ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump, Bolsonaro and the danger of fascism

ட்ரம்பும், போல்சோனரோவும் பாசிச அபாயமும்

By Patrick Martin,
20 March 2019

பிரேசிலிய ஜனாதிபதியின் மூன்று நாள் வாஷிங்டன் விஜயம் உலகின் மிக பிற்போக்குத்தனமான அரசியல்வாதிகள் இருவரையும் ஒன்றாக இணைத்துள்ளது: அவர்களில் ஒருவர், ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியும், மற்றும் 1964 முதல் 1985 வரை பிரேசிலை ஆட்சி செய்த இரத்தம் தோய்ந்த இராணுவ சர்வாதிகாரத்தின் மீது தணியாப்பற்று கொண்ட ஆர்வலருமான ஜெயர் போல்சோனரோ ஆவார், மற்றொருவர், கடந்த வாரம் நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் 50 முஸ்லீம்களை படுகொலை செய்த துப்பாக்கிதாரி உட்பட, உலகம் முழுவதிலுமான எதேச்சதிகாரவாதிகளையும் பாசிசவாதிகளையும் ஈர்க்கும் துருவமாக மாறியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஆவார்.

மார்ச் 19 செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் ட்ரம்ப், அவர் முன்னர் கியூபா மற்றும் வெனிசூலாவிலிருந்து வந்து புளோரிடாவில் குடியேறிய வலதுசாரி பார்வையாளர்களிடம் பலமுறை கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்: "எங்கள் அரைக்கோளத்தில், சோசலிசத்தின் காலம் முடிவடைகிறது. "நாட்டு நிலைமை பற்றிய அவருடைய உரையில் கூறியது போலவே, அமெரிக்காவிலும் கூட சோசலிச ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

ட்ரம்ப் மற்றும் போல்சோனரோ இருவரும் அவர்களின் அரசாங்கத்தின் மைய இலக்கு, —இதுதான் பாசிச இயக்கங்களின் அரசியல் மூலம்— சோசலிசத்தை வேரோடு அழிப்பது என அறிவித்தனர். நியூசிலாந்தில் பிரெண்டன் டாரன்ட் செய்த படுகொலைக்குப் சில நாட்களின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர்கள் சோசலிசத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். ட்ரம்ப் "ஒரு புதுப்பிக்கப்பட்ட வெள்ளை அடையாளத்தின் சின்னம்" என புகழ்ந்து தான் பதிவிட்ட கொள்கை விளக்க அறிவிப்பில் டாரன்ட் அவரை பாராட்டியுள்ளதோடு, அனைத்து "மார்க்சிசவாதிகளின்" கழுத்திலும் தனது சப்பாத்து கால்களை வைத்து நசுக்க விரும்புவதாக தனது விருப்பத்தையும் அறிவித்தார்.

வெள்ளை மாளிகையில் ட்ரம்பும் போல்சோனரோவும் பரஸ்பரம் அரவணைத்துக் கொண்டமையானது, தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியையும், உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முதலாளித்துவக் கட்சிகள் பாசிச சக்திகளை வளர்த்தெடுப்பதையும், அடையாளப்படுத்துவதாக உள்ளது. ஐரோப்பா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் பாசிசத்தின் வளர்ச்சி என்பது, அடிமட்டத்தில் இருந்து கிடைக்கும் வெகுஜன ஆதரவு அலைகளின் விளைவு அல்ல, மாறாக உண்மையில் இது, மேலிருந்து பெருவணிக தன்னலக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் “ஜனநாயக” அரசாங்கங்கள் என்றழைக்கப்படுவனவற்றின் நிதியுதவி மற்றும் ஊக்கத்தின் விளைவாக உருவானது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தீவிர வலதுசாரி அரசியலின் பூகோள அளவிலான ஊக்குவிப்பு, Goldman Sachs நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும், கடற்படை அதிகாரியும், வலதுசாரி சிந்தனையாளருமான ஸ்டீவ் பானன், திங்களன்று இரவு ஜெயர் போல்சோனரோ உடன் இரவு விருந்தில் கலந்து கொண்டதில் வெளிப்பாட்டை கண்டது. பிரேசிலிய பாராளுமன்றத்தின் உறுப்பினரும், மற்றும் பானன் ஆல் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கூட்டமைப்பின் இலத்தீன் அமெரிக்க பிரதிநிதியுமான போல்சோனரோவின் மகன் எட்வார்டோ உடன் பானன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கிறார், இவர் அமைத்த இந்த கூட்டமைப்பு இயக்கமாக அறியப்படுவதுடன், அதன் நோக்கம் உலகெங்கிலும் தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளை ஊக்குவிப்பதாக உள்ளது. “வலதில் உள்ள போல்சோனரோவின் சில குழுக்கள் பானன் இயக்கத்தின் சீடர்களாகவும், பிரேசில் மற்றும் இலத்தீன் அமெரிக்காவிற்கான பானனின் பிரதிநிதிகளாகவும் தம்மை கருதிக் கொள்கின்றன,” என்று ட்ரம்பின் முன்னாள் நிர்வாக அதிகாரி McClatchy, செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் மாநாட்டில், ஜெயர் போல்சோனரோ மற்றும் ட்ரம்ப் இருவரும், ட்ரம்ப் செய்ததைப் போல, “கடவுள், குடும்பம் மற்றும் தேசம்,” ஆகியவை உள்ளிட்ட ஒரு பாசிச வழிபாட்டுக்கு தங்களது ஆதரவை வழங்க உறுதிபூண்டனர். போல்சோனரோ இவ்வாறு அறிவித்தார்: “அரசியல் ரீதியான சரியான அணுகுமுறைகளின் பாலின சிந்தனைக்கும், மற்றும் போலிச் செய்திகளுக்கும் எதிராக, சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வதற்கும், மற்றும் பாரம்பரியத்தையும், குடும்ப வாழ்க்கை முறைகளையும் மதிப்பதற்கும், மேலும் நம்மை படைத்தவரான கடவுளை மதிப்பதற்கும் என பிரேசிலும் அமெரிக்காவும் ஒருபுறத்தில் மேற்கொள்ளும் அவர்களது முயற்சிகளில் ஸ்திரப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

ஒரு சோசலிஸ்ட் சர்வாதிகாரியாக ஜனாதிபதி நிகோலாஸ் மதுரோவை (ஒரு முதலாளித்துவ ஆட்சிக்கு இவர் தலைமை வகிக்கிறார், இவரது வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் காட்டிலும் சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி சாய்ந்து கொண்டிருக்கிறது) பூதாகரப்படுத்தி, வெனிசுவேலாவிற்கு எதிராக இராணுவ சக்தியை பயன்படுத்தவிருப்பதாக இரு தலைவர்களும் அச்சுறுத்தியுள்ளனர்.

வெனிசுவேலாவிற்கு எதிராக “அனைத்து தெரிவுகளும் மேசையின் மீது தயாராக இருக்கின்றன” என்ற மந்திரத்தை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் ஓதுகிறார். இந்நிலையில், வெனிசுவேலாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு தளமாக பிரேசில் மண்ணை பயன்படுத்த அமெரிக்க சிப்பாய்களை அனுமதிக்கிறார்களா என போல்சோனரோ கேட்க்கப்பட்டார். பிரேசிலிய மற்றும் வெனிசுவேலிய இறையாண்மையை அது மீறுவதாகும் என நிராகரிப்பதற்குப் பதிலாக, செயல்பாட்டு இரகசியத்தை பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றியும், ஆச்சரியமூட்டுதலின் உட்கூறு பற்றியும் குறிப்பிட்டு, அதற்கு பதிலிறுக்க மறுத்துவிட்டார்.

ட்ரம்ப் மற்றும் போல்சோனரோ கையொப்பமிடப்பட்ட ஒரு இருதரப்பு ஒப்பந்தம், பிரேசிலின் அல்காண்ட்ரா விண்வெளி ஏவுதளத்தை அமெரிக்கா அதன் செயற்கைகோள்களை ஏவுவதற்கு பயன்படுத்த அனுமதிக்கும். அமெரிக்க பார்வையாளர்களுக்கான விசா தேவைகளை பிரேசில் முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தது. இரண்டு செயல்பாடுகள் பென்டகனின் நடவடிக்கைகளுக்குள் பிரேசிலை ஒருங்கிணைக்கின்றன, அவை குறிப்பாக ஆளில்லா ஏவுகணை போர் நடவடிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நிலைநிறுத்தல் போன்றவையாகும்.

போல்சோனரோ வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யும் முன்பாக, ஒரு நாட்டின் ஜனாதிபதியின் ஒரு அசாதாரண நடவடிக்கையாக, வேர்ஜினியாவில், லாங்லியில் உள்ள மத்திய புலனாய்வு முகமையின் தலைமையகத்திற்கு ஒரு அறிவிக்கப்படாத விஜயத்தை மேற்கொண்டார். அந்த முகமை, சிஐஏ ஆதரவுடைய சதித்திட்டத்தில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு 21 ஆண்டுகால தடையற்ற சித்திரவதை மற்றும் கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மீது வலதுசாரி தீவிரவாதிகளின் உலகளாவிய எழுச்சியின் அழிவுகரமான தாக்கம் பிரேசிலிய இராணுவ சர்வாதிகாரத்தை போல்சோனரோ மகிமைப்படுத்துவதில் தெளிவாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் மாணவர்களையும் சிறையிலடைத்து, சித்திரவதை செய்து, கொலை செய்த ஒரு ஆட்சியை பாராட்டிய ஒரு முன்னாள் இராணுவ அதிகாரிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் இடையில் “பகிரப்பட்ட மதிப்புக்களை” ட்ரம்ப் பாராட்டினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, போல்சோனரோ ஒரு பத்திரிகை செய்தியாளருக்கு, பிரேசிலிய காங்கிரஸை இழுத்து மூடவேண்டும் என்றும், நாட்டை ஒரு உள்நாட்டுப் போர் மூலம் மட்டுமே மாற்ற முடியும், இது "இராணுவ ஆட்சி 30,000 மக்களைக் கொல்லவில்லை மற்றும் கொல்லும் வேலையை" நிறைவு செய்தது” என்றும் கூறினார்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கின் சிதைவு, வர்த்தகப் போர் மற்றும் பூகோள மூலோபாய முரண்பாடுகளின் வளர்ச்சி, மற்றும் அனைத்திற்கும் மேலாக, உலக அளவிலான வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி போன்ற உலக பொருளாதார நெருக்கடியின் தீவிரமடைதலுக்கு பதிலிறுப்பாக சர்வாதிகாரத்திற்கும் பாசிசத்திற்கும் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பிற்கும் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச உணர்வின் எழுச்சிக்கும் முகங்கொடுக்கும் நிலையில், இனவெறி, யூத எதிர்ப்பு மற்றும் “இரத்தமும் மண்ணும்” இணைந்த அரசியல் உட்பட, 20ம் நூற்றாண்டின் அனைத்துவிதமான தத்துவார்த்த மற்றும் அரசியல் இழிவுகளை அவர்கள் புதுப்பித்து வருகின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கிளர்ச்சியை எதிராக கட்டவிழ்த்துவிட, அவர்கள் பாசிசவாதிகளையும் இனவெறியர்களையும் தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்து வருவதுடன், அவர்களை அரசின் இராணுவ, பொலிஸ் அமைப்புக்களில் ஒருங்கிணைத்தும் வருகின்றனர்.

உண்மையில் மாற்றீடு, சோசலிசமா அல்லது சீர்திருத்தவாதமா என்பதல்ல, மாறாக சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்றாகியுள்ளது— அதாவது, பாசிசம் மற்றும் உலகப் போருக்குள் இறங்குவதாகும்.

தொழிலாள வர்க்கத்திற்கு, தீவிரவாத வலதுசாரி மற்றும் பாசிச இயக்கங்களின் வளர்ச்சி முன்வைக்கும் ஆபத்தை குறைத்து மதிப்பிடுவது அரசியல் ரீதியாக குற்றமாகும். ஜேர்மனி, இத்தாலி, ஹங்கேரி, போலந்து, ஆஸ்திரியா, பிரேசில் மற்றும் பல நாடுகளின் அரசாங்கங்களில் ஏற்கனவே தீவிர வலதுசாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவி வருகின்றனர். இந்த அபாயத்தை தோற்கடிப்பதற்கு, வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக அவசியமாகிறது.

20ம் நூற்றாண்டின் முழு வரலாறும், பாசிசம் மற்றும் போரை ஆளும் வர்க்கத்திற்கு முறையீடு செய்வதன் மூலம் தடுக்க முடியாது என்பதை காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கான" பிரிவுகள் எனக் கூறி அதற்கு அடிபணியச் செய்யும் ஒரு "மக்கள் முன்னணி கொள்கை" உதவாதவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாசிசத்தை நிறுத்தவும் புதிய ஏகாதிபத்தியப் போரைத் தடுக்கவும் ஒரே வழி, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும்.