ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pompeo visit exposes deepening tensions between Germany and US

பொம்பியோ விஜயம் ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்களை அம்பலப்படுத்துகிறது

By Peter Schwarz
3 June 2019

அமெரிக்க வெளியுறவுச் செயலர் வெள்ளிக்கிழமை பேர்லினுக்கு வருகை தந்தமை கடும் அரசியல் மோதல்களால் மேலாதிக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையில் “ஆழ்ந்த நட்பு” பற்றி ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹேய்கோ மாஸ் இடமிருந்து வந்த சொற்றொடராலோ அல்லது  அமெரிக்கா ஜேர்மனியின் “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே மிக முக்கியமான பங்காளர்” என்ற சான்செலர் அங்கேலா மேர்க்கெலின் வலியுறுத்தலாலோ மறைக்க முடியவில்லை.

இந்த வருகையைச் சுற்றிய சூழ்நிலைமைகள் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எப்படி பதட்டமுள்ளதாகவும் நொருங்கக் கூடியதாகவும் ஆக்கியுள்ளன என்பதைத் தெளிவாக்குகிறது. பேர்லினுக்கு செல்வதற்கு முன்பாகவே ஒரு ஆண்டுக்கும் மேலாக பொம்பியோ பதவியில் இருந்து வருகிறார். அவர் மூன்று வாரங்களுக்கு முன்னர், சிறு அறிவிப்போடு நீண்ட காலமாய் திட்டமிட்ட விஜயத்தை இரத்து செய்து, அதற்குப் பதிலாக பாக்தாத்திற்குப் பறந்தார். அவர் இறுதியில் வெள்ளிக்கிழமை பேர்லினை அடைந்தபொழுது, அவரது விஜயம் வெளியுறவு அமைச்சர் ஹேய்கோ மாஸ் உடன் ஒரு சுருக்கமான சந்திப்பு மற்றும் மேர்க்கெலுடன் 45 நிமிட சந்திப்பு மற்றும் இருவரும் பத்திரிகையாளருடன் சிறிது நேரம் தோன்றல் என குறைக்கப்பட்டது.

பேர்லினுக்கு விஜயமானது சாராம்சத்தில் நீண்டகாலம் நன்கு அறிப்பட்ட வேறுபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களை திரும்பச்செய்யும் நோக்கங்கொண்டது. சமரசம் அல்லது உடன்பாடு பற்றிய எந்த அறிகுறிகளும் அங்கு இல்லை. அவ்வேறுபாடுகள் வர்த்தகம், இராணுவக் கொள்கை மற்றும் வெளிவிவகாரக் கொள்கை நோக்குநிலை தொடர்பான பிரச்சினைகள் முதல் வேறுபாடுகள் இருந்தன.

அமெரிக்காவானது ஐரோப்பாவிலிருந்து கார்கள் இறக்குமதி மீதான சுங்கவரிகளை அமல்படுத்துவதாக அச்சுறுத்தியது, அது ஏற்றுமதியை சார்ந்திருக்கும் ஜேர்மன் பொருளாதாரத்தை மிகவும் அதிகமாகப் பாதித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுங்கவரிகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட்டார், அந்த நேரத்தில் ஐரோப்பியர்கள் தன்னியில்பான ஏற்றுமதி ஒதுக்கீடைத் திணிப்பதை எண்ணிப்பார்ப்பதாக இருந்தது.

அமெரிக்க அரசாங்கமானது பால்ட்டிக் கடல்வழியாக வரும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் வசதி அமைப்பதை, அது கிட்டத்தட்ட முடிந்து விட்டிருந்தாலும் கூட, அதனைத் தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அமெரிக்க எரிசக்தி செயலர் ரிக் பெர்ரி இந்த செயல் திட்டத்தில் பங்கேற்றுள்ள நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய 5G வலைப்பின்னலில் சீன தொழில் நுட்ப நிறுவனமான Huawei-ஐ ஐரோப்பா வலுவாக ஒதுக்குவதற்கு அழுத்தம் கொடுத்தது. அது ஐரோப்பாவை அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளும்.

பொம்பியோ வருகைக்கு ஒரு நாள் முன்னர், சான்செலர் மேர்க்கெல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், அவர் ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாது, தேசியவாத மற்றும் பாதுகாப்புவாத கொள்கையினை விமர்சித்தார்.

ஆனால் பொம்பியோ சலுகைகள் ஏதும் தராமல் இதற்கு சிறிதளவே கவனம் கொடுத்தார். பதிலாக, அவர் ஜேர்மனி அதன் சொந்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவத்திற்கு 2 சதவீதம் செலவழிக்கத் தவறுவதை மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டினார். பேர்லின் அதன் இராணுவ வரவு-செலவு திட்டத்தில் பெரும் அதிகரிப்பைக் கொண்டிருந்த போதிலும் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஈரான் பல்வேறு மோதல்களின் மையத்தில் இருந்தது. ஜேர்மனி பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள் போல், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தோடு நிற்கின்றது. அதில் அமெரிக்கா தன்னிச்சையாக விலகிவிட்டது. மற்றும் அது வாஷிங்டன் தெஹ்ரானுக்கு எதிராகச் செய்யும் கடும் பொருளாதாரத் தடைகளையும் போர் அச்சுறுத்தலையும் எதிர்க்கிறது.

சமீப நாட்களில் அமெரிக்கா 82 மில்லியன் மக்கள் கொண்ட நாட்டுக்கு எதிரான போர்த் தயாரிப்புக்களை குறிப்பிடத்தக்க வகையில் உக்கிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் புதன் கிழமை அன்று அபுதாபியில், ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரையில் நான்கு  எண்ணெய் டேங்கர்கள் “நாசவேலைக்கு” ஆளானதற்கு ஈரானைக் குற்றம் சாட்டினார் மற்றும் சவுதி எண்ணெய்த் துறைமுகமான யான்பும் கூட முன்னர் இனம் தெரியா தாக்குதலுக்கு உள்ளானதையும் குறிப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து “கடும் எதிர்ப்புடன்” அவர் அச்சுறுத்தினார். போல்ட்டனின் படி, பொம்பியோ வரும் வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் குற்றவாளி என்பதற்கான சான்றை முன்வைக்க நோக்கங் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சமீப வாரங்களில், அமெரிக்காவானது அப்பிராந்தியத்திற்கு ஒரு விமானந்தாங்கி கப்பலும் கனரக இறங்கும் கப்பலையும் அனுப்பியுள்ளது, மற்றும் அப்பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட 50,000 துருப்புக்கள் அதிகரிப்புடன் ஈரானைச் சுற்றி மேலும் 1,500 பேரையும் அனுப்பி வைத்துள்ளது. பென்டகன் மேலும் 1,20,000 துருப்புக்களை அப்பிராந்தியத்திற்கு அனுப்ப திட்டங்களைத் தீட்டி உள்ளது. 2003ல் ஈராக் போருக்கு முன்னர் இதே எண்ணிக்கையில்தான் துருப்புக்கள் அனுப்பப்பட்டன.

பொம்பியோ நேட்டோ கூட்டாளிகளை ஓரணியில் திரட்ட ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவர் ஜேர்மனியோடு, நெதர்லாந்து, பிரிட்டன், சுவிட்சர்லாந்துக்கும் விஜயம் செய்தார், அங்கு பில்டர்பேர்க் மாநாட்டிலும் கலந்து கொண்டார். அது வணிகம், அரசியல், ஊடகம், இராணுவம், பல்கலைக்கழகங்கள், பிரசித்தி பெற்றவர்கள் மற்றும் உளவு சேவைகளிலிருந்து தனிநபர்களின் ஒரு இரகசிய கூடலாக இருந்தது.

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பின்பற்றாத ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிறுவனங்களை அமெரிக்க சந்தையிலிருந்து விலக்கப் போவதாக வாஷிங்டன் அச்சுறுத்தி வருகிறது. பேர்லினுக்கு பொம்பியோ வருகைக்கு முன்னர், புளூம்பேர்க் செய்தி நிறுவனம் அமெரிக்க கருவூலத் துறை, INSTEXக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டது. இவ்வமைப்பு அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை கடந்து செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு ஐரோப்பிய இயங்குமுறை ஆகும். இதன்படி, INSTEX, மற்றும் இதோடு தொடர்புடைய எதுவும் அமெரிக்க நிதிய முறையிலிருந்து விலக்கப்படும். பேர்லினில், அணு ஒப்பந்தத்தை பராமரிக்க வேலை செய்து வருகிறது, இது இடையூறு செய்யப்படுவது ஒரு ஆத்திரமூட்டல் ஆகும்.

ஆயினும், அமெரிக்காவின் ஈரானிய கொள்கைக்கு, ஜேர்மனியின் எதிர்ப்பானது, அமைதிவாதத்தோடு அல்லது ஈரானிய மக்களுக்கான மனிதாபிமான அக்கறையோடு ஒன்றும் சம்பந்தப்பட்டது அல்ல, மாறாக, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல், பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைக் குறைத்து மத்திய கிழக்கு மீதான தனது மேலாதிக்கத்தை உத்திரவாதப்படுத்துதற்கான வாஷிங்டனின் உந்துதலை அங்கீகரிப்பதால் இயக்கப்படுகிறது.

ஆகையால் மாஸ் அவரது அமெரிக்க சகாவுக்கு ஒத்துழைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவும் ஜேர்மனியும் ஈரானை நோக்கிய அவர்களது கொள்கைகளில் ஒரே இலக்கைப் பின்பற்றி வந்து கொண்டிருக்கின்றனர் என்று அவர் திரும்பத்திரும்ப பொம்பியோவிடம் கூறினார். ”ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க வேண்டிய தேவையில் நாம் உடன்படுகிறோம்” என்று அவர் கூறினார். இந்த குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகள் மீதாக மட்டுமே வேறுபாடுகள் நிலவுகின்றன என அவர் மேலும் சேர்த்தார்.

ஜேர்மனின் வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுடனான தங்களின் மோதல்களில், ஜேர்மனியும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் சாந்திருப்பதாக  பலதடவை வலியுறுத்தினார். “நாம் அக்கறை கொண்டுள்ள மோதல்களில் பல ஜேர்மன்-அமெரிக்க ஒப்பந்தங்களால் மட்டுமே தீர்க்கப்பட முடியும்” என்று குறிப்பிட்ட அவர், உக்ரேனை அதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். அமெரிக்கா அதன் பிரதான போட்டியாளராக கருதும் சீனாவையும், அது சர்வதேச விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் தாக்கினார்.

2003ல் ஈராக் போர் தொடர்பாக ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஒரு புறமும் அமெரிக்கா மறுபுறமுமாக கடும் வேறுபாடுகள் எழுந்தபோது, உலக சோசலிச வலைத் தளமானது “அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை” என்ற தலைப்பிடப்பட்ட டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்ட கருத்தை வெளியிட்டது. அதில் செய்யப்பட்ட முன்கணிப்புக்கள் மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்பட்டுத்தப்பட்டிருப்பதால், இன்று அந்தக் கட்டுரையை திரும்ப வாசிப்பது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான கூட்டானது வரலாற்று வழமையிலிருந்து புறப்பட்டுச் செல்லலை பிரதிநிதித்துவம் செய்தது என நோர்த் சுட்டிக்காட்டினார். அவர் எழுதினார், “அமெரிக்க முதலாளித்துத்தின் மிகவும் அடிப்படையான போக்கு, ஏறக்குறைய தாமதமாக உருவாகிய ஒரு பிரதான ஏகாதிபத்திய வல்லரசு என்பதில் வேரூன்றி இருந்தது. அது தனது உலக நிலையை ஐரோப்பாவின் செலவில் அதிகரிக்க முனைந்தது.”

அவர் தொடர்ந்தார், “பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நிலைப்பாட்டிலிருந்து, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நடத்தையானது அப்பட்டமாய் விளைவைப்பற்றிக் கவலைப்படாதது ஆகும் என்பதுடன், உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் சட்டரீதியான மற்றும் ஸ்தாபன ரீதியான முழுகட்டமைப்பின் எச்சங்கள் என்னென்ன இருக்கின்றனவோ அவற்றை முற்றிலுமாக முறிவுக்குக் கொண்டு வரும் ஆபத்தை எழுப்புகின்றது.”

“மேற்கு ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆணைகளுக்கு ஒப்புக்கொடுப்பது என்பது, பழமைவாத பிரெஞ்சு நாளிதழான லு பிகாரோ (Le Figaro) வின் வார்த்தைகளில் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சிப்பகுதியினுள்" அமெரிக்காவின் கீழ்நிலைக்கு ஒதுக்கலை ஏற்றுக் கொள்வதாக அர்த்தப்படுத்தும். நோர்த் மேலும் போனார். “ஆனால் பகிரங்கமாக எதிர்ப்பது ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் உள்ளார்ந்த ரீதியாக அழிவுகரமான இராணுவ மோதலின் ஆபத்து நேர்வை எழுப்பும். எந்த மாற்றீடாயினும், அல்லது இரண்டுக்கும் இடையிலான ஏதோ நடுப்பாதை ஆயினும் அது ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலான உறவுகளை ஆழமாக சீர்குலைத்துவிடும். மேலும், அமெரிக்காவிற்கும் "பழைய" ஐரோப்பாவிற்கும் இடையிலான மோதலின் சமூக விளைபயன்கள் உள்நாட்டு வர்க்கப் பதட்டங்களை தவிர்க்க முடியாத வகையில் உக்கிரப்படுத்தும்.”

இன்று இந்த அபிவிருத்திகள் மிக அதிகமாக முன்னேறியுள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் மற்றைய சக்திகள் அமெரிக்காவிற்கு எதிர்ப்பில் மற்றும் அதிலிருந்து சுயாதீனமாக தங்களது பூகோள நலன்களை வன்முறை கொண்டு செயல்படுத்துவதற்கு பரந்த வகையில் மீள ஆயுதமயமாக்கல் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் உட்பிளவுகளால் கிழிந்து கிடக்கின்றது மற்றும் வர்க்கப் பதட்டங்களால் முறிவு நிலையை அடைந்திருக்கின்றன. இந்த நிலைமைகளின் கீழ், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினாலான ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச தாக்குதலால் மட்டுமே இந்தக் கண்டம் மற்றும் முழு உலகமும் ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்குள்ளும் போருக்குள்ளும் தள்ளப்படுவதிலிருந்து தடுக்க முடியும்.