ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mosul and imperialist “human rights”

மொசூல் நகரும் ஏகாதிபத்தியத்தின் ”மனித உரிமைகளும்”

James Cogan
2 December 2016

போரால் நாசமடைந்திருக்கும் அலெப்போ நகரில் அப்பாவி மக்களின் நிலைக்கு சிரியா மற்றும் ரஷ்யாவை கண்டனம் செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மீண்டும் புதன்கிழமையன்று அவசர அமர்வைக் கூட்டியது.

சென்ற வார இறுதியில் சிரிய அரசாங்க-ஆதரவுப் படைகள், ரஷ்ய உதவியுடன் நடத்தியிருந்த ஒரு தாக்குதலில், அல்கெய்தாவுடன் தொடர்புடைய மற்றும் மற்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் 2011 இல் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரைத் தொடக்கியது முதலாக அவற்றின் பிடியில் இருந்து வந்திருந்த நகரின் 40 சதவீத பகுதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடம் இருந்து தப்பி வருகின்றனர். ஆண்டின் இறுதிக்குள்ளாக அலெப்போ முழுமையையும் மீண்டும் கைப்பற்றி விடுவோம் என்று சிரிய அரசாங்க அதிகாரிகள் திட்டவட்டமாய் கூறியிருக்கின்றனர்.

பாதுகாப்பு கவுன்சிலில் பேசியவர்களில் ஐ.நா வுக்கான அமெரிக்க தூதரான சமந்தா பவரும் இருந்தார். ஒபாமா நிர்வாகத்தின் -அசாத்திற்கு எதிரான போருக்கு முன்முயற்சியெடுப்பதில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் இது செயலூக்கத்துடன் சூழ்ச்சியில் ஈடுபட்டு வந்திருந்தது- பிரதிநிதியாக பவர் பேசினார். அமெரிக்கா “கிளர்ச்சியாளர்களுக்கு” ஆளெடுப்பதற்காகவும், நிதியாதாரமளிப்பதற்காகவும், ஆயுதமளிப்பதற்காகவும் துருக்கி, சவுதி அரேபியா, வளைகுடாவின் முடியாட்சி அரசுகள் மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து வேலைசெய்து வந்திருக்கிறது.

அசாத் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளின் பொதுவான தோல்வியை சமிக்கையளிக்கும் விதமாக, வரும் வாரங்களில் அதன் தீவிரவாதக் குழு பினாமிகளின் பெரும் பிரிவுகள் அழிக்கப்படும் சாத்தியத்தைக் குறித்து அமெரிக்கா சிந்தித்து வருகின்ற நிலையில் தான், பவர் பேசினார். ஒரு உடனடியான சண்டைநிறுத்தத்திற்கும் “சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு இணங்கி நடப்பதற்கு”ம் அவர் கோரினார்.

உணர்ச்சிகர மொழியில், பவர் அறிவித்தார்: “உங்களது அன்றாட வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கிழக்கு அலெப்போவில் இருந்து வருகின்ற படங்களைப் பார்க்குமாறு சபை அங்கத்தவர்களையும் உலகத்தின் அத்தனை குடிமக்களையும் நான் கேட்டுக் கொள்வேன். பெற்றோர் துயரத்துடன் தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுகிறார்கள், அப்பாவி மக்கள் கிட்டத்தட்ட தங்கள் பெட்டி படுக்கைகளை சுமந்த வண்ணம் வீழ்ந்து கிடக்கிறார்கள், அவை அந்த உயிரற்ற உடல்களின் பக்கவாட்டில் இருக்கின்றன.”

அலெப்போவில் ரஷ்ய-உதவியுடன் சிரிய அரசாங்கம் நடத்தியிருக்கும் தாக்குதல் மிருகத்தனமானதாகவும் இரக்கமற்றதாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமிருக்க முடியாது. ஆயினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கவலை கொட்டும் தொழிலில் -இவை கடந்த 25 ஆண்டுகளில் மத்திய கிழக்கின் பெரும் பகுதியை நாசம் செய்திருக்கின்றன- எந்த அரசியல் அல்லது அறநெறியான வலுவும் இல்லை. ஈராக் நகரமான மொசூலில் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் இப்போது நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதலின் தன்மையைக் கொண்டு பார்த்தால், பவரின் வாய்ஜாலமும் பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து போன்ற அமெரிக்காவின் கூட்டாளிகள் பாதுகாப்பு கவுன்சிலில் வழங்கியிருக்கக் கூடிய இதேபோன்ற அறிக்கைகளும் இன்னும் அதிக அவலட்சணமாய் தோன்றும்.

அலெப்போவின் கிழக்கே 600 கிலோமீட்டர் தூரத்தில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், சிரியாவில் அமெரிக்காவின் சூழ்ச்சி வேலைகளால் வலுப்பெற்று ஈராக்கிற்குள் நுழைந்து 2014 இல் மொசூல் நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ISIS க்கு எதிரான ஈராக்கிய அரசாங்கத்தின் தாக்குதல் ஒன்றுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. இந்நகரம் இப்போது பத்தாயிரக்கணக்கான ஈராக்கிய இராணுவத் துருப்புகளாலும், குர்துப் படைகளாலும் மற்றும் பல்வேறு ஷியா தீவிரவாதக் குழு உறுப்பினர்களாலும் முழுமையாக சூழப்பட்டிருப்பதாக பாக்தாத்தில் அமர்ந்திருக்கும் அமெரிக்க-ஆதரவு ஆட்சி கூறுகிறது. 

"அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக மிகப்பெரும் அளவில் படைவலிமை பயன்படுத்துவதை” அமெரிக்க-தலைமையிலான படைகள் தவிர்த்து வருவதாக Associated Press செய்திகளில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டதான ஒன்று அப்பட்டமான பிரச்சாரமாகும். ISIS போராளிகள் “சாகும் வரை போராடும்” எண்ணத்துடன் இருப்பதாக திட்டவட்டம் செய்து ஆகவே பேச்சுவார்த்தைக்கான எந்த சாத்தியத்தையும் ஈராக்கிய இராணுவம் நிராகரித்து விட்டிருக்கிறது. நகரில் மாட்டிக் கொண்டிருக்கும் 1.6 மில்லியன் வரையான அப்பாவி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தும் துண்டறிக்கைகள் வீசப்பட்டு, அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஆஸ்திரேலிய, கனடா மற்றும் ஜோர்டான் “கூட்டணியின்” விமானம் ISIS நிலையாக சந்தேகப்படுவதன் மீது குண்டுவீசுகிறது. வான்தாக்குதல் அச்சத்தால் குடும்பங்கள் குடியிருப்புகளின் கீழ்தளங்களில் குவிந்து வருகின்றனர் என்று உதவி அமைப்பான REACH இன் நவம்பர் 24 அன்றான மனிதாபிமான நிலைச் சுருக்க அறிக்கை தெரிவிக்கிறது.

ஈராக்கின் சிறப்புப் படைப் பிரிவுகள், அநேக சந்தர்ப்பங்களில் அமெரிக்கப் படைகள் துணைவர, கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, ஒவ்வொரு இடமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் பயன்படுத்தும் தந்திரோபாயம் எளிமையானது, கொடூரமானது, அத்துடன் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அப்பாவி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதைக் கொண்டு பார்த்தால், கொலைபாதகமானது. ISIS ஆல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற அல்லது வெடிகுண்டுகள் இருக்கும் இடமாக சந்தேகப்படும் எந்த ஒரு கட்டிடத்தையும் அழிப்பதற்கு அவர்கள் விமானத் தாக்குதல்களையும், ஆட்டிலறி அல்லது டாங்கிகளையும் பயன்படுத்துகின்றனர். ISIS மக்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்துவதாகக் கூறி அப்பாவி மக்களின் உயிர்சேதங்களுக்கு முன்கூட்டியே நியாயம் கற்பித்து விடுகின்றனர்.

இந்த வாரத்தில் 1,000 ISIS போராளிகளை கொன்றிருப்பதாக ஈராக் இராணுவம் பெருமையுடன் கூறிய நேரத்தில், அரசுக்கு ஆதரவான மற்றும் குர்தீஷ் துருப்புகளில் 3700 பேருக்கும் அதிகமாய் கொன்றிருப்பதாக ISIS கூறியிருக்கிறது. அப்பாவி மக்களில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து இருதரப்பிடம் இருந்தும் நம்பகமான பதில்கள் வருவதில்லை, ஆனால் அந்த எண்ணிக்கை அதிகமாய் இருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. மொசூலில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேற்கு எர்பில் மருத்துவமனையில் அன்றாடம் காயம்பட்ட இராணுவத்தினர் மற்றும் அப்பாவி மக்கள் 150 பேர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கப் படைகளின் பிடியில் இருக்கும் பகுதியில் காயம்பட்ட மக்கள் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல முடியும். இதுவரையில், 70,000 பேர் மட்டுமே தப்பிப் பிழைக்க முடிந்திருக்கிறது.

4,000 வருடத்திற்கும் அதிகமான ஒரு வரலாற்றைக் கொண்ட மொசூல் நகரமானது “அதனைக் காப்பாற்ற” கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வார குண்டுவீச்சில் கிழக்கின் புறநகர்ப் பகுதியில் ஒரு முக்கிய நீர்க்குழாய் பாதை அழிக்கப்பட்டதையடுத்து, சுமார் 650,000 மக்களுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் ஏற்கனவே பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உணவுப் பொருட்களின் விநியோகம் குறைந்து செல்வதால் விலைகள் இரட்டிப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நகரின் சுகாதார அமைப்புமுறை செயலிழந்து கிடக்கிறது. பல்கலைக்கழகம் மற்றும் ஏராளமான பிற பொதுக் கட்டிடங்கள் குப்பைக்கூளங்களாகக் குறைக்கப்பட்டு விட்டிருக்கின்றன. புதன்கிழமையன்று, டைக்ரிஸ் நதியின் மேல் அமைந்திருக்கும் மொசூலின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கின்ற நான்கு முக்கிய பாலங்களை கூட்டணி விமானங்கள் குண்டுவீசி “முடக்கி”யதை அடுத்து, கிழக்கில் இருக்கும் மக்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் சாத்தியத்தில் இருந்து மேலும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மொசூல் முற்றுகை, பல மாதங்கள் இல்லாவிடின், பல வாரங்களுக்கேனும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்காலமும் உறையவைக்கும் வெப்பநிலைகளும் வந்து கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக, குழந்தைகள், பலவீனமானவர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் குண்டுவீச்சை விடவும் அதிகமாய் உறைவிடமின்மையும், பட்டினியும் மற்றும் நோயும் அதிகமான உயிர்களைக் கொல்லும் சாத்தியமிருக்கிறது.

ஒபாமா நிர்வாகம், இந்த வாரத்தில் மொசூலில் சண்டைநிறுத்தங்களையோ அல்லது “சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு இணங்கி நடக்கவோ” கேட்கவில்லை. போர்க் குற்றங்களை நோக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் மனோநிலையானது அவற்றால் அவர்களுக்கு ஆதாயமிருக்கிறதா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அலெப்போவில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் நலன்கள் பின்னடைவதால், அங்கு கண்டனமும் நடவடிக்கைக்கான அழைப்புகளும் எழுகின்றன. மொசூலில், அமெரிக்க நலன்களே நிலைநாட்டப்படுவதால், அங்கே நடக்கும் அப்பாவி மக்களின் உயிர்ப்பலிகள் தணித்துக் காட்டப்படுகின்றன அல்லது அப்பட்டமாக மறுக்கப்படுகின்றன.

ஏகாதிபத்தியத்தின் மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகள் “மனித உரிமைகள்” குறித்துப் பேசுகையில், இகழ்ச்சியையும் குரோதத்தையும் காட்டுவதே தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நிலைப்பாடாக இருக்க வேண்டும். முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவது மட்டுமே ஏகாதிபத்தியப் போர் மற்றும் நவ-காலனித்துவ சூழ்ச்சிகளின் குற்றங்களுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழியாகும்.