ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pakistan steps up privatization drive after unions suppress airline strike

தொழிற்சங்கங்கள் மூலமாக விமான நிறுவன வேலை நிறுத்தத்தை ஒடுக்கிய பின்னர் பாகிஸ்தான் தனியார்மயமாக்கலை முடுக்கி விடுகிறது.

By Sampath Perera
20 February 2016

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன (PIA) ஊழியர்களின் ஒரு வார காலம் நீடித்த போர்குணம் மிக்க வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மூலம் ஒடுக்கிய பின்னர் பாகிஸ்தானிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆணைக்கு உட்பட்டு தனியார்மயமாக்குதலை முன்னெடுத்துச் செல்கிறது. தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தக் காட்டிக்கொடுப்பை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான விமான நிறுவன ஊழியர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசாங்கம் பழிவாங்கியது.

சர்வதேச விமான நிறுவனத்தில் ஊழியர்களின் ஒட்டுமொத்த வேலை நிறுத்தம் பிப்ரவரி 2ல் தொடங்கப்பட்டது, மேலும் முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாக முதல்முறையாக விமான நிறுவனத்தின் மொத்த விமானத் தொகுதியையும் தரை இறக்குவதில் விரைவான வெற்றியும் காணப்பட்டது. அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் பயனற்ற வாக்குறுதிகளை மட்டுமே தொழிற்சங்கங்களால் பெறமுடிந்தது, இருந்தபோதிலும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) பிப்ரவரி 9 அன்று மாலையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் வாங்கியது.

அரசாங்கம் PIA ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை இரத்தக்களரியான முறையில் ஒடுக்க முயன்ற பின்னர், இப்போராட்டத்திற்கு பாரிய அளவில் தொழிலாளர் வர்க்க ஆதரவு பெருகுவதை அது தூண்டியது. அரசாங்கத்தின் தனியார்மயமாக்கத் திட்டத்திற்கு எதிராக ஒரு பரந்த தொழிலாளர் வர்க்க எழுச்சியை இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தூண்டிவிடுமோ என்ற பயத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் அரசாங்கமும் முழுமையாக உறைந்துவிட்டது. ஆனால் JAC மற்றும், பொது மற்றும் தனியார் ஆகிய இரண்டு துறைகளையும் சேர்ந்த தொழிற் சங்கங்களும் முறையாக திட்டமிட்டே PIA ஊழியர்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை தனிமைப்படுத்தி வைத்து இருந்தன.

பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் மற்றும் நீர் மற்றும் மின்சார அபிவிருத்தி ஆணையம் (WAPDA) போன்ற மாபெரும் நிறுவனங்களை விற்பது உட்பட, அரசாங்கம் அதன் ஒட்டுமொத்த தனியார்மயமாக்கத்தை அமல்படுத்துவதற்கான அதன் திறமைக்கு முக்கியமான சோதனையாக, வரும் வாரங்களில் PIA தனியார்மயமாக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் - 26 சதவீத விமான நிறுவனப் பங்குகள் விற்க்கப்பட வேண்டும் என்று பார்ப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

2013ல், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணைய தொகுப்பு நிதியான 6.64 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஈடாக, "நஷ்டத்தை ஏற்படுத்தும்" 68 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க PML-N அரசாங்கம் உறுதியளித்தது. எனினும், இந்த தனியார்மயமாக்கத் திட்டத்தை அமல்படுத்துவதனால் பாரிய எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதனால் பாகிஸ்தான் அரசாங்கம் காட்டும் தயக்கத்தின் மீது IMF சமீபத்திய மாதங்களில் அதிகளவு பொறுமை இழந்துவிட்டது.

அரசாங்கம் மற்றும் ஆளும் உயர்மட்டத்தினர் இடையே PIA ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோற்றுவித்துள்ள பயம் மற்றும் நெருக்கடி நன்கு உணரக்கூடியதாகவே இருந்தது. சிறிய அளவிலான வெளிநடப்பு இயக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து, பிப்ரவரி 2 செவ்வாய்கிழமை முதல், ஊழியர்களின் ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்தை தொடங்க இருப்பதாக JAC தயக்கத்துடன் அறிவிப்பு விடுத்த பின்னர், PIA தனியார்மயமாக்கம் ஆறு மாத காலத்திற்கு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஒரு போலியான அறிவிப்பினை அரசாங்கம் அவசர அவசரமாக வெளியிட்டது. பின்னர் அதே தினமான, பிப்ரவரி 1 அன்று, PIAவின் அனைத்து பணி தொடர்பான நடவடிக்கைகளையும் குற்றப்படுத்தும் விதமாகவும், அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யவும் கட்டாய சேவை பராமரிப்பு சட்டத்தை (Compulsory Service Maintenance Act-CSMA) ஷெரீப் அமுல்படுத்தினார். வேலை நிறுத்த தடையை மீறும் தொழிலாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தின் முதல் நாளன்றே, வேலை நிறுத்தத்திற்கு கராச்சியில் இருந்த வலுவான ஆதரவை இரத்தக்களரியில் ஒடுக்குவதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) சிந்து மாகாண அரசாங்கத்துடன் மத்திய அரசாங்கம் நெருக்கமாக ஒத்துழைத்தது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள், தண்ணீர் துப்பாக்கி மற்றும் ரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழியர்கள் மீதான தாக்குதலை நடத்திய பின்னரே, போலீஸ் மற்றும் பாகிஸ்தான் துணை இராணுவ ரேஞ்சர்கள், நிஜத் தோட்டாக்களைக் கொண்டு சுடத் தொடங்கியதில் இரண்டு PIA ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் டஜனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த அபாயகரமான தாக்குதல், வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காகவே நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக நாடு முழுவதிலும் உயிர்ப்பான ஆதரவை தூண்டக்கூடிய விளைவினையே இத்தாக்குதல் சந்தித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக சுடப்படுவார்கள் என்றும், மேலும் அவர்களுக்கு ஓராண்டு காலம் வரையிலும் சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் கடும் அச்சுறுத்தல்களை ஷெரீப் மற்றும் அவரது அமைச்சர்கள் பதிலடியாக கொடுத்தனர். ஆனால், பெரும்பான்மை ஊடகங்கள், பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் பிற எதிர் கட்சி அமைப்புக்களின் கலந்தாய்வினைத் தொடர்ந்து, பாரிய அளவிலான சமூக எதிர்ப்பை தூண்டக் காரணமான இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை மிதப்படுத்த தொழிற்சங்கங்களையே அவர்கள் அனைவரும் நம்பி இருந்தனர்.

JAC இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தந்திரோபாய வழிகளைப் பயன்படுத்தி விரைவி்ல் வெற்றிகண்ட உடனேயே அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்தது. இது தினசரி-ஒப்பந்த ஊழியர்கள் 11 பேரை வேலை நீக்கம் செய்ய ஜனநாயக விரோத கட்டாய சேவை பராமரிப்பு சட்டத்தை (CSMA) அப்பட்டமாக செயல்படுத்தியது. மேலும், பத்திரிக்கை செய்திகளின்படி, "தீவிர எதிர்ப்பாளர்கள்" என அடையாளம் காணப்பட்ட 167 நிரந்தர ஊழியர்களுக்கு காரணம்கேட்புக் குறிப்பாணைகள் விடுக்கப்பட்டன. துப்பாக்கி சூடு, அபராதங்கள் மற்றும் சிறைதண்டனை போன்றவற்றை உள்ளடக்கிய வக்கிரமான தடைகளை அமல்படுத்துவதற்கான முதல் படியாக இந்த "காரணம்கேட்பு" குறிப்பாணைகள் இருந்தன. JAC செய்தியாளர் நஷ்ருல்லா கானைப் பொறுத்தவரையில், இந்த சூழ்ச்சி வேட்டை பத்திரிக்கை செய்தியினைவிட மிக அதிகமாக விரிவாக, 500க்கு மேற்பட்ட தொழிலாளர்களை இதுவரை குறிவைத்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்காக, PIA தொழிலாளர்களை ஒரு உதாரணமாக்க அரசாங்கம் தீர்மானித்தது, மேலும் பாகிஸ்தான் அரசாங்கம் விரைவிலேயே கூடுதல் கடன்களை IMF இடமிருந்து பெறுவதற்கு முயற்சிக்கையில் அதற்கு மீண்டும் நம்பிக்கை அளிப்பதற்கும் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்க முனைவதற்கும் ஆகும்.

முதல் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அன்றே, ஒரு கடன் ஆய்வுக் கூட்டத்தில், இஸ்லாமாபாத் அதன் தனியார்மயமாக்கம் தொடர்பான உறுதிமொழியை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என IMF தனது அழுத்தத்தை அதிகரித்தது., நிதி அமைச்சர் இஷாக் தர், PIA தனியார்மயமாக்கத்திற்கான காலக்கெடு தொடர்பாக மறு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரேரித்து மற்றும் சமூக பதற்றத்தினால் விளையும் ஆபத்து குறித்து எச்சரித்த பின்னர் அவருக்கு IMF அலுவலர்களால் "கொடூரமான" "கடுமையான கண்டனம்" என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாகிஸ்தானிய அதிகாரி தெரிவித்தார்.

கூட்டம் முடிவதற்கு முன்பே, தர் அவரது குரலை உயர்த்தி, தனியார்மயமாக்கத் திட்டத்தின் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பகிரங்கமாக மீண்டும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் உடனடியாக PIA தனியார்மயமாக்கத்தை செயல்படுத்த இருப்பதாக, பாகிஸ்தான் பாராளுமன்ற மேல்சபைக்கு தனியார்மயமாக்க ஆணையத்தின் செயலாளர் அஹமத் நவாஸ் சுகேரா இந்த வாரம் அறிவித்தார்.

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதில் JAC இன் பங்கு என்னவாக இருக்கும் என்பது முற்றிலும் கணிக்கக்கூடியது. இது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) (PML-N) கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற பாகிஸ்தானை ஆளும் உயரடுக்கின் கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்களைக் கொண்டதாகும். இந்த கட்சிகள் அனைத்தும், அரசாங்கத்தின் சந்தை-சார்பு சீர்திருத்தங்கள் உடனும் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு பாகிஸ்தானை ஒரு இலாபகரமான "உலகளாவிய போட்டி" களமாக உருவாக்குவதிலும் ஒத்துப்போகின்றன.

PIA தனியார்மயமாக்கத்தை எதிர்ப்பதாக JAC கூறிக்கொண்டபோதிலும், அது ஒரு பொய்யாகவே இருந்தது. PIAவினை ஒரு இலாபகரமான நிறுவனமாக உருவாக்குவதில் உள்ள அரசாங்கத்தின் குறிக்கோளை உணர்ந்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பினை வழங்க அதன் "நான்கு அம்சத் திட்டம்" ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், PIAவினை இலாபகரமான நிறுவனமாக உருவாக்குவதில் தொழிற்சங்கங்களின் முயற்சிகள் தோல்வி அடைந்தது என்றால் மட்டுமே PIA தனியார்மயமாக்கம் என்பதில் "எதைச் சரி என்று அரசாங்கம் அறிகிறதோ அதனைச் செயல்படுத்த அதற்கு சுதந்திரம்" வழங்கப்படும் என்றும் JAC அறிவித்து உள்ளது.

IMFன் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் தனியார்மயமாக்க முனைவிற்கு ஒரு சவாலாக PIA வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிற தொழிலாளர்களை இணையக்கோரும் எந்த ஒரு அறைகூவலையும் JAC எதிர்த்தது. தனியார்மயமாக்க எதிர்ப்பு போராட்டத்தின் விரிவாக்கத்தினால் தொழிலாளர் வர்க்கம் விரைவில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கவும், ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிற்கு ஒரு சவாலாகவும் தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ச்சி இருந்து விடுமோ எனவும் அரசாங்கத்தைப் போன்றே PIA ஊழியர் சங்கங்கள் பயந்தன. ரயில்வே மற்றும் WAPDA தொழிலாளர்கள் போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாகிஸ்தானின் முக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களும் அதே மனப்போக்கில், ஐக்கியத்திற்கான வெற்று வாக்குறுதிகளை வழங்கி PIA ஊழியர்களுக்கான அவர்களது ஆதரவை மட்டுப்படுத்தி உள்ளனர்.

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டு சில நாட்களிலேயே, JAC தலைவர்கள் அரசாங்கத்துடன் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கிம் னர், மேலும் "நாட்டை தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு எங்களால் ஆன சிறந்த முயற்சிகளை எடுப்போம்" எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அறிவிப்பு விடுத்தது,என்பது அவர்கள் முதலாளித்துவ அரசியல் அமைப்புடன் மற்றும் அரசுடன் சேர்ந்து தாம் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தொழிலாளர்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று மேலும் நிரூபணமாகி உள்ளது. "வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெறுவதற்கு இரக்கமுள்ள நண்பர் ஒருவர் அறிவுரை வழங்கினார்" என்று கூறிய JAC தலைவர் சோஹைல் பலோச், பின்னர் "ஒரு நடுவராக அளித்த வாக்குறுதிகளின் பேரில்தான் நாங்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்தோம்" என மேலும் கூறினார். ஆனால் "இரக்கமுள்ள நண்பர்" மற்றும் "நடுநிலையாளர்" என்று குறிப்பிடப்பட்ட அவர்கள் யார் என்று அவர் ஒருபோதும் அடையாளம் காட்டவில்லை. ஆனாலும், சந்தேகம் இல்லாமல் அவர்கள் ஆளும் வர்க்கத்தினுள் உள்ள முக்கிய பிரமுகர்களே என்பது ஊர்ஜிதம். பாகிஸ்தான் அரசியல் வாழ்க்கையில் இராணுவம் ஆற்றுவதற்கென வழங்கப்பட்ட பாத்திரத்திலிருந்து பார்க்கையில், இவ்வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டும்வருவதில் அது திரைமறைவில் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்தது.

PML-N, PPP மற்றும் பிற கட்சி அமைப்புக்களின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட "கராச்சி நடவடிக்கை"யின்கீழ், தற்போது இராணுவம், "பயங்கரவாதம்" மற்றும் "குற்றங்கள்" மீதான ஒடுக்குமுறை என்ற போர்வையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரம் முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளது.

விமான நிறுவனத்தை விற்க மிகுந்த அழுத்தம் கொடுப்பது மற்றும் அத்துடன் போர்க்குணம் கொண்ட PIA ஊழியர்களை பழிவாங்குவது போன்றவற்றின் மூலம், வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பலோச் பெற்றுக்கொண்ட "உத்தரவாதங்கள்" ஏற்கனவே பயனற்றவை என நிரூபணமாகிவிட்டது.

இந்த இழிவான காட்டிக்கொடுப்புக்களை நடத்துவதில், பாகிஸ்தான் போலி-இடது, எல்லாவற்றுக்கும் மேலாக லால் கானின் "போராட்டம்" என்ற குழு, அவாமி தொழிலாளர் கட்சி (AWP) போன்றவை தொழிற்சங்கங்களுக்கு உதவி செய்தன. தொழிலாளர்களின் போர்க்குணம் பற்றி போலி-இடது துதி பாடிற்று அதன் மூலம் முதலாளித்துவ சார்பு தொழிற் சங்கங்களின் தலைமையின்கீழ் அவர்களை சிக்கவைப்பதே சிறந்தது மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தின் அரசியல் பாத்திரத்தை மறுப்பது என்ற வகையில்; அதாவது தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தினரின் வர்க்க மூலோபாயத்திற்கு ஒரு சவாலாக உள்ளது, மேலும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வும் தேவைப்படுகிறது.

அரசியல் அமைப்புக்கள் உடனான JACஇன் பிணைப்புகள் மற்றும் PIA இலாபகரமானதாக ஆக்கப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அதன் ஒப்புதல் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு தொடர் கட்டுரைகளை லால் கான் எழுதினார். இவைபோன்ற சிலவற்றின் முடிவில், "அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகளின் ஒரு ஐக்கிய முன்னணி" அதாவது பாகிஸ்தானின் உயர்அடுக்கு மற்றும் அரசியல் அமைப்புப் பிரிவுகளின் பிடியில் உள்ள தொழிற்சங்கங்கள் மூலம், "ஒரு பொது வேலை நிறுத்தம்" குறித்து ஒரு வாய் வீச்சு மிக்க அழைப்பினை விடுத்தார். பாகிஸ்தானிய தொழிலாளர் வர்க்கத்தின் "வெகுஜன சோசலிச கட்சி" ஆக வெளிப்படையான முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சார்புடையதாக PPP இருக்கிறது என்ற இந்த பொய்மையை பல தசாப்தங்களாக கான் ஊக்குவித்து வருகிறார்.

AWP வகித்த பாத்திரத்தின் குற்றத்தன்மை எந்த வகையிலும் குறைவானது அல்ல. வாஷிங்டன் உடன் ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கையாகவும், மேலும், தொழிலாளர் வர்க்கம் மற்றும் அரசாங்கத்தின் இடது சாரி எதிர்ப்பாளர்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் கடுமையான "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டங்களை சுமத்துவது போன்றவற்றின் மீது அரசியல் மறைப்பை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகின்ற விதத்திலும், இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகளுக்கு எதிராக நாட்டின் வடமேற்கு பகுதியில் நடைபெறும் இராணுவ எதிர் தாக்குதலை முன்னெடுப்பதற்கு AWP உற்சாகமூட்டியது. பிப்ரவரி 2 அன்று PIA ஊழியர்களை சுட்டு வீழ்த்திய துணை இராணுவ ரேஞ்சர்களால் நிகழ்த்தப்பட்ட கராச்சி ஆக்கிரமிப்புக்கு சாக்குபோக்கான காரணமாகவும் இந்த முன்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.