ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Comstar workers’ strike in fourth week

இந்தியா: காம்ஸ்டார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நான்காவது வாரத்தில்

By Arun Kumar and Sasi Kumar
5 September 2011

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மறைமலைநகரில் அமைந்துள்ள காம்ஸ்டார் ஆட்டோமோடிவ் டெக்னாலஜீஸ் ஆலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.

காம்ஸ்டார் ஆட்டோமோடிவ் டெக்னாலஜீஸ் தொழிலாளர்கள் சங்கம் (CATEU) என்ற தங்களின் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும், கடந்த மாதம் காலாவதியான மூன்றாண்டு கால சம்பள உடன்படிக்கையைப் பிரதியீடு செய்வதன்மீது பேச்சுவார்த்தை நடத்தவும் கோரி, ஆகஸ்ட் 11இல் சுமார் 400 காம்ஸ்டார் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

செப்டம்பர் 2இல், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 300 தொழிலாளர்கள் மறைமலைநகர் அமைந்துள்ள மாவட்ட நிர்வாக தலைமையிடமான காஞ்சிபுரத்தில் ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள கார்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்குத் தேவையான ஸ்டார்டர்கள், ஆல்டர்னேட்டர்கள் போன்ற வாகன உதிரி பாகங்களை காம்ஸ்டார் ஆட்டோமோடிவ் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. 1998இல் ஸ்தாபிக்கப்பட்ட அந்நிறுவனம், முன்னர் Visteon Power Train என்றழைக்கப்பட்டது. போர்டு, வோல்வோ, ஜாகூவார், மாஜ்டா, அஸ்டன் மார்டின், டாடா மோட்டார்ஸ், பியட், அசோக் லேலாண்டு, நிசான் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உட்பட உலகளாவிய வாகனத்துறை நிறுவனங்களுக்கு, ஓர் அசலான “அவரவருக்கான” பொருத்தமான பாகங்களை அந்நிறுவனம் வினியோகிக்கிறது.

காம்ஸ்டார் ஆலை, ஆண்டுக்கு வெறும் மூன்று நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்குத் தற்செயல் விடுப்பு (casual leave) அளிக்கிறது. இது தொழிலாளர்நலத்துறையால் பரிந்துரைக்கப்படும் ஆண்டுக்குப் பத்து நாட்கள் என்பதையும் விட மிகவும் குறைவாகும். மறைமலைநகர் ஆலையில் சுமார் 410 நிரந்தர தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் அந்நிறுவனம், சுமார் 350 தற்காலிக தொழிலாளர்களையும், பயிற்சி தொழிலாளர்களையும் மற்றும் தொழிற்பயிற்சி பெறுநர்களையும் (apprentices) நியமித்துள்ளது.

காம்ஸ்டார் நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டுவதன் மூலமாக அப்போராட்டத்தை உடைக்க விரும்புகிறது. தீவிரமாக போராடிய சில போராட்டக்காரர்களை நீதிக்குமாறாக நடத்திய அந்நிறுவனம், போராட்டக்காரர்களின் வேலைகளைச் செய்விப்பதற்காக தொழிற்பயிற்சி பெறுநர்களைத் துன்புறுத்தியது. இவர்கள் (தொழிற்பயிற்சி பெறுநர்கள்) நிறுவனத்தால் தற்காலிகமாகவும், அவர்களின் கல்லூரி படிப்பின் ஒரு பாகமாகவும் மட்டுமே நியமிக்கப்பட்டவர்களாவர்.

தங்களின் சக தொழிலாளர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கியதற்காக நான்கு தொழிலாளர்கள் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் தகவல் பலகையில் நிறுவன அதிகாரிகள் ஒரு விளம்பரத்தை பதியச் சென்றபோது அவர்களைத் தாக்கியதாக கூறி, சில தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் பொலிஸிடம் பொய் குற்றச்சாட்டுக்களையும் பதிவு செய்துள்ளது.

CATEUஇன் பிரதான உறுப்பினரான ராஜசேகர், உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “2004இல் தொடங்கப்பட்ட எங்கள் தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க மறுக்கிறது. அதற்கு மாறாக நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குழுவில் சேரும்படி தொழிலாளர்களுக்கு நிறுவனம் அழுத்தமளிக்கிறது. தற்போது அனைத்து பயிற்சி தொழிலாளர்களும் அதேநிலையில் நீடிக்கப்பட்டுள்ளனர். முன்னர் தொடக்கத்தில் ஒரு தொழிலாளர் ஒன்றரை வருடம் பயிற்சி காலத்தை முடித்து, ஆறு மாதங்கள் தகுதிகாலத்தைக் (probation period) கடந்துவிட்டால் நிரந்தர தொழிலாளர் அந்தஸ்தைப் பெற தகுதியுடையவராக இருந்தார். ஒரு பயிற்சி தொழிலாளர் நிரந்தர தொழிலாளரை விட மாதத்திற்கு சுமார் ரூ. 1,000 குறைவாக பெறுகிறார். நிரந்தர தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ. 13,000த்தில் இருந்து ரூ. 15,000 வரையில் சம்பளம் [$US286-330] பெறுகிறார்.

மற்றொரு தொழிலாளர் விவரிக்கையில்: “300க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி பெறுநர்கள் போராட்டத்தில் பங்கெடுக்காததால், காம்ஸ்டார் ஆலையின் உற்பத்தி முழுமையாக நின்றுவிடவில்லை. வேலைநிறுத்தத்தில் எங்களோடு சேரும்படி நாங்கள் ஏற்கனவே அவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற போதினும், அவர்கள் நிர்வாகத்தால் எடுக்கப்படும் எதிர்நடவடிக்கைகளுக்கு அஞ்சி, அதற்கு முன்வரவில்லை. தொழிற்பயிற்சி பெறுநர்கள் ஒரு பட்டய சான்றிதழைப் பெற ஓர் ஆண்டிற்கு மட்டும் நிறுவனத்தில் வழமையாக தொடர்ந்து பணியாற்றுவார்கள்.”

CATEU தொழிற்சங்கம் ஸ்ராலினிச கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தில் (சிஐடியு) பதிவு செய்யப்பட்டதாகும். CATEUஇன் தலைவர் A. சௌந்தரராஜன் மாநில கட்சி செயலாளராகவும், தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு பதவி வகித்து வருகிறார்.

வாகனத்துறை மற்றும் பாரிய மின்னணுத்தொழிற்துறைகளுக்குச் சொந்தமான அல்லது அவர்களுக்கு உட்பொருட்கள் வினியோகிக்கும் தமிழ்நாட்டு ஆலைகளின் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போர்குணமிக்க போராட்டங்களில், கடந்த 18 மாதங்களாக, சிஐடியு தொடர்ந்து உந்துதலளிக்கவேண்டிய முன்னணிநிலையில் நிறுத்திக் கொள்ளவேண்டியிருந்தது.

எப்போதும் போலவே ஸ்ராலினிஸ்டுகள் அத்தகைய தொழில்துறை போராட்டங்களை, வெவ்வேறு தனித்தனி ஆலைகளுக்குள் நடக்கும் போராட்டங்களாக அடக்கி, குறுகிய கூட்டு-பேரம்பேசும் முன்னோக்கிற்குள் மட்டுப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான அரசு தாக்குதல்களுக்கு முன்னால், அரசையும், பெருவியாபார கட்சிகளையும், நீதிமன்றத்தையும் மற்றும் பொலிஸையும் தொழிலாளர்களுக்கு உதவ அழுத்தமளிக்க முடியுமென்ற பொய்யைத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தனர்.

தொழிலாள வர்க்கத்தை இந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கும், அவற்றின் திட்டங்களுக்கும் தசாப்தங்களாக அரசியல்ரீதியாக அடிபணிய செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சிபிஐ-க்கு இணையானதாக விளங்கும் சிபிஎம்-இன் அரசியலில் இருந்து நேரடியாக சிஐடியு-இன் பாத்திரம் வருகிறது. சிபிஎம்-தலைமையிலான இடது முன்னணி தற்போதைய தேசிய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு, அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக அதன் முதல் நான்கு ஆண்டுகள் பதவி வகிக்க, அதன் ஆதரவை வழங்கியது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலுள்ள சிபிஎம் தலைமையிலான அரசாங்கங்கள், பகிரங்கமாகவே “முதலீட்டாளர்களுக்கு சார்பான" கொள்கைகளைப் பின்பற்றியதைத் தொடர்ந்து, இந்த வசந்தகாலத்தில் அதிகாரத்திலிருந்து பதவியிறக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறை போராட்டங்களைத் தடுத்தது மற்றும் பெருவியாபார திட்டங்களுக்காக விவசாயிகளின் நில அபகரிப்பை செயலாக்க பொலிஸ் மற்றும் அடியாட்களைப் பயன்படுத்தியமை ஆகிய அனைத்தும் அதில் அடங்கும்.

காம்ஸ்டார் வேலைநிறுத்தத்தில், ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸின் ஒத்துழைப்பைப் போதித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 19 மாலையில் நடத்த ஒரு பேரணியில் பேசுகையில், "சட்டப்படி ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு என்பதோடு, அந்த உரிமையை அரசும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாக" முறையிட்டு சௌந்தரராஜனும், சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமாரும் இந்திய சட்டங்களுக்கும், பொலிஸிற்கும் தொழிலாளர்கள் மதிப்பளிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் முதலாளிகளை 6 மாதங்கள் சிறையிலடைக்க வேண்டுமென முத்துக்குமார் முழங்கினார். ஆனால் இதுவரையில் அதுபோல நடந்ததற்கான ஒரேயொரு முன்மாதிரியைக் கூட அவரால் எடுத்துக்காட்ட முடியவில்லை.

உண்மையில், அரசு மற்றும் சட்ட இயந்திரங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கின்றன அல்லது அவ்வாறு செய்யும்படிக்கு அவற்றிற்கு அழுத்தமளிக்க முடியுமென்ற அவருடைய வாதங்களில் இருந்த பொய்யை அவருடைய பேச்சுக்களே அதன் போக்கில் எடுத்துக்காட்டின. நிர்வாகத்திற்கு உதவும் மற்றும் தொழிலாளர்களைக் துன்புறுத்தும் பொலிஸின் பாத்திரம் குறித்து தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய கோபம் குறித்து நன்கறிந்திருந்த அவர், பொலிஸ் "நடுநிலையாக" இருக்க வலியுறுத்த வேண்டுமென உணர்ந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட தங்களின் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரத்தைப் பெற போராடி வந்த சிவசக்தி உட் வோர்க்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்களை, அடியாட்களைக் கொண்டு தாக்கிய நிறுவனத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாக தலையீடு செய்த போது, ஆகஸ்டின் தொடக்கத்தில் பொலிஸ் வகித்த வெறுக்கத்தக்க பாத்திரத்தையும் அவர் குறிப்பிட வேண்டியதாக இருந்தது.

சௌந்தரராஜன், அவர் பங்கிற்கு, தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகளைத் பாதுக்காக்கும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென கூறினார். “தொழிற்சங்கம் தொடங்குவதை அனுமதிக்க மறுக்கும் புதிய நிறுவனங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் வழங்கு தொடர்ந்துள்ளோம். மேலும், தொழிற்சங்கங்கள் தொடங்குவதற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே அதன் தீர்ப்பை வழங்கியுள்ளது,” என்றார்.

சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரும் CATEU தலைவரும், "தொழில்துறை நிறைய முதலீட்டை ஈர்த்தால் மட்டுமே அது தொழில்துறையில் வளர்ச்சியடைய முடியுமென்று" குறிப்பிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்தை உடன்பாட்டோடு மேற்கோளிட்டுக் காட்டும் அளவிற்குச் சென்றார். ஆனால் அவ்வாறு செய்ததன் மூலமாக, தொழிலாளர்களின் நலன்களை பெருநிறுவன இலாபத்திற்கு அவர்கள் அடிபணிய செய்வார்கள் என்ற அடிப்படையில், தொழிற்சங்கத்திற்காக ஸ்ராலினிஸ்டுகள் தொழில்வழங்குனரின் அங்கீகாரத்திற்கு முழுமையாக உடன்படுகிறார்கள்; அதை கோருவார்கள் என்பதை அடிக்கோடிடுகிறார். “தொழில்துறை வளர்ச்சியை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் தொழிலாளர்களை மரியாதையோடு நடத்த வேண்டும். தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

தொழிலாளர் போராட்டங்களை தடைசெய்யும் மற்றும் அவர்களின் பிற்போக்கான நாடாளுமன்ற உபாயங்களுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்யும் ஸ்ராலிஸ்டுகளின் வேலைத்திட்டமானது, பல தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளுக்கும், தோல்விகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியின் சக்தியும், போராடும் குணமும் நிலைக்கவிடாமல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், ஸ்ராலினிச சிஐடியு தலைவர்கள் சென்னையின் விளிம்புபகுதியில் அமைந்துள்ள பாக்ஸ்கான் மற்றும் BYD எலெக்ட்ரானிக்ஸ் ஆலை தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான மற்றும் கூலி உயர்வு மற்றும் நலன்களுக்கான அவர்களின் வேலைநிறுத்தங்களைக் கைவிடவும், டஜன்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது உட்பட நிர்வாகத்தின் தண்டனை முறைகளுக்கு அடிபணியவும் உத்திரவிட்டது. ஜெயலலிதாவின் அஇஅதிமுக உடனான சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியோடு அணிதிரண்டு நின்ற ஸ்ராலினிஸ்டுகள், இந்த மே மாத மாநில சட்டமன்ற தேர்தல்களுக்குப் பின்னர் அவர்களின் நிலைமை முன்னேறுமென்று தெரிவித்தனர். (See: “India: Lessons of the Stalinist CITU’s betrayal of the Foxconn and BYD strikes”)

கடந்தமுறை அதிகாரத்திலிருந்த போது வேலைநிறுத்தத்தை உடைக்க கூலியாட்களைப் பயன்படுத்திய மற்றும் 200,000 மாநில தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை உடைக்க பெருந்திரளான தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கிய ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தமை, நிச்சயமாக தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்துவிடவில்லை.

இந்த வலதுசாரி அரசியல்வாதியை வளர்த்துவிடும் அவர்களின் பொறுப்பை மூடிமறைக்கும் ஒரு முயற்சியில், ஸ்ராலினிஸ்டுகள் தற்போது "மக்கள்நல" கொள்கைகளை நடைமுறைப்படுத்த அவருடைய அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்கும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க முன்மொழிகின்றனர். “அரசு தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கத் தவறுமேயானால், தொழிற்சங்க அங்கீகாரம் கோரியும், குறைந்தபட்ச சம்பளம் ரூ. 10,000 [220 அமெரிக்க டாலர்] கோரியும், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிடக்கோரியும் சென்னையில் வரும் செப்டம்பர் 6இல் போராட்டத்தை ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இந்த போராட்டத்திற்கும் ஒன்றும் பதில் வரவில்லையென்றால், சிஐடியு அமைந்திருக்கும் அனைத்து நிறுவனங்களிலும் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நாங்கள் ஏற்பாடு செய்வோம்,” என்று சௌந்தரராஜன் ஆர்பரித்தார்.

இதுபோன்ற போராட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஸ்ராலினிஸ்டுகள் மிக நீண்ட வரலாறைக் கொண்டுள்ளனர். அவையனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தொழில்துறை ரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக அவை தொழிலாளர்களின் போராட்டத்தைத் தணிப்பதையும், அடக்குவதையும், மட்டுப்படுத்தையும் மற்றும் அவர்களை காங்கிரஸ், அஇஅதிமுக மற்றும் ஏனைய பெருவியாபார கட்சிகளின் கீழ்தரமான உபாயங்களுக்கு அடிபணிய வைப்பதையுமே நோக்கமாக கொண்டுள்ளன.

தொழிலாளர்கள் அவர்களின் எவ்வித கோரிக்கைகளையாவது வென்றெடுக்க வேண்டுமானால், காம்ஸ்டார் ஆலையிலும், சென்னை மற்றும் மறைமலைநகரைச் சுற்றியுள்ள இடங்களில் பரவியுள்ள ஏனைய ஆலைகளிலும் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் போராட்டத்தை முற்றிலுமாக ஒரு புதிய அச்சில் நிலைநிறுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒருமித்த எதிர்ப்பை ஒன்றுதிரட்ட, உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ கட்சிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியில், சாமானிய குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போராட்டத்தின் புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்பப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை மலிவுக்கூலி தொழிலாளர்கள் உற்பத்தியாளராக மாற்றும் பெரிய வியாபாரங்களுக்கு எதிரான எதிர்ப்பிற்கு, ஒரு பாரிய தொழிலாளர் வர்க்க அரசியல் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். அது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்திலும் மற்றும் சமூகத்தை சோசலிச மறுகட்டமைப்பிற்குத் திருப்பும் போராட்டத்திலும் உழைப்பாளர்களை அதன்பின்னால் அணிதிரட்டும்.