ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ශ්‍රී ලංකාවේ උතුරේ දිස්ත්‍රික්ක ගංවතුර විනාශයකට ලක්වේ

இலங்கையின் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களில் வெள்ள அழிவுகள்

Our reporters
28 December 2018


வெள்ளப் பெருக்கினால் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்

கடந்த வாரத்தில் இருந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் வடக்கு மாவட்டங்களில் வாழும் 30,000 குடும்பங்களைச் சேர்ந்த 90,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சூழ்நிலை அறிக்கையின்படி, கிளிநொச்சியில் 55,000 பேரும் முல்லைத்தீவில் 27,000 பேரும் மற்றும் யாழ்ப்பாணத்தில் 13,000 பேரும் அவர்களுள் அடங்குவர்.

இரண்டு மரணங்கள் மற்றும் 2,600 வீடுகள் முற்றாகவோ அல்லது பகுதியளவோ சேதமடைந்துள்ள அதேவேளை, வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்ட பேரழிவு பரந்தளவானதாகும். இந்த மாவட்டங்கள் அனைத்தும், 1983ல் இருந்து மாறி மாறி ஆட்சிசெய்து வந்த கொழும்பு அரசாங்கங்களினால் நடத்தப்பட்ட, கிட்டத்தட்ட 30 வருட இனவாத யுத்தத்தின் பேரழிவுளால் பாதிக்கப்பட்டவையாகும். இந்த யுத்தத்தில், லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் மற்றும் காயப்பட்டும் உள்ளனர். கிட்டத்தட்ட சகல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

2009 மே மாதத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களின் பின்னரும் கூட, கூடுதலான மக்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அற்பமான வசதிகளுடன் எளிமையாக கட்டப்பட்ட வீடுகளிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்றார்கள். பெருமளவான மக்கள் நெல் வயல்கள், தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பதின் மூலம் வருமானத்தினை ஈட்டிக்கொள்கின்றனர்.

இந்த பிரதேசங்களில் கடும் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசிய மக்கள், அதிவேக வீதிகள் மற்றும் பாதைகள் உட்பட உட்கட்டுமான வேலைகள்யாவும் பொருத்தமான திட்டமிடல்கள் அற்றநிலையில் அமைக்கப்பட்டமையும், அதேபோல நல்ல  வடிகாலமைப்பு இன்மையுமே வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு காரணம் என தெரிவித்தார்கள். 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் புதிதாக புனரமைக்கப்பட்ட இரணமடு குளத்தின் வான் கதவுகள் யாவும், மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்காமல் திடீரென திறந்து விடப்பட்டமையே வெள்ளபெருக்குக்கு காரணம் என, அவர்கள் மேலும் விசனம் தெரிவித்தார்கள். இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு என்பது, இயற்கைக் காரணங்களுடன் இணைந்து, மனிதனால் உருவாக்கப்பட்டதாகும்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் சிப்பாய்கள் என படைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பல ஊடகங்கள் விளம்பரப்படுத்தியிருந்தன. படையினர் மக்களை டிங்கிப் படகுகளில் அழைத்துச் செல்வதையும் அல்லது ஆட்களைத் தூக்கிச் செல்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடப்பட்டிருந்தன. முப்படைகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான துருப்புக்கள், வடக்கில் உள்ள பலம்வாய்ந்த முகாம்களில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஒரு காப்பாற்றும் நடவடிக்கையை விட, படைகளுக்கு ஒரு கூடுதலான மதிப்பினைக் கட்டியெழுப்பும் பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டிருந்தமை மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியது. சில சிப்பாய்கள், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக மக்களை இடம்மாற்றும் நட்வடிக்கையில் ஈடுபட்டுவிட்டு, நாங்கள் இருட்டுவதற்கு முன் போக வேண்டும் என்று கூறி, அந்தப் பிரதேசத்தினை விட்டு வெளியேறியதை எமது நிருபர்கள் கண்டார்கள்.

மக்களுக்கு உதவிகள் வழங்குமாறு குறிப்பிட்ட அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஆலோசனைகள் வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பேரழிவின்போது கோபத்தினைத் திசை திருப்புவதற்கானதாகவே இவ்வாறான அறிவித்தல்களை ஒருவர் கருத முடியும். ஆனால் மக்களின் துன்பம் தீர்க்கப்படவில்லை.


முரசுமோட்டை பாடசாலையில் அமைந்துள்ள முகாம்

நாம், முரசுமோட்டை பாடசாலையில் அமைந்துள்ள முகாமுக்கு சென்றோம். அங்கு, ஊரியான் கிராமத்தினைச் சேர்ந்த சிறுவர்கள், முதியவர் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 700 பேர் நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். நாம் முரசுமோட்டை முதலாம் யூனிட், ஊரியான் மற்றும் பெரியகுளம் கிராமங்களுக்கும் பயணித்தோம்.

அங்கு உள்ள சகல மக்களுக்கும் ஒரு மலசல கூடம் மட்டுமே இருந்தது. குடிதண்ணீர் வசதி இல்லாத போதிலும் பொதுமக்களால் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்பட்டிருந்தது. அங்கு சமைத்து உண்பதற்காக அரசாங்கத்தின் உதவியாக, கிராம சேவையாளர் உணவுப் பொருட்களை வழங்கியிருந்தார். அங்கு நிம்மதியாக உறங்க முடியாது. குறிப்பாக இரவு வேளைகளில் பரவலாக நுளம்பு தொல்லை காணப்படுகின்றது. உயிர் கொல்லிப் பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் நுளம்புத் திரியை அவநம்பிக்கையுடன் பயன்படுகின்றார்கள். மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் சிறு விவசாயிகள்.


லலிதா மேரி

ஊரியான் கிராமத்தினைச் சேர்ந்த லலிதா மேரி கூறியதாவது:

எனது வீட்டினைச் சுற்றி வெள்ளம் நிற்கின்றது. பயறு, கௌபி மற்றும் உழுந்து போன்ற தானியங்களை எனது சிறிய துண்டு நிலத்தில் விதைத்துள்ளேன். நான் நெல் கூட விதைத்துள்ளேன். எல்லாம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நான் தனியாக, இந்த தோட்டத்தை நம்பியே வாழ்கின்றேன். நான் இந்த இழப்புக்களுடன் எவ்வாறு சாமாளிக்கப் போகின்றேன் என்று தெரியவில்லை?

அதே கிராமத்தினைச் சேர்ந்த இந்துமதி கூறும்போது, மக்கள் இந்த மாதிரியான பேரழிவுகளுக்கு வருடாந்தம் முகம் கொடுப்பதாக கூறினார். “அரசாங்கம் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை புனரமைக்க வேண்டும். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன புனரமைப்புச் செய்யப்பட்ட இரணமடுக் குளத்தினை ஆடம்பரமாக திறந்து வைத்தார். ஆனால் ஆபத்து நிலமைகளில் அவர்கள் எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. எனது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. கடன்கள் பெற்றே நாங்கள் பயிர் செய்தோம். அவை எல்லாம் வெள்ளத்தில் கழுவிச் செல்லப்பட்ட பின்னர், நாங்கள் எவ்வாறு சீவிக்க முடியும். எங்கள் உணவுத் தேவைக்காக ஒதுக்கி  வைக்கப்பட்டிருந்த நெல் கூட அடித்துச் செல்லப்பட்டுள்ளது.”

கடந்த வருட இழப்புக்களைத் தொடர்ந்து இந்த வருடமும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நெல் வளரத் தொடங்கும் காலத்திலேயே இம்முறை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே முழுப் பயிரும் நாசமாக்கப்பட்டுவிட்டன. கடன்கள் பட்டே 100 வீதமான விவசாயிகளும் பயிர் செய்கின்றார்கள். யுத்தத்தின் போது, எங்கள் மக்கள் அனைவரும் இழப்புக்களுக்கு முகம் கொடுத்தார்கள். அவர்கள் அதில் இருந்து இன்னும் மீளவில்லை. என அவர் கூறினார்.

முரசுமோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் வீரசிங்கம் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்தார். பொருத்தமான எச்சரிக்கை விடுக்காமல் இரணமடு வான்கதவுகள் திறக்கப்பட்டு, உடனடியாகவே தண்ணீர் மட்டம் அதிகரித்துச் சென்றதற்கு, அவரும் அதிகாரிகளைக் குற்றஞ்சாட்டினார். அவர் தனது சொந்த நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்த நிலத்திலுமாக 12 ஏக்கர் பயிரிட்டார். அவை முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டன.


கதிரவேலு அழகுமலை

இதேபோல், முரசுமோட்டையைச் சேர்ந்த கதிரவேலு அழகுமலை வயது 72, 10 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்தார். 10 பசுக்களையும் சிறிய கோழிப் பண்ணையையும் வைத்திருந்தார். எல்லாம் வெள்ளத்தில் அழிந்துள்ளதாக அவர் கூறினார். கிட்டத்தட்ட 2,000 கிலோ உரம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

“நாங்கள், விதைகள், உரம் மற்றும் இரசாயனங்களை கடைகளில் கடன்மூலமே வாங்குகின்றோம். பின்னர், நாங்கள் நெல்லை விற்றுவிட்டு அந்தக் கடனை மீளச் செலுத்துவோம். இப்போது எங்களால் கடனை மீளச் செலுத்த முடியாது.”

அவர் மேலும் கூறியதாவது: அதிகாலையில் வெள்ளம் வேகமாக அதிகரித்தது. மணித்தியாலக் கணக்காக நாங்கள் வெள்ளத்துடன் போராடினோம். நாங்கள் உடுத்திய உடுப்புடன்தான் வீட்டை விட்டு வெளியேறினோம். குளிர் மேலும் அதிகரித்தது. நாங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் நிலையில் இருந்தோம். கட்டப்பட்ட கயிற்றின் மூலம் மற்றவரின் உதவியுடன் வெளியேறினோம்.”

அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்காத்தையிட்டு அவரும் முறைப்பாடு செய்தார். “எங்களை வெளியேற்றுவதற்கு அரசாங்க அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கம் எமது வாழ்வு சம்பந்தமாக அலட்சியமாக உள்ளது.

“அரசாங்கம், நாங்கள் வாழ்வதற்கு ஒரு நல்ல நிலத்தை தரவில்லை. நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோம். இயற்கைப் பேரழிவுகளாலும் பாதிக்கப்படுகின்றோம். நாங்கள் பாதிக்கப்படும் போது எதுவிதமான நட்ட ஈடுகளையும் பெற முடியவில்லை.”

அவர், இனக் கலவரம் காரணமாக 1968ல் கண்டியில் இருந்து வெளியேறியிருந்தார். “நாங்கள் இங்கு 50 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் முடிந்த பின்னர் நாங்கள் மீளக்குடியேற்றப்பட்டோம். அரசாங்கம், வீடு கட்டுவதற்காக எங்களுக்கு 3 லட்சம் ரூபாவை வழங்கியது. அது போதாமல் இருந்தது. இன்னும் வீடு பூரணமாக கட்டி முடிக்கப்படவில்லை. நாங்கள் கடனுக்குள் அகப்பட்டுள்ளோம்,” என அவர் கூறினார்.

“யுத்தத்தின்போது, பயிர்கள் மற்றும் கால்நடைகள் உட்பட சொத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அவரது மருமகன் காணாமல் ஆக்கப்பட்டார். வாகனங்கள் அழிக்கப்பட்டன. எனினும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.”

மக்கள் தங்கள் நகைகளை புலிகளால் நடாத்தப்பட்ட வங்கிகளில் அடைவு வைத்திருந்தார்கள். அவற்றை அரசாங்கம் மீட்ட போதிலும், மக்களுடைய நகைகள் திரும்ப ஒப்படைக்கவில்லை. என அவர் முறைப்பாடு செய்தார்.


சின்னையா இராமச்சந்திரன்

பெரியகுளத்தினைச் சேர்ந்த முன்னாள் புலிகள் இயக்கப் போராளியான சின்னையா இராமச்சந்திரன் உணவுக்காக சேமித்து வைத்திருந்த நெல் வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவரது 6 ஏக்கர் நெல்வயல்கள் அழிக்கப்பட்டுவிட்டது. அவருடைய கால்நடைகள் காணாமல் போய்விட்டன. கோழிகள் இறந்துவிட்டன. அவர் வர்த்தக வங்கியில் இருந்து 2 இலட்ச ரூபா கடனாகப் பெற்றுள்ளார். எனினும் அதைத் திருப்ப செலுத்துவதற்கு முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது குடும்பம் தற்போது உறவினர் வீட்டில் தங்கியுள்ளது.

“நான் ஒரு முன்னாள் போராளி, ஒரு வருடத்துக்கு மேல் புனர்வாழ்வு என்னும் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். வீட்டுக்கு வந்தபின்னர், கடன்பட்டு விவசாயத்தில் ஈடுபட்டேன். நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பெரும் கஸ்ட்டத்தை அனுபவித்தார்கள். அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக கூறியிருந்தபோதிலும் என்னைப் போன்றவர்களுக்கு போதியளவு உதவிகள் கிடைக்கவில்லை. யுத்த காலத்தில் எனது சகோதரர் காணாமல் ஆக்கப்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல்களின் போது வந்து எம்மைச் சந்திக்கின்றனர். ஆனால் துன்பத்தில் எமக்கு உதவுவதில்லை.

“அணைக்கட்டை புனரமைக்கும் போது, அரசாங்கம் வாய்க்கால்களையும் பாலங்களையும் சரியாக கட்டுவதில்லை. அதனால் வெள்ளம் வழிந்தோடுவதற்கு பாதையில்லை. அரசாங்கமே இந்தப் பேரழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.