ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian government’s demonetisation causes mass hardship and economic chaos

இந்திய அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்கும் நடவடிக்கையானது பாரிய துன்பங்களையும், பொருளாதார குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது

By Kranti Kumara and Arun Kumar 
21 November 2016

நவம்பர் 8 செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில், நரேந்திர மோடி தலைமையிலான இந்துமத மேலாதிக்கவாத பிஜேபி அரசாங்கம், "பணம் செல்லாததாக்கும்" என்ற அதன் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பின் மூலம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் (சுமார் 7.50 டாலர் மற்றும் 15 டாலர் மதிப்பிலானது) அந்த நாளின் நள்ளிரவு முதல் செல்லாதாக்கியது.

வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டு கையில் இருப்பில் உள்ள, மற்றும் அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்த இறுதி நாளாக டிசம்பர் 31ம் தேதியினை அரசாங்கம் நிர்ணயித்து இருந்தது. மேலும், நாளொன்றுக்கு ரூபாய் 4000 வரை மட்டுமே பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுக்களை பெற முடியும் என்ற வரம்பினையும் விதித்தது. இந்த வரம்பினையும் பின்னர், நாளொன்றுக்கு ரூபாய் 2000 எனக் குறைத்தது.

நாடு முழுமையிலும் அனைத்து வங்கிகளுக்கு வெளியேயும் மக்களின் நீண்ட வரிசையிலான காத்திருப்பினை உருவாக்குகின்ற உடனடி மற்றும் மிகப்பரவலான சமூக தாக்கத்தினை இது ஏற்படுத்தியது. பல மில்லியன் கணக்கிலான மக்கள், அதிலும் இவர்களில் பெரும்பாலானோர் நாள்தோறும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக இருந்தாலும் சரி அல்லது பழைய நோட்டுக்களை மாற்றுவதாக இருந்தாலும் சரி ஒரு தடவைக்கு பல மணி நேரங்களை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். மேலும், அன்றாட வாழ்க்கையும் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் தீவிர பாதிப்பினை ஏற்படுத்தியது.

அன்றாட செலவினங்களுக்காக பணம் பெறுவதற்கு மக்கள் அவசரமாக முயற்சிக்கும் வேளையில் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம்.கள் குறைந்தளவிலான மதிப்புள்ள நாணயங்கள் தீர்ந்துபோன நிலையை திரும்ப திரும்ப எதிர்கொண்டன.

வங்கிகளோ அல்லது பணபரிமாற்ற வசதிக்கான ஏதேனும் ஒரு இயந்திரநுட்ப முறையோ இதுவரை கொண்டுவரப்படாத கிராம பகுதிகள் மற்றும் சிறிய நகரங்களில் வேண்டுமானால் உணவு மற்றும் எரிபொருள் ஆகிய அன்றாட தேவையிலான பொருட்களை மக்கள் வாங்க இயலாத நிலை போன்ற தீவிர பாதிப்பினை தராத குறைந்தபட்ச விளைவினை இது ஏற்படுத்தியிருக்கலாம். இன்னும் கூடுதலாக சொல்வதானால், சிறு விவசாயிகள் தங்களது பழுதடைந்துபோகக்கூடிய உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்களுக்கு விற்க இயலாத நிலையில் உள்ளனர். ஏனென்றால், இந்த சிறுவணிக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ரொக்கத்திற்கே நடைபெறுகின்றன.

இந்திய மக்கள் தொகை 1.2 பில்லியன் இல் பெரும் பெரும்பான்மையை உள்ளடக்கிய தொழிலாள வர்க்கம், இதர உழைப்பாளிகள் மற்றும் ஏழைகள் ஆகியோர் மீதே மிகப்பெரிய தாக்கத்தை இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 8 அறிவிப்பிற்கு பின்னர் மறுநாளிலேயே, உணவு பொருட்கள் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் செல்லத்தக்க மதிப்பிலான பணம் இல்லாத நிலையில் அநேகரால் சாப்பிட இயலவில்லை. இன்னும் சிலராலோ அவசர மருத்துவ உதவிகள் பெற இயலவில்லை.

நவம்பர் 8ல் இருந்து இந்த பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையினால் உருவான நேரடியான அல்லது மறைமுகமான இடையூறுகளின் காரணமாக குறைந்தபட்சம் 55 பேர் இறந்திருக்கலாம் என்று செய்தி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறப்புகள் குறித்து மோடி அரசாங்கம் ஒரு இறுக்கமான மௌனத்தையே சாதிப்பதுடன், சந்தேகமின்றி இதனை தமக்கு சிரமமானதுதான் என்று பார்க்கின்றபோதிலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய "கூட்டு சேதமே" என்றும் கருதுகின்றனர்.

வெகுஜன துன்பத்திற்கு காரணமான இந்த மோடி அரசாங்கம் மிகுந்த அலட்சியத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இதற்கு ஏற்றவாறே, தற்போது நிழவிய எந்தவொரு பாதிப்பும், துன்பமும் "நீண்டகால ஆதாயம் பெறுவதற்கான தற்காலிக வலியே" என்று நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.

இதுபோன்ற மனித நேயமற்ற அரசியல் அலட்சிய தன்மைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு எச்சரிக்கையை கொண்டுவந்துள்ளது. பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படவேண்டும் என்பது குறித்த ஒரு அவசர தீர்மானத்தின் மீது நடந்த விசாரணையின் போது, இந்த பாரிய துயரத்தினைப் போக்குவதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லையானால் வெகு விரைவில் வன்முறைகள் வெடிக்கும் நிலையே உருவாகும் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு ஊழலுக்கு எதிரானவர் என்ற போலிப்போர்வையை அணிந்துகொண்டுள்ள, ஒரு சுயதன்மைகொண்ட இந்துமத தீவிரவாதி மற்றும் பெரும் வணிக நிறுவனங்களின் வெட்கம்கெட்ட அரசியல் முகவராகவும் இருக்கும் மோடி, தனது அரசாங்கத்தின் இந்த அதிரடியான பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையை, கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு உள்ளே இந்தியா நடத்திய முன்னெப்போதும் நிகழாததும், சட்டவிரோதமானதும் மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டல்களுடன்கூடிய இராணுவ தாக்குதல்களுடன் உருவகப்படுத்தி அதற்கு ஈடான "கருப்பு பணத்திற்கு" எதிரானதொரு "நுட்பமான தாக்குதல்" போன்றதே என்கிறார்.

"பல ஆண்டுகளாக" "ஊழல், கருப்பு பணம் மற்றும் பயங்கரவாதம் போன்ற புரையோடிய புண்களே, அபிவிருத்தியை நோக்கிய ஓட்டத்தில் நமக்கு பின்னடைவினை கொடுக்கின்றன என்பதை இந்த நாடு உணர்ந்துள்ளது. எனவே, ஊழல் பிடியில் இருந்து முறித்துக்கொள்வதற்கு....... தற்போது பயன்பாட்டில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று நடு இரவிலிருந்து இனிமேல் எப்போதும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதாக இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம் என்று தேசிய அளவிலான ஒரு தொலைக்காட்சி உரையில் மோடி அறிவித்தார்.

வளைந்து கொடுக்கும் மற்றும் துதிபாடும் பெரும் நிறுவனங்கள், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு, இதனை கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு "திறம்பட்ட தாக்குதலான" நகர்வு என்று பாராட்டி திளைத்துப் போயினர். அதாவது கருப்பு பணம் என்பது வரித்துறையினருக்கு கணக்கில்காட்டப்படாத சொத்து மதிப்பு ஆகும். அந்த வகையில் நிலபுலன்கள், தங்கம் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்து மறைத்து வைத்திருப்பது, வெளிநாடுகள் அல்லது உள்நாட்டு வங்கி கணக்குகளில் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பது என்பதாகும்.

தொழிலதிபர்கள், கிராம பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் போன்ற இந்திய சமூகத்தின் மிக அதிக சலுகை பெற்றுள்ள பிரிவினர்களிடையே தான் மிகப்பெரிய அளவிலான இந்தியாவின் "கருப்பு பணம்," பதுக்கிவைக்கப்பட்டு  இருப்பதாக பொதுவாக அறியப்படுகிறது. இது, இந்தியன் எக்ஸ்பிரஸ் இன் ஒரு பத்தியில், தொழிலதிபரும் மற்றும் நவீன தாராளவாத பொருளாதாரவாதியுமான சுர்ஜித் S. பல்லா என்பவரால் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்படடுள்ளது. மேலும் அவர், "கருப்பு பண" எழுச்சி என்பது 1960களின் இறுதியில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் மற்றும் அரசாங்க அதிகாரத்துவங்களின் ஒழுங்கமைப்பு அதிகாரத்தினால்  பணக்காரர்கள் மற்றும் ஓரளவு வசதியானவர்கள் மீது சுமத்தப்பட்ட உயர் வரி விகிதங்கள் குறித்த ஒரு புரிந்துகொள்ளத்தக்க மற்றும் புகழத்தக்க விடையிறுப்பாக இதனை கருதலாம் என விவாதிக்கிறார்.

மோடியின் "பணம் செல்லாததாக்குதல்" திட்டமானது இந்த அடுக்கினர் மற்றும் அவர்களது சட்டவிரோத சொத்துக்கள் மீது சிறு அளவிலான தாக்கத்தைக்கூட கொண்டிருக்காது.

ஊழல் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக காட்டிக்கொள்வது என்பது ஒரு மூடிமறைப்பாகும். அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை வெகுஜனங்களின் மீது மேலும் மாற்றிவிடுவதேயாகும். அந்த வகையில், பிஜேபி அரசாங்கத்தினால் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஒரு புதிய தேசிய அளவிலான 18 சதவிகித பொருட்கள் மற்றும் சேவை வரி உயர்வு, உழைக்கும் மக்கள் வருமானங்கள் மீதான வரி விதிப்பு ஆகியவற்றினாலான அவர்களுடைய இழப்பில் இந்தியாவின் வங்கி அமைப்புக்களுக்கு முட்டு கொடுக்க வழிசெய்வதேயாகும்.

இந்திய மற்றும் சர்வதேச அளவிலான பெரும் வணிகர்கள் மோடியின் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை குறித்து பாராட்டியிருப்பதில் வியப்பேதும் ஏதுமில்லை.

"ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சட்டவிரோதமான நிதிய பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

"உயர் மதிப்பிலான நோட்டுக்களை மதிப்பு குறைப்புக்கு உட்படுத்துவது என்பது பண வடிவிலான சொத்துகுவிப்பினை கட்டுப்படுத்தவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக இருக்க இயலும்" என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (Confederation of Indian Industry-CII) செயலாளர் நவுஷத் ஃபோர்ப்ஸ் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் ஹர்ஷவர்தன் நியோட்டியா மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் "ஒரு மிக துணிச்சலான நகர்வு" என இதனை பாராட்டினார். மேலும், "இது நாட்டின் இணைப்பொருளாதாரத்தில் ஒரு தளர்வு ஏற்படுத்தும் தாக்கத்தினை ஏற்படுத்தும், அதேபோல பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பின் மீதும் இது ஒரு கடுமையான தாக்கத்தை கொடுக்கும்." என்றும் நியோட்டியா கூறுகிறார்.

"உயர் மதிப்பிலானது" என்பதற்கு அப்பால், பண செல்லாததாக்குதல் நடவடிக்கையின் இலக்கிலான இந்த நோட்டுக்கள், இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் நோட்டுக்களில், அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் நோட்டுக்கள் ஆகும் மற்றும் அன்றாட பண பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் அத்தியாவசியமானவையாகவும் இருக்கின்றன, என்பது உற்சாகமூட்டும் பெறுநிறுவன செய்தி ஊடகங்கள் மற்றும் வர்த்தக செய்தி தொடர்பாளர்களின் கருத்தாகும். இந்திய நோட்டுக்களில் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் 47.8 சதவிகிதத்தையும், 1000 ரூபாய் நோட்டுக்கள் மேலும் 38.4 சதவிகிதத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.

அதிகளவில் நிதி தேவையினை கொண்டிருக்கும் இந்தியாவின் பிரதான மற்றும் அரசுடமையான வங்கித் துறைக்கு தீவிர நிதி வழங்கலை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்குதல் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். முதலாவதாக, வர்த்தக கடன்கள் முறையாக திரும்ப செலுத்தப்படாமல் இருப்பது அல்லது எப்பொழுதாவது செலுத்தப்படுவது என்ற வகையிலான "செயற்படா சொத்து" (Non-Performing Assets-NPA) அதிகரிப்பினால் பொது துறை வங்கிகள் (Public Sector Banks-PSBs) கட்டுப்படுத்தபடுகின்றன. ஏனென்றால் அவர்களது செயற்படா சொத்துக்கள் வடிவிலான வராக்கடன்கள் குறித்த அச்சுறுத்தல்கள் மாபெரும் அளவிலானது, ஆகையினால் இந்திய வங்கிகள் இந்தியாவின் மூலதன இறக்கம் கொண்ட மற்றும் ஏற்கனவே அளவிற்கு அதிக பயன்களைப் பெற்ற வர்த்தக அமைப்புக்களுக்கு கடன் வழங்குவதிலிருந்து பின்வாங்கியுள்ளன. மேலும், ஏற்கனவே தொழில்துறை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் விற்பனைப் பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட கடும் வீழ்ச்சி கண்டுள்ள முக்கிய துறைகளின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் நிலைக்கு கடன் போதாமையினால் உருவாகும் அச்சுறுத்தல்கள்  திரும்பியிருக்கின்றன.

ஜுன் 2016 வரை, வங்கிகளின் மொத்த NPS மதிப்பு ரூபாய் 6 ட்ரில்லியன் ($90 billion) ஆக இருந்தது, ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் அநேகமாக இப்பிரச்சனையை பொதுவாக குறைத்து காட்டுகின்றன.

எது நேர்ந்தாலும், நவம்பர் 14 அன்று, பண செல்லாததாக்குதல் அறிவிப்புக்கு அடுத்து 6 நாட்களுக்கு பின்னர், மொத்த இந்தியன் வங்கி வைப்புக்களின் மதிப்பு முன்னதாகவே ரூபாய் 4 ட்ரில்லியனை ($60 billion) தாண்டியிருந்தது. இந்த மொத்த வைப்பு தொகையின் பெரும்பகுதி செலவினங்களுக்காக வங்கியிலிருந்து திரும்ப எடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இந்த வைப்புத் தொகை மதிப்பீட்டில் 10-15 சதவிகிதம் வங்கி அமைப்புக்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா மதிப்பீடு செய்கிறார்.

பணம் வைத்திருப்பவர்களை அவர்களது கையிருப்பு தொகையினை வங்கியில் செலுத்த கட்டாயப்படுத்துவதால், அரசாங்கம் அதன் பெரும் நிதி பற்றாக்குறையினை பூர்த்தி செய்வதற்கு ஏதுவான வகையில் எதிர்பாரா வருமான வரியினை சேகரிக்க இயலும் என்று அரசாங்கமும் நம்புகின்றது. டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்ற இந்த பணம் செல்லாததாக்குதல் செய்யப்பட்ட நோட்டுக்களின் மதிப்பானது ரூபாய் 250,000 ($3,700) இனை தாண்டுவதாகவும் இருந்து, ஒருவரது வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட வைப்புத் தொகைக்கும் இடையில் "பொருத்தமின்மையும்" இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டியிருப்பது மட்டும் அல்லாமல், 200 சதவிகிதம் வரையிலான அபராதங்களும் செலுத்த வேண்டிவரும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நவம்பர் 8ம் தேதிக்கு முன்புவரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் இருந்த மொத்த மதிப்பீட்டு தொகை ரூபாய் 14 ட்ரில்லியனில் கிட்டத்தட்ட ரூபாய் 3 ட்ரில்லியன் ($45 billion) வரையிலான தொகை கணக்கில் செலுத்தப்படாமலும் அல்லது புதிய நோட்டுகளாக மாற்றப்படாமலும் விட்டுவைக்கப்பட்டு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணிசமான அளவிலான தொகை இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை குறிப்பில் ஒரு வரவாக குறித்து காட்டப்பட்டு, பின்னர் அரசாங்க கஜானாவிற்கு இது ஒரு "பங்காதாயமாக" கருதி மாற்றம் செய்யப்பட்டுவிடும்.

பேரார்வத்துடன் பெரு வணிக சார்பு உடைய பிஜேபி அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கு இவற்றின், நிலைபாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு மூன்றாவது நன்மை யாதெனில் இந்த பணம் செல்லாததாக்குதல் திட்டமானது வங்கி அமைப்பு முறையில் அதிகளவிலான மக்கள் பங்கேற்பினை கட்டாயமாக்கும் என்பதாகும். இந்தியாவில் பெருமளவிலான மக்கள் வங்கியில் ஒரு கணக்கு கூட வைத்திருக்கவில்லை. இது ஏனென்றால் அவர்களுக்கு வங்கி அணுகுமுறை அவ்வளவு எளிதானதாக இல்லாமலிருக்கலாம் - பல ஊரக பகுதிகளில் வங்கிகள் இல்லாமலும் இருக்கலாம் - அல்லது அவர்கள் வங்கியில் கணக்கு வைத்து பராமரிக்கும் அளவிற்கு அவர்களிடம் குறைந்த அளவிலான கையிருப்புகூட இல்லாத நிலையில் மிகவும் நலிவுற்றவர்களாக இருக்கலாம்.

அதன் விளைவாக, நகர்புறங்களில் கூட பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் ரொக்கத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. மக்களை வங்கிகளில் கணக்கு துவங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் வரலாற்று அடிப்படையிலான பின்தங்கிய தன்மையினையும், அதேபோன்று இந்திய முதலாளித்துவத்தின் வங்கி முறை மற்றும் அதன் எல்லையினை வலுப்படுத்துவதன் மூலம் பின்தங்கிய முதலாளித்துவ பொருளாதாரத்தையும் "நவீனப்படுத்த" மோடி ஆட்சி முயன்றுவருகிறது. பிஜேபி அரசாங்கம் அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாக வங்கி அமைப்புக்களின் பெரும் பகுதிகளை தனியார்மயமாக்குவதற்கு முன்னெடுக்கும் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது.

பிஜேபி அரசாங்கம் மற்றும் இந்தியாவின் உயரடுக்கு அவர்களது இந்த பணம் செல்லாததாக்குதல் திட்டத்தின் உண்மையினையும் மற்றும் அதன் மறைமுகமான இலக்குகளையும் எந்த அளவுக்கு உணர்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அது குறுகிய காலத்தில் இந்திய வங்கி முறை மற்றும் அரசாங்க நிதியிலும் எந்தவிதமான வலிநிவாரண தாக்கத்தைக் கொண்டுருப்பினும், பணம் செல்லாததாக்குதல் என்பது பாரிய மக்களின் அதிருப்தியினை மேலும் தூண்டுவதாகவே இருக்கின்றது, மேலும் இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு உயர் வளர்ச்சி விகிதத்தினை அடைவது பற்றிய மோடியின் கூற்று ஒருபுறம் இருந்தாலும், உலக முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பிற்கு உள்ளான நிலையிலேயே இந்திய பொருளாதாரம் உள்ளது. கடந்த வாரம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், மேலும் 2015 முழுவதிலும் 150,000க்கும் குறைவான எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புக்களே உருவாக்கப்பட்டன என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.