ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

රත්මලාන දුම්රිය කම්කරුවන් වතු කම්කරු සමුලුවට සහයෝගය පල කරයි

இலங்கை இரத்மலானை புகையிரத தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளர் மாநாட்டுக்கு ஆதரவளிக்கின்றனர்

By our correspondents
6 March 2019

“தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகளும் சம்பளம் மற்றும் சமூக உரிமைகளை வெல்வதற்கான முன்நோக்கிய பாதையும்” என்ற தலைப்பில் எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) இணைந்து மார்ச் 17 அன்று ஏற்பாடு செய்துள்ள தோட்டத் தொழிலாளர் மாநாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பாகமாக, சோ.ச.க. உறுப்பினர்கள் மார்ச் 3 அன்று இரத்மலானை புகையிர தொழிலாளர்களை சந்தித்தனர்.

இங்கு தோட்டத் தொழிலாளர் மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பு மட்டுமன்றி மாநாட்டில் பங்குபற்றுவதற்கும் புகையிர ஊழியர்கள் அக்கறை காட்டினர்.

சோ.ச.க. உறுப்பினர்களுடன் கருத்து தெரிவித்த அனைத்து புகையிரத தொழிலாளர்களும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி அக்கறை காட்டியதோடு தொழிற்சங்கங்களின் இழிவான காட்டிக்கொடுப்பைப் பற்றி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் அரசாங்கம் கொடுப்பதாக கூறும் 50 ரூபா அதிகரிப்பு பற்றி கோபத்துடன் பேசிய தொழிலாளர்கள், இந்த அற்ப தொகையைக் கொண்டு என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.

தோட்டப்புறங்களில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுடன் தமது துறை சார்ந்த தொழிற்சங்கங்களது நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பேசிய தொழிலாளர்கள், புகையிரத திணைக்களத்தில் உள்ள நூறுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எந்தவொரு தேவைக்காகவும் போராடுவதில்லை என்றும் தொழிலாளர்களை பிளவுபடுத்தி அரசாங்கங்களின் முகவர்களாக செயற்படுகின்ற விதத்தை கோபத்துடன் சுட்டிக் காட்டினர்.

புகையிர வேலைத் தளத்தில் மேடை புதுப்பிப்பை தனியாருக்கு கொடுத்துள்ளமை, அரசாங்கத்தின் சுற்று நிரூபங்களில் அடங்கியுள்ள வரையறைகளுக்கும் மேலாக வேலைத் தளத்தில் அதிக நேரம் வேலை செய்ய நேர்ந்துள்ளமை போன்ற பிரச்சினைகளைப் பற்றி சகல தொழிற்சங்கங்களும் மௌனமாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறினர். வேலை மணித்தியாலங்கள் சம்பந்தமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற தொழிலாளர் போராட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் செயற்பட்ட விதத்தை தொழிலாளர்கள் விபரித்தனர்.

சில தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து முழுமையாக பிரிந்து இருப்பதாக கூறியதோடு ஏனைய தொழிலாளர்களும் பெயரளவல் மட்டுமே தொழிற்சங்கங்களில் இருப்பதாக கூறினர். சகல தொழிற்சங்கங்களும் “வேண்டாமென்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும்” “அரசியல் கசப்பானதாக ஆகியுள்ளதாகவும்” அநேகமான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

முதலாளித்துவ ஆட்சியாளர்களுடன் கூட்டாக தொழிற்சங்கங்களால் செய்யப்படும் நடவடிக்கைகள் மிக மிக பிற்போக்கானது. ஆனால் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக ஒழுங்கமையாமல் ஒதுங்கி இருந்து பார்த்துக் கொண்டிருந்தால், தாக்குதலை மேலும் மேலும் உக்கிரமாக்குவதற்கு ஆளும் வர்க்கத்திற்கு இடம் கிடைக்கும் என்று சோ.ச.க. பிரச்சாரகர்கள் சுட்டிக் காட்டினர்.

தமது தேவைகளுக்காகப் போராடுவதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான புதிய அமைப்புகளை கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டியது தீர்க்கமானது என தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவங்களை பயன்படுத்திக்கொண்டு சோ.ச.க. உறுப்பினர்கள் கொடுத்த விளக்கத்தின் மூலம் அது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

தமக்கு தொழிலைப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் சார்ந்த கட்யின் தொழிற்சங்கத்தில் இருப்பது பண்பாடானது என நினைப்பதாக ஒரு தொழிலாளி கூறினார். தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள சமூக உரிமை என்பதால், அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி மூலம் தொழில் கிடைத்த காரணத்தால், அதற்கு கடன்பட்டுள்ளதாக ஆகாது என பிரச்சாரகர்கள் சுட்டிக் காட்டினர். அதனால், தமது ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்துகொள்வதற்கான போராட்டத்தை கையில் எடுப்பதற்கு அதை ஒரு தடையாக வைத்துக்கொள்ளக் கூடாது என தெளிவுபடுத்திய பின்னர், அதை அவரும் ஏனைய தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்கள் கட்டியெழுப்பியுள்ள நடவடிக்கை குழு பற்றி விளக்கம் கொடுத்து, புகையிரத வேலைத் தளங்களிலும் தொழிற்சங்கங்களுக்கு வெளியில் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுவை கட்டியெழுப்பிக் கொண்டு, தனியார்மயமாக்கத்திற்கும் தொழிலாளர்களின் ஏனைய கோரிக்கைகளுக்காகவும் போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற யோசனைக்கு தொழிலாளர்களிடம் சாதகமான பிரதிபலிப்பு கிடைத்தது.

அத்தகைய ஒரு ஐக்கியம் செயற்படும் போது தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்திடம் இருந்து எத்தகைய தடை வரக்கூடும் என்பது பற்றி சில தொழிலாளர்கள் கவனம் செலுத்தினர்.

எபோட்சிலி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவின் தலைவர் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் முதலாளிமாரும் சேர்ந்து முயற்சித்தாலும் தொழிலாளர்கள் அதற்கு எதிராக நின்றதன் மூலம் அந்த பிரச்சினைகளை வெற்றிகொள்ள வழி இருப்பதாக சோ.ச.க. உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.

புகையிரத தொழிலாளர்கள் இந்திய-பாகிஸ்தான் யுத்த நிலைமை பற்றி கவனத்தை செலுத்தியிருந்ததோடு அதன் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பற்றியும் பேசினர்.

இரத்மலானை புகையிரத வேலைத் தளத்தின் தொழிலாளியான சுனில் ஹேவகே, அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பது சீனாவுக்கு எதிரான ஒரு ஆத்திரமூட்டல் என்றும், இலங்கையில் இருந்த “இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் உறவுகளைப் பேணியதன் காரணமாக அதை மாற்றுவதற்கு அமெரிக்கா தலையிட்டது” என்பது தெளிவானது என்றும் தெரிவித்தார்.

இந்திய-பாகிஸ்தான் மோதல் அனு ஆயுத யுத்தத்தின் மட்டத்திற்கு வளரக்கூடிய ஆபத்து மற்றும் அதை மூடி மறைத்து நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கம் மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் அரசாங்கமும் இனவாதத்தை தூண்டி விடுகின்ற விதத்தை பற்றி சோ.ச.க. பிரச்சாரகர்கள் கொடுத்த விளக்கத்துடன் உடன்பட்ட அவர், யுத்தம் தெற்காசியவின் வாயிலுக்கே கொண்டு வரப்பட்டிருப்பது தெளிவு எனக் கூறினார்.

மறுபக்கம் முதலாளித்துவ அரசாங்கம் சுரண்டலை உக்கிரமாக்கி, தனியார்மயமாக்கல் வேலைத் திட்டத்தை செயற்படுத்துகின்ற விதம் பற்றி புகையிரத திணைக்களத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ள விதத்தை அவர் விளக்கினார்.

புகையிரதப் பெட்டிகளை திருத்துவதை தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைத்து புகையிரத வேலைத் தளத்தின் நடவடிக்கைகளை தனியார் துறை ஊடாக செய்துகொள்வதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விதத்தை அவர் சோ.ச.க. உறுப்பினர்களிடம் விளக்கினார்: “இரத்மலானை இரயில் வேலைத் தளத்தில் இருந்து பாகங்களை கொடுத்து, பொதுவில் நல்ல நிலைமையில் உள்ள இரயில் பெட்டிகளை திருத்துவதற்கு தனியார்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு பெட்டிக்கு 2 கோடி ரூபா கொடுக்கின்றார்கள். எங்களத் வேலைத் தளத்திற்கு முற்றிலும் வீனாகிப் போன பெட்டிகளே வருகின்றன. அவற்றை திருத்துவதற்கு 35 இலட்சம் செலவாகுவதாகவே கூறப்படுகிறது,” என அவர் கூறினார்.

“இது பற்றி தொழிற்சங்கங்கள் மௌனமாக உள்ளன. இங்குள்ள தொழிற்சங்கங்கள் தோட்டப்புறங்களில் உள்ள தொழிற்சங்கங்களை விட மாறுபட்டவை அல்ல” என கூறிய அவர், தோட்டத் தொழிலாளர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அக்கறை காட்டினார்.

புகையிர வேலைத் தளத்தில் முதிய தொழிலாளியான எம்.டி. பெரேரா, தனது ஊர் மஸ்கெலியாவிற்கு அருகில் இருப்பதால் தோட்டப் புறத்தில் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்கள் ஒரே விதத்தில் சுரண்டப்படுவது தனக்கு நன்கு தெரியும் எனக் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டியதைப் பற்றி பேசிய அவர், “கிடைக்கின்ற ஊதியத்தைப் பொறுத்தளவில் இந்த தொழிலாளர்களுக்கு கோதுமை மாவைத் தவிர வேறு உலகம் கிடையாது. ரொட்டியை மட்டுமே சாப்பிட்டு வேலை செய்கின்றனர். தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களுக்கு ஒரே அளவு ஊதியம்தான் கிடைக்கின்றது. சம்பளப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்” எனக் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் நிலைமைகள் பற்றி அவருடன் கலந்துரையாடப்பட்டது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் இனவாதத்தை தூண்டி விட்டு அந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக இந்த பயங்கரமான போரை தூக்கிப் பிடித்துக்கொண்டுள்ளனர் என்றும், இதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்ட வேண்டும் என்றும் சோ.ச.க. பிரச்சாரகர்கள் சுட்டிக் காட்டினர்.

புகையிர திணைக்களத்துக்குள் சங்கங்கள் மற்றும் இடது என கூறிக்கொள்ளும் கடசிகள் செயற்படுகின்ற முறையை பற்றி தனது கோபத்தை வெளிப்படுத்திய அவர், “எங்களுக்கு அடுத்த பரம்பரையையாவது இதில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்” எனக் கூறி, தோட்டத் தொழிலாளர் மாநாட்டிற்கு வருவதற்கு உள்ள வசதியைப் பற்றி யோசிப்பதாக கூறினார்.


ஆர்.
பி. சமில

அவிஸ்ஸாவலையை வதிவிடமாகக் கொண்ட ஆர். பீ. சமில என்ற புகையிரத ஊழியர், சில தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களை பிரித்து விற்று மிகப் பெரும் இலாபம் பெற்று தோட்டங்களில் தொழில்களை அழிப்பதாக சுட்டிக் காட்டினார். சாலாவ தோட்டக் கம்பனிக்கு சொந்தமான புஸ்ஸல்லாவ தோட்டத்தை அவர் உதாரணமாக காட்டினார்.

புகையிரத ஊழியரின் சகோதரரும் கட்டுமான தொழிலாளியுமான நாமல் பெரேரா, தனது கிராமமான தெற்கில் கடுவன பிரதேசத்தில் 2 முதல் 5 ஏக்கர் வரையான சிறிய தேயிலை தோட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் பெண் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 600-800 ரூபா வரையான ஊதியத்திற்கு சுரண்டப்படுவதாக தெரிவித்தார். “உங்களது போராட்டம் மிகவும் உத்வேகமானது” என அவர் கூறினார்.


நாமல்
பெரேரா

கட்டுமான துறைக்கு இந்தியாவிலும் சீனவிலும் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த புலம்பெயர் தொழிலாளர்கள், 10-12 மணித்தியாலங்கள் வேலை வாங்கப்படுகிறார்கள் என்றார். புலம்பெயர் தொழிலாளர்கள் அவ்வாறு சுரண்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம் எனினும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நாட்டில் வந்து வேலை செய்வதற்கு உள்ள உரிமையை நாங்கள் பாதுகாக்கின்றோம் என சோ.ச.க. பிரச்சாரகர்கள் கூறிய போது, அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஹட்டனில் நடக்கவுள்ள தோட்டத் தொழிலாளர் மாநாட்டில் பங்குபற்ற முயற்சிப்பதாக அவர் கூறினார்.

புகையிர திணைக்களத்தின் இரத்மலானை அலுவலக பெண் ஊழியர்களும் பேசினர். தாங்கள் ஒன்றிணைந்த சேவையைச் சேர்ந்தவர்கள் என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தாம் மிகவும் மோசமாக சுரண்டப்படுவதாகவும் கூறினர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை தம்முடைய போராட்டமாக கருதுவதாக ஒரு பெண் கூறினார்.