ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Matamoros strike threatens to shut down North American auto industry

மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் வட அமெரிக்க வாகனத்துறையை மூட அச்சுறுத்துகிறது

Eric London
21 January 2019

மெக்சிக்கோவின் மத்தாமோரொஸில் (Matamoros) வாகன உதிரி பாக உற்பத்தித்துறையில் 70,000 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அமெரிக்க வாகனத்துறை உற்பத்தி ஆலைகளின் உற்பத்தியைப் பாதிக்கத் தொடங்கி உள்ளதுடன், வட அமெரிக்கா எங்கிலும் வாகன உற்பத்தியே முடங்கும் சாத்தியக்கூறை அதிகரித்து வருகிறது.

வேலைநிறுத்தத்தின் விளைவாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் உற்பத்தி ஆலைகளில் நிர்வாகம் உற்பத்தியை குறைத்து வருவதாக அமெரிக்க தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்துள்ளனர். வெளிநடப்புகளால் உண்டான உதிரி பாகங்களின் பற்றாக்குறை காரணமாக, மிச்சிகனின் ஃபிளாட் ராக் ஃபோர்ட் உற்பத்தி ஆலையில் இவ்வாரம் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.

டெக்சாஸின் பிரௌன்வில் இல் இருந்து சற்று தெற்கே மத்தாமோரொஸ் இல் அமைந்துள்ள 50 வாகன உதிரி பாக உற்பத்தி ஆலைகளில் துணிச்சலுடன் தங்கள் உழைப்பை நிறுத்தி வைத்திருக்கும் இந்த தொழிலாளர்கள், உலக பொருளாதாரத்தின் ஒரு பிரதான துறையை அவர்களின் காலடியில் கொண்டு வரக்கூடும்.

இந்த வேலைநிறுத்தம் அமெரிக்க, கனேடிய மற்றும் மெக்சிக்கன் தொழிலாளர்களின் புறநிலையான ஒற்றுமை மற்றும் வர்க்க பொது நலன்களை எடுத்துக்காட்டுகிறது. இது, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு இடையே சுவர் எழுப்புவதற்கான டொனால்ட் ட்ரம்பின் இனவாத அச்சுறுத்தலுக்கும், அமெரிக்க மற்றும் கனேடிய வாகனத்துறை தொழிலாளர்களின் எதிரிகள், வாகனத்துறை முதலாளிமார்களோ முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையோ இல்லை, மாறாக மெக்சிகன் சகோதர சகோதரிகளே அவர்களின் எதிரிகள் என்று அவர்களை நினைக்க வைக்க ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) மற்றும் யூனிஃபோர் சங்கமும் (Unifor union) பரப்பும் தேசியவாத நச்சு விஷத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் பதிலாக உள்ளது.

மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் அவர்களின் சமூக பலத்தை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். நேற்று ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், “முதலாளித்துவ வர்க்கமே வெளியேறு!” என்று கோஷமிட்டவாறு தங்களின் ஆலைகளில் இருந்து நகர வளாகத்தை நோக்கி அணிவகுத்தனர். வேலைநிறுத்தக்காரர்கள் சமூக ஊடகத்தில் ஒரு தேசிய பொது வேலைநிறுத்தத்தில் தங்களுடன் இணையுமாறு "அனைத்து மெக்சிகன் தொழிலாளர்களுக்கும்" அழைப்பு விடுத்துள்ளனர், இதை அவர்கள் "தொழிலாளர்கள் இல்லாத ஒரு நாள்" என்றழைக்கின்றனர்.

நேற்றைய பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவு, “தொழிற்சங்கமும் நிறுவனமும் தொழிலாள வர்க்கத்தைப் படுகொலை செய்கின்றன,” என்ற பதாகையின் பின்னால் அணிவகுத்தது. வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியை "ஒவ்வொருவரும் படித்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.


தொழிற்சங்கமும் நிறுவனமும் தொழிலாள வர்க்கத்தைப் படுகொலை செய்கின்றன"

அந்த வேலைநிறுத்தம் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை, உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனமான Aptiv, 100 சதவீத சம்பள உயர்வு கோரிய பகுதி-வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக எல்லை நகரமான ரெய்னொசாவில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இந்த வேலைநீக்கம் தொழிலாளர்களிடையே சீற்றத்தைத் தூண்டியது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகே —மெக்சிகோ ஏற்றுமதிகளில் அண்மித்து மூன்றில் இரண்டு பங்கைக் கணக்கில் கொண்டுள்ள— மில்லியன் கணக்கான மக்கில்லாடோரா (Maquiladora)  தொழிலாளர்களின் கண்கள், மத்தாமோரொஸ் போராட்டத்தின் மீது பதிந்துள்ளன.

வாகனத் தொழில்துறை சர்வதேச அளவில் ஒன்றையொன்றைச் சார்ந்து இணைந்திருப்பது ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்களுக்கான ஆழமான பலத்திற்கு ஆதாரமாக உள்ளது. நிறுவனங்கள் பூகோளமயப்படுத்தலை உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மீதான அதீத-சுரண்டுதலை சுலபமாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள நிலையில், தொழிலாளர்களோ ஒவ்வொரு உற்பத்தி மையத்திலும் இலாபத்திற்கான உற்பத்தியின் உலகளாவிய எந்திரத்தைத் தொந்தரவுக்கு உட்படுத்தும் சக்தியைப் பெற்றுள்ளனர்.

உலகெங்கிலுமான பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் செய்திகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள், அதிகரித்த எண்ணிக்கையில் ஆதரவு செய்திகளை அனுப்பி வருகின்றனர்:

• கனடாவின் ஒசாவா ஜிஎம் ஆலை தொழிலாளர் ஒருவர் கூறினார்: “இந்த நிறுவனங்கள் எல்லையைக் கடந்து அனைத்து தொழிலாளர்களையும் சுரண்டுவதற்கு முயன்று வருகின்றன. எனக்கு அலுத்துப்போய் விட்டது! கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகியவற்றின் தகுதி அல்ல. மெக்சிக்கன் தொழிலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ துல்லியமாக நாங்களும் அதையே பின்தொடர இருக்கின்றோம். எங்கள் சங்கம் பெரிதும் எங்களுக்காக எதுவும் செய்வதில்லை. நீங்கள் இந்த போராட்டத்தை போராடியே ஆக வேண்டும், இதில் நீங்கள் ஜெயித்தே ஆக வேண்டும். தலைநிமிர்ந்து நில்லுங்கள்.”

• மெக்சிகோவில் அமைந்துள்ள நிறுவனங்களில் ஒன்றான Autoliv நிறுவனத்தின் ருமேனிய தொழிலாளி ஒருவர் WSWS க்கு கூறினார்: “மெக்சிகோவின் நிலைமைகள் வெறுப்பூட்டுவதாக உள்ளன. ருமேனியாவிலும் ஒன்றும் நல்ல விதத்தில் இல்லை. நாங்கள் நாளொன்றுக்கு 20 யூரோவிற்காக 12 மணி நேரம் வேலை செய்கிறோம். ருமேனிய தொழிற்சங்கங்களும் மெக்சிகோவில் இருப்பதைப் போலவே தான் இருக்கின்றன. அவர்கள் சிறிய முதலாளிகள். மெக்சிகோ மற்றும் ருமேனியாவில் நாம் நல்ல கண்ணியமான நிலைமைகளைப் பெற வேண்டும்.”

• மெக்சிகோவின் Guanajuato இல் ஜிஎம் Silao ஆலை தொழிலாளர் உடன்பட்டார்: “இங்கே Silao இல் நாங்களும் அதுபோன்று ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். இந்த சங்கம் எதற்கும் இலாயக்கில்லை.”

• மிச்சிகன் டெட்ராய்டில் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர் ஒருவர் கூறினார்: “மனதாரக் கூறுகிறேன் நீங்கள் இந்த பொய்யான தேசிய எல்லைகளைக் கடந்து வடக்கில் உங்களின் தொழிலாள வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளை எட்டி வருகிறீர்கள், 'ஒருவருக்கு ஏற்படும் காயம், அனைவருக்கும் ஏற்படும் காயம்,' என்று கூறி கொண்டிருக்கிறீர்கள். நாம் ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய சக்தியாக ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். முதலாளித்துவத்தின் பெயரில் அமெரிக்காவை மையமாக கொண்ட நிறுவனங்கள் மெக்சிக்கன் தொழிலாளர்களைக் காயப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது. நீங்கள் எங்களின் சக தொழிலாளர்கள், நீங்கள் வேறொரு நாட்டில் வாழ வேண்டியிருக்கிறது அவ்வளவு தான்.”

வர்க்க ஐக்கியத்தின் இத்தகைய சேதிகள், வட அமெரிக்காவின் இம்மூன்று நாடுகளது தொழிலாளர்களும் வெவ்வேறு நலன்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் பொய்யை அம்பலப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாட்டின் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களை அவர்களின் பொதுவான பெருநிறுவன எதிரிகளுக்கு எதிராக போராடுவதற்காக ஐக்கியப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் சக தொழிலாளர்களுடன் போட்டியிடுமாறு கூறுகின்றன. பணக்கார நாடுகளின் தொழிலாளர்கள் தங்கள் நாட்டின் "வேலைகளைக் காப்பாற்றி" கொள்வதற்காக சம்பள வெட்டுக்கள் மற்றும் சலுகை வெட்டுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இந்த மூலோபாயம் வாகனத்துறை தொழிலாளர்களுக்கு பேரழிவுகரமானது. அமெரிக்க மற்றும் கனேடிய மத்தியமேற்கின் பரந்த பிரிவுகள் ஆலைமூடல்களாலும், தொழிற்சங்கத்தின் விட்டுக்கொடுப்புகளாலும் நாசமாக்கப்பட்டுள்ளன, அதேவேளையில் யூனிஃபோர் மற்றும் UAW அதிகாரத்துவவாதிகளின் சம்பளங்களோ நூறாயிரக் கணக்கான டாலர்களில் விண்ணைத் தொட அதிகரித்துள்ளன. இப்போது ஜிஎம் மேலும் 15,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டு வருகிறது, மெக்சிக்கன் உதிரிப்பாக உற்பத்தி வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் கனடா ஆலைகளை மூடுவதும் இதில் உள்ளடங்கும்.

மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் ஓர் உலக சம்பவமாகும். என்ன நடந்து வருகிறதென்றால் பகிரங்கமான வர்க்க போர். பெருநிறுவனங்கள் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி வருகின்றன, அவர்களின் குடும்பங்களைக் கொடிய வறுமைக்குள் தள்ள அச்சுறுத்தி வருகின்றன. நிறுவனங்கள் தொழிலாளர்களை ஆலைகளுக்குள் அடைத்து வைத்து, தடையரண்களுக்கு வெளியே நடக்காதவாறு அவர்களைத் தடுத்து வருகின்றன. மெக்சிக்கன் கடற்படையும் அரசு பொலிஸூம் அவற்றின் வன்தாக்குதலுக்குரிய கைத்துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தவாறு தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களில் ரோந்து வருகின்றன. தொழிலாளர்கள், ஒரே வாரத்தில், நிறுவனங்களுக்கு 100 மில்லியன் டாலர் இலாப இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இன்று வரையில், இந்த வேலைநிறுத்தம் குறித்து அமெரிக்க ஊடகத்தில் ஒரேயொரு செய்தி கூட இல்லை. மெக்சிகன் தேசிய ஊடகம் ஏறத்தாழ அதே விடாப்பிடிவாதத்துடன் இந்த வேலைநிறுத்தத்தைப் புறக்கணித்துள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ் போன்ற அமெரிக்க பத்திரிகைகள் பாலியல் மற்றும் இன அடையாளம் மீதான பிரச்சினைகளுக்காக அவற்றின் பக்கங்களில் ஆயிரக் கணக்கான அங்குல இடத்தை வீணடிக்கின்ற அதேவேளையில், அவை தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் வாழ்வா சாவா பிரச்சினைகளைத் தணிக்கை செய்து—அதன் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றன.

தொழிற்சங்கங்கள் உட்பட ஆளும் வர்க்கம், மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் குறித்து ஒரேயொரு வார்த்தை கூட கூற இயலவில்லை ஏனென்றால் ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் அதை முன்னுதாரணமாக கொண்டு ஈர்க்கப்படுவார்களோ என்று அது பீதியுற்றுள்ளது.

மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் ஏற்படுத்தி வருகின்ற முன்னுதாரணத்தை இங்கே பார்க்கலாம்:

தொழிலாளர்கள், ஒவ்வொரு ஆலையில் இருந்தும் இரண்டு பிரதிநிதிகளுடன், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்களின் சொந்த குழுக்களைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கமைத்து வருகிறார்கள். வேலைநிறுத்தத்தை ஒருமித்து செயல்பட வைப்பது, வேலைநிறுத்த ஆலைகளுக்கு இடையே தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த முறையீடுகளைச் செய்வது ஆகியவற்றுக்காக இவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் மேலும் அதிகமாக, இது 2019 இன் வர்க்க போராட்டத்தின் மத்திய கருத்துருவாக உருவெடுத்து வருகிறது.

இவை முக்கியமான முதல்படிகளாகும். ஆனால் பெருநிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் மத்தாமோரொஸ் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்த "ஆசை காட்டிக் கொண்டே தண்டிக்கும் அணுகுமுறையை" பயன்படுத்துகின்றன என்பதை மத்தாமோரொஸ் தொழிலாளர்களுக்கு எச்சரித்தாக வேண்டும். துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டு, நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும், பாசாங்குத்தனமாக தொழிலாளர்களை ஆதரிப்பதைப் போலவும், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளை வெறுப்பதைப் போலவும் காட்டிக் கொண்டு, “சுயாதீனமான நடவடிக்கை" எடுப்பதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கத்தை "சீர்திருத்த" தொழிலாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்ற தொழில்ரீதியிலான தொழிலாளர் வழக்கறிஞர்களது முறையீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.

இதுபோன்ற முறையீடுகள், பகிரங்கமாக வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்குத் தனது ஆதரவை பகிரங்கமாக சூளுரைத்துள்ள, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்சிகன் ஜனாதிபதி Andrés Manuel López Obrador இன் செவிட்டுச் செவிகளையே சென்று சேரும்.

இதேபோன்ற முறையீடுகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபிரடருக்கு உரையாற்றுகின்றன, அவர் வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தனது ஆதரவை பகிரங்கமாக வழங்கியுள்ளார். அவர்கள் செவிடன் காதுகளில் விழுவார்கள்.

தொழிலாளர்கள் இந்த ஆலோசனையைப் பின்தொடர்ந்தால், அவர்கள் இந்த முன்முயற்சியை ஒப்புவித்து விடுவார்கள். அவர்களின் நிஜமான பலம், துல்லியமாக, தொழிற்சங்கங்களில் இருந்தும் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்தும் அவர்கள் சுயாதீனமாக இருப்பதில் தான் தங்கியுள்ளது. அவர்களின் சக மக்கில்லாடோரா தொழிலாளர்களுக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவின் அவர்களது வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளுக்கும் முறையிடுவதில் தான் அவர்களுக்கான நிஜமான முன்னோக்கிய பாதை உள்ளது.

இனம் அல்லது தேசியம் என்னவாக இருந்தாலும், எல்லா தொழிலாளர்களும் ஒரேமாதிரியான பெருநிறுவனங்களால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை மத்தாமோரொஸ் வேலைநிறுத்தக்காரர்கள் நிரூபித்து வருகிறார்கள் என்பதோடு, அனைவரும் வர்க்க போராட்டத்தின் ஒரே மொழியைப் பேசுகிறார்கள். தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமே, போர், தேசிய விரோதங்கள் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிலிருந்து சுதந்திரமான ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளத்தை வழங்குகிறது.