ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Boris Johnson premiership deepens Brexit crisis and heralds bitter class conflict

போரிஸ் ஜோன்சனின் பிரதம மந்திரி பதவி பிரெக்ஸிட் நெருக்கடியை ஆழப்படுத்துவதுடன், கடுமையான வர்க்க மோதலை முன்னறிவிக்கிறது

By Robert Stevens
24 July 2019

வெளியுறவுத்துறை செயலர் ஜெர்மி ஹன்ட் ஐ பாதிக்குப் பாதி வித்தியாசத்தில் தீர்க்கமாக தோற்கடித்து, செவ்வாயன்று போரிஸ் ஜோன்சன் ஆளும் கட்சியான பழமைவாத கட்சியின் தலைவர் பதவியை வென்றார். தெரேசா மே நாடாளுமன்றத்தில் அவரின் கடைசி பிரதம மந்திரி கேள்வி நேர அமர்வைத் தொடர்ந்து இராஜினாமா செய்ததும், ஜோன்சன் இன்று தெரேசா மேயிடம் இருந்து பிரதம மந்திரி பதவியை ஏற்றுக் கொள்வார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்ற தரப்புக்கு 2016 இல் ஓர் ஆதரவாளராக இருந்த ஜெர்மி ஹன்ட்டை 46,656 க்கு 92,153 என்ற வாக்கு வித்தியாசத்தில் பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் ஜோன்சன் தோற்கடித்தார். மொத்தம் 87 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்த நிலையில் ஜோன்சன் 139,000 டோரி உறுப்பினர்களின் வாக்குகளுடன் 66 சதவீத வாக்குகளை வென்றார். தெரேசா மே போலவே, ஜோன்சனும் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் பிரதம மந்திரியாக ஆகவில்லை, மாறாக வயதான வலதுசாரி டோரி அங்கத்தவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஒரு சிறிய விகிதத்தினரால் ஆக்கப்பட்டிருக்கிறார்.

ஜோன்சன் அவரின் வெற்றி உரையில், "பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவேன், நாட்டை ஒன்றுபடுத்துவேன், [தொழிற்கட்சி தலைவர்] ஜெர்மி கோர்பினைத் தோற்கடிப்பேன்,” என்று பெருமைப்பீற்றிக் கொண்டாலும், அவர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் முன்பில்லாதளவில் டோரிக்கள் ஆழமாக பிளவுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் எனும் எதிர்கட்சிகள் மற்றும் கடுமையாக வெளியேறுவதை (hard-Brexit) ஆதரிக்கும் தெரேசா மேயின் சொந்த கன்னை மற்றும் ஜனநாயக ஒன்றியக் கட்சி (DUP) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த எதிர்ப்பின் முன்னால், ஒருமித்த ஐரோப்பிய சந்தையைத் தொடர்ந்து வரிவிதிப்பின்றி சுதந்திரமாக அணுகும் (tariff-free access to the Single European Market) ஐரோப்பிய ஒன்றியத்துடனான அவரின் உடன்படிக்கையை நாடாளுமன்றம் மூலமாக பெறுவதற்கு தெரேசா மே மூன்று முறை தவறிய பின்னர், கடந்த மாதம் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கான புதிய இறுதிக்கெடுவாக அக்டோபர் 31 ஆம் தேதியை ஐரோப்பிய ஒன்றியம் ஏப்ரலில் அமைத்தது — இப்போதிருந்து வெறும் 100 நாட்களே உள்ளன.

தலைமை அறிவிக்கப்பட இருந்த நிலையில், பைனான்சியல் டைம்ஸ் அறிவிக்கையில், “டோரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால்... ஜோன்சன் பிரெக்ஸிட் க்கு ஒத்துழைக்குமாறும் அவர் பின்னால் ஒன்றிணையுமாறும் அவர் கட்சிக்கு அழைப்பு விடுப்பார் என்றாலும், வெகுசில அமைதிகால பிரதம மந்திரிகள் தான் இதுபோன்ற கடினமான பல அரசியல் சவால்களை முகங்கொடுத்து டவுனிங் வீதியில் நுழைந்துள்ளார்கள்,” என்று குறிப்பிட்டது.

ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே கூட, மேயின் சான்சிலரும் மற்றும் தங்கியிருப்பதை ஆதரிக்கும் ஓர் ஆதரவாளருமான பிலிப் ஹாம்மண்ட், ஓர் உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை அவர் ஆதரிக்கவில்லை என்பதால், இதை செய்வதற்கு ஜோன்சன் அச்சுறுத்தி உள்ள நிலையில், மே உடன் சேர்ந்து இராஜினாமா செய்யவிருப்பதாக உறுதியளித்தார். நீதித்துறை செயலர் டேவிட் கௌவ்க் ஜோன்சனுடன் அவரால் செயல்பட முடியாது என்று அறிவித்து இராஜினாமா செய்தார். கல்வித்துறை அமைச்சர் அன்ன மில்டனும், “ஓர் உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியதிலிருந்து வெளியேறுவது மீது பெரும் கவலைகளை" வெளிப்படுத்தி, அதையே செய்தார். பைனான்சியல் டைம்ஸ் கருத்துப்படி, ஹாம்மான்ட் "உடன்படிக்கை இல்லாமல் வெளியேறுவதை நிறுத்த தீர்மானகரமாக இருக்கும் சுமார் 30 டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு குழுவுக்குத் தலைமை வகிப்பார்: இது புதிய பிரதமராக பதவியேற்க இருப்பவரின் கட்சி மரபுவழியாக பிளவுபட்டிருப்பதற்கான ஓர் அறிகுறி,” என்று குறிப்பிட்டது.

மேயை விட ஜோன்சனுக்கு சூழ்ச்சி கையாளல்களுக்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது. மிகக் குறைந்த நாடாளுமன்ற பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சிக்குத் தலைமையேற்கும் அவர், 10 DUP நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைச் சார்ந்துள்ளார். நாடாளுமன்றத்தில் டோரிக்கள் இப்போது வெறும் மூன்று கூடுதல் ஆசானங்களுடன் பெரும்பான்மையில் உள்ளனர் என்பதோடு, ஆகஸ்ட் 1 இல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தோற்றால் அதுவும் குறைந்துவிடக்கூடும். ஆகவே ஒரு சில வாரங்களிலேயே ஜோன்சன் ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்படலாம்.

ஓர் உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான அவரின் அச்சுறுத்தல்களை, பெருவணிகத்தின் மேலாதிக்க பிரிவுகள் எதிர்க்கின்றன, இவர்கள் மிகத் தெளிவாக ஹன்ட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். 2018 இல் இராஜாங்க கூட்டம் ஒன்றில் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகுவதற்கான பிரச்சினையின் போது, “வணிகத்தை தூக்கி எறியுங்கள்" என்று ஜோன்சன் விடையிறுத்ததை அவர்கள் மறந்துவிடவில்லை.

அனைத்திற்கும் மேலாக, ஜோன்சனை மக்கள் பிரமுகராக சித்தரிப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும், அவரும் அவரின் அரசியல் திட்டநிரல் டோரிக் கட்சியின் செல்வந்த அணிகளுக்கு வெளியே தொலைவில் இருப்பவர்களால் — குறிப்பாக தொழிலாள வர்க்கத்தால் பரந்தளவில் வெறுக்கப்படுகிறது.

மக்கள்தொகையில் குறைந்தபட்சம் பாதிப் பேர் பிரெக்ஸிட்டை எதிர்ப்பதாகவும், ஆதரவாளர்கள் மத்தியிலும் கூட உடன்பாடின்றி வெளியேறுவதால் ஏற்படக்கூடிய நாசகரமான சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் மீது கவலை இருப்பதாகவும் ஊடக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவிற்கான ஒரு வர்த்தக மற்றும் இராணுவ போட்டியாளராக ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரெக்ஸிட் பலவீனப்படுத்தும் என்ற அடித்தளத்தில், ஜோன்சன், ட்ரம்பின் முன்னாள் ஆலோசகரும் பாசிசவாதியுமான ஸ்டீவ் பானன் உள்ளடங்கலாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரின் உள்வட்டாரங்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளார். ஜோன்சன் வெற்றி பெற்ற உடனேயே ட்ரம்ப் தனது ஒப்புதலை ட்வீட் செய்து, “அவர் சிறந்தவராக இருப்பார்!” என்று அறிவித்தார்.

ஆனால் இந்த கூட்டணி, பிரிட்டனுக்கான எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் நிராகரிப்பதென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை மேலும் இறுக்கமாக்க மட்டுமே செய்யும். ஜாக்கோப் ரீஸ்-மொக் தலைமையிலான ஐரோப்பிய ஆய்வுக் குழுவில் உள்ள ஜோன்சனின் ஆதரவாளர்களின் மற்றும் ஜோன்சனின் துணிச்சலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரேசா மே உடன் ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்று மட்டுமே மேசையில் உள்ளது என்ற அதன் வலியுறுத்தலை மாற்ற மறுத்தது.

அனைத்திற்கும் மேலாக, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக வாஷிங்டனின் ஆக்ரோஷமான இராணுவ தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கு போர்களில் பங்கெடுப்பது ஆகியவை, வாஷிங்டன் உடனான அதுபோன்றவொரு கூட்டணிக்கான விலையாக இருக்கும். இது, ஏற்கனவே ஈரானுக்கு எதிரான கப்பற்படை ஆத்திரமூட்டல்களில் பிரிட்டன் வகிக்கும் பாத்திரத்தில் வெளிப்பட்டுள்ளது.

இதற்கும் கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றிய வடக்கு எல்லையில் அதிலேயே தங்கியிருக்கலாம் என்பதற்கு பெருவாரியான ஆதரவு நிலவுகின்ற நிலையில், ஜோன்சனின் கடுமையாக வெளியேறும் (hard-Brexit) நிலைப்பாடு ஸ்காட்லாந்து தேசிய கட்சியைப் பலப்படுத்தும் என்று ஸ்காட்லாந்து டோரிக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், சுதந்திரம் கோருகின்றனர்.

மிகவும் முக்கியமாக, பிரிட்டன் வெளியேறுவதற்கான ஜோன்சனின் அரசியல் திட்டநிரல், பிரிட்டனைக் "கடலின் சிங்கப்பூராக" மாற்றுவதற்காக கூலிகள், இன்றியமையா சேவைகள் மற்றும் தொழில்துறை பாதுகாப்புகள் மீது இன்னும் கூடுதலாக பாரியளவில் சிக்கன நடவடிக்கை தாக்குதல் நடத்துவதற்கு அடித்தளத்தை வழங்குவதாக உள்ளது. வணிகங்கள் குறைவாக வரி செலுத்தும் வகையில் அல்லது வரியே செலுத்தாத வகையில் ஆறு சுதந்திர துறைமுகங்களை உருவாக்குவது மற்றும் வருவாய் ஈட்டுவோரில் உயர்மட்ட 12 சதவீதத்தினர் ஆதாயம் அடையும் விதத்தில் 40 சதவீத வருமான வரி உச்சவரம்பை 50,000 பவுண்டில் இருந்து 80,000 பவுண்ட் ஆக உயர்த்துவது ஆகியவை அவர் பரிந்துள்ள நடவடிக்கைகளில் உள்ளடங்கும். ஆனால் இன்னும் அதிக கடுமையான தாக்குதல்கள் வரவிருக்கின்றன.

குளறுபடியான முன்னுக்குப்பின் முரணாக செயலாற்றுபவராக மிகக் கவனமாக வளர்க்கப்பட்ட ஜோன்சனின் பிம்பத்தை ஊடகங்கள் கடமை உணர்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றன, இது அவரின் மிருகத்தனமான தொழிலாள வர்க்க விரோத திட்டநிரலை மறைக்க சேவையாற்றுகிறது. கறுப்பின மக்களை "நீக்ரோக்கள்" (piccaninnies) என்று விவரித்த இவரின் நண்பர் ஒருவருக்கு, தாக்கப்பட இருந்த பத்திரிகையாளரின் முகவரியைக் கொடுக்கும் இடத்தில் பதிவு செய்யப்பட்டவர் என்பதோடு, 1989 ஹில்ஸ்பாரோஹ் கால்பந்து மைதானத்தில் 96 பேர் உயிரிழந்ததற்குப் பொறுப்பான லிவர்பூல் ரசிகர்களை "குடிகாரர்கள்" என்றும் "முட்டாள்கள்" என்றும் Spectator தலையங்கம் குற்றஞ்சாட்டியதை ஆமோதித்தவர் ஆவார்.

இலண்டன் நகரசபை தலைவராக இருந்தபோது, “உங்கள் வெட்டுக்களின் விளைவாக மக்கள் உயிரிழக்கையில் குற்றவியல் நீதிமன்றத்தில் நீங்கள் பொறுப்பேற்று கொள்வீர்களா?” என்று தீயணைப்பு வீரர்கள் அவரிடன் கேள்வி எழுப்பிய போது, அவர் "இடத்தைவிட்டு வெளியேறு!” என்று பதிலளித்தார். அதற்கடுத்த ஆண்டு, தலைநகரில் தொடர்ந்து 10 தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட்டன, அண்மித்து 600 தீயணைப்பு வீரர்கள் வேலை இழந்தனர். இந்த வெட்டுக்கள் கிரென்ஃபெல் அடுக்குமாடிக் கட்டிட தீவிபத்தில் 72 பேர் உயிரிழப்பதில் முடிந்தது—ஜோன்சனின் கரங்கள் இரத்தத்தில் நனைந்துள்ளன.

இதுபோன்ற ஒருவர், வெறுக்கப்படும் டோரி அரசாங்கத்தின் தலைமையை ஏற்க முடிகிறது என்றால்—2016 இல் இருந்து மூன்றாவது பிரிட்டன் பிரதம மந்திரியாக தலைமை ஏற்க முடிகிறது என்றால், அதற்கான அரசியல் பொறுப்பு ஜெர்மி கோர்பினிடமே உள்ளது.

தொழிற் கட்சியிலிருந்து வலதுசாரிகள் விரட்டப்பட வேண்டும் என்றும் டோரிக்களுக்கு எதிராக அவர் போராட வேண்டும் என்ற அவரின் சொந்த ஆதரவாளர்களின் கோரிக்கைகளையும் நசுக்கி, கோர்பின் ஏறத்தாழ நான்காண்டுகள் தொழிற் கட்சி தலைவராக இருந்துள்ளார். அணுசக்தி முக்கூட்டை ஏற்றுக் கொண்டமை, நேட்டோ அங்கத்துவத்தை ஏற்றுக் கொண்டமை, சிரியா போர் மீது சுதந்திர வாக்கெடுப்பு அனுமதித்தமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டாய மறுபரிசீலிப்பை எதிர்த்தமை மற்றும் "இடது" யூத-எதிர்ப்புவாதம் கொண்டுள்ளது என்ற வலதுசாரிகளின் அவதூறை இப்போது ஏற்றுக் கொண்டமை மற்றும் வெளியேற்றங்களை வேகப்படுத்த வாக்குறுதி அளித்து வருவது என கோர்பின் ஒன்று மாற்றி ஒன்றாக பின்வாங்கி உள்ளார்.

கட்சி ஒற்றுமையைப் பேணுவதற்கும் மற்றும் பிரதம மந்திரியாக அவரை நம்பலாம் என்று பெருவணிகங்களை நம்ப வைப்பதற்குமான கோர்பினின் விருப்பம், மே உடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் அவர் அமர்ந்ததையும் மற்றும் ஒரு பொது தேர்தலுக்கான கோரிக்கைகளைக் கைவிட்டதையும் கண்டது. இப்போதும் கூட, ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், இந்த புதிய பிரதம மந்திரி மீது தொழிற் கட்சி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வருமா என்று பிபிசி வினவிய ஒரு கேள்விக்கு கோர்பின் தட்டிக்கழிப்புடன் விடையிறுக்கையில், “அது எப்போதென நாங்கள் முடிவெடுப்போம் — அது உங்கள் அனைவருக்கும் ஆர்வமூட்டும் ஆச்சரியமாக இருக்கும்,” என்றார்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முதலாளித்துவ வர்க்கம் முகங்கொடுத்துள்ள மிக மோசமான நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தின் சொந்த நலன்களுக்காக அது தலையிடுவதில் இருந்து தொழிலாள வர்க்கத்தைத் தடுத்து வைத்திருப்பதே கோர்பின் அரசியல் தலைமையின் நிகர விளைவாக உள்ளது. ஆனால் இது மாற வேண்டும், மாறும். ஆளும் வர்க்கத்தினுள், பிரெக்ஸிட் க்கு ஆதரவான மற்றும் பிரெக்ஸிட் க்கு எதிரான கன்னைகள் இரண்டுமே குணாம்சப்படுத்தும் வலதை நோக்கிய சாய்வை எதிர்த்து, ஒரு புதிய மற்றும் உண்மையான சர்வதேசியவாத சோசலிச தலைமையை, அதாவது சோசலிச சமத்துவக் கட்சியை (SEP) கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே போராட முடியும். பிரெக்ஸிட் விவகாரத்தைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக, ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுடன் கூட்டாக சோசலிசத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தொடுக்கப்பட வேண்டும்.