ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The kiss of death: Stalinists seek to tie Tamil Nadu auto strikes to right-wing parties

அழிவை ஏற்படுத்தும் செயல்: தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்களை வலதுசாரி கட்சிகளுடன் பிணைக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சி

By Arun Kumar 
10 November 2018

யமஹா இந்தியா மற்றும் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்-சைக்கிள் தயாரிப்பு ஆலைகள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு செய்யும் Myoung Shin India Automotive (MSI) ஆகியவற்றை சேர்ந்த மூவாயிரம் தொழிலாளர்கள் ஆறு வாரங்களுக்கு மேல் ஓரகடத்தில் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு தொழிற்துறை மையமாக உள்ளது.

போலீஸின் வன்முறை தாக்குதல்கள், பரந்தளவிலான கைதுகள் மற்றும் நீதிமன்றங்களின் முதலாளிகள் சார்பான தீர்ப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் ஒரு உறுதியான போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள், அதிக ஊதியங்கள் மற்றும் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக யமஹாவால் பழிவாங்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தல் மற்றும் மூன்று ஆலைகளிலும், இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (CITU) இணைந்த புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அங்கீகாரம் செய்வது ஆகியவற்றிற்காக போராடுகின்றனர்.

சிஐடியு, இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் உடன் இணைந்துள்ளது.

தமிழ்நாடு வாகன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர்களின் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும். அது, முதலாளிகள், அரசாங்கம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களை ஒன்றுபடுத்தும் தொழிலாளி விரோத இணைவுக்கு எதிராக உடனடியாக எழுந்துள்ளது.

வேலைநிறுத்தக்காரர்களை தடைசெய்ய, நீதிமன்றங்கள் மற்றும் போலீசார் ஒன்றாக செயல்படும்போது, ஸ்ராலினிச சிஐடியு தலைவர்கள் ஓரகடத்தில் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்கின்றனர்.

வேலைநிறுத்தம் செய்யும் யமஹா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் MSI தொழிலாளர்களுக்கு ஆதரவாக, வேலைநிறுத்தம் நடைபெறும் ஆலைகளுக்கு எதிரே ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பதை தவிர, ஒரு பெரிய வாகன தயாரிப்பு மையமாக விளங்கும் ஓரகடத்தில் அது பிரதிநிதித்துவம் செய்யும் இதர தொழிலாளர்களை அணிதிரட்ட ஸ்ராலினிச சிஐடியு எதுவுமே செய்யவில்லை, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதுமாக எதுவுமே செய்யவில்லை என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை.

வேலைநிறுத்தத்தின் போது உற்பத்தியை தொடர்ந்து நடத்துவதற்கு நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்துகிறது. ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவது ஒரு மூலோபாய விஷயமாக இருந்தபோதிலும், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சார்பாக அல்லது ஒரு வர்க்கரீதியான ஆதரவு கேட்டு அறைகூவல் விடுப்பதையும் சிஐடியு எதிர்த்தது. பல தசாப்தங்களாக, ஒப்பந்த தொழிலாளர் மற்றும் பல அடுக்கு உழைப்பு சக்திகளை (ஒப்பந்த, தற்காலிக, பயிற்சி மற்றும் பகுதி நேரம் போன்ற தொழிலாளர்களை) தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வலிந்த தாக்குதலில் ஒரு முக்கிய ஆயுதமாக இந்திய பெருவணிகம் பயன்படுத்தி வருகிறது.

மாறாக, இந்திய ஆளும் கட்சியான, இந்து மேலாதிக்க பிஜேபி இன் ஒரு நெருங்கிய கூட்டாளியான அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கம், மற்றும் அஇஅதிமுக கட்டுப்பாட்டிலான தொழிலாளர் துறைக்கும் நேரடியாக (தலையீட்டிற்கான) விண்ணப்பங்கள் செய்யும்படி ஸ்ராலினிஸ்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை ஊக்குவித்தனர். அதேபோல், முதலாளித்துவ நீதிமன்றங்களின் மீது அவர்களை நம்பிக்கை வைக்கும்படியும் அவற்றின் கட்டளைகளுக்கு கட்டுப்படும்படியும் கூறினார்கள்.

வேலைநிறுத்தங்களை தடம்புரளச் செய்யவும் மற்றும் அவற்றை முதலாளித்துவ ஆளும் மேல் தட்டுடன் பிணைப்பதற்குமாக மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சியாக, CITU சமீபத்தில் ஒரு "அனைத்துக் கட்சி" கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, அதில் ஸ்ராலினிஸ்டுகள் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களை அணிவகுத்து நிறுத்தி அவர்களை வேலைநிறுத்தம் செய்பவர்களின் கூட்டாளிகளாக புகழ் பாடியது.

யமஹா, ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ. வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக சிபிஎம் மற்றும் சிஐடியு தலைவர்களுடன் மேடையில் பின்வருபவர்கள் உட்பட பங்கு பெற்றனர்: தமிழக சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் மாவட்ட செயலாளர், கே. சுந்தர், தி.மு.க.வுடன் இணைந்திருக்கும் தொழிலாளர் முன்னேற்ற முன்னணி பொதுச் செயலாளர் எம். சண்முகம்; மற்றும் பெரும் வணிக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (INTUC), மாநில துணை செயலாளர் பி. தாமோதரன். மேலும் MDMK, PMK மற்றும் VCK உட்பட பல தமிழ்நாடு சார்ந்த முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்கள், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு வாகனத் தொழிலாளர்களின் ஆதரவாளர்களாக காட்டப்பட்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய சி.பி.எம். தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.சவுந்திரராஜன், வாகனத் தொழிலாளர்கள் போராட்டம் "மாற்றப்பட்டுவிட்டது" என்றும், அது இப்போது "அனைத்து (எதிர்க்கட்சி) அரசியல் கட்சிகளுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது" என்றும் கூறினார்.

அவ்வாறான கூற்றுக்கள், யமஹா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் MSI தொழிலாளர்கள் போராட்டத்தின் மீது ஒரு சேதத்தை உண்டு பண்ணும் செயலின்றி வேறில்லை.

மேற்கூறிய அனைத்து கட்சிகளும் கடந்த இரு தசாப்தங்களில் இந்தியாவின் பில்லியனர் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சிக்கு அதாவது 2 இலிருந்து 130 க்கும் அதிகமானவர்களாக வளர்ச்சி பெற்றதில் முடிவடைந்த தொழிலாள வர்க்க விரோத, முதலீட்டாளர் சார்பு செயல் திட்டத்திற்கு தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்தவர்கள். அதே சமயம் நூறு மில்லியன் (கோடி) கணக்கானவர்கள் நாளொன்றுக்கு 2 டாலர் (சுமார் 150 ரூபா) வருமானத்தில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலம் வரையில் இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, 1991 மற்றும் 1996 க்கு இடையில் இந்தியாவை ஆட்சி செய்தபோது சந்தை-சார்பு சீர்திருத்தங்களைத் தொடங்கி, அவற்றை முடுக்கி விட்டு, 2004 -14 வரையில் UPA அரசாங்கத்திற்கு அது தலைமை தாங்கியபோது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பூகோள மூலோபாய பங்காளித்துவத்தை உருவாக்கியது.

அதேபோல் தமிழ்நாடு ஆளும் கட்சியாகவும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைமையிலான மத்திய அரசாங்கங்களில் ஒரு இளைய பங்காளியாகவும் தி.மு.க. இருந்த இரண்டு சமயங்களிலும் அது தொழிலாள வர்க்க விரோதப் பதிவுகளை கொண்டுள்ளது. சிறிய பிராந்தியக் கட்சிகள் பெரு வணிக தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு. வின் கீழ் இயங்கும் கட்சிகளாக மற்றும் அனைத்து இந்திய அரசியல் அரங்கில் முறையே அவர்களின் பங்காளிகளாகவும் உள்ளன.

CPM-CITU இன் "அனைத்து கட்சி" கூட்டம் இரட்டை பிற்போக்குத்தன நோக்கம் கொண்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக தாம் அணிதிரட்டல் செய்வதாக உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மீது அரசியல் கட்டுப்பாட்டை வைத்திருக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சிக்கின்றனர், அதே சமயம் அவர்களை மேலும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலகச் செய்கின்றனர். மற்றும் இரண்டாவதாக ஸ்ராலினிஸ்டுகள் அடுத்த வசந்தகால தேசியத் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அவர்களது தேசிய மாநாட்டில், ஸ்ராலினிஸ்டுகள் உடன்பட்டார்கள், அதாவது பி.ஜே.வை தோற்கடிக்கும் பெயரில், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் "புரிதலை" ஏற்படுத்திக் கொள்ள தயாராக உள்ளனர், அதேசமயம் அது ஒரு நவீன தாராளவாத, அமெரிக்க ஏகாதிபத்திய சார்புடைய கட்சி என்பதையும் அது பல்வேறு பிராந்தியக் கட்சிகளுடன் நெருக்கமான கூட்டுக்களை உருவாக்கும் என்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். தி.மு.க. அதுவாகவே காங்கிரஸ் இன் ஒரு நெருக்கமான கூட்டாளியாக இருக்கிறது, அது ஸ்ராலினிஸ்டுகளின் மிக முக்கியமான வருங்கால தேர்தல் பங்காளிகளில் ஒன்றாகும்.

அக்டோபர் 6 -8 தேதிகளில் நடைபெற்ற CPM இன் மத்திய குழு கூட்டத்தில் இந்த நோக்குநிலை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்கு மூன்று பணிகளை அறிவித்தது; "இடது" சக்திகளை பலப்படுத்துவது, பி.ஜே.பி யை தோற்கடிப்பது, மற்றும் "ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம்" அமைவதை உறுதிப்படுத்துவது - அதாவது காங்கிரஸ் கட்சி தலைமையிலான அல்லது இதர வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கம் ஒன்று ”மத்தியில் அமைவது.”

அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற "அனைத்துக் கட்சி" கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் இதர மாநிலங்களில் இதேபோன்ற கட்சிகளுக்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை திசைதிருப்புவதே இப்படியான இலக்குகளின் மையமாக உள்ளது: காங்கிரஸ், தி.மு.க. மற்றும் பிற சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கு ஆற்றொணா நிலையில் தேவைப்படும் "இடது" சான்றுகளை வழங்கி அவர்கள் ஓட்டுகள் வாங்குவதற்கும் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளே ஸ்ராலினிஸ்டுகள் தங்களது சொந்த செல்வாக்கை அதிகரிக்கவும் ஆகும்.

முக்கியமாக, வேலைநிறுத்தங்கள் எந்தளவுக்கு நீடித்து செல்கிறதோ அவ்வளவு அதிகமாக CITU, இதர அனைத்துக்கும் மேலாக தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான கோரிக்கையை உயர்த்திப் பிடித்தது, அதேசமயம் இந்தியாவின் முதலாளித்துவ சார்பு தொழிலாளர் உறவு முறையை அது கடைப்பிடிப்பதாக வலியுறுத்தியது. இந்த செய்தி தவறின்றி உள்ளது: முதலாளிகள், CITU ஐ அங்கீகரித்தால், சிஐடியு மற்றும் சிபிஎம் தேசிய ரீதியாக செய்வதுபோல் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும்.

இது தொடர்பாக இரண்டு மேலதிக புள்ளிகள் சொல்லப்பட வேண்டும்:

அக்டோபர் 30ம் திகதி "அனைத்து கட்சி" கூட்டத்தில் –தெளிவாகவே வேலைநிறுத்தத்தில் உள்ள ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த CITU மறுத்து வருவது தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ்– ஸ்ராலினிச தலைவர் சவுந்திரராஜன் ஆவேஷமாக சாடினார், அவ்வாறு பேசும் போது வேலைநிறுத்தக்காரர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்றவாறாக கூறினார், “ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்வதோ அல்லது அவர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பதோ” என்று கூறிய சவுந்திரராஜன் “அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் அது நிறைய தள்ளு முள்ளுக்கும் இரத்த சிந்தலுக்கும் வழிவகுக்கும். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா” என்றார். சவுந்திரராஜன்

இரண்டாவதாக, ஸ்ராலினிசத் தலைவர்கள், வட இந்தியாவில் ஹரியானாவில் உள்ள மாருதி சுசுகியின் மானேசர் வாகன தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்களுக்கு எதிரான அரசு – முதலாளியின் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பாக தமிழ் நாடு வாகன தொழிலாளர்களை முற்றிலும் அறியாமையில் வைத்திருந்தனர். 2012 ல் மாருதி சுசுகி, ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கம் மற்றும் பொலிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட 150 தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினர், 2,400 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தனர். ஏனென்றால், மானேசர் ஆலை தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் வறுமை ஊதியத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒரு மையமாக மாறியது. இன்று, மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் அனைத்து 12 நிர்வாக குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 13 தொழிலாளர்கள், ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் குற்றவாளிகளாக்கப்பட்ட பின்னர் ஆயுள் சிறை தண்டனையை எதிர் கொண்டுள்ளனர்.

மாருதி சுசுகி ஜோடனை பற்றி தமிழ் நாடு வேலைநிறுத்தக்கார்கள் அறிந்து கொள்வதை இரண்டு காரணங்களுக்காக ஸ்ராலினிஸ்டுகள் விரும்பவில்லை: முதலாவதாக, பெருவணிக அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக செயல்பட வைக்கமுடியும் என்ற அவர்களின் கூற்றுக்களுக்களை துடைத்துக்கட்டும் வகையில் நிராகரித்துள்ளது. இரண்டாவதாக, மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்புக்கு எதிரான எந்தவொரு பிரச்சார இயக்கமும் அவர்களது காங்கிரஸ் மற்றும் பிற முதலாளித்துவ அரசியல் கூட்டாளிகளுக்கு கோபத்தை உருவாக்கும்.

இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சி மற்றும் அதன் ஒரு பகுதியாக தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்கள், ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிஐடியுவை இந்திய முதலாளித்துவத்தின் சமூக முட்டுகளாக அம்பலப்படுத்த வேண்டியதன் அவசரத்தை வெளிச்சத்தில் காண்பிக்கிறது. அத்துடன் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்த வேண்டும். அதாவது, தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக திட்டமிட்ட முறையில் அணிதிரட்டுவதும், அதன் பின்னால் இந்திய முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டி தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் போராட வேண்டும்.