ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Musicians’ group calls for shutdown of the German secret service

ஜேர்மன் இரகசிய சேவையை மூடுவதற்கு இசைக்கலைஞர்களின் குழு அழைப்பு விடுக்கிறது

By Dietmar Henning 
23 August 2018

செவ்வாயன்று காலையில், Lebenslaute என்ற இசை நாடக வலையமைப்பு, கொலோன் நகரில் உற்சாகமிக்க பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு பெரும் நிறைவு இசை நிகழ்ச்சியுடன் ஜேர்மன் இரகசிய சேவைக்கு (அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் அல்லது BfV) எதிரான தனது ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டது. அதற்கு முன்தினம்தான், அந்த அமைப்பின் இசைக் கலைஞர்களும் பாடகர்களும் இணைந்து கச்சேரி மண்டபத்திற்கு செல்லும் அனைத்து அணுகல் சாலைகள் மற்றும் நுழைவாயில்களைத் தடுத்து நின்றனர்.

ஆங்கிலத்தில் “Sounds of life” என மொழிபெயர்க்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீண்ட இசை நிகழ்ச்சியில், Lebenslaute இன் இசைக்கலைஞர்களும் பாடகர்களும், சிம்போனிக் படைப்புகள், ஒரு துருக்கிய துன்பபுலம்பல் மற்றும் ஜேம்ஸ் பாண்டின் கருப்பொருள் தொடர்பான அவர்களது சொந்த தயாரிப்புக்கள் மற்றும் 1976 ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட டிஸ்னி திரைப்படமான, The Jungle Book என்பதிலிருந்து எடுக்கப்பட்ட “That What Friends Are For” (“The Vulture Song” என்றும் அழைக்கப்படும் பாடல்) என்ற பாடல் என பல்வேறு இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

பித்தோவனின் Coriolanus Overture மற்றும் கிறிஸ்டோப் வில்லிபாட் குளூக் இன் Orpheus and Eurydice இசை நாடகத்தில் இருந்து சில பகுதிகளையும் இசைக்குழுவின் பாடகர்களுக்குள் முறை வகுத்து இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் Dmitri Shostakovich’s Waltz No.2 இசை தொகுப்பிற்கு ஏற்ப பலரும் நடனமாடினர்.

இந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான உல்ரிச் க்ளான், “Shostakovich இல் இருந்து, அனைத்து மோசமான உளவு மற்றும் கண்காணிப்பின் கீழ் அழகான இசையை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொண்டுள்ளோம்” என்ற கருத்துடன் இருவருக்கான நடனம் புரிவதற்கு அறிவித்தார்.


இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதி

30 ஆண்டுகளுக்கும் மேலாக “சட்டவிரோத இடங்களுக்கு” எதிராக கோடை எதிர்ப்பு நடவடிக்கைகளை Lebenslaute இசைக்குழு நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான கோடை எதிர்ப்பு நடவடிக்கை என்பது இரகசிய சேவைக்கு எதிராக உந்தப்பட்டிருந்தது. அதனால், “பல்வேறு இசைக் கருவிகளின் இசைத் தொகுப்புகள் மற்றும் நாடகக் கதைப் பாடல்கள் மூலம் அரசுக்கு எதிராக செயல்படும் இரகசிய சேவையை முடக்குவது,” என்ற குறிக்கோளின் கீழ் இது நடைபெற்றது.

மேலும், எதிர்ப்பின் ஒரு பகுதியாக, அருகாமையிலுள்ள துருக்கியப் பகுதியில் 22 பேரை காயமடையச் செய்த கொலோன் நகரில் ஒரு தெருவில் நிகழ்ந்த 2004 பாசிச ஆணிக்குண்டு தாக்குதலுக்குப் பின்னர், அத்தெருவின் பெயரிடப்பட்டு Keupstrasse ist überall என்று அல்லது “Keupstrasse is everywhere,” என்று ஒரு இசைக்குழு அழைக்கப்பட்டது. “கோப்புகளை சிதறடிக்கும் ஒரு இசை நிகழ்ச்சியை,” அரங்கேற்றியதன் மூலம் Keupstrasse இசைக்குழு, “லோதர் லிங்கென்” என்ற குறியீட்டுப் பெயருடன் செயல்படும் கொலோனிலுள்ள அதிகாரி ஒருவர் எடுத்த நடவடிக்கைகளைச் சித்தரித்தது, இவர், பாசிச, தேசிய சோசலிச இரகசிய சேவைகளை (National Socialist Underground-NSU) அம்பலப்படுத்திய தூரிங்கிய நகரில் இயங்கிய நவ-நாஜி அமைப்பினுள் இரகசிய சேவையின் ஈடுபாடு பற்றி ஆவணப்படுத்தும் கோப்புகளை துண்டுதுண்டாக வெட்டியவர் ஆவார். மத்திய வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட “லிங்கென்” 2014 இரகசிய அறிக்கையை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர், இதில், அவர் வேண்டுமென்றே கோப்புக்களை துண்டுதுண்டாக்கியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய ஒரு உரையில், Lebenslaute ஐ சார்ந்த Ayşe Gül என்பவர், NSU வழக்குவிசாரணை பாசிசவாதிகளின் இரத்தக்களரியான தாக்குதல்களில் இரகசிய சேவைகளின் பங்கு என்ன என்பது பற்றி பதிலளிக்கப்படாத பல கேள்விகளை விட்டுவைத்துள்ளது எனக்குறிப்பிட்டு, NSU இன் ஆதரவாளர்களில் வட்டாரத்தில் பெரும்பாலும் 40க்கும் அதிகமான இரகசிய உளவாளிகளாக இருந்த நிலையில் இரகசிய உளவுத்துறையின் தகவல்களை பாதுகாப்பது குறைந்தபட்சம் பத்து கொலைகளுக்கு அதிகமாக தீர்வு காணவேண்டியதைவிட முக்கியமானதாக இருக்கின்றது என்று அவர் கண்டனம் செய்தார்.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (Socialist Equality Party-SGP) உறுப்பினர்களும், பல இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கேட்பவர்களிடம் பேசியதுடன், “ஜேர்மன் அரசாங்கம் சோசலிச சமத்துவக் கட்சியை எதிர்மறை கண்காணிப்பு பட்டியலில் வைக்கிறது” என்பதாக அவர்கள் விநியோகித்த அறிக்கைக்கு பெரும் ஆதரவையும் பெற்றனர்.


இசைக்கலைஞர்களின் குழு ஜேர்மனிய இரகசிய சேவையை மூடுமாறு அழைப்பு விடுக்கிறது

வொல்ஃப்காங் ரோத்தே என்பவர் கொலோனில் ஒரு தனியார் பள்ளியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். “நாஜிக்களுடன் இரகசிய சேவை தன்னை எப்படி இணைத்துக்கொள்கிறது” என்பது ஒரு முக்கியமான தலைப்பு என்பதால் இந்த இசைநிகழ்ச்சிக்கு அவர் வந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்னர், நவ-நாஜி ஜேர்மன் தேசியக் கட்சி (neo-Nazi German National Party-NPD), “முழுமையாக இரகசிய உளவாளிகளைக் கொண்டிருந்ததால்,” அதனைத் தடை செய்யும் நடைமுறை உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

NSU விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை என்று ரோத்தே கூறினார். Mundlos, Böhnhardt and Zschäpe ஆகிய நாஜிகள் உள்ளூர் ஆதரவு – அதாவது, உள்ளூர் அனுபவமிக்க நாஜிக்களின் ஆதரவு - இல்லாமல் கொலைகளைச் செய்தனர் என்பது போன்ற NSU விசாரணையை அவரால் நம்ப முடியவில்லை.

குறிப்பாக, ஜேர்மனியில் ஒரு பொலிஸ் அரசு கட்டமைக்கப்படுவதற்கு எதிராக ரோத்தே பேசினார். “பொலிஸ் மற்றும் இரகசிய சேவையின் கூட்டை நான் எதிர்க்கிறேன்,” என்று அவர் கூறினார். “அது முன்னரே நிகழ்ந்துவிட்டது, அது தன்னைத்தானே கெஸ்டாபோ என்றும் அழைத்தது.” மேலும் அவர், பொலிசின் புதிய விதிகள் என்பவை, வெறும் “யூகத்திலான சந்தேகம்… அதாவது மிகவும் தெளிவற்ற வகையில் வகுக்கப்பட்டவை என்பதால் அவற்றால் எதையும் மூடி மறைக்க முடியும்” என்ற அடிப்படையில், “மிரட்டலையும் மற்றும் கிட்டத்தட்ட வரம்பற்ற தடுப்புக் காவலையும்” அவை அனுமதித்தன எனவும் சேர்த்துக் கூறினார்.

2017 க்கான வருடாந்திர இரகசிய சேவை அறிக்கை (Secret Service Report), SGP ஐ கண்காணிப்பதற்கான காரணம் முதலாளித்துவம் குறித்த விமர்சனத்தை வெளிப்படையாகக் அது குறிப்பிடுகிறது என்று ரோத்தே இடம் நிருபர் தெரிவித்த போது, “முதலாளித்துவத்தை விமர்சிப்பதை அரசியலமைப்பு விரோதமாக்கவும், மற்றும் முதலாளித்துவத்தை பாதுகாப்பதை அரச விடயமாக்க அரசாங்கம் விரும்புவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது” என்று அவர் பதிலிறுத்தார்.

Lebenslaute இன் ஒரு இளம் இசைக்கலைஞரான சுசான்ன, இடதுசாரி தீவிரவாதத்தின் ஆதாரமாக முதலாளித்துவம் மீதான விமர்சனம் இருப்பதாக இரகசிய சேவை கருதுவதைக் கேட்டு ஆச்சரியமடைந்தார். மேலும், “இந்த இரகசியசேவை முதலாளித்துவத்தை ஜனநாயகத்துடன் சமன் செய்கிறது என்பது கூட ஒரு ஊழல் தான்” என்றும் அவர் கூறினார்.

ஒரு மாணவரும் Lebenslaute இன் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான ஆல்பேர்ட் முல்லர், இரகசிய சேவையின் இடதுசாரி தீவிரவாதத்தின் வரையறை என்பது, “விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு எதைப்பற்றியும் கேள்வி எழுப்பாத மிகவும் கீழ்படிந்த ஒரு குடிமகனின்” தனித்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. அதாவது, ஒரு சுதந்திர அரசுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

இரகசிய சேவையின் பார்வையில், “அனைத்தும் எப்படியோ அப்படியே இருக்க வேண்டும்,” என்று அவர் தொடர்ந்து கூறினார். மேலும், “சமத்துவமின்மை, (செல்வம்) குறித்த பாரிய ஏற்றத்தாழ்வுமிக்க பங்கீடு மற்றும் அநீதி போன்றவை தொடக்கூடாத ஒன்றாக இருக்கவேண்டும், மேலும் அவர்களை விமர்சிப்பது, அல்லது அவர்கள் மீதான விவாதங்களைத் தொடங்குவது ஆகியவை குறித்த கேள்வி சாத்தியமற்றதாக இருக்கவேண்டும். இது, எந்தவொரு எதிர்ப்பின் மீதானதொரு அப்பட்டமான குற்றமயமாக்கலாகும்” என்றும் கூறினார்.

இரகசிய சேவை அறிக்கையில் SGP இன் பெயர் குறிப்பிடுதல் பற்றி முல்லர் கருத்துத் தெரிவித்தார். “கொள்கையளவில், இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள எங்களால் முடிந்த செயல்களை நாங்கள் செய்துள்ளோம்” என்று அவர் கூறினார். “இங்கு தான், யார் யார் குற்றவாளி அல்லது குற்றவாளி இல்லை என்பதை அரசு தீர்மானிக்கிறது.” புலனாய்வு சேவைகள், குறிப்பாக இரகசிய சேவைகள் இதுவரையிலும், “அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக” தலையீடு செய்பவர்களில் யார் அரசியல் ரீதியாக “நல்லவர் மற்றும் ஏற்றுக்கொள்ளத் தக்கவர்” மேலும் யார் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது.

இசை நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக பங்கேற்றுவரும் ஹேடி (Hedwig Sauer-Gühr), “சட்டவிரோத இடங்கள்” என  Lebenslaute  குறிப்பிடும் இடங்கள் தொடர்பாக கவனத்தை ஈர்க்க செய்யும் நோக்கம் கொண்டுள்ளார்.

“நீண்டகாலமாக நாம் இங்கு இருந்து கொண்டு சட்டவிரோத இடங்களாக இரகசிய சேவையை நியமித்துள்ளோம்,” என்று ஹேடி கூறினார். மேலும், அதிகாரத்தின் பாசிச வரலாற்றை அவர் சுட்டிக்காட்டினர், இது, 1956 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) தடைக்கான விவாதங்களை வழங்கியது, மற்றும் 1970 களில், பொதுத் துறையில் தங்களது வேலைகளைத் தடைசெய்யும் “தீவிர ஆணை” என்றழைக்கப்பட்டதன் மூலம் இளம்,இடது-சார்புடைய மக்களின் அரசதுறை  தொழில்முறை வாழ்க்கையை அழித்துவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட பல நண்பர்கள் அவருக்கு இருந்தனர்.

“இரகசிய சேவை கூட சட்டவிரோதமானது தான், ஏனென்றால் அது மக்களை உளவு பார்க்கவும், அச்சுறுத்தவும் விரும்புகிறது,” என்று ஹேடி கூறினார். “இரகசிய சேவை, அனைத்திற்கும் அதாவது இடதுசாரிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதன் மூலம் கட்டமைப்புகளை கட்டுப்படுத்துகிறது, மேலும், அதற்கு மாறாக, ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany-AfD) உட்பட வலதுசாரி நிகழ்வுகளுக்கு சுதந்திரமான கடிவாளத்தை வழங்குகிறது.”

இந்நிகழ்ச்சியின் நடத்துனரான உல்ரிச் க்ளான் ஒரு சர்வதேசளவிலான புகழ்பெற்ற இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர், சர்வதேசளவிலான இசை நிகழ்ச்சிகள், நினைவூட்டல்கள், மற்றும் ஐரோப்பிய-ஆஸ்திரேலிய மற்றும் ஜேர்மனிய-துருக்கிய-அரேபிய கூட்டுத் திட்டங்களை ஆரம்பித்து இயக்கியுள்ளார். அவரது இசை நிகழ்ச்சிகள் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளின் இலக்கிய நயம் வாய்ந்த (classical) இசையிலிருந்து புதிய இசை வரையிலான வரம்புகளைக் கொண்டது. மேலும், அவரது இசை மற்றும் அரசியல் அர்ப்பணிப்புகளுக்காக பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

1985 இல் இந்த அமைப்பு நிறுவப்பட்டபோது க்ளான் இருந்தார். “இந்த பெரிய இயக்கம் இன்றளவும் இருப்பது குறித்து மட்டுமல்லாமல், புதிய இளம் இசைக்கலைஞர்கள் நிறைந்ததாக இருப்பது குறித்து குறிப்பாக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறினார். “இது புத்துயிரூட்டும் ஒரு இயக்கமாகும்” என்றும் தெரிவித்தார்.

ஜனவரியில், Lebenslaute உறுப்பினர்கள் அவர்களது வருடாந்திர கோடை நடவடிக்கையில் இரகசிய சேவை குறித்த கேள்விகளை எழுப்பி நீண்டகாலமாக போராடி வந்துள்ளனர் என்று WSWS இடம் க்ளான் தெரிவித்தார். அந்த நேரத்தில் அந்த விடயம் அவ்வளவு பிரபலமானதாக பார்க்கப்படவில்லை. “ஆனால் தற்போது, ஆகஸ்ட் 2018 இல், ஒரு சிக்கலான தலைப்பை அம்பலப்படுத்தி நாம் இங்கு ஏதோவொன்றை தொடங்கியுள்ளோம் என்பதை நாம் பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார். கோப்புகளை துண்டுதுண்டாக்கி, “ஒரு குற்றத்தை பற்றி தீர்வுகாண்வதை தடைசெய்ததோடல்லாமல், குற்றங்களையும் ஊக்குவித்து, ஒருவேளை அவர்களும் அதில் ஈடுபட்டிருந்ததையும் இரகசிய சேவை மூடி மறைத்தது” என்றார்.

அவரைப் பொறுத்தவரை, இரகசிய சேவை என்பது, “ஒரு குற்றவியல் சங்கம்… இது நமது அரசியலமைப்பை பாதுகாக்காது; அதை அது பெருமளவில் அச்சுறுத்துகிறது.” இந்நிலையில், அதன் மீறல்கள் அனைத்தும் அம்பலப்பட்ட பின்னரும் கூட, “வருடாந்திர இரகசிய சேவை அறிக்கையில் இடதுசாரி தீவிரவாதிகள் என்றழைக்கப்படுவன போன்று மிகுந்த எண்ணிக்கையிலான குழுக்கள் கண்காணிப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இது மேலும் மேலும் அதிகாரத்தையும், பண பலத்தையும் பெற்று வருகிறது. அதாவது, இது தாங்கமுடியாததாக உள்ளது. எது தீவிரவாதம் மற்றும் எது தீவிரவாதம் இல்லை என தீர்மானிக்க அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகத்திற்கு -BfV- அதிகாரம் இல்லை. அதனளவில் அதன் அதிகாரமே தீவிரமானது தான்” என்று க்ளான் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

சமீபத்திய வருடாந்திர இரகசிய சேவை அறிக்கையில், SGP க்கு இடதுசாரி தீவிரவாதி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது, ஒன்றாக இணைந்து வேலை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்ததென க்ளான் பதிலிறுத்தார். “குறிப்பாக இது மிக இழிவான செயலாகும், ஏனெனில் மறுபுறம், NSU இன் பாசிச மற்றும் நாஜி பயங்கரவாதம் பற்றியும், விசாரணையில் வழக்கு தொடரப்படாத அதன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பற்றியும் இது மிகவும் வித்தியாசமாக மௌனம் சாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

அதன் தோற்றத்தில் இருந்து, அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் (BfV) கம்யூனிச விரோத மற்றும் இடதுசாரி விரோத நிலையில் இருந்து வந்துள்ளது என்று க்ளான் கூறினார். “போருக்கு பின்னர், உண்மையான முன்னாள் நாஜிக்களால் அது கட்டமைக்கப்பட்டது என்பதுடன், அதனுள் வலதுசாரி தீவிரவாதிகள் இன்று அதே தொனியைத் தொடர்கின்றனர். இரகசிய சேவையின் தலைவரான ஹான்ஸ்-ஜியோர்க் மாஸ்ஸன் வலதுசாரி தீவிரவாதிகள் உடனான நெருக்கமான உறவை பராமரிக்கிறார் என்ற சமீபத்திய ஊழல்  தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, அது வேறுவிதமாக இருக்க முடியாது: என்ற நிலையில் இரகசிய சேவை மூடப்பட வேண்டும்.”