ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: Tens of thousands demonstrate against inhumane anti-refugee policies

ஜேர்மனி: மனிதத்தன்மையற்ற அகதிகள்-விரோத கொள்கைகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By Gustav Kemper 
10 July 2018

சனியன்று, கூட்டாட்சி அரசாங்கத்தினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மிருகத்தனமான மனிதத்தன்மையற்ற அகதிகள் கொள்கைக்கு எதிராக ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோர் அணிதிரண்டு “மத்திய தரைக்கடலில் இறப்புக்களை நிறுத்து,” என்ற சுலோகத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். பேர்லினில், “கடல்ப்பாலம்” கூட்டணியின் ஒழுங்கமைப்பாளர்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்தைவிட அதிகமாக இந்த ஆர்ப்பாட்டங்களில் 10,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஜேர்மனியில் மேலும், ஹம்பேர்க், ஹனோவர், பிரெமன் மற்றும் டசின் கணக்கான பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அகதிகள் உதவி அமைப்புகளால் ஒரு வாரம் முன்பாகத் தான் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகபட்சமான மக்கள் பங்கேற்பு என்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருசில நாட்களுக்குள் தனித்து சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


பேர்லினில் நெப்டியூன் நீரூற்று முன்பு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள்

Lifeline மீட்புக் கப்பலின் கேப்டன் கிளாஸ்-பீட்டர் ரெய்ஸ்ச் மீதான துன்புறுத்தல்கள் தான் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கான உடனடி தூண்டுதலாக உள்ளது, அத்துடன், இவர் தான் தனது குழுவுடன் இணைந்து செயல்பட்டு, ஜூனில் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறக்கவிருந்த 234 அகதிகளின் உயிர்களை காப்பாற்றியவர் ஆவார். அப்போதிருந்து உதவி அமைப்புகளின் கப்பல்களும் விமானங்களும் மால்டாவில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, அங்கு தான் ரெய்ஸ்ச் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“Seebrucke” (“கடல்ப்பாலம்”) இன் முகநூல் பக்கம் இவ்வாறு தெரிவிக்கிறது: “ஐரோப்பாவை தனிமைப்படுத்துவதை துரிதப்படுத்துவதற்காகவும், மேலும் அரசியல் அதிகாரப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் மத்திய தரைக்கடலில் மூழ்கி மக்கள் இறந்து போவதை அனுமதிப்பது என்பது பொறுத்துக்கொள்ள முடியாதது என்பதுடன், அனைத்து மனிதாபிமானக் கொள்கைகளையும் அது மீறுவதாகும்…. குடிபெயர்வு என்பது எப்பொழுதும் நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது! அதனால், எல்லைகளை மூடுவதற்கு பதிலாக, ஒரு திறந்த ஐரோப்பாவும், ஒற்றுமை நிறைந்த நகரங்களும் மற்றும் பாதுகாப்பான புகலிடங்களும் தான் நமக்கு தேவை.

கடலில் மூழ்கி இறந்து விடாமல் மக்களை பாதுகாக்க தங்களது உயிர்களையும் பணயம் வைத்த நபர்களை மிருகத்தனமாக அடக்குவது குறித்து எழுந்த கோபத்தினால் மட்டும் இந்த ஆர்ப்பாட்டங்கள் எரியூட்டப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ஜேர்மன் உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் சீஹோவர் முன்மொழிந்த அகதிகளுக்கான “பெரும் திட்டம்” என்றழைக்கப்பட்டதையும், அத்துடன் சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஐரோப்பா முழுவதும் முகாம்களின் விரிவான அமைப்பை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளதையும் எதிர்த்து கண்டனம் செய்தனர்.

“சீஹோவருக்கு பதிலாக கடல் மீட்பு என்பது முக்கியமானது,” “படகுகளில் உங்கள் குடும்பத்தினர் உட்கார்ந்திருந்ததாக கற்பனை செய்து பாருங்கள்,” “மக்களுக்குரிய கண்ணியத்தை மீறமுடியாது,” மேலும் “எமக்கு பின்னரான உலகம் நாம் என்ன செய்தோம் என்று கேட்டால் நாம் என்ன சொல்ல முடியும்?” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட வீட்டில் தயாரித்த சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளுடன் பல ஆர்ப்பாட்டக்காரர்களும் பங்கேற்றனர். மேலும், Seebrucke நிறுவனமும், ஒரு குறியீட்டு அடையாளமாக பல நூறு உயிர்பாதுகாப்பு ஆடைகளையும் (lifejackets) அப்போது விநியோகித்தனர்.

பங்கேற்பாளர்களுடன் பேசியதில் இருந்து, தஞ்சம் கோரும் உரிமை மீதான எந்தவிதமான கட்டுப்பாடுகள் குறித்தும், மேலும் பாதுகாப்பான ஆதரவு நாடுகளுக்குள் அகதிகள் நுழையும் பாதைகளில் ஏற்படுத்தப்படும் அனைத்து தடங்கல்கள் குறித்தும் கிட்டத்தட்ட ஒருமித்த எதிர்ப்பு காட்டப்பட்டது தெரியவந்தது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) போன்ற ஆளும் கட்சிகளின் கொள்கையை மட்டும் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் நிராகரிக்கவில்லை, மாறாக ஜேர்மன் பாராளுமன்றத்தின் (Bundestag) இடது கட்சி உட்பட பிற கட்சிகள் பரிந்துரைத்ததையும் கூட அவர்கள் விமர்சித்தனர்.

பேர்லினில் இருந்து வொல்ஃப்காங் மற்றும் ஐரீன், இருவரும் அவர்களது 40 களின் மத்தியில் இருப்பவர்கள், ஐரோப்பாவிலுள்ள அரசாங்கங்களின் மனிதத்தன்மையற்ற கொள்கைகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க அவர்கள் விரும்பியதாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தனர். “ஐரோப்பா தனிமைப்படுத்தப்படுவது என்பது மனித உரிமைகளுக்கு இணக்கமற்றதாகும்,” என ஐரீன் தெரிவித்தார். மேலும் வொல்ஃப்காங் இவ்வாறு கூறினார்: “அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோர் பாதுகாப்புக்கு எந்தவொரு கட்சியும் உறுதியளிக்கவில்லை. அவர்களை “விருந்தினர்கள்” என விபரித்து அகதிகள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்றால் அவர்களை நிராகரிக்கலாம் என்று விவரித்த போதே இடது கட்சி பிரிவினரின் நிலைப்பாடு வெறுப்பூட்டுவதாக இருப்பதை நான் கண்டு கொண்டேன்.” அதாவது, இடது கட்சியின் பாராளுமன்றத் தலைவர் சாஹ்ரா வாகன்க்னெக்ட் செய்த அறிக்கையை அவர் குறிப்பிடுகிறார். துரிங்கியா மற்றும் பேர்லின் ஆகிய மாகாணங்களில் உள்ள விவகாரங்களைப் போல, CDU / CSU, SPD மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை போன்று, அவர்களும் (இடது கட்சியும்) அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற நிலையில் அகதிகளை திருப்பி அனுப்புகின்றனர்.

 


பேரணியின் ஒரு பிரிவு

ஒரு இளம் தொழிலாளியான பிலிப் என்பவர் எங்களது நிருபர்களிடம், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பேர்லினுக்கு பயணிக்க அவர் ஒன்றரை மணிநேரத்தை செலவழித்துள்ளதாக தெரிவித்தார். “மீட்பு நடவடிக்கைகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடைகள் என்பவை மனிதநேயத்தின் அடிப்படை மதிப்பிற்கு முரண்படுபவையாக உள்ளன. மூலப்பொருட்களுக்காக மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் இறுதியில் அவை போர்களினால் அழிக்கப்படுகின்ற நிலையில், மத்திய தரைக்கடலில் மூழ்குவதிலிருந்து தப்பிப்பிழைத்து தற்போது தஞ்சம் கோருபவர்களாக அந்நாடுகளைச் சார்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்த பேரழிவிற்கான காரணங்கள் பற்றி அவரிடம் கேட்ட போது, அவர் இதையும் சேர்த்துக் கூறினார்: “நிச்சயமாக, இது முதலாளித்துவ பொருளாதாரத்துடன் இணைத்து செயல்படுத்தப்பட வேண்டியது, நிறுவனத்தின் நிர்வாகிகள் இலாப நோக்குள்ளவர்களாக உள்ளனர் என்பதுடன், அவர்கள் அமைப்புமுறை சார்ந்த சட்டங்களை பின்பற்றுகின்றனர். மேலும், அரசாங்கங்களும் இதை இராணுவ ரீதியில் ஆதரிக்கின்றன.”

பல பங்கேற்பாளர்களும் அடிப்படை மனிதாபிமான கருத்தாக்கங்களை கருத்தில் கொண்டே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். Aquarius மீட்பு கப்பலை மூன்று ஆண்டுகளாக இயக்கிவரும் SOS Mediterranee (பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தின் ஒரு உதவி அமைப்பு) இல் இருந்து டில் என்பவர், மத்திய தரைக்கடலில் தரையிறங்க அனுமதி மறுத்த வகையிலான உதவி ஏற்பாடுகளில் இருந்த பாரிய வலுக்குறைவு பற்றி புகார் கூறினார். “Aquarius தற்போது மார்செய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, நிச்சயமற்ற சூழ்நிலையினால் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. ஒருசில வாரங்களுக்கு முன்பு, 630 பேர் கொண்ட எங்களது கப்பல் தரையிறங்க இத்தாலியில் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்பு நாங்கள் ஸ்பெயினில் உள்ள வாலென்சியாவிற்கு கப்பலை செலுத்த நேரிட்டது. அப்போதுதான் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டோம்.”

கடந்த ஆண்டின் போக்கில், உதவி கப்பல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தடைகள் வேண்டுமென்றே படிப்படியாக அதிகரிக்கப்பட்டன என்று டில் கூறினார். மேலும், “எவரும் எதையும் அறிக்கை செய்யாத நிலையிலும், மேலும் இந்த காட்சிகளை மக்கள் நீண்டகாலம் கவனப்படுத்தாத நிலையிலும், அகதிகள் எத்தனை பேர் இறந்து போயினர் என்பதை அறிய முடியாத மற்றும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, அரசாங்கங்கள் அவற்றின் குடிபெயர்வு திட்டங்களை செயல்படுத்துவதை எளிதாக்குகிறது.”

ஐரோப்பாவிலும், வட ஆபிரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தால் மேலும் விரிவாக்கப்படவுள்ள அகதிகள் முகாம்களுக்கும் 1930 களின் அகதிகள் முகாம்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை டில் கண்டார். “இத்தகைய ஒற்றுமைகள் இப்போது இவ்வளவு விரைவாக எப்படி எட்டப்பட்டன என்பது அதிர்ச்சியளிக்கின்றன. சிந்தியர்களும், ரோமாக்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர், மேலும் அரசாங்க வட்டாரங்களில் மனிதநேயம் என்பது நீண்டகாலமாக ஒரு பிரச்சினையாக கருதப்படவில்லை என்பதை தற்போது ஒருவர் காணலாம். பலத்த எதிர்ப்பு இல்லாத நிலையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதனால் தான், ‘போதும் என்பது போதும்’ என்று கூறுவதற்கான நேரம் இதுவேயாகும்.”


எல்லை கடந்த மருத்துவர்களில் இருந்து செபஸ்டியன் ஜூங்

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த எல்லைகள் கடந்த மருத்துவ குழுவில் (Médecins Sans Frontières, MSF) இருந்து திட்ட ஒருங்கிணைப்பாளரான செபஸ்டியன் ஜூங் பங்கேற்றார். பேர்லினில் நடந்த பேரணியில் லிபியாவில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் நடக்கும் விவரிக்கவியலாத கொடுமைகள் பற்றி அவர் பேசினார். ஒரு முற்றிலும் மனமுடைந்த நிலையில், பாலைவனம் முழுவதுமாக அகதிகள் அணிவகுத்துச் செல்ல கட்டாயப்படுத்தப்படுவது, பெரும்பாலும் கடத்தல்காரர்களின் கைகளில் அகதிகள் சிக்கிக் கொள்ளும் நிலையில், சித்திரவதை செய்யும் மற்றும் சகித்துக்கொள்ள முடியாத நிலைமைகள் கொண்ட தங்களது சொந்த அதிகாரபூர்வமற்ற தடுப்பு முகாம்களுக்கு கடத்தல்காரர்கள் அகதிகளைக் கொண்டு செல்வது போன்ற நிலைமைகளை விவரித்தார். MSF அந்த முகாம்களை அணுகவியலாது.

உத்தியோகபூர்வ அகதிகள் முகாம்களில் ஜூங் தீவிரமாக செயல்பட்டார், அந்த முகாம்கள் கிட்டங்கிகள் போன்ற அமைப்புடன் உண்மையில் மிக மோசமான சிறைச்சாலைகள் வகையினதாக இருந்தன, அங்கு ஒரு நாளில் 24 மணி நேரங்களிலுமாக மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதிக்கு ஒரு சதுர மீட்டர் இடம் கிடைப்பது கூட அரிதானது என்ற வகையில் அரங்குகள் கூட்ட நெரிசல் மிகுந்ததாக உள்ளன. MSF சிகிச்சையளித்த ஒரு தஞ்சம் கோருபவர் உடனான ஒரு உரையாடலைப் பற்றி அவர் விவரிக்கும் போது, ஜூங் அவரது உணர்வுகளை அரிதாகவே கட்டுப்படுத்த முடிந்தது.

கொடூரமான சித்திரவதையைத் தொடர்ந்து, மனிதனின் கால்களையும் மற்றும் சில விரல்களையும் அகற்ற வேண்டியிருந்தது. “மிகவும் நெருக்கடியான அறைகள் மற்றும் மிகக் குறைந்த துப்புரவு போன்ற நிலைமைகள், தோல்நோய், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களையும் அதிகரிக்கச் செய்கின்றன என்பதுடன், முகாம்களுக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் காரணமாக மன அழுத்தமும் அவர்களுக்கு உருவாகின்றது” என்றும், “வெளியேறமுடியாத ஒரு முகாமிற்குள் மனநோய் அதிர்ச்சியை உங்களால் சமாளிக்க முடியாது” என்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அவர் தெரிவித்தார்.

தற்போது MSF, திரிப்போலியில் அத்தகைய ஐந்து தடுப்புக் காவல் முகாம்களில் சேவையாற்றுவதுடன், அங்கு அவசர மருத்துவ சிகிச்சையும் இது அளிக்கிறது. இத்தகைய முகாம்களில், அடிக்கடி அதிகளவு மக்கள் நெருக்கடி ஏற்படுவதாலும், சுகாதார நிலைமைகள் மோசமடைவதாலும் அங்கு காணப்படும் சூழ்நிலை மிகவும் நெருக்கடியானதாகும். “மக்களின் மிகுந்த ஆரோக்கியமற்ற தன்மைக்கும் வீட்டுவசதிக்கும் இடையில் நேரடி தொடர்பு உள்ளது. அவர்களால் எந்தவித சட்ட ஆலோசனையையும் பெற முடிவதில்லை என்ற நிலையில், இறுதியில் அவர்கள் மாத கணக்கில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுகின்றனர்,” என்றும் சேர்த்துக் கூறினார்.

பொதுவாக, எதிர்ப்பதற்கு தங்களைத் தூண்டிய பிரச்சினைகளுக்கு சில வகையான உடனடி தீர்வுகளை காண்பதில் பல பங்கேற்பாளர்களின் முன்னோக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. அதே தலைப்பில், ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் நடத்த IYSSE கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு Seebrucke, Gonzalo வின் உறுப்பினர், அவரது கட்சியின் பெயரில் உள்ள “C” ஐ அதாவது “கிறிஸ்தவர்-Christian” ஐ மதிக்க ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது நடவடிக்கைகள் மூலமாக அரசியல் உயரடுக்கிற்கு அழுத்தம் கொடுத்து அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற வகையிலான பல பங்கேற்பாளர்களின் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

உண்மையில், மில்லியன் கணக்கிலான மக்களை அவர்களது தாய்நாடுகளில் இருந்து தப்பியோடி வரச் செய்யும் போர்கள் மற்றும் சமூக இழப்புக்களுக்கு பொறுப்பாகவுள்ள சிதைந்து வரும் முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் அகதிகள் நெருக்கடி குறித்து ஒரு தீர்வை எட்ட முடியாது. பேர்லினில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் Sozialistischen Gleichheitspartei (சோசலிச சமத்துவக் கட்சி SGP) இன் பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரம் பின்வருமாறு குறிப்பிட்டது:

“உண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பாவில் உள்ள அனைத்து ஆளும் கட்சிகளும் -கிரீஸில் போலி இடது சிரிசாவில் இருந்து, ஜேர்மனியில் பெரும் கூட்டணி மற்றும் இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளிலுள்ள அதி தீவிர வலதுசாரி அரசாங்கங்கள் வரையிலுமான- அகதிகளுக்கு எதிரான சிக்கனக் கொள்கைகளையும் பயங்கரவாதத்தையும் பின்பற்றுகின்றன என்பது, தொழிலாளர்களும் இளைஞர்களும் புரட்சிகரப் பணிகளை எதிர்கொள்கின்றனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தை அடக்க முடியாது, மாறாக அது தூக்கியெறியப்பட வேண்டும் என்பதுடன், ஐரோப்பாவின் ஐக்கியப்பட்ட சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.”