ஸ்வாட்ச், "புரட்சி" என்னும் மாதிரி (model) ஒன்றை கெரில்லா முகத்தோற்றத்துடன் கொண்டு வந்தார். அவரது முகம் விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமின்றி சி.டி. உறைகளை அழகுபடுத்தவும் பீர் விற்பனை செய்வதற்கும் கூட பயன்படுத்தப்பட்டது.

ஆர்ஜன்டினாவில், சர்வதேச நாணய நிதியத்தை தழுவிக் கொண்டதற்காக வாஷிங்டனின் விருப்பத்திற்குரிய வரும் பாரசீக வளைகுடா யுத்தத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தவருமான கார்லோஸ் மெனெம் அரசாங்கமும் கூட, `சே` ஒரு "மகத்தான ஆர்ஜன்டினியன்" என்று கௌரவித்து நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

காஸ்ட்ரோ ஆட்சியும் கூட இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அது அண்மையில், சேகுவாராவின் உடலில் எஞ்சியவற்றை பொலிவியாவிலிருந்து திரும்பக் கொண்டு வந்தது. பகட்டு ஆரவாரத்துடனும் சூழ்நிலைகளுடனும் அவற்றை கியூபாவுக்குள் மீண்டும் கொண்டு வந்தது. கியூப அரசாங்கம் வெளிநாட்டு முன்னாள் தீவிரவாதிகளுக்காக 'சே' சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தது. சே டிஷர்ட்டுக்களையும் சிறு அணிகளையும் சந்தைப்படுத்தி, நெருக்கடிக்கு ஆளான கியூப பொருளாதாரத்திற்கான மதிப்பு மிக்க பணத்திற்கு புதிய வளத்தை வழங்கியது.

அந்த அளவு உணர்வுக்கு ஆளாக்குபவராய் ஆக்கி "சே"யை இலாபகரமான திருவுருவம் ஆக்கியபோதும், தீங்கற்றதாக மாற்றம் செய்தது எது? அது அவரின் புகழ் பாடுபவர்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. துணிச்சல், சுயதியாகம், ஒதுங்கிய துறவு வாழ்வு மற்றும் அவரது வாழ்க்கையை இலட்சியத்திற்காக அர்ப்பணித்தவைகளாகும். இவை அனைத்தும் போற்றத்தக்க பண்புக் கூறுகளாக இருக்கலாம். மனிதனின் மதிப்பு, அவரது மூலக் கொள்கைகளால் தீர்மானிக்கப்பட்ட நிலவும் சமூக அறிவியலுக்கு முற்றிலும் மாறானதை அவர்கள் முன்வைத்தனர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த பண்புகள் அவற்றை வெளிக்காட்டுவோரின் அரசியல் மற்றும் வர்க்க குணாம்சத்திற்கு எவ்விதத்திலும் குறிகாட்டிகளாக இல்லை. மதக்குழுக்கள் மற்றும் பாசிச இயக்கங்கள் கூட இத்தகைய பண்புகளைக் கொண்ட தியாகிகளை தங்கள் சொந்தமான, முழுமையான பிற்போக்கு முடிவுகளுக்கான போராட்டத்தில் உருவாக்கியதாக உரிமை கோரமுடியும். சேகுவாராவின் பங்கு பற்றிய கவனமான ஆய்வானது, அவரது அரசியல் கருத்து மார்க்சிசத்துடன் ஒன்றும் சம்பந்தமில்லாதது என்பதுடன், அவரை அடையாளம் காட்டும் ஆயுதப் போரட்டம் மற்றும் கெரில்லா யுத்தம் ஒரு சர்வசஞ்சீவி என்பது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிசப் போராட்டத்திற்கு அடிப்படை ரீதியாக குரோதமானதாகும்.

"சே"யின் கருத்துப்படிவத்திற்கான அண்மைய புத்துயிர்ப்பிற்கு இடையில், கெரில்லா தலைவரைப் பற்றிய பல்வேறு புதிய வாழ்க்கை வரலாறுகள் காணப்பட்டன. அவற்றுள் மெக்சிகோ ஆசிரியர் ஜோர்ஜ் காஸ்டானிடா (Jorge Castaneda) மற்றும் ஜோன் லீ அண்டர்சன் (John Lee Anderson) எனும் அமெரிக்கர் ஆகியோருடைய நூல்கள், கியூப புரட்சி மற்றும் சேகுவாராவின் விதிமுறை இரண்டையும் உள்ளார்ந்து பார்க்கும் பார்வையை வழங்கும், மார்க்சிச அரசியல் ஆய்வினை எந்த விதத்திலும் வழங்கவில்லை. எனினும், இப்புத்தகங்களில் "சே"யின் பங்கு பற்றிய விவரமான நினைவுத் தொகுப்புகளில் மேம்பட்ட அணுகுமுறையும் அரசியல் முன்னோக்கின் துன்பகரமான முடிவும் தெளிவாக வெளிப்படுகின்றன.

இந்த நிகழ்வுகளின் தொகுப்புக்கிடையில் சேகுவாராவை புரட்சித் தலைவராகவும் தத்துவார்த்த வாதியாகவும் காட்டிக் கொண்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரது எடுத்துக்காட்டையும் கருத்துருக்களையும் அர்த்தமுள்ள முன்னோக்காக தொடர்ந்து வழங்குவதற்கு, பல்வேறுபட்ட குட்டி முதலாளித்துவ இடது போக்குகளின் புதுப்பிக்கப்பட்ட முயற்சியும் இருந்தது. வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் போலல்லாமல் இந்த குழுக்கள் புதிய பார்வைகளையோ புதிய தகவல்களையோ தருவதில்லை. அவர்கள் நடுத்தரவர்க்க தீவிரவாதத்தின் புகழ்மிக்க நாட்களுக்காக, பழங்கால நாட்டம் பற்றிய நோயுடன் சேகுவாராவின் உண்மையான கண்ணோட்டங்களையும் அவற்றின் அரசியல் விளைவுகளையும் பொய்மைப்படுத்தல் என்று மட்டுமே விவரிக்கக்கூடியதை சேர்த்துக் கொண்டனர்.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற சில, கியூப அரசாங்கத்தின் அலுவலக ரீதியான நினைவுகூறலை விமர்சனமற்ற முறையில் எதிரொலிக்கின்றன. இத்தாலியில் பழைய பப்லோவாத அயோக்கியன் லிவியோ மைத்தன் (Livio Maitan) அல்லது ஆர்ஜன்டினாவில் MAS மரோனைட்டுகள் சேகுவாராவை, ஸ்ராலினிசத்துக்கும் காஸ்ட்ரோ ஆட்சிக்கும் ஒருவகை புரட்சிகர பதிலீடாக உருவகித்துக்காட்டுகிறார்கள்.

கியூபப் பிரச்சனை சம்பந்தமான அண்மைய சிறு வெளியீட்டில் மரோனைட்டுகள் `சே`யின் முழக்கமான "ஒன்று, இரண்டு பல வியட்னாம்கள்" என்பதைப் புகழ்ந்ததுடன், "அழிவுகரமான வழிமுறைகளுடனும் கூட, கெரில்லா குவிமையம் வெகுஜன இயக்கத்திலிருந்து தனிமைப்படல், புரட்சிகர தொழிலாளர் கட்சிகளை கட்டுவதற்கு எதிர்ப்பு இவற்றுடனும் அது புரட்சியை சர்வதேச ரீதியாக விரிவுபடுத்தலின் தேவையை வெளிப்படுத்தியது" என்று கூறுகிறார்கள். எப்படி தேவையான மற்றும் புரட்சிகர முன்னோக்கு அழிவுகரமான முறைகள் மூலம் வெளிப்படுத்தப்பட முடியும்? மரோனைட்டுகள் விளக்கமளிப்பதில் அக்கறை கொள்ளவில்லை. அனைத்து பப்லோவாத பிரிவுகளைபோல, இந்தப் போக்கும் பெரோனிசம், ஸ்ராலினிசம், கெரில்லாயிசம் போன்ற பல்வேறு சக்திகள் எப்படி சோசலிசத்துக்கான போராட்டத்தை வெளிக்காட்டுகின்றன என்று விளக்க முயல்வதில் பிழைப்பை நடத்தி வருகின்றது.

உண்மையில் மரோனைட்டுகள் ஆரம்ப காலத்தில் இந்த வெளிப்பாட்டை, காஸ்ட்ரோவால் தூக்கிவீசப்பட்ட கியூப சர்வாதிகாரி பல்ஜென்சியோ பாடிஸ்டாவிடம் (Fulgencio Batista) காணும் மட்டத்திற்குக் கூட சென்றனர். அவரை "கியூபாவின் பெரோன்" என்று பிரகடனம் செய்ததுடன், காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தால் விடப்பட்ட பொது வேலைநிறுத்த அழைப்புக்கு கியூப தொழிலாள வர்க்கம் செவிமடுக்காததை வரவேற்றனர். இருப்பினும் காஸ்ட்ரோ வெற்றி பெற்றபின்னர், அவர்கள் அவரது படத்தை ஜெனரல் பெரோனின் பக்கத்தில் தங்களது பத்திரிகையின் தலைப்பில் போட்டனர்.

மரோனைட்டுகளின் அரசியல் இரசவாதம் (alchemy), சேகுவாராவின் அழிவுகரமான வழிமுறைகள் அரசியல் முன்னோக்கின் நம்பிக்கைக்குரிய வெளிப்பாடுகளாக இருந்தன என்பதுடன் மட்டும் இருக்கவில்லை அல்லது ஒருவேளை இன்னும் துல்லியமாகச் சொன்னால் எந்த உண்மையான முன்னோக்கும் இன்றி இருந்தது.

மரோனைட்டுகளும் சரி பப்லோவாத போக்குகளின் எந்த பிரிவும் சரி, காஸ்ட்ரோயிசம் மற்றும் குவேராயிசம் பற்றிய வர்க்க ஆய்வைச் செய்யவோ, அவர்களது அரசியல் தோற்றுவாய்களையும் வளர்ச்சியையும் படம் பிடிக்கவோ அல்லது கடந்த ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலம் முழுவதிலுமாக இலத்தின் அமெரிக்காவில் கெரில்லாயிசத்தின் அனுபவத்தின் இருப்புநிலை கணக்கையோ வரைய அக்கறை கொள்ளவில்லை.

அந்த விமர்சனத்தின் பணியை, அந்தக் காலக்கட்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காகவும் பொறுப்பெடுத்த போராட்டத்தினை அடித்தளமாக கொண்ட நமது இயக்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.

பாட்டாளி வர்க்க சோசலிசம் (எதிர்) குட்டி முதலாளித்துவ தேசியவாதம்

பப்லோவாத திருத்தல்வாதிகள், பொதுவாக நடுத்தர வர்க்க முன்னாள் தீவிரவாதிகள், அத்தகைய அணுகுமுறைக்கு விரோதமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மெக்சிக்கோவின், சியாபாசின் (Chiapas) ஸபாடிஸ்டா (Zapatista) தேசிய விடுதலை இராணுவத்தின் தோற்றம் மற்றும் அதே போன்ற நடவடிக்கைகளுக்காக பாராட்டுப் பெற்ற துபாக் அமாரு புரட்சிகர இயக்கம் லிமாவில் இரண்டாண்டிற்கு முன்பு ஜப்பானிய தூதரகத்தை முற்றுகை செய்திருந்த அந்நடவடிக்கையால் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

நமது இயக்கம் மேலெழுந்தவாரியான குவேராயிசத்தின் எழுச்சியையும் "ஆயுதப் போராட்டத்தின்" போலி அரசியல் சூத்திரத்தையும் கொண்டாடுவதில் கலந்து கொள்ளவில்லை. அவை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச முயற்சியினை உட்கொண்டிருக்கவில்லை. மாறாக குட்டி முதலாளித்துவ அரசியலை கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து, அத்தகைய கருத்துக்களுக்கு எதிராகப் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறோம்.

தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர தலைமையின் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவர்கள் வழிநடத்தப்படவில்லை. மாறாக இந்த வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை மறுக்கவும் மாணவர்களின் தீவிரமயப்படுத்தப்பட்ட தட்டினரையும் அதைப் போலவே தொழிலாளர் மற்றும் விவசாயிகளையும் சோசலிசத்துக்கான போராட்டத்திலிருந்து திசைதிருப்பவே வழிநடத்தப்படுகின்றனர்.

ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விவரித்தவாறு, சோசலிச புரட்சியின் மூலோபாயப் பிரச்சனைகைளை ஒளிரச்செய்ய அவர்கள் சேவை செய்யவில்லை மாறாக இருளில் ஆழ்த்துவதற்கே சேவை செய்தார்கள். "புரட்சியாளரின் கடமை புரட்சியை செய்வதே", "ஆயுதப் போராட்டம்" மற்றும் "நீண்டகால மக்கள் யுத்தம்" ஆகியன புரட்சியில் எந்த வர்க்கம் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் மற்றும் தனி ஒரு நாட்டில் நடைபெறும் புரட்சிக்கும் உலகப் புரட்சிக்கும் இடையிலான தொடர்பு என்ன? பின்தங்கிய நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கும் இடையிலான உறவு என்ன? அப்போராட்டத்திற்கும் முன்னேற்றமடைந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? என்பது பற்றியும் விடை தராமல் விடப்படுகின்றன.

அவர்களின் தீவிர வாய்ச்சவடாலுக்குப் பின்னால், இவ்வனைத்து கேள்விகள் தொடர்பாகவும் இந்த இயக்கங்கள் திட்டவட்டமான கருத்துக்களை பற்றி நிற்கின்றன.

பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர போராட்டத்தை தாக்குவதிலும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டுமொத்தமாக கீழ்ப்படுத்துவதிலும் அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள்.

இந்த அர்த்தத்தில் இந்த இயக்கங்கள் எவ்வளவு தீவிரமானவையாக இருக்கின்றன என்பதல்ல பிரச்சனை. இறுதி ஆய்வில் அவை சோசலிசப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் கடைசி அரண்களுள் ஒன்றாக இருக்கின்றன. `சே`யின் உருவத்தை தனது சொந்த காரணங்களுக்காக முதலாளித்துவம் சுவீகரித்துக் கொண்டிருப்பதுடன் இயலமைதி கொள்வதைப் புரிந்து கொள்ளும் திறவுகோலை வழங்குவது, குட்டி முதலாளித்துவம், தேசியவாதம் மற்றும் கெரில்லாயிசத்தின் இந்த அடிப்படை இயல்புதான்.

ஒருவர் பெருவிய MRTA மற்றும் மெக்சிகன் சபாடிஸ்டாஸ் ஆகியவற்றின் அரசியலை கவனமாக ஆராய்ந்தால், முதலாளித்துவ தேசிய ஆட்சிகளினாலும், இயக்கங்களினாலும் ஏகாதிபத்தியத்திற்கு உலக ரீதியாக ஒத்துப்போதலின் பல்வேறுபட்ட விளக்கமாகவே இருக்கின்றன. இதனை தோழர் விஜே அவரது அறிக்கையில் விளக்கியிருக்கிறார். துபாக் அமாரு குழு ஜப்பானிய தூதரகத்தை முற்றுகையிட்டது, பியுஜிமோரி (Fujimori) ஆட்சி மீது செல்வாக்கு செலுத்தி அதன் கொள்கையை மென்மைப்படுத்துவதற்கு ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு அழுத்தம் கொடுக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது. அதன் இறுதி குறிக்கோளாக பிணைக்கைதிகளாய் பிடித்து வைக்கப்பட்ட சிலர் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்கு நிர்ப்பந்தித்தது. அதன் மூலம் அது தன்னை ஆயுதம் தாங்கிய இயக்கத்திலிருந்து சட்டரீதியான குட்டி முதலாளித்துவ அரசியல் கட்சியாக உருமாற்றிக்கொள்ள முடிந்தது.

சபாடிஸ்டாவை பொறுத்தவரை இந்த இயக்கம் உலகம் முழுவதும் போற்றி வரவேற்கப்பட்டது. ஏனெனில் அது ஆரம்பத்திலிருந்தே எந்தவித புரட்சிகர குறிக்கோள்களையும் கைவிட்டுவிட்டது. மார்கோஸ் துணை கமாண்டரின் வெற்றுக் கோரிக்கைகள் ஜனநாயகமயப்படுத்தல், ஊழலுக்கு முடிவுகட்டல் மற்றும் நாட்டின் பழங்குடி மக்களின் கலாச்சார உரிமை இவற்றுக்காக இருக்கின்றன. இந்த கோரிக்கைகள் குட்டி முதலாளித்துவ இடது மட்டுமல்ல, ஆளும் PRI மற்றும் வலதுசாரி எதிர்க்கட்சியான PAN ஆல் கூட வரவேற்கப்பட முடியும். மார்கோசும் சபாடிஸ்டாக்களும், மெக்சிக்க தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் விவசாயிகளுக்கும் ஒரு புரட்சிகர பாதையை வழங்குவதற்கு மாறாக, முதலாளித்துவத்துக்குள் அரசியல் கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கான இன்னொரு கருவியாக தங்களை மாற்றிக்கொண்டனர்

குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பாத்திரம்

இப் பல்வேறுபட்ட இயக்கங்களை குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள் என்று நாம் விவரிக்கும் போது நாம் திட்டவட்டமாக எதை அர்த்தப்படுத்துகிறோம்? அது மார்க்சிஸ்டுகள் தங்களின் எதிராளிகள் மீது வெறுமனே வீசும் அடைமொழி அல்ல. அது இவ்வியக்கங்களை பண்பிட்டுக்காட்டும் வர்க்க நலன்கள் மற்றும் வழிமுறைகளின் விஞ்ஞான வரையறையாகும். மார்க்ஸ் 1848 புரட்சியின் அனுபவத்தினை தனக்கு அடிப்படையாகக் கொண்டும், ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்திலும் குட்டி முதலாளிடத்துவ வர்க்கம் சுயாதீனமான தொடர்ச்சியான அரசியலை நடைமுறைப்படுத்த இயலாதது என்று விளக்கியுள்ளனர். தொடர்ச்சியாய் முயற்சிக்காத அதன் தன்மை அதனுடைய சமூக இடைத்தட்டு நிலையின் பிரதிபலிப்பாகும். சமுதாயத்தின் பிரதான இரு பெரும் வர்க்கங்களுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டு சுரண்டுபவர் மற்றும் சுரண்டப்படுவோரிடத்திலிருந்தும் தொடர்ச்சியாக அது தன்னை வேறுபடுத்திக் கொண்டிருக்கும். இந்த வர்க்கங்களுள் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தையோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தையோ பின்பற்றுமாறு அது நிர்பந்திக்கப்படும்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஏகாதிபத்தியம் புதிய சமூகத் தட்டாக இனம் காணப்பட்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியதுடன், அதனைச் சார்ந்திருப்பதற்கும் முன்வந்தது. முன்னேற்றம் அடைந்த நாடுகளில் இது அரசு அதிகாரத்துவங்களில் மற்றும் கார்ப்பொரேட் அலுவலகங்களில் ஊழியராக்கப்பட்டவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நலன்சார் அரசுகளில் சமூகப் பணிகளை நிர்வகிப்பவர்கள் மற்றும் வளர்ந்துவரும் வெகுஜன தொடர்பு சாதனங்களை நடத்துபவர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட நாடுகளில் இதற்கு ஒப்பீட்டளவில் தோன்றிய தட்டினரிடம்தான், ஏகாதிபத்தியமானது காலனி ஆதிக்கத்தை அகற்றும்போது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட ஏனைய பகுதிகளைப்போல், இலத்தீன் அமெரிக்காவிலும் இந்த சமூகத் தட்டினருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கள், முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் அவர்களை ஒத்த-தட்டினரிடம் நிலவுவதை விட மிகவும் வரையறைக்குட்பட்ட அளவே இருந்தது. பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு, படிப்புத்துறைகளில் முன்னேற்றமின்றியிருந்தனர். பலவற்றில் தனிச்சிறப்புத் தேர்ச்சியை அடைய விரும்புபவர்கள் அல்லது சிறிய வாணிகம் மூலம் வாழ்க்கையை ஓட்ட முயற்சித்தவர்கள் சாதாரண தொழிலாளியை விட நல்ல வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தனர். இந்த சமூகத் தட்டுதான் இந்த நாடுகளில் குட்டி முதலாளித்துவ அரசியலின் பிரதான அடித்தளமாக இருந்தது.

ஆகையால் "புதிய உலக யதார்த்தம்" என்ற பப்லோவாத தத்துவங்களின் தோற்றத்திற்கான புறநிலையான வர்க்க அடிப்படை இருந்தது. அதில் சோசலிசத்துக்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தினாலும் அதன் நனவுபூர்வமான புரட்சிகர முன்னணிப்படையாலும் பொறுப்பெடுக்கப்பட முடியாது, மாறாக தீவிரமயப்பட்ட குட்டி முதலாளித்துவத்தினாலேயே பொறுப்பெடுக்கப்படமுடியும். இறுதியில் இந்த திருத்தல்வாத சூத்திரப்படுத்தல்கள், இந்த குறிப்பிட்ட சமூகத்தட்டின் முயற்சி, ஏகாதிபத்தியம் தனக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி அச்சுறுத்தலுக்கும் இடையில் இடைத்தடைக்கான ஏகாதிபத்திய தேவை ஆகிய இவ்விரண்டையும் பிரதிபலிக்கின்றன.

கியூபப் புரட்சியின் ஆணிவேர்

ஒவ்வொரு பெரிய நிகழ்ச்சியையும் போலவே, பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற புரட்சியும், முந்தைய வரலாற்று அபிவிருத்திகளில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. பப்லோவாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ இடதுகள் மற்றும் பப்லோவாதிகள் மத்தியில் காஸ்ட்ரோவின் புகழ்பாடும் தலைவர்களால் பொதுவாக அலட்சியம் செய்யப்பட்ட இவ்வரலாற்று காரணிகள், காஸ்ட்ரோயிசம் பற்றிய அரசியல் முக்கியத்துவத்தையும் வர்க்க உள்ளடக்கத்தையும் புரிதலுக்கு கட்டாயம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கியூபாவின் வரலாறு, முதன்மையாக விடுதலைப் போராட்டம் கருச்சிதைக்கப்பட்டதால் வடிவமைக்கப்பட்டது. அது அதனுடைய அந்தஸ்தை இறக்கும் தறுவாயில் உள்ள ஸ்பானிய காலனித்துவத்தின் உடைமையிலிருந்து எழுந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் காலனியாக சக்தி மிக்க வகையில் மாற்றியது.

1898ல் கியூபாவில் அமெரிக்கா தலையிட்டதை தொடர்ந்து முப்பது வருடங்களாக கியூப சுதந்திரத்திற்காக யுத்தம் நடந்தது. யுத்தம் குறுகியதாகவும் தீர்க்கமானதாகவும் இருந்தது. பாரிஸ் உடன் படிக்கையில் ஸ்பானியர் தங்களது காலனிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். உடன்பாட்டில் கியூபர்களுக்கு பங்கேற்பு இல்லை.

பிளாட் ஏற்பாட்டு குடியரசு (Platt Amendment Republic) எனப் பெயர் பெற்ற உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. சட்டவரைவை வரைந்த அமெரிக்க செனட்டரின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த சட்டம், முதலில் வாஷிங்டனில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முதல் கியூப அரசியல் அமைப்புடன் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. எந்தவித சர்வதேச உடன்படிக்கைக்குள்ளும் கியூபா நுழைவதை அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதும் தடையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அது இராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுவதற்கு உரிமையையும் கூட உத்தரவாதப்படுத்துகிறது. "கியூப சுதந்திரத்தைக் காக்க, வாழ்வை, சொத்தை மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க, போதுமான அளவு அரசாங்கத்தை பராமரிக்க மற்றும் பாரிஸ் உடன்படிக்கையால் திணிக்கப்பட்ட கியூபா தொடர்பான கடமைகளை நிறைவேற்ற" அமெரிக்க ஐக்கிய நாடுகள் இந்த "உரிமை"யை இந்த நூற்றாண்டு முதல் திரும்பத்திரும்ப பயன்படுத்தும் என உறுதி கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது கியூபா சார்ந்திருப்பது பிளாட் மாற்றுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள வெறுமனே மேலோட்டமான ஒன்று அல்ல. அது அமெரிக்க சந்தைக்கு கியூப சர்க்கரை ஏற்றுமதியில் தங்கியிருந்தது. இந்த ஒரு பயிரே தீவின் ஏற்றுமதிவருவாயின் பெருமளவைக் கணக்கில் கொண்டது மற்றும் பெரும்பாலும் சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கரும்பு மட்டுமே பயிரிடும் மனப்பான்மை பெரும்பான்மை மக்களை பின்தங்கிய நிலைக்கு, ஏழ்மைக்கு மற்றும் வேலையில்லா நெருக்கடிக்கு சபித்துள்ளது. கியூபாவில் நிலவும் அரசியல் சமூக உறவுகள் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டத்தின் முடிவுறாத பண்புடன் கட்டுண்டிருக்கிறது. உலகரீதியான முனைப்பாக இருப்பனவற்றுள் ஒன்றாக கியூபாவின் அரைக்காலனித்துவ அந்தஸ்து இருக்கின்ற அதேவேளை, அது எவ்விதத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்தது அல்ல.

இரண்டாம் உலகயுத்த நிகழ்வுமீதாக நான்காம் அகிலம் எச்சரித்த வாறாக: "தாமதமாக உருவான தேசிய அரசுகள் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியைப்பெறும் என இனியும் கருதமுடியாது. அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட மற்றும் ஏகாதிபத்திய முரண்பாடுகளில் சிக்கியுள்ள பின்தங்கிய அரசுகளின் சுதந்திரமானது, அரைப் போலியானதாக இருக்கும். மற்றும் அரசியல் ஆட்சியானது, உள்வர்க்க முரண்பாடுகள் மற்றும் வெளி அழுத்தத்தின் செல்வாக்கின்கீழ் தவிர்க்க வியலாத வகையில் மக்களுக்கு எதிரான சர்வதிகாரத்திற்குள் விழும்."

உலக சோசலிசப் புரட்சிக்கு வெளியில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரும் சாத்தியமில்லை என்று அறிக்கை சொல்லிச் செல்கிறது. "ஆகையால் காலனித்துவ மக்களின் விடுதலை பற்றிய நம்பிக்கைகள் ஒட்டுமொத்த உலகத் தொழிலாளர்களின் விடுதலையுடன் முன்பிருந்ததைவிட மிக அதிகமாகக் கட்டுண்டிருக்கிறது. முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் முதலாளித்துவ ஆட்சிக்கு முடிவுகட்டி, பின் தங்கிய நாட்டு மக்களுடன் சேர்ந்து, உலகப் பொருளாதாரத்தை ஏக போகங்களின் இலாபங்களுக்கு அல்லாமல், சமூகத்தேவைகளுக்காய் இயக்கும் புதிய மட்டத்திற்கு மறு ஒழுங்கு செய்யும் பொழுது மட்டும்தான் காலனித்துவ நாடுகள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் விடுதலை பெற முடியும்". நாம் பார்க்கின்றவாறு கியூபாவின் அடுத்தடுத்த வரலாறு இந்த ஆய்வை எதிர்மறையில் நிருபிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேசப் போராட்டம் இன்றி பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சார விடுதலை என்பது கொடுமையான நகையாடல் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் கியூபாவுக்கும் இடையில் உள்ள உறவு, திராணியற்றதற்கும் அதிக ஊழலுக்கும் மற்றும் அடிக்கடி கலவரங்கள் வெடிப்பதற்கும் பேர்போன முதலாளித்துவ அரசியல் அமைப்பு தோன்ற வழிவகுத்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மேலாதிக்கமானது. வர்த்தகம் மற்றும் நிலவுடைமை வர்க்கங்கள் இரண்டிலும் வெளிநாட்டுக் குடியேறிகளின் மேலாதிக்கத்துடன் சேர்ந்து கியூப தேசிய வாதத்தையும் கூட ஊட்டி வளர்த்தது. அது தவிர அமெரிக்க எதிர்ப்புவாதம் மற்றும் அதன் முயற்சியிலும் கூட பேர்போனதாக இருந்தது.

எவ்வாறாயினும் கியூபாவில் இன்னொரு முன்னோக்கும் தோன்றியது. 1925ல் கியூப கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாம் அகிலத்துடன் ஐக்கியம் கொண்டதாய் அமைக்கப்பட்டது. அதன்மிக முக்கிய மனிதன் ஜூலியோ அன்டோனியோ மெல்லா (Julio Antonio Mella) ஆவர். இவர் ஒரு சட்ட மாணவராக இருந்து, 1920களின் தொடக்கத்தில் பல்கலைக்கழக சீர்திருத்த இயக்கத்தின் தலைவராக ஆகி, தொழிலாள வர்க்கம் பக்கம் திரும்புவதற்கு முயற்சித்தவர்.

மெல்லாவும் அவர் தோழர்களும் ஜெரார்டோ மச்சாடோவின் (Gerardo Machado) சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். அவர் மச்சாடோவை "வெப்ப மண்டலத்து முசோலினி" என்றழைத்தார். அவர் சர்வாதிகாரர்களால் சிறையிடப்பட்டு, பொது மக்களின் அழுத்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். பின்பு சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும், இறுதியாக மெக்சிகோவுக்கும் பயணம் செய்தார்.

மெல்லா 1929ல் மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முறித்துக் கொண்டு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்திற்கான அவரது ஆதரவை பிரகடனம் செய்தார். அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கான குற்றம், மச்சாடோ சர்வாதிகாரத்தின் மேல் சுமத்தப்பட்ட அதேவேளையில், தாக்குதலுக்கு உண்மையான காரணகர்த்தாக்கள் ஸ்ராலினிஸ்டுகள் என்ற பரவலான சந்தேகமும் நிலவியது.

தீவின் ஊழல்நிறைந்த அரசியல் அமைப்பையும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செய்யப்படுவதையும் மாற்றுவதற்கு முயற்சித்த கியூப மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பரந்த இயக்கத்திலிருந்து மெல்லா உருவாகியிருந்தார். எவ்வாறாயினும் அவர் அங்கு நிலவிய தேசியவாத கருத்துருக்களை கைவிட்டு, சோசலிச சர்வதேசியத்தின் முன்னோக்கை ஏற்றுக்கொண்டார்.

அத்தகைய முன்னோக்கின் அடிப்படையில், கியூபாவின் வரலாற்றுப் பிரச்சனைகளுக்கான அதன் சொந்தத்தீர்வை தொழிலாள வர்க்கம் வழங்குவதை ஸ்ராலினிசம் தடுத்தது. ஆகையால் பிடல் காஸ்ட்ரோவும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த சக்திகளாக கருதப்படும் முன்னரே, "பிடல் காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்துக்கு வர ஸ்ராலினிசம் உதவியது. மெல்லாவும் கியூப மார்க்சிஸ்டுகளின் முதல் தலைமுறையும் போராடிய முன்னோக்கை நசுக்குவதன் மூலம், ஸ்ராலினிசம் தீவிர குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் வளர்ச்சியை முன்னுக்கு கொண்டு வந்தது.

இந்தப் பள்ளியில் முதல் சொற்பொழிவின்போது, தோழர் நோர்த், வரலாறு "என்ன நிகழ்ந்தது" மற்றும் "யார் வென்றது" என்பதை வெறுமனே கொண்டிருக்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் என்ன மாற்றீடுகள் மிஞ்சியிருந்தன. அதன் விளைவுகள் இடம் பெற்றனவா? இடம் பெறவில்லையா? இடது எதிர்ப்பு நிலை கொண்டிருந்திருக்குமானால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்ற கேள்விகளுடன் குறிப்பிட்ட அளவுக்கு விளக்கியிருந்தார். இதே கேள்வி சிறிய அளவிலாயினும் கியூபா தொடர்பாகவும் முன் வைக்கப்பட்டது. என்ன நிகழ்ந்திருக்கலாம் என நாம் கவனமாகக் கூறுவதற்கு அங்கு வரையறைகள் உள்ளனதான். உதாரணமாக கியூபாவில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருந்தால் புரட்சி இந்த விதம் நடந்திருக்கும் என ஒருவர் எந்த உத்தரவாதத்திற்கும் உறுதி கூற முடியாது. எவ்வாறாயினும் அங்கு கியூப தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர கட்சி இருந்திருந்தால், கியூப ஸ்ராலினிச ஊழல் அரசியல் சாதனத்துக்கு எதிராக, குறிப்பாக காஸ்ட்ரோயிசம் எனும் போக்கு தோன்றுதல் சாத்தியமில்லாது இருந்திருக்கும் என நாம் உறுதியாகக் கூறமுடியும்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச சீரழிவின்போது நாடு ஆழமான புரட்சிகர நெருக்கடிக்குள் சென்று கொண்டிருந்தது. 1933ல் நாடு முழுவதும் வெடித்த எழுச்சியானது, மச்சாடோ சர்வாதிகாரியை நாட்டைவிட்டு ஓடுமாறு நிர்ப்பந்தித்தது. இந்த இயக்கத்தின் உச்சக்கட்டம் தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தம் தொழிற்சாலைகள், கரும்பு ஆலைகள் மற்றும் எஸ்டேட்டுகளைக் கைப்பற்றுதலைக் கண்டது.

பொதுவேலை நிறுத்தம் தீவிரமாகவும் பரந்த அளவிலும் வளர்ந்தபோது, சங்கங்களில் மேலாதிக்கம் செய்து கொண்டிருந்த கியூப கம்யூனிஸ்ட் கட்சி, வேலைநிறுத்தம் அமெரிக்கத் தலையீட்டை தூண்டுவதாய் பிரகடனம் செய்து கொண்டு, திரும்பவேலைக்குச் செல்லுமாறு ஆணைகளைப் பிறப்பித்தது. பெரும்பான்மை தொழிலாளர்கள் ஆணையை அலட்சியம் செய்தவேளை, கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறாயினும் வெளிநடப்புச் செய்வதை முடிவுக்கு கொண்டு வரும் பாத்திரத்துக்கு கைமாறாக, கட்சிக்கு சலுகை பெறும் விதமாக மச்சாடோவுடன் இரகசியப் பேச்சு வார்த்தைக்குள் நுழைந்தது. மச்சாடோ புலம் பெயர்ந்து பறந்தோடியதன் காரணமாக குறைந்த காலம் மட்டுமே இருந்த இந்த பேரம், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் வடிவத்தை அமைக்க இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் பழமைவாத முதலாளித்துவக் கட்சிகளுடனும் இராணுவ ஆட்சிகளுடனும் கூட வரிசையாக கூட்டுக்களை வடிவமைத்த அதேவேளை, தொழிலாளர் இயக்கத்தில் தங்களின் மேலாண்மையை தொடர்ந்து கொண்டிருந்தனர். 1940களில் ஸ்ராலினிஸ்ட்டுகள் அமெரிக்க ஆதரவு பாட்டிஸ்டா (Batista) அரசாங்கத்தில் நுழைந்தனர்.

காஸ்ட்ரோவும் காஸ்ட்ரோயிசமும்

ஸ்ராலினிசம், வலதுசாரி கட்சிகளுடனும் சர்வதிகாரத்துடனும் கொண்ட கூட்டுறவுக்காக கண்டனத்தை பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூகப் புரட்சி பற்றிய வாய்ச்சவடால்கள், வரவர தீவிரமயப்படுத்தப்பட்ட நடுத்தர வர்க்கத்தின், தேசியவாத சக்திகளின் ஏகபோகமாக ஆனது; குறிப்பாக ஹவானா பல்கலைக்கழகத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த சூடான சூழலில்தான் பிடல் காஸ்ட்ரோ அவரது தொடக்கத்தை ஆரம்பித்தார்.

ஸ்பானிய நில உடமைக் குடும்பத்தில் பிறந்த காஸ்ட்ரோ, ஜெசுய்ட் உயர்நிலைப் பள்ளியில் மாணவப் பருவத்திலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். அங்கு அவர் பிராங்கோவின் பாசிசத்துக்கு ஆதரவளித்த ஸ்பானிய மதகுருக்களின் செல்வாக்கிற்கு ஆளானார். அவரது வகுப்புத் தோழர்களின் கருத்துப்படி, அவர் ஸ்பானிய பலாஞ்சிஸ்ட் கட்சியின் நிறுவனரான ஜோசே அன்டனியோ பிரிமோ டிரிவேரா (Jose Antonio Primo de Rivera) எழுத்துக்களை படித்து, பாசிச சித்தாந்தம் பால் ஈர்க்கப் பெற்றார். நாற்பது மற்றும் ஐம்பதுகளில் பல்கலைக் கழகங்களில் மேலாதிக்கம் செலுத்திய ஆயுதம் தாங்கிய மாணவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்தக் கும்பல்களின் சித்தாந்தம் தேசியவாதம் மற்றும் சிறப்பாக கம்யூனிச எதிர்ப்பாக இருந்தது.

பாட்டிஸ்டாவுக்கு எதிரான போராட்டத்தில், காஸ்ட்ரோ முதலாளித்துவ கட்சியான ஆர்டோடோக்சோ கட்சியின் வேட்பாளராக நின்றார். ஆனால் அந்த ஆண்டு பாட்டிஸ்டாவின் ஆட்சிக் கவிழ்ப்பு அவரது பாராளுமன்ற விருப்பங்களுக்கு தடை ஆயிற்று. அதன்பின் அவர் ஆயுதம் ஏந்திய நடவடிக்கைக்காக தனது பின்பற்றாளர்களின் சிறு குழுவைத் தொடங்கினார். 1953 ஜூலையில் மோன்கடா இராணுவக் குடியிருப்பு பகுதியின் மீது நடந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். அதில் பங்கேற்ற இருநூறு பேர்களும் ஒன்றில் கொல்லப்பட்டனர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர்.

காஸ்ட்ரோவின் நடவடிக்கைகள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக இல்லை. இந்தக் காலகட்டம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ பிரிவுகளின் ஆட்கள், கோட்டை காவற்படையினர் மீதான தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள் மற்றும் பாட்டிஸ்டா அரண்மனையை முற்றுகையிடவும் கூட செய்தனர். 1959 புரட்சிக்கு இட்டுச் சென்ற இந்தக் காலகட்டத்தில் காஸ்ட்ரோவின் அரசியல் அறிக்கைகளில் ஒரு சிலவே பாட்டிஸ்டா எதிர்ப்பு கியூப தேசியவாத அரசியலிலிருந்து அவரை வேறுபடுத்துவதாக இருக்கின்றன. அவரது மிகப்புகழ்பெற்ற உரை "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்பதாகும். மொன்கொடா தாக்குதல் பற்றிய வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தயாரிக்கப்பட்ட அவ்வுரை, சர்வாதிகாரியின் ஒடுக்குமுறைகளைக் கண்டனம் செய்தல் மற்றும் ஒழுங்கான இறுதியான, ஜனநாயக சீர்திருத்தங்களின் பட்டியலைக் கொண்டிருந்தது.

சிறிய சிறைத்தண்டனைக்குப் பின், காஸ்ட்ரோ மெக்சிகோவுக்குச் சென்று, 1956ன் முடிவில் 80 ஆயுதம் ஏந்திய ஆட்களுடன் கியூபாவில் இறங்குவதற்கான தயாரிப்பைச் செய்தார். மொன்காடாபோல், பாடிஸ்டாவின் அடக்குமுறை இராணுவங்களுடன் முதலாவது மோதலில் வெறுமனே 12 பேர் மட்டுமே எஞ்சினர். இருப்பினும் பின்னர் இரண்டே ஆண்டுகளில் காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

ஆட்சி அதிகாரம் நேரடியாக காஸ்ட்ரோவின் கெரில்லாக்களின் கைகளில் விழுந்தது ஏனெனில் அந்தத் தீவில் அரசியல் ரீதியாக செல்வாக்குப்பெற்ற சக்திகள் வேறெவரும் இல்லை. கியூபத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையின்மை உட்பட எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் வெற்றிடம்தான் நிலவியது. காஸ்ட்ரோவின் சீர்திருத்தவாதம் என்ன மட்டுப்படுத்தல்கள் இருப்பினும், அவரது சமுக கொள்கைகள், ஸ்ராலினிஸ்டுகளால் முன்வைக்கப்பட்டவற்றைக் காட்டிலும் அதிக தீவிரமானவையாக இருந்தன. மேலும் அவரது ஆயுத நடவடிக்கைகள், அவை ஒரு வரையறைக்குட்பட்டிருந்தபோதும், கியூப ஸ்ராலினிஸ்டுகள் சர்வாதிகாரத்துக்கு உடந்தையாய் இருந்ததாக காணப்பட்ட பொழுது, அவை மக்களின் ஆதரவை அந்நேரம் பெற்றன. காஸ்ட்ரோவின் தொடக்கம் முதலேயான உள் நோக்கங்கள், அமெரிக்க ஐக்கிய அரசுகளுடன் ஒத்துப்போவதை அடையக்கூடியதாக இருந்தன. ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு முதன்முதல் சென்றபோது அவர் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நான் கூறியிருக்கிறேன். கியூபாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு தனியார் மூலதனத்திற்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய அரசுகளுடன் புரிந்துணர்வை அடையமுடியவில்லை என்றால் முன்னேற்றத்தை அடைவது என்பது முற்றிலும் இயலாததே".

கியூப மக்கள் நன்மை பெற காஸ்ட்ரோவின் இயக்கம் வரையறைக்குட்பட்ட விவசாய மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஆரம்ப மாதங்களில் அது பயன்படுத்தப்படாத நிலங்களை மறுவிநியோகம் செய்தது; வாடகைகளில் குறைப்பை செய்தது; கூலிகளில் அதிகரிப்பைச் செய்தது; கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவற்றில் எதனையும் வாஷிங்டன் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய அரசுகள் காஸ்ட்ரோவை அப்பட்டமான பொருளாதார அழுத்தத்தின் மூலம் வழிக்குக் கொண்டுவர விரும்பியது. கியூப அரசாங்கத்துடன் மோதலைக்கொண்டதில், அது கியூபாவின் பொருளாதார உயிர் மூச்சான சர்க்கரை ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை வெட்டியது, பிறகு எண்ணெய் வழங்கமறுத்தது. பதிலுக்கு கியூப அரசாங்கமானது, முதலில் அமெரிக்க சொத்துக்களை தேசியமயமாக்கியது.

பின்னர் கியூபர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் தேசியமயமாக்கியது. அது சோவியத் அதிகாரத்துவத்தின் பக்கம் உதவிக்காகவும் திரும்பியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கொள்கை கடுமையான தத்துவார்த்த விதமாகவும் பழிக்குப்பழி வாங்குவதாகவும் இருந்தது. பிரிட்டன் மிகவும் வேறுபட்ட வகையில் அதே அபிவிருத்தியைக் கைக்கொண்டிருந்தது. என்க்ரூமா, காண்டா மற்றும் கென்யாட்டா போன்ற ஆபிரிக்க தலைவர்கள் தங்களின் தீவிர மற்றும் சோசலிச வாய்ச்சவடால் இருந்தும் கூட அதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் செல்வாக்கையும் பாதுகாத்தனர். அமெரிக்க ஐக்கிய அரசுகளின் இறுமாப்பு மற்றும் முட்டாள்தனம் கடந்த நாற்பது ஆண்டுகளாக காஸ்ட்ரோவின் ஆட்சிக்கான பிரதான தூண்களாக இருந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அவரை கியூப தேசியவாதத்தின் அங்கமாகக் காட்டிக்கொள்ள அனுமதித்தது மற்றும் வருகின்ற எந்த எதிர்ப்பினையும் ஏகாதிபத்தியத்தின் கருவி எனப் பட்டம் சூட்ட வைத்தது.

மாஸ்கோவின் பக்கம் திரும்பியதுடன், காஸ்ட்ரோ கியூப ஸ்ராலினிஸ்டுகளுடனும் கூட்டை உருவாக்கிக் கொண்டார். இந்த நகர்வு புரட்சியின் தீவிரமயமாக்கலின் மற்றும் அதன் சோசலிசத் தன்மையின் கூடுதலான அறிகுறி என பப்லோவாதிகளாலும் பொதுவாக குட்டி முதலாளித்துவ இடதுகளாலும் வரவேற்கப்பட்டது. ஆனால் அது அந்தவகையானதாக எதுவுமில்லை. நாம் பார்த்தவாறு, கியூபாவின் வெகுஜன சோசலிஸ்ட் கட்சி [Popular Socialist Party] அப்போது ஸ்ராலினிஸ்டுகளாக அறியப்பட்டவர்களைப்போல், முழுமையாக பிற்போக்கான மற்றும் செல்வாக்கிழந்த அரசியல் சக்தியாக இருந்தது. அது கியூபாவில் அப்போதிருந்த முதலாளித்துவ அமைப்பின் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியது, பாட்டிஸ்டா ஆட்சிக்கு மிக விசுவாசமாக சேவையும் செய்தது.

தானே எதிர்பாராத விதமாய் ஆட்சியதிகாரத்துக்கு தள்ளப்பட்ட காஸ்ட்ரோ, திட்டவட்டமான தேவைக்காக வெகுஜன சோசலிஸ்ட் கட்சி பக்கம் திரும்பினார். அவருக்கு கட்சியோ, வேலைத் திட்டமோ உண்மையான ஒரு இராணுவமோ கூடக் கிடையாது. கியூப ஸ்ராலினிஸ்டுகள் அவருக்கு சாதனத்தை சித்தாந்தத்துடன் வழங்கினர். அதன் மூலம் அவரால் ஆட்சி செய்ய முடிந்தது. காஸ்ட்ரோ அதன் பின்னர் அவரது கடந்தகால அரசியலில் தான் "முழு நிறைவற்ற" கம்யூனிஸ்டாக இருந்த போதும், பாட்டிஸ்டா ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னரே "மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்" ஆகியிருந்ததாக பிரகடனம் செய்தார். உரைநடையில் குறிப்பிட்டிருந்த தன் வாழ்நாளை முழுவதும் மகிழ்வாய் வைத்திருக்க கற்றுக்கொண்ட, முதலாளித்துவ கனவானான மோலியர்சின் விளக்கத்தை நினைவு கூர வேண்டும். அதுபோலவே ஃபிடல் காஸ்ட்ரோ அவரது வாழ்நாள் முழுவதும் மார்க்சிசத்தைப் பேசியிருந்தார் என்று கண்டுபிடித்தார். ஆகையால் தற்செயலாக தான் ஆட்சிக்கு வந்தபின்பே, அதுபற்றி கவனத்தில் கொண்டார். பல்கலைக்கழகத்தில் ஆயுதம் ஏந்திய கம்யூனிச எதிர்ப்பு கும்பலுடன் அவரது நாட்கள் தொடங்கி முதலாளித்துவக் கட்சிக்கான காங்கிரசின் வேட்பாளராக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது வரையிலான அவரது அரசியல் சாதனைகள், சோசலிசப் புரட்சிக்கான நிபந்தனைகளை தயாரிக்கும் நோக்கத்திற்கான வெறுமனே செயல்தந்திர முன்முயற்சியாக மறுஜோடனை செய்யப்பட்டது.

காஸ்ட்ரோவும் அதேபோல் ஏனைய இடது முதலாளித்துவ தேசியவாதிகளும் "மார்க்சிச லெனினிசத்தில்" என்ன கண்டார்கள்? தெளிவாகவே, அவர்கள் தொழிலாள வர்க்கம் தனது சொந்த சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துக்கு வழிகாட்டும் விஞ்ஞான முன்னோக்கை நாடவில்லை. அதேபோல அது மாஸ்கோவிடமிருந்து ஆதரவை வென்றெடுக்கும் இலக்கைக் கொண்ட ஒரு நடிப்பைவிட அதிகமாகும். அவர்கள் ஸ்ராலினிஸ்டுகளிடமிருந்து கற்றுக் கொண்ட மார்க்சிச லெனினிசம் என்பதனை, அரசினைப் பயன்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் விரும்பும் மாற்றங்களைச் செய்ய முடியும் என்று முன்னிறுத்தும் கொள்கையாகக் கண்டனர்.

மாற்றமுடியாத மற்றும் நெறிதவறும் தேசியத் தலைவரால் தலைமை தாங்கப்படும், என்றென்றைக்குமான புரட்சிக் கட்சியின் மூலம் அரசின் மீதான தங்களின் சொந்தத் தடையற்ற கட்டுப்பாட்டை நியாயப்படுத்துதலையும் கூட, அதில் அவர்கள் கண்டு கொண்டனர். ஸ்ராலினிசத்திடமிருந்து கற்றுக் கொண்டதன் அடிப்படையைத்தான் சியாங்கேஷேக் தனது கட்சியான கோமிண்டாங்கிற்கு மாதிரியாகக் கொண்டார் என்பதை நினைவுகூர வேண்டும்.

கெரில்லாயிசத்தின் கட்டுக்கதை

யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தோன்றிய எல்லா தேசிய மையங்கள் மற்றும் போக்குகள் போல், உண்மையில் காஸ்ட்ரோயிசமும் அதன் தோற்றங்கள் மற்றும் வளர்ச்சி பற்றிய தொகையறா கட்டுக்கதைகளின் மேல் தங்கியிருக்கிறது. அத்தகைய கதையளப்பு இந்த அமைப்புகளின் வர்க்கத் தன்மையை கொடுப்பது தவிர்க்க முடியாதது. இவை குட்டி முதலாளித்துவ மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் மேல் தங்கி இருந்து கொண்டு, அதேவேளை தாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறுகின்றன.

ஆட்சிக்கு வந்த பின்னர் காஸ்ட்ரோவும் அவரது பின்பற்றாளர்களும் தங்களது வெற்றியை சியரா மயேஸ்ற்றா மலைகளில் (Sierra Maestra mountains)  கெரில்லாக்களால் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் சிறப்பான விளைவு என்று உருவகித்துக் காட்டுகிறார்கள்: திண்ணிய எண்ணம் மற்றும் தீர்மானத்தின் மூலம் ஏகாதிபத்தியத்தையும் தேசிய முதலாளித்துவத்தையும் இராணுவ ரீதியாக வென்றனர் என்று, பாட்டிஸ்டா (Batista) சர்வாதிகாரியைத் தூக்கிவீசிய பின்னர் ஒருமாதமே கழித்து சேகுவாரா எழுதினார்: "மக்களால் ஆதரிக்கப்பட்ட உறுதியுடைய மற்றும் இறப்பதற்கு அஞ்சாதவர்களைக் கொண்ட சிறிய குழு நிரந்தர இராணுவத்தை வெற்றி கொள்ள முடியும் என்று நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம். (இலத்தீன்) அமெரிக்காவில் உள்ள நமது சகோதரர்களுக்கு இன்னொரு படிப்பினையும் உண்டு. நம்மைப்போலவே பொருளாதார ரீதியாக அதே விவசாய வகையினங்களில் நாம் கட்டாயம் விவசாயப் புரட்சி செய்ய வேண்டும். வயல் வெளிகளில், மலைகளில் போராட வேண்டும் மற்றும் இங்கிருந்தே புரட்சியை நகரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்". பின்னால் செய்வதற்கு முயற்சிக்கக் கூடாது.

இந்த கியூப் புரட்சியின் அதிகாரபூர்வ விளக்கமானது. சம்பவங்கள் பற்றிய தீவிர திரித்தல்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பாடிஸ்டாவின் ஆறு ஆண்டுகால ஆட்சியில் 20,000 கியூபர்கள் அரசாங்கத்தின் கரங்களில் உயிரைவிட்டனர். இவற்றுள் 19,000 பேர்கள் கியூப நகரங்களில் கொல்லப்பட்டனர். நிர்மூலமாக்கல், அரசியல் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஏனைய எதிர்ப்பு வடிவங்களில் பெரும்பான்மையானவை காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் நடந்தன. அவை பரந்தளவில் விரிந்து பரவின மற்றும் இறுதியில் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய தூண்டுவிசையை வழங்கின.

காஸ்ட்ரோவின் கெரில்லாக்கள் பெரும்பாலும் சில ஆயிரம் பேர். அங்கு முடிவுகாணும் இராணுவ யுத்தங்கள் இல்லை. பெரிய நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்களே 200 கெரில்லாக்களுக்கு மேல் இல்லை. பாடிஸ்டா, கியூப முதலாளித்துவ வர்க்கம், வாஷிங்டன் ஆகிய இரண்டின் ஆதரவையும் இழந்தார். கியூப முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பான்மை பகுதியினர் காஸ்ட்ரோவை ஆதரித்தனர். வாஷிங்டன் பாடிஸ்டா அரசாங்கத்தின் மீது ஆயுதப்படை ஆணையைத் திணித்து இந்த ஆதரவினை இல்லாததாக்கியது. இது விரைவாய் அதனை சிதறுண்டு போகவைத்தது.

கியூபாவிற்குள் திடுதிப்பென துடுக்குத்தனம் மற்றும் இராணுவ வீரம் மூலம் காஸ்ட்ரோவின் கெரில்லாக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்தை தோற்கடித்தனர் என்ற கட்டுக்கதை, திட்டவட்டமான அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்தது. அது அனைத்து ஆட்சி அதிகாரத்தையும் போட்டியிட முடியாதவகையில் காஸ்ட்ரோவின் கைகளில் குவித்தது. அரசாங்கத்தை கெட்டிப்படுத்துவதை நியாயப்படுத்தியது.

காஸ்ட்ரோவாலும் சேகுவாராவாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டுக்கதை பேரழிவுகரமான விளைவுகளுடன் ஏற்றுமதி செய்யப்படவிருந்தது. கியூப பாதை எனப்படுவது, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரே சாத்தியமான வடிவம் என பரப்பப்பட்டது. அரசாங்கங்களைத் தூக்கிவீசவும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு முடிவுகட்டவும் தேவையானது, துணிவும் ஒரு சில துப்பாக்கிகளும் என்ற உறுதி மொழியால் ஆயிரக்கணக்கான இலத்தின் அமெரிக்க இளைஞர்கள் படுகொலை செய்வதற்கு வழிவகுக்கப்பட்டனர்.

சேகுவராவின் பிரபலமான எழுத்துப் படைப்பான "குவேரா டி கெரில்லாஸ்" (Guerra de Guerrillas) அல்லது கெரில்லா யுத்தம் என்பது இந்த மங்கிப்போன மூலோபாயத்துக்கான கை புத்தகமாக சேவை செய்தது. அது "அமெரிக்காவில் புரட்சிகர இயக்கங்களின் உத்திகள்" (mechanics of revolutionary movements in America) இற்கான கியூப மூன்று அனுபவத்தின் பெரும் படிப்பினைகள் என அவர் விவரித்துள்ளவற்றை தொகுத்துரைக்கிறது.

1. இராணுவத்துக்கு எதிரான யுத்தத்தில் மக்கள் படைகள் வெல்ல முடியும்.

2. புரட்சியை செய்ய அனைத்து நிபந்தனைகளும் அத்தியாவசியமானதல்ல, உயிர்த்தெழும்போதே (கெரில்லா அணியின் பதம்) அதனை உருவாக்க முடியும்.

3. வளர்ச்சி பின்தங்கிய அமெரிக்காவில் ஆயுதப்போராட்ட தளப்பகுதி பிரதானமாக நாட்டுப்புறத்தில் தான் கட்டாயமாக இருக்கவேண்டும்.

இந்த எழுத்துக்கள் கொண்டிருக்கும் சிறிதளவேயான அரசியல் ஆய்வு என்னவெனில் தீவிரவாத போலி ஆகும். இலத்தீன் அமெரிக்காவின் வளர்ச்சிப்பாதை பல ஆண்டுகளாக முதலாளித்துவ பாதையாக இருந்து வந்தது. இலத்தீன் அமெரிக்காவில் ஒடுக்கு முறைக்கான முக்கிய அடித்தளம் சேகுவாரா கூறுவதுபோல் மிகச்சிறுபான்மையினர் கைகளில் நிலம் குவிந்துகிடக்கும் லத்திபுண்டியா (Latifundia) அல்ல, மாறாக கூலி உழைப்பு மற்றும் இலாபம் பற்றிய முதலாளித்துவ உறவுகள் ஆகும். இவை எழுதப்பட்டுக் கொண்டிருந்த போதுகூட இக்கண்டமானது பெரும் கட்டமைப்பு மாறுதல்களூடாக சென்று கொண்டிருந்தது. மக்கள் தொகை மேலும் பாட்டாளிமயமாதலாகி இருந்தன மற்றும் கிராமப்புறப் பகுதியிலிருந்து நகரங்களுக்கு மக்கள் புலம் பெயர்தலுக்கு இட்டுச் சென்றது.

இவற்றுள் ஒன்று கூட ஆய்வு செய்யப்படவில்லை. புரட்சிகர தயாரிப்பு கெரில்லா யுத்தத்துக்கு பொருத்தமான கிராமப்புற பகுதிகளை பொறுக்கி எடுக்கும் பதிவுவாத நிகழ்வுப்போக்காக குறைக்கப்பட்டது. இந்த அறிவுரையை பின்பற்றுபவர் காடுகளிலும் பின்னே உள்ள பிரதேசங்களிலும் இலத்தின் அமெரிக்க இராணுவத்துடன் தனி ஒருவராக மோதுவதற்கு விடப்பட்டவராக சிக்கிக் கொள்வதில் முடிந்தது.

சேகுவாராவின் அரசியலில் மீண்டும் வெளிப்படுவது தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர வர்க்கம் என்பதை நிராகரித்தல் மற்றும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் அரசியல் ரீதியாய் நனவு கொண்டு விடுதலைக்கான தங்களின் சொந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதின் திறமையை புறக்கணிப்பதாகும். அவர் நாட்டுப்புறத்தை ஆயுதப் போராட்டத்துக்கான ஒரே சாத்தியமான இடமாக முன்மொழியும் அதேவேளை, விவசாயிகளை சமூக கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டும் விஷயமாக அது இல்லை.

சே இன் கருத்துரு "பலாத்காரத்தை அடைவதற்கு சர்வாதிகாரத்துக்கு கடன்படல், அதன்மூலம் பிற்போக்கு சமூக வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை அதன் உண்மை இயல்பினை முகத்திரை கிழித்தல்". வேறு வார்த்தைகளில் சொன்னால் கெரில்லா குழுவின் இலக்கு விவசாயிகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை கிளறிவிடல். விவசாயிகள் அதற்குப் பதிலாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பார்கள்.

அத்தகைய போராட்டத்துக்கு தத்துவமும் தேவையில்லை, அரசியலும் தேவையில்லை. தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகக்குறைந்த தலையீடே தேவையானதாகும். இலத்தீன் அமெரிக்காவில் கெரில்லா குழுக்களைக் கட்டுவது தொடர்பாக சேகுவாரா கூறுகையில், அவை அனைத்து அரசியல் மாறுபாடுகளையும் கலந்துரையாடலையும் தவிர்க்க வேண்டும் என்றும் ஒற்றுமையானது ஆயுதப் போராட்ட செயல்தந்திரத்தின் உடன்பாட்டினை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குவாரா இசத்தின் பெரும் தோல்வி

விளைவுகள், கணித்தவாறு துன்பகரமானவையாக இருந்தன. தான் பிறந்த ஆர்ஜென்டினாவில் பத்திரிகையாளரான ஜோர்ஜ் மாசெட்டி (Jorge Masetti) தலைமையின் கீழ் முதல் கெரில்லா குழுவை `சே` அமைத்தார். சே இன் வாழ்க்கை வரலாற்றில் இப்பெரும் தோல்வியின் குறிப்பாக நெஞ்சை உறைய வைக்கும் விஷயங்களை ஆண்டர்சன் தருகிறார். கெரில்லாக்கள் ஒருபோதும் எதிர்த்து போராடிப் பார்க்கவில்லை. சிலர் இறந்தனர் மற்றம் சிலர் காட்டில் பட்டினியால் இறந்தனர். மற்றவர்கள் போலீசுகளின் கைகளில் மாட்டினர். பெரும்பகுதி அழிவதற்கு முன் எவ்வாறாயினும் மாசெட்டி தனது மூன்று உறுப்பினர்களுக்கு ஒழுங்கீன குற்றத்தின் பேரில் மரண தண்டனை விதித்து ஆணையிட்டார். தண்டிக்கப்பட்ட மூன்று பேருமே யூதர்கள் என்று இந்த நெருக்கடியில் தப்பிப்பிழைத்த ஒருவர் குறிப்பிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். மாசெட்டி காஸ்ட்ரோயிசத்துடன் கூட்டு வைத்துக்கொள்ளும் முன்னர், ஆர்ஜென்டினாவில் அதிதீவிர வலதுசாரி தேசியவாத மற்றும் யூத எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது கண்டறியப்பட்டது.

சேயின் சொந்த குழு, பொலியாவிலும் இதே முடிவை எய்தியது. அவரது செயல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அந்நாட்டில் இருந்த சமூக மற்றும் அரசியல் நிலைபற்றிய அவரது முழுமையான அக்கறையின்மையாகும். 1951ன் பொலிவிய புரட்சியில் மிகவும் சக்திமிக்க அணியாகிய டின் (Tin) சுரங்கத் தொழிலாளர்கள், சே அந்நாட்டுக்கு வருகை தந்தபோது முந்திய மாதங்களில் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்ததுடன் இராணுவத்துடனும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அவரது நாட்குறிப்பில் அவர் இந்நிகழ்வுகளை தனது சொந்த நடவடிக்கைக்கு பின் நிகழ்வாக மட்டுமே குறித்துள்ளார். பொலிவிய தொழிலாளர்களுக்கு முன்வைப்பதற்கு அவருக்கு முன்னோக்கோ அல்லது கொள்கையோ கிடையாது. பொலிவிய விவசாயியைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டங்களை தொடங்குதலுக்கான எதிர்ச்செயல். கெரில்லாக்களை ஆதரிப்பதாக இல்லை, மாறாக அவர்கள் இராணுவம் பக்கமே திரும்பினர்.

பொலிவியாவில் காஸ்ட்ரோவாதிகள் மாஸ்கோ ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை கணக்கிட்டனர். இந்த ஆதரவு ஒருபோதும் கைகூடவில்லை மற்றும் பெரும்பாலானோர் ஸ்ராலினிஸ்டுகளையும் மாஸ்கோ அதிகாரத்துவத்தையும் கெரில்லாக்களையும் கண்டித்து முழுமையுமாய் தனிமைப்படுத்தினர் என்றும் சே இன் இருப்பிடம் பற்றிய தகவல்களைக்கூட அவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு வழங்கியிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டினர்.

இது நம்பக்கூடியதாக இருக்கிறது. பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலதிபர் மோஞ்சி (Monje) ஏறக்குறைய ஒரு கே.ஜி.பி. மனிதர். சேகுவாராவின் இறப்புக்கு பின்னர் உடனே மாஸ்கோவில் நிரந்தர வசிப்பிடம் பெற்று சென்றுவிட்டார். கேஸ்டாநிடாசின் (Castaneda) வாழ்க்கை வரலாற்றில் இருந்து வெளிப்படுவதாவது, இலத்தீன் அமெரிக்காவின் பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திலும், 1940-ல் ட்ரொட்ஸ்கியின் படுகொலைகளில் நேரடிப்பாத்திரம் வகித்தவரைப் போன்ற ஆட்கள் பலபேர் பிரத்தியேக மேலாதிக்கம் செய்து கொண்டிருந்தனர் என்பது தான். அவர் சோவியத் ஆவணக் காப்பகத்தின் இரகசிய பத்திரங்களினூடாக இதனை, அதாவது எப்படி இந்தக் கட்சி மாஸ்கோவிலிருந்து நேரடி உதவிக்கொடை மூலம் நிதியூட்டப்பட்டது என்று நிறுவினார். சோவியத் அதிகாரத்துவம் நம்பகமான அரசியல் ஏஜண்டுகளுக்கு நிதியுதவி செய்தது. அதன் நோக்கம் வாஷிங்டனுடனான சமாதான சகவாழ்வுக்கான அதன் சொந்த வேட்கையாகும்.

முடிவில் அத்தகைய காட்டிக் கொடுப்பு உண்மையில் தேவையில்லாதது என்ற ஒன்றுடன் விடப்பட்டுள்ளது. அரசியல் முன்னோடிகள் இல்லாமல், ஆதரவை வென்றெடுக்க முன்னோக்கு இல்லாமல், இரண்டு டஜன் ஆயுதம் ஏந்திய ஆட்களை அப்பிராந்தியத்தில் கொண்டுவருவதால் புரட்சியைச் செய்யலாம் என்ற கருத்து எடுத்த எடுப்பிலேயே அழிந்து போனது. அவரது கடைசி நாட்களில் பொலிவிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டதும், சேகுவாரா, பேட்ரண்ட் ருஸ்ஸல் (Bertrand Russell) மற்றும் ஜோன் போல் சாத்தர்  (Jean Paul Sartre) ஆகியோருக்கு கடிதங்களை விடுப்பதன் மூலம் சர்வதேச ஆதரவை வேண்டுவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த சாகசத்தின் துன்பகரமான தன்மையின் அளவீடு இதுதான்.

கியூபாவும் நான்காம் அகிலமும்

நான்காம் அகிலத்தின் வரலாற்றில், கியூப புரட்சி ஒரு தீர்க்கமான திருப்புமுனை என நிரூபிக்கப்படவிருந்தது. அமெரிக்க பகுதியான சோசலிச தொழிலாளர் கட்சி, முதலாளித்துவ தேசிய வாதம் மற்றும் ஸ்ராலினிசத்துக்கு தன்னை மாற்றி அமைத்துக் கொண்ட சந்தர்ப்பவாத போக்கான பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரத்தை ஆற்றியது.

1953-ல் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை வகித்தபின், ஒரு சகாப்தத்துக்கு பின் சோசலிச தொழிலாளர் கட்சி, எர்னெஸட் மண்டேலால் தலைமை தாங்கப்பட்ட பிரதான பப்லோவாதக் கட்சியுடன், பிரதானமாக காஸ்ட்ரோவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம் பற்றிய தங்களின் பொதுவான மதிப்பீட்டின் அடிப்படையில் மறு ஐக்கியம் செய்து கொண்டது. கியூபாவில் பெருமளவு உற்பத்திசக்திகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அது தொழிலாளர்கள் அரசாக ஆகிவிட்டதாக அவர்கள் தீர்மானித்தார்கள். மேலும் கூட காஸ்ட்ரோ வாதம் சர்வதேசப் போக்காக ஆகமுடியுமென்றும், தொழிலாள வர்க்கத்தின் புதிய உலக புரட்சிகரத் தலைமையை வழங்கமுடியும் என்ற முன்னோக்கை அவர்கள் முன்னெடுத்தனர்.

இந்த முன்னோக்கு கியூபாவுக்கு அப்பாலும் விளைபயன்களை கொண்டிருக்கிறது. 1939-40ல் சோவியத் அரசு பற்றிய வரையறை மீதான விவாதம் தொடர்பாக ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியவாறு, ஒவ்வொரு சமூகவியல் வரையறைக்கும் பின்னால் வரலாற்று முண்கணிப்பு இருக்கிறது. கியூபாவை தொழிலாளர் அரசு என சிறப்பு பெயர் சூட்டி இறுகப்பற்றிக் கொள்ளல், மார்க்சிலிருந்து வளர்த்தெடுத்த சோசலிசப் புரட்சி பற்றிய முழுவரலாற்று மற்றும் தத்துவார்த்த கருத்துருவுடன் துண்டித்துக் கொள்வதாகும்.

கியூபாவில் அதிகாரமானது கெரில்லாப் படையின் கைகளில் விழுந்தது. அது தொழிலாளர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத, தெளிவான குட்டி முதலாளித்துவ தேசியவாத பண்பைக் கொண்டதாகும். தொழிலாளர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவித குறிப்பிடத்தக்க பாத்திரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஒரு முறை அரசு அமைந்ததும், அதன்மீது எந்தவிதமான வழிகளிலும் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவும் முயற்சியில் அது ஈடுபட்டிருந்ததில்லை.

அத்தகைய அரசை "தொழிலாளர் அரசு" என தகுதிப்படுத்துவது, ஆழமான கிளைத்தெழுதல்களை கொண்டிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்திற்காக மார்க்சிச இயக்கத்தால் தொடுக்கப்பட்ட முழுப்போராட்டத்தையும் கைவிடுவதை அது அர்த்தப்படுத்தியது. அதற்குப் பதிலாக அது தேசியவாத தலைமைக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படுத்துவதன் மூலம் சோசலிசத்திற்கான பாதை அமைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியது. அது குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தில் வேரூன்றிய காஸ்ட்ரோ வாதிகளாக, கெரில்லா படைகளாக மற்றும் ஏனைய தேசியவாதிகளாக இருக்கக்கூடும். அவர்கள் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி நடத்துவார்களாம்; நான்காம் அகிலத்தின் கட்சிகளால் அணிதிரட்டப்பட்டு, கல்விபுகட்டப்பட்ட தொழிலாள வர்க்கம் அல்லவாம். அதுதான் பப்லோவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கியூப தொழிலாளர்கள் அரசு பற்றிய சமூக வரையறையிலிருந்து ஊற்றெடுக்கக்கூடிய மையவரலாற்று முன்கணிப்பாகும்.

கியூபா தொடர்பாக ஹான்சனால் அபிவிருத்தி செய்யப்பட்ட முன்னோக்கு மார்க்சிசத்தினை மொத்தமாய் கொச்சைப்படுத்தலின் மேல் தங்கியிருந்தது. கிழக்கு ஐரோப்பிய எல்லைப்புற அரசுகளையும் சீனாவையும் "ஊனமுற்ற தொழிலாளர் அரசு" என்று தற்காலிகமாக மற்றும் மிகவும் நிபந்தனையுடன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பயன்படுத்தப்பட்ட, முந்தைய முடிவினை அவர் புறப்பாட்டு புள்ளியாக எடுத்தார்.

தோழர் பீட்டர் நேற்று சுட்டிக்காட்டியவாறு, இந்த ஆரம்ப விவாதங்களில் சோசலிச தொழிலாளர் கட்சி இந்த அரசுகள் வரலாற்று ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாதவை என்பதை சுட்டிக்காட்டுவதற்காக "ஊனமுற்ற" எனும் பெயருரிச் சொல்மீது வலியுறுத்தல் செய்தது. பப்லோ இந்த வரையறையை, ஸ்ராலினிசத்துக்குப்பின் புரட்சிகர உள்ளுறை ஆற்றல் என்று அர்த்தப்படுத்துவதற்காக பயன்படுத்திய முயற்சியை அவர்கள் எதிர்த்திருந்தனர்.

எவ்வாறாயினும் ஹான்சன், பப்லோவைவிட மிகவும் குரூரமான பாணியில், கியூபா எப்படி வரிசையாய் அருவமான சோதனைகளை சந்தித்தது, எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார தேசியமயமாக்கலை, அது அதனை தொழிலாளர் அரசு எனும் வகையினத்தில் வைப்பதாகக் கூறப்படும் தேசியமயமாக்கலை எப்படி சந்தித்தது என விளக்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

தொழிலாள வர்க்கம் புரட்சியை செய்திருக்கவில்லை அதன்பிறகு அரசு சாதனத்தின்மீது எவ்வித கட்டுப்பாட்டையும் கைக்கொள்ளவில்லை, இவையனைத்தும் கியூபப் புரட்சி எதிர்கொள்ளத் தவறிய வெறுமனே சாதாரண சோதனைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும், இது தொடர்பான முன்னேற்றம் இன்னும் செய்யப்படவேண்டியதாக விளக்கப்பட்டு, விமர்சனமற்ற ஆதரவு எல்லாவற்றையும்விட அவசியமானது எனப்பட்டது.

அந்நேரம் அவர் கூறியதாவது: "கியூப அரசாங்கம் தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளின் கவுன்சில்களான பாட்டாளி வர்க்க ஜனநாயக ஆட்சி வடிவங்களை இன்னும் நிறுவவில்லை. ஆயினும் அது சோசலிசத்தில் நகருகிறவாறு தன்னைத்தானே ஜனநாயகப் போக்குடையதுபோல் நிரூபித்திருக்கிறது. அது மக்களை ஆயுதபாணிகளாக்கவும் மக்கள் இராணுவத்தை அமைக்கவும் தங்களது புரட்சிக்கு ஆதரவளித்த அனைத்துக் குழுக்களும் சுதந்திரமாய் கருத்துக்களை வெளிப்படுத்த ஆது உத்தரவாதம் தந்திருக்கின்றது. இந்த வகையில் ஸ்ராலினிசத்துடன் கறைப்பட்டிருக்கின்ற ஏனைய முதலாளித்துவமில்லாத அரசுகளுக்கு மாறுபாடாக, அது வரவேற்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.

"கியூபப் புரட்சி சுதந்திரமாக அபிவிருத்தியடைய அனுமதிக்கப்பட்டால், அதனுடைய ஜனநாயகப்போக்கு ஐயத்திற்கு இடமின்றி பாட்டாளி வர்க்க ஜனநாயக வடிவங்களின் தொடக்க உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். ஆகையால் புரட்சிக்கு மும்முரமாய் ஆதரவு தருவதற்கான பலமான காரணங்களுள் ஒன்று, அத்தகைய போக்கு செயல்படுவதற்கான உயர்ந்தபட்ச வாய்ப்பினை வழங்குவதாகும்.

கியூபாவின் யதார்த்தம், ஹான்சனால் தீட்டப்பட்ட ரோஜா வண்ண காட்சியிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். உதாரணமாக கியூப ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டார்கள். அவர்களின் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள் மற்றும் பத்திரிகைகள் நசுக்கப்பட்டன. உலகில் மற்றெந்த நாட்டையும் விட அதிகமான அரசியல் கைதிகளை நீண்டகாலத்திற்கு சிறையில் அடைத்து வைத்திருந்த நாடாக இந்தத் தீவு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அவர்களுள் ஜுலை 26 இயக்கத்தின் காஸ்ட்ரோவின் முன்னாளைய தோழர்கள் கொஞ்சம் நஞ்சம் பேரல்லர்.

ஆயினும், தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து ஹான்சனின் மதிப்பீட்டின் மிகவும் ஏமாற்றக்கூடிய அம்சம், வாய்ப்பு அளிக்கப்பட்டால் காஸ்ட்ரோ ஆட்சி பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயக வடிவங்களை ஏற்படுத்துமாம். அதாவது தொழிலாளர் சபைகளை அல்லது ரஷ்ய புரட்சியுடன் இணைத்துச் சொன்னால் சோவியத்துக்களை ஏற்படுத்துமாம்.

தொழிலாளர் அதிகாரத்தின் அத்தகைய உறுப்புகள், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளால் உண்டுபண்ணப்பட்ட ஆட்சியில் மேலிருந்து ஏற்படுத்தப்படாது அல்லது வழங்கப்படாது. அத்தகைய அமைப்புக்கள், அவை காஸ்ட்ரோ, கடாபி அல்லது சதாம் குசைன் ஆகியவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அவை போனபார்ட்டிச ஆட்சிக்கான ஒப்பனையைவிட வேறெதுவாகவும் ஒருபோதும் இருக்கவில்லை. தொழிலாளர்கள் தாங்களே மக்களை அணிதிரட்டி, முதலாளித்துவத்தைத் தூக்கி வீசி, புதிய பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதற்கான சாதனங்களால் மட்டுமே உண்மையான தொழிலாளர் சபைகள் அல்லது சோவியத்துக்கள் உருவாக்கப்பட முடியும்.

லெனினும் போல்ஷேவிக்குகளும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், சோவியத்துக்களை தொழிலாளர்களிடம் ஒப்படைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அது அதிகாரத்துக்கான போராட்டத்தை வழிநடத்தியது. இந்த உறுப்புக்கள் மூலம் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலும், ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் முன்னரே திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்ட தலையீட்டினால் உண்டுபண்ணப்பட்ட வர்க்க அரசியல் நனவின் அடிப்படையிலும் தமது ஆட்சியை உருவாக்கினர்.

காஸ்ட்ரோவின் தேசியமயமாக்கலுக்கும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற அவரது சுய தம்பட்டத்துக்கும் பப்லோவாதிகள் அடிபணிந்ததானது, நிரந்தரப் புரட்சியின் நிரூபணத்தைக் கொண்டிருக்கிறது.

யதார்த்தத்தில் இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து பத்தாண்டுகளின் போது, ஏனைய பல ஒடுக்கப்பட்ட நாடுகளைப் போன்றே கியூபாவும் எதிர்மறை அர்த்தத்தில் நிரந்தரப் புரட்சியின் உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது. அதாவது எங்கு தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகர கட்சி இல்லையோ, அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை வழங்குவதற்கு அது தகுதியற்றுப் போக, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினதும் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளினதும் பிரதிநிதிகள் உள்ளே நுழையவும், தங்களது சொந்த தீர்வினைத்திணிக்கவும் முடிகிறது. நாசர், நேரு, பெரன், பென் பெல்லா, சுகர்னோ, பாத்திஸ்டுகள் (Nasser, Nehru, Peron, Ben Bella, Sukharno, Baathists) மற்றும் பிந்தைய காலகட்டத்தில் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் நிகராகுவாவில் சன்டினிஸ்டாக்கள் ஆகியோர் இந்த நிகழ்வுப் போக்கின் எடுத்துக்காட்டுகள் ஆவர். உண்மையில் இவை எல்லாவற்றிலும் தேசியமயமாக்கலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1961ல் சோலிசத் தொழிலாளர் கட்சிக்கு (SWP) சோசலிச தொழிலாளர் கழகத்தால்  (Socialist Labour League - SLL) அனுப்பப்பட்ட பத்திரத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஹான்சனின் துதிபாடலை கடுமையாக விமர்சித்தனர்.

"அத்தகைய தேசியவாத தலைவர்களின் பங்கினை ஊதிப்பெருக்குவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலையல்ல," என அவர்கள் குறிப்பிட்டார்கள். "சமூக ஜனநாயக மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத் தலைமைகளின் காட்டிக்கொடுப்பின் காரணமாக மட்டுமே அவர்கள் வெகுஜனங்களின் ஆதரவின் மேல் செல்வாக்கு செலுத்தமுடியும். இந்த வகையில் அவர்கள் ஏகாதிபத்தியத்துக்கும் தொழிலாளர் விவசாயிகள் ஜனத்திரளுக்கும் இடையில் இடைத்தடையாக இருப்பார்கள். சோவியத் யூனியனிடமிருந்து பொருளாதார உதவிபெறும் சாத்தியக்கூறு, ஏகாதிபத்தியத்துடன் நல்ல பேரத்தை செய்ய வைத்தது. முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்கள் மத்தியிலுள்ள மிகவும் தீவிரமான சக்திகள் கூட ஏகாதிபத்திய உடைமைகளைத் தாக்கவும் மக்கள் மத்தியிலிருந்து மேலும் ஆதரவை வென்று எடுக்கவும் செய்யவைத்தது. ஆனால் நம்மை பொறுத்தவரை, ஒவ்வொரு விஷயத்திலும் இந்த நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் ஒன்று மார்க்சிச கட்சி மூலம் அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, ஏழை விவசாயிகளுக்கு தலைமை தாங்கி சோவியத்துக்களை கட்டவும், சர்வதேச சோசலிசப் புரட்சியுடன் தேவையான தொடர்புகளை உணரவும் செய்வது மிக முக்கியமான விஷயமாகும். தேசியவாதத் தலைமைகள் சோசலிஸ்டுகளாக ஆகவேண்டும் என்ற நம்பிக்கையினை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பதிலீடாக்க வேண்டும் என்பது நமது கருத்தில் எதிலுமே கிடையாது."[5]

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அடுத்தடுத்த சீரழிவினை நன்கு அறிந்தவர்கள், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஒரு சகாப்தத்துக்குப் பின்னர் பி.எல்.ஓ. மற்றும் பல்வேறு அரபு ஆட்சியாளர்கள் சம்பந்தமாக வெளிப்படையாக பின்பற்றவிருந்த நிலைப்பாட்டின் நேரடி குற்றப்பத்திரம் போல இந்த பந்தி உரைக்கின்றது. இந்த ஆய்வின் துல்லியமான தன்மையையும் நான்காம் அகிலத்தின் மீதான திருத்தல்வாதிகளின் தாக்குதல் புறநிலை ரீதியான வர்க்க சக்திகளில் வேரூன்றியுள்ளது என்ற உண்மையையும் இது மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு, பிரிட்டிஷ் பகுதியின் தலைமை சோசலிசத் தொழிலாளர் கட்சியை அழிவுகரமாக கீழறுத்திருந்த அதே வர்க்க சக்திகளின் அழுத்தத்திற்கு வீழ்ந்தது.

கியூபா ஒரு தொழிலாளர் அரசு மற்றும் அதன் புரட்சி சோசலிசத்துக்கான புதியபாதை என்ற பிரகடனத்தில் சம்பந்தப்பட்டிருந்தது என்னவெனில், நிரந்தரப் புரட்சியின் முழு முன்னோக்கினையும் கைவிடுவதாகும்; தொழிலாள வர்க்கம் பின்தங்கிய நாடுகளில் தலைமைப் பாத்திரத்தை இனியும் ஆற்றப் போவதில்லை; இந்த வர்க்கத்துக்கு சோசலிச நனவை வளர்த்தெடுப்பதற்காக போராடுவதற்கு அது தேவையுமில்லை; அதற்குப் பதிலாக விவசாயிகளை தங்களின் தளமாகக் கொண்ட கெரில்லாக்களின் அணி, தொழிலாளர்கள் இல்லாமல் சோசலிசத்தைக் கொண்டுவர முடியும்; தொழிலாளர்கள் இருந்தபோதிலும் கூட சோசலிசத்தைக் கொண்டு வரமுடியும் என்பதாகும்.

இது மார்க்சிசத்தின் மிக அத்தியாவசிய அடித்தளத்தை நிராகரிப்பதைக் குறித்தது. சோசலிசத்துக்கான போராட்டம் பாட்டாளி வர்க்கத்திடமிருந்து பிரிக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலை, தொழிலாள வர்க்கத்தின் பணியாக அது இனியில்லை. பதிலாக தொழிலாள வர்க்கம், கெரில்லாக்களின் கதாநாயக நடவடிக்கைகளுக்கு ஊமைப்பார்வையாளராக ஆக்கப்பட்டது.

இந்த முன்னோக்கை எண்ணிப் பார்க்கையில், பிடல் காஸ்ட்ரோவுடன் குட்டி முதலாளித்துவ இடது முழுமையாக கொண்டுள்ள மையலுக்கான அடிப்படையை ஒருவர் தெளிவாக கிரகித்துக் கொள்ளமுடியும். காஸ்ட்ரோவிடம் அவர்கள் காண்பது, தொழிலாள வர்க்கத்தை மேலாதிக்கம் செய்வதற்கு, பார்ப்பதற்கு சுதந்திரமான பாத்திரம் போல் தெரியும், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் திறமையாகும். இடது புத்திஜீவிகள், மாணவ தீவிரவாதிகள் அல்லது நடுத்தர வர்க்க எதிர்ப்பாளர்கள் தங்களை தொழிலாள வர்க்கத்துக்கும் தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச நனவை வளர்த்தெடுப்பதற்கும் ஆன கடினமான நீண்ட போராட்டத்திற்கு கீழ்ப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு சான்றாக கியூபா அவர்களிற்கு சேவை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தங்களின் சொந்த தன்னியல்பான நடவடிக்கை மூலம் சமுதாயத்தை புரட்சிகரமாய் ஆக்ககூடியதாக இருந்ததாம்.

மார்க்சிசத்தின் மீதான இத்திருத்தல்வாத தாக்குதலை எதிர்த்துப் போராடுகையில், SLL அடிப்படை வழிமுறைகள்பால் கியூபா மீது விவாதத்தை ஆய்வு செய்தது.

சோசலிச தொழிலாளர் கட்சி, ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்த "பலவகைப் பண்புகள் கொண்ட நிகழ்வுகளை வழிபடல்". அதாவது இருக்கின்ற சமூக அமைப்பினால் தொழிலாள வர்க்கத்தினுள் இருக்கின்ற தலைமைகளால் பரந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களின் மத்தியில் இருக்கும் முதலாளித்துவ நனவு வடிவங்கள் இவற்றால் தீர்மானிக்கப்பட்ட யதாரத்தம் என்று கூறப்படுவதற்கு தங்களை அடிபணிந்துபோதலில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் விளக்கிக்காட்டினர். புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியின் நனவான போராட்டத்தில் இருந்து முழுமையாக பிரிக்கப்பட்ட புறநிலையாக, தீர்மானிக்கும் காரணிகளாக இவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சோசலிச தொழிலாளர் கட்சியின் வழிமுறையானது, இந்த "நிகழ்வுகளை" அமைதியாய் எண்ணிப்பார்த்தல் மற்றும் அரசியல் வெற்றிக்காக மிகவும் உடனடி முன்னேற்றங்களை தரக்கூடியதாக தோற்றமளிக்கும் இருக்கின்ற தலைமைகளுக்கு அடிபணிந்துபோதலாகும். இவ்வாறு அவர்கள் இத்தலைமையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விவாதித்து, கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் அவர்கள் என்னதான் செய்யமுடியும்? என அவர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தி வக்காலத்து வாங்குவர். இருப்பினும் இந்த "சூழ்நிலைகள்", தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் பேரில் சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நனவுபூர்வமான போராட்டத்தை எப்போதும் விளக்கியிருக்கும்.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஈட்டிய தத்துவார்த்த வெற்றிகளை SLL பாதுகாத்தது. தொழிலாள வர்க்கமல்லாத தலைமைகள் காலனித்துவ நாடுகளிலும், முன்னாள் காலனித்துவ நாடுகளிலும் உள்ள ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் பின்தங்கிய நிலைமைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை முழு ஏகாதிபத்திய சகாப்தம் மூலமான அனுபவங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன என்று அது வலியுறுத்தியது.

இது தொழிலாள வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமும் உலக சோசலிசப் புரட்சியை விஸ்தரிக்க செய்வதன் மூலமும் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். இந்த ஆய்விலிருந்து ஊற்றெடுக்கும் பிரதானமான பணி, எல்லாவகையான சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கும் எதிரான போராட்டத்தை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்தை தேசியவாதத்துக்கும் தேசியவாத தலைமைக்கும் கீழ்ப்படுத்துகின்ற ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான புரட்சிகரக் கட்சிகளை கட்டுவதாக இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிசப் புரட்சியின் சாதனையானது, தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் பகுதிகளுக்குள் உயர்ந்தமட்ட சோசலிச அரசியல் நனவை வளர்த்தெடுப்பதை தேவையாகக் கொண்டிருக்கிறது என்பதை பப்லோவாதம் மறுத்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு என்பது பப்லோவாதிகள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் பற்றிய பிரச்சனையாக இருந்தது. தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சியுடன் சில உறவுகளைக் கொண்டிருக்கிறது என்ற மட்டத்துக்கு அது வெறுமனே புறநிலை ரீதியான சக்தியாக, மற்றவர்களால் கையாளப்படும் மற்றும் தலைமை தாங்கப்படும் சக்தியாக இருந்தது.

பப்லோவாதிகள் சோசலிச தொழிலாளர் கட்சியுடன் மறு ஐக்கியம் செய்து கொண்டபின் வரைந்த தீர்மானத்தில், கியூப பிரச்சினை மீது வளர்த்தெடுக்கப்பட்ட தத்துவார்த்த திருத்தல்களின் அரசியல் விளைபயன்களை அரும்முயற்சி செய்து உச்சரித்தனர். அது பின்வருமாறு விவரித்தது: "பின்தங்கிய நாடுகளில் எதிரியின் பலவீனமானது, முனை மழுங்கிய கருவியுடன் கூட அதிகாரத்துக்கு வரும் சாத்தியத்தை திறந்து வைத்துள்ளது." வேறு வார்த்தைகளில் கூறினால், தொழிலாள வர்க்க கட்சிகளை கட்டாமல்கூட தொழிலாளர் அரசுகளை நிறுவமுடியும் என்பதாகும்.

இந்த நாடுகளில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் பரந்த மக்களின் வறுமை மற்றும் முதலாளித்துவ அரசுக் கட்டமைப்புகளின் சார்புரீதியான பலவீனம், "ஒரு புரட்சிகர அலையின்" தோல்வி தானாகவே சார்புரீதியான அல்லது தற்காலிகமாகக்கூட சமூக அல்லது பொருளாதார உறுதிப்பாட்டுக்கு வழிவகுக்காத சூழ்நிலைகளை உண்டுபண்ணுகிறது என்று அவர்கள் அறிவித்தனர். மரபுரீதியாக தீர்ந்து போகாததாகக் காணப்படும் பரந்த மக்களின் போராட்டம் தொடர்கிறது. எதிரியின் பலவீனமானது, ஏகாதிபத்திய நாடுகள் விஷயத்தில் உள்ளதைக்காட்டிலும், தற்காலிக தோல்விகளில் இருந்து முழுமையாக குணமடைய புரட்சிக்கு வாய்ப்பளிக்கிறது.

இது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியை முழுமையாக திரித்தல் ஆகும். ட்ரொட்ஸ்கி, ஜாரிச ரஷ்யாவில் முதலாளித்துவ வர்க்கத்தின் பலவீனத்தை சுட்டிக் காட்டுகையில், அதனை காலவரையற்ற வெற்றிடம் பற்றிய ஏதோ ஒன்றாக குறிப்பிடவில்லை. ஆனால் ஒருபுறம் செறிந்த ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் புறரீதியான வலிமைக்கும் மறுபுறம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் இடையிலான உறவாகவே குறிப்பிட்டார். முதலாளித்துவ வர்க்கம், குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த அல்லது நசுக்க ஒருபோதும் மிகப்பலவீனமாக இருந்ததில்லை. அது தன் தலைமையில் புரட்சிகரத் தலைமை கொண்ட இளம் பாட்டாளி வர்க்கத்தை எதிர்கொள்கையில் அது பலவீனமாக இருந்தது. இருப்பினும் பப்லோவாதிகள், தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரத்தை நிராகரித்து, அத்தகைய குட்டி முதலாளித்துவ சக்திகளுக்குப் புரட்சியின் பணியை ஒப்புக் கொடுத்தனர்.

அவர்களது "முனை மழுங்கிய கருவிகள்" மற்றும் "தீராத வெகுஜனப் போராட்டங்கள்" பற்றிய தத்துவமானது, பிரேசிலில் ஜெனரல் கேஸ் டெலோ பிராங்கோ தலைமையில் நடந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளின் வரிசைக் கிரமத்தில் முதல் நிகழ்வில் விரிவாக இருந்தது. அவை இலத்தீன் அமெரிக்காவை பலபத்தாண்டு கால பயங்கரமான ஒடுக்குமுறைக்குள் மூழ்கடித்தது. அவர்களின் நிழல்கள் கண்டம் முழுவதும் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பப்லோவாதிகள் இந்த நிகழ்வுகளுக்காக தொழிலாள வர்க்கத்தை தயாரிக்கத்தவறியது மட்டுமல்ல, புரட்சி தொழிலாள வர்க்கத்தை விட ஏனைய சக்திகளால் நிறைவேற்றப்படமுடியும் என்று வலியுறுத்தியதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தினர். தனிப்பட்ட கெரில்லாக் குழுக்களின் ஆயுத நடவடிக்கைகள் பற்றிய காஸ்ட்ரோவின் முன்னோக்கை அங்கீகாரம் செய்தனர்.

பப்லோவாதமும் தலைமை நெருக்கடியும்

சேகுவாராவினால் முன்வைக்கப்பட்ட கெரில்லா யுத்தத்துக்கான கண்ட ரீதியிலான பரந்த சூழ்நிலைகளின் தோல்வி என நிரூபிக்கப்படுவது, நாடுகள் பொதுவாகப் பங்கிட்டுக் கொண்ட ஒரேயோரு விஷயமாக அதுஇருந்த அதேவேளை, இலத்தின் அமெரிக்காவில் காஸ்ட்ரோயிசம் துருவ ஈர்ப்பாக மாறியது ஏன்? தொழிலாள வர்க்கத்தில் உள்ள செல்வாக்கு கொண்ட தலைமைகள், குறிப்பாக ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகள், வளர்ந்து வரும் புரட்சிகர நெருக்கடியின் சூழ்நிலைகளின் கீழ் முன்னெடுத்து வழிகாட்டிச் செல்லவில்லை.

ஆகையால் பப்லோவாதிகள் கொண்டாடுகின்ற புதிய யதார்த்தம், காஸ்ட்ரோயிசம் போன்றவற்றால் தலைமை தாங்கப்படும் தீவிர தேசிய வாதப்போக்கின் உதயமானது, அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்காததன் வெளிப்பாடாகும். இருந்தும் அவர்கள் அதனை இந்நெருக்கடிக்கு தீர்வு என முன்வைத்து நான்காம் அகிலத்தின் மூலோபாய இலக்கினை தட்டிக்கழித்தனர். மற்றும் தொழிலாளர்களுக்கு சுதந்திரமான நோக்குநிலை மற்றும் அதிகாரத்துவங்களின் செல்வாக்கை நிர்மூலமாக்கும் கட்சியைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தை கைவிட்டு, நான்காம் அகிலத்தின் பாத்திரத்தை, குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் ஸ்ராலினிஸ்டுகளுக்கும் உதவி செய்து, அவர்கள் மேல் செல்வாக்கு செலுத்தி மற்றும் அவர்களை நயமாக இடித்துரைத்து இடது பக்கம் செல்லவைக்கும் பாத்திரமாகக் குறைத்தனர்.

எவ்வாறு இம்முன்னோக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது? சேகுவாராவின் பொலிவிய பெருந்தோல்வி மற்றும் இலத்தின் அமெரிக்காவின் பெரும் வர்க்கப் போராட்ட நிகழ்வினை தொடர்ந்து பின்னர், 1968ல் பப்லோவாதிகள் ஒன்பதாவது காங்கிரசைக் கூட்டினர். அவர்கள் ஐக்கிய செயலக குழுமத்துடன் இணைந்துள்ள இலத்தின் அமெரிக்காவில் உள்ள கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை கைவிட்டு, கெரில்லா யுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர்.

காங்கிரசின் பத்திரம் பின்வருமாறு கூறியது: "சில நாடுகளில் நகர்ப்புற வர்க்கங்களால் பெரும் மோதல்கள் முதலில் எழலாம். உள்நாட்டு யுத்தம் வேறுபட்ட வடிவங்களை எடுக்கலாம். அதில் அந்தக் காலகட்டம் முழுவதும் பிரதான அச்சாணியாக கிராமப்புற கெரில்லாக்கள் இருப்பர். இந்த பதத்தின் பிரதான அர்த்தம், இராணுவ-பூகோளரீதியானது. அது சிறப்பாக (அல்லது மேலாதிக்கம் செய்வதிலும் கூட) விவசாய உட்சேர்க்கையை குறிப்பாகச் சுட்டாது".

தீர்மானம் தொடர்கிறது: "இலத்தின் அமெரிக்காவுக்கான ஒரேயொரு யதார்த்தபூர்வமான முன்னோக்கு நீண்ட வருடங்கள் நீடிக்கும் ஆயுதப்போராட்டம் தான். தொழில்நுட்ப ரீதியாக தயார் செய்வது வெறுமனே வேலைபற்றிய பார்வையல்ல, இன்னும் சொல்லப் போனால் சர்வதேச அளவில் அடிப்படை அம்சமாகும். குறைந்தபட்ச சூழ்நிலைகள் இருக்காத நாடுகளிலும் கூட அது அடிப்படை அம்சங்களுள் ஒன்றாகும்".

அங்கு அதிக தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்திருக்கமுடியாது. இலத்தின் அமெரிக்க பகுதிகளுக்கு உள்ளே தங்களுக்கு விவசாயிகள் மத்தியில் போதுமான ஆதரவு இருக்கின்றதா அல்லது நாட்டுப்புறத்தில் எழுச்சிக்கு தேவையான அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றதா என ஒருவேளை அரிதாக ஐயங்கள் எழுந்தாலும், தீர்மானம் அவர்களுக்கு விவசாய ஆதரவு தேவையில்லை என்றும், அரசியல் சூழ்நிலை விஷயத்துக்கு அப்பாற்பட்டதென்றும் உத்தரவாதம் அளித்தது. தேவைப்பட்டது எல்லாம் ஆயுதப் போராட்டத்துக்கான "தொழில் நுட்பத் தயாரிப்புகளாக" இருந்தன.

விளைவு, இலத்தின் அமெரிக்காவில் பப்லோவாதிகளால் வழிநடத்தப்பட்ட காரியாளர்கள் சரீரரீதியாக துடைத்தழிக்கப்பட்டார்கள் மற்றும் அரசியல் கலைப்பு நடந்தது.

எடுத்துக்காட்டாக ஆர்ஜண்டினாவில், ஐக்கிய செயலாளர் குழுமத்தின் அதிகாரப்பூர்வ பகுதி பப்லோவாதிகளுடன் சம்பிரதாயபூர்வமாக முறித்துக் கொள்வதற்கு முன்பு, தங்களைத் தாங்களே ERP என அழைத்துக் கொண்டது. பணத்திற்காக வணிக நிர்வாகிகளைக் கடத்தலில் அது ஈடுபட்டது. அவை கோரிக்கைகளுடன் கூலி உயர்வுகளையும் தொழிலாளர்களுக்கான சிறந்த சூழ்நிலைகளையும் கோரிக்கையாக சேர்க்க இருந்தன. அத்தகைய நடவடிக்கைகளின் விளைவு என்னவாக இருந்தது? அடிப்படையில் தொழிலாளர்கள் முதலாளித்துவத்துக்கு முடிவுகட்டும் போராட்டத்தினை முன்னெடுப்பது அவர்களின் வேலையல்ல என்று கற்பிக்கப்பட்டது. அவர்கள் தங்களுக்காக அதனைச் செய்யும் ஆயுதம் ஏந்திய கெரில்லாக்களின் மாபெரும் பார்வையாளர்களாக பணிபுரிந்தனர்.

இது தீர்க்கமான வரலாற்றுச் சந்தியில் இடம்பெற்றது. பப்லோவாதம் காஸ்ட்ரோயிசத்தில் கரைக்கப்பட்ட காலகட்டம் எல்லாவற்றுக்கும் மேலாக இலத்தின் அமெரிக்கா முழுமையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களால் பண்பிடப்பட்டிருந்தது. சிலியில் தொழிலாளர்கள் தாக்குதலில் தாக்குப் பிடித்திருந்தனர். இறுதியில் அலண்டேயின் ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதனுடைய கொள்கைகள் பினோசேயின் சர்வாதிகாரத்துக்கு வழி அமைத்தது. ஆர்ஜண்டினாவில், 1969ன் கோர்டோ போசோ நிகழ்ச்சி - அதில் கோர்டோபோசோ தொழிலாளர்கள் நகரை முற்றுகையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நீண்ட தாக்குதலை தொடங்கினர். அது பெரோனிய வாதிகளால் நசுக்கப்பட்டது. பின்னர் அது விடேலாவின் சர்வாதிகாரத்தால் துடைத்து அழிக்கப்பட்டது. பொலிவியாவில், திரும்பத் திரும்ப சுரங்கத் தொழிலாளர்கள் எழுச்சி கொண்டனர். தங்களது தலைவர்களால் அது ஜெனரல் ஜெ.ஜெ. போரஸ் கீழான இராணுவத்தின் இடது பகுதிகள் மற்றும் தேசியவாதிகள் எனப்படுபவர்களுக்கு கீழ்ப்படியுமாறு செய்யப்படவிருந்தது. முன்கணித்தபடியே, போரஸ் தனது மிகப்பாரம்பரியமான சகாக்களிடம் உடனே அதிகாரத்தைக் கொடுத்தார். அவர்கள் பொலிவிய தொழிலாளர்களை ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கினர்.

காஸ்ட்ரோயிசத்துக்கான திரும்புதலுடன், பப்லோவாதிகள், தொழிலாள வர்கத்தையும் பழைய அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்திலிருந்து அதனை விடுவிப்பதற்கான போராட்டத்தையும் கைவிட்டிருந்தனர். காஸ்ட்ரோ நிரந்தரப் புரட்சியினை உறுதிப்படுத்தியிருந்தார் என்று கூறுவது போல, இந்த தீர்க்கமான போராட்டத்தை மிகையானதாக ஆக்கினர்.

சோசலிச தொழிலாளர் கட்சியின் ஹான்சன், இக்கொள்கையை அவரது வழமையான எரிச்சலுடனும் குரூரத்துடனும் காஸ்ட்ரோ, ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வென்றுவிட்டார் என்று பிரகடனம் செய்தார்.

"ஸ்ராலினிச தடையை உடைத்தெறிய முடியாமல், புரட்சியானது கணிசமான அளவு பின்தங்கிவிட்டதுடன் சுற்றுவழியை எடுத்துவிட்டது. இந்தச் சுற்றுவழி நம்மை கியூபாவின் சியராமாஸ்ட்ரா உட்பட்ட ஏதோவொரு வகை கரடுமுரடான தளத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் ஸ்ராலினிச பாதை அடைப்பு இப்போது கடக்கப்பட்டுவிட்டது, என்னவோ தெளிவாகயிருக்கிறது.

"தலைமைக்காக மாஸ்கோ திரும்பத் தேவையில்லை. கியூபாவில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இதுதான். ஸ்ராலினிசத்துடன் அறிதுயில் நிலையை முறித்துக்கொள்ள, சியரா மாஸ்ட்ரா காடுகளில் தவழ்ந்து செல்லவேண்டியது அவசியமாக உள்ளது".

இந்த முடிவானது, கியூபாவுக்கு அப்பால் சென்றடைந்த திட்டவட்டமான அரசியல் விளைபயன்களை கொண்டிருந்தது. குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளால் தலைமையேற்று நடத்தப்படும் கெரில்லா யுத்தத்தின் மூலம் "ஸ்ராலினிச வழி அடைப்பை கடத்தல்" ஒருவருக்கு எளிது என்றால், தொழிலாள வர்க்கத்தின் மீது ஸ்ராலினிசம் செய்துகொண்டிருந்த குரல்வளை நெரிப்பை முறியடிக்க நான்காம் அகிலத்தால் முன் எடுக்கப்பட்ட நீண்ட, கடினமான போராட்டம் தேவைப்படாததோடு மட்டுமல்ல எதிரானதுமாகும்.

இந்த முன்னோக்கின் மொத்த பாதிப்பு ஒடுக்கப்பட்ட நாடுகளில் குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் மீதான ஸ்ராலினிச பிடியை உடைப்பதற்கு மாறாக இறுக்குவதாகவே இருந்தது. இது தொழிலாள வர்க்கத்துக்குள் எந்தப் போராட்டத்திலிருந்தும் இலத்தின் அமெரிக்க இளைஞர்களின் முழு தலைமுறையையும் திசைதிருப்பவே உதவியது. கெரில்லாயிசத்துக்கு திரும்புதலானது ஸ்ராலினிச மற்றும் ஏனைய அதிகாரத்துவத் தலைமைக்கு வரம் கொடுப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது இளைஞர்கள் மத்தியிலும் அதேபோல் தொழிலாளர்கள் மத்தியிலும் உள்ள மிகவும் புரட்சிகரமான சக்திகளை தனிமைப்படுத்தி, அதன்மூலம் தொழிலாளர் இயக்கத்தின் மீதான அதிகாரத்துவத்தின் சொந்தப்பிடியை பலப்படுத்தியது.

முடிவில் குட்டிமுதலாளித்துவ தேசியவாதத்துக்கு பப்லோவாதிகளின் அடிபணிதலானது, 1960-களின் பின்பகுதியிலும் 1970-களின் ஆரம்பத்திலும் பிரதான வர்க்கப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் நுழைகையில், தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகர தலைமை இல்லாதிருந்ததை உறுதிப்படுத்த உதவியது.

அவர்கள் முன்கொண்டுவந்த கெரில்லா போராட்டமானது, இராணுவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் சர்வாதிகாரத்தை திணிக்க ஒரு சாக்காக அமைந்தது. இவ்வாறு இந்த திருத்தல்வாதப்போக்கு இலத்தின் அமெரிக்க தொழிலாளர்களால் என்றும் அனுபவித்திருந்திராத இரத்தம் தோய்ந்த தோல்விகளுக்கான தயாரிப்பில் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றியது.

கெரில்லாயிசத்தின் இருப்புநிலை கணக்கு

குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும்.

வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கெரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம்.

"நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றி பேசுகின்றபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து ஒழிக்கும் வரை போராடுவோம். குறிப்பாக வட அமெரிக்க ஏகாதிபத்தியம் செயலிழந்து போகுமளவுக்கு குறைக்கப்படும்வரை எமது ஆயுதங்களைக் கீழே போடாதிருக்க கடமைப்பட்டுள்ளோம்".

இவ்வரிகளுக்கு உரியவர் தியோதோரோ பெட்காப் (Teodoro Petkoff) என்பவர். அவர் தனது ஆயுதங்களை மட்டும் கீழே போடவில்லை, வெனிசுலாவின் திட்டம் மற்றும் பன்னாட்டு நாணயநிதியத்தின் கெடுபிடி வேலைத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான பொறுப்பின் முதன்மை அலுவலராகவும் ஆகியிருந்தார். கண்டரீதியான ஐக்கியம் மற்றும் யாங்கி ஏகாதிபத்தியத்தின் முடிவு வரை போராடுவதிலிருந்து, பெட்கோப் இப்போது நாடு கடந்த முதலீட்டிற்காக இந்தப் பிராந்தியத்தின் ஏனைய முதலாளித்துவ பொருளாதாரத்துடன் வெற்றிகரமாய் போட்டியிடுவதை இலக்காகக்கொண்டு, நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் கூலிகளை குறைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டார். வெனிசுலாவில் இந்த ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரதான வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

அவரது அம்சம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. உருகுவேயில் தலைநகர் மாண்டிவிடியோவில் என்றும் இல்லாத அளவுக்கு சமூக நிலைமைகள் சிதறடித்துள்ளதை நிர்வகிக்கின்ற முதலாளித்துவ தேர்தல் முன்னணியான பிரண்டி அம்பிலியோவின் பகுதியை இப்போது துபாமாரோ கெரில்லாக்கள் அமைத்திருக்கின்றனர். M-19 கொலம்பிய அரசாங்கத்துடன் செய்துள்ள ஏற்பாடானது, அவர்களது தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் பதவிகளை உறுதிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் உறுப்பினர்களை சிறிய வர்த்தகக் கடன்களுக்காக தங்களின் ஆயுதங்களை வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளது.

1980களில் காஸ்ட்ரோ அரசும் அதனது ஆதரவாளர்களும், நிக்கராகுவா சாண்டினிஸ்டாக்களால் அதிகாரம் கைப்பற்றப்பட்டதுடனும் எல்சால்வடோரில் உள்நாட்டு யுத்த வெடிப்புடனும், மத்திய அமெரிக்கா தங்களின் முன்நோக்கின் புதிய நிரூபணத்தை வழங்கியதாகப் பிரகடனப்படுத்தினர்.

ஆனால் இவ்வியக்கங்கள் எல்லாம் என்னவாயின. எல்சால்வடோரில் FMLN, குவாதிமாலாவில் URNG, சாண்டினிஸ்டாக்கள் ஆகிய அனைவரும், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் படுகொலைக்கு காரணமாயிருந்த சக்திகளிடம் உடன்படிக்கைகளில் இணைந்தனர். காண்டாடோரா மற்றும் எஸ்கிபுலஸ் பேச்சு வார்த்தைகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் அமெரிக்க ஆதரவு அணிகளின் கைகளில் அரசு அதிகாரத்தை நிலைப்படுத்தும், அதேவேளை விடுதலை இயக்கங்கள் என்று அழைக்கப்படுகின்றவற்றின் காரியாளர்களை இந்த அரசாங்கங்களில் பாராளுமன்ற பொறுப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களாக திரும்பவைக்கின்ற இந்த உடன்படிக்கைகளில் காஸ்ட்ரோ ஒரு தரகராக இருந்து உதவிசெய்தார். இவ்வனைத்துக் குழுக்களும் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு அரசியல் காட்டிக்கொடுப்பு மற்றும் நிதி ஊழல்களுக்காக தங்களை நியாயப்படுத்தி, ஒருவரை ஒருவர் கண்டனம் செய்துகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், இப்பிராந்திய மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பிராந்தியத்தில் புரட்சிகர எழுச்சிகளுக்கு வித்திட்டவற்றைவிட மோசமான அல்லது அதுபோன்ற ஒடுக்குமுறை மற்றும் ஏழ்மையின் சூழல்களுடன் மோதலுக்கு வந்தனர். மிகவும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் செயலிழப்பை விதைத்து இருந்ததுதான் இந்த காஸ்ட்ரோயிஸ்டுகளின் செல்வாக்குடைய குட்டி முதலாளித்துவ, தேசியவாத இயக்கங்களின் மொத்தபாதிப்பாகும்.

இன்றைய கியூபா

கியூபா என்னவாக இருக்கிறது? முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஸ்ட்ரோ ஆட்சியும் பப்லோவாத திருத்தல்வாதிகளும் பிரகடனம் செய்த சோசலிசத்துக்கு புதிய பாதையின் இறுதி விளைவு என்ன?

முப்பதாண்டுகளாக தீர்வானது மாஸ்கோ அதிகாரத்துவத்திடமிருந்து பெரும் மானிய உதவிபெற்று தப்பி இருந்ததற்கு நன்றி உடையதாக இருக்கவேண்டும். அமெரிக்க மதிப்பீட்டின் படியும் காஸ்ட்ரோ ஆதரவாளர்களின்படியும் சோவியத் ஒன்றியத்திடமிருந்து கியூபாவுக்கு கிடைத்த பொருளாதார மானியங்கள் ஏறத்தாழ ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்களுக்கும் 5 மில்லியன் டாலர்களுக்கும் இடையிலானதாக இருந்தது. இந்த உதவிக்கான செய்முறை சோவியத் அணிநாடுகள் கியூப விவசாய உற்பத்திப்பொருட்களை குறிப்பாக சர்க்கரை போன்றவற்றை உலக சந்தை விலைக்கும் மேலாக பன்னிரண்டு மடங்கு அதிகமான விலைக்கு வாங்குவதும் பெட்ரோலியத்தை சந்தைவிலைக்கும் கீழ் விற்பனை செய்வதும் ஆகும். கியூபா கைமேல் பணத்திற்காக சர்க்கரையை பக்கத்து நாடான டொமினிக்கன் குடியரசிலிருந்து வாங்குகின்ற நிலையையும், எண்ணெயை சந்தைவிலைக்கு மறு விற்பனை செய்கின்ற நிலையையும் அடைந்தது.

சோவியத் மானியங்களைச் சார்ந்திருத்தல் இறுதியில் சர்க்கரையில் கியூபாவின் தனித்த கலாச்சாரத்தை கெட்டிப்படுத்தும் விளைவை ஏற்படுத்தியது. சர்க்கரையில் இத்தனிக் கலாச்சாரம் வரலாற்று ரீதியாக அதன் பின்தங்கிய நிலைக்கும் ஒடுக்குமுறைக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. 1959 புரட்சிக்கு சற்று முன்னர், கியூபாவின் ஏற்றுமதிகளில் 83% சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. அதில் சர்க்கரை, புகையிலை, நிக்கல், மீன் மற்றும் ஒருசில விவசாய பண்டங்களும் அடங்குவன. சோவியத் அணியிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வுப்பொருட்கள் மற்றும் எந்திரங்களை கியூபா இறக்குமதி செய்தது. அதன் பெரும்பாலான பங்கு உணவை இங்கு குறிப்பிடத் தேவையில்லை.

வீழ்த்தமுடியா "உயர்தலைவர்" பிடல் காஸ்ட்ரோவால் ஆணையிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையில், தீடீர் தீடீரென்று கொண்டுவரப்பட்டவையோ அல்லது செய்த ஒட்டு வேலைகளோ இந்த அடிப்படை உறவினை மாற்றவில்லை. முடிவில் கியூப மக்களால் சுகாதாரம், கல்வி மற்றும் சத்துணவு ஆகியவை தொடர்பாக வென்றெடுக்கப்பட்ட கணிசமான சீர்திருத்தங்கள் இந்த மானியங்களால் தக்கவைக்கப்பட்டிருந்தன. இப்போது ஆட்சியானது நேரடி அந்நிய முதலீட்டின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் படிப்படியாக சிறிது சிறிதாக வெட்டிக் குறைக்கப்பட்டுவருகின்றன.

காஸ்ட்ரோ சோவியத் அதிகாரத்துவத்துடன் பாஸ்டின் பேரத்தில் இறங்கினார். அதில் அவர் அமெரிக்க சோவியத் உறவுகளில் சோவியத் மானியங்கள் பெறுவதற்கு பகடைக்காயாக தொழிற்பட்டார். தவிர்க்க முடியாதவாறு சாத்தான் தனது கணக்கைக் காட்டத் துவங்கியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது கியூபாவுக்கான பொருளாதார பேரழிவை உருவாக்கியது. கியூபா அரசின் பதிலானது, அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஊக்கப்படுத்துவதாகவும் கியூபாவுக்குள்ளேயே அடுக்கடுக்கான சமூகத்தட்டுக்களின் வளர்ச்சியைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்தது. அரசு நடத்துகின்ற செய்தித்தாளான கிராண்மாவிடம் பேட்டி அளிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ரோபர்டோ ரோபெய்னா விவரித்ததாவது: "கியூபாவில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது என்னவெனில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முழு உத்தரவாதத்துடன் கூடிய பொருளாதாரத் திட்டமிடல், இந்தத் திறந்துவிடல் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒவ்வொரு நாளும் அகலமாகவும் ஆழமாகவும் ஆகிவருகிறது.

"மிட்சுபிஷி மோட்டார்ஸ், கேஸ்ட்ரால், யூனிலீவர், ஷெரிட்கோர்டன், க்ருபோசோல், டோடல், மீலியா ஹோட்டல்கள் டோமோஸ், கெணான், பேயர் (Mitsubishi Motors, Castrol, Unilever, Sherrit Gordon, Grupo Sol, Total, Melia Hotels, Domos, ING Bank, Rolex, DHL, Lloyds, Canon, Bayer) இவை வர்த்தக உலகில் வெற்றிகள் பெற்ற பெயர்கள், இவை கியூபாவில் உள்ளன. இந்நிறுவனங்களில் சில உலகில் பெரும் மூலதனத்தைக் கொண்டிருக்கின்றன. அவை நம்மில் தங்களது நம்பிக்கையை வைத்துள்ளன.

"முதலீடு செய்தலை இலகுவாக்கல், பாதுகாப்பு, மரியாதை இலாபம் திரும்பக்கிடைக்க உத்தரவாதம், உயர்மட்ட தனிச்சிறப்புடன் கூடிய ஆட்களின் இருப்பு, இடவசதி, முன்னேறவிருப்பம், பேச்சுவார்த்தைகளில் அக்கறை மற்றும் அவர்களின் கியூப பங்குதாரர்களின் விசுவாசம் ஆகியன, கியூபாவுடன் இணைவதற்கு முடிவுசெய்த சக்திகளுக்கு மிக விருப்பமான அம்சங்களுள் சிலவாகும்.

அவர்கள் கிராண்மாவில் தங்கவில்லையாயினும், அவர்கள் கியூபாவில் இப்பூகோளத்தின் மலிவான உழைப்பை பெறமுடியும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் பயிற்றுவிக்கப்பட்ட போலீஸ் அரசினால் வேலை நிறுத்தமில்லா சூழ்நிலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று இந்த முதலீட்டாளர்களுக்கு ஐயத்திற்கிடமின்றி தனியாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும் அரசு நடத்தும் நிறுவனங்களை தனியார் மயமாக்கல், இலத்தின் அமெரிக்காவின் பெரும்பகுதியில் உள்ளதைக்காட்டிலும், கியூபாவில் தனியார்மயமாக்கல் மிகவும் எளிமையானதாகும். பிரேசில், ஆர்ஜண்டினா மற்றும் ஏனைய நாடுகளில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றங்களால் புதிய சட்டங்களை நிறைவேற்றலும், நீண்ட விவாதங்கள் இடம் பெறலுடன் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புகளும் தேவைப்படும். கியூபாவில் தேவைப்படுவதெல்லாம் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து ஒரு வார்த்தையும் அதனை அவரது அமைச்சரவை விரைந்து அங்கீகரிப்பதுமேயாகும்.

காஸ்ட்ரோ அரசாங்கம் வழக்கமான பாணியில் கியூபப் புரட்சியின் "சமூக வெற்றிகளை" காப்பாற்றும் நோக்கத்திற்காக வெளிநாட்டு முதலாளிகளின் முதலீடு வரவேற்கப்படுகிறது என்று கூறுகிறது. யதார்த்தம் என்னவெனில், முன்னைய காலனித்துவ உலக முழுவதும் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளைப் போலவே காஸ்ட்ரோவின் ஆட்சியும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மலிவான உழைப்பை சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது.

கியூபாவின் விஷயத்தில் இது தீவிரமாக நேரடியாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட வடிவிலும் செய்யப்படுகிறது. கியூப அரசாங்கத்திற்கு கைமேல் உடனடி காசு கிடைப்பதற்காக வெளிநாட்டு கார்ப்பொரேஷன்களுக்கு கியூப உழைப்பு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. அரசாங்கம் தேவையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, இந்தத் தொகையில் சில பகுதியை வட்டார நாணயமான பெசோக்களில் செலுத்துகிறது. வெளிநாட்டுக் கம்பெனிகள் தொழிலாளர்களை இஷ்டம் போல் வேலையை விட்டு நீக்குவதில் முழு உரிமையைத் தக்கவைத்திருக்கின்றன.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி முதலாளித்துவ டாலர் பொருளாதாரத்தால் பேணப்பட்டு வருகிறது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்பில் பெருமளவின் வளம், அமெரிக்காவில் பெருமளவில் தங்கியுள்ள புலம் பெயர்ந்தோர், கியூபாவிலுள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பப்படும் தொகையாக இருக்கிறது.

மற்றொரு கைமேல் உடனடிப்பணம் கிடைக்கும் வடிகால், சுற்றுலாத்துறை ஆகும். இதனை காஸ்ட்ரோ ஆட்சி தனது பொருளாதாரத் திட்டமிடலின் மைய அச்சாக வைத்திருக்கிறது. இதன் விளைவு கியூபா ஒருவகை சுற்றுலா நிற ஒதுக்கல் என்று கூறுமளவுக்கு ஆகிவிட்டது. புது விடுதிகள், சிற்றுண்டி உணவகங்கள், கடைகள் கட்டப்பட்டு வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சாதாரண கியூபர்கள் அதற்கு தடைசெய்யப்பட்டுள்ளனர். விபச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறுமை நிலைக்கும் கீழ் வாழ்கின்றனர்.

காஸ்ட்ரோ ஆட்சியானது தீவின் அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க தடையை காரணமாகக் குற்றம்சாட்டுகிறது. கேள்விக்கிடமில்லாமல் அமெரிக்காவின் கொள்கை சிறிய ஒடுக்கப்படும் நாட்டிற்கெதிரான ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான, பகுத்தறிவுக்கொவ்வாத நடவடிக்கைதான். ஆனால் இக்கொள்கை 35 ஆண்டுகளாக பாதித்து வந்துள்ளது. இதற்கிடையில் உண்மையில் கியூபா உலகிலுள்ள ஏனைய பெரிய நாடு ஒவ்வொன்றுடனும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தது.

கியூபாவின் நெருக்கடி, அடிப்படையில் புரட்சிதன்னின் முதலாளித்துவ பண்பின் வெளிப்பாடாகும். கியூப சமுதாயத்தின் வரலாற்றுப் பிரச்சினைகள் எதனையும் தீர்ப்பதற்கு அது தவறியது. சோவியத் அதிகாரத்துவத்திலிருந்து பெருமளவில் பெற்ற மானியங்களால் முரண்பாடுகள் மூடி மறைக்கப்பட்டு வந்தன.

ஒரு சில நாடுகள் பெருமளவிலான அகதிகளின் வெளியேற்றத்தைக் கண்டிருக்கின்றன. புரட்சியின் முதலாவது ஆண்டுகளில் வெளியேறிய இவ்வகதிகள் பெரும்பாலோருள் முதலாளிகளும், நடுத்தர வர்க்கத்தின் சலுகைமிக்க தட்டினரும் அடங்குவர். ஆனால் 1980களிலும் 1990களிலும் கட்டுமரங்களிலும் காற்றடைக்கப்பட்ட சக்கர டியூப்களிலும் கியூபாவில் இருந்து வெளியேறியவர்கள், ஹைட்டி நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறக் காரணமாயிருந்த அதேபோன்ற சக்திகளினால்தான் வெளியேற நேர்ந்தது. அதாவது பசி மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பதாகும்.

இத்தகைய நிலைகளின் மேல் தங்கி உள்ள ஆட்சி பரந்த கியூப தொழிலாளர்களின் நாட்டங்களை நெரித்து மூச்சுத்திணற வைக்கின்றது. காஸ்ட்ரோ இராணுவ வழிகளின் ஊடாக அரசியல் சர்வாதிகாரத்தினை செய்கிறார். இந்த அரசின் அடிப்படை நிறுவனமான ஆயுதப்படைகள் கியூபாவின் பெரும்பாண்மையான பொருளாதார நிறுவனங்களை நடத்துகின்றன.

காஸ்ட்ரோ கியூப அமைப்பில் வாழ்நாள் தலைவராக போற்றிப்பேணப்படுகிறார். ஆதலால் அவரை எதிர்ப்பதென்பது வெறுமனே "எதிர்ப்புரட்சி" மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு புறம்பானதுமாகும். அவர் அரசின் மற்றும் அரசாங்கத்தின் தலைவரும் அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரும் இராணுவத்தின் முதல் பெரும் படைத் தலைவருமாவார். சுருக்கமாக சொன்னால், அவரது கையில் அனைத்து அதிகாரமும் குவிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் கியூபாவில் ஒவ்வொரு முக்கியமான முடிவின் மேலும் அவரது தனிப்பட்ட அதிகாரத்தை அவர் திணிக்கிறார். எழுபது வயதிலிருக்கும் காஸ்ட்ரோவுக்கு பின்னால் வரக்கூடியவர் பற்றி வலிந்து ஏற்கவைக்கும் பிரச்சினை இருக்கிறது. அவரது சகோதரர் ராவுல் அரசாங்கத்தில், இராணுவத்தில் மற்றும் கட்சியில் அனைத்து துணைப் பதவிகளிலும் அங்கம் வகிக்கிறார்.

ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறமும் காஸ்ட்ரோ ஆட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ இடது ஆதரவாளர்கள் மறுபுறமுமாக உருப்படுத்திக்காட்டும் ஒன்றாக கியூபா சோசலித்துடன் இனங்காட்டப்படும் அந்த மட்டமானது, முதலாளித்துவத்துக்கு சோசலிச மாற்று எனும் கருத்துருவினை கொச்சைப்படுத்தும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில்.

தொகுப்பு

மார்க்சின் கீழான முதலாம் அகிலம் "தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளர்கள் தம்மின் பணியாகவே இருக்கவேண்டும்" என்ற முழக்கத்தை சேர்த்தது. அதாவது, இறுதி ஆய்வில் சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் சுயநிர்ணயம் ஆகும். அது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட முடியாதது அல்லது அவர்கள் சார்பாக செயலாற்றும் வேறு வர்க்க சக்திகளால் அவர்களுக்காக வென்று எடுக்கமுடியாதது. அது தொழிலாள வர்க்கம் தனக்காகவும் அனைத்து மனித குலத்துக்காகவும் சமுதாயத்தை மாற்றுவதற்கு, ஒரு வர்க்கமாக ஜனநாயகரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவு பூர்வமான போராட்டத்தின் விளைபொருளாக மட்டுமே இருக்கமுடியும்.

1960களில் மற்றும் 1970களில் தொழிலாள வர்க்கத்தை நிராகரித்து, சோசலிசத்துக்கு வசதியான குறுக்குவழியை வழங்கும் மற்றைய அதிபுரட்சிகர வாகனங்களை கண்டுபிடித்திருப்பதாகக் கூறிய அனைத்து வகையான நவநாகரிக தத்துவங்களுக்கும் எதிராக, அனைத்துலக குழு இம்முன்னோக்கை பாதுகாத்தது. முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையிலான ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தத்துவங்களில் ஒன்றுகூட உருப்படியில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்ட போராட்டம் வரலாற்றில் சக்திமிக்கவகையில் நிரூபணமாயிற்று.

அனைத்துலக் குழுவின் விடாப்படியான போராட்டம் பற்றியும் அது காஸ்ட்ரோயிசத்தின் முன் மண்டியிடுவதற்கு மறுத்தமை பற்றியும் ஜோசப் ஹான்சன் கூறியதை நாம் நினைவுகூர்வோம். இந்நிலைப்பாட்டை "இலத்தின் அமெரிக்காவில் அரசியல் தற்கொலை" என அவர் எச்சரித்தார். உண்மையில் என்ன நிகழ்ந்தது? பப்லோவாத திருத்தல் வாதமும் அதன் காஸ்ட்ரோ வாதத்துக்கான ஆதரவும் தீவிரமயப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை தற்கொலை சாகசங்களுக்கு இட்டுச்சென்றது. அதற்காக தொழிலாள வர்க்கம் பெரும் விலைகொடுத்தது.

காஸ்ட்ரோ இசத்துக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலுக்கு கீழ்ப்படுத்தியிருந்த பப்லோவாத செல்வாக்கின் கீழான சக்திகளுக்கு தங்களைப் பொருத்திக் கொள்வதற்குப் பதிலாக, தங்களை ஈவுஇரக்கமற்ற விமர்சனத்துக்கு ஆளாக்கியிருந்தால் என்ன விளைந்திருக்கும்?

நிச்சயமாக அதன் விளைவு குறைந்தபட்சம் குட்டிமுதலாளித்துவத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தற்காலிக தனிமைப்படலுடன் ஒன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்நிகழ்வில் அவர்கள் தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் மிகவும் முன்னேறிய பகுதிகளைப் பயிற்றுவித்திருக்கமுடியும். இப்போராட்டத்தின் மூலம் தலைமை, புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டக்கூடிய தலைமையை தயாரிப்புச் செய்திருக்க முடியும். இது உலக முதலாளித்துவத்தின் தற்காலிக மறுநிலைப்படுத்தலை சாதிக்க உதவிசெய்யும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு பதிலாக, இலத்தின் அமெரிக்காவில் உலக சோசலிசப் புரட்சிக்கு சக்திமிக்க தூண்டு விசையை வழங்கியிருக்கமுடியும்.

இந்த மூலோபாய அனுபவத்திலிருந்து நாம் கட்டாயம் பெறவேண்டிய முக்கிய படிப்பினைகள் மார்க்சிஸ்டுகளின் விமர்சன ரீதியான பொறுப்புக்களை குறிக்கிறது. அவர்களது பணி சோசலிசப் புரட்சியினை தன்னியல்பாக நிறைவேற்றும் சிலவகை சக்திகளுக்கு தங்களை அனுசரிப்பது மற்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அல்ல. இன்னும் சொல்லப்போனால், விட்டுக்கொடுக்காத தத்துவார்த்த உறுதிப்பாடு மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு உண்மையைக் கூறுவது ஆகிய இவற்றில் தங்களை தளப்படுத்தியிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர கட்சிகளைக் கட்டுவதாகும்.

இலத்தின் அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள புறச் சூழ்நிலைகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பொறுப்பெடுக்கப்பட்ட இப்போராட்டம் கோடிக்கணக்கானவர்களின் புரட்சிகர இயக்கத்துடன் ஊடறுத்துச் செல்லக்கூடிய கட்டத்திற்கு பக்குவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்திலிருந்து இந்த இயக்கம் உட்கிரகித்த படிப்பினைகள் இருபத்தோராம் நூற்றாண்டில் அதனை நிறைவேற்றுவதற்கான தீர்க்கமானவைகளாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்:

கியூபாவில் பெரும் பணிநீக்கங்கள்: காஸ்ட்ரோயிசத்தின் முட்டுச் சந்து

Bill Van Auken
17 September 2010

ஒபாமா மற்றும் காஸ்ட்ரோ அமெரிக்க-கியூபா உறவுகளைச் "சீராக்க" நகர்கின்றனர்

By Bill Van Auken
18 December 2014 

அமெரிக்க-கியூப நல்லிணக்கம்: வரலாற்று படிப்பினைகள்

Bill Van Auken and David North
19 December 2014

OAS உச்சி மாநாட்டில் ஒபாமாவும் காஸ்ட்ரோவும்

Bill Van Auken
14 April 2015