ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pentagon prepares another war in Libya

பெண்டகன் லிபியாவில் மற்றொரு போருக்குத் தயாரிப்பு செய்கிறது

Bill Van Auken
29 January 2016

ஐந்தாண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பு லிபியாவிற்கு எதிராக எதிர்வருங்காலத்தில் நடக்கக்கூடிய படுகொலைகளை தடுப்பதற்காக என்ற "மனிதாபிமான" சாக்குபோக்கில் ஒரு போர் தொடங்கியதற்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் எண்ணெய் வளம் நிறைந்த அந்த வட ஆபிரிக்க நாட்டுக்கு எதிராக "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற இரத்தக்கறைப்படிந்த பதாகையின் கீழ் ஒரு புதிய இராணுவ தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.

லிபியா சம்பந்தமாக வாஷிங்டன் "இராணுவ விருப்பதேர்வுகளை கருத்தில்கொள்வதாக" பெண்டகனின் பத்திரிகைத்துறை செயலர் பீட்டர் கூக் உறுதிப்படுத்தினார், மேலும் அம்மண்ணில் "நாம் முன்னோக்கி செல்கையில் யார் அமெரிக்காவின் ஆதரவைப் பெற மதிப்புடையவர்கள் மற்றும் நமது பங்காளிகள் சிலரது ஆதரவைப் பெற மதிப்புடையவர்கள், அந்த களத்தில் இருப்பவர்கள் யார் என்பதை அறியும்" முயற்சியில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகள் செயல்பட்டு வருவதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த பெண்டகன் செய்தி தொடர்பாளரது கருத்துக்கள் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தளபதியின் முந்தைய கருத்துக்களையே எதிரொலிக்கிறது. லிபியாவில் "அரசியல் நிகழ்வுபோக்கிற்கு இணங்க ISIL க்கு [ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு] எதிராக தீர்க்கமான இராணுவ நடவடிக்கை எடுக்க நாம் பார்த்து வருகிறோம் என்று கூறுவது நேர்மையாக இருக்கும்" என்று தலைமை தளபதி (chairman of the Joint Chiefs of Staff) ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஜூனியர் கடந்த வெள்ளியன்று தெரிவித்திருந்தார். “இராணுவ படைகளைப் பிரயோகிக்க நமக்கு அதிகாரம் இருப்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்திவிட்டார்,” என்றார்.

சிறப்பு நடவடிக்கை துருப்புகளின் பிரசன்னத்தைப் பொறுத்த வரையில், அந்த விடயம் பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட, அது இரகசியமாக ஒன்றும் கிடையாது. லிபிய விமானப் படையின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் பதியப்பட்ட ஒரு புகைப்படம், பொதுமக்களை போன்ற உடையணிந்த சுமார் 20 அமெரிக்க அதிரடிப் படையினர் தானியங்கி ஆயுதங்களை வைத்து நின்றிருந்ததைக் காட்டியது. அந்த விமானப்படை தளத்திற்குப் பொறுப்பான லிபிய படைகள் "அவர்களின் தலையீட்டை மறுத்து, அவர்களை நிராயுதபாணியாக்கி, லிபிய மண்ணிலிருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்றியதாக" அப்படத்தின் கீழ் குறிக்கப்பட்ட வாசகம் குறிப்பிட்டது.

பெண்டகன் அதிகாரிகள் அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அதேவேளையில், அதுமாதிரியான அமெரிக்க படைப்பிரிவுகள் "இப்போதிருந்து சில காலமாகவே" “லிபியாவிற்கு உள்ளும் புறமும்" இருந்து வருவதாக NBC News க்குத் தெரிவித்தனர்.

2011 இல் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட "மனித உரிமைகள்" என்ற சாக்குபோக்கும், இன்று பிரயோகிப்பட்டு வருகின்ற "பயங்கரவாதம்" என்ற சாக்குப்போக்கும் சம அளவில் மோசடியானவை ஆகும். பாரிய எரிசக்தி வளங்களின் மீது அமர்ந்திருக்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மீது—லிபியாவின் விடயத்தில் ஒட்டுமொத்த ஆபிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய எண்ணெய் வளங்களை அது கொண்டிருக்கிறது என்ற நிலையில் அமெரிக்க அரை-காலனித்துவ மேலாதிக்கத்தைத் திணிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இராணுவ தலையீடுகளின் சூறையாடும் உள்நோக்கங்களை மூடிமறைப்பதற்காகவே அந்த சாக்குப்போக்குகள் இரண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் அது தடையின்றி அமெரிக்க இராணுவவாதத்தை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும், மேலும் 2011 இல் ஒபாமா தேசியளவில் வழங்கிய ஒரு தொலைக்காட்சி உரையில் போருக்கு அவரது போலி நியாயப்பாடுகளை வழங்கிய பின்னர், அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு ஒரு சட்டபூர்வ மூடிமறைப்பாக ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் ஒன்றைப் பெற்றார் என்பதும், அதேவேளையில் 2016 இல் ஒரு கடற்படை தளபதி அவர் எப்போது பொருத்தமாக காண்கிறாரோ அப்போது ஒரு புதிய போரைத் தொடங்குவதற்கு அவருக்கு அதிகாரம் இருப்பதாக சர்வசாதாரணமாக கூறுவதும், அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

2011 இல், லிபியாவின் நீண்டகால ஆட்சியாளர் மௌம்மர் கடாபி கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் "அமைதியான அரசியல் போராட்டக்காரர்களை" ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யும் விளிம்பில் இருந்ததாக, அந்த கதை கொண்டு செல்லப்பட்டது. மேற்கத்திய தலையீடு மட்டுமே உயிர்களைக் காப்பாற்றும் என்றும், அங்கே வீணடிப்பதற்கு நேரமில்லை என்றும் ஒபாமா மற்றும் அவரது நேட்டோ கூட்டாளிகள் வலியுறுத்தினர்.

இத்தகைய வலியுறுத்தல்களை போலி-இடதுகளின் ஒட்டுமொத்த கூட்டமும் ஊதிப்பெரிதாக்கி எதிரொலித்தன. அவற்றில் சில, பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்றவை, “லிபிய புரட்சியைப்" பாதுகாப்பது பிரச்சினைகள் அனைத்தினும் மேலானது என வலியுறுத்தி, ஏகாதிபத்திய சக்திகளின் வாதங்களை அலங்கரித்தன. NPA இன் பிரபல செய்தி தொடர்பாளரான கல்வியாளர் ஜில்பேர்ட் அஷ்கார் வார்த்தைகளில், “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை ஏகாதிபத்திய-எதிர்ப்பு கோட்பாட்டின் பெயரில் எதிர்க்கக்கூடாது,” என்றார்.

அதேபோல ஓரளவிற்கு தகுதிவாய்ந்த விதத்தில் ஈராக் போருக்கான எதிர்ப்பிலிருந்து அவரது "இடது" நற்சான்றை பெற்றிருந்த மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் அறிவிக்கையில், “முட்டாள்தனமான வழியில் ஏனைய சகல மதிப்புகளையும் 'ஏகாதிபத்திய-விரோத' துருப்புச்சீட்டாக ஆக்குவது வெளிப்படையாக அர்த்தமற்ற நிலைப்பாடுகளுக்கே இட்டுச் செல்கிறது" என்றார். “நேட்டோவிற்கு நான் அவசியப்பட்டால், அதனோடு நான் இருப்பேன்,” என்பதையும் அழுத்தத்திற்காக அவர் சேர்த்துக் கொண்டார்.

அதுமாதிரியான ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், “R2P” (அதாவது, பாதுகாப்பிற்கான கடமைப்பாடு) என்ற நவகாலனித்துவ கோட்பாட்டை கொண்டு வந்து, பெங்காசி மீதான குண்டுவீச்சைத் தடுப்பதற்காக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை அங்கீகரிக்கும் ஐ.நா. இன் தீர்மானத்தை ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போருக்கு வரம்பில்லா அதிகாரம் வழங்கும் ஒன்றாக மாற்றிவிட்டன. அந்த ஆட்சி மாற்றத்திற்கான போர், பாரிய அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்களையும், சுமார் 30,000 லிபியர்களின் உயிரிழப்பையும் மற்றும் அக்டோபர் 2011 இல் கடாபியின் மீது ஒரு கூட்டு கும்பல் சித்திரவதையையும் மற்றும் படுகொலையையும் கண்டிருந்தது.

இதெல்லாம் முடிந்ததற்கு பின்னர் தான், சர்வதேச நெருக்கடி குழு மற்றும் சர்வதேச மன்னிப்புசபை -ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்- போன்ற அரசுசாரா அமைப்புகள் மற்றும் மனிதஉரிமை குழுக்கள், "படுகொலையின்" அச்சுறுத்தலில் பெங்காசி இருந்தது என்ற வாதங்களுக்கு உள்ளவாறே எந்த அடித்தளமும் இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டன.

எவ்வாறிருந்தாலும் அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் அந்த லிபிய மக்கள் ஒரு நிஜமான மற்றும் நரகத்தனமான மனிதாபிமான பேரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ இரண்டு மில்லியன் லிபியர்கள், அதாவது போருக்கு முந்தைய மக்கள்தொகையில் சுமார் மூன்று பங்கினர், அண்டைநாடுகளான துனிசியா மற்றும் எகிப்துக்கு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னரில் இருந்து எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கு இடையே நடந்துவரும் சண்டைகளால் இடம்பெயர்த்தப்பட்ட நூறாயிரக் கணக்கானவர்களோடு எஞ்சியிருப்பவர்களும் நாசகரமான நிலைமைகளை முகங்கொடுத்துள்ளனர்.

Human Rights Watch அமைப்பு, இது 2011 அமெரிக்க-நேட்டோ போரை ஆதரித்திருந்தது, இம்மாதம் அறிவிக்கையில், அந்நாட்டை ஆட்சி செய்யும் போராளிகள் குழுக்கள் "கண்மூடித்தனமாக மக்கள்வாழ் பகுதிகளில் குண்டுவீசியுள்ளனர், ஏதேச்சதிகாரமாக மக்களைப் பிடித்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர், கொள்ளையடித்துள்ளனர், தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர் மற்றும் தாக்குதல்களின் போது வேறு விதத்திலும் படைத்துறைசாரா சொத்துக்களை அழித்துள்ளனர், சில விடயங்களில் இது போர் குற்றங்களாக உள்ளன,” என்று குறிப்பிட்டது. இப்படைகள் "மக்களைத் தாக்கி, கடத்திச் சென்று மறைத்து வைத்து, பலவந்தமாக அவர்களின் வீடுகளிலிருந்து மக்களை இடம்பெயர்த்துகின்றன,” அதேவேளையில் "அந்நாட்டின் பெரும்பகுதிகளில் உள்நாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பு பொறிந்து போயுள்ளது, மனித உரிமைகள் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது,” என்பதையும் அந்த அறிக்கை சேர்த்துக் கொண்டது. ஆயிரக் கணக்கான லிபியர்கள், அத்துடன் வெளிநாட்டவர்கள், குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்குகளோ இல்லாமல், பலர் 2011 இல் இருந்தே கூட, எப்போதும் சித்திரவதை செய்யப்படும் போராளிகள் குழுக்களது சிறைச்சாலை அமைப்புகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் 2011 மார்ச்சில் இருந்ததை விட இன்று வர்ணிக்க முடியாதளவிற்கு மோசமடைந்துள்ள நிலைமைகளின் கீழ், யாரும் "R2P” ஐ கொண்டு வரவில்லை. அதற்கு முரண்பட்டரீதியில், ISIS ஐ எதிர்த்து சண்டையிடுவதற்காக என்று இப்போது சாக்குப்போக்குத் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2011 இல் ஒரு நீடித்த முற்றுகையில் பெரிதும் நாசமாக்கப்பட்டுவிட்ட கடாபியின் முன்னாள் சொந்த ஊரான கடற்கரையை நகர் சிர்ட்டே மீது ISIS ஒரு பலமான பிடியை ஸ்தாபித்துள்ளது.

லிபியாவில் ISIS இன் வளர்ச்சியை 2011 அமெரிக்க-நேட்டோ தலையீட்டுடன் இணைக்க முயற்சித்துவரும் அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களுக்குள் இருப்பவர்கள், வழமைமானரீதியில் அவ்விடயத்தை அலட்சியத்தால் உண்டான தீய விளைபயனாக, அதாவது வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஒரு "தேசத்தைக் கட்டமைக்கும்" ஆக்கிரமிப்புடன் குண்டுவீச்சு நடவடிக்கையை தொடராததால் ஏற்பட்டதாக முன்வைக்கின்றனர்.

இது உண்மையில் நிஜமான நடந்த குற்றங்களையே திட்டமிட்டு மூடிமறைப்பதாகும். ISIS, லிபியா குழப்பத்திலிருந்து ஏதோ தற்செயலாக ஆதாயமடைந்ததல்ல. அதன் சொந்த வளர்ச்சியும் அபிவிருத்தியும் அமெரிக்க-நேட்டோ போருடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ளன. அதில் அதேபோன்ற அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்கள் படை துருப்புகளாக சேவையாற்றுவதற்காக ஆயுதமேந்த செய்யப்பட்டு அவற்றிற்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், இத்தகைய இதேமாதிரியான கூறுபாடுகள், லிபிய அரசாங்க கிடங்குகளிலிருந்து கொள்ளையடித்த பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களுடன், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரைத் தூண்டிவிட சிஐஏ-முடுக்கிவிட்ட முயற்சியின் பாகமாக சிரியாவிற்குள் திருப்பிவிடப்பட்டன. இந்த நடவடிக்கை ISIS மற்றும் அதுமாதிரியான அமைப்புகளைப் பெரிதும் பலப்படுத்தியது, அதேவேளையில் சிரியாவிற்குள் சண்டையிட அனுப்பப்பட்டிருந்த லிபியர்கள் நாட்டிற்கு திரும்பி இருந்தனர், இதன்விளைவாக லிபியாவின் வடக்கு கடற்கரையோரங்களை ஒட்டி இஸ்லாமிய குழுக்கள் பரவின.

இவ்விதத்தில், அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இரத்தக்களிரிக்குள் மற்றும் குழப்பதிற்குள் மூழ்கடித்து, அதேவேளையில் ஓர் உலகளாவிய மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்தி வருகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லாத மற்றும் தீவிர அடுத்தடுத்த இராணுவ தலையீடுகளே, போருக்கு மற்றொரு போலிக்காரணமாக கூறப்படும் லிபியாவில் ISIS பயங்கரவாத அச்சுறுத்தல் என்பதன் ஆதாரமாகும்.