ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

කලාවේ සහ ප්‍රකාශනයේ නිදහස ආරක්ෂා කිරීමේ ක්‍රියාකාරී කමිටුව

கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழு

By Socialist Equality Party and International Youth and Students for Social Equality (Sri Lanka)
5 August 2019

பௌத்த தீவிரவாத குழுக்களின் போலிப் புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சக்திக சத்குமாரா சிறைவைக்கப்பட்டுள்ளமை மற்றும் மேலும் பல எழுத்தாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்துவதானது, இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு எதிரான தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் ஆகும்.

“எழுத்தாளர் சக்திக சத்குமாரா மற்றும் கலையின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் விடுக்கப்பட்ட அந்த அழைப்புக்கு ஆதரவாக கலைஞர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட ஜனநாயக உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு கொண்ட பலர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அறிக்கைகளை வழங்கி வருகிறார்கள். அதே போல் அவர்கள் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவைக் கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியுடன் (சோ.ச.க.) கலந்துரையாடி வருகின்றனர்.

9 ஆகஸ்ட் 2019 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு கொழும்பு என். எம். பெரேரா நிலையத்தில் இந்த நடவடிக்கை குழுவை ஸ்தாபிப்பதற்காக சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ISSE) அமைப்பும் பகிரங்க கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன. அதில் கலந்துகொள்ளுமாறு கலைஞர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.

நாங்கள் இந்த நடவடிக்கைக் குழுவை அமைக்கும் போது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவால் 20 ஜூன் 2019 அன்று வெளியிடப்பட்ட “ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக! அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக! " என்ற அறிக்கையை அடித்தளமாக கொள்கின்றோம்.

அந்த அறிக்கையின்படி, “பேச்சு சுதந்திரம் மற்றும் உண்மையை பாதுகாப்பதிலும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை தீங்குகளான சுரண்டல், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக போராடுவதிலும் ஜூலியன் அசான்ஜின் வழக்கு இருபத்தோராம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான போர்க்களமாகும்.” எழுத்தாளர் சக்திக சத்குமாரவினதும் கலையினதும் மற்றும் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாப்பது சம்பந்தான விடயம் ஜூலியன் அசான்ஜின் விடுதலைக்கான போராட்டத்துன் இரண்டற பிணைந்துள்ளது.

இந்த அறிக்கையில், இத்தகைய நடவடிக்கைக் குழுக்களின் குணாம்சம் பற்றி பின்வருமாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது: “ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்புக்கு கோட்பாட்டுரீதியில் பொறுப்பேற்கும் அடிப்படையில், இந்த வரலாற்று போராட்டத்தில் முற்போக்கான, சோசலிச மற்றும் இடதுசாரி தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் ஒத்துழைப்பைக் கோருகிறோம். இந்த குழுவில் இணைபவர்கள் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுக்கும் அரசியல் கண்ணோட்டங்கள் மற்றும் வேலைதிட்டங்களின் அனைத்து அம்சங்களுடனும் உடன்பட வேண்டும் என்பது அவசியமும் இல்லை அல்லது நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த முக்கிய பாதுகாப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களிடையே —கண்டிப்பாக அரசியல் வலது நிலைப்பாடு கொண்டவர்களைத் தவிர— பரந்த பலதரப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். இக்குழுவில் இணைபவர்கள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு நிபந்தனையின்றி பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்பதையும்,ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கின் விடுதலை ஒரு பாரிய மக்கள் இயக்கத்தைச் சார்ந்திருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் மட்டுமே நாங்கள் கோருகிறோம்.”

எழுத்தாளர் சத்குமாராவை கலையை மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டதை வெல்வதற்கு சாத்தியமான ஒரே அணுகுமுறை, சர்வதேசியவாத முன்நோக்கு மற்றும் ஜனநாயக ரீதியிலான கட்டமைப்புடனான ஒரு நடவடிக்கை குழுவை ஸ்தாபிப்பதே ஆகும்.

அதைக் கட்டியெழுப்புவதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் பங்குபற்றுமாறு கலைஞர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

சக்திக சத்குமாராவை விடுதலை செய்!

சத்குமாரா மற்றும் ஏனைய கலைஞர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை இரத்துச் செய்!

கலை சுதந்திரத்தை பாதுகாத்திடு!

ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை இரத்துசெய்!

அவசரகால சட்டத்தை அகற்று!

கூட்டம்: 9 ஆகஸ்ட் 2019

நேரம் - மாலை 3 மணி

இடம் - என்.எம் பெரேரா நிலையம், கொடா ரோட், பொரளை.