World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Castroism and the politics of petty-bourgeois nationalism

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளி்த்துவ தேசியவாத அரசியலும்

A lecture by Bill Vann

Use this version to print

இந்த விரிவுரை, ஜனவரி 7 1998 ல் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் (அவுஸ்திரேலியா) ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கோடை பாடசாலையில் வளங்கப்பட்டதாகும்.

Bill Vann உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் ஆவார். அவர் யுத்தத்திற்கு பின்னரான இலத்தின் அமெரிக்க, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்கள் பற்றிய குறிப்பிடும் படியான விமர்சன படைப்புகளை எழுதியுள்ளார்.

இந்த விரிவுரையின் முதல் பகுதியை இங்கே பிரசுரிக்கிறோம். இரண்டாம் பகுதி அடுத்தவாரம் பிரசுரிக்கப்படும்.

பகுதி-1

இந்த சொற்பொழிவின் கருப்பொருள், சீனாவிலும் இந்தியாவிலும் தேசிய போராட்டங்களின் மூலோபாய வளர்ச்சி பற்றிய படிப்பினைகளும் நிரந்தரப் புரட்சியும் என்பது பற்றி தோழர் விஜேயால் இன்று காலை வழங்கப்பட்ட சொற்பொழிவில் எழுப்பப்பட்ட விஷயங்களுடன் மிகவும் தொடர்புடையதாகும். மேலும் இருபதாம் நூற்றாண்டின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவை வளர்த்தெடுப்பது பற்றியும் மார்க்சிச தலைமையாலும் முன்னோக்காலும் ஆற்றப்படும் தீர்க்கமான பாத்திரம் பற்றியும் இந்த பள்ளியில் தொடக்கத்திலிருந்து முன் வைக்கப்பட்ட அத்தியாவசிய பிரச்சினைகளுக்கும் காஸ்ரோயிசம் பற்றிய ஆய்வுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

காஸ்ட்ரோயிசம் ஆழமான குழப்பத்தின் கருப்பொருளாக இருந்து வருகிறது. நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய பப்லோவாத திருத்தல்வாதப் போக்கினால் உண்டு பண்ணப்பட்ட இக்குழப்பம் கொஞ்சநஞ்சமல்ல! தொழிலாள வர்க்கம் தன்னின் நனவு பூர்வமான பங்களிப்பு இன்றி சோசலிச புரட்சியை நிறைவேற்ற முடியும், ஒரு தொழிலாளர் அரசை ஏற்படுத்த முடியும் என்று உறுதிப்படுத்தும் காஸ்ட்ரோயிசத்தை சோசலிசத்துக்கான புதிய பாதை என அவர்கள் முன்வைத்தனர்; அவர்களுள் சிலர் இன்றும் முன்வைக்கின்றனர்.

அமெரிக்காவில் ஜோசப் ஹான்சனாலும் ஐரோப்பாவில் ஏர்னஸ்ட் மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட பப்லோவாத திருத்தல் வாதிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்கான போராட்டத்தைக் கைவிட்டதுடன், பின்தங்கிய நாடுகளில் பாட்டாளிவர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகளை குட்டி முதலாளித்துவ தேசிய வாதிகளிடம் விட்டுக் கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் செய்ததன் மூலம் இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியின் தொழிலாளவர்க்கம் மிகவும் பயங்கரமான தோல்விகளால் பாதிக்கப்படுவதற்கு தயார் செய்து உதவினார்கள்.

இந்த முன்னோக்கிற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு விட்டுக்கொடுக்காத போராட்டத்தைத் தொடுத்தது. அதன்மூலம் கடந்த காலகட்டம் முழுவதும் மார்க்சிசத்தால் அடித்து, உருவாக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் ஆயுதங்களை வளர்த்தெடுக்கவும் பாதுகாக்கவும் செய்தது. மார்க்சிஸ்டுகளின் பணிகளுடன் தொடர்புடைய மிக அத்தியாவசியப் பிரச்சனைகள் இந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.

மார்க்சிசத்தை வெறுமனே கண்டுபிடிப்பதற்கான, விவரிப்பதற்கான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத புறநிலை நிகழ்வுப்போக்குகள் என்று கூறப்படுவனவற்றுக்கு தங்களை அனுசரித்துக்கொள்ளச் செய்வதற்கான வழிமுறைகளாக பார்த்தோருக்கு எதிராக எமது இயக்கம் போராடியது. இந்த தடுத்து நிறுத்த முடியாத புறநிலை நிகழ்வுப் போக்குகள் என்று கூறப்படுபவை ஏனைய தொழிலாள வர்க்கமல்லாத சக்திகளை சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு தலைமை வகிக்க நிர்ப்பந்தித்தன. அதிகாரத்துவங்களும் குட்டி முதலாளித்துவத் தலைமைகளும் பலமானவர்களாக இருந்தாலும் அல்லது பிரபலமானவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான ஈவிரக்கமற்ற போராட்டத்தில் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதில்தான் சோசலிசத்திற்கான பாதை அமைந்திருக்கிறது என்ற முன்னோக்கை எமது இயக்கம் பாதுகாத்தது.

35 ஆண்டுகளுக்குப் பின்னர் காஸ்ட்ரோயிசத்தை கவனிக்கையில், இந்த விவாதத்தில் யார் சரியாக இருந்தது என்று கேட்க கடப்பாடுடையவர்களாக இருக்கிறோம். காஸ்ட்ரோயிசம் சோசலிசத்துக்கு புதிய பாதையை வழங்கியதா? அல்லது அது முட்டுச்சந்தாக மாறி, தொழிலாள வர்க்கத்திற்கு பொறிக்கிடங்காக ஆனதா? தொழிலாளவர்க்கத்தின் பாத்திரத்தையும் அதனது நனவுப்பூர்வமான புரட்சிகர முன்னணியின் பாத்திரத்தையும் பப்லோவாதிகள் துறந்துவிட்டதின் விளைபயன்கள் என்னவாக இருந்தன? தொழிலாளவர்க்க இயக்கத்துக்கான இந்த மூலோபாய அனுபவத்தினையும் அதன் படிப்பினைகளையும் மீள்பார்வை செய்வதற்கான வாய்ப்பினை இந்த சொற்பொழிவில் நாம் எடுத்துக் கொள்வோம்.

1. ``சே``யின் புத்துயிர்ப்பு

நமது ஆய்வை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான இடம், காஸ்ட்ரோயிசத்துடன் இனம் காட்டப்படும், கொரில்லாயுத்த முன்னோக்கின் நடைமுறையாளரும் மிக முக்கியமான எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த எர்னஸ்டோ சேகுவாரா மரணிக்கப்பட்ட முப்பதாம் ஆண்டு நினைவை குறிக்கும் அண்மைய விழா ஆகும். அண்மைய மாதங்களில் ஆர்ஜண்டினாவில் பிறந்த கொரில்லா சேயை, அவருடைய மோசமான ஆவியுருவிலும்கூட எண்ணிப்பார்க்க முடியாத வகையிலான புத்துயிர்ப்பைக் கண்டோம். சே அவரது தீவிரத்திற்குப் பெயர்பெற்றதுடன், முன்னுக்குப்பின் முரணாகத் தெரிகிறவாறு வியாபாரமாக்கலின் பொருள் ஆகியிருந்தார். அவரது உருவம் (image) கூட ஒரு பண்டமாக மாற்றப்பட்டிருந்தது. சுவிஸ் கடிகாரத் தயாரிப்பாளர் ஸ்வாட்ச், ``புரட்சி`` என்னும் மாதிரி (model) ஒன்றை கொரில்லா முகத்தோற்றத்துடன் கொண்டு வந்தார். அவரது முகம் விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமின்றி சி.டி. உறைகளை அழகுபடுத்தவும் பீர் விற்பனை செய்வதற்கும் கூட பயன்படுத்தப்பட்டது.

ஆர்ஜன்டினாவில் சர்வதேச நாணய நிதியத்தை தழுவிக் கொண்டதற்காக வாஷிங்டனின் விருப்பத்திற்குரிய வரும் பாரசீக வளைகுடா யுத்தத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தவருமான கார்லோஸ் மெனெம் அரசாங்கமும் கூட, `சே` ஒரு ``மகத்தான ஆர்ஜன்டினியன்`` என்று கெளரவித்து நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

காஸ்ட்ரோ ஆட்சியும் கூட இவ்வித நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அது அண்மையில், சேகுவாராவின் உடலில் எஞ்சியவற்றை பொலிவியாவிலிருந்து திரும்பக் கொண்டு வந்தது. பகட்டு ஆரவாரத்துடனும் சூழ்நிலைகளுடனும் அவற்றை கியூபாவுக்குள் மீண்டும் கொண்டு வந்தது. கியூப அரசாங்கம் வெளிநாட்டு முன்னாள் தீவிரவாதிகளுக்காக `சே` சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தது. சே டிஷர்ட்டுக்களையும் சிறு அணிகளையும் சந்தைப்படுத்தி, நெருக்கடிக்கு ஆளான கியூப பொருளாதாரத்திற்கான மதிப்பு மிக்க பணத்திற்கு புதிய வளத்தை வழங்கியது.

அந்த அளவு உணர்வுக்கு ஆளாக்குபவராய் ஆக்கி ``சே``யை லாபகரமான திருவுருவம் ஆக்கியபோதும், தீங்கற்றதாக மாற்றம் செய்தது எது? அது அவரின் புகழ் பாடுபவர்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. துணிச்சல், சுயதியாகம், ஒதுங்கிய துறவு வாழ்வு மற்றும் அவரது வாழ்க்கையை இலட்சியத்திற்காக அர்ப்பணித்தவைகளாகும். இவை அனைத்தும் போற்றத்தக்க பண்புக் கூறுகளாக இருக்கலாம். மனிதனின் மதிப்பு அவரது மூலக்கொள்கைகளால் தீர்மானிக்கப்பட்ட நிலவும் சமூக அறிவியலுக்கு முற்றிலும் மாறானதை அவர்கள் முன்வைத்தனர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த பண்புகள் அவற்றை வெளிக்காட்டுவோரின் அரசியல் மற்றும் வர்க்க குணாம்சத்திற்கு எவ்விதத்திலும் குறிகாட்டிகளாக இல்லை. மதக்குழுக்கள் மற்றும் பாசிச இயக்கங்கள் கூட இத்தகைய பண்புகளைக் கொண்ட தியாகிகளை தங்கள் சொந்தமான, முழுமையான பிற்போக்கு முடிவுகளுக்கான போராட்டத்தில் உருவாக்கியதாக உரிமை கோரமுடியும். சேகுவாராவின் பங்கு பற்றிய கவனமான ஆய்வானது, அவரது அரசியல் கருத்து மார்க்சியத்துடன் ஒன்றும் சம்பந்தமில்லாதது என்பதுடன், அவரை அடையாளம் காட்டும் ஆயுதப் போரட்டம் மற்றும் கெரில்லாயுத்தம் ஒரு சர்வசஞ்சீவி என்பது தொழிலாளவர்க்கத்தின் புரட்சிகர சோசலிசப் போராட்டத்திற்கு அடிப்படை ரீதியாக குரோதமானதாகும்.

``சே``யின் கருத்துப்படிவத்திற்கான அண்மைய புத்துயிர்ப்பிற்கு இடையில், கொரில்லா தலைவரைப் பற்றிய பல்வேறு புதிய வாழ்க்கை வரலாறுகள் காணப்பட்டன. அவற்றுள் மெக்சிகோ ஆசிரியர் ஜோர்ஜ் காஸ்டானிடா (Jorge Castaneda) மற்றும் ஜோன் லீ அண்டர்சன் (John Lee Anderson) எனும் அமெரிக்கர் ஆகியோருடைய நூல்கள், கியூபப்புரட்சி மற்றும் சேகுவாராவின் விதிமுறை இரண்டையும் உள்ளார்ந்து பார்க்கும் பார்வையை வழங்கும், மார்க்சிச அரசியல் ஆய்வினை எந்த விதத்திலும் வழங்கவில்லை. எனினும், இப்புத்தகங்களில் ``சே``யின் பங்கு பற்றிய விவரமான நினைவுத் தொகுப்புகளில் மேம்பட்ட அணுகுமுறையும் அரசியல் முன்னோக்கின் துன்பகரமான முடிவும் தெளிவாக வெளிப்படுகின்றன.

இந்த நிகழ்வுகளின் தொகுப்புக்கிடையில் சேகுவாராவை புரட்சித் தலைவராகவும் தத்துவார்த்த வாதியாகவும் காட்டிக் கொண்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரது எடுத்துக்காட்டையும் கருத்துருக்களையும் அர்த்தமுள்ள முன்னோக்காக தொடர்ந்து வழங்குவதற்கு, பல்வேறுபட்ட குட்டி முதலாளித்துவ இடது போக்குகளின் புதுப்பிக்கப்பட்ட முயற்சியும் இருந்தது. வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் போலல்லாமல் இந்த குழுக்கள் புதிய பார்வைகளையோ புதிய தகவல்களையோ தருவதில்லை. அவர்கள் நடுத்தரவர்க்க தீவிரவாதத்தின் புகழ்மிக்க நாட்களுக்காக, பழங்கால நாட்டம் பற்றிய நோயுடன் சேகுவாராவின் உண்மையான கண்ணோட்டங்களையும் அவற்றின் அரசியல் விளைவுகளையும் பொய்மைப்படுத்தல் என்று மட்டுமே விவரிக்கக்கூடியதை சேர்த்துக் கொண்டனர்.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சோசலிசத் தொழிலாளர் கட்சி போன்ற சில, கியூப அரசாங்கத்தின் அலுவலக ரீதியான நினைவுகூறலை விமர்சன மற்ற முறையில் எதிரொலிக்கின்றன. இத்தாலியில் பழைய பப்லோவாத அயோக்கியன் லிவியோ மைத்தன் (Livio Maitan) அல்லது ஆர்ஜன்டினாவில் MAS மரோனைட்டுகள் சேகுவாராவை, ஸ்ராலினிசத்துக்கும் காஸ்ட்ரோ ஆட்சிக்கும் ஒருவகை புரட்சிகர பதிலீடாக உருவகித்துக்காட்டுகிறார்கள்.

கியூபப் பிரச்சனை சம்பந்தமான அண்மைய சிறு வெளியீட்டில் மரோனைட்டுகள் `சே`யின் முழக்கமான ``ஒன்று, இரண்டு பல வியட்னாம்கள்`` என்பதைப் புகழ்ந்ததுடன், ``அழிவுகரமான வழிமுறைகளுடனும் கூட, கொரில்லா குவிமையம் வெகுஜன இயக்கத்திலிருந்து தனிமைப்படல், புரட்சிகர தொழிலாளர் கட்சிகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு இவற்றுடனும் அது புரட்சியை சர்வதேச ரீதியாக விரிவுபடுத்தலின் தேவையை வெளிப்படுத்தியது`` என்று கூறுகிறார்கள். எப்படி தேவையான மற்றும் புரட்சிகர முன்னோக்கு அழிவுகரமான முறைகள் மூலம் வெளிப்படுத்தப்பட முடியும்? மரோனைட்டுகள் விளக்கமளிப்பதில் அக்கறை கொள்ளவில்லை. அனைத்து பப்லோவாத பிரிவுகளைப் போல, இந்தப் போக்கும் பெரோனிசம், ஸ்டாலினிசம், கொரில்லாயிசம் போன்ற பல்வேறு சக்திகள் எப்படி சோசலிசத்துக்கான போராட்டத்தை வெளிக்காட்டுகின்றன என்று விளக்க முயல்வதில் பிழைப்பை நடத்தி வருகின்றது.

உண்மையில் மரோனைட்டுகள் ஆரம்பக்காலத்தில் இந்த வெளிப்பாட்டை, காஸ்ட்ரோவால் தூக்கிவீசப்பட்ட கியூப சர்வாதிகாரி பல்ஜென்சியோ பாடிஸ்டாவிடம் (Fulgencio Batista) காணும் மட்டத்திற்குக் கூட சென்றனர். அவரை ``கியூபாவின் பெரோன்`` என்று பிரகடனம் செய்ததுடன், காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தால் விடப்பட்ட பொது வேலை நிறுத்த அழைப்புக்கு கியூபத் தொழிலாள வர்க்கம் செவிமடுக்காததை வரவேற்றனர். இருப்பினும் காஸ்ட்ரோ வெற்றி பெற்றபின்னர், அவர்கள் அவரது படத்தை ஜெனரல் பெரோனின் பக்கத்தில் தங்களது பத்திரிக்கையின் தலைப்பில் போட்டனர்.

மரோனைட்டுகளின் அரசியல் இரசவாதம் (alchemy), சேகுவாராவின் அழிவுகரமான வழிமுறைகள் அரசியல் முன்னோக்கின் நம்பிக்கைக்குரிய வெளிப்பாடுகளாக இருந்தன என்பதுடன் மட்டும் இருக்கவில்லை அல்லது ஒரு வேளை இன்னும் துல்லியமாகச் சொன்னால் எந்த உண்மையான முன்னோக்கும் இன்றி இருந்தது.

மரோனைட்டுகளும் சரி பப்லோவாத போக்குகளின் எந்த பிரிவும் சரி, காஸ்ட்ரோயிசம் மற்றும் குவேராயிசம் பற்றிய வர்க்க ஆய்வைச் செய்யவோ, அவர்களது அரசியல் தோற்றுவாய்களையும் வளர்ச்சியையும் படம் பிடிக்கவோ அல்லது கடந்த ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலம் முழுவதிலுமாக இலத்தின் அமெரிக்காவில் கொரில்லாயிசத்தின் அனுபவத்தின் நிலுவைக் கணக்கையோ வரைய அக்கறை கொள்ளவில்லை.

அந்த விமர்சனத்தின் பணியை, அந்தக் காலக்கட்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காகவும் பொறுப்பெடுத்த போராட்டத்தினை அடித்தளமாக கொண்ட நமது இயக்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.

2. பாட்டாளி வர்க்க சோசலிசம் (எதிர்) குட்டி முதலாளித்துவ தேசியவாதம்

பப்லோவாத திருத்தல் வாதிகள், பொதுவாக நடுத்தர வர்க்க முன்னாள் தீவிரவாதிகள், அத்தகைய அணுகுமுறைக்கு விரோதமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மெக்சிக்கோவின், சியாபாசின் (Chiapas) ஸபாடிஸ்டா (Zapatista) தேசிய விடுதலை இராணுவத்தின் தோற்றம் மற்றும் அதே போன்ற நடவடிக்கைகளுக்காக பாராட்டுப் பெற்ற துபாக் அமாரு புரட்சிகர இயக்கம் லிமாவில் இரண்டாண்டிற்கு முன்பு ஜப்பானிய தூதரகத்தை முற்றுகை செய்திருந்த அந்நடவடிக்கையால் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

நமது இயக்கம் மேலிருந்தவாரியான குவேராயிசத்தின் எழுச்சியையும் ``ஆயுதப் போராட்டத்தின்`` போலி அரசியல் சூத்திரத்தையும் கொண்டாடுவதில் கலந்து கொள்ளவில்லை. அவை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச முயற்சியினை உட்கொண்டிருக்கவில்லை. மாறாக குட்டி முதலாளித்துவ அரசியலைக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து, அத்தகைய கருத்துக்களுக்கு எதிராகப் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறோம்.

தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர தலைமையின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் வழிநடத்தப்படவில்லை. மாறாக இந்த வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை மறுக்கவும் மாணவர்களின் தீவிரமயப்படுத்தப்பட்ட தட்டினரையும் அதைப் போலவே தொழிலாளர் மற்றும் விவசாயிகளையும் சோசலிசத்துக்கான போராட்டத்திலிருந்து திசைதிருப்பவே வழிநடத்தப்படுகின்றனர்.

ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப்புரட்சி தத்துவத்தில் விவரித்தவாறு, சோசலிசப் புரட்சியின் மூலோபாயப் பிரச்சனைகைளை ஒளிரச்செய்ய அவர்கள் சேவை செய்யவில்லை மாறாக இருளில் ஆழ்த்துவதற்கே சேவை செய்தார்கள். ``புரட்சியாளரின் கடமை புரட்சியைச் செய்வதே``, ``ஆயுதப்போராட்டம்`` மற்றும் ``நீண்டகால மக்கள் யுத்தம்`` ஆகியன புரட்சியில் எந்த வர்க்கம் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் மற்றும் தனி ஒரு நாட்டில் நடைபெறும் புரட்சிக்கும் உலகப் புரட்சிக்கும் இடையிலான தொடர்பு என்ன? பின்தங்கிய நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கும் இடையிலான உறவு என்ன? அப்போராட்டத்திற்கும் முன்னேற்றமடைந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? என்பது பற்றியும் விடை தராமல் விடப்படுகின்றன.

அவர்களின் தீவிர வாய்ச்சவடாலுக்குப் பின்னால், இவ்வனைத்து கேள்விகள் தொடர்பாகவும் இவ் இயக்கங்கள் திட்டவட்டமான கருத்துக்களைப் பற்றி நிற்கின்றன.

பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான புரட்சிகர போராட்டத்தை தாக்குவதிலும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டுமொத்தமாக கீழ்ப்படுத்துவதிலும் அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள்.

இந்த அர்த்தத்தில் இந்த இயக்கங்கள் எவ்வளவு தீவிரமானவையாக இருக்கின்றன என்பதல்ல பிரச்சனை. இறுதி ஆய்வில் அவை சோசலிசப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் கடைசி அரண்களுள் ஒன்றாக இருக்கின்றன. `சே`யின் உருவத்தை தனது சொந்த காரணங்களுக்காக முதலாளித்துவம் சுவீகரித்துக் கொண்டிருப்பதுடன் இயலமைதி கொள்வதைப் புரிந்து கொள்ளும் திறவுகோலை வழங்குவது, குட்டி முதலாளித்துவம், தேசியவாதம் மற்றும் கொரில்லாயிசத்தின் இந்த அடிப்படை இயல்புதான்.

ஒருவர் பெருவிய MRTA மற்றும் மெக்சிகன் சபாடிஸ்டாஸ் ஆகியவற்றின் அரசியலை கவனமாக ஆராய்ந்தால், முதலாளித்துவ தேசிய ஆட்சிகளினாலும், இயக்கங்களினாலும் ஏகாதிபத்தியத்திற்கு உலகரீதியாக ஒத்துப்போதலின் பல்வேறுபட்ட விளக்கமாகவே இருக்கின்றன. இதனை தோழர் விஜே அவரது அறிக்கையில் விளக்கியிருக்கிறார். துபாக் அமாரு குழு ஜப்பானிய தூதரகத்தை முற்றுகையிட்டது, பியுஜிமோரி (Fujimori) ஆட்சி மீது செல்வாக்கு செலுத்தி அதன் கொள்கையை மென்மைப்படுத்துவதற்கு ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு அழுத்தம் கொடுக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது. அதன் இறுதி குறிக்கோளாக பிணைக்கைதிகளாய்ப் பிடித்து வைக்கப்பட்ட சிலர் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்கு நிர்ப்பந்தித்தது. அதன் மூலம் அது தன்னை ஆயுதம் தாங்கிய இயக்கத்திலிருந்து சட்டரீதியான குட்டி முதலாளித்துவ அரசியல் கட்சியாக உருமாற்றிக்கொள்ள முடிந்தது.

சபாடிஸ்டாவைப் பொருத்தவரை இந்த இயக்கம் உலகம் முழுவதும் போற்றி வரவேற்கப்பட்டது. ஏனெனில் அது ஆரம்பத்திலிருந்தே எந்தவித புரட்சிகர குறிக்கோள்களையும் கைவிட்டுவிட்டது. மார்கோஸ் துணை கமாண்டரின் வெற்றுக் கோரிக்கைகள் ஜனநாயகமயப்படுத்தல், ஊழலுக்கு முடிவுகட்டல் மற்றும் நாட்டின் பழங்குடி மக்களின் கலாச்சார உரிமை இவற்றுக்காக இருக்கின்றன. இந்த கோரிக்கைகள் குட்டி முதலாளித்துவ இடது மட்டுமல்ல, ஆளும் PRI மற்றும் வலதுசாரி எதிர்க்கட்சியான PAN ஆல் கூட வரவேற்கப்பட முடியும். மார்கோசும் சபாடிஸ்டாக்களும், மெக்சிக்கத் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் விவசாயிகளுக்கும் ஒரு புரட்சிகர பாதையை வழங்குவதற்கு மாறாக, முதலாளித்துவத்துக்குள் அரசியல் கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கான இன்னொரு கருவியாக தங்களை மாற்றிக்கொண்டனர்

3. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பாத்திரம்

இப் பல்வேறுபட்ட இயக்கங்களை குட்டி முதலாளித்துவ தேசிய வாதிகள் என்று நாம் விவரிக்கும் போது நாம் திட்டவட்டமாக எதை அர்த்தப்படுத்துகிறோம்? அது மார்க்சிஸ்டுகள் தங்களின் எதிராளிகள் மீது வெறுமனே வீசும் அடைமொழி அல்ல. அது இவ்வியக்கங்களை பண்பிட்டுக்காட்டும் வர்க்க நலன்கள் மற்றும் வழிமுறைகளின் விஞ்ஞான வரையறையாகும். மார்க்ஸ் 1848 புரட்சியின் அனுபவத்தினை தனக்கு அடிப்படையாகக் கொண்டும், ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்திலும் குட்டி முதலாளிடத்துவ வர்க்கம் சுதந்திரமான தொடர்ச்சியான அரசியலை செயலாற்ற இயலாதது என்று விளக்கியுள்ளனர். தொடர்ச்சியாய் முயற்சிக்காத அதன் தன்மை அதனுடைய சமூக இடைத்தட்டு நிலையின் பிரதிபலிப்பாகும். சமுதாயத்தின் பிரதான இருவர்க்கங்களுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டு சுரண்டுபவர் மற்றும் சுரண்டப்படுவோரிடத்திலிருந்தும் தொடர்ச்சியாக அது தன்னை வேறுபடுத்திக் கொண்டிருக்கும். இந்த வர்க்கங்களுள் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தையோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தையோ பின்பற்றுமாறு அது நிர்பந்திக்கப்படும்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஏகாதிபத்தியம் புதிய சமூகத்தட்டாக இனம் காணப்பட்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியதுடன், அதனைச் சார்ந்திருப்பதற்கும் முன்வந்தது. முன்னேற்றம் அடைந்த நாடுகளில் இது அரசு அதிகாரத்துவங்களில் மற்றும் கார்ப்பொரேட் அலுவலகங்களில் ஊழியராக்கப்பட்டவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நலன்சார் அரசுகளில் சமூகப் பணிகளை நிர்வகிப்பவர்கள் மற்றும் வளர்ந்துவரும் வெகுஜன தொடர்பு சாதனங்களை நடத்துபவர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட நாடுகளில் இதற்கு ஒப்பீட்டளவில் தோன்றிய தட்டினரிடம் தான், ஏகாதிபத்தியமானது காலனி ஆதிக்கத்தை அகற்றும்போது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட ஏனைய பகுதிகளைப்போல், இலத்தீன் அமெரிக்காவிலும் இந்த சமூகத்தட்டினருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கள், முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் அவர்களை ஒத்த-தட்டினரிடம் நிலவுவதை விட மிகவும் வரையறைக்குட்பட்ட அளவே இருந்தது. பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு, படிப்புத்துறைகளில் முன்னேற்றமின்றியிருந்தனர். பலவற்றில் தனிச்சிறப்புத் தேர்ச்சியை அடைய விரும்புபவர்கள் அல்லது சிறிய வாணிகம் மூலம் வாழ்க்கையை ஓட்ட முயற்சித்தவர்கள் சாதாரண தொழிலாளியை விட நல்ல வாழ்க்கைத்தரத்தை அனுபவித்தனர். இந்த சமூகத்தட்டுதான் இந்த நாடுகளில் குட்டி முதலாளித்துவ அரசியலின் பிரதான அடித்தளமாக இருந்தது.

ஆகையால் ``புதிய உலகயதார்த்தம்`` என்ற பப்லோவாத தத்துவங்களின் தோற்றத்திற்கான புறநிலையான வர்க்க அடிப்படை இருந்தது. அதில் சோசலிசத்துக்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தினாலும் அதன் நனவுப்பூர்வமான புரட்சிகர முன்னணிப்படையாலும் பொறுப்பெடுக்கப்பட முடியாது, மாறாக தீவிரமயமாக்கப்பட்ட குட்டி முதலாளித்துவத்தினாலேயே பொறுப்பெடுக்கப்படமுடியும். இறுதியில் இந்த திருத்தல்வாத சூத்திரப்படுத்தல்கள், இந்த குறிப்பிட்ட சமூகத்தட்டின் முயற்சி, ஏகாதிபத்தியம் தனக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சி அச்சுறுத்தலுக்கும் இடையில் இடைத்தடைக்கான ஏகாதிபத்தியத் தேவை ஆகிய இவ்விரண்டையும் பிரதிபலிக்கின்றன.

4. கியூபப் புரட்சியின் ஆணிவேர்

ஒவ்வொரு பெரிய நிகழ்ச்சியையும் போலவே, பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற புரட்சியும், முந்தைய வரலாற்று அபிவிருத்திகளில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. பப்லோவாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ இடதுகள் மற்றும் பப்லோவாதிகள் மத்தியில் காஸ்ட்ரோவின் புகழ்பாடும் தலைவர்களால் பொதுவாக அலட்சியம் செய்யப்பட்ட இவ்வரலாற்று காரணிகள், காஸ்ட்ரோயிசம் பற்றிய அரசியல் முக்கியத்துவத்தையும் வர்க்க உள்ளடக்கத்தையும் புரிதலுக்கு கட்டாயம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கியூபாவின் வரலாறு, முதன்மையாக விடுதலைப் போராட்டம் கருச்சிதைக்கப்பட்டதால் வடிவமைக்கப்பட்டது. அது அதனுடைய அந்தஸ்தை இறக்கும் தறுவாயில் உள்ள ஸ்பானிய காலனித்துவத்தின் உடைமையிலிருந்து எழுந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் காலனியாக சக்தி மிக்க வகையில் மாற்றியது.

1898ல் கியூபாவில் அமெரிக்கா தலையிட்டதைத் தொடர்ந்து முப்பது வருடங்களாக கியூப சுதந்திரத்திற்காக யுத்தம் நடந்தது. யுத்தம் குறுகியதாகவும் தீர்க்கமானதாகவும் இருந்தது. பாரிஸ் உடன் படிக்கையில் ஸ்பானியர் தங்களது காலனிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். உடன்பாட்டில் கியூபர்களுக்கு பங்கேற்பு இல்லை.

பிளாட் ஏற்பாட்டு குடியரசு (Platt Amendment Republic) எனப் பெயர் பெற்ற உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. சட்டவரைவை வரைந்த அமெரிக்க செனட்டர் பெயரால் பெயரிடப்பட்ட இந்த சட்டம், முதலில் வாஷிங்டனில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முதல் கியூப அரசியல் அமைப்புடன் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. எந்தவித சர்வதேச உடன்படிக்கைக்குள்ளும் கியூபா நுழைவதை அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதும் தடையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அது இராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுவதற்கு உரிமையையும் கூட உத்தரவாதப்படுத்துகிறது. ``கியூப சுதந்திரத்தைக் காக்க, வாழ்வை, சொத்தை மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க, போதுமான அளவு அரசாங்கத்தை பராமரிக்க மற்றும் பாரிஸ் உடன்படிக்கையால் திணிக்கப்பட்ட கியூபா தொடர்பான கடமைகளை நிறைவேற்ற`` அமெரிக்க ஐக்கிய நாடுகள் இந்த ``உரிமை``யை இந்த நூற்றாண்டு முதல் திரும்பத்திரும்ப பயன்படுத்தும் என உறுதி கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது கியூபா சார்ந்திருப்பது பிளாட் மாற்றுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள வெறுமனே மேலோட்டமான ஒன்று அல்ல. அது அமெரிக்க சந்தைக்கு கியூப சர்க்கரை ஏற்றுமதியில் தங்கியிருந்தது. இந்த ஒரு பயிரே தீவின் ஏற்றுமதிவருவாயின் பெருமளவைக் கணக்கில் கொண்டது மற்றும் பெரும்பாலும் சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கரும்பு மட்டுமே பயிரிடும் மனப்பான்மை பெரும்பான்மை மக்களை பின்தங்கிய நிலைக்கு, ஏழ்மைக்கு மற்றும் வேலையில்லா நெருக்கடிக்கு சபித்துள்ளது. கியூபாவில் நிலவும் அரசியல் சமூக உறவுகள் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டத்தின் முடிவுறாத பண்புடன் கட்டுண்டிருக்கிறது. உலகரீதியான முனைப்பாக இருப்பனவற்றுள் ஒன்றாக கியூபாவின் அரைக்காலனித்துவ அந்தஸ்து இருக்கின்ற அதேவேளை, அது எவ்விதத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்தது அல்ல.

இரண்டாம் உலகயுத்தம் நிகழ்வுமீதாக நான்காம் அகிலம் எச்சரித்த வாறாக: ``தாமதமாக உருவான தேசிய அரசுகள் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியைப்பெறும் என இனியும் கருதமுடியாது. அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட மற்றும் ஏகாதிபத்திய முரண்பாடுகளில் சிக்கியுள்ள பின்தங்கிய அரசுகளின் சுதந்திரமானது, அரைப் போலியானதாக இருக்கும். மற்றும் அரசியல் ஆட்சியானது, உள்வர்க்க முரண்பாடுகள் மற்றும் வெளி அழுத்தத்தின் செல்வாக்கின்கீழ் தவிர்க்க வியலாத வகையில் மக்களுக்கு எதிரான சர்வதிகாரத்திற்குள் விழும்."

உலக சோசலிசப் புரட்சிக்கு வெளியில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரும் சாத்தியமில்லை என்று அறிக்கை சொல்லிச் செல்கிறது. ``ஆகையால் காலனித்துவ மக்களின் விடுதலை பற்றிய நம்பிக்கைகள் ஒட்டுமொத்த உலகத் தொழிலாளர்களின் விடுதலையுடன் முன்பிருந்ததைவிட மிக அதிகமாகக் கட்டுண்டிருக்கிறது. முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் முதலாளித்துவ ஆட்சிக்கு முடிவுகட்டி, பின் தங்கிய நாட்டு மக்களுடன் சேர்ந்து, உலகப் பொருளாதாரத்தை ஏக போகங்களின் லாபங்களுக்கு அல்லாமல், சமூகத்தேவைகளுக்காய் இயக்கும் புதிய மட்டத்திற்கு மறு ஒழுங்கு செய்யும் பொழுது மட்டும்தான் காலனித்துவ நாடுகள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் விடுதலை பெற முடியும்``. நாம் பார்க்கின்றவாறு கியூபாவின் அடுத்தடுத்த வரலாறு இந்த ஆய்வை எதிர்மறையில் நிருபிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேசப் போராட்டம் இன்றி பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சார விடுதலை என்பது கொடுமையான நகையாடல் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் கியூபாவுக்கும் இடையில் உள்ள உறவு, திராணியற்றதற்கும் அதிக ஊழலுக்கும் மற்றும் அடிக்கடி கலவரங்கள் வெடிப்பதற்கும் பேர்போன முதலாளித்துவ அரசியல் அமைப்பு தோன்ற வழிவகுத்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மேலாதிக்கமானது. வர்த்தகம் மற்றும் நிலவுடைமை வர்க்கங்கள் இரண்டிலும் வெளிநாட்டுக் குடியேறிகளின் மேலாதிக்கத்துடன் சேர்ந்து கியூப தேசிய வாதத்தையும் கூட ஊட்டி வளர்த்தது. அது தவிர அமெரிக்க எதிர்ப்புவாதம் மற்றும் அதன் முயற்சியிலும் கூட பேர்போனதாக இருந்தது.

எவ்வாறாயினும் கியூபாவில் இன்னொரு முன்னோக்கும் தோன்றியது. 1925ல் கியூப கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாம் அகிலத்துடன் ஐக்கியம் கொண்டதாய் அமைக்கப்பட்டது. அதன்மிக முக்கிய மனிதன் ஜூலியோ அன்டோனியோ மெல்லா (Julio Antonio Mella) ஆவர். இவர் ஒரு சட்ட மாணவராக இருந்து, 1920களின் தொடக்கத்தில் பல்கலைக்கழக சீர்திருத்த இயக்கத்தின் தலைவராக ஆகி, தொழிலாள வர்க்கம் பக்கம் திரும்புவதற்கு முயற்சித்தவர்.

மெல்லாவும் அவர் தோழர்களும் ஜெரார்டோ மச்சாடோவின் (Gerardo Machado) சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமைதாங்கினார்கள். அவர் மச்சாடோவை ``வெப்ப மண்டலத்து முசோலினி`` என்றழைத்தார். அவர் சர்வாதிகாரர்களால் சிறையிடப்பட்டு, பொது மக்களின் அழுத்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். பின்பு சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பாவுக்கும், இறுதியாக மெக்சிகோவுக்கும் பயணம் செய்தார்.

மெல்லா 1929ல் மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முறித்துக் கொண்டு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்திற்கான அவரது ஆதரவை பிரகடனம் செய்தார். அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கான குற்றம், மச்சாடோ சர்வாதிகாரத்தின் மேல் சுமத்தப்பட்ட அதே வேளையில், தாக்குதலுக்கு உண்மையான காரண கர்த்தாக்கள் ஸ்ராலினிஸ்டுகள் என்ற பரவலான சந்தேகமும் நிலவியது.

தீவின் ஊழல்நிறைந்த அரசியல் அமைப்பையும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செய்யப்படுவதையும் மாற்றுவதற்கு முயற்சித்த கியூப மாணவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பரந்த இயக்கத்திலிருந்து மெல்லா உருவாகியிருந்தார். எவ்வாறாயினும் அவர் அங்கு நிலவிய தேசியவாத கருத்துருக்களைக் கைவிட்டு, சோசலிச சர்வதேசியத்தின் முன்னோக்கை ஏற்றுக்கொண்டார்.

அத்தகைய முன்னோக்கின் அடிப்படையில், கியூபாவின் வரலாற்றுப் பிரச்சனைகளுக்கான அதன் சொந்தத்தீர்வை தொழிலாள வர்க்கம் வழங்குவதை ஸ்ராலினிசம் தடுத்தது. ஆகையால் பிடல் காஸ்ட்ரோவும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த சக்திகளாக கருதப்படும் முன்னரே, ``பிடல் காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்துக்கு வர ஸ்ராலினிசம் உதவியது. மெல்லாவும் கியூப மார்க்சிஸ்டுகளின் முதல் தலைமுறையும் போராடிய முன்னோக்கை நசுக்குவதன் மூலம், ஸ்ராலினிசம் தீவிர குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் வளர்ச்சியை முன்னுக்கு கொண்டு வந்தது.

இந்தப் பள்ளியில் முதல் சொற்பொழிவின்போது, தோழர் நோர்த் வரலாறு ``என்ன நிகழ்ந்தது`` மற்றும் ``யார் வென்றது`` என்பதை வெறுமனே கொண்டிருக்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் என்ன மாற்றீடுகள் மிஞ்சியிருந்தன. அதன் விளைவுகள் இடம் பெற்றனவா? இடம் பெறவில்லையா? இடது எதிர்ப்பு நிலை கொண்டிருந்திருக்குமானால் என்ன நிகழ்ந்திருக்கும்? என்ற கேள்விகளுடன் குறிப்பிட்ட அளவுக்கு விளக்கியிருந்தார். இதே கேள்வி சிறிய அளவிலாயினும் கியூபா தொடர்பாகவும் முன் வைக்கப்பட்டது. என்ன நிகழ்ந்திருக்கலாம் என நாம் கவனமாகக் கூறுவதற்கு அங்கு வரையறைகள் உள்ளனதான். உதாரணமாக கியூபாவில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருந்தால் புரட்சி இந்த விதம் நடந்திருக்கும் என ஒருவர் எந்த உத்தரவாதத்திற்கும் உறுதி கூற முடியாது. எவ்வாறாயினும் அங்கு கியூப தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர கட்சி இருந்திருந்தால், கியூப ஸ்ராலினிச ஊழல் அரசியல் சாதனத்துக்கு எதிராக, குறிப்பாக காஸ்ட்ரோயிசம் எனும் போக்கு தோன்றுதல் சாத்தியமில்லாது இருந்திருக்கும் என நாம் உறுதியாகக் கூறமுடியும்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச சீரழிவின்போது நாடு ஆழமான புரட்சிகர நெருக்கடிக்குள் சென்று கொண்டிருந்தது. 1933ல் நாடு முழுவதும் வெடித்த எழுச்சியானது, மச்சாடோ சர்வாதிகாரியை நாட்டைவிட்டு ஓடுமாறு நிர்ப்பந்தித்தது. இந்த இயக்கத்தின் உச்சக்கட்டம் தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தம் தொழிற்சாலைகள், கரும்பு ஆலைகள் மற்றும் எஸ்டேட்டுகளைக் கைப்பற்றுதலைக் கண்டது.

பொதுவேலை நிறுத்தம் தீவிரமாகவும் பரந்த அளவிலும் வளர்ந்தபோது, சங்கங்களில் மேலாதிக்கம் செய்து கொண்டிருந்த கியூப கம்யூனிஸ்ட் கட்சி, வேலைநிறுத்தம் அமெரிக்கத் தலையீட்டைத் தூண்டுவதாய் பிரகடனம் செய்து கொண்டு, திரும்பவேலைக்குச் செல்லுமாறு ஆணைகளைப் பிறப்பித்தது. பெரும்பான்மை தொழிலாளர்கள் ஆணையை அலட்சியம் செய்தவேளை, கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறாயினும் வெளிநடப்புச் செய்வதை முடிவுக்கு கொண்டு வரும் பாத்திரத்துக்கு கைமாறாக, கட்சிக்கு சலுகை பெறும் விதமாக மச்சாடோவுடன் ரகசியப் பேச்சு வார்த்தைக்குள் நுழைந்தது. மச்சாடோ புலம் பெயர்ந்து பறந்தோடியதன் காரணமாக குறைந்த காலம் மட்டுமே இருந்த இந்த பேரம், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் வடிவத்தை அமைக்க இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் பழமைவாத முதலாளித்துவக் கட்சிகளுடனும் ராணுவ ஆட்சிகளுடனும் கூட வரிசையாக கூட்டுக்களை வடிவமைத்த அதேவேளை, தொழிலாளர் இயக்கத்தில் தங்களின் மேலாண்மையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். 1940களில் ஸ்ராலினிஸ்ட்டுகள் அமெரிக்க ஆதரவு பாட்டிஸ்டா (Batista) அரசாங்கத்தில் நுழைந்தனர்.

5. காஸ்ட்ரோவும் காஸ்ட்ரோயிசமும்

ஸ்ராலினிசம் வலதுசாரி கட்சிகளுடனும் சர்வதிகாரத்துடனும் கொண்ட கூட்டுறவுக்காக கண்டனத்தைப் பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூகப் புரட்சி பற்றிய வாய்ச்சவடால்கள், வரவர தீவிர மயப்படுத்தப்பட்ட நடுத்தரவர்க்கத்தின், தேசியவாத சக்திகளின் ஏகபோகமாக ஆனது; குறிப்பாக ஹவானா பல்கலைக்கழகத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த சூடான சூழலில்தான் பிடல் காஸ்ட்ரோ அவரது தொடக்கத்தை ஆரம்பித்தார்.

ஸ்பானிய நில உடமைக் குடும்பத்தில் பிறந்த காஸ்ட்ரோ, ஜெசுய்ட் உயர்நிலைப் பள்ளியில் மாணவப் பருவத்திலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். அங்கு அவர் பிராங்கோவின் பாசிசத்துக்கு ஆதரவளித்த ஸ்பானிய மதகுருக்களின் செல்வாக்கிற்கு ஆளானார். அவரது வகுப்புத் தோழர்களின் கருத்துப்படி, அவர் ஸ்பானிய பலாஞ்சிஸ்ட் கட்சியின் நிறுவனரான ஜோசே அன்டனியோ பிரிமோ டிரிவேரா (Jose Antonio Primo de Rivera) எழுத்துக்களைப் படித்து, பாசிச சிந்தாந்தம்பால் ஈர்க்கப் பெற்றார். நாற்பது மற்றும் ஐம்பதுகளில் பல்கலைக் கழகங்களில் மேலாதிக்கம் செலுத்திய ஆயுதம் தாங்கிய மாணவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்தக் கும்பல்களின் சிந்தாந்தம் தேசியவாதம் மற்றும் சிறப்பாக கம்யூனிச எதிர்ப்பாக இருந்தது.

பாட்டிஸ்டாவுக்கு எதிரான போராட்டத்தில், காஸ்ட்ரோ முதலாளித்துவ கட்சியான ஆர்டோடோக்சோ கட்சியின் வேட்பாளராக நின்றார். ஆனால் அந்த ஆண்டு பாட்டிஸ்டாவின் ஆட்சிக் கவிழ்ப்பு அவரது பாராளுமன்ற விருப்பங்களுக்கு தடை ஆயிற்று. அதன்பின் அவர் ஆயுதம் ஏந்திய நடவடிக்கைக்காக தனது பின்பற்றாளர்களின் சிறு குழுவைத் தொடங்கினார். 1953 ஜூலையில் மோன்கடா இராணுவக் குடியிருப்பு பகுதியின் மீது நடந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். அதில் பங்கேற்ற இருநூறு பேர்களும் ஒன்றில் கொல்லப்பட்டனர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர்.

காஸ்ட்ரோவின் நடவடிக்கைகள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக இல்லை. இந்தக் காலகட்டம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ பிரிவுகளின் ஆட்கள், கோட்டை காவற்படையினர் மீதான தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள் மற்றும் பாட்டிஸ்டா அரண்மனையை முற்றுகையிடவும் கூட செய்தனர். 1959 புரட்சிக்கு இட்டுச் சென்ற இந்தக் காலகட்டத்தில் காஸ்ட்ரோவின் அரசியல் அறிக்கைகளில் ஒரு சிலவே பாட்டிஸ்டா எதிர்ப்பு கியூப தேசியவாத அரசியலிலிருந்து அவரை வேறுபடுத்துவதாக இருக்கின்றன. அவரது மிகப்புகழ்பெற்ற உரை ``வரலாறு என்னை விடுதலை செய்யும்`` என்பதாகும். மொன்காேடா தாக்குதல் பற்றிய வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தயாரிக்கப்பட்ட அவ்வுரை, சர்வாதிகாரியின் ஒடுக்குமுறைகளைக் கண்டனம் செய்தல் மற்றும் ஒழுங்கான இறுதியான, ஜனநாயக சீர்திருத்தங்களின் பட்டியலைக் கொண்டிருந்தது.

சிறிய சிறைத்தண்டனைக்குப் பின், காஸ்ட்ரோ மெக்சிகோவுக்குச் சென்று, 1956ன் முடிவில் 80 ஆயுதம் ஏந்திய ஆட்களுடன் கியூபாவில் இறங்குவதற்கான தயாரிப்பைச் செய்தார். மொன்காடாபோல், பாடிஸ்டாவின் அடக்குமுறை ராணுவங்களுடன் முதலாவது மோதலில் வெறுமனே 12 பேர் மட்டுமே எஞ்சினர்.இருப்பினும் பின்னர் இரண்டே ஆண்டுகளில் காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

ஆட்சி அதிகாரம் நேரடியாக காஸ்ட்ரோவின் கொரில்லாக்களின் கைகளில் விழுந்தது ஏனெனில் அந்தத் தீவில் அரசியல் ரீதியாக செல்வாக்குப்பெற்ற சக்திகள் வேறெவரும் இல்லை. கியூபத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையின்மை உட்பட எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் வெற்றிடம்தான் நிலவியது. காஸ்ட்ரோவின் சீர்திருத்தவாதம் என்ன மட்டுப்படுத்தல்கள் இருப்பினும், அவரது சமுதாயக் கொள்கைகள், ஸ்ராலினிஸ்டுகளால் முன்வைக்கப்பட்டவற்றைக் காட்டிலும் அதிக தீவிரமானவையாக இருந்தன. மேலும் அவரது ஆயுத நடவடிக்கைகள், அவை ஒரு வரையறைக்குட்பட்டிருந்தபோதும், கியூப ஸ்ராலினிஸ்டுகள் சர்வாதிகாரத்துக்கு உடந்தையாய் இருந்ததாக காணப்பட்ட பொழுது, அவை மக்களின் ஆதரவை அந்நேரம் பெற்றன. காஸ்ட்ரோவின் தொடக்கம் முதலேயான உள்ள நோக்கங்கள், அமெரிக்க ஐக்கியநாடுகளுடன் ஒத்துப்போவதை அடையக்கூடியதாக இருந்தன. ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு முதன்முதல் சென்றபோது அவர் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல என்பதைத் தெளிவாகவும் உறுதியாகவும் நான் கூறியிருக்கிறேன். கியூபாவில் தொழில்துறை வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கு தனியார் மூலதனத்திற்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் புரிந்துணர்வை அடைய முடியவில்லை என்றால் முன்னேற்றத்தை அடைவது என்பது முற்றிலும் இயலாததே".

கியூப மக்கள் நன்மை பெற காஸ்ட்ரோவின் இயக்கம் வரையறைக்குட்பட்ட விவசாய மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஆரம்ப மாதங்களில் அது பயன்படுத்தப்படாத நிலங்களை மறுவிநியோகம் செய்தது; வாடகைகளில் குறைப்பைச் செய்தது; கூலிகளில் அதிகரிப்பைச் செய்தது; கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவற்றில் எதனையும் வாஷிங்டன் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் காஸ்ட்ரோவை அப்பட்டமான பொருளாதார அழுத்தத்தின் மூலம் வழிக்குக் கொண்டுவர விரும்பியது. கியூப அரசாங்கத்துடன் மோதலைக்கொண்டதில், அது கியூபாவின் பொருளாதார உயிர் மூச்சான சர்க்கரை ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை வெட்டியது, பிறகு எண்ணெய் வழங்கமறுத்தது. பதிலுக்கு கியூப அரசாங்கமானது, முதலில் அமெரிக்க சொத்துக்களை தேசியமயமாக்கியது.

பின்னர் கியூபர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் தேசியமயமாக்கியது. அது சோவியத் அதிகாரத்துவத்தின் பக்கம் உதவிக்காகவும் திரும்பியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கொள்கை கடுமையான தத்துவார்த்த விதமாகவும் பழிக்குப்பழி வாங்குவதாகவும் இருந்தது. பிரிட்டன் மிகவும் வேறுபட்ட வகையில் அதே அபிவிருத்தியைக் கைக்கொண்டிருந்தது. என்க்ரூமா, காண்டா மற்றும் கென்யாட்டா போன்ற ஆபிரிக்கத் தலைவர்கள் தங்களின் தீவிர மற்றும் சோசலிச வாய்ச்சவடால் இருந்தும் கூட அதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் செல்வாக்கையும் பாதுகாத்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இறுமாப்பு மற்றும் முட்டாள்தனம் கடந்த நாற்பது ஆண்டுகளாக காஸ்ட்ரோவின் ஆட்சிக்கான பிரதான தூண்களாக இருந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அவரை கியூப தேசியவாதத்தின் அங்கமாகக் காட்டிக்கொள்ள அனுமதித்தது மற்றும் வருகின்ற எந்த எதிர்ப்பினையும் ஏகாதிபத்தியத்தின் கருவி எனப் பட்டம் சூட்ட வைத்தது.

மாஸ்கோவின் பக்கம் திரும்பியதுடன், காஸ்ட்ரோ கியூப ஸ்ராலினிஸ்டுகளுடனும் கூட்டை உருவாக்கிக் கொண்டார். இந்த நகர்வு புரட்சியின் தீவிரமயமாக்கலின் மற்றும் அதன் சோசலிசத் தன்மையின் கூடுதலான அறிகுறி என பப்லோவாதிகளாலும் பொதுவாக குட்டி முதலாளித்துவ இடதுகளாலும் வரவேற்கப்பட்டது. அது அந்தவகையானதாக எதுவுமில்லை. நாம் பார்த்தவாறு, கியூபாவின் மக்கள் சோசலிசக் கட்சி [Popular Socialist Party] அப்போது ஸ்ராலினிஸ்டுகளாக அறியப்பட்டவர்களைப்போல், முழுமையாகப் பிற்போக்கான மற்றும் செல்வாக்கிழந்த அரசியல் சக்தியாக இருந்தது. அது கியூபாவில் அப்போதிருந்த முதலாளித்துவ அமைப்பின் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியது, பாட்டிஸ்டா ஆட்சிக்கு மிக விசுவாசமாக சேவையும் செய்தது.

தானே எதிர்பாராத விதமாய் ஆட்சியதிகாரத்துக்குத் தள்ளப்பட்ட காஸ்ட்ரோ, திட்டவட்டமான தேவைக்காக மக்கள் சோசலிசக்கட்சி பக்கம் திரும்பினார்.அவருக்கு கட்சியோ, வேலைத் திட்டமோ உண்மையான ஒரு ராணுவமோ கூடக் கிடையாது. கியூப ஸ்ராலினிஸ்டுகள் அவருக்கு சாதனத்தை சித்தாந்தத்துடன் வழங்கினர். அதன் மூலம் அவரால் ஆட்சி செய்ய முடிந்தது. காஸ்ட்ரோ அதன் பின்னர் அவரது கடந்தகால அரசியலில் தான் "முழு நிறைவற்ற" கம்யூனிஸ்டாக இருந்த போதும், பாட்டிஸ்டா ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னரே "மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்" ஆகியிருந்ததாகப் பிரகடனம் செய்தார். உரைநடையில் குறிப்பிட்டிருந்த தன் வாழ்நாளை முழுவதும் மகிழ்வாய் வைத்திருக்க கற்றுக்கொண்ட, முதலாளித்துவ கனவானான மோலியர்சின் விளக்கத்தை நினைவு கூர வேண்டும்.அதுபோலவே ஃபிடல் காஸ்ட்ரோ அவரது வாழ்நாள் முழுவதும் மார்க்சிசத்தைப் பேசியிருந்தார் என்று கண்டுபிடித்தார். ஆகையால் தற்செயலாகத்தான் ஆட்சிக்கு வந்தபின்பே அதுபற்றி கவனத்தில் கொண்டார். பல்கலைக் கழகத்தில் ஆயுதம் ஏந்திய கம்யூனிச எதிர்ப்பு கும்பலுடன் அவரது நாட்கள் தொடங்கி முதலாளித்துவக் கட்சிக்கான காங்கிரசின் வேட்பாளராக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது வரையிலான அவரது அரசியல் சாசனங்கள், சோசலிசப் புரட்சிக்கான நிபந்தனைகளைத் தயாரிக்கும் நோக்கத்திற்கான வெறுமனே செயல் தந்திர முன்முயற்சியாக மறுஜோடனை செய்யப்பட்டது.

காஸ்ட்ரோவும் அதேபோல் ஏனைய இடது முதலாளித்துவ தேசியவாதிகளும் "மார்க்சிய லெனினிசத்தில்" என்ன கண்டார்கள்? தெளிவாகவே, அவர்கள் தொழிலாள வர்க்கம் தனது சொந்த சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துக்கு வழிகாட்டும் விஞ்ஞான முன்னோக்கை நாடவில்லை. அதேபோல அது மாஸ்கோவிடமிருந்து ஆதரவை வென்றெடுக்கும் இலக்கைக் கொண்ட ஒரு நடிப்பைவிட அதிகமாகும். அவர்கள் ஸ்ராலினிஸ்டுகளிடமிருந்து கற்றுக் கொண்ட மார்க்சிச லெனினிசம் என்பதனை, அரசினைப் பயன்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் விரும்பும் மாற்றங்களைச் செய்ய முடியும் என்று முன்னிறுத்தும் கொள்கையாகக் கண்டனர்.

மாற்றமுடியாத மற்றும் நெறிதவறும் தேசியத் தலைவரால் தலைமை தாங்கப்படும், என்றென்றைக்குமான புரட்சிக் கட்சியின் மூலம் அரசின் மீதான தங்களின் சொந்தத் தடையற்ற கட்டுப்பாட்டை நியாயப்படுத்துதலையும் கூட, அதில் அவர்கள் கண்டு கொண்டனர். ஸ்ராலினிசத்திடமிருந்து கற்றுக் கொண்டதன் அடிப்படையைத்தான் சியாங்கேஷேக் தனது கட்சியான கோமிண்டாங்கிற்கு மாதிரியாகக் கொண்டார் என்பதை நினைவுகூர வேண்டும்.

6 கொரில்லாயிசத்தின் கட்டுக்கதை

யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தோன்றிய எல்லா தேசிய மையங்கள் மற்றும் போக்குகள் போல், உண்மையில் காஸ்ட்ரோயிசமும் அதன் தோற்றங்கள் மற்றும் வளர்ச்சி பற்றிய தொகையறா கட்டுக்கதைகளின் மேல் தங்கியிருக்கிறது. அத்தகைய கதையளப்பு இந்த அமைப்புகளின் வர்க்கத்தன்மையைக் கொடுப்பது தவிர்க்க முடியாதது. இவை குட்டி முதலாளித்துவ மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் மேல் தங்கி இருந்து கொண்டு, அதேவேளை தாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறுகின்றன.

ஆட்சிக்கு வந்த பின்னர் காஸ்ட்ரோவும் அவரது பின்பற்றாளர்களும் தங்களது வெற்றியை சியரா மயேஸ்ற்றா மலைகளில் (Sierra Maestra mountains) கொரில்லாக்களால் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் சிறப்பான விளைவு என்று உருவகித்துக் காட்டுகிறார்கள்: திண்ணிய எண்ணம் மற்றும் தீர்மானத்தின் மூலம் ஏகாதிபத்தியத்தையும் தேசிய முதலாளித்துவத்தையும் இராணுவ ரீதியாக வென்றனர் என்று, பாட்டிஸ்டா (Batista) சர்வாதிகாரியைத் தூக்கிவீசிய பின்னர் ஒருமாதமே கழித்து சேகுவாரா எழுதினார்: ``மக்களால் ஆதரிக்கப்பட்ட உறுதியுடைய மற்றும் இறப்பதற்கு அஞ்சாதவர்களைக் கொண்ட சிறிய குழு நிரந்தர ராணுவத்தை வெற்றி கொள்ள முடியும் என்று நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம். (இலத்தீன்) அமெரிக்காவில் உள்ள நமது சகோதரர்களுக்கு இன்னொரு படிப்பினையும் உண்டு. நம்மைப்போலவே பொருளாதார ரீதியாக அதே விவசாய வகையினங்களில் நாம் கட்டாயம் விவசாயப்புரட்சி செய்ய வேண்டும். வயல் வெளிகளில், மலைகளில் போராட வேண்டும் மற்றும் இங்கிருந்தே புரட்சியை நகரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்``. பின்னால் செய்வதற்கு முயற்சிக்கக் கூடாது.

இந்த கியூப் புரட்சியின் அதிகாரப்பூர்வ விளக்கமானது. சம்பவங்கள் பற்றிய தீவிர திரித்தல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பாடிஸ்டாவின் ஆறு ஆண்டுகால ஆட்சியில் 20,000 கியூபர்கள் அரசாங்கத்தின் கரங்களில் உயிரைவிட்டனர். இவற்றுள் 19,000 பேர்கள் கியூப நகரங்களில் கொல்லப்பட்டனர். நிர்மூலமாக்கல், அரசியல் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஏனைய எதிர்ப்பு வடிவங்கள் பெரும்பான்மையானவை, காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் நடந்தன. அவை பரந்தளவில் விரிந்து பரவின மற்றும் இறுதியில் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய தூண்டுவிசையை வழங்கின.

காஸ்ட்ரோவின் கொரில்லாக்கள் பெரும்பாலும் சில ஆயிரம் பேர். அங்கு முடிவுகாணும் இராணுவ யுத்தங்கள் இல்லை. பெரிய நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்களே 200 கொரில்லாக்களுக்கு மேல் இல்லை. பாடிஸ்டா கியூப முதலாளித்துவ வர்க்கம், வாஷிங்டன் ஆகிய இரண்டின் ஆதரவையும் இழந்தார். கியூப முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பான்மை பகுதியினர் காஸ்ட்ரோவை ஆதரித்தனர். வாஷிங்டன் பாடிஸ்டா அரசாங்கத்தின் மீது ஆயுதப்படை ஆணையைத் திணித்து இந்த ஆதரவினை இல்லாததாக்கியது. இது விரைவாய் அதனை சிதறுண்டு போகவைத்தது.

கியூபாவிற்குள் திடுதிப்பென துடுக்குத்தனம் மற்றும் இராணுவ வீரம் மூலம் காஸ்ட்ரோவின் கொரில்லாக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்தை தோற்கடித்தனர் என்ற கட்டுக்கதை, திட்டவட்டமான அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்தது. அது அனைத்து ஆட்சி அதிகாரத்தையும் போட்டியிட முடியாதவகையில் காஸ்ட்ரோவின் கைகளில் குவித்தது. அரசாங்கத்தை கெட்டிப்படுத்துவதை நியாயப்படுத்தியது.

காஸ்ட்ரோவாலும் சேகுவாராவாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டுக்கதை பேரழிவுகரமான விளைவுகளுடன் ஏற்றுமதி செய்யப்படவிருந்தது. கியூபப் பாதை எனப்படுவது, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரே சாத்தியமான வடிவம் என பரப்பப்பட்டது. அரசாங்கங்களைத் தூக்கிவீசவும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு முடிவுகட்டவும் தேவையானது, துணிவும் ஒரு சில துப்பாக்கிகளும் என்ற உறுதி மொழியால் ஆயிரக்கணக்கான இலத்தின் அமெரிக்க இளைஞர்கள் படுகொலை செய்வதற்கு வழிவகுக்கப்பட்டனர்.

சேகுவராவின் பிரபலமான எழுத்துப் படைப்பான ``கேரா டி கெரில்லாஸ்``(Guerra de Guerrillas) அல்லது கொரில்லாயுத்தம் என்பது இந்த மங்கிப்போன மூலோபாயத்துக்கான கைப்புத்தகமாக சேவை செய்தது. அது ``அமெரிக்காவில் புரட்சிகர இயக்கங்களின் உத்திகள்``(mechanics of revolutionary movements in America) இற்கான கியூப மூன்று அனுபவத்தின் பெரும் படிப்பினைகள் என அவர் விவரித்துள்ளவற்றைத் தொகுத்துரைக்கிறது.

1. இராணுவத்துக்கு எதிரான யுத்தத்தில் மக்கள் படைகள் வெல்ல முடியும்.

2. புரட்சியைச் செய்ய அனைத்து நிபந்தனைகளும் அத்தியாவசியமான தல்ல, உயிர்த்தெழும் போதே (கொரில்லா அணியின் பதம்) அதனை உருவாக்க முடியும்.

3. வளர்ச்சி பின்தங்கிய அமெரிக்காவில் ஆயுதப்போராட்டத் தளப்பகுதி பிரதானமாக நாட்டுப் புறத்தில் தான் கட்டாயமாக இருக்கவேண்டும்.

இந்த எழுத்துக்கள் கொண்டிருக்கும் சிறிதளவேயான அரசியல் ஆய்வு என்னவெனில் தீவிர வாதப் போலி ஆகும். இலத்தீன் அமெரிக்காவின் வளர்ச்சிப்பாதை பல ஆண்டுகளாக முதலாளித்துவ பாதையாக இருந்து வந்தது. இலத்தீன் அமெரிக்காவில் ஒடுக்கு முறைக்கான முக்கிய அடித்தளம் சேகுவாரா கூறுவதுபோல் மிகச்சிறுபான்மையினர் கைகளில் நிலம் குவிந்துகிடக்கும் லத்திபுண்டியா (Latifundia) அல்ல, மாறாக கூலி உழைப்பு மற்றும் லாபம் பற்றிய முதலாளித்துவ உறவுகள் ஆகும். இவை எழுதப்பட்டுக் கொண்டிருந்த போதுகூட இக்கண்டமானது பெரும் கட்டமைப்பு மாறுதல்களூடாகச் சென்று கொண்டிருந்தது. மக்கள் தொகை மேலும் பாட்டாளி மயமாதலாகியிருந்தன மற்றும் கிராமப்புறப் பகுதியிலிருந்து நகரங்களுக்கு மக்கள் புலம் பெயர்தலுக்கு இட்டுச் சென்றது.

இவற்றுள் ஒன்று கூட ஆய்வு செய்யப்படவில்லை. புரட்சிகர தயாரிப்பு கொரில்லாயுத்தத்துக்குப் பொருத்தமான கிராமப்புற பகுதிகளைப் பொறுக்கி எடுக்கும் பதிவுவாத நிகழ்வுப்போக்காகக் குறைக்கப்பட்டது. இந்த அறிவுரையைப் பின்பற்றுபவர் காடுகளிலும் பின்னே உள்ள பிரதேசங்களிலும் இலத்தின் அமெரிக்க ராணுவத்துடன் தனி ஒருவராக மோதுவதற்கு விடப்பட்டவராக சிக்கிக் கொள்வதில் முடிந்தது.

சேகுவாராவின் அரசியலில் மீண்டும் வெளிப்படுவது தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர வர்க்கம் என்பதை நிராகரித்தல் மற்றும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் அரசியல் ரீதியாய் நனவு கொண்டு விடுதலைக்கான தங்களின் சொந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதின் திறமையை புறக்கணிப்பதாகும். அவர் நாட்டுப்புறத்தை ஆயுதப் போராட்டத்துக்கான ஒரே சாத்தியமான இடமாக முன்மொழியும் அதேவேளை, விவசாயிகளை சமூகக் கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டும் விஷயமாக அது இல்லை.

சேவின் கருத்துரு ``பலாத்காரத்தை அடைவதற்கு சர்வாதிகாரத்துக்கு கடன்படல், அதன்மூலம் பிற்போக்கு சமூக வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை அதன் உண்மை இயல்பினை முகத்திரை கிழித்தல்``. வேறு வார்த்தைகளில் சொன்னால் கொரில்லா குழுவின் இலக்கு விவசாயிகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை கிளறிவிடல். விவசாயிகள் அதற்குப்பதிலாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பார்கள்.

அத்தகைய போராட்டத்துக்கு தத்துவமும் தேவையில்லை, அரசியலும் தேவையில்லை. தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மிகக்குறைந்த தலையீடே தேவையானதாகும். இலத்தீன் அமெரிக்காவில் கொரில்லா குழுக்களைக் கட்டுவது தொடர்பாக சேகுவாரா கூறுகையில், அவை அனைத்து அரசியல் மாறுபாடுகளையும் கலந்துரையாடலையும் தவிர்க்க வேண்டும் என்றும் ஒற்றுமையானது ஆயுதப் போராட்ட செயல்தந்திரத்தின் உடன்பாட்டினை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடரும்...