ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

හමුදා සාමාජිකයන් සුරකින බවට ජනාධිපති සිරිසේන දෙන ප‍්‍රතිඥා වල සැබෑ අර්ථය

இலங்கை ஜனாதிபதி இராணுவ உறுப்பினர்களை பாதுகாப்பதாக சபதம் எடுப்பதன் உண்மையான அர்த்தம்

W.A. Sunil
7 April 2017

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எத்தகைய நிலைமையின் கீழும் போர் நடத்திய "இராணுவ வீரர்களை" பாதுகாப்பதாக மீண்டும் மீண்டும் உறுதிமொழி கொடுப்பதன் உண்மையான அர்த்தம், வெகுஜன அதிருப்திக்கு உள்ளாகியுள்ள அவரது அரசாங்கம் மேலும் மேலும் இராணுவத்தில் தங்கியிருக்க முடிவெடுத்துள்ளது என்பதே ஆகும். உழைக்கும் மக்களுக்கு எதிராக அரச அடக்குமுறையை தீவிரமாக்கும் பொலிஸ்-அரசை முன்னிலைக்கு கொண்டுவரும் போது இராணுவத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வதே இந்த வாக்குறுதிகளின் நோக்கமாகும்.

"எனது அரசாங்கத்தின் கொள்கைகளின் படியும், என் கொள்கையின் படியும், இந்த நாட்டில் எந்தவொரு இராணுவ வீரரையும் குற்றவாளியாக்க நான் தயாராக இல்லை. குற்றவாளியாக்குவதும் இல்லை. நான் அதை தெளிவாக கூறுகிறேன். இராணுவத்தை பாதுகாப்பது எங்கள் கடமை மற்றும் பொறுப்பு என கருதுகிறேன். படைகளின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்" என மார்ச் 29 அன்று குருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் நடந்த கூட்டத்தில் சிறிசேன அறிவித்தார்.

சிறிசேனவின் இந்த கருத்து, வெறுமனே பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது செய்த யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்புப் படைகளை காப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவரது இந்த அறிவித்தலானது தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது உக்கிரமாக்கி வரும் வர்க்க யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மிலேச்ச செயலையும் பாதுகாப்பதாக கொடுக்கும் வாக்குறுதியாகும். தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி போராட்டம் நடத்திய அம்பாந்தோட்டை துறைமுக தொழிலாளர்கள் மீது கடற்படை நடத்திய கொடூரமான தாக்குதலை நியாயப்படுத்தி அரசாங்கம் ஏற்கனவே இதே நிரூபித்துள்ளது.

அரசாங்கம், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் சுமைகளை வாழ்க்கைத்தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் தங்கள் மீது திணிப்பதற்கு எதிராக, தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அரசாங்கம் சம்பந்தாமக அதிருப்தி வேகமாக வளர்ந்து வருகின்றது. அது சமூக வெடிப்பை நோக்கி வளர்ந்து, முதலாளித்துவ வர்க்க ஆட்சியை கீழறுக்க அச்சுறுத்துகின்றது. இதன் காரணமாக, அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடி உக்கிரமடைந்து, நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை அதிகரித்து வருகின்றது.

2010ம் ஆண்டில், 30 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 4,500 பில்லியன்) இருந்த அரசாங்க கடன், கடந்த ஆண்டு 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. நாட்டின் உத்தியோகபூர்வ நாணய கையிருப்பு, இந்த ஆண்டு ஜனவரியில் அரை பில்லியன் அளவில் 5.5 பில்லியனில் வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதி வருவாய் 2014 முதல் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது. 2015ல், 600 மில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு, 2016ல் 300 மில்லியன் டாலர் அளவில் பாதியாக விழுந்தது.

கடன் தீர்ப்பதற்காக அரச நிறுவனங்களை விற்றுத்தள்ளுவதே உடனடி மற்றும் ஒரே விமோசனம் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார். பொது செலவினங்களை வெட்டி, வரவு-செலவு பற்றாக்குறையை குறைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளின்படி அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மறுசீரமைப்பு செய்வது, சமூக நல வெட்டுக்கள் துரிதப்படுத்துவது மற்றும் மக்கள் மீது மேலும் மேலும் வரிகளை விதிப்பதையும் முன்னெடுக்க அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளுக்காக பங்களாதேஷ், இந்தியா உட்பட பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் போட்டி கடுமையாகின்ற நிலைமைகளின் கீழ், அரசாங்கம் அவசரமாக முதலீட்டை ஈர்ப்பதற்கு அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றது.

இத்தகைய சூழ்நிலையிலேயே தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்த அரசாங்கம் திரும்பியுள்ளது.

அரசாங்கம் இந்த தாக்குதல்கள் மூலம் தொழிலாளர்களின், ஏழை விவசாயிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களை தூண்டிவிட்டுள்ளது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடதுகளின் குழி பறிப்புக்கள் மற்றும் அரசியல் பொறி வைப்புகள் மட்டுமே வளர்ச்சியடைந்து வரும் போராட்டங்களை நசுக்குவதற்கு போதுமானதாக இருக்காது என்பதை அரசாங்கமும் முழு ஆளும் முதலாளித்துவ வர்க்கமும் புரிந்துகொண்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்டுள்ள மற்றும் முதலீட்டாளர்-சார்பு பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, வளர்ச்சியடையும் வர்க்கப் போராட்டங்களை பிரதான தடையாக ஆளும் வர்க்கம் கருதுகின்றது.

இந்த கவலையை வெளிப்படுத்திய ஒரு கட்டுரையை சண்டே டைம்ஸ் பொருளாதார எழுத்தாளர் நிமல் சந்தரத்ன கடந்த வாரம் எழுதியிருந்தார். "அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் மற்றும் அதன் பக்க விளைவுகளால் ஏற்படும் தடம்புறள்வு அல்லது அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவதற்கான பலமான காரணங்களாக ஆகியுள்ளன,” என அவர் எழுதியுள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டுமென்றால் எதிர்ப்புகளை நசுக்கியாக வேண்டும்.

இந்த நிலையிலேயே, அரசாங்கம் இராணுவப் படைகளை “வீரர்களாக” தூக்கிப் பிடித்து, இராணுவத்தின் அதிகாரத்தை மக்கள் மீது ஸ்தாபித்தும் இராணுவத்தை எல்லாப் பக்கமும் பலப்படுத்தியும் மேலும் மேலும் அதில் தங்கியிருக்க நாடுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும், ஹெல உறுமய உட்பட சிங்கள பேரினவாத மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள், "இராணுவ வீரர்களையும் நாட்டையும் காட்டிக்கொடுப்பது" சம்பந்தமாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவது, இனவெறியைத் கிளறிவிடுவதற்கு மட்டுமன்றி அரசாங்கத்தை விட இராணுவத்தை உயர்வாக மதிப்பதாக உறுதிப்படுத்துவதற்கே ஆகும். சிறிசேனவும் இராஜபக்ஷவும் இராணுவத்தை தூய்மைப்படுத்தி தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்வதற்கு முண்டியடிப்பதன் மூலம், மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் பாதுகாப்பு படைகளையே பெரிதும் நம்பியுள்ளது என்பது தெளிவாகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டமை, "இலங்கை இராணுவம் மற்றும் மக்களுக்கு முழுமையாக துரோகம் செய்யும் செயல்" என இராஜபக்ஷ மார்ச் 30 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்தார். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியினதும் அரசாங்கத்தினதும் கொள்கைகள் இரண்டு அல்ல. இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் இராணுவ அதிகாரிக்கோ சிப்பாய்களுக்கோ எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமன்றி, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை தொடுப்பதோடு, இராணுவத்தை பலப்படுத்த மேலும் மேலும் செலவிடுகின்று.

போரின் கடைசி மாதங்களில், 58வது படைப் பிரிவின் தளபதியாக இருந்த, போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, மார்ச் 30 அன்று –அதாவது சிறிசேன கருத்துத் தெரிவித்த மறுநாள்- இலங்கை இராணுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டமை, இராணுவத்தின் கொடூரமான கைகளை மேலும் பலப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களின் ஒரு பாகமாகும்.

இராணுவம் மற்றும் பொலிசை பலப்படுத்தி, போலீஸ் அரசாக மாறும் ஆளும் வர்க்கத்தின் பயணத்தில், இராணுவத்தின் நம்பிக்கையை வெல்வதற்கும் அதன் அதிகாரத்தை மக்கள் மத்தியில் ஸ்தாபிப்பதற்கும், ஜனாதிபதி சிறிசேன வழங்கும் வாக்குறுதிகளை தொழிலாள வர்க்கம் மிகவும் தீவிரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.