ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The specter of catastrophe returns

பேரழிவின் கோரக் காட்சிகள் மீண்டும் திரும்புகின்றன

David North
17 May 2010

ஐயத்திற்கிடமில்லாமல் நெருக்கடித் தன்மைகளில், 2010ல் உள்ள உலகமானது முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றிற்கு முன் இருந்த நிலைமைகளை ஒத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பூகோள-அரசியல் பதட்டங்கள் மற்றும் சமூக உறுதியற்ற தன்மை ஆகியவை 1945 இலிருந்து எப்பொழுதும் இல்லாத வகையில் அதிகமாக இன்று இருக்கின்றன என்று ஜனவரி 2010ல் "சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்" என்ற அறிக்கையில் கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நாம் மிகக்கடினமான நிலைமையை செப்டம்பர் 2008 இலிருந்து எதிர்கொண்டிருக்கிறோம் என்பது மிகத்தெளிவாக இருக்கிறது. ஒருவேளை இன்னும் அது முதலாம் உலகப் போர் காலத்தில் இருந்தே என்று கூடக் கூறலாம். உண்மையான திருப்புமுனையான காலத்தை நாம் அனுபவித்துள்ளோம் மற்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று மே 15, 2010 ல் Der Spiegel இதழுக்கு கொடுத்த பேட்டியில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான Jean-Claude Trichet கூறினார்.

மே 7, 2010 வெள்ளி மாலைப்பொழுது மிகவும் கடந்துவிட்ட நேரத்தில், 16 யூரோப்பகுதி உறுப்பு நாடுகளின் தலைவர்களுடைய கூட்டம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றபோது ஒரு அசாதாரண காட்சி வெளிப்பட்டது. பிரான்ஸிற்கும் ஜேர்மனிக்கும் இடையே கிரேக்கத்திற்கு கொடுக்கும் பிணையெடுப்பின் இயலுமானதன்மை மற்றும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுக்களில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது. ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றிய ஒற்றை நாணய முறை பாதுகாப்பு வலைக்காக 750 பில்லியன் யூரோக்கள் தேவை என்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வலியுறுத்தினார். ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் இக்கோரிக்கையை தொடர்ந்து எதிர்த்தார்.

திடீரென இரவு 11.30க்கும் 12 மணி நள்ளிரவுக்கும் நடுவே கூட்டத்தில் வெடிப்புத்தன்மை ஏற்பட்டது. சில அவதானிகளின் கூற்றுப்படி ஜனாதிபதி சார்க்கோசி "உரக்க சத்தமிட்டு, கூச்சலிடலானார்", மேசையின் மீது தன் கைகளால் ஓங்கி அடித்து, ஜேர்மனி தன் எதிர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். மேர்க்கெல் மறுத்தால் பிரான்ஸ் யூரோவைக் கைவிட்டுவிடும் என்றும் சார்க்கோசி எச்சரித்தார். மேலும் பிரான்ஸ்-ஜேர்மன் உறவுகளுக்கு இடையே நீடித்த சேதமும் ஏற்பட்டுவிடும் என்றும் சேர்த்துக் கொண்டார். ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் கொடுக்கப்பட்டிருந்த இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட விதத்தில், மேர்க்கெல் ஒரு பாதுகாப்புவலை நிறுவுவதற்கு ஒப்பதல் கொடுத்தார்.

இந்த மோதலானது ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 65 ஆவது ஆண்டு நிறைவு நாள் (மே 8, 2010) வருவதற்கு சற்று நேரம் முன்னதாக இச் சம்பவம் நடந்தது.

இந்த உடன்பாட்டின் உடனடி விளைவாக, விரிவடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கான சமீபத்திய 'தீர்வு' பற்றி சந்தைகள் உடனடியாக கொண்டாடின. நிதியச் சமூகமானது கிரேக்கம், ஸ்பெயின், ருமேனியா, போர்த்துக்கல் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளினால் ஐரோப்பிய மத்திய வங்கி கோரும் முன்னோடியில்லாத கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் செயல்படுத்துவதாக கொடுத்த உறுதிமொழிகளினால் மனம் மகிழ்ந்தது. பிரிட்டனில் டோரிக்களுக்கும் லிபரல் டெமக்ராட்டுக்களுக்கும் இடையே கூட்டணி அரசு அமைப்பதற்கான உடன்படிக்கையும் பெரும் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளை சமாளிப்பதற்கான அவர்களின் வருகையும் சந்தையின் மறு எழுச்சிக்கு உதவியது. ஆனால் அந்த வாரம் முடிவதற்கு நெருங்குகையில், நிலவியிருந்த திருப்தித் தன்மை காற்றில் கரைந்தது, சந்தைகள் மீண்டும் கணிசமான இழப்புக்களை சந்தித்தன. இதற்குக் காரணம் சார்க்கோசிக்கும் மேர்க்கெலுக்கும் இடையே துப்பாக்கி முனையில் ஏற்பட்டது போன்ற உடன்படிக்கை நிகழ்வானது அடிப்படைப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கவில்லை என்ற உண்மை பரவியதுதான். அதாவது உண்மையில் இது நிலைமையை மோசமாக்கும்.

முதலாவதாக, ஐரோப்பிய மத்திய வங்கி கோரிய சிக்கன நடவடிக்கைகளுக்கு ஈடாக நிதிய உதவியானது இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளில் நுகர்வுகளைக் குறைக்கும் கட்டாயத்தை ஏற்படுத்துவதோடு அவைகளை மந்த நிலைக்கும் தள்ளும். இதையொட்டி ஐரோப்பாவை தளமாக கொண்ட உற்பத்தியாளர்கள் குறிப்பாக ஜேர்மனியின் முக்கிய சந்தைகளில் அரிப்புகளுக்கு வழிவகை செய்யப்பட்டுவிடும். இவ்விதத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதியாளர்கள் கோரிய சிக்கன நடவடிக்கையினால், மிகப் பெரும்பாலும் அதன் விளைவானது 2008ல் தொடங்கிய மந்தநிலை ஆழமாகவும் தொடர்ந்து நீடிப்பதாகவும் இருக்கிறது.

இரண்டாவதாக, 750 பில்லியன் யூரோக்கள் பாதுகாப்பு நிதி குறித்த மோதல், ஒற்றை நாணய முறை திட்டத்தின் செயற்பாட்டுத் தன்மையில் இருந்த நம்பிக்கையை அது தொடங்கிய ஒரு தசாப்தத்திற்குள் சிதைத்துவிட்டது. மே 7ம் தேதி பிரான்ஸ்-அமெரிக்க அழுத்தத்தை ஒட்டி மேர்க்கெல் தன் நிலைப்பாட்டை விட்டுக் கொடுத்தார். ஆனால் "யூரோப் பகுதிக்குள் பிளவு ஏற்பட்டால் அது பற்றிய தயாரிப்பிற்காக மேர்க்கெல் மீண்டும் டொர்ச் மார்க் (Deutschmarks) ஐ அச்சடித்துக் கொண்டிருக்கிறார்" என வதந்திகள் நிதியச் சந்தைகளில் படர்ந்துள்ளன என்று பிரிட்டிஷ் கார்டியனில் வந்துள்ள ஒரு தகவல் கூறுகிறது.

யூரோவின் உடைவு என்பது ஒரு நாணயமுறையின் முடிவு மட்டும் அல்ல. இது ஐரோப்பிய அரசுகளுக்கு இடையே அரசியல் உறவுகளில் இரத்தம் தோய்ந்த சாத்தியமுடைய பேரழிவு தரக்கூடிய முறிவு என்ற அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது. Süddeutsche Zeitung பத்திரிகை தன்னுடைய மே 15 பதிப்பில் இது பற்றிய காட்சியை பின்வருமாறு முன்வைத்தது: "ஐரோப்பிய ஒன்றியம் சரிகிறது, அதன் முக்கியமான அரசியல் பிடிகருவியான பொது நாணயம் சிதைந்துவிடும்போது 27 நாடுகள் மீண்டும் சந்தைகளுக்கு போராடத் தொடங்குகிறது. ஒரு வளமான தொழில்துறை கட்டமைப்பைக் கொண்டிருக்கும் பெரிய நாடு என்ற முறையில் ஜேர்மனி எதிரிகளைச் சம்பாதிக்கிறது, ஒருவேளை புறக்கணிக்கப்படக்கூடும், 'மேலாதிக்க சக்தி' என்னும் கோரக் காட்சி மீண்டும் புத்துயிர் பெறுகிறது."

இந்தப் பின்னணியில்தான் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் Trichet தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை 1939-1945 ல் இருந்ததைவிட, இன்னும் ஒருவேளை 1914-1918ல் இருந்ததைக் காட்டிலும் "மிகக்கடினமானது" என்று எச்சரித்துள்ளார்.

சர்வதேச நிதிய அமைப்பில் முக்கியமான அந்தஸ்தை வகிக்கும் திரு.Trichet போன்ற மனிதர், தான் பயன்படுத்தும் சொற்களைக் கவனத்துடன்தான் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது உறுதி. மிக அதிகமாக வாசிக்கப்படும், செல்வாக்கு நிறைந்த ஐரோப்பிய செய்தி ஏடுகளில் ஒன்றின் நிருபரிடம் பேசுகையில் Trichet தற்போதைய நெருக்கடியை இருபதாம் நூற்றாண்டின் இரு பெரிய உலகப் பேரழிவுகளுடைய நிலைமைகளுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

திரு.Trichet ஒன்றும் மிகைப்படுத்தி பேசவில்லை. ஐரோப்பிய வரலாறு பற்றி அவர் நன்கு அறிந்தவர். ஆகஸ்ட் 1914ல் வெடித்த முதலாம் உலகப் போரானது, முக்கிய ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளிடையே முந்தைய நான்கு தசாப்தங்கள் ஒப்புமையில் நிலவிய அமைதிக் காலத்தின் போது குவிந்திருந்த அடக்க முடியாத அரசியல், பொருளாதார மோதல்களின் விளைவேயாகும். 50 மில்லியன் மக்கள் உயிரைக் குடித்த போரானது 1918ல் முடிவடைந்தமை போரை ஏற்படுத்திய எந்தவித முரண்பாடுகளையும் தீர்த்துவைக்கவில்லை. மாறாக, இந்த தீர்க்கப்படாத முரண்பாடுகள் அதிகரித்து தீயதன்மையுடன் வளர்ந்து, பெருமந்தநிலை என்ற பொருளாதாரப் பேரழிவிற்கு வழிவகுத்தன. அதன் பின் பாசிச சர்வாதிகாரங்கள் வெளிப்பட்டன, பின்னர் இறுதியாக 1939ல் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்த ஆறு ஆண்டு கால காட்டுமிராண்டித்தனத்தில் கிட்டத்தட்ட 80 மில்லியன் மனித உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன.

போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் அமெரிக்காவின் தலைமையில் ஐரோப்பிய ஆளும் வர்க்கமானது மற்றொரு பேரழிவு தரும் உடைவு வரக்கூடாது என்பதற்கான பொருளாதார, அரசியல் அமைப்புகளை தோற்றுவித்தது. குறிப்பாக, 1870க்கும் 1945க்கும் இடையே மூன்று போர்களை நடத்தியுள்ள ஜேர்மனிக்கும் பிரான்சிற்கும் இடையேயான "சமாதானம்" இரு நாடுகளையும் பொருளாதார உறவுகளின் ஒரு சிக்கல் நிறைந்த ஒருங்கிணைக்கும் வலைப்பின்னலூடாக பிணைப்பதனால் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டதானது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பொது நாணயமுறை என்பது இந்தப் போருக்குப் பிந்தைய முயற்சியின் உச்சக்கட்டமாக ஐரோப்பிய உறுதியைக் பாதுகாக்கும் முயற்சியாயிற்று.

1999ல் பொது நாணயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முரண்பட்ட வகையில் புறநிலைமைகள் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி, அரசியல் உறுதித்தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்தி வந்தவை, விரைவில் அரிப்பிற்கு உட்பட்டுவிட்டன. அச்சரிவிற்கு முக்கிய காரணி அமெரிக்க முதலாளித்துவத்தின் தீவிரமாகிய நெருக்கடி ஆகும். இது மோசமான முறையில் அமெரிக்காவை உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாக மாற்றியது. இன்னும் முக்கியமான விளைவாக, டாலர் மதிப்பின் நீடித்த சரிவும் இருந்தது. ஐரோப்பிய உறுதித் தன்மையை வளர்ப்பதற்கு முற்றிலும் மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒன்றுதிரண்டிருந்த முரண்பாடுகளானது இறுதியில் இவை 2008ல் வெடித்தன. ஏற்கனவே நலிந்திருந்த ஐரோப்பாவின் பொருளாதார, அரசியல் சமசீர் நிலைக்கு மரண அடி கொடுத்தன.

ஐரோப்பாவை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் வரலாற்றுத் தன்மையை திரு.Trichet நன்கு உணர்ந்துள்ளார். ஆனால் அவரோ, ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்களோ அல்லது அமெரிக்காவில் உள்ள ஒபாமா நிர்வாகத்தை பொறுத்தவரையிலும் பரவும் இந்த நெருக்கடியை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி முதலில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், பின்னர் தவிர்க்கமுடியாமல் தமக்கிடையே போர் புரிய தயாரிப்பு நடத்துவதையும் தவிர வேறு எவ்வித கருத்தும் இல்லை.

பிற்போக்குத்தன ஸ்ராலினிச ஆட்சிகளால் சோசலிசம் காட்டிக் கொடுக்கப்பட்டதின் விளைவாக 1991ல் சோவியத் ஒன்றியம் சரிந்ததற்கு பின்னர், உலக முதலாளித்துவத்தின் பிரச்சாரகர்கள் சந்தை முறையின் வரலாற்று வெற்றியை பிரகடனப்படுத்தினார்கள். முதலாளித்துவத்திற்கு எதிரான 20ம் நூற்றாண்டின் புரட்சிகரப் போராட்டங்கள் பயனற்று, தவறாக இயக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் "வழமையான" வரலாற்று நிகழ்வுப்போக்கிலிருந்து தடம்புரண்டு போனதாக காட்டப்பட்டு, தோல்வியை தழுவும் என்றும் காட்டப்பட்டன. வரலாறு பற்றிய மார்க்சிச சடவாதக் கருத்தாய்வு, முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் பற்றிய அதன் பகுப்பாய்வு அனைத்தும் மறுக்கப்பட்டன.

இப்பொழுது உலக முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை நிகழ்வுகளால் மார்க்சிச மறுப்புக்கள் அனைத்தும் மறுக்கப்பட்டுவிட்டன. இந்த நெருக்கடி அடைந்துள்ள உயர்ந்த மட்டமானது இந்த அமைப்பு முறையின் முக்கிய எடுத்துக்காட்டாக கடந்த நூற்றாண்டில் பல மில்லியன்கள் உயிர்களைக் குடித்த பேரழிவுகளின் கோரக் காட்சியை எழுப்பத் தொடங்கியுள்ளது.

கடந்த இரு வார நிகழ்வுகளானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையும் சவாலும் ஆகும். வளர்ச்சியடையும் இந்த நெருக்கடியானது கற்பனை செய்ய முடியாத பரிமாணங்களுக்கு மனிதகுலத்தை பூகோள ரீதியாக கடுமையாக அச்சுறுத்துகிறது. மனிதகுலம் தப்பிப்பிழைப்பது, தொழிலாள வர்க்கம் முழு அரசியல் நனவுடன் உலகப் புரட்சிகர இயக்கத்தை வளர்த்து முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை நிறுவுவதிலேயே தங்கியுள்ளது.