ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sweden announces plans to deport up to 80,000 refugees

சுவீடன் 80,000 அகதிகளை திருப்பி அனுப்ப திட்டங்களை அறிவிக்கிறது

By Martin Kreickenbaum
29 January 2016

சுவீடிஷ் அரசாங்கம் புகலிட மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான அதன் நோக்கத்தை அறிவித்திருக்கிறது. ஸ்டாக்ஹோமிலுள்ள சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி கூட்டணியானது கடந்த ஆண்டு புகலிடம் கோரும் விதிமுறைகளையும் எல்லைகளை கட்டுப்படுத்துவதையும் கடுமையாக அமுல்படுத்திவருவதுடன், அகதிகளை அச்சமூட்டித்தடுக்கும் சிக்கலான கொள்கைகளைப் பின்பற்றி வருவதுடன் தசாப்தகாலங்களாக மிதவாத அகதிக் கொள்கைக்காக தன்னை புகழ்ந்துகொண்ட நாட்டை ஒரு பொலீஸ் அரசாக மற்றுவதையும் பின்பற்றி வருகின்றது.

இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட அதேநாளில், மனித உரிமை கண்காணிப்பு குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஐரோப்பா முழுவதும் எதேச்சாதிகாரவாதத்தை நோக்கிய திருப்பம் இருப்பதாக கடுமையாக விமர்சித்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதனை புலம்பெயர்வோர் நெருக்கடிக்கு ஒரு பதிலாக நியாயப்படுத்தியிருக்கின்றன.

மனித உரிமை கண்காணிப்பு நிறைவேற்று இயக்குநர் கென்னத் ரோத், மத்திய கிழக்கில் இருந்து அகதிகள் வருகையானது “பல மேற்கத்திய அரசாங்கங்களை இதுவரை இருந்த மனிதஉரிமை பாதுகாப்புக்களை திரும்பப்பெற உந்தியிருக்கிறது” என்று எழுதினார்.

இந்தப்போக்கானது ஜேர்மன் அரசாங்கத்தின் கொள்கைகளால் எடுத்துக்காட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெலின் “வரவேற்பு கலாச்சாரம்” என்ற அறிவிப்புக்களுக்கு மத்தியில், அது நாட்டின் எல்லைகளை மேலும் மூடுவதற்கும் “செயல்முறை மையங்கள்” என்றழைக்கப்படும், அதாவது அகதிகளுக்கான இடைநிலை முகாம்களை நிறுவுதற்கும் தயாரிக்கப்பட்டது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை பற்றிய 659 பக்க வெளியீடானது, பத்துக்குழந்தைகள் உள்பட, சுமார் 24 அகதிகள் மத்தியதரைக் கடலில் மூழ்கிய நாளுக்கு அடுத்தநாள் தொடர்ந்துவந்தது, இதையும் சேர்த்து, தசாப்தகால மேற்கத்திய இராணுவத்தால் தங்களது சொந்த நாடுகளில் தூண்டிவிடப்பட்ட போர் மற்றும் வன்முறைகளிலிருந்து ஐரோப்பாவில் அகதியாக தஞ்சம் கோரும் முயற்சியில் கடந்த ஆண்டு மட்டும் 3,811 பேர் இறந்துள்ளனர்.

சுவீடிஷ் சமூக ஜனநாயக உள்துறை அமைச்சர் Anders Ygeman, SVT தொலைக்காட்சி ஒளிபரப்பில் அரசாங்கம் ஏற்கனவே போலீசுக்கும் குடிவரவுதுறை அதிகாரிகளுக்கும் பாரியளவில் திருப்பி அனுப்புதலை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறது என்றார். சுவீடிஷ் நாளிதழ் Dagens Industri, “இதனால் 60,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என நான் நினைக்கிறேன், அது 80,000 ஆகவும் ஆகக்கூடும்” என்று அமைச்சர் பேசியதை மேற்கோள் காட்டியது.

Ygeman, அரசாங்கமானது முதலில் அகதிகள் “தாமாகவே” திரும்பிச்செல்வதை இலக்காக கொண்டிருப்பதாகவும், “அது இயங்கவில்லை என்றால் அவர்களை பலாத்காரமாக திருப்பி அனுப்புவது தேவைப்படும்” என்று அவர் மேலும் கூறினார். “பெரும் எண்ணிக்கையில் மக்கள் குழுக்களாய் தலைமறைவாகிவிடுவார்கள்” என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதால், பாதுகாப்பு அமைப்புக்கள் பெருமளவில் வலுப்படுத்தப்பட இருப்பதாக கூறினார். எல்லைப்புற பொலீசுடன் கூடுதலாக 1,000 காவல்நிலைகள் உருவாக்கப்படப்போவதாகவும், பாதுகாப்பு முகவாண்மையினர் “வெளி”தோற்றத்தில் தெரியும் மக்களை அதாவது இன அடிப்படையிலான முகத்தோற்றத்தின் மீது தாமாகவே கட்டுப்படுத்தல்கள் செய்யுமாறு ஆணையிடப்பட்டிருக்கின்றன.

சுவீடனின் எல்லைப்புற பொலீஸ் தலைவர் Patrick Engström, திருப்பி அனுப்புதலை கடுமையாய் நடைமுறைப்படுத்துவதில் எல்லைப்புற பொலீசுக்கும் குடிவரவு அதிகாரிகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். புகலிடம் கோருவோர் தங்களின் புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி பொலீஸ் அதிகாரி முன்னிலையில் மட்டுமே அறிவிக்கப்படுவார்.

திட்டமிடப்பட்ட திருப்பி அனுப்புதல்களின் அளவானது, தற்போது இருக்கும் வான்வழிப்பாதைகளினூடாக நடைமுறைப்படுத்தமுடியாது என்பதால் அரசாங்கம் திருப்பி அனுப்புதல்களை மேற்கொள்ள வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்களுக்கு திட்டமிடுகின்றது. Dagens Industri –ன் படி அரசாங்க அதிகாரிகள் மொரோக்கோ மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுடனும் அகதிகள் உடன்பாடு ஒன்றை நிறுவுதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

“மனிதாபிமான மாபெரும் அரசு” என்று சுவீடன் தன்னைக் காட்டிக்கொள்ள விழைந்தாலும், கடந்த ஒரு ஆண்டாக அகதிகள் தொடர்பான விஷயத்தில் திரும்பத்திரும்ப இறுக்கிக் கொண்டு வருகிறது. பெருமளவினோர் தங்குமிட மையங்கள் படிப்படியாக அளவுக்கதிகமான கூட்டத்தைக் கொண்டதாக மாறிவிட்டன, மற்றும் அகதிகள் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். புதிதாக வருபவர்கள் இறுதியில் வெண்பனி மூடிய தெருக்களில் உறங்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர்.

சமூக ஜனநாயக–பசுமைக்கட்சி அரசாங்கம் நவம்பரில் முதல்தடவையாக புகலிடம் கோருவோர் விதிமுறைகளில் முதலாவது கட்டுப்பாடுகளை திணித்தது, பிரதமர் Stefan Löfven அதனை வைக்கிறவாறு, அங்கே சுவீடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைந்தபட்ச தராதரங்களுக்கு ஏற்றவாறு தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அப்போது முதற்கொண்டு வெற்றிகரமான புகலிடம் கோருவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார காப்புறுதி உரிமையுடன் சேர்த்து, குடும்பமாய் ஒன்று கூடல் கட்டுப்படுத்தப்பட்டது.

சமூகஜனநாயக-பசுமைக் கட்சி அரசாங்கமானது, பாரிஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான வெறிக்கூச்சலை சுரண்டிக்கொண்டு, எல்லைகளில் அடையாளம் காட்ட வேண்டியதை அறிமுகப்படுத்தி உள்ளதுடன், அகதிகள் மீது உயிரியல் அடையாள சரிபார்ப்பை அறிமுகப்படுத்தியது. கூட்டரசில் சிறிய பங்காளர் என்ற வகையில் பசுமையினர் குறிப்பாக தீய பாத்திரத்தை ஆற்றினர். துணைப் பிரதமரும் பசுமை தலைமைப் பெண்மணியான ஆசா ராம்சன், கடந்த ஆண்டு தஞ்சம் கோரும் வரையறைகளை பற்றி கண்ணீர் மல்க கூறி, அவரது கட்சி அகதிகளின் உரிமைகளை இனிமேலும் கட்டுப்படுத்துவதை ஆதரிக்காது என்றார்.

ஆனால் இது அப்பட்டமான பாசாங்கு. ஜனவரி தொடக்கத்தில், சுவீடன் போக்குவரத்து நிறுவனங்கள் நாட்டுக்குள் நுழையும் பயணிகளின் அடையாளங்களை சோதிக்க வேண்டும் என்று கூறியது. அப்போதிலிருந்து எல்லைகள் நடைமுறைரீதியாக அகதிகளுக்கு மூடப்பட்டுவிட்டன. இப்பொழுது பாரியளவில் திருப்பி அனுப்பல் பசுமையினரால் ஆதரிக்கப்படுகிறது.

சுவீடனின் அகதிகள் கொள்கையில் ஏற்பட்டுள்ள வலதுசாரி திருப்பமானது, வாரக்கணக்காக நடைபெற்ற வெறித்தனமான பிரச்சாரத்தின் விளைவாகும். அதில் ஜேர்மனியைப் போலவே அகதிகள் பரந்த அளவில் பாலியல் ரீதியாக தாக்குதலை நடத்துகிறார்கள் மற்றும் அவர்களை குற்றகரமானவர்கள் என்று தொடர்ச்சியாக கண்டனம் செய்து வருகின்றனர். சுவீடிஸ் பொலீஸ் பொதுவான அகதிகளால் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றங்களை மூடி மறைக்கின்றனர் என்று அதிவலதுசாரிகளால் குறிப்பாக விமர்சிக்கப்படுகின்றனர்.

இந்த இனவாத பிரச்சாரம், 15 வயது சிரியன் அகதி ஒருவர் உண்மையில் உள்நாட்டு யுத்தத்தின்காரணமான உழைச்சலால் நிலைகுலைந்து போராடிக் கொண்டிருக்கையில், அகதிகளுக்கான பெருந்திரள் மையத்தில் ஒரு பராமரிப்பாளரை குத்தி அவர் ஆபத்தான வகையில் காயமடைந்தபொழுது ஒரு உச்சநிலையை அடைந்தது.

வலதுசாரி தீவிரவாத மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு சுவீடன் ஜனநாயகக் கட்சியினரால் நடத்தப்பட்ட உந்தப்பட்ட விவாதமானது, அகதிகள் மீதான அரசின் நசுக்குதலை இன்னும் தீவிரமாக்க வலியுறுத்தியது. Frankfurter Rundschau பத்திரிகை குறிப்பிட்டதுபோல், “அகதிகள் பிரச்சினையை” சமாளிக்க “பாரியளவிலான மனித வளம் தேவைப்படுவதாக” அவர்கள் பார்க்கின்றனர்.

அதிவலது முன்னேறி வருவது எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஜனநாயகத்தால் கடந்த இருதசாப்த காலமாக பின்னபற்றப்பட்டுவரும் அழிவுகரமான கொள்கைகளின் விளைவாகும். முன்எதிர்பாராத தனியார்மயமாக்கல் திட்டங்கள், நலத்திட்டம் மற்றும் பொது செலவினங்களில் பெரும் வெட்டு ஆகியன பல நகர்ப்புற மையங்களின் பறநகர்ப்பகுதிகளை ஏழ்மையில் ஆழ்த்தியுள்ளன. ஸ்டாக்ஹோம் மற்றும் மல்மோவா நகரங்களின் சில புறநகர்ப்பகுதிகளில் வேலையின்மை 15 சதவீதத்திற்கும் மேல் உள்ளது, நாட்டின் சராசரியைவிட இரு மடங்கு அதிமாக உள்ளது. பரந்த வேலையின்மையால் புலம்பெயர்ந்தோர் கண்டபடி பாதிக்கப்பட்டுள்ளனர். 2014 கோடையில் பொலீஸ் ஒரு போர்ச்சுக்கீசிய அகதியை சுட்ட பின்னர் ஸ்டாக்ஹோம்மின் புறநகர்ப்பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் சமூகப் பதட்டங்கள் அதிகரித்தஅளவில் வெடித்தன.

சுவீடனின் ஆளும் தட்டினர், கண்டம் முழுவதும் அவர்களைப் போன்றோரைப்போல, கூர்மையடைந்துவரும் சமூகப்பதட்டங்களுக்கு சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் தேசிய இனவெறி மற்றும் புலம்பெயர் எதிர்ப்பு உணர்வை எரியூட்டியதானது, அதிவலதுக்கான வழிக்கு திறந்துவிட்டது மற்றும் பொலீஸ் அரசை பலப்படுத்தவும் செய்தது. மனித இன அழிப்பு போன்ற சூழல் உருவாக்கம் அதிகரித்த இராணுவ வாதத்தால் சேர்ந்துகொண்டது. சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் Margot Wallström நாட்டிற்குள் அகதிகள் வருவதன் காரணமாக நாடு “ஒரு நிலைகுலைவை” எதிர்நோக்குவதாகவும் லட்சக்கணக்கான அகதிகளைப் போதுமான அளவு பாதுகாக்க முடியாதிருப்பதாகவும் அறிவித்த போதிலும், 2014–ன் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செலவினங்களில் 10 சதவீத அதிகரிப்பு என்பது தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கிறது.

Wallström கட்டாய இராணுவ சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஆதரவளிக்கிறார், அது 2010ல் அகற்றப்பட்டிருந்தது. Wallström படி, அத்தகைய ஒரு கொள்கை கடந்த கோடையில் அகதிகள் வந்து குவிதலை சமாளிப்பதில் உதவியாக இருந்திருக்கும்.

சுவீடிஷ் சமூக ஜனநாயக கட்சியினர் மற்றும் பசுமைக் கட்சியினரின் அப்பட்டமான திவாலானது அனைத்துக்கும் மேலாக அதிவலதுகளை வலிமைப்படுத்தி இருந்தது. புகலிடம் கோரலைக் கட்டுப்படுத்தல்களுக்கு பின்னர் உடனடியாக, அவர்கள் கொண்டாடினர் ஏனெனில் அரசாங்கமானது “சுவீடன் ஜனநாயக கட்சியினரின் நிலையை ஏற்றிருந்தது.” பிரான்சின் நவ பாசிச தேசிய முன்னணி போன்ற ஏனைய ஐரோப்பிய கட்சியினருடன் கூட்டுவைத்திருக்கும் சுவீடன் ஜனநாயக கட்சியினர் அண்மைய தேர்தல்களின் படி 18 சதவீத வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். அவர்கள் கடந்த ஆண்டு சுவீடனில் குறைந்த பட்சம் இரண்டு டசின் கலவரங்களை அகதிகள் தங்குமிடத்தில் நடத்தியிருந்தனர்.

சமூக ஜனநாயக கட்சியினர், பசுமைகட்சியினர் மற்றும் பிரான்சில் என்பிஏ மற்றும் ஜேர்மனில் இடது கட்சி போன்ற அமைப்புக்கள் உள்பட ஐரோப்பா முழுவதும், அரசியல் “இடது”, அதிவலதுசாரிகளின் முட்டாள்கருத்துக்களை முற்றாக விழுங்கிக் கொண்டு, அகதிகளின் சமூக உரிமைகளுக்கு மூடுதிரை போடுவதற்கு கோரிவருகின்றதுடன் பரந்தளவிலான திருப்பி அனுப்புதல்களையும் கோரி வருகிறார்கள்.

இந்த கொள்கைகளின் பாதிப்பு அகதிகளுக்கு மனித பேரிடராக இருந்து வருகின்றது மற்றும் ஐரோப்பா முழுவதும் பொலீஸ் அரசு வடிவங்களை நோக்கி நகர்த்துகிறது. வியாழன் அன்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அதன் அறிக்கையில் “அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அகதிகளை வெட்டகங்கெட்ட வகையில் பூதாகாரமாக்குவதும் ஒரு அதிகரித்துவரும் சகிப்பின்மையின் அழுத்தமான அரசியல் தயாரிப்பாகி இருக்கிறது” என அறிவித்தது.

இலைமறைவு காயாக ஒரு மனிதநேய வேண்டுகோளை வைக்கும் துணிவான ஒப்புதலில், “மேற்கத்திய அரசாங்கங்கள் மனித உரிமை பாதையிலிருந்த வலிமையான பாரம்பரிய கூட்டாக இருந்த உரிமைகளை வெட்டுவதற்கு மேற்கத்திய அரசாங்கங்கள் அச்சுறுத்தி வருகின்றன” என்று அறிவித்தது.

வேறு வார்த்தைகளில் கூறினால், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பாதுகாப்பற்ற நாடுகளில் ஊடுருவி குண்டுவீசுவதற்கு “மனித உரிமைகள்” மீறல் ஒரு காரணமென மார்தட்டிக்கொள்ளும் அதே ஐரோப்பிய அரசாங்கங்கள்தான், தங்களின் சொந்த எல்லைகளுக்குள்ளே “மனித உரிமைகளை” அத்துமீறுவதில் முற்றிலும் அலட்சியமாய் இருந்து வருகின்றன, மற்றும் அகதிகள் நெருக்கடியை தங்களின் சொந்த உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு பொலீஸ் அரசைத் திணிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.