ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bolton’s appointment: Another warning of new US wars

போல்டனின் நியமனம்: புதிய அமெரிக்க போர்களுக்கான மற்றொரு எச்சரிக்கை

By Peter Symonds
24 March 2018

இழிபெயரெடுத்த போர்வெறியர் ஜோன் போல்டன் வியாழனன்று ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை, வெள்ளை மாளிகை ஒரு போருக்கு அடி வைத்து வருவதற்கான ஒரு தெளிவாக சமிக்ஞையாக உள்ளது. போல்டன் சட்டவிரோத ஆக்ரோஷ போர்களுக்கு, குறிப்பாக வட கொரியா மற்றும் ஈரானுக்கு எதிரான போர்களுக்கு வக்காலத்துவாங்குபவர் என்பதும், ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டத்தை மதியாதவர் என்பதும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்க போட்டியாளர்களை நோக்கி ஆக்ரோஷ நிலைப்பாடு கொண்டவர் என்பதும் நன்கறியப்பட்டதாகும்.

வட கொரியா ட்ரம்பின் உடனடியான முக்கிய கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி இம்மாத தொடக்கத்தில் குறிப்பிடுகையில், அவர் மே மாதம் வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன்னைச் சந்திக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், எச். ஆர். மெக்மாஸ்டரின் பதவியில் போல்டனை நியமித்திருப்பதும் மற்றும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் றெக்ஸ் ரில்லர்சனின் பதவியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக போர்வெறியர் மைக் பொம்பியோவை நியமித்திருப்பதும், எந்தவொரு சந்திப்பின் நோக்கமும் பேச்சுவார்த்தைக்காக இருக்கப்போவதில்லை, மாறாக அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுப்பதற்காக அல்லது ஓர் ஆத்திரமூட்டலை நடத்துவதற்காக இருக்குமென்பதையே காட்டுகின்றன.

வட கொரியாவின் அணுஆயுத தளவாடங்கள் நிலைநிறுத்தும் இராணுவ அச்சுறுத்தல் எனப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரும் சாக்குபோக்கில் வட கொரியா மீது முன்கூட்டியே தற்காப்பு இராணுவ தாக்குதல்கள் நடத்துவதற்கு போல்டன் பகிரங்கமாக வக்காலத்து வாங்குபவர் ஆவார். அவர் சென்ற மாதம் தான், வட கொரியா "விரல்விட்டு எண்ணக்கூடிய மாதங்களில்" அமெரிக்காவை எட்டும் தகைமை கொண்ட ஓர் அணுஆயுத ஏவுகணையைப் பெறும் என்ற பொம்பியோவின் கருத்துக்களைச் சாதகமாக்கி, வட கொரியாவைத் தாக்குவதற்காக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு வெட்கக்கேடான சட்ட வழக்கைத் தொடுத்தார். “நாம் கடைசி நிமிடம் வரையில் காத்திருக்கக்கூடாது,” என்றவர் வலியுறுத்தினார்.

போல்டன் கடந்த ஆகஸ்ட் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் க்கு கருத்துரையில், வட கொரியா உடன் ஏதேனும் உடன்படிக்கை சாத்தியமாவதைக் கடுமையாக நிராகரித்ததுடன், “பியொங்யாங்கில் ஆட்சி மாற்றத்திற்கு சீனா உடன்படாவிட்டால், ஏதேனும் ஒரு வகை தாக்குதல் தவிர்க்கப்பட முடியாமல் போகலாம்,” என்றவர் அறிவித்தார். அதுபோன்றவொரு போர் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு மிகப்பெரியளவில் பாதிப்புகளைக் கொண்டு வரும் என்பதை நன்கறிந்துள்ள போதும், அவர் வலியுறுத்துகையில், வட கொரியா மீது முன்கூட்டிய தற்காப்பு தாக்குதல்களைத் தொடுப்பதைத் தவிர அமெரிக்காவிற்கு வேறு விருப்பத்தெரிவு இல்லை என்பதோடு, இதுவரையில் பல உத்திகளை வகுத்துள்ளது, அதில் முழு அளவிலான வான்வழி போர் மற்றும் படையெடுப்பும் உள்ளடங்கும் என்றார்.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் செய்து கொள்ளப்பட்ட 2015 அணுசக்தி உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த போதும் அதை போல்டன் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அவ்விதத்தில் அதில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் மே மாதம் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுடன் இணைந்துள்ளார். “ஈரானினின் குண்டை நிறுத்த, ஈரான் மீது குண்டுவீசுங்கள்,” என்று தலைப்பிட்டு 2015 இல் நியூ யோர்க் டைம்ஸில் எழுதிய ஒரு போர் நாடும் கருத்துரையில், அவர் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கான ஓர் ஒருமித்த முயற்சியோடு சேர்ந்து அமெரிக்க இராணுவ தாக்குதல்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

அதேபோல தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் சீன கப்பற்படை உரிமைகோரல்களுக்கு சவால்விடுக்க இன்னும் பலமான நடவடிக்கைக்கு அழுத்தமளித்து, போல்டன் சீனாவை நோக்கிய ஒரு மோதல் அணுகுமுறையின் மூர்க்கமான ஆலோசகராக உள்ளார். தாய்வான் தொடர்பான அவர் கண்ணோட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகம் கேள்வியெழுப்பிய “ஒரே சீனா கொள்கை" மற்றும் தாய்வானுடன் நெருக்கமான உறவுகளை ஜோடிப்பதை நோக்கிய அதன் நடவடிக்கைகளுடன் ஒத்துபோகின்றன—இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை அடிஆழத்திற்கு பலவீனப்படுத்தி, மோதல் அபாயத்தை பெரிதும் உயர்த்தக்கூடியவையாகும்.

போல்டன் 2016 வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதுகையில், சீனா அதன் எல்லைப்பகுதியின் ஒரு உள்ளார்ந்த பாகமாக கருதும் தாய்வானுடன் உத்தியோகபூர்வ உறவுகளை மேம்படுத்திக் கொண்டு, அமெரிக்கா "தாய்வான் சீட்டை" நகர்த்த வேண்டுமென அழைப்புவிடுத்தார். “ஒரு புதிய அமெரிக்க ஜனாதிபதி தைரியமாக நடந்து காட்ட விரும்புவாரேயானால், கிழக்கு ஆசியாவில் மேலாதிக்கத்தை நோக்கி சீனா கண்கூடாக கட்டுக்கடங்காமல் நடைபோடுவதை நிறுத்தி பின்னர் தலைகீழாக ஆக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன,” என்று எழுதினார்.

போல்டனின் நியமனம் அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் பிரிவுகளில் எச்சரிக்கை மணி ஒலிக்க செய்துள்ளது. ட்ரம்ப் போல்டனை ஒரு துதிபாடும் அனுதாபியாக பார்க்கலாம், அதேவேளையில் "போல்டன் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வெகு வெளியிலிருந்தே, அமெரிக்கர்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை முன்னெடுப்பதற்கு ஓர் ஈவிரக்கமற்ற அணுகுமுறை கொண்டவர் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று ஜனநாயக கட்சி செனட்டர் Bob Menendez அறிவித்தார்.

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கீழ் வெள்ளை மாளிகையின் முன்னாள் வழக்கறிஞரான ரிச்சார்ட் பெயிண்டர், போல்டனை அந்நிர்வாகத்தின் "மிக மிக அபாயகரமான மனிதர்" என்று விவரித்தார். “அவரை ஜனாதிபதியின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பது போரை, அனேகமாக அணுஆயுதப் போரை, வரவேற்பதாகும். இது என்ன விலை கொடுத்தாவது நிறுத்தப்பட வேண்டும்,” என்றவர் கார்டியனுக்கு தெரிவித்தார்.

“ஆம், ஜோன் போல்டன் உண்மையிலேயே அபாயகரமானவர்,” என்ற அதன் நேற்றைய அதன் தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் எச்சரித்தது: “திரு போல்டன் அளவுக்கு நாட்டை போருக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள் ஒரு சிலரே இருக்கக்கூடும் … கடும் போக்கைப் பின்பற்றிய சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோவை வெளியுறவுத்துறை செயலராக நியமித்ததுடன் சேர்ந்து, திரு ட்ரம்ப் அவரது படுமோசமான தேசியவாத உணர்வில் திருப்தி அடைகிறார். குறிப்பாக, சர்வதேச சட்டம், உடன்படிக்கைகள் அல்லது முந்தைய நிர்வாகங்களின் அரசியல் கடமைப்பாடுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல், அமெரிக்கா என்ன செய்ய விரும்புகிறதோ அதை செய்யலாமென திரு போல்டன் நம்புகிறார்.”

போல்டன் குற்றகரமான போர்களுக்கு இழிவார்ந்த ஆலோசகர் என்பது நிச்சயமாக உண்மைதான் என்றாலும், இதுபோன்ற விமர்சனங்களும் எச்சரிக்கைகளும் முற்றிலும் வெற்றுத்தனமாக ஒலிக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டு கால அமெரிக்க படையெடுப்புகள் மற்றும் தலையீடுகள் எடுத்துக்காட்டுவதைப் போல, அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் எந்த போர்-எதிர்ப்பு பிரிவும் இல்லை. அதற்கு பதிலாக வாஷிங்டனில் நடக்கும் கடுமையான அரசியல் உள்பூசல்கள் மற்றும் நெருக்கடியானது, புவிஅரசியல் ஒழுங்கமைப்பில் அதன் இடத்தை உயர்த்துவதற்கும், எந்த போட்டியாளரை அல்லது போட்டியாளர்களை முதலில் தாக்குவதற்காக எவ்வாறு அமெரிக்க இராணுவ பலத்தை சிறப்பாக பயன்படுத்துவது என்பதைச் சுற்றி சுழல்கிறது.

நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம், ரஷ்யாவை நோக்கிய போல்டனின் அணுகுமுறையை அவரின் காப்பாற்றும் கருணையாக மேற்கோளிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அது அறிவிக்கிறது, “பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளிக்கு நஞ்சூட்டியதில் ரஷ்யா தொடர்புபட்டிருந்ததற்கு நேட்டோ ஒரு பலமான விடையிறுப்பு கொடுக்க வேண்டும்," என்ற “ரஷ்யாவை நோக்கிய திரு போல்டனின் நிலைப்பாடு,” "திரு ட்ரம்பின் விடையிறுப்பை விட ஏதோவிதத்தில் சிறந்தது.” இந்த கருத்து, 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ரஷ்ய அதிகாரிகளுடன் ட்ரம்ப் நயவஞ்சக கூட்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற ஜனநாயகக் கட்சியினர் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பிரிவுகளுடன் இணக்கமாக, அப்பத்திரிகையால் தொடுக்கப்பட்ட வலதுசாரி பிரச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. இது ரஷ்யாவுடன் ஒரு மோதல் மற்றும் போருக்கு அழுத்தமளிப்பது என்பதற்கு குறைவின்றி வேறொன்றுமில்லை.

உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு முன்நிற்கும் எந்தவொரு சவாலுக்கு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு ஒன்றுபோல, ஓர் இராணுவ விடையிறுப்பு கொண்டுள்ளார். கடந்த மாதத்தின் தொடர்ச்சியான ட்வீட் செய்திகளில், அவர் ரஷ்ய இணைய போர்முறை என்று குற்றஞ்சாட்டப்படுவதற்கு எதிராக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதன் கூட்டாளிகளைப் பலப்படுத்த அமெரிக்காவிற்கு அழைப்புவிடுத்துள்ளார்; “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளைச் சுற்றி ரஷ்யா அழுத்தமளிக்க நாங்கள் விட மாட்டோம்;” என்பதையும், மற்றும் "ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைக் கையாள நீண்டகால ஆட்சியாளர்களுடன் ஒரு நீண்டகால மூலோபாயத்தையும்,” எடுத்துக்காட்ட புதிய ரஷ்ய அணுஆயுத ஏவுகணைகளுக்கு ஒரு மூலோபாய விடையிறுப்பையும் காட்ட அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக போல்டனின் நியமனத்திற்கு காங்கிரஸின் ஒப்புதல் அவசியமில்லை. அவர் நியமனத்தைத் தடுப்பதற்கான ஒரே வழி ஒரு பரந்த பிரச்சாரமாகும், இது போர் அபாயம் குறித்து எச்சரிக்கையூட்டுவது என்பதை அர்த்தப்படுத்தும் என்பதாலும், விரைவிலேயே அவர்களின் கட்டுப்பாட்டை மீறி அது ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டும் அபாயமிருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினரும் மற்ற விமர்சகர்களும் இதை தொடங்க மாட்டார்கள்.

ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கொடூரமான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்ட, ஈராக்கில் பாரிய பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்களை உருவாக்கி ஊக்குவித்த புஷ் நிர்வாகத்தின் போர் குற்றவாளிகளது கும்பலில் போல்டனும் ஒருவராவார். போல்டன் மீதும் சரி வேறு எவர் மீதும் கூட ஒபாமா நிர்வாகத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படவில்லை, அதுவும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் முனைவைத் தீவிரப்படுத்தியது. இதன் விளைவாகத்தான், முன்பினும் அதிக பேரழிவுகரமான போர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாரிப்பு செய்து வருகையில், அவரால் போல்டனை நியமிக்க முடிந்துள்ளது.