ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Seventy-eight years since the assassination of Leon Trotsky

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்தைய எழுபத்தியெட்டு ஆண்டுகள்

Eric London and David North
21 August 2018

எழுபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1940 ஆகஸ்டு 21 அன்று, சோவியத் ஸ்ராலினிச இரகசிய போலிஸ் GPU வின் ஒரு முகவரான ரமோன் மெர்க்கடேர் டெல் ரியோவினால் முந்தைய நாளில் படுகாயமடையச் செய்யப்பட்டிருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, மெக்சிகோ நகரில் மரணமடைந்தார்.

ரஷ்யப் புரட்சியில் லெனினுக்கு இணைத்தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை ஒரு பிரம்மாண்டமான அரசியல் குற்றமாகும். 1933 இல் ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்திற்கு வந்தமை, 1936-39 ஸ்பானியப் புரட்சி தோற்கடிக்கப்பட்டமை, மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகியவை உள்ளிட்ட வன்முறையான எதிர்ப்புரட்சி அலை ஒன்றின் உச்சப்புள்ளியாக இது அமைந்திருந்தது.

சோவியத் ஒன்றியத்துக்குள்ளாக, கிட்டத்தட்ட ரஷ்யப் புரட்சியின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் உட்பட, மார்க்சிச பாரம்பரியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு எதிரான ஒரு அரசியல் படுகொலைப் பிரச்சாரம் ஸ்ராலினிச ஆட்சியால் நடத்தப்பட்டது. 1936-39 பாரிய பயங்கரத்தில் 800,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ”ஸ்ராலினிசமும் போல்ஷிவிசமும்” என்ற 1937 கட்டுரையில்: “இப்போதைய அழித்தொழிப்பானது, போல்ஷிவிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான பிளவு என்பது ஒரு இரத்தக் கோடு அல்ல, மாறாக ஒரு முழு இரத்த ஆறாகும்” என ட்ரொட்ஸ்கி எழுதினார்.

ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ மற்றும் தேசியவாதச் சீரழிவை எதிர்த்த அரசியல் இயக்கத்திற்கு தலைமை கொடுத்தார். ஸ்ராலினுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டமானது, எண்ணற்ற வரலாற்றாசிரியர்கள் பொய்யாக வாதிட்டு வந்திருப்பதைப் போல, தனிப்பட்ட அதிகாரத்துக்கான அகநிலை ஆசையினால் உந்தப்பட்டிருந்ததல்ல. மாறாக, இந்தப் போராட்டம் இரண்டு நேரெதிரான அரசியல் முன்னோக்குகளைப் பிரதிபலித்தது.

சோவியத் ஒன்றியத்தில் 1924 இல் லெனினின் மரணத்தால் எளிதாக்கப் பெற்ற, ஸ்ராலினின் அதிகாரம் வலுப்பெறலானது, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியதும் சர்வதேசரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதுமான ஒரு தொழிலாளர்’ அரசின் கட்டமைப்புக்குள்ளாக எழுந்திருந்த ஒரு தேசியவாத மற்றும் பழமைவாத அதிகாரத்துவ சாதியால் அதிகாரம் தட்டிப்பறிக்கப்பட்டதாக இருந்தது. முதன்முதலாக 1924 இல் முன்மொழியப்பட்ட “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிச தத்துவமானது, ரஷ்யப் புரட்சியின் சர்வதேச முன்னோக்கினை மறுதலித்து, உலகப் புரட்சியை சோவியத் ஒன்றியத்திலான அதிகாரத்துவ எந்திரத்தின் நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதை நியாயப்படுத்தியது.

1923 இல் ட்ரொட்ஸ்கி முன்முயற்சியளித்த இடது எதிர்ப்பாளர்கள் அணியும், 1938 இல் அவர் ஸ்தாபித்த நான்காம் அகிலமும், ரஷ்யப் புரட்சிக்குமே கூட தத்துவார்த்த அடிப்படையாகத் திகழ்ந்திருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தால் வழிநடத்தப்பட்டன. முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது ஒரு நாட்டிற்குள்ளானதாக சாத்தியமில்லை என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு உலக சோசலிசப் புரட்சியின் ஊடாகவே தாண்டிச் செல்லப்பட கூடியதாகும்.

நாடுகடத்தப்பட்டு மெக்சிகோ நகரில் வாழ்ந்த ட்ரொட்ஸ்கி, அவரது வாழ்க்கை தொடர்ச்சியான அச்சுறுத்தலில் இருப்பதைப் புரிந்துகொண்டார். 1927 நவம்பரில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றம், 1928 ஜனவரியில் அல்மா அட்டாவுக்கு நாடுகடத்தப்பட்டமை, 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றம், அதன்பின் துருக்கியில் இருந்து பிரான்சுக்கும் நோர்வேக்குமாய் அவர் விரட்டப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து அதன்பின் இறுதியாக 1937 இல் மெக்சிகோவில் அவரது இறுதி வீட்டுக்கு என இந்த வட அமெரிக்க நாட்டில் அவர் தஞ்சமடைந்திருந்தார்.

1940க்குள்ளாக, ஸ்ராலின் நான்காம் அகிலத்தின் பல முன்னணிப் பிரதிநிதிகளை படுகொலை செய்து முடித்திருந்தார், இதில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலரான எர்வின் வொல்ஃப் 1937 ஜூலையிலும், GPU இல் இருந்து விலகி நான்காம் அகிலத்திற்கு ஆதரவாளரான இக்னஸ் ரீய்ஸ் 1937 செப்டம்பரிலும், ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் 1938 பிப்ரவரியிலும், நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமெண்ட் 1938 ஜூலையில் ஸ்தாபக காங்கிரஸை ஒட்டியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

1940 மே 24 அன்று, தீவிர-ஸ்ராலினிச ஓவியரான டாவிட் சிக்கேய்ரோஸ் தலைமையிலான ஒரு படுகொலைப் படை ட்ரொட்ஸ்கியின் வீட்டின் மீது ஒரு தாக்குதல் தொடுத்தது, ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தலியா செடோவாவும் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் எந்திரத் துப்பாக்கிகள் புல்லட்டுகளால் துளைத்தன. இருவரும் உயிர் தப்பினர் என்றாலும், இது கடைசி முயற்சியாக இருக்கப்போவதில்லை என்பதை ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். அந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் எழுதினார்: “நான் இந்த பூமியில் விதிக்கு இணங்க வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, மாறாய் விதிவிலக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பதை போன்றதொரு ஒரு பிற்போக்கான சகாப்தத்தில், ஒரு புரட்சியாளன் எதிர்நீச்சல் போட தள்ளப்படுகிறான்.”

அதன்பின், ஆகஸ்டு 20 அன்று, உலகின் கவனம் இரண்டாம் உலகப் போரின் மீது குவிந்திருந்த நிலையில், ஸ்ராலின் ஏவிய படுகொலையாளன், உயிர்வாழும் மாபெரும் மார்க்சிசவாதியும் உலகப் புரட்சியின் மூலோபாயவாதியையும் வீழ்த்திய அந்த இறுதி அடியைக் கொடுத்தான்.

ட்ரொட்ஸ்கியின் படுகொலையானது துயரகரமானதும் தொலைகாலத்திற்கானதுமான விளைவுகளைக் கொண்டிருந்த நிலையிலும், இந்தக் குற்றமானது, 1975 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையைத் தொடக்கும் வரையில் தீவிர புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களது படுகொலையானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஊடுருவியிருந்த உளவாளிகள் மற்றும் படுகொலையாளர்களின் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டதாய் இருந்தது என்பதை நிரூபிக்கின்ற ஏராளமான வெளிக்கொணர்வுகளை பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை முன்வைத்தது. மார்க் ஸ்பரோவ்ஸ்கி, ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட், ஃபிளாயிட் கிளீவ்லேண்ட் மில்லர், சில்வியா காலன் மற்றும் ஜோசப் ஹான்சன் ஆகியோரும் இந்த வலைப்பின்னலில் இடம்பெற்றிருந்தனர்.

காலென், சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி.கனனுக்கு தனிப்பட்ட காரியதரிசியாக இருந்தார், ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக GPUவுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதற்கு அவர் இந்த அந்தஸ்தை பயன்படுத்தினார். (காணவும்: “ஒரு ‘உதாரணகரமான தோழர்’: ஸ்ராலினிச உளவாளியான சில்வியா காலென் குறித்த சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் 40 ஆண்டுகால மூடிமறைப்பு”.) ஹான்சன் மெக்சிகோ நகரில் ட்ரொட்ஸ்கியின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தார், ட்ரொட்ஸ்கியை கொலை செய்ய வழிதருகின்ற மிக முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பதற்கு இந்த அந்தஸ்து அவரை அனுமதித்தது.

இந்தக் குற்றத்தை விசாரணை செய்யத் தவறியமையானது, அதன் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை மூடிமறைக்கின்ற பாதிப்பை மட்டுமன்றி, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகரத் தன்மையை புரிந்து கொள்வதை பலவீனப்படுத்துகின்ற பாதிப்பையும் சேர்த்துக் கொண்டிருந்தது. இந்த மூடிமறைப்பு எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நலன்களால் உந்தப்பட்டதாக இருந்தது. 1953 இல் நான்காம் அகிலமானது, மிஷேல் பப்லோ மற்றும் எர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு ஸ்ராலினிச-ஆதரவு கன்னையால் உடைக்கப்பட்டது. பப்லோவாதிகள் அப்போதும் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகவே காட்டிக்கொள்ள முனைந்தார்கள் என்றபோதும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் புரட்சிகரக் கொள்கைகளை நடத்துவதற்கு நெருக்குதலளிக்கப்பட முடியும் என்பதான திருத்தல்வாதக் கொள்கையை ஊக்குவித்தனர்.

ஸ்ராலினிசத்தை நோக்கிய இந்த அரசியல் நோக்குநிலையானது அதன் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கான எந்த முயற்சிக்கும் எதிரான வெறித்தனமான குரோதத்துடன் கைகோர்த்ததாய் இருந்தது. ICFI இன் விசாரணையானது நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவியிருந்த GPU முகவர்களின் வலைப்பின்னலை அம்பலப்படுத்தியது, GPU மற்றும் FBI இரண்டுடனும் ஹான்சன் பராமரித்து வந்திருந்த முன்னர் தெரிந்திராத உறவுகளுக்கான ஆதாரத்தை வெளிக்கொணர்ந்தது என்ற நிலையில், பப்லோவாதிகள் ஒரு சர்வதேச அவதூறுப் பிரச்சாரத்தைக் கொண்டு இதற்கு பதிலிறுத்தனர். அனைத்துலகக் குழுவால் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆய்வுசெய்வதற்கு, ICFI மற்றும் சர்வதேச பப்லோவாத அமைப்பு இரண்டில் இருந்தும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் கொண்ட ஒரு இணை-நிலை ஆணையத்தை உருவாக்குவதற்கு ICFI விடுத்த அழைப்பை எடுத்தஎடுப்பிலேயே அவர்கள் நிராகரித்தனர். 

1977 ஜனவரி 14 அன்று, பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தையும் அச்சமயத்தில் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் தலைவராக இருந்த ஜெரி ஹீலியையும் கண்டனம் செய்வதற்காக பப்லோவாத சர்வதேச செயலகம் ஒரு பொது ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தது. எர்னெஸ்ட் மண்டேல், ஜோர்ஜ் நோவாக், பியர் லம்பேர் மற்றும் தாரிக் அலி உள்ளிட முன்னிலை பப்லோவாதிகளும் அவர்களது கூட்டாளிகளும் மேடையில் இருந்தபடி இரண்டு மணி நேரங்களாக அவமதிப்புகளையும் வசைகளையும் கத்தித் தீர்த்தனர். ஆனால் அவர்களில் எவரொருவரும் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்பட்டிருந்த ஆதாரங்களைக் குறித்துக் குறிப்பிடவேயில்லை.

இந்த வசைமழைகளது பிரதான இலக்காக இருந்த ஜெரி ஹீலி, இந்த கண்டனங்களுக்கு பதிலளிப்பதற்காகவும் இணை-நிலை கமிட்டி ஒன்றுக்கான ICFI இன் அழைப்பை மீண்டும் எழுப்புவதற்காகவும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து எழுந்தபோது, அங்கே நிகழ்ச்சி ஏற்பாடுகளது தலைவராக இருந்த தாரிக் அலி, முறையற்று நடந்து கொள்வதாகக் கூறி அவரை பேச அனுமதிக்க மறுத்தார். மிகையில் கோர்பசேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சினின் ஒரு தீவிர ஆதரவாளராக அலி ஆகவிருந்தார் என்பதும், பல தசாப்தங்களுக்கு முன்பாக ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்த தொடர்பையும் அவர் மறுதலித்தார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.

ாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்கள் முழுமையாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும், அனைத்துலகக் குழுவின் மீதான தாக்குதல் அபாண்டமானது என்பதை பப்லோவாதக் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களது எச்சசொச்சங்கள் ஒருபோதும் ஒப்புக்கொண்டது கிடையாது.

ICFI ஐப் பொறுத்தவரையில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையானது வெறுமனே அரசு முகவர்களை அம்பலப்படுத்துவது குறித்த ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மற்றும் முதலாளித்துவ அரசின் எதிர்ப்புரட்சிகர தன்மை தொடர்பான அடிப்படையான அரசியல் கேள்விகளை தெளிவுபடுத்துவதற்கு அவசியமானதாக அது இருந்தது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களை மறைப்பதற்கான அத்தனை முயற்சிகளுக்கும் எதிரான போராட்டத்துடன் அது பிரிக்கவியலாமல் தொடர்புபட்டிருந்தது.

ஸ்ராலினிச சதியின் பொறிமுறைகள் மற்றும் வீச்சு குறித்த முன்னர் அறிந்திராத உண்மைகளை வெளிக்கொணர்ந்ததும், ட்ரொட்ஸ்கிசக் காரியாளர்களுக்கு இயக்கத்தின் வரலாற்று அனுபவங்கள், ஸ்ராலினிசத்தின் தன்மை, மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் பாத்திரம் ஆகியவற்றில் கல்வியூட்டியதும் அதன் மாபெரும் சாதனையாக இருந்தது.

பாரிய அரசுக் கண்காணிப்பு மற்றும் போலிஸ் ஒடுக்குமுறையின் ஒரு சகாப்தத்தில் அரசியல்மயமாக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறைக்கு, அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொழிலாளர் இயக்கத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதென்பது வாழ்வா சாவா பிரச்சினையாகும். முதலாளித்துவ அரசின் முகமைகளுக்கு எதிராக தொழிலாளர்களது மற்றும் சோசலிச இயக்கத்தை பாதுகாப்பதற்கான இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் அவர்கள் காண்பார்கள்.

ாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை அனைத்துலகக் குழுவின் புரட்சிகரப் பாரம்பரியத்தில் ஒரு இன்றியமையாத பகுதியாகும். ஸ்ராலினிச ஆட்சிகள் அப்போதும் அரசு அதிகாரத்தைக் கொண்டிருந்ததும் தீவிரமான அரசியல் செல்வாக்கை கொண்டிருந்ததுமான ஒரு சமயத்தில் GPU இன் குற்றங்களை அம்பலப்படுத்த ஒரு போராட்டம் நடத்துவதற்குத் தயாரிப்புடன் இருந்த ஒரே அமைப்பாக அது மட்டுமே இருந்தது. ICFI ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி நடப்பது என்பதையும் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அத்தனை அரசியல் முகமைகளுக்கும் எதிரான போராட்டத்தில் சமரசமற்றது என்பதையும் நடைமுறையில் அது நிரூபித்தது.

ட்ரொட்ஸ்கியின் மரணத்தின் எழுபத்தியெட்டாவது நினைவுதினமான இந்தநாளில், ட்ரொட்ஸ்கி தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த உலக சோசலிசத்தின் கோட்பாடுகளுக்கும் வேலைத்திட்டத்திற்குமான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்ற அனைத்துலகக் குழு, இந்த அசாதாரண புரட்சியாளருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறது.