ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

යාපනය විශ්ව විද්‍යාල ශිෂ්‍යයෝ රාජ්‍ය මර්දනයට එරෙහි ව කතා කරති

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ்-அரச ஒடுக்குமுறைக்கு எதிராக பேசுகின்றனர்

By our correspondent
12 June 2019

ஏப்ரல் 21 அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகள் சிலவற்றின் மீது முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய அரசாங்கம் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் பரந்த அதிகாரங்களை வழங்கியது.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதன் பேரில் நாடு பூராவும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்ட பொலிஸ் மற்றும் இராணுவம், பெருந்தொகையான முஸ்லிம்களை கைது செய்தது. அதற்கு சமாந்தரமாக பௌத்த அதிதீவிரவாதிகளையும் குண்டர்களையும் இயக்கி முஸ்லிம்-விரோத வன்முறைகளையும் கிளறிவிட்டது.

இந்த அரச ஒடுக்குமுறையானது முஸ்லிம் மக்கள் மீது மட்டும் கட்டவிழ்த்து விடப்படவில்லை. பல்கலைக்கழகங்களில், வேலைத் தளங்களில், குடியிருப்பு பகுதிகளிலும் பாய்ந்த இராணுவமும் பொலிசும், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய மக்களையும் பீதிக்குள்ளாக்கி மிரட்டத் தொடங்கியது. யுத்த காலத்துக்கு சமமான வகையில், மேற்குறிப்பிட்ட இடங்களிலும் வீதிகளிலும் மீண்டும் பொலிஸ் இராணுவ காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அடக்குமுறைகளின் பாகாமாக மே 3 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், அதன் செயலாளர் மற்றும் அங்கு உணவகம் ஒன்றை நடத்திய ஒப்பந்தகாரரும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் படம் அடங்கிய சுவரொட்டி ஒன்று மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தமையே கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு மறுதினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக செயற்பட்ட பேராசிரியர் இரத்னம் விக்னேஸ்வரனை பதவிநீக்கம் செய்து, ஒரு தற்காலிக துணைவேந்தரை நியமித்துள்ளார். முன்னாள் உப வேந்தரை பதவி நீக்கம் செய்தமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

பல வாரங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சி கண்ட நிலையில், அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்ப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் மீதான வழக்கு இரத்துச் செய்யப்படவில்லை.

மாணவர் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இறுதியாக மாணவர்களின் வழக்குகளை இரத்துச் செய்யும் வரையும் வகுப்புக்களுக்கு செல்வதில்லை என மாணவர்கள் அறிவித்தனர். “மாணவர்களின் கல்விக் காலம் முடிவடைவதற்குள் வழக்கிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று பதில் துணைவேந்தர் வாக்குறுதி கொடுத்ததை அடுத்தே மாணவர்கள் வகுப்புக்குச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்த அடக்குமுறையானது, இனவாத யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்கின்ற இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ், அந்தப் பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட மக்கள் அடிக்கடி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான இந்த புதிய ஒடுக்குமுறைகள், அன்றாடம் போராட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் எதிராக அரசாங்கம் கட்டியெழுப்பி வருகின்ற பொலிஸ்-இராணுவ ஆட்சியினதும் பாகமாகும்.

இலவசக் கல்வியைப் பாதுகாக்க தொடர்ச்சியாக போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்களை, ஒடுக்குவதற்கும் அவர்களைக் கண்காணிக்கவும், பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாத்தல் என்ற பெயரில், அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவ குழுக்களை நிறுத்துவதற்கு தீர்மாணித்துள்ளது. ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்கலைக்ழகங்களில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய மாணவர்கள் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகள் பற்றி விளக்கினர்.

ஒரு முஸ்லீம் குழு நடத்திய பயங்கரவாத தாக்குதலினால் முழு முஸ்லீம் சமூகமுமே ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருப்பதாகவும் எம்.எம். ராசிக் தெரிவித்தார்.

“இதனை நிறுத்த வேண்டும். முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்கள் மீதுமே ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எமது பல்கலைக்கழகமுமே இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளது. மாணவர் ஒன்றியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வழக்குகள் இரத்துச் செய்து அவர்கள் சுத்ந்திரமாக கல்வி கற்பதற்கும் வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு துன்பம் கொடுக்கும் அரசாங்கத்தினை விட மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.”

கலைப்பிரிவு மாணவன் ஏ. ஐன்ஸ்ரின் பல்கலைக்கழக மாணவர்களை இராணுவம் மீண்டும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். “இந்த அரசாங்கம் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளது. இந்ததப் பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்துள்ளார்கள். அதற்காகப் பழிவாங்கவே மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக துணைவேந்தரையும் மாற்றியுள்ளார்கள். ஏன் மாற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. மாணவ தலைவர்கள், இறுதியாண்டு மாணவர்களாக இருக்கின்றபடியினால், அவர்களின் வழக்குகள் வேகமாக இரத்துச் செய்ய வேண்டும். இல்லையானால் அவர்கள் வெளியேறியபின்னர், யாரும் அவர்களைக் கணக்கில் எடுக்கமாட்டார்கள். அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும்போதே, வழக்குகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.”

அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஒடுக்குமுறைக்கு தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் ஒத்துழைப்பதைப் பற்றிய சுட்டிக் காட்டிய அவர், “அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கத்தின் முழு ஒடுக்குமுறைக்கும் ஆதரவளிக்கின்றனர். பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அதனை அவர்கள் ஆதரித்தார்கள். மாணவர்கள் கைது செய்யப்பட்டபோதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்,” என்றார்.

அவசரகால சட்டத்தின் மூலம் மக்களுக்கு இருக்கும் சகல ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும் நசுக்கப்படுவதாக தெரிவித்த எஸ். முஸ்பிரா, “முன்னர் தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது போல், தற்போது குண்டுத் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது” என்றார்.

“எமது பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் காரணத்தினைக் காட்டி பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பல்கைல்கழகத்தினை சுற்றியுள்ள வாயில்களை மூடி ஒரேயொரு பிராதான பாதையை மட்டுமே திறந்துவிட்டுள்ளார்கள். அதனால் நாங்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்து அவர் கூறியதாவது: “நாங்கள் பீதியில் வாழத்தள்ளப்பட்டுள்ளோம், தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் கூடுதலாக இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிகின்றோம். முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் கூட பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தினை ஆதரித்துள்ளார்கள். அரசியல் தலைவர்களை விட சாதாரண மக்களே ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றார்கள்.”

அரசாங்கம் உட்பட ஆளும் வர்க்கத்தின் சகல தரப்பும் பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்கூட்டிய அறிந்திருந்தது என்பது மேலும் மேலும் அம்பலத்துக்கு வந்துள்ள நிலைமையின் கீழ், அரசாங்கம் ஏன் அதை தடுக்கவில்லை என மாணவர்கள் கேட்டனர்.

அபிவிருத்தி அடைந்து வரும் வர்க்கப் போராட்ட அலையை நசுக்குவதற்கு அவசியமான ஒடுக்குமுறை நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக காரணம் தேடிக்கொண்டிருந்த அரசாங்கம், தாக்குதலை நடத்துவதற்கு அனுமதித்து, பின்னர் பயங்கரவாதத்தை ஒடுக்குவதன் பேரில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சுட்டிக்காட்டிய போது, மாணவர்கள் அதை ஆமோதித்தனர்.

ஒரு விஞ்ஞானப் பீட மாணவன் கூறியதாவது: “குண்டு வெடிப்பதை தடுக்காமல் வெடித்த பின்னர், சாதாரண மனிதர்களான எங்களைத் துன்புறுத்துகின்றார்கள். வாசல்களை பூட்டி வைத்துள்ளார்கள். ஒரு வாசல் ஊடாக வரிசையில் நின்று போக வேண்டும். நாங்கள் அடிக்கடி வெளியில் வரவேண்டும். வந்துவிட்டு திரும்பிப் போகும் போதெல்லாம் பாதுகாவலர்கள் எமது பைகளைச் சோதனையிடுகின்றார்கள். அடையாள அட்டை பார்க்கின்றார்கள். யுத்த காலத்தில் கூட இங்கு இவ்வாறு சோதனை நடவடிக்கை நடைபெறவில்லை. குண்டு வெடிப்புக்கு பின்னர் இராணுவம் வீதிக்கு இறங்கியிருப்பது மக்களை ஒடுக்குவதற்கே.”