ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

කුරුනෑගල පාසල් ගුරුවරිය සිරගත කිරීම: අධ්‍යාපන කප්පාදුවේ ව්‍යසනකාරී ප්‍රතිඵලයන්හි වගකීම ගුරුවරුන් මත පැටවීමේ ප්‍රයත්නයක්

இலங்கை: குருநாகல் பாடசாலை ஆசிரியை சிறையிலடைப்பு

கல்வி வெட்டின் அழிவுகரமான விளைவுகளின் பொறுப்பை ஆசிரியர்கள் மீது சுமத்தும் முயற்சி

By Kapila Fernando 
29 April 2019

கடந்த பெப்ரவரி 1 அன்று, குருநாகல் மேல் நீதிமன்றம், அப்பிரதேசத்தில் உள்ள ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தின் ஆசிரியையான 55 வயது ரம்யா டி சில்வாவுக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2011ம் ஆண்டில் அந்த ஆசிரியை 11 ஆம் வகுப்பில் கல்வி கற்ற சத்துர சிறி லாலித என்ற மாணவரை உடல் ரிதியாக தாக்கினார் என்ற சம்பவம் தொடர்பாக நடை பெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து, இறுதியில் இத் தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியை தற்சமயம் வாரியப்பொல சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி ஆசிரியர் சங்கம் சில நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருப்பினும், ஆசிரியைக்கு பிணை கூட வழங்கப்படவில்லை. இதனால் முப்பது வருட கால சேவைக்காலம் கொண்ட இந்த ஆசிரியையின் சம்பளம், ஓய்வூதியம் என்பன அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

தாக்குதலுக்குள்ளான மாணவரது வைத்திய பரிசீலனை அறிக்கைப் படி அவரது காதுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எவ்வாறயினும் உலக சோசலிச வலைத் தளத்துடன் கருத்து தெரிவித்த ஆசிரியையின் உறவினர்கள் இந்த தாக்குதல் பற்றிய சம்பவத்தை நிராகரித்தனர். அன்றய தினத்தில் அந்த மாணவர் பாடசாலைக்கு வெளியே முற்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் நடத்திய மோதுதலில் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பெப்ரவரி 26 அன்று மாணவரது தாயார் கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், பாடசாலை தவணைப் பரீட்சை நடந்தபோதே ஆசிரியை தாக்கியுள்ளதாகவும் ஆசிரியைக்கு எதிராக வழக்கு தொடுத்த காரணத்தால் பல வருடங்களாக சமூகத்தில் அவமதிப்புக்குள்ளாக நேர்ந்ததாகவும் கூறினார். ஆசிரியை சிறைத் தண்டனைக்கு உள்ளாகியதையிட்டு தனது மகன் வருத்தப்படுவதாக மேலும் குறிப்பிட்ட அவர் “கல்வித் திணைக்கள அதிகாரிகள் இந்த நிலைமைக்கு பொறுப்பு கூறவேண்டும். ஆசிரியர்களுக்கு மாணவருடன் செயலாற்ற உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும்,“ என அவர் தெரிவித்தார்.

கடந்த பல தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்களால் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெட்டுக்களின் காரணத்தால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிகழ்ந்த அத்தகைய ஆசிரியர் பயிற்சி நெறிகள் கூட வெட்டுக்குள்ளாகின. எவ்வாறாயினும், கல்வி வெட்டும், பொதுவாக முதலாளித்துவ சமூகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆசிரியர்கள் மத்தியிலும், அவர்களைப் பேன்று மாணவர்கள் இடையேயும் அபிவிருத்தியுற்ற முன்னொருபோதும் இல்லாத உளவியல் ரீதியான குழப்பங்களே இவ்வாறான சம்பவங்களுக்கான அடிப்படை காரணமாக இருப்பதைக் காணலாம்.

கல்வி வெட்டின் விளைவாக, பாடசாலைகளிடையே சமத்துவமின்மை மென்மேலும் அதிகரித்துள்ளது. பொதுவாக பார்ப்பின் வசதியுள்ள பெரும் “பிரபல பாடசாலைகள்“ என்ற பெயரிலான பாடசாலைகள், குறிப்பாக கடந்த சில தசாப்தங்களாக அபிவிருத்தியுற்றுள்ளன. இந்த பிரபல பாடசாலைகளில் மாணவர் நெருக்கமல் அதிகரித்துள்ள அதேவேளை, ஏனைய பாடசாலைகளுக்கு மாணவர்கள் சேராத நிலைமை உருவாகியுள்ளது.

கல்வி அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் நாடெங்குமுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 10,194 ஆக விளங்குவதுடன், 2019 இல் முதலாண்டுக்காக மாணவர் சேர்க்கப்படுவதறகாக விண்ணப்பிக்கப்படாத 433 பாடசாலைகள் உள்ளன. விண்ணப்பங்கள் 5 இற்கும் குறைவாக கிடைத்த 1,100 பாடசாலைகளும், 10 விண்ணப்பங்களுக்கு குறைவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்ட 2,330 பாடசாலைகளும் அவற்றுள் அடங்கும். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் கொண்ட காரணத்தால் இவை மூடப்பட்டும், மூடுவதற்காக கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.

விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களுக்காக உயர்தரப் பரீட்சையில் தேறுவதற்கான வாய்ப்புள்ள பாடசாலைகள் 1,029 மட்டுமே நாடெங்கிலும் உள்ளன. ஏதாவது ஒரு பாடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் வசதியுள்ள பாடசாலைகள் 2,847 மட்டுமே உள்ளன. இது முழுப் பாடசாலைகளில் 27.7 சதவீதமாக உள்ளதுடன், முழு மாணவர் எண்ணிக்கையில் 60 சதவீதத்தினர் கல்வி கற்பது இப் பாடசாலைகளிலே ஆகும்.

இப்பாரிய சமத்துவமின்மையின் பிரதி விளைவாக மேற்குறித்த பிரபல பாடசாலைகளில் ஒரு வகுப்பில் ஆகக் கூடியது 25 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டிய நியதிப்படி பார்ப்பின், அநேகமான பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். இக்காரணத்தால் கல்வி போதித்தல் என்பது மிகவும் சிரமமான காரியமாக காணப்படுகின்றது.

இச்சம்பவம் நடந்த ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயம் இதற்கான தக்க உதாரணமாக விளங்குகிறது. அது பிரபல பாடசாலைகளில் ஒன்றாகும் தற்போது அதன் முழு மாணவர் எண்ணிக்கை 5,000 இற்கும் மேற்பட்டுள்ளதுடன் 100 வகுப்புக்கள் வரை உள்ளன. அதன் முழு ஆசிரியர் எண்ணிக்கை 200 பேர் வரையிலாகும். இதற்கு மேலாக துரிதமடைந்து வரும் பரீட்சைப் போட்டி, ஆசிரியருக்கு ஒப்படைக்கப்பட்ட நேர சூசிகை வாராந்த அறிக்கை தயாரிப்பு, தகுதிக்காண் அறிக்கை போன்ற முடிவுறாத எழுத்து வேலைகளுக்கும் மத்தியில், ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிக பரபரப்பான சூழலில் பழகவேண்டியுள்ள நிலை காணப்படுகின்றது.

கல்வி வெட்டினால் பாடசாலைகளில் நிலவும் உதவி ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணத்தால், பரீட்சை தகுதிக்கான அறிக்கை தயாரித்தல் வகுப்பு அறிக்கை தயாரிப்பு, பாடசாலை அபிவிருத்தி முகாமைத்துவம், சீர்திருத்த குழுக்களின் வேலைகளில் பங்கு பற்ற வேண்டியிருப்பதுடன், பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணி ஆகிய, கற்பித்தல் நெறிக்கு அப்பால் பட்ட நடவடிக்கைகளிலும் ஆசிரியர்கள் பங்குபற்ற வேண்டிய நிர்ப்பந்த நிலமை காணப்படுகின்றது.

மாணவர்கள் எதிர் கொண்டுள்ள ஒடுக்குமுறை நிலமைகளின் காரணத்தல், மாணவர்களிடையே அபிவிருத்தியுறும் அதிருப்தியும், குழப்பகரமான நிலமைகளின் மத்தியில், அவர்களை ”நன்னடத்தைப்படுத்தும்” பெயரில் கடுமையான அடக்கு முறைக்கு கீழ்ப்படுத்துவதற்காக, மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கி, அவர்களுக்கு “கப்டன்“ மேஜர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டன. கொத்தலாவல மகாவித்தியாலயத்தில் முன்னாள் அதிபர் சமன் இந்திர ரத்ன, அத்தகைய பயிற்சி பெற்று இராணுவ பதவி வழங்கப்பட்டவராவார்.

2014 இல் அப்பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் வெனுஷா இமந்தி என்ற மாணவியை, ஒரு பொதுக் கூட்டத்தில் சமன் இந்திர ரத்ன பாரதுரமாக திட்டியதன் காரணத்தால், அம்மாணவி தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தனது பிள்ளை தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு நிலையத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட வழக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு சாதாரண நடவடிக்கை கூட அவ் வழக்கினால் நிறைவேற்றப்படவில்லை எனவும் அம்மாணவியின் தாயார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண புத்தளம் பிரதேசத்தின் சிலாபம் நகரில் உள்ள ஆனந்த தேசிய கல்லுரியில், 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு, ஆசிரியரால் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று, தற்சமயம் சிலாபம் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்த பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் மட்டும் 300 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 6 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 50 மாணவர்கள் வரை கல்வி பயில்வதுடன் வகுப்பறைகளுக்கு வெளியேயும் ஆசிரியர்கள் சேவையாற்ற வேண்டியுள்ளது.

மறுபுறத்தில் அரச சேவையில் குறைந்த மட்ட சம்பளம் பெறும் பிரிவில் இவ்வாசிரியர்கள் உள்ளனர். ஒரு ஆசிரியரது சாதாரண அடிப்படை சம்பளம் 28,000 ரூபாய்களாகும். சில கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு 35,000 ரூபாய் வரை வழங்கப்படும். 20 வருட கால சேவை வழங்கிய ஆசிரியர் கூட 45,000 ரூபாவை மட்டுமே சம்பளமாக பெறுவார். பெற்ற கடன்களுக்காக மாத தவணைப் பணம் அறவிடப்பட்டபின் கையில் கிடைப்பது அற்ப சொற்ப பணமேயாகும். இந் நிலமையின் கீழ் ஆசிரியர்களுக்கு மேலதிக வகுப்பு உட்பட்ட வேறு தொழில்களிலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இன் நிபந்தனைகளினால் ஆசிரியர்களது உளவியல் மனப்பாங்கு அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. “ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் அடக்குமுறைக்கு தீர்வு ஒன்று இல்லாத பட்சத்தில், சகலவற்றுக்கும் குற்றவாளிகளாக ஆசிரியர்களை சாடுதல் முற்றிலும் தவறானதாகும்” என்று எமது நிருபர்களுடன் பேசிய குற்றச்சாட்டுக்கு உள்ளான சிலாபம் ஆனந்த கல்லுரி ஆசிரியர் தெரிவித்தார்.

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் பாரிய வெட்டு, பிரதானமாக முதலாளித்துவத்தின் வரலாற்று ரிதியான நெருக்கடியின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள பாரிய சமூக நெருக்கடி, பொதுவாக ஆசிரியர் மாணவரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலமைக்கும் முக்கிய காரணமாக விளங்கும் நிலமையின் கீழ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எழும் மோதல் சம்பவங்களின் போது, ஆசிரியரை தண்டிப்பதானது அம்மோதலின் அடிவேராக உள்ள விடையத்தை மூடி மறைத்து, உண்மைக் குற்றவாளியான முதலாளித்துவ ஆட்சியாளரையும் முதலாளித்துவ அமைப்பையும் பேணும் நடவடிக்கையே ஆகும்.

இந் நிலமைகளின் மத்தியில், “நடத்தை பேணும் ஆசிரியரை தண்டிப்பதை நிறுத்து” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோருவதானது, முற்றிலும் பிற்போக்கானதாகும். “நடத்தை பேணல்” என்பதன் கீழ் மாணவருக்கு உடல்ரீதியாக தண்டனை வழங்குவதை நியாயப்படுத்தும் இக் கோரிக்கை, நடத்தை பற்றிய பிரச்சினை உயர்ந்துள்ளமைக்கு கல்வி வெட்டினதும், சமூக நெருக்கடியினதும் விளைவே காரணம் என்பதை மூடி மறைப்பதாகும்.

பெப்ரவரி 26 அன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்ராலின், மாணவருக்கு உடல்ரீதியாக தாக்குதல் தண்டனைகளை கொடுப்பதை தடுக்க “தகுந்த உத்தி” ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளமை, ஆசிரியர்களை வேட்டையாட அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மேன்மேலும் வழியமைத்து கொடுப்பதை மட்டுமே செய்யும்.

இந்த வழக்கு தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்க அதிகாரத்துவம் விடுக்கும் அறிக்கையிலும் எந்தவொரு முற்போக்கான தன்மையுமே கிடையாது. முதாளித்துவ ஊடகங்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரிய–அதிபர்களும் தொழிற்சங்கங்களது உதவியுடன் பாடசாலை கல்வி முறைக்குள் நிலவும் பாரிய வெட்டினால் ஏற்பட்டுள்ள அழிவுகளை மூடி மறைக்கவே இவை பயன்படும்.