World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : ஐக்கிய அமெரிக்கா

Court rulings in US election crisis attack democratic rights

அமெரிக்க தேர்தல் நெருக்கடியில் நீதிமன்றத் தீர்ப்புகள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்

By Barry Grey
5 December 2000

Use this version to print

திங்கட்கிழமை வழங்கப்பட்ட இரண்டு நீதிமன்றத் தீர்ப்புக்கள் -அமெரிக்க உயர் நீதிமன்றமும் (Supreme court) புளோரிடா சேர்க்கிட் நீதிமன்றமும் (Florida circuit court)- அமெரிக்க தேர்தல் நெருக்கடியின் மையமாக உள்ள ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்த இரண்டு தீர்ப்புக்களதும் வடிகட்டிய தாக்கம் என்னவெனில், தேர்தல் தினத்தன்று புளோரிடா மாநிலத்தில் வழங்கப்பட்ட வாக்குகள் சரியாகவும் நீதியாகவும் கணக்கிடப்படுவதை தடுப்பதேயாகும். இதன் மூலம் டெக்சாஸ் மாநில ஆளுனர் George W. Bush குடியரசுக் கட்சி ஜனாதிபதியாக மோசடியான விதத்திலும் அரசியல் கபடத்தனங்கள் மூலமும் வெற்றிபெறுவதை சாத்தியமாக்குவதே திட்டம். இவ்விரு நீதிமன்றத் தீர்ப்புக்களதும் சாராம்சம், புளோரிடா மாநிலத்தில் உள்ள பல்லாயிரக் கணக்கான வாக்காளர்களை வாக்குரிமையின்றிச் செய்வதும் பொதுஜன இறைமையின் ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையையே சவால் செய்வதுமாகும்.

இந்த தேர்தல் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்ட நாளில் இருந்து எழுப்பப்படும் கேள்வி இதுதான்: அமெரிக்காவில் ஆளும் வர்க்கப் பிரமுகர்கள் ஜனநாயக விரோத வழிகளில் ஒரு ஜனாதிபதியை ஆட்சியில் இருத்த எந்தளவுக்கு தயாராகியுள்ளார்கள்? நீதிமன்றம் வழங்கியுள்ள பதில் அது மிகவும் நீண்டது என்பதாகும்.

அமெரிக்க மேல் நீதிமன்றம் (High court) நவம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஊர்ஜிதம் செய்யும் காலக்கெடுவை நீடித்து புளோரிடா உயர்நீதிமன்றம் (Supreme court) வழங்கிய தீர்ப்பை ஒரு ஏகமனதான தீர்ப்பின் மூலம் இரத்துச் செய்துள்ளது. புளோரிடா நீதிமன்றம் குடியரசுக் கட்சி தேர்தல் அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்பைப் பல கவுண்டிகளில் (counties) வாக்குகளை கைகளால் எண்ணுமாறும் அதன் பெறுபேறுகளை உத்தியோகபூர்வமான கணக்கில் சேர்க்கும்படியும் கேட்டிருந்தது. குடியரசுக் கட்சி வேட்பாளரின் சகோதரர் ஆளுனர் ஜெப் புஷ்சின் தலைமையிலான குடியரசுக் கட்சி மாநில அரசாங்கம் கைகளால் வாக்குகள் கணக்கிடப்படுவதை தடுக்க முயன்றது. ஏனெனில் சரியான வாக்குகளின் கூட்டுத் தொகை George W. Bush ன் அற்ப வாக்கு வித்தியாசத்தை ஒழித்துக் கட்டிவிடும் என்பதை அது அறிந்து கொண்டிருந்ததே.

அமெரிக்க உயர்நீதிமன்றம் புளோரிடா மேல் நீதிமன்றத் தீர்ப்பை இரத்துச் செய்ய முடியவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக அது வழக்கை புளோரிடா நீதிமன்றத்துக்கு திருப்பியனுப்பியதோடு நீதிபதிகள் குடியரசுக் கட்சி தேர்தல் அதிகாரிகளை எந்த அடிப்படையில் நிராகரித்தனர் என்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, புளோரிடா நீதிமன்ற உத்தரவை சவால் செய்யும் அமெரிக்க மேல் நீதிமன்றத்தின் அடிப்படையேயாகும். அமெரிக்க மேல்நீதிமன்றம் (High court), புளோரிடா தீர்ப்பின் கொள்கை அடிப்படையான ஜனநாயக உள்ளடக்கத்தை தாக்குதலுக்கெனப் பொறுக்கி எடுத்தது. அது புளோரிடா அரசியலமைப்பு உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் வாக்களிக்கும் உரிமையினதும் வாக்குக்களை கணக்கெடுக்கச் செய்யும் உரிமையினதும் புனிதத் தன்மையை வலியுறுத்துகின்றது.

அமெரிக்க நீதியரசர்கள் தமது தீர்ப்பில் கூறியதாவது: "அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அரசியலமைப்புச் சட்டத்தின் 2வது சரத்தின் 1வது பிரிவின் 2வது பகுதியில் நீதிமன்றம் சட்டசபை அதிகாரத்தை தாண்டிச் செல்ல வழங்கப்பட்டுள்ள வசதிகளை புளோரிடா உயர்நீதிமன்றம் (Supreme court) அதனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை என அர்த்தப்படுத்தும் விதத்திலான கருத்து, புளோரிடா மாநில மேல்நீதிமன்றத் தீர்ப்பில் அடங்கியுள்ளது. உதாரணமாக அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "தேர்தல் விதிமுறைகள் சம்பந்தமான சட்டங்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையினால் அமுல் செய்யப்பட அதிகாரம் இருப்பினும் அச்சட்டங்கள் செல்லுபடியாவது அவை அரச சட்ட சபையினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ள வாக்குரிமை மீது "நியாயமற்ற அல்லது அவசியமற்ற" கட்டுப்பாடுகளை விதிக்காது இருக்கும் வரையிலேயேயாகும்...

அக்கருத்து மேலும் குறிப்பிடுகையில் "தேர்தல் சட்டங்கள் வாக்குரிமையை இலகுவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால் அவை பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமைக்கு சாதகமான முறையில் தாராளமானதாக புரிந்து கொள்ளப்பட்டாக வேண்டும்..."

இந்த வார்த்தைகளோடு அமெரிக்க உயர் நீதிமன்றம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் உரிமையை புளோரிடா அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்வதானது, அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அரசியலமைப்புச் சட்டத்துடன் முரண்பட்டுக் கொண்டுள்ளது என பிரகடனம் செய்வதைத் தவிர வேறொன்றும் அல்ல. அது 2ம் சரத்தில் மாநில சட்டசபைகளுக்கு "அவை தெளிவுபடுத்தும் விதத்தில்" ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது. இந்த விதத்தில் அமெரிக்க மேல் நீதிமன்றம் (High court) புளோரிடா நீதிமன்றத் தீர்ப்பை திருப்பியெழுதுமாறு கட்டளையிடுவதானது பொதுமக்களின் இறைமையை வலியுறுத்துவதை நீக்கிவிடுவதாகும்.

புளோரிடா நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக புஷ் முகாமைச் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை செய்யும் போது அமெரிக்க மேல்நீதி மன்றத்தின் தீவிர வலதுசாரி கன்னையினர் வகித்த ஜனநாயக எதிர்ப்பு சரியாக இதுவேதான். பிரதம நீதியரசர் வில்லியம் றெக்ன்குவிஸ்டும் இணை நீதியரசர் அன்டொனின் ஸ்கலியாவும் கோரின் வழக்கறிஞரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு துளைத்ததோடு ஜனாதிபதி தேர்தலில் வாக்குரிமைக்கு அரசியலமைப்புச் சட்ட உரிமை கிடையாது என்ற ஊகத்தின் அடிப்படையில் பொதுஜன வாக்கின் உதவியை நாடாமல், மாநில சட்டசபைகள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளன என இடைமறித்து ஆச்சரியம் அடையச் செய்தனர்.

இந்தக் கோரிக்கையில் உள்ளடங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு அப்பால் சட்ட, அரசியலமைப்பு நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது இது குற்றம் குறைகள் நிரம்பியதாகும். புளோரிடா சட்டமா அதிபரின் (Attorney General) ஒரு வழக்கறிஞரான ஜனநாயகக் கட்சிக்காரர் புளோரிடா அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொதுஜன இறைமை உரிமையை உதவிக்கு அழைப்பதன் மூலம் புளோரிடா நீதிமன்றம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக புஷ் முகாமைச் சேர்ந்தவர்களும் அதன் சகாக்களும் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தவைகளை தனது தொகுப்புரையில் தவிடுபொடியாக்கினார். (அமெரிக்க) ஐக்கிய அரசுகளின் சமஷ்டி அமைப்பு முறைக்கு இணங்க "ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறைமையை நெறிப்படுத்த மாநில சட்டசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்ட அதிகாரம், அதனது மாநில அரசியலமைப்பின் சட்டசபை அதிகாரத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது: "இங்கு மாநில தேர்தல் சட்டங்களை வியாக்கியானம் செய்கையில் புளோரிடா உயர்நீதிமன்ற தீர்ப்பு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்- சரத்து 2 பகுதி 1 பிரிவு 2 ஐ மீறவில்லை. ஏனெனில் புளோரிடா சட்டசபை புளோரிடா பிரஜைகளுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பொதுச் சட்டத்தின் (General low) மூலமே வழங்கியுள்ளது..."

மேலும் (அமெரிக்க) உள்நாட்டுப் போரின் பின்னர் இயற்றப்பட்ட அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஏற்பாடும் தென்மாநில பணக்கார பிரபுக்களின் தோல்வியின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக உரிமைகளின் பிரமாண்டமான உந்து சக்தியைப் பிரதிபலிப்பனவாக விளங்கின. அந்த ஏற்பாடுகள் அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தச் சட்டத்தின் பிரிவு- 2ல் குறிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற அரசிலமைப்புச் சட்டத் திருத்தம், விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கு குடியுரிமையை வழங்கியதோடு மாநிலங்கள் "எவரதும்" வாழ்க்கையை, சுதந்திரத்தை அல்லது சொத்துக்களை உரிய வழிமுறைகள் இல்லாமல் தடுப்பதை அல்லது எவரும் சட்டத்தின் கீழ் சமமாக பேணப்படுவதை பறிப்பதை தடை செய்தது.

அந்த றெக்ன்குவிஸ்டும், ஸ்காலியாவும், தீவிர வலதுசாரி அணியைச் சேர்ந்த அவர்களின் சகாக்களும் இணை நீதியரசர் கிளாரன்ஸ் தோமசும் இந்த பதினான்காம் அரசியலமைப்புச் சட்டதிருத்தத்தை ஒதுக்கித் தள்ளியமை ஆச்சரியத்துக்குரியது அல்ல. ஏனெனில் இவர்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலில் இடைவிடாது ஈடுபட்டு வந்தவர்கள். எவ்வாறெனினும் இந்த அதிதீவிர வலதுசாரி கன்னை பொதுமக்களின் இறைமை அடிப்படைக் கொள்கையை சவால் செய்யும் விதத்தில் ஒரு ஏகமனதான ஆணையை பெற்றுக் கொள்ள முடிந்தமையானது நீதிமன்றத்தின் தாராண்மை கன்னையின் (Liberal Faction) கோழைத்தனத்தையும் கொள்ளையற்ற தன்மையையும் ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையின்போது நாற்றமெடுத்த சமரசத்துக்கு- அல்லது சரியாகச் சொன்னால் அடிபணிந்து போவதற்கு- பிரேரித்தவர் பில் கிளின்டனினால் நியமனம் செய்யப்பட்டவரான றுத் பாடர் ஜின்ஸ் பேர்க் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இதுவே நடைமுறைக்கிடப்பட்டது. றெக்னிகுவிஸ்டினதும் ஸ்காலியாவினதும் ஜனநாயக எதிர்ப்பு பிடிவாதங்களை சவால் செய்ய மறுத்து அவர் புளோரிடா உத்தரவை மாநில உயர்நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்ப சிபார்சு செய்தார்.

றெக்னிகுவிஸ்டும் ஸ்காலியாவும் புளோரிடா மேல்நீதிமன்ற தீர்ப்பை அடியோடு மாற்றுவதற்கு சாதகமாக 5 வாக்குகளும் பாதகமாக 4 வாக்குகளும் பெறும் சாத்தியம் இருந்து கொண்டிருந்தது. பெருமளவிலான மக்களின் கண்களின் எதிரே உயர்நீதிமன்றத்தை செல்வாக்கு இழக்கச் செய்யுமோ என்ற அச்சம் காரணமாக அவர்கள் ஒரு பிளவுபட்ட தீர்ப்பை வழங்கத் தயங்கினர். தீவிர வலதுசாரி கன்னையினரின் சர்வாதிகார இலக்குகளை அம்பலம் செய்ய வைக்க நெருக்கவோ அல்லது ஜனநாயக உரிமைகளைக் காக்கவோ முயற்சிக்காமல் நீதிமன்றத்தில் இருந்த தாராண்மைவாதிகள் தணிந்து போய், ஸ்காலியா அன்ட் கம்பனிக்கு ஒரு ஏகமனது (தீர்ப்பு) மூடுதிரையை வழங்கினர்.

அமெரிக்க உயர்நீதிமன்ற தீர்ப்பு, புளோரிடா மேல்நீதிமன்றம் கோர் கோஷ்டிக்கு சார்பாக மேலும் கட்டளை பிறப்பிப்பதை தடுக்கும் நோக்கில் புளோரிடா மேல் நீதிமன்ற முகத்தில் விழுந்த சூடாகும். புளோரிடா சேர்கிட் நீதிமன்ற நீதிபதி (Florida circuit court Judge) என்.சாண்டர்ஸ் செயில்ஸ் கோர் சர்ச்சைக்குரிய மியாமி டேட், பாம் பீச் கவுண்டிகளின் வாக்குகளை கைகளால் எண்ணும்படி தாக்கல் செய்த மனுமீதான தீர்ப்பை வழங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தருணம் பார்த்து இது இடம் பெற்றமை றெக்னிகியூஸ், ஸ்காலியா அன்ட் கம்பனி அந்த திசையிலும் கூட ஒரு செய்தியை விடுத்துள்ளதை காட்டுகின்றது.

அத்தகைய எந்த ஒரு முயற்சியும் அளவுக்கு மிஞ்சியது என்பதை நிரூபித்துள்ளது. ஜனநாயக உரிமைகளை அவமதிப்புச் செய்யும் துர்நாற்றம் கொண்ட அத்தகைய ஒரு தீர்ப்பின் மூலம் நீதிபதி செயில்ஸ் (Sails) கோரின் சகல வாதங்களையும் புறத்தே தள்ளிவிட்டு, புஷ் முகாமுக்கு ஒரு முழு வெற்றியை கையளித்தார். செயில்ஸ் கோரின் வழக்கறிஞர்கள் கையால் வாக்குகளை கணக்கிடுவது மாநிலங்கள் ரீதியான பெறுபேறுகளை மாற்றியமைக்கும் "நியாயமான சாத்தியம்" இருந்து கொண்டுள்ளதாகக் காட்டத் தவறிவிட்டார் என்ற அர்த்தமற்ற வாதத்தை முன்வைத்தார்.

புளோரிடாவில் புஷ்சும் அவரது குடியரசுக் கட்சி சகாக்களும் கடந்த மூன்று வாரங்களையும் கோர் கேட்டுக் கொண்டபடி பெரும்பான்மை ஜனநாயகக் கட்சி கவுண்டிகளில் வாக்குகளை முழு அளவில் எண்ணும் முயற்சியை தடுக்க, இடைவிடாது முயன்று வந்தனர் என்ற உண்மையை ஊர்ஜிதம் செய்கின்றது.

இது ஏற்கனவே மறு வாக்குக் கணிப்பு இடம்பெற்ற இடங்களிலான பெறுபேறுகளின் அப்பட்டமான முரண்பாடாகவும் விளங்கியது. மேலும் புஷ் முகாமின் முக்கிய சாட்சியாக விளங்கிய மியாமி, டேட், பாம்பீச் கவுண்டிகளில் "பஞ்ச் காட்" (Punch card) வாக்களிப்பு இயந்திரங்களை வரைந்தவரின் வாக்குமூலத்தை புறக்கணித்துவிட்டனர் என்பதும் தெளிவாகியது. இந்தக் கவுண்டிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் குறைபாடுகள் இருந்ததைக் காட்டும் அவரின் உரிமைப் பத்திர விண்ணப்பம் (Patene application) விசாரணையின் போது பிரச்சினைக்குள்ளானது. இறுதியில் கைகளாலான வாக்குகிச்சீட்டுக் கணிப்பு மட்டுமே ஒரு சரியான பெறுபேற்றை வழங்கும் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இதில் உள்ள முக்கிய குறைபாடு என்னவெனில், சோல்ஸ் டல்ஹாகில் இருந்து தென் புளோரிடாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட பிரச்சினைக்குள்ளான 14,000 வாக்குகளில் ஒரு வாக்கைத் தன்னும் பரிசோதிக்காமலே அவர் தனது தீர்ப்பை வழங்கியதேயாகும். புளோரிடா தேர்தல் விதிகள் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சீட்டுக்கள் ஒரு தேர்தலின் சட்ட ரீதியான தன்மையை சர்ச்சைக்கு இடமாக்குமிடத்து ஆரம்ப சாட்சியமாக விளங்கும் எனக் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது.

இந்த நீதிமன்ற தீர்ப்புகளின் பேரில் கோரும் ஜனநாயக கட்சிக்காரர்களும் காட்டிக் கொண்ட அக்கறையானது தேர்தல் கடத்தல் சவாலுக்குள்ளாவதை நிறுத்திக் கொள்ள அவர்கள்-காலந்தாழ்த்தாது உடனடியாகச் செய்ய- தயாராகி வருவதை தெளிவாக்கியுள்ளது. திங்கட்கிழமை தீர்ப்புகளுக்கு முன்னதாக கோர் CBS தொலைக்காட்சி சேவையின் '60 நிமிட நிகழ்ச்சிக்கு' ஒரு பேட்டியை வழங்கினார். அதில் கோர் இறுதியில் புஷ் நிர்வாகத்தின் பின்னால் அணிதிரள வாக்குறுதியளித்தார். திங்கட்கிழமை- நீதிபதி கோரின் தீர்ப்பைத் தொடர்ந்து கோரின் முன்னணி வழக்கறிஞரான டேவிட் பொயிஸ், சோலின் தீர்ப்பு மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பின் பெறுபேறுகளை இறுதியானதாக ஏற்றுக் கொள்ளும் எனப் பிரகடனம் செய்தார். இந்த விவகாரம் வார இறுதியில் தீர்த்து வைக்கப்பட்டு விடும் எனவும் ஜோசியம் கூறினார்.

அமெரிக்க மக்கள், வரலாற்றில் முதல் தடவையாக ஜனநாயக உரிமைகளுக்கு அப்பட்டமாக எதிர்ப்புக் காட்டும் நீதிமன்ற தீர்ப்புக்கள், மோசடிகளின் அடிப்படையில் ஒரு ஜனாதிபதி நியமனம் செய்யப்படுவதை தரிசிக்கின்றார்கள். நீதித்துறையின் உச்சியில் ஸ்காலியாவின் தொனி ஒலிக்கிறது. அவர் மேலங்கி தரித்த ஒரு கும்பல் வழக்கறிஞர் போல் வாதம் செய்கிறார். கீழ் நீதிமன்றங்கள் கைக் கூலிகளால் நிறைந்து போய் உள்ளன. ஒரு பொலிஸ் அரசில் ஒருவர் காணக்கூடிய கட்டளைகளை இவை பிறப்பிக்கின்றன. இவை அமெரிக்காவில் முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரியமான அமைப்புக்கள் எந்தளவுக்கு மோசமான முறையில் நாற்றம் கண்டுள்ளன என்பதை அம்பலமாக்கியுள்ளன.

ஒரு சிலரின் கரங்களில் மட்டும் அதிகாரம் குவிந்து போயுள்ள அமெரிக்க சமுதாயத்தின் இந்த மேற்கண்ட பண்புகள்- இங்கு ஒரு சிறு பிரமுகர் கும்பல் தேசிய செல்வத்தின் பிரமாண்டமான வீதத்தில் ஏகபோகம் கொண்டுள்ளது- அரசின் சகல அமைப்புகளிலும் சர்வாதிகாரப் போக்குகள் வளர்ச்சி கண்டுள்ளதன் மூலம் வெளிப்பாடாகியுள்ளன. ஆளும் வர்க்க வட்டாரங்களினுள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை எதிர்க்கும் கணிசமான கன்னைகளை காணலாம். மற்றொரு கன்னையினர்- ஜனநாயக் கட்சியினுள் வெளிப்பாடாகியுள்ளது போல் ஜனநாயக உரிமைகளை பெருமளவுக்கு அசட்டை செய்வதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்கள் பெரும் வர்த்தக நிறுவனங்களின் அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்தும் கீழ்ப்பட்டதாக இருந்து வரும் வரையும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் பெரிதும் ஆபத்துக்குள்ளாகும். கடந்த மூன்று வார நிகழ்வுகளில் இருந்து தீர்க்கமான படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். தொழிலாளர் வர்க்கம் ஜனநாயக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தனது உரிமைகளைப் பாதுகாக்க அதனது சொந்த வெகுஜன கட்சிகளைக் கட்டியாக வேண்டியதன் அவசியம் வெளிப்பட்டுள்ளது.