ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Is the Indian Stalinist CPM heading for a split?

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி பிளவை நோக்கிச் செல்கிறதா?
By Arun Kumar and Deepal Jayasekera
16 February 2016

இந்தியாவின் முதன்மை ஸ்ராலினிச கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம்.இன் தலைமை, மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டுமா என்பது தொடர்பான மோதலில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து பல வாரங்களாக சி.பி.எம். தலைவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து கொண்டு இருக்கின்றனர். மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி உட்பட மேற்கு வங்க மாநில மூத்த சி.பி.எம். தலைவர்கள், அம்மாநிலத்தின் தற்போதைய ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கவும், மேலும் அம்மாநிலத்தில் "ஜனநாயகத்தை காப்பாற்றவும்" காங்கிரஸுடன் ஒரு தேர்தல் கூட்டுக்கு பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம் ஆகிய நான்கு பிற மாநிலங்களிலும் இந்த இளவேனிற்காலத்தில் நடைபெற உள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்கள் சம்பந்தமான கொள்கைகளை சி.பி.எம். இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறும் அரசியல் குழுக் (பொலிட்பீரோ) கூட்டத்தில் மற்றும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி செய்யவேண்டும்.

இருந்தபோதிலும், சி.பி.எம். கட்சியின் முடிவு மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு பிளவை நோக்கியே செல்லும் என்ற ஊகங்களே மிகுந்து இருக்கின்றன.

தேர்தல் அரசியல்களில் சி.பி.எம். மற்றும் அதன் இடது முன்னணிக் கட்சிகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை மிகுந்த நான்காவது மாநிலமான மேற்கு வங்கம் ஒரு பிரதான அடித்தளமாக நீண்டகாலம் செயலாற்றி வந்துள்ளது. ஆனால், இக்கட்சி தன்னைத்தானே "முதலீட்டாளர்-சார்பு" என விவரிப்பதை பின்பற்றியபோதிலும், 2011ல் மாநில அதிகாரத்திலிருந்து வீழ்ச்சி கண்டது, மேலும் 2014 தேசியத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தின் 42 இடங்களில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

மற்றொரு தேர்தல் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில்தான், மேற்கு வங்க மாநில தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்வதில் சி.பி.எம். தலைமை மிகத்தீவிரமாக உள்ளது. இதற்கு சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் ஆதரவும் உள்ளது.

ஆனால், சி.பி.எம்.இன் மற்றொரு பெரும்பான்மை மாநிலமான கேரளாவின் சி.பி.எம். தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேற்கு வங்க மாநில தேர்தலில் காங்கிரஸ் உடனான சி.பி.எம்.இன் கூட்டணியானது, இந்த இளவேனிற் காலத்தில் கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், நெருக்கடி நிறைந்த காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகளை மதிப்பிழக்கச் செய்துவிடும் என அச்சம் கொள்கின்றனர்.

யெச்சூரியின் முன்னோடி பிரகாஷ் காரத்தும் இதனை எதிர்க்கிறார். கட்சியின் "தந்திரோபாய வழி" உடன் ஒத்துப்போக யெச்சூரி தயாராக இல்லை என்றால் அவர் பதவியை இராஜினாமா செய்து கொள்ளலாம் என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரலில், சி.பி.எம். தனது 21வது கட்சி மாநாட்டில், பிராந்திய மற்றும் சாதிய அடிப்படையிலான முதாலாளித்துவக் கட்சிகளுடன் அனைத்து வகையிலும் "மூன்றாவது அணி" தேர்தல் கூட்டணிகளை அமைக்கத் தயார் எனவும், ஆனால், "நவீன தாராளமய" காங்கிரஸ் கட்சி உடனோ அல்லது இந்திய தேசிய அரசாங்கத்தை தற்போது அமைத்துள்ள இந்து மேலாதிக்கவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP) உடனோ தேர்தல் கூட்டை நிராகரிப்பதாக மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இந்திய அரசியல் ஸ்தாபகத்தில் சி.பி.எம்.இன் செல்வாக்கினை சிறந்த வகையில் தூக்கி நிறுத்துவதற்கு ஏற்றவாறு வலதுசாரி உடனான போக்கினை எப்படித் தொடர வேண்டும் என்பது குறித்து யெச்சூரி மற்றும் காரத் இடையே மற்றும் மேற்கு வங்கம் மற்றும் கேரள கட்சி தலைமைகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைப் பொறுத்தவரையில், திருடர்கள் மத்தியில் உள்ள மோதல் போன்றே உள்ளது.

சி.பி.எம்.இன் புகழ்பெற்ற "கடுமையான" காங்கிரஸ் எதிர்ப்புப் பிரிவிற்கு காரத் தலைமை வகித்தபோது, அவரது தலைமையின்கீழ் தான் ஸ்ராலினிஸ்டுகள் மே 2004 முதல் ஜூன் 2008 வரையிலும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) நான்கு ஆண்டு கால ஆட்சியை தூக்கி நிறுத்தினர். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெருமளவிலான "சந்தை சார்பு" சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருந்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "மூலோபாய கூட்டினை" ஏற்படுத்தியிருந்தும் ஆதரித்தனர்.

அதேபோல காரத்தும், பட்டாச்சார்ஜியின் தலைமையின்கீழ் நடைபெறும் சி.பி.எம். தலைமையிலான மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமய கொள்கைகள் உடன் அவருக்கு எந்தவொரு உடன்பாட்டின்மையும் இருப்பதாக ஒருபோதும் குரல் எழுப்பவில்லை. அது சமூக நலச் செலவினங்களைக் குறைப்பது, நுட்பவியல்-தொழில்கள் மற்றும் அது தொடர்பான பிற தொழில்களிலும் வேலை நிறுத்தங்களை தடைசெய்தது, மற்றும் பெருவணிக திட்டங்களுக்காக நில அபகரிப்புகள் குறித்த விவசாயிகளின் எதிர்ப்பை ஒடுக்க போலிஸ் மற்றும் குண்டர் வன்முறையை பயன்படுத்தியது போன்றவை அடங்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸுடன் ஒரு முறையான தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வது என்று அல்லாமல், சில வகையான திறைமறைவு ஒப்பந்தங்களுக்கு ஆதரவளிக்க தான் தயாராக இருப்பதாக காரத் சமிக்ஞை செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள "அசாதாரண சூழ்நிலையை" சி.பி.எம். எதிர்கொள்வதில் தந்திரோபாய "நெகிழ்வு" தேவைப்படுகிறது என்பதை சென்ற ஆண்டு இறுதியில் சி.பி.எம். "அமைப்பு கூட்டத்தொடரின்" போது ஒரு புறமாக நின்று பேசும்போது தெரிவித்தார்.

தென் இந்திய மாநிலங்களில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நிகழ்த்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் "காரத் மற்றும் அவரது சகாக்கள் .....வங்கத்தில் காணப்படும் கட்சியின் அவலநிலை தொடர்பாக உணர்வற்று இருப்பதாக ..... முத்திரை குத்திக்கொள்ள விரும்பவில்லை" என கேரள மாநில ஆன்மனோரமா இணைய தளத்தில் அறிவிப்பு வெளிவந்து உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த சில தொகுதிகளில் அவர்களது கட்சி முறையான உடன்பாட்டின் பேரில் அல்லாமல், காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துபோவது குறித்து அவர்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என வலியுறுத்துகின்றனர்.

எனினும், அவர்கள் காங்கிரஸ் உடனான முறையான கூட்டணியை "தற்கொலைக்கு" ஈடானதாகவே பார்க்கின்றனர், ஏனென்றால் பாரம்பரிய இந்திய முதலாளித்துவக் கட்சி உடன்தான் சி.பி.எம். அடையாளம் காணப்படும். மேலும் இவ்வாறு செய்யும் இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி அதன் வலதுசாரி மற்றும் பெரும் வணிகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் சுருங்கி போனதுமட்டுமில்லாமல் துடைத்துக் கட்டப்பட்டும் உள்ளது. உண்மையில் 2014 தேசிய தேர்தலில், காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் அதன் நான்காவது தேர்தல் போட்டியை 9.6 சதவீத மக்கள் வாக்குகளை மட்டுமே வெற்றிகொண்டு நிறைவு செய்தது.

காரத் பிரிவு சற்றே அதிகமான "எதிர்ப்பு" நிலையில், 20 மாத கால பா.ஜ.க. அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினை அதிகளவில் தெரிவித்து குரல் எழுப்பிவரும் இந்திய தொழிலாள வர்க்கத்தினர் இடையே ஆதரவு திரட்டும் விதமாக ஸராலினிஸ்டுகள் பணியாற்ற வேண்டும் என கணக்கிடுவதுடன் மேலும் அதன்மூலம் அதிகாரபூர்வ இந்திய முதலாளித்துவ அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செல்வாக்கை திரும்பப் பெறலாம் எனவும் கருதுகிறது. 1991ல் தொடங்கி 2008ம் வருடம் ஊடாக, இந்தியாவை உலக முதலாளித்துவத்தின் ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக உருவாக்குவதில் காங்கிரஸ் மற்றும் மூன்றாவது கூட்டணி அரசாங்கங்களை ஆட்சியில் தக்க வைப்பதில் முனைப்புடன் செயலாற்றுவது மற்றும் அதன் விளைவாகவே அவர்களுக்கான ஆதரவும், வரவேற்பும் பெருகுதல் போன்றவற்றில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

கேரள சி.பி.எம். இன் மூத்த அரசியல் குழு உறுப்பினர் ஒருவர் ஆன்மனோரமாவிற்கு அளித்த பேட்டியில், கட்சியின் வங்கப் பிரிவு, "சி.பி.எம். தன்னைத்தானே வலுப்படுத்திக் கொண்டு பெரும் இடதுசாரியாக அமையவேண்டும் என விரும்புகின்ற அரசியல் போக்கிற்கு சவாலாக இருப்பதாக" குற்றம் சாட்டினார். அத்துடன், "கட்சி மாநாடு (கடந்த ஏப்ரல்) தீர்மானித்ததை வங்கப் பிரிவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனில் மற்றொரு கட்சியை அமைத்துக்கொள்ளலாம்" எனவும் பரிந்துரைத்தார்.

வெள்ளிக்கிழமை, மேற்கு வங்க சி.பி.எம். மாநில குழு அதன் இந்த வார மத்திய தலைமை கூட்டங்களில் செய்யப்படவுள்ள பரிந்துரைகள் குறித்து விவாதித்தது. அந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, முன்னாள் சி.பி.எம். முதல் அமைச்சர் பட்டாச்சார்ஜி, மேற்கு வங்க சி.பி.எம். பொதுமக்களின் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முனையும் விதத்தில் கோரிக்கை வைக்க முயற்சித்தார். அவர் பாரக்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், "ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டுசேர்ந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் வங்க மக்கள் உறுதியான கருத்தைக் கொண்டுள்ளனர்" எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சி.பி.எம். இன் சகோதரக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மேலும் மேற்கு வங்கத்தில் இடது முன்னணியுடன் இணைந்துள்ள மற்ற ஒன்பது கட்சிகளும் காங்கிரஸ் உடனான தேர்தல் கூட்டணிக்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டு உள்ளதாக மேற்கு வங்க இடதுசாரியின் தலைவர் பீமன் பாசு மற்றும் சி.பி.எம். இன் ஒரு அரசியல் குழு உறுப்பினரும் அறிவித்தனர்.

பத்திரிகைகளுக்கு கிடைத்த தகவல்களின்படி, வெள்ளிக்கிழமை நடந்த சி.பி.எம்.இன் மாநிலக் குழு கூட்டத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாகவே பேசினர், மேலும் டஜனுக்கு குறைவான எண்ணிக்கையிலான தலைவர்களே எதிர்த்தனர். வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கிவிட சி.பி.எம்.க்கு அழைப்பு விடுத்தும், "ஆளும் கட்சியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவை திரட்டவும்", காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வெளிப்படையான குறிப்பாக தெரியும் வகையிலான ஒரு தீர்மானத்தை ஒப்புக்கொண்டு இந்த கூட்டம் நிறைவுற்றது.

இந்த தீர்மானம் காங்கிரஸுடன் ஒரு கூட்டணி ஏற்படுத்துவது குறித்து எதையும் திட்டவட்டமாக குறிப்பிடவில்லை, ஏனென்றால் காங்கிரஸின் உயர்தலைமை சி.பி.எம். உடனான தேர்தல் உடன்பாட்டின் மீது முறையான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, என காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு ஆதரவளிப்பவர்கள் விவரிக்கிறார்கள்.

எனினும், மேற்கு வங்க காங்கிரஸ் தலைமை சி.பி.எம். கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட வலுவான ஆதரவாக உள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த டெலிகிராப் நாளிதழ் பிப்ரவரி 4ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், வங்க மாநில அனைத்து இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர் பொறுப்பிலுள்ள, சி.பி.ஜோஷி உடன் யெச்சூரி தொகுதி பகிர்வு தொடர்பான பேச்சவார்த்தைகளை ஆரம்பிக்கும் விதமாக ஏற்கனவே இரண்டு கூட்டங்களை நடத்திவிட்டார் என்று குறிப்பிட்டு உள்ளது.

யெச்சூரி மற்றும் காரத் இருவருமே வெள்ளிக்கிழமை நடந்த மேற்கு வங்க தலைமைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர், ஆனால் சி.பி.எம். இன் நடவடிக்கைகளுக்கு இணங்க எதுவும் பேசவில்லை.

அதேவேளை, கொல்கத்தாவில் இரண்டு மூத்த சி.பி.எம். தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் பிற இடது முன்னணி கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் அவரவர் நிலைக்கு ஏற்ப அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஒரு முயற்சியாக தனித்தனியே சந்தித்தனர்.

சி.பி.எம். தலைமையின் "ஒற்றுமை"யில் இதுபோன்ற ஒரு வெளிப்படையான ஒரு பிளவு முன்னெப்போதும் இல்லாத ஒன்று, மற்றும் இது பிரிவினைகளின் ஆழம் மற்றும் கட்சி பிளவுக்கான சாத்தியம் போன்றவற்றையே குறித்து காட்டுகின்றது.