ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The political roots of the terror attack on New York and Washington

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் அரசியல் வேர்கள்

By David North and David Walsh
12 September 2001

3,000க்கும் அதிகமானோரை கொலைசெய்து “பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடக்கப்படுவதற்கான சாக்காகவும் ஆகியிருந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் மீதான இந்த அரசியல் பகுப்பாய்வை உலக சோசலிச வலைத் தளம் செப்டம்பர் 12,2001 அன்று வெளியிட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் “பயங்கரவாதத்திற்கு எதிரான புனிதப் போர்” என்பது “உலகெங்கிலும் அமெரிக்காவின் இராணுவ வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு பரப்புரை பிரச்சாரமாகும்” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் எச்சரிக்கை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேர் உயிரிழக்க இட்டுச் சென்ற 2003 ஈராக் படையெடுப்பு உள்ளிட்ட, அதன்பின் வந்த நிகழ்வுகளால் துயரகரமாக ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது.

உலக வர்த்தக மையம் (World Trade Center) மற்றும் பென்டகன் (Pentagon) மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஐயத்திற்கு இடமற்ற விதத்தில் உலக சோசலிச வலைத் தளம் கண்டிக்கின்றது. நான்கு வர்த்தக பயணிகள் விமானங்களைக் கடத்தி, அவற்றை பறக்கும் குண்டுகளாக மாற்றியதற்குப் பொறுப்பானவர்கள் பாரிய படுகொலைகளுக்கான குற்றவாளிகளாவர். மனித உயிர்களை இவ்விதத்தில் கண்மூடித்தனமாகவும் ஈவிரக்கமின்றியும் அழித்தொழிப்பதன் மூலம் சமூகரீதியில் முற்போக்கான தன்மை கொண்ட எதையும் அடைந்துவிடமுடியாது.

சகமனிதரைக் கொல்லும் இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் ஒரு விரக்தியான அவநம்பிக்கை, மதவாத மற்றும் அதி-தேசியவாத குருட்டு நம்பிக்கைவாதம், மற்றும், சேர்த்துக் கூறியாக வேண்டும், கேடுகேட்ட தன்மை கொண்ட அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றின் ஒரு நச்சுக்கலவையை வெளிப்படுத்துகின்றன. பயங்கரவாத இயக்கங்கள் —அவற்றின் அமெரிக்க-விரோத வாய்வீச்சு இருந்த போதும்— அவற்றின் தாறுமாறான வன்முறை நடவடிக்கைகள் அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கும் என்ற பிரமையையே தங்களின் தந்திரோபாயங்களுக்கு அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆக, இறுதி ஆய்வில், அவை வாஷிங்டனுடன் பேரம் செய்து கொள்வதற்கே நம்பிக்கை கொண்டுள்ளன.

பயங்கரவாத வழிமுறையானது, அது எவ்வளவுதான் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முனைந்தாலும், அடிப்படையில் அது பிற்போக்கானதாகும். பயங்கரவாதமானது, ஏகாதிபத்திய இராணுவவாதத்துக்கு எதிராய் சக்திவாய்ந்ததொரு அடி கொடுப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், ஆளும் உயரடுக்கின் புவியரசியல் மற்றும் பொருளாதார நலன்களது முன்னெடுப்பிற்காய் போரில் இறங்குவதை நியாயப்படுத்துவதற்காகவும் அதற்கு அங்கீகரிப்பை உண்டாக்குவதற்காகவும் இத்தகைய சம்பவங்களை பிடித்துக் கொள்ளக் கூடிய அமெரிக்க ஸ்தாபகத்திற்குள்ளாக இருக்கின்ற கூறுகளது கரங்களில் பகடைக்காயாகவே இது பயன்படுகிறது. அப்பாவி மக்களின் படுகொலையானது பொது மக்களை கொதிப்படையச் செய்கிறது, நோக்குநிலை பிறழச் செய்கிறது, குழப்பி விடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தை அது பலவீனப்படுத்துவதோடு, மத்திய கிழக்கிலான இன்றைய நிகழ்வுகளுக்கு பின்புலமாக அமைந்திருக்கும் வரலாறு மற்றும் அரசியலில் அமெரிக்க மக்களுக்கு கல்வியூட்டும் அத்தனை முயற்சிகளுக்கும் எதிர்நடவடிக்கையாக அமைகிறது.

இருந்தபோதும், செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத அட்டூழியத்தின் மீதான எமது கண்டனமானது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான எமது கோட்பாட்டுரீதியான மற்றும் சமரசமற்ற எதிர்ப்பினை இம்மியளவும் குறைத்துக் கொண்டதாக அர்த்தமுடையதல்ல. நேற்றைய சம்பவங்கள் ஏன் எதற்காக நடந்தது என்று அறிய விரும்பும் எவரொருவரும் மத்திய கிழக்கில், குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக, அமெரிக்காவின் வரலாற்று மற்றும் அரசியல் செயல்வரலாறை கண்டிப்பாக ஆய்ந்து பார்க்க வேண்டும். இப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களின் மேல் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடாத முயற்சிகள் —இதனைச் சூழ்ந்ததாய், ஏனையவற்றுடன் சேர்த்து, பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய அரசு ஒடுக்குவதற்கு சளைக்காமல் ஆதரவு தருவதும் இருக்கிறது— அரேபிய வெகுஜன மக்களின் நியாயமான மற்றும் அடக்கமுடியாத ஜனநாயக, தேசிய மற்றும் சமூக அபிலாசைகளுக்கு எதிரான வன்மையான எதிர்ப்பில் அமெரிக்காவை அமர்த்தியிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை சம்பவங்களுக்குப் பின்னர் உடனடியாக, அரசியல்வாதிகள், தலையங்க ஆசிரியர்கள், ஊடக பண்டிதர்கள் எல்லாம், உலக வர்த்தக மையத்தின் அழிப்பு என்பதன் அர்த்தம் அமெரிக்கா இப்போது யுத்தத்தில் உள்ளது என்பதாகும் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஆகவே அதற்குத்தக்கபடி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் அறிவித்திருக்கின்றனர். ஆனால் உண்மையான விடயமாக இருப்பது என்னவென்றால், அமெரிக்கா, இரண்டு தசாப்தங்களின் பெரும்பகுதி காலத்திற்கு, ஏதேனும் ஒரு வடிவத்தில், மத்திய கிழக்கில் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்காக அது பாரிய பொருளுதவி செய்வதை தள்ளி வைத்து விட்டாலும் கூட, அமெரிக்கா 1983ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு மத்திய கிழக்கு நாட்டின் மீது குண்டுவீச்சை  நடத்தி வந்திருக்கிறது. அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்/யுத்தக் கப்பல்கள் லெபனான், லிபியா, ஈராக், ஈரான், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைத் தாக்கியுள்ளன. யுத்தம் ஒன்றைப் பிரகடனப்படுத்தாமலேயே, ஏறக்குறைய 11 வருடங்களாக ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. ஈராக் மீது தினம்தோறும் நடந்து கொண்டிருக்கும் குண்டு வீச்சுகள் அமெரிக்க ஊடகங்களில் அபூர்வமாகவே சொல்லப்படுகின்றன, 1991 லிருந்து அமெரிக்க குண்டுகளால் கொல்லப்பட்ட ஈராக்கியர்களது மொத்த எண்ணிக்கையை உறுதி செய்வதற்கு அவை எந்த முயற்சியும் செய்ததில்லை.

இந்த இரத்தம் தோய்ந்த வரலாறைக் கொண்டு பார்க்கையில், அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டவர்கள் திருப்பித் தாக்க முனைந்திருக்கிறார்கள் என்பதில் எவரும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

இன்று இரத்தத்தைக் காட்டி கூச்சலிடும் இதே ஊடகங்கள் தான் அமெரிக்க நலன்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கருதப்படுகின்ற எந்தவொரு நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எதிராக வன்முறையை பயன்படுத்துவதை தொடர்ந்து பாராட்டி வந்துள்ளன. அமெரிக்காவின் 1999 குண்டுவீச்சுப் பிரச்சாரத்தின் போது, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் பத்தியாளரான தோமஸ் பிரைட்மன் (Thomas Friedman), சேர்பிய மக்களைப் பார்த்து கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்ப்போம்: “பெல்கிராட்டில் வெளிச்சமே இருக்கக் கூடாது: ஒவ்வொரு மின் விநியோக கம்பியும், தண்ணீர்க் குழாயும், சாலையும் மற்றும் யுத்த தொடர்புடைய தொழிற்சாலையும் ஒவ்வொன்றும் குறிவைக்கப்பட வேண்டும்..... நாங்கள் உங்களை பொடிப்பொடியாக்கி உங்களது நாட்டை பின்னுக்குத் தள்ளி விடுவோம். உங்களுக்கு 1950 விருப்பமாய் இருக்கிறதா? நாங்கள் 1950 க்கு உங்களை தள்ளி விட முடியும். உங்களுக்கு 1389 க்கு விருப்பமாய் இருக்கிறதா? எங்களால் 1389 க்கு தள்ளிவிடவும் முடியும்".[1]

சிடுமூஞ்சித்தனம், மிருகத்தனம் மற்றும் பொறுப்பின்மை ஆகியவற்றின் ஒரு கலவையாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இருக்கிறது. உலக ஜனத்திரளின் பெரும்பகுதியின் வெறுப்பை பற்றியெரியச் செய்திருக்கும் ஒரு பாதையை வாஷிங்டன் பின்பற்றி வந்துள்ளது, இதன் மூலம் அது இரத்தம் தோய்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை கண்டுபிடிக்க இயலுகின்றதான ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டிருக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் வெறுப்பையும் வஞ்சம் தீர்க்கும் வெறியையும் தூண்டுகின்றன என்பதை, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், அவர்கள் நடுநிலைமையுடன் இருந்த அபூர்வமான சந்தர்ப்பங்களில், ஒப்புக் கொண்டுள்ளார்கள். பால்கன் யுத்தத்தின் பொழுது, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் லோரன்ஸ் ஈகெல்பேர்க்கர் கூறினார்: "கட்டிடத்தில் அமர்ந்தவாறு ஒரு பொத்தானை அழுத்தி, அங்கே மக்கள் மடிந்து விழச் செய்கின்ற ஒரு மூர்க்கனைப் போன்றும், ஒரு ஏவுகணையின் செலவைத் தவிர வேறு எந்த விலையும் நாம் கொடுக்காததைப் போன்றுமான ஒரு தோற்றத்தை உலகின் எஞ்சிய பகுதிக்கு நாம் வழங்கியிருக்கிறோம். வரவிருக்கும் ஆண்டுகளில் உலகின் எஞ்சிய பகுதிகளைக் கையாளும் விடயத்தில் இது நம்மை ஆட்டிப்படைக்கப் போகிறது.”

இந்த நுண்ணறிவு, அதே ஈகெல்பேர்க்கரை, செவ்வாய் இரவு, உலக வர்த்தக மைய அழிப்புக்கு பதிலடியாக அதில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய எந்த நாடாயிருந்தாலும் அதன்மீது உடனடியாக குண்டுகள் வீசப்பட வேண்டும் என்று கூறுவதில் இருந்து தடுத்து நிறுத்திவிடவில்லை.

செவ்வாய் மாலை அன்று ஜோர்ஜ். டபிள்யு. புஷ் நாட்டிற்கு ஆற்றிய உரை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அகந்தை மற்றும் குருட்டுத்தனத்தின் சிகரமாய் இருந்தது. அமெரிக்கா "சுதந்திரத்திற்கும் வாய்ப்புவளங்களுக்கும் உலகின் ஒளிமிக்க கலங்கரை விளக்காக” இருப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், உலகின் கோடிக்கணக்கான மக்கள் தமது மனித மற்றும் ஜனநாயக உரிமைகளது எதிரியாகவும் தங்கள் மீதான ஒடுக்குமுறையின் பிரதான ஊற்றுக்கண்ணாகவுமே அமெரிக்காவைப் பார்க்கின்றனர். அமெரிக்க ஆளும் உயரடுக்கு, அதன் திமிர் மற்றும் சிடுமூஞ்சித்தனத்தில், உலகெங்கும் தனது வன்முறை நடவடிக்கைகளை, வன்முறையான பதில் தாக்குதல்களுக்குரிய அரசியல் நிலைமைகளை உருவாக்காமலேயே நடத்திக் கொண்டு சென்றுவிடலாம், என்பதைப் போல் நடந்துகொள்கிறது.

செவ்வாய் நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து உடனடியாக, அமெரிக்க அதிகாரிகளும் ஊடகங்களும் ஒசாமா பின் லாடன் தான் பொறுப்பு என்று மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளனர். இது சாத்தியமே என்றபோதிலும், அவர்களின் கூற்றுக்கு எப்பொழுதும் போல அவர்கள் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

ஆனால் பின்லேடன் தான் குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது அநேக சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றது. இந்த மனிதன்தான் உலகின் மிகவும் கொலைபாதக பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்து வந்திருக்கிறது, அத்துடன் அவரது ஒவ்வொரு அசைவும் மிக அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட மற்றும் பாரிய உளவு எந்திரத்தின் துணைகொண்டு கூர்ந்து கவனிக்கப்படுகிறது என்ற உண்மையைக் கொண்டு பார்த்தால், யாரும் கண்டுபிடிக்கமுடியாத விதத்தில் இத்தகையதொரு விரிவான தாக்குதலை பின் லாடனால் எவ்வாறு ஒழுங்கமைக்க முடிந்தது? அதிலும் 1993ல் தாக்குதலுக்குள்ளான அதே வானுயர்ந்த நியூயோர்க் கட்டிடத்திற்கு எதிரான தாக்குதலை?

அவரது தாக்குதலின் அழிவுகரமான வெற்றியானது, அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான புனிதப் போரை காட்டுவதென்பது, அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கான மனச்சாட்சியுடனான முயற்சியாக இருப்பதைக் காட்டிலும் உலககெங்கிலுமான அமெரிக்க இராணுவத்தின் வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு பரப்புரைப் பிரச்சாரமாகவே அதிகமாய் இருக்கிறது.

மேலும், பின் லாடன் மற்றும் அவருக்கு அடைக்கலம் அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்ற தலிபான் முல்லாக்கள் இருவருமே, 1980களில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் ஆதரவு ஆட்சிகளை எதிர்த்துப் போராடுவதற்காக ரீகன்-புஷ் நிர்வாகங்களால் நிதியும் ஆயுதங்களும் அளிக்கப்பட்டவர்களாவர். செவ்வாய்க் கிழமை தாக்குதலில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்றால், அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க குடிமக்கள் மீதான மிகப்பெரும் இரத்தம் தோய்ந்த தாக்குதலை நடத்திய அந்த சக்திகளை வளர்த்தெடுத்த குற்றத்தை அமெரிக்காவின் சிஐஏவும் அரசியல் ஸ்தாபகமும் புரிந்திருக்கின்றன.

வெளிநாட்டில் அமெரிக்க இராணுவவாதம் தீவிரப்படுவதென்பது தவிர்க்கவியலாமல் சொந்த நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரப்பட்ட தாக்குதல்களுடன் கைகோர்த்தே நிகழும். ஊடக வெறிக்கூச்சலின் காரணத்தால் ஏற்கனவே கொலை மிரட்டல்களுக்கும் பிற துன்புறுத்தல் வடிவங்களுக்கும் இலக்காகி இருக்கக் கூடிய அரபு-அமெரிக்கர்கள் தான், விசிறி விடப்படும் போர்க்காய்ச்சலின் முதல் பலிகடாக்களாய் உள்ளனர்.

யுத்தத்தைப் பிரகடனப்படுத்துமாறு, குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருகட்சியினரிடமும் இருந்து வரும் கூக்குரலானது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் எதிராளிகள் மீதான ஒரு மிகப் பொதுவான ஒடுக்குமுறைக்கு முன்னறிவிக்கிறது. 1991 ஈராக் மீதான படையெடுப்பில் அமெரிக்கத் துருப்புக்களை வழிநடத்திய படைத்தளபதி நோர்மன் சுவார்ஸ்கோப் (Norman Schwarzkopf), பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களாக சொல்லப்படுவோருக்கு எதிரான யுத்தமானது அமெரிக்க எல்லைகளுக்கு வெளியில் போலவே உள்ளேயும் நடத்தப்பட வேண்டும் என்று தொலைக்காட்சியில் அறிவித்தபோது, அரசியல் மற்றும் இராணுவ உயரடுக்கின் பெரும்பான்மையோரின் சார்பாய் அவர் பேசியிருந்தார்.

ஆளும் உயரடுக்கின் மூலோபாய மற்றும் நிதியியல் நலன்களால் செலுத்தப்படுகின்ற, அமெரிக்காவால் பின்பற்றப்பட்ட கொள்கைகள்தான், செவ்வாயன்று கட்டவிழ்ந்த பயங்கரத்திற்கான அடித்தளங்களை இட்டவை ஆகும். "இச்செயல்களைச் செய்த பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தவர்களுக்கும் இடையில் வித்தியாசம் பார்க்கப் போவதில்லை" என்ற ஜனாதிபதியின் மிரட்டலால் சுட்டிக்காட்டப்பட்டவாறாக, புஷ் நிர்வாகத்தால் இப்பொழுது பரிசீலிக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இன்னும் கூடுதலான அழிவுகளுக்கே அரங்கம் அமைத்துத் தரப் போகின்றன.

குறிப்பு:

[1] Thomas L. Friedman, “Stop the Music,” New York Times, April 23, 1999.