ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former US ambassador advocates American military bases on Taiwan

முன்னாள் அமெரிக்க தூதர் தாய்வானில் அமெரிக்க இராணுவ தளங்கள் அமைப்பதற்கு வாதிடுகிறார்

By Peter Symonds
19 January 2017

ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜோன் போல்டன், வரவிருக்கின்ற ட்ரம்ப் இன் நிர்வாகம், பல தசாப்தங்களாக அமெரிக்க-சீன உறவுகளுக்கு அடிப்படை அமைத்து தந்திருக்கின்ற "ஒரே சீனா" கொள்கையை "மறுபரிசீலனை" செய்வது மட்டும் போதாது என்று ஆத்திரமூட்டும் வகையில் வாதாடி வந்துள்ளார், ஆனால் தாய்வானில் அமெரிக்க இராணுவ விற்பனையை பெருக்குவதற்கும், மேலும் அங்கு அமெரிக்க இராணுவ துருப்புக்கள் தளம் அமைப்பதற்கும் ஊக்குவிக்கிறார். தாய்வானில் அமெரிக்க இராணுவ பிரிவுகள் தளம் அமைப்பது என்பது சீனாவுடனான ஒரு பாரிய அமெரிக்க மோதலுக்கும், முரண்பாட்டிற்கும் களம் அமைத்துக்கொடுத்துவிடும்.

ட்ரம்ப்பின், சீனா பெரும் சலுகைகளை செய்தால் மட்டுமே "ஒரே சீனா" கொள்கையை பின்பற்றுவதற்கு ஒப்புக்கொள்வேன் என்பதற்கு பெய்ஜிங் இந்த பிரச்சனை "பேச்சுவார்த்தைக்கு உட்படாதது" என்று திட்டவட்டமாக அறிவித்ததுடன் மற்றும் இது எச்சரிக்கையையுடன் அணுகப்படவேண்டும் என தனது பிரதிபலிப்பை காட்டியுள்ளது. "ஒரே சீனா" கொள்கையின் கீழ், தாய்வான் உட்பட அனைத்து சீன பகுதிகளுக்கும் பெய்ஜிங் தான் ஒரே நெறியான அரசாங்கம் என்று வாஷிங்டன் அங்கீகரித்துள்ளது.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் மிகுந்த இராணுவவாத நபர்களுள் ஒருவராக போல்டன் இருந்தார். ஒரு வெளிவிவகார துணை செயலராகவும், பின்னர் அமெரிக்க தூதராகவும், ஈராக் மீதான அமெரிக்காவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பினை அவர் விசுவாசத்துடன் நியாயப்படுத்தினார், மேலும் பேரழிவுக்குரிய ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய்யான ஆதரவளித்ததுடன், வட கொரியா மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வாதாடினார். வெளிவிவகார செயலர் போன்ற முக்கிய பதவிக்கு சாத்தியமானவர்களாக ட்ரம்ப் பரிந்துரைத்த பட்டியலில் இவர் உயர்ந்த இடத்தை பெற்றிருந்தார், அத்துடன் சந்தேகத்திற்கு இடமின்றி புதிய நிர்வாகம் அவருடன் வலுவான தொடர்புகளை கொண்டிருக்கும்.

திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இல் எழுதும்போது, போல்டன் பின்வருமாறு அறிவித்தார்: "'ஒரே சீனா' கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கும், அதன் அர்த்தம் என்னவென்று தீர்மானிப்பதற்கும் இதுவே மிகச்சரியான நேரம்.... வர்த்தகம் மற்றும் நிதியியில் கொள்கைகளைவிட பரந்த, குறிப்பாக தாய்வான் உட்பட, நாம் 1972ஆம் ஆண்டிற்கு ஒத்த மூலோபாயரீதியில் ஒத்திசைவான முன்னுரிமைகளை பிரதிபலித்துக்கொண்டிருக்காமல் 2017க்கு தேவையானதை மேற்கொள்ளவேண்டும். ஒரு பெருகிவரும் போர்வெறியுடன் சீனா எவ்வாறு பதிலடி கொடுக்கப்போகிறது என்று நாம் பார்க்கலாம்."

1972ல், ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் சீனாவிற்கு விஜயம் செய்ததுடன், முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக வாஷிங்டனின் பனிப்போர் சூழ்ச்சிகளில் பெய்ஜிங்கை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு வெளியுறவு கொள்கையில் ஒரு திடீர் மாற்றத்திற்கு சமிக்ஞை செய்தார். 1979ல், அமெரிக்கா தாய்வானுடனான அதன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டு, சீனாவுடன் அவற்றை ஸ்தாபித்துக்கொண்டபோது, ஷாங்காய் அறிக்கையில் ஒரே சீனா கொள்கை மீதான நிக்சனின் ஆரம்ப அங்கீகரிப்பு முறைப்படுத்தப்பட்டது. அதே சமயத்தில், வலுக்கட்டாயமாக தாய்வானை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு சீனா எடுக்கின்ற எந்தவொரு முயற்சிக்கும் எதிராக தாய்வானை பாதுகாப்பதற்கு 1979 தாய்வான் உறவுகள் சட்டம் அமெரிக்காவை உடன்படவைத்தது.

சீனர்களின் "ஆக்ரோஷத்தன்மை" பற்றிய போல்டனின் கூற்றுக்கள், ஈராக்கில் அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பினை புஷ் நிர்வாகம் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய பொய்களும், அரைகுறை உண்மைகளும் நிறைந்ததான ஒரு இட்டுக்கதையுடன் பிணைந்துள்ளன. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் நில சீர்திருத்தத்தினையும், கிழக்கு சீன கடல் பகுதியில் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் பற்றிய அறிவிப்பினையும் மேற்கோளிட்டு, ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" எனும் மோதல் நடவடிக்கைகளுக்கு பெய்ஜிங் கொடுத்த பதிலடியை போல்டன் சர்வ சாதாரணமாக புறக்கணித்தார். இதுவரை போல்டனை பொறுத்தமட்டில், சீனாவிற்கு எதிராக ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பாக இந்த "முன்னெடுப்பு," ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் கிட்டத்தட்ட இன்னும் போதுமான இலக்கினை சென்றடையவில்லை என்பதாகும்.

சீனாவை கண்டித்ததற்கு பின்னர் போல்டன் பரிந்துரைத்த வழிமுறைகள் பல தசாப்தங்களுக்கு கிழக்கு ஆசியாவில் மிகவும் கடுமையான நெருக்கடிகளை தூண்டிவிடும். மேலும் அவர் எழுதியதாவது: "தாய்வானுக்கு அமெரிக்க இராணுவ விற்பனையை அதிகரிப்பதன் மூலமாகவும், மேலும் அநேகமாக சாதகமான நிதி நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் இராணுவ அதிகாரிகளையும், இருப்புக்களையும் அங்கு நிறுத்திவைப்பதன் மூலமாகவும் அமெரிக்கா அதன் கிழக்கு ஆசிய இராணுவ நிலைப்பாட்டை இன்னும் மேம்படுத்த முடியும்." தாய்வான் உறவுகள் சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பதனால் இது தொடர்பாக சட்டமியற்றுதல் எதுவும் தேவையில்லை என்று போல்டன் கூறினார்.

தாய்வானில் அமெரிக்க படைகளுக்கான ஒரு முக்கிய பொறுப்பு என்னவென்று போல்டன் தெளிவாக வகுத்தளிக்கிறார். சீன பெருநில பகுதிக்கும், தென் சீன கடல் பகுதிக்கும் அருகாமையில் இந்த தீவு அமைந்துள்ளது. இதனால் "தேவை ஏற்படுகின்றபோது இந்த பிராந்தியம் முழுவதிலும் விரைவாக படைகளை அனுப்புவதற்கு ஏற்றதான அதிகளவு நெகிழ்வு தன்மையை அமெரிக்காவிற்கு கொடுப்பதற்கு" இது இடமளிக்கும். தாய்வான் உடனான ஒரு நெருக்கமான இராணுவ உறவினை கொண்டிருப்பது என்பது, ஆசியாவில் அமெரிக்காவின் மைய நலன்களை அடைவதற்கு அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு வழிவகுப்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக இருக்குமென அவர் வாதிட்டார்.

போல்டன் நன்கு அறிந்தவாறு, தாய்வானுக்கு அமெரிக்க இராணுவ படைகள் மீண்டும் வருவதானது, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை விரைவாக முடிவுக்கு இட்டுச்செல்லுகின்றதாகவும், மேலும் போரினை நோக்கிய நகர்வுகளின் விரிவாக்கத்திற்கும் வழிவகுக்கின்ற ஒரு ஆத்திரமூட்டும் நகர்வாக இருக்கும். சீனாவுடனான மோதல் தவிர்க்க முடியாதது என்று கருதும் அமெரிக்க ஆளும்பிரிவின் இராணுவவாத தட்டுக்களுடன் போல்டன் இருக்கின்ற நிலையில், மேலும், விளைந்துள்ள அமெரிக்க வரலாற்று வீழ்ச்சியில், பின்னாளில் என்பதைவிட விரைவில் ஒரு முன்கூட்டிய மோதலுக்கு துரிதப்படுத்துவதற்கே அவர் விரும்புகிறார்.

குறிப்பாக தாய்வான் மீதான பிரச்சனை உட்பட, வரவிருக்கின்ற ட்ரம்ப் நிர்வாகத்தில் போல்டன் அவரது முக்கிய பங்கினை கொண்டிருக்கிறார்.

ட்ரம்ப் நியமித்த தலைமை அதிகாரிகளுள் ஒருவரான ரியன்ஸ் பிரைபஸ் 2011ல் ஒரு குடியரசு கட்சி பிரதிநிதிகள் குழுவுடன் தாய்வானுக்கு விஜயம் செய்தார், மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 2015ல், தாய்வான் ஜனாதிபதியாக சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக அவரை சந்தித்தபோது மீண்டும் விஜயம் செய்தார். தாய்வான் இன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லீ, பிரைபஸை ஒரு நண்பராக கருதி அழைப்பு விடுத்ததுடன், அவரது நியமனம் தங்களது தீவிற்கு ஒரு "நற் செய்தி" எனவும் வர்ணித்தார்.

புதிய தேசிய வர்த்தக சபைக்கு (National Trade Council) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரான பீட்டர் நவர்ரோ, அவரது படைப்புக்களான: வருகின்ற சீன போர்கள்: அவர்கள் எங்கு போரிட வேண்டும், மற்றும் எப்படி வெற்றி கொள்ள முடியும் (The Coming Chine Wars: Where They Will be Fought and How They Can Be Won) போன்றவை உட்பட ஒரு ஆவேசம் நிறைந்த சீன எதிர்ப்பு வெறியராக அவர் இருக்கிறார். சீனாவிற்கு எதிரான வர்த்தக போர் நடவடிக்கைகளுக்கு ஒரு கடும் ஆதரவாளராக அவர் இருப்பதோடு மட்டுமல்லாமல், தாய்வான் உடனான அமெரிக்காவின் வலுவான உறவுகளுக்கு அழைப்புவிடுக்கிறார். ஆனால் ஒபாமாவின் "முன்னிலை" கொள்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் விமர்சிக்கிறார்.

வணிக நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் தாய்வானுக்கு விஜயம் செய்து அரசாங்க அதிகாரிகளுடன் "விரிவான பேச்சுவார்த்தை" நடத்திய பிறகு, கடந்த ஜுலையில் நவர்ரோ National Interest இல் "அமெரிக்கா தாய்வானை கைவிட முடியாது" ("America can't dump Taiwan") என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டார். அது தாய்வானுடனான அமெரிக்க உறவுகளில் ஒரு அடிப்படை நோக்குநிலை மீளமைவிற்கு அழைப்புவிடுத்தது. "'ஒரே சீனா, இரண்டு அமைப்புகள்' கொள்கையை ஒருபோதும் ஒப்புக்கொள்ளக்கூடாது என்றும் 'ஒரே சீனா' கொள்கையை திரும்ப பார்க்கவும்  கூடாது" என்றும் அமெரிக்க தலைவர்களை நவர்ரோ வலியுறுத்துகிறார். (மூல உரையில் வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

இதுவரை போல்டன் போன்று செயல்படவில்லை என்றாலும், தாய்வானை ஒரு சுயாதீனமான அமெரிக்க சார்பு கூட்டாளியாக தக்கவைத்துக்கொண்டிருப்பது, சீனாவின் எழுச்சிக்கு எதிராக "மூலோபாய ரீதியிலான சமநிலைப்படுத்துதலுக்கு" முற்றிலும் நெருக்கடியானதாக இருந்ததென  நவர்ரோ வலியுறுத்தினார். தாய்வானில் அமெரிக்க இராணுவ படைகள் தளம் அமைப்பதை காட்டிலும், அவர் தாய்வான் துருப்புக்களை பயிற்றுவிக்க தனியார், ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் ஒப்பந்தக்காரர்களை அந்த தீவிற்கு அனுப்பிவைக்க அழைப்பு விடுத்தார்.

நவர்ரோ சீனாவினுடையதற்கு ஒப்பிடத்தக்கதான பிராந்தியத்திற்குள் நுளைவதை எதிர்க்கும் மற்றும் தடுக்கும் தகமைகள் உள்ளடங்கலான உயர்ந்த இராணுவ உதவியை தாய்வானுக்கு அளிப்பதற்கும் வாதிட்டார், அது தாய்வான் இராணுவத்திற்கு ஒரு முக்கிய தகமை மேம்படுத்துதல் தேவையை கொண்டிருக்கும் ஒரு நகர்வாக இருக்கும். அதிநவீன டீசல் மின்னாற்றல் நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட ஒரு கடற்படையினை அபிவிருத்தி செய்வதற்கு தாய்வானுக்கு அமெரிக்கா உதவியளிக்கவும் அவர் அழைப்புவிடுத்தார். அத்தகைய இராணுவ வன்பொருள்கள் சீன கடற்படைக்கும், கப்பல் வாணிபத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும், மேலும் தாய்வான் உறவுகள் சட்ட விதிமுறைகளின் கீழ் எந்த வழியிலும் அதனை "தற்காப்பு" என்று கருதி கையாளவும் முடியாது.

இருப்பினும், தாய்வானுக்கு மட்டுமல்லாமல், தென் சீன கடல் பகுதிகளில் சீனாவின் நில சீர்திருத்தத்திற்கும், கட்டமைவிற்கும் சேர்த்து வெளியுறவுத்துறை செயலாளராக ட்ரம்பினால் நியமிக்கப்பட்ட ரெக்ஸ் டில்லர்சன் மூலமாக மிகவும் வலிய மோதலுக்கு இழுக்கும் கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் அவரது பதவி நியமனம் உறுதி செய்யப்பட்டதும், டில்லர்சன் பின்வருமாறு அறிவித்தார்: "முதலாவதாக, தீவு கட்டமைப்பு நிறுத்தப்படும், இரண்டாவதாக, அந்த தீவுகளில் உங்களது அணுகுதலுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று நாங்கள் சீனாவுக்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்பவேண்டியிருக்கிறது."

செவ்வாய்க்கிழமையன்று Defence One வலைத் தளத்தில், தென் சீன கடல் பகுதிகளில் சீனா அதன் தீவுகளை அணுகுவதை தடுப்பதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் போரினை விளைவிக்கும் என்று மைக்கேல் புச்சஸ் விவரித்தார். "தென் சீன கடல் பகுதிகளில் அமைந்துள்ள தீவுகளில் சீனாவின் அணுகுதலை தடுப்பதற்கு ஒரு கடற்படை முற்றுகை நடத்துவது மட்டுமே ஒரே வழியாக இருக்கும், அது ஒரு போருக்கு நிகரானதாகவே இருக்கும்," என்றும், அத்துடன் சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போரை தொடங்கிவைப்பதில் அமெரிக்கா தான் ஆக்கிரமிப்பாளராக இருக்கும் என்றும் எழுதினார்.

2016 வரையிலும் ஒபாமா நிர்வாகத்தில் ஒரு வெளிவிவகார துணை செயலராக புச்சஸ் பணியாற்றினார். "தடையற்ற கடல்வழி செயல்பாட்டு சுதந்திரத்திற்கு இணையான வேகம் மற்றும் நோக்கத்தை விரிவுபடுத்துவது" உட்பட, அதாவது சீனாவின் பிராந்திய உரிமை கோருதல்களுக்கு ஆத்திரமூட்டும் விதத்திலான கடற்படை சவால்களாக, தென் சீன கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்வதற்கு ஒரு "மிகுந்த வலுவான கொள்கையை" அவர் பரிந்துரைக்கிறார். எனினும், ரில்லர்சன் முன்மொழிகின்ற கருத்துக்களில் இருக்கின்ற அபாயங்களை புச்சஸ் அப்பட்டமாக தெரிவிக்கிறார்: போர் நடவடிக்கை விரைவில் ஆயுத மோதல்களுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்பதுடன், ஆசியா மற்றும் உலகத்தையே விழுங்க கூடிய ஒரு பேரழிவுகரமான மோதலையும் விளைவித்துவிடும்.