World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The world historical implications of the political crisis in the United States

அமெரிக்க அரசியல் நெருக்கடியின் உலக வரலாற்றுத் தாக்கங்கள்

By Barry Grey
6 February 2001

Use this version to print

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு அங்கத்தவர் பறி கிறே அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியினால் சிட்னியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பாடசாலையில் 2001 ஜனவரி 23ம் திகதி நிகழ்த்திய விரிவுரையின் அறிக்கை. இதன் முதல் பகுதி இங்கு பிரசுரிக்கப்படுக்ன்றது.

அறிமுகம்

கடந்த தசாப்தம், அமெரிக்க ஐக்கிய அரசின் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியின் காலப் பகுதியாக விளங்கியது. முதலாளித்துவ விமர்சகர்களால் பொதுவாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள ஒரு தெளிவான முரண்பாட்டை இது எடுத்துக்காட்டுகின்றது: ஒரு புறத்தில் அமெரிக்கா அதனது குளிர் யுத்த தேவதைகளை வெற்றி கண்டு, "உலகின் ஒரே மேலாதிக்க வல்லரசாக" வளர்ச்சி கண்டமையும், முன்னொருபோதும் இல்லாத விதத்தில் வர்த்தகத்தில் வளர்ச்சி கண்டமையும், ஒரு தொகை அரசியல் குமுறல்கள் ஏற்பட்டமையும் மறுபுறத்தில் அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயக அமைப்புக்களது நிலையான தன்மையைக் கேள்விக்கிடமாக்கியது.

இந்த எதிரும் புதிருமான தோற்றப்பாட்டை எப்படி விளக்குவது? நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் உலக சோசலிச வலைத் தளத்துக்கும் (WSWS) வெளியே ஒரு உறுதியான பதிலை எவராலும் வழங்க முடியவில்லை எனக் கூறுவது நியாயமானது என நான் நினைக்கின்றேன். நாம் மறுபுறத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு முழுத் தசாப்த கால சமூக, அரசியல், சித்தாந்த முரண்பாடுகளின் வளர்ச்சியை ஆய்வு செய்துள்ளோம். 1998 ஜனவரியில் இருந்து உலக சோசலிச வலைத் தளம் தினசரி கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்ததில் இருந்து நாம் மொனிக்கா லிவின்ஸ்கி ஊழல்கள், பில் கிளின்டனுக்கு எதிரான வேட்டை போன்ற 20ம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்று சம்பவங்களின் முக்கிய, வழமைக்கு மாறான காலகட்டத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் தொடர்பாகவும், அரசியல் புத்திஜீவி பிரச்சனைகளின் முக்கியத்துவங்களையும் எம்மால் எடுத்து விளக்க முடிந்தது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அமெரிக்க அரசியல், முறைகேடாக எழுதப்பட்ட பிரதியைக் கொண்ட ஒரு உணர்ச்சியைத் தூண்டும் நாடகத்தை ஒத்ததாக விளங்கியது. அதில் கைவைக்க தொடர்புச் சாதன மன்னர்கள் கூடத் தயங்கும் அளவுக்கு அதன் தொனிப் பொருள் விளங்கிற்று. இத்தகைய சம்பவங்கள் ஊடாக வழி தேடுவது மார்க்சிச கோட்பாட்டுக்கு தீர்க்கமான ஒரு சவாலாக விளங்குகின்றது. ஆனால் உண்மையாக என்ன நிகழ்கின்றது என்பதை பகுத்தறிவற்ற போக்கில் இருந்து (சில வேளைகளில் உண்மையாக இருக்கின்ற) அதன் பகுத்தறிவான உள்ளடக்கத்தை கண்டு கொள்வதும், இதன் வர்க்க அத்திவாரத்தைக் காண்பதும், அதன் தோற்றத்தை ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாக காண்பது தொழிலாளர் வர்க்கத்துக்கும் சோசலிசப் புரட்சிக்கும் அதன் அரசியல் சிறப்பு முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்துகொள்வதும் முக்கியமானது.

இக்கூட்டத்தின் ஆரம்ப அறிக்கையின் வெளிச்சத்தில் பின்வருமாறு கேட்பது பொருத்தமானது: அனைத்துலகக் குழு (ICFI) இந்த நிகழ்வுகளைப் பற்றிய ஒரு மார்க்சிச ஆய்வினை அபிவிருத்தி செய்யவும் அதன் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன நிலைப்பாட்டையும் நலனையும் வகிக்கவும் முடிந்தது எப்படி? ஒருவர் மீண்டும் ஒரு தடவை ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்திற்கு திரும்பவும், குறிப்பாக உலக சோசலிசப் புரட்சியும் மார்க்சிச முன்நோக்கும் சம்பந்தமான அதன் கருத்துப்பாட்டுக்கு வரவும் முடிகிறது என நான் எண்ணுகின்றேன்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான (WRP) 1985-86 பிளவின் பின்னர் அனைத்துலகக் குழுவினால் தெளிவுபடுத்தப்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி சம்பந்தமான ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே அமெரிக்க அரசியல் நெருக்கடி சம்பந்தமான இன்றைய ஆய்வுகள் காலூன்றி நிற்க முடியும் என்பதில் பிரச்சினைக்கே இடம் கிடையாது.

1988 ஆகஸ்ட் அனைத்துலகக் குழுவின் முன்நோக்குப் பத்திரம், (Perspective Document) ஸ்ராலினிச ஆட்சியாளர்களின் நெருக்கடிக்கான காரணமாக விளங்கிய உலகளாவிய, பூகோள அரசியல் பொருளாதாரத்தின் பரிமாணங்களை கோடிட்டுக் காட்டியது. தேசிய சுயபூர்த்திக் கொள்கைகளை பெரிதும் அடிப்படையாகக் கொண்டு விளங்கிய ஆட்சிகளின் வீழ்ச்சி, தேசிய அரசு முறையின் ஒரு பொது நெருக்கடியின் ஆரம்ப வெளிப்பாடாக இருந்ததைத் தீர்க்கமான முறையில் அம்பலப்படுத்தியது. இந்நெருக்கடி முதலாளித்துவ உற்பத்தியினதும் பரிமாற்றத்தினதும் பூகோளமயமாக்கத்தின் மூலம் உச்சக் கட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த ஆழமான ஆய்வுகள் முற்றிலும் மார்க்சிச ஆய்வுகளின் விதிமுறைகளின் பாரம்பரியத்தின் வழிவந்ததோடு, லியொன் ட்ரொட்ஸ்கி இதன் தலைசிறந்த ஆய்வாளராகவும் விளங்கினார். இது தொழிலாளர் புரட்சிக் கட்சித் தலைமையில் ஆதிக்கம் கொண்டிருந்த தேசிய சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக இயக்கத்தினை அனைத்துலகவாத அத்திவாரத்தில் மீளவும் காலூன்றச் செய்ய அனைத்துலகக் குழு நடாத்திய அரசியல் போராட்டத்தின் விளைவாகும்.

இதைத் தொடர்ந்து அனைத்துலகக் குழுவும் அதன் அமெரிக்க இயக்கமும் வெளியிட்ட அறிக்கைகளிலும் பத்திரங்களிலும் இந்த அடிப்படை ஆய்வுகளை ஆழமாக்கியது. அவை ஸ்ராலினிச ஆட்சிகள் வீழ்ச்சி கண்டமை இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தலையெடுத்த அனைத்துலக சமபலநிலையின் சரிவைக் குறிப்பதாக வலியுறுத்தின. இது ஒரு அனைத்துலக சமபலமின்மைக் காலப்பகுதியின் உச்சக் கட்டமாக விளங்கியது. இது தவிர்க்க முடியாத விதத்தில் பரஸ்பரம் ஏகாதிபத்திய மோதுதல்களையும் முதலாளித்துவ நாடுகளினுள் வர்க்கப் போராட்டத்தையும் புதிதாக வெடிக்கச் செய்யும்.

மார்க்சிசத்தின் தத்துவார்த்த வெற்றிகள், உலக முதலாளித்துவத்தின் மையமாக விளங்கிய அமெரிக்காவினுள்ளே சமூக, அரசியல் முரண்பாடுகளின் வளர்ச்சி தொடர்பாக இயக்கத்தை உணர்ச்சி பெறச் செய்தது. அமெரிக்கா உயர்வான நிலையில் இருப்பதாக தோற்றமளிக்கையில் அதாவது அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ வெற்றிகளினால் முழு முதலாளித்துவ உலகும் (முழு மனித இனமும்) அதிர்ச்சி கண்டிருந்த வேளையில் அனைத்துலகக் குழு அதன் பொருளாதார நெருக்கடியினதும் அரசியல் தேக்க நிலையினதும் ஆழமான போக்கை உள்ளீர்த்துக் கொண்டது.

நான் எடுத்துக்காட்ட விரும்பும் முன்நோக்கு அபிவிருத்தி தொடர்பாக ஒரு முக்கியமான விதிமுறை பிரச்சினை எழுகின்றது. சரியான விதத்தில் விளங்கிக்கொள்வோமானால் அனைத்துலகவாதம் என்பது எதாவது ஒரு நாட்டினது அரசியல் அல்லது சமூக அபிவிருத்திகளைக் பற்றி குறிப்பிடும் ஒரு அறிக்கை அல்லது கட்டுரையுடன் உபசரணைக்காக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு தொகை வார்த்தைகள் அல்லது வாய்ப்பாடுகள் அல்ல. அனைத்துலக வாதத்துக்கும் தேசிய வாதத்துக்கும் இடையேயான உறவானது சிந்தனையின் மற்றைய பகுதியினை போல் ஒரு இயக்கவியல் சார்ந்ததாகும். ஒரு நிஜமான அனைத்துலக, விஞ்ஞான அணுகுமுறையானது ஒரு இயக்கம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது உலகின் ஒரு பாகத்தில் இயங்கும் வரலாற்று, சமூக போக்குகளை ஆழமாக ஆய்வு செய்யும் அதன் ஆற்றலில் மிகவும் திட்டவட்டமான முறையில் வெளிப்படுகின்றது என ஒருவர் குறிப்பிடலாம்.

அனைத்துலகவாதம் என்பது அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இலங்கை அல்லது வேறொரு நாட்டின் உள்ளேயான நிலைமைகளை ஆய்வு செய்வதை கைவிட வழங்கும் ஒரு அனுமதிப்பத்திரமல்ல. மாறாக உலகப் பொருளாதாரம் உலக அரசியலில் இருந்து ஆரம்பித்து முன்நோக்கிச் செல்வதன் மூலம் மார்க்சிஸ்டுகள் ஒரு அல்லது மற்றொரு நாட்டினுள் அனைத்துலகப் போக்குகள் எடுக்கும் சிறப்பானதும் முரண்பாடான அல்லது ஒரேமாதிரியான வடிவினை ஒரளவிற்கு பரந்தளவிலும், சரியாகவும் புரிந்து கொள்வதற்கு இட்டுச் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டில் தொழிலாளர் வர்க்கம் எதிர் கொண்டுள்ள அபிவிருத்தியின் போக்குகளையும் அரசியல் விவகாரங்களையும் அம்பலமாக்குவதை இது சாத்தியமாக்குகின்றது. இது வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச தன்மையை உறுதியாக நிலைப்படுத்துவதுடன், அதன் மூலம் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தமது கொள்கைகளை ஒரு அனைத்துலக முன்னோக்கில் அடித்தளமாக கொள்ளவேண்டியதின் அவசியத்தை உணர்த்துகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் வேறு எந்த ஒரு மனிதரைக் காட்டிலும் ட்ரொட்ஸ்கி உலக சோசலிசப் புரட்சியை தனது அரசியல் வாழ்வின் மையமாகவும், குறிப்பிடத்தக்க ஒரு தொகை நாடுகளின் அரசியல் ஆய்வுகளிலும் தீர்க்கதரிசனங்களிலும் கூடியளவில் நடைமுறைப்படுத்தியவராகவும் விளங்கியமை ஒன்றும் தற்செயலானது அல்ல. அனைத்துலக முன்நோக்கிற்கும் குறிப்பிட்ட ஒரு நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்திட்டம், மூலோபாய அபிவிருத்திக்கும் இடையேயான உறவினை ஸ்தாபிதம் செய்ய ஒருவர் ட்ரொட்ஸ்கியின் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்சு, ஸ்பெயின், சீனா, அமெரிக்கா அத்தோடு ரஷ்யா தொடர்பான ஆய்வுகளை குறிப்பிட்டாலே போதும்.

ஒரு சாதாரண பெளதீக விஞ்ஞானத்தில் ஒத்ததன்மை குறித்த உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வைத்திய நிபுணர்கள் இருதயம் அல்லது நுரையீரல், தோல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவதை கணக்கில் எடுங்கள். -மூளை உட்பட மனித உடலினை முழு அளவில் உடலின் சிக்கலானதும் அதனது பரஸ்பரம் முரண்பாடான உறவுகளை கொண்டதுமான பாகங்களுக்கும், இந்தப் பகுதிகளுக்கும் முழு உடலுக்கும் இடையேயான உறவுகளை விஞ்ஞான ரீதியாகப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் நோயினை கண்டுகொள்வதனூடாக அவரால் உரிய சிகிச்சையை வழங்க முடியும்.

இது சம்பந்தமாக 'மார்க்சிசத்தை காப்போம்' (In Defense of Marxism) என்ற நூலில் இருந்து ஒரு புகழ் பெற்ற பந்தி நினைவுக்கு வருகின்றது. "இயக்கவியல் சடவாதத்தின் ஏ பீ சீ" யில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: "வழமையான சிந்தனையின் அடிப்படை பிழை எங்கு இருக்கின்றது என்றால், அது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் யதார்த்தத்தின் இயக்கமற்ற வெளிப்பாடுகளுடன் தன்னை திருப்திப்படுத்திக்கொள்ள விரும்புவதிலேயே தங்கியுள்ளது. இயக்கவியல் சிந்தனை எமக்கு நெருக்கமான ஆய்வுகள், திருத்தங்கள், உறுதிப்படுத்துதல் மூலம் கருத்துக்களுக்கு பரந்த உள்ளடக்கத்தினையும் ஈய்ந்து கொடுக்கும் தன்மையும் தருகின்றது. ஒரு அளவுக்கு அவற்றை உயிருள்ள தோற்றத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவருகின்றது என்று கூட நான் கூறலாம். முதலாளித்துவம் பொதுவானதல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட முதலாளித்துவம் அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டமாகும். ஒரு தொழிலாளர் அரசு பொதுவானதல்ல ஆனால் ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் அரசு ஏகாதிபத்தியத்தால் சுற்றிவைளைக்கப்பட்ட ஒரு பின்தங்கிய நாட்டிலாகும்."

இந்த பொதுவான விதிமுறைகளின் கணிப்புகளுக்கு அப்பால் அமெரிக்காவில் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டமை மாபெரும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உலக நிகழ்வு ஆகும் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இது முதலாளித்துவம் சர்வதேச ரீதியான அளவில் புதிய கட்ட நெருக்கடிக்கு உள்ளாகியதன் சமிக்கையாகும். இந்த உண்மை அமெரிக்க முதலாளித்துவத்தினதும் 20பதாம் நூற்றாண்டில் உலக முதலாளித்துவ அமைப்பினுள் அது வகித்த சிறப்பு பாத்திரத்தினதும் தனித்துவமான அந்தஸ்த்தில் இருந்தும் ஊற்றெடுக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு நான் மீண்டும் திரும்புவேன். எவ்வாறெனினும் முதலில் நான் அமெரிக்க ஐக்கிய அரசுகளினுள்ளான இன்றைய நெருக்கடியின் பெரும் அம்சங்களை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

2000ம் ஆண்டு தேர்தலும் அதன் பின்னரும்

அமெரிக்காவின் 2000ம் ஆண்டு தேர்தல் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். இது அமெரிக்க ஜனநாயகத்தின் வடிவங்களுடனும் பாரம்பரியங்களுடனும் மீளமுடியாத பிளவைக் குறித்து நிற்கின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்சின் தெரிவை கையாண்ட உயர் நீதிமன்றத்தின் ஐந்துக்கு நான்கு தீர்ப்பின் சிறப்பு முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்கையில் 'துணிச்சலான செயல்" (Crossing the Rubicon) போன்ற வார்த்தைகளை கையாள்வது பொருத்தமானது. தொடர்பு சாதனங்களும் அரசியல் அமைப்புகளும் -பழமை வாதிகளுக்கு குறையாத விதத்தில் லிபரல்களும்- 2000ம் ஆண்டின் நவம்பர், டிசம்பர் நிகழ்வுகளை அப்படி பெரும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த எதுவும் நடைபெற்று விடாதது போல் ஒதுக்கித் தள்ளிவிட முயற்சிக்கையில் அமெரிக்கா ஒரு அடிப்படையான விதத்தில் மாற்றங்கண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய அரசுகளில் அல்லது உலகில் நிலைமை முன்னர் இருந்தது போல் இனிமேல் இருக்கப்போவதில்லை.

நவம்பர் 7ம் திகதிய வாக்கெடுப்பின் பின்னர் அரசியல் அமைப்புகள் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி போட்டி விவகாரங்களை தீர்த்துக் கொள்ள ஐந்து வாரங்கள் பிடித்தது. 20ம் நூற்றாண்டின் அமெரிக்க வரலாற்றில் இத்தகைய ஒரு அபிவிருத்தி முன்னர் இடம்பெற்றதில்லை. இறுதியான தீர்வு, கட்சி சார்பான முறையிலும் ஜனநாயக எதிர்ப்பு அடிப்படையிலும் செய்து கொள்ளப்பட்டது.

குடியரசுக் கட்சி அதன் வேட்பாளருக்கான தொடர்பு சாதனங்களின் பேராதரவுடன் தேசிய ரீதியில் 500,000 வாக்குகளால் தோற்ற ஒருவர் புளோரிடா மாநிலத்தில் மொத்தமாக வழங்கப்பட்ட 6 மில்லியன் வாக்குகளில் (இதன் 25 தேர்தல் தொகுதி வாக்குகள் தேசிய ரீதியில் தொகுதிகள் அடிப்படையிலான வெற்றியினை நிர்ணயம் செய்யும்) ஒரு சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியாளனாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தது. ஆரம்ப இயந்திர வாக்குக் கணக்கெடுப்பில் ஜனாதிபதிக்கு முன்னுரிமை வாக்குகளை வழங்கியிராத வாக்குச் சீட்டுக்களை உள்ளூர் தேர்தல் சபைகள் கைகளால் எண்ணிக் கணக்கெடுப்பதை தடுப்பதன் மூலம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும். புளோரிடா சட்டத்தில் அத்தகைய கைகளால் வாக்குச் சீட்டுக்களை எண்ணிக் கணக்கிட வாய்ப்பு உள்ளது. ஏனைய மாநிலங்களிலும் தேர்தல் சட்டங்களின்படி அவ்வாறு செய்ய முடியும். எந்த விதத்திலும் அவை அமெரிக்க தேர்தல்களில் அருமையான விடயம் அல்ல. உண்மையில் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் நாடு பூராவும் உள்ள பல தேர்தல் தொகுதிகளில் அத்தகைய மீளக் கணக்கெடுப்புகளை கேட்டுப் பெற்றுக் கொண்டனர்.

உண்மையில் நவம்பர் 7ம் திகதி வாக்களிப்பு இடம்பெற்ற ஒரு சில மணித்தியாலங்களுள் புளோரிடாவில் தேர்தல் முறைகேடுகள், மோசடிகள் பற்றிய பல தகவல்கள் வெளியாகின. இதனால் பாம்பீச்சில் (Palm Beach) உள்ள ஆயிரக் கணக்கான யூத இன வாக்காளர்கள் இந்த தேர்தல் தடுமாற்றங்கள் காரணமாக யூதர் எதிர்ப்பு வேட்பாளர் பட் புச்சானனுக்கும் (Pat Buchanan) ஏனைய பிராந்தியங்களில் ஆபிரிக்க அமெரிக்கர்களும், ஹெயிட்டியன் அமெரிக்கர்களும் வாக்களிக்க உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி பொலிசாரின் வீதித் தடைகளில் வாக்களிக்கா வண்ணம் தடுக்கப்பட்டனர்.

புளோரிடா மாநிலம் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் சகோதரர் ஆளுனர் ஜெப் புஷ்சின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இம்மாநிலத்தின் செயலாளர் கத்தறின் ஹரிஸ். இவர் உள்ளூர் தேர்தல் சபைகள் வாக்குகள் மீள எண்ணப்படுவதை தடுக்க தமது அதிகாரத்தை பாவித்தார். இவர் இம்மாநிலத்தில் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்சின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இணைத் தலைவராக விளங்கினார். குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் கொண்ட புளோரிடா மாநில சட்ட சபை; ஜனநாயகக் கட்சி அல்கோருக்கு சார்பாக வாக்குக் கணக்கெடுப்பு இருப்பின் அதைக் கணக்கெடுக்கப் போவதில்லை எனவும் புஷ்சுக்கு சார்பான தமது சொந்த அங்கத்தவர்களை நியமனம் செய்யப் போவதாகவும் முன்னர் அறிவித்து இருந்தது.

தொடர்பு சாதனங்கள் எந்த ஒரு அரசியல் சார்பு அல்லது புளோரிடா அதிகாரிகளின் பேரிலான குளறுபடிகள் பற்றிய குற்றச் சாட்டுகளை பொதுவில் ஒரு கட்சி சார்பான சேறடிப்பாகவே கணித்தனர். இதில் இவர்கள் சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party) எனப்பட்ட கும்பலின் ஜக் பார்ண்சுடன் (Jack Barnes) சேர்ந்து கொண்டனர் என்பதை குறிப்பிடுவது அவசியம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு தொகை 'மிலிட்டன்ட்' (Militant) பத்திரிகைகளை வெளியிட்ட போதிலும் பார்ண்ஸ் அன்ட் கம்பனி தேர்தல் பற்றியும் அதன் பின்னைய சம்பவங்கள் பற்றியும் எதுவும் கூறவில்லை. ஜனவரி 8ம் திகதிய 'மிலிட்டன்ட்' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை அல் கோர் தேர்தலை களவாடிக் கொள்ள முயல்வதாகக் குற்றம் சாட்டியதோடு கத்தறின் ஹரிசை லிபரல்களால் தொடுக்கப்பட்டுள்ள "பெண்கள் எதிர்ப்பு" தாக்குதலுக்கு பலியான ஒருவராக எடுத்துக்காட்டியது.

நவம்பர் 7ன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகத் தொடரும் என்பது தெளிவானதும் அமெரிக்க அரசியல் பொருளாதார அமைப்புகளுக்கு ஒரு அடிப்படை பிரச்சினையை தோற்றுவித்தது. இந்த முட்டுக்கட்டை நிலையைத் தீர்க்க அதனது முயற்சிகளை என்ன கணிப்பீடுகள் வழி நடாத்தும்? அது ஒரு ஜனநாயகத் தீர்வு காணும் இலக்கில் பயணம் செய்யுமா? அதாவதுவாக்காளர்களின் விருப்பை பூர்த்திசெய்யக்கூடிய நல்ல முறையில் நிர்ணயம் முறையில் அதன் விருப்பை பிரதிநிதித்துவம் செய்வதா? அல்லது அது வேறு நோக்கங்களின் அடிப்படையில் பயணம் செய்யுமா?

ஒரு சில வாரங்களுக்கு முன்னரே வாஷிங்டன் கரகோஷம் செய்ததோடு மட்டுமன்றி சேர்பியாவில் வாக்குச் சீட்டின் புனிதத்தின் பேரால் அரசாங்க அலுவலகங்கள் மீது பாய்ந்து விழும் ஒரு மக்கள் கிளர்ச்சியை ஒழுங்கு செய்யவும் உதவியது. ஆனால் தனது தேர்தல் நெருக்கடியானதும் அமெரிக்க ஆளும் பிரமுகர்களின் பொதுமக்களின் இறைமை கொள்கை சம்பந்தமாக அத்தகைய ஒரு அக்கறை காணப்படவில்லை.

புளோரிடா வாக்குகள் தொடர்பான போராட்டக் காலத்தில் குடியரசுக் கட்சி மியாமி டேட் கவுன்டியின் (Miami Dade County) தேர்தல் அலுவலகங்கள் மீது ஒரு குண்டர் தாக்குதலை ஏற்பாடு செய்தது. சர்ச்சைக்குரிய வாக்குச் சீட்டுக்களை மீளக் கணக்கிடும்படி கோருவதை அவர்களைக் கைவிடும் படி நெருக்கும் தாக்கத்தை அது கொண்டிருந்தது. அது அமெரிக்க இராணுவத்துக்கு நேரடி அழைப்புக்களை விடுத்தது. ஜனநாயகக் கட்சிக்காரர்களின் வாக்குச் சீட்டு மீளக் கணக்கெடுப்பையும் புளோரிடா உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையையும் எதிர்க்கும்படி அது வேண்டியது.

இறுதியில் ஐந்து குடியரசுக் கட்சி வலதுசாரி அமெரிக்க உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புளோரிடா உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தூக்கிவீசி, தேர்தலை நியமனம் செய்தனர். இந்த நீதியரசர்கள் முதலாளித்துவ அரசின் சிகரமான தெரிவு செய்யப்படாத பெரும்பான்மையினரைக் கொண்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாக்குச் சீட்டுக்களை மீளக் கணக்கெடுப்பதை நிறுத்தியதோடு அதன் மூலம் வாக்குரிமையையும் நசுக்கினர். இவர்கள் சட்ட ரீதியில் இதை நியாயப்படுத்தும் பொருட்டு அரசியலமைப்பு சட்டம் பற்றிய அப்பட்டமான ஜனநாயக எதிர்ப்பு வியாக்கியானத்தையும் எடுத்துக் காட்டினர். இது கடந்த 130 வருடங்களுக்கு மேலாக வாக்குரிமை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டவியலின் பொது நெழிவு சுழிவுகளாக விளங்கி வந்ததாகும். அமெரிக்க உயர் நீதிமன்றம் அமெரிக்க மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்ய வாக்களிக்க அரசியலமைப்பு உரிமை கிடையாது என பெரும்பான்மையாக வாக்களித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினதும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரின் கோழைத்தனமான சலுகை வழங்கும் பேச்சின் பின்னர் லிபரல் அமைப்புகள் எதிர்ப்புக் காட்டுவதை அடியோடு கைவிட்டன என்ற அர்த்த புஷ்டியான அரசியல் உண்மை வெளிவந்தது. ஜனநாயகக் கட்சி ஏ.எப்.எல்-சீ.ஐ.ஓ. (அமெரிக்க தொழிற்சங்க அமைப்பு-AFL-CIO), சிவில் உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், பத்திரிகைகள் என்பன இதில் அடங்கும். ஒரு சில அற்ப சொற்பமான விதிவிலக்குகளோடு உத்தியோகபூர்வமான அரசியலும் அபிப்பிராயமும் தேர்தல் கொள்ளையை அங்கீகரிக்கும் திசையில் தள்ளப்பட்டுள்ளன.

ஒரு லிபரல் பொருளியலாளரும் அரசியல் விமர்சகருமான றொபேட் குட்னரால்(Robert Kuttner) இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டவை ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சில கட்டுரைகளில் அடங்குபவையாக விளங்கின. தேர்தல் மோசடிகளின் எதிரில் தலைபணிந்து போன ஜனநாயகக் கட்சிக் காரர்களையும் புஷ்சினால் அமைக்கப்பட்ட அதி தீவிர வலதுசாரி அமைச்சரவையை காத்திரமான முறையில் எதிர்க்க மறுத்ததையும் சாடும் வகையில் குட்னர் எழுதியதாவது: "இது ஒரு இரத்தம் சிந்தாத சதிப் புரட்சியின் பின்னரான நாடு போன்றது. நாளாந்த வாழ்க்கை இடம் பெறுகின்றது. பழக்கப்பட்ட தொடர்பு சாதனங்கள் உண்மையில் கூச்சல் போடுகின்றன. ஜனநாயகச் சடங்குகள் சகித்துக் கொள்கின்றன. கட்சிக்கு வெளியிலான எதிர்ப்பு பற்களின்றி போலியாக நடிக்கின்றது."

ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒரு சர்வாதிகாரமாக இன்னமும் பரிணாமம் அடையவில்லை. ஆனால் இதனது ஆளும் பிரமுகர்கள் ஒன்றில் ஒரு பாசிச பாணியிலான சர்வாதிகார ஆட்சிக்கு அல்லது சமூகப் புரட்சிக்கு இட்டுச் செல்ல வேண்டிய ஒரு பாதையில் இறங்கியுள்ளனர். 2000ம் ஆண்டின் தேர்தல் முதலாளித்துவத்தின் பூகோள கோட்டையில் ஒரு புரட்சிகர நெருக்கடி உதயமாகியுள்ளதைக் குறித்துக் கொண்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 11 வார கால நிகழ்வுகளும் முதலாளித்துவ அமைப்பினுள் ஜனநாயக உரிமைகளை கட்டிக் காப்பதற்கான அதாவது ஆகக்குறைந்தது ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் கட்டுமானத்தினுள் தவிர்க்க முடியாத விதத்தில் ஒரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட வடிவில் தன்னும் ஜனநாயக உரிமையை கூட பாதுகாக்க ஒருவரும் இல்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. நவம்பரிலும் டிசம்பரிலும் புளோரிடா தேர்தல் தொடர்பான போராட்டம் பரந்துபட்டதும் அத்தியாவசியமான முறையில் தலைநீட்டிய அரசியல் பிரச்சினை: ஆளும் கும்பல்கள் ஜனநாயக வடிவங்களை உடைத்துத் தகர்த்துக் கொண்டு எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருந்தது? என்பதுதான். தீர்வுகள் அம்பலப்படுத்தியது போல் பதில்: உண்மையில் மிகவும் நீண்ட தூரமாகும்! உண்மையில் நாம் முன்கூறியிருக்க கூடியதை விட மிக நீண்ட தூரமாகும்.

இதன் அர்த்தம் இந்நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சி அல்லது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஆச்சரியம் அடையச் செய்தது என்பதாகாது. மாறாக சோசலிச சமத்துவக் கட்சியும் எமது அனைத்துலக சாதனமான உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) கடந்த பல வருட காலங்களாக அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயக அமைப்புகளினுள் நெருக்கடியின் அறிகுறிகளையும் பின்னடைவுகளையும் கவனமாக அணுகி வந்துள்ளது. அரசியல் அமைப்புகளுக்கும் வெகுஜனங்களுக்கும் இடையே அதிகரித்து வந்த ஆளமான பிளவுகளையும், பொருளாதார, அரசியல் ஆளும் பிரமுகர்களிடையேயான அரசியல் யுத்தத்தின் உக்கிரத்தையும் ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பகுதியினர் சதிகள், எதிர்ப்புரட்சி விதிமுறைகளில் அதிகரித்த விதத்தில் ஈடுபட்டு வந்ததையும் ஆய்வு செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளியிட்டதை ஒருவர் சுட்டிக் காட்ட முடியும். கிளின்டன் எதிர்ப்பு அரசியல் குற்றச்சாட்டு புனித யுத்தத்தின் உச்சக் கட்டத்தில் டிசம்பர் 1998ல் WSWS "அமெரிக்கா உள்நாட்டு யுத்தத்தை நோக்கி செல்கின்றதா?" என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடிய தலையங்கம் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது.

சமீபகாலச் சம்பவங்களின் வெளிச்சத்தில் அந்த அறிக்கையில் இருந்து சில பந்திகளை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமானது. அது பின்வரும் விதத்தில் தொடங்கியது: "ஜனாதிபதி பில் கிளின்டனை அரசியல் குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யும் சனிக்கிழமை வாக்கெடுப்பின் பின்னர் அமெரிக்கா வரலாற்றுப் பரிமாணத்திலான அரசியல் நெருக்கடியின் மரண அவஸ்தைக்கு உள்ளாது உடனடியாக தெளிவாகியுள்ளது. வாஷிங்டனிலான குழப்ப நிலைமையை ஏதோ ஒரு வகையான அமளிதுமளிமிக்க விகடமாக வருடம் பூராவும் விபரித்து வந்த தொடர்புச் சாதனங்கள் கூட இடம்பெற்று வருபவை உயிராபத்தானவை எனவும் பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் எனவும் அங்கீகரிக்கத் தொடங்கின.

"இந்த அரசியல் குற்றச்சாட்டு வாக்கெடுப்பிற்கு முன்னதாக இடம்பெற்ற விவாதங்களின் மிகவும் மோசமான அம்சம் அதன் குமுறலும் நச்சுத்தனமான தன்மையுமேயாகும். உள்வாரி அரசியல் குத்து வெட்டுக்களின் கசப்புணர்வின் வரலாற்று முன்னோடிகளைத் தரிசிப்பதற்கு ஒருவர் சும்மா 1868ல் ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான கடைசி அரசியல் குற்றச்சாட்டு அன்றி அதற்கு அப்பால் 1861ல் உள்நாட்டு யுத்தத்தை வெடிப்பதற்கு இட்டுச் சென்ற வருடங்களுக்குச் செல்ல வேண்டும். வாக்களிப்பின் பின்னர் ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் றிச்சார்ட் கெப்ஹாட் அமெரிக்காவின் அரசியல் வன்முறையின் மட்டத்தை அண்மித்துக் கொண்டுள்ளதாக எச்சரிக்கை செய்தார்."

அந்த அறிக்கை தொடர்ந்து கூறியதாவது: "வாஷிங்டனிலான நெருக்கடி சிக்கலான அரசியல், சமூக, பொருளாதார போக்கின் பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் ஒன்றுதிரண்டுள்ள, அதிகரித்துவரும் தீர்க்கப்படாத முரண்பாடுகளின் பழுவின் கீழிருந்து வெடித்துச் சிதறுகின்றது. உலகப் பொருளதாரத்தின் பூகோளமயமாக்கத்தோடு சம்பந்தப்பட்ட பொருளாதார, தொழில் நுட்ப போக்கானது அமெரிக்க அரசியல் ஸ்திரத்தன்மை நீண்ட காலமாகத் தங்கியிருந்த சமூக நிலைமைகளையும் வர்க்க உறவுகளையும் அழித்துள்ளது.

"அமெரிக்க சமுதாயத்தின் பரந்த தட்டினரின் பாட்டாளி மயமாக்கம் இந்த அழிப்பின் மிகவும் முக்கியமான அம்சமாகும். பாரம்பரியமான மத்தியதர வர்க்கங்களின் அளவிலும் பொருளாதார செல்வாக்கிலுமான சீரழிவும் சமூக அசமத்துவத்தின் வளர்ச்சியும் செல்வம், வருமானம் இரண்டினதும் பங்கீட்டிலுமான தள்ளாட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. பெரும் கைத்தொழில் மயமான நாடுகளில் அசமத்துவமானது ஐக்கிய அமெரிக்க அரசுகள் கடந்த 25 ஆண்டுகள் அல்ல 50க்கும் மேலான காலப்பகுதியில் நிதி வசதிபடைத்த தட்டினர்களுக்கும் மக்களின் எஞ்சிய பகுதியினர்களுக்கும் இடையே நீண்ட பெரும் இடைவெளியைக் கொண்டுள்ளது.

"முன்னொரு போதும் இல்லாத அளவிலான சமூக அசமத்துவம் சமுதாயத்துக்குப் பயங்கரமான பதட்டங்களை விட்டுச் செல்கிறது. செலவந்தர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பரந்த அளவிலான ஆதாள பாதாளம் இருந்து கொண்டுள்ளது. இதனை ஒரு மத்தியதர வர்க்கத்தினால் மத்தியஸ்தம் செய்து வைக்க முடியாது போயுள்ளது. ஒரு சமூகக் காவல் எல்லையாக முன்னர் விளங்கியதும், முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு ஆதரவு தரும் முக்கிய தளமாகவும் இருந்த இடைநடுத் தட்டுக்களால் இனியும் அந்தப் பாத்திரத்தை வகிக்க முடியாது...

"குடியரசுக் கட்சியின் பலம் பின்வருவனவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ளது: இது எந்த ஒரு முதலாளித்துவ அரசியல் கன்னையைக் காட்டிலும் மிகவும் உறுதியாகவும் மிகவும் ஈவிரக்கமற்ற முறையிலும் அமெரிக்க நிதித்துறை பிரமுகர்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்தத் தீவிரவாத வலதுசாரிகள் தாம் வேண்டுவது எதை என்று அறியும். இதை அடையும் பொருட்டு பொதுஜன அபிப்பிராயத்தின் மீது முரட்டுத்தனமாகக் குதிரையோட ஆயத்தமாக உள்ளதையும் அறியும். ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இலாயக்கற்றவர்களாக கைகளைப் பிசைந்து கொண்டும் வெறும் பார்வையாளர்களாகவும் நின்று கொண்டிருக்கையில் குடியரசுக் கட்சிக்காரர்கள் சாதாரண அரசியலமைப்புச் சட்ட விதிகளுடன் விளையாடிக் கொண்டு இருக்கவில்லை.

"குடியரசுக் கட்சிக்காரர்கள் அமெரிக்காவில் வர்க்க உறவுகளின் காட்டுமிராண்டித் தனத்தைக் காட்டிக் கொண்டு இருக்கையில் அவர்களது ஜனநாயகக் கட்சி முதலாளித்துவ எதிரிகள் இதற்கு முரணாக தளதளத்து மனமுடைந்து போன லிபரல் வாதத்தை உள்ளடக்கிக் கொண்டு இருந்தனர். அவர்களின் அடியுண்டு போன சீர்திருத்தவாத முன்நோக்கு ஆளும் வர்க்கத்தினால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது."

இந்த ஆய்வுகள் ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்து விளக்கி வந்த அனைத்துலக முன்னோக்கின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆழமானதும் புரட்சிகரமானதுமான பூகோளமயமாக்கத்தின் தாக்கங்களின் அடிபடையில் விளக்கப்பட்டது. உலகப் பொருளாதாரத்துக்கும் தேசிய அரசு வடிவத்துக்கும் இடையேயான உக்கிரமான முரண்பாடுகளில் இருந்து ஏற்பட்ட உற்பத்தி, பரிமாற்ற வடிவங்களதும் ஆழமான மாற்றங்களின் பெறுபேறாக ஏற்பட்டதாகும்.

2000ம் ஆண்டின் தேர்தல் முட்டுச் சந்தி நிலைமையில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் நவம்பர் 7 வாக்களிப்பில் இருந்து தலையெடுத்த நெருக்கடி 1998ம் ஆண்டிலும் 1999ம் ஆண்டின் தொடக்கத்திலும் கிளின்டன் எதிர்ப்பு ஊழல்களதும் ஜனநாயக அமைப்புகள் குடைசாய்ந்து போனதன் தொடர்ச்சியாக உச்சக்கட்டமாகவும் விளங்கியது என விளக்கியது. இருப்பினும் தேர்தல் நாளுக்கு முன்னர் நாம் இந்தப் போக்கானது 2000 ஆண்டு தேர்தலில் ஆழமாகவும் திட்டவட்டமாகவும் அவை எடுத்த வடிவத்தை எடுக்கும் என எதிர்பார்க்கவில்லை. நிகழ்வுகள் அத்தகைய ஒரு எதிர்பார்த்திராத குமுறல் திருப்பத்தை எடுக்கும் போது அவை சமுதாயத்தினுள் வளர்ச்சி கண்டுவரும் முரண்பாடுகள் பிரமாண்டமான பதட்டநிலைப் புள்ளியை எட்டிவிட்டதைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றில் அத்தகைய திருப்புமுனைகள் தொடர்ச்சியின்மையின் இயக்கவியல் புள்ளியை உள்ளடக்கி உள்ளது. அதாவது அளவு மாற்றங்கள் ஒரு பண்பு ரீதியான பாய்ச்சலாக மாற்றமடைதல் பழைய வடிவங்களில் இருந்து ஒரு புதிய யதார்த்தம் தோன்றுவதைக் காட்டுகின்றது.

ஆட்சிப் பீடம் ஏறியுள்ள புஷ் நிர்வாகம் ஒரு பெரிதும் பூரணமான விதத்தில் அமெரிக்க ஐக்கிய அரசுகளில் முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடிக்கான உதாரணமாக விளங்குகின்றது. புஷ் ஒரு அரசியல் புத்திஜீவி பூஜ்யம். அவர் கடந்த இரண்டு தசாப்த கால ஊக வியாபார செழிப்பினால் பொருளாதார வெற்றியும் சமூகப் பிரபல்யமும் பெற்ற சமூகத் தட்டின் சிறப்பு குணாம்சங்களை சேர்த்துக் கொண்டுள்ளார். இச்செழிப்பு தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலையும் ஊழல்களதும் ஒட்டுண்ணித்தனத்தினதும் ஆச்சரியத்துக்குரிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அறிவிலியும் குறுகிய பார்வையும், உலோபியுமான இந்தத் தட்டினுள் தனிப்பட்ட செல்வத் திரட்சிக்கும் இலாப சம்பாத்தியத்துக்கும் தடையாக உள்ள சகலதையும் ஒழித்துக்கட்டும்படி கோரும் பொருளாதார, நிதி பிரமுகர்களின் தட்டுக்கள் உள்ளடக்கியுள்ளனர்.

புஷ்சின் அமைச்சரவை முன்னைய குடியரசுக் கட்சி நிர்வாகம், அமெரிக்கக் கம்பனிகள், கோடீஸ்வரர்கள், குடியரசுக்கட்சியின் அதிதீவிர பாசிச வலதுசாரி சித்தாந்தவாதிகள், வலதுசாரி கிறீஸ்தவர்களையும், துப்பாக்கிகள் சாதாரணமாக வைத்திருக்கக் கோருபவர்களையும், வெள்ளை மேலாதிக்க பயங்கரவாத சக்திகளுடனும் உறவு கொண்டுள்ள உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. இது ஒரு பெரிதும் ஈடாட்டம் கண்ட ஒரு ஆட்சியாகும். அத்தோடு அது இதனடியில் வளர்ச்சி கண்டுவரும் சமூக முரண்பாடுகளையிட்டு குறிப்பிடத்தக்க அளவில் உணர்ந்துகொள்ள முடியாத ஒன்றுமாகும்.

உத்தியோகபூர்வமான அரசியலின் பெரிதும் குறுகிய சமூக அடிப்படையையும் இதில் இருந்து வெகுஜனங்களை பிரித்துள்ள ஆதாள பாதாளத்தையும் கொண்டுள்ள ஒரு அனுமானிக்கப்பட்ட அரசாங்கத்தை ஒருவர் தெரிவு செய்ய முயலுமிடத்து புஷ்சினாலும் அவரது விசுவாசமான ஆலோசகர்களாலும் பொறுக்கியெடுக்கப்பட்ட ஆட்களை விட எவராலும் சிறப்பாக செய்ய முடியாது.

புஷ்சும் அவரின் அரசியல் உதவியாளரான றிச்சாட் சேனியும் (இருவரும் எண்ணெய் கோடீஸ்வரர்கள்) தாம் பெரும்பான்மையான வாக்குக்களை பெற்றுள்ளவர்கள் போல் தமது முதலாளித்துவ சார்பான அரசியலை கொண்டுநடத்துவர். அவர்கள் புஷ்சின் தேர்தல் பிரச்சார இயக்கத்தின் மையமாக விளங்கிய செல்வந்தர்களின் வரிகளை பிரமாண்டமான அளவில் குறைக்க திடசங்கற்பம் பூண்டுள்ளனர். நீதி அமைச்சின் தலைவராக இவர்கள் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதியை நியமனம் செய்துள்ளனர். இவர் கருச்சிதைவை தடை செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்காகவும் பாடசாலைகளை நிறபேதத்தின் அடிப்டையில் தரம் பிரிப்பதற்காகவும் பிரச்சாரம் செய்தவர். உள்நாட்டுத் திணைக்களத்தின் தலைவராக இவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் சொத்து உரிமைகளைக் கட்டிக்காப்பதில் முன்நின்றவர். சுகாதார, மனித சேவைகள் திணைக்களத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் அடிப்படை நலன்புரி சேவைகளை ஒழிப்பதிலும் தனியார் பாடசாலை வவுச்சர் (Voucher- GF»îM) முறை மூலம் அரசாங்க கல்வி முறையை ஒழிப்பதிலும் பேர்போனவர்.

இந்த நிர்வாகம் அமெரிக்க கூட்டுத்தாபனங்களையும் குடியரசுக் கட்சியின் தீவிரமான "அடித்தளமாக" விளங்கிய குழம்பிப் போன மத்தியதர வர்க்க மூலகங்களையும் சமன் செய்யும் ஒன்றாக விளங்கியது. சிறப்பாக வளர்ச்சி கண்டுவரும் ஒரு பொருளாதார பின்னடைவு நிலைமையின் கீழ் இதனது பொருளாதாரக் கொள்கைகள் அதனது மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக விளங்கியது. தனது பாசிசத்துக்கு சார்பான ஆதரவாளர்களை ஆச்சரியத்தில் வைக்கும் பொருட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வகையிலான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது. இதனாலேயே கிளின்டன் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் மொனிக்கா லிவின்ஸ்கி சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும் என சுயாதீன வழக்குத் தொடுநர் றொபேட் றேக்கு (Robert Ray) வோல் ஸ்ரீட் ஜேர்ணல் (Wall Street Journal) அழைப்பு விடுத்தது.

இந்த வழிப்பாதை பிரமாண்டமான குமுறல்களைத் தூண்டுவதுடன் பிணைந்து கொண்டு இருந்தது. வெகுஜனங்களின் மனோநிலை பதவிக்கு வரும் அரசாங்கத்தை தீர்மானம் செய்யும் அவாக்களுடனும் சமூக பிரதிபலிப்புகளுடனும் பெரிதும் மோதிக் கொண்டது. நவம்பர் 7ம் திகதிய தேர்தல் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல், பொருளாதாரத்துறை பிரமுகர்களால் ஊக்குவிக்கப்பட்ட தடையற்ற வர்த்தகத் திட்டத்துக்கு எதிரான ஒரு திசையில் சமுதாயம் ஆழமாகப் பிளவுண்டு போனதையும் தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த பகுதியினர் அதற்கு எதிராகப் பயணம் செய்து கொண்டுள்ளதையும் அம்பலமாக்கியது.

வெகுஜன வாக்குகளின் தீர்ப்பு மிகவும் நெருக்கமான ஒன்றாக விளங்கியது. பசுமை (Green) கட்சியின் வேட்பாளர் ரால்ப் நாடரின் (Ralph Nader) வாக்குகளின் எண்ணிக்கையை கோரின் வாக்குகளின் எண்ணிக்கையோடு சேர்த்தால் (பரந்த அடிப்படையிலும், அமெரிக்கன் அரசியலில் பெரிதும் குறுகிய கட்டுமானத்தினையும் கணக்கில் கொண்டு) ஒரு தாராண்மை அல்லது 'இடது' போக்கினைக் கொண்ட வாக்கு 3.5 மில்லியன் அல்லது 3.5 சதவீதம் ஆகும். மேலும் கோரின் வாக்குகள் பெரும் நகர்ப்புற கைத்தொழில் மையங்களான நோர்த் வெஸ்ட், மிட்வெஸ்ட், வெஸ்ட் நோர்பட் என்பவற்றையே மையமாகக் கொண்டிருந்தது. கோர் தொழிலாள வர்க்க வாக்குகளில் பெரும் பங்கையும் தொழிலாளர்களிடையே பெரிதும் ஒதுக்கப்பட்ட பகுதியினரின் வாக்குகளில் பிரமாண்டமான பகுதியையும் வெற்றி கொண்டார். பல நகரங்களில் கறுப்பு, ஸ்பானிய, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் அணிதிரண்டு கோருக்கு வாக்களித்தனர்.

புஷ்சின் வாக்குகள் பெரிதும் கிராமப் புறங்ளிலிருந்தும் பொதுவாகச் சொன்னால் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து- நாட்டின் தெற்கு, மிட்வெஸ்ட் பகுதிகளில் இருந்து- கிடைத்தன. தேர்தல் சித்திரம் நாடு பெரிதும் பிளவுண்டு போயுள்ளதைச் சித்தரித்துக் காட்டுகின்றது.

இதனடியில் இருந்து கொண்டுள்ள சமூகத் துருவப்படுத்தலானது நாட்டின் அனைத்து அரசியல் அமைப்புகளிலும் பிரதிபலிக்கச் செய்கின்றது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சிக்கு இருந்து கொண்டுள்ள பெரும்பான்மை அந்த சட்ட ரீதியான கிளையின் வரலாற்றில் இருந்து கொண்டுள்ள சிறிய பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்கின்றது. செனட் சபை 50-50 ஆக பிளவுண்டு போயுள்ளது. உயர் நீதிமன்ற பெரும்பான்மை அதிதீவிரவாத பெரும்பான்மையினருக்கும் பெரிதும் தாராண்மைவாதிகளான சிறுபான்மையினருக்கும் இடையே 5-4 ஆக பிளவுண்டு போயுள்ளது.

கோரின் அற்பத்தனமானதும் அவமானமும் கொண்ட பிரச்சாரத்துக்கு தொழிலாளர் வர்க்கத்தின் பேராதரவு கிடைக்கவில்லை. சிறப்பாக சனத்தொகையின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரிடையே புஷ்சுக்கும் குடியரசுக் கட்சிக்கும் எதிரான ஆழமான எதிர்ப்பு வெளிப்பாடாகியது. கோர் ஆளும் பிரமுகர்களுக்கு தாம் ஒரு "சிறிய அரசாங்க" நிதித்துறை பழமைவாதத்தின் கட்சியாளர் என்பதை மீள உறுதி செய்ய பல முயற்சிகள் மேற்கொண்ட தம்மை பல கூட்டங்களில் "அதிகாரம் கொண்டவர்களுக்கு எதிரான மக்களின் வழக்கறிஞராகவும் "பெரும் எண்ணெய்", மருந்து கம்பனிகள், காப்புறுதி ஏகபோகங்கள் "பெரும் சிகரட்" கம்பனிகள் மற்றும் பெரும் வர்த்தக பகுதிகளுக்கு எதிராக உழைக்கும் குடும்பங்களை" பாதுகாப்பவராகவும் காட்டிக் கொள்ள பல முயற்சிகள் செய்தார். அவர் புஷ்சின் வரித் திட்டம் பணக்காரர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் எனவும் கண்டனம் செய்தார்.

இரு கட்சி முறையினதும் பொருளாதாரத்தால் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தொடர்பு சாதனங்களின் அமைப்பினுள் அது தொழிலாளர் வர்க்கத்தின் எந்த ஒரு நேரடியான அல்லது வெளிப்படையான அபிலாசைகளை விலக்கி வைப்பதோடு தேர்தல் ஒரு திரிக்கப்பட்ட முறையில் நாட்டின் செல்வத்தை பங்கீடு செய்வது சம்பந்தமான ஒரு கருத்துக் கணிப்பு பண்பை எடுக்கின்றது. வாக்களித்தவர்களுள் ஒரு கணிசமான அளவினர் -தகுதியான வாக்காளர்களில் அரைவாசிப் பங்கினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்- செல்வம் நிதி ஏகபோகங்களின் கைகளில் அதிகரித்த அளவில் திரண்டு வருவதை எதிர்ப்பதைச் சுட்டிக் காட்டியது.

குடியரசுக் கட்சி வலதுசாரிகளுக்கு எதிர்ப்புக் காட்டும் சந்தேகமற்ற எதிர்ப்பின் ஏனைய வடிவங்களும் இருந்தன. கிளின்டன் மீதான அரசியல் குற்றச்சாட்டு சதி மீதான கோபம், ஹிலாரி கிளின்டன் நியூயோர்க் செனட்டராக போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றதன் மூலம் வெளிப்பாடாகியது. அரசியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரதம பாத்திரம் வகித்த குடியரசுக் கட்சியினர் புளோரிடாவிலும் கலிபோர்ணியாவிலும் தோற்கடிக்கப்பட்டனர்.

மொனிக்கா லிவின்ஸ்கி விவகாரம் சம்பந்தமாக கிளின்டனை அவமானம் செய்யத் தொடர்புச் சாதனங்கள் இடைவிடாது மேற்கொண்ட முயற்சிகளுக்கிடையேயும் அரசியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. தேர்தலுக்கு முந்திய வாக்களிப்பில் பில் கிளின்டன் பாப்பாண்டவரை அமெரிக்காவில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவராகப் பிணைத்துப் போட்டார். ஹிலாரி கிளின்டன் "பெரிதும் மதிக்கப்படும் பெண்" வகையறாவில் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல்கள் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் அதே வேளையில் அவை ஒரு திட்டவட்டமான எதிர்ப்பு மனோநிலையையும் பதிவு செய்ததைப் பிரதிபலித்தன.

களவாடப்பட்ட ஒரு தேர்தலில் உச்சக் கட்டத்தை அடைந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தினுள்ளே தொடர்ந்து எதிரொலிக்கச் செய்கின்றது. புளோரிடாவில் சர்ச்சைக்கு இடமான பெறுபேறு, கறுப்பர்களையும் மற்றும் சிறுபான்மையினர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட ஜனநாயக கட்சியின் கோட்டையின் பல்லாயிரக் கணக்கான வாக்குச் சீட்டுகள் ஏதோ ஒரு காரணத்துக்காக தூக்கி வீசப்பட்டது என்பதை மறந்து போய்விடக் கூடாது.

2000ம் ஆண்டு தேர்தல் நெருக்கடியில் இருந்து பொறிமுறைகளின் அம்சம் ஒன்று தலைநீட்டியது. இதன் மூலம் தேர்தல் போக்குகள் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதோடு சனத்தொகையின் பெரிதும் செல்வாக்கான தட்டுக்களுக்கு அசமத்துவமான பலத்தைக் கொடுக்கின்றது. இது பழமையானதும் சரியில்லாததும் மோசமாகப் பராமரிக்கப்பட்டதுமான வாக்களிப்புக் கருவிகளைக் கொண்டுள்ள தொழிலாளர் வர்க்க மையங்களிலேயே இங்ஙனம் நடைபெறுகின்றது. இதனால் "பெரிதும் முக்கியமான" புள்ளிகளால் பழுதாக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் தொழிலாளர் வர்க்கத்தினால் பழுதாக்கப்படும் எண்ணிக்கையை அதிகரிப்பது நிச்சயம் செய்யப்படுகின்றது.

புளோரிடா என்பது சிவில் யுத்த காலத்தில் பிரிந்து செல்லப் போராடிய முன்னைய கூட்டின் (Confederacy) தென்மாநில அரசுகளில் ஒன்றாகும். அது 19ம் நூற்றாண்டின் அடிமை வரலாற்றை மட்டுமன்றி 20ம் நூற்றாண்டின் ஜிம் குரோயின் (Jim Grow) இன ஒதுக்களையும் கொண்ட ஒரு மாநிலமாகும். புளோரிடாவில் கறுப்பர்கள் வாக்குரிமையின் ஆரம்பகால முன்னோடியான ஹரி ரீ.மூர்க்கு (Harry T. Moore) என்ன நடந்தது என்பது பல்லாயிரக் கணக்கான புளோரிடா வாக்காளர்களுக்கு நன்கு ஞாபகத்திலிருக்கும். 1951ல் அவரது வீடு டைனமைற் வைத்து தகர்க்கப்பட்ட போது அவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டனர்.

ஜனநாயக உரிமைகளுக்கான இப்போராட்டங்களின் நீண்ட மரபுரிமைகள்- பெரிதும் வாக்குரிமையிலும் அளிக்கப்பட்ட வாக்கைக் கணக்கிடும் உரிமையிலும்- மக்களின் நனவில் ஆழமாக வேரூன்றிக் கொண்டுள்ளது. இன்று அமெரிக்காவில் தலைதூக்கிக் கொண்டுள்ள நிலைமையின் கீழ் இது ஒரு ஆழமான புரட்சிகர உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஜனநாயக உரிமை பற்றிய பிரச்சினைகள் அதிகரித்த அளவில் சமூக, வர்க்க முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளையும் இணைத்துக்கொள்கின்றது. ஆழம் கண்டுவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழான தொழில், சம்பளம், சேவை நிலைமைகள், சமூக நலன்கள், பொருளாதார சமத்துவமின்மை போன்றவற்றுடன் இணைந்து கொள்வதால் இவை ஏற்படுகின்றன. ட்ரான்ஸ்நஷனல் 'சந்தை' என்ற விதிகளற்ற மதத்தினால் புனிதத் தன்மைக்கு உயர்த்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட ஏற்கனவே 25 வருடங்களைக் கடந்து சென்றுள்ள அது, வரவர பேரழிவை எட்டிக் கொண்டுள்ளது என்பதைக் காட்டிக் கொண்டுள்ளது. இதற்கு நல்லதொரு உதாரணம், கலிபோர்ணியாவில் மின்சாரத்தினதும் இயற்கை வாயுவினதும் விநியோகத்தின் நெருக்கடியாகும்.

அமெரிக்க முதலாளித்துவ ஆட்சியின் சகல அரசியல் நிறுவனங்களும் செல்வாக்கு இழந்து போயுள்ள ஒரு நிலையில் முதலாளித்துவ சந்தையில் துரிதமாக நப்பாசைகளை ஏற்படுத்தும் பொருளாதார, சமூக நெருக்கடிக்கான களம் இடப்பட்டுவிட்டது. அமெரிக்க காங்கிரஸ் 2000ம் ஆண்டு தேர்தலுக்கு முன் கூட்டியே அரசியல் குற்றச்சாட்டின் பெறுபேறாக ஏற்கனவே செல்வாக்கிழந்து போயுள்ளது. இப்போது தேர்தல் மோசடிகளின் நாற்றம் ஜனாதிபதி பதவிக்கு மேலாகத் தொங்கிக் கொண்டுள்ளது. வர்க்கத்துக்கும் கட்சிக்கு மேலாக பக்கச்சார்பற்றமை சம்பந்தமான அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் நடிப்புக்கள் தகர்க்கப்பட்டு விட்டது.

இறுதியில் தேர்தல் ஆதாளபாதாளம் உயர் நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்டமை அரசியல் அமைப்பினை கிழித்து எறிந்துள்ள முரண்பாடுகளின் உக்கிரத்துக்கு நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. டிசம்பர் 12, 2000 நீதிமன்றத் தீர்ப்புக்கும் அவமானம் நிறைந்த 1857ம் ஆண்டின் டிரெட் ஸ்கொட் (Dred-Scott) தீர்மானத்துக்கும் இடையேயான சமாந்தரம் பற்றி நாம் பேசியும் எழுதியும் வந்துள்ளோம். அச்சமயத்தில் சமஷ்டி அரசாங்கத்தின் சட்ட, நிறைவேற்று கிளைகள் வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான பிளவு அந்தளவுக்கு உக்கிரம் கண்டு போயிருந்ததால் அடிமை விவகாரத்தை தீர்த்துக் கொள்ள முடியாமல் இருந்தன. அவை அதிகரித்த அளவில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கே மேன் முறையீடு செய்தன. நீதிமன்றம் அடிமைகளுக்குச் சார்பான விதத்தில் தீர்மானத்தை வழங்கியதால் அது பல தலைமுறைகளுக்குத் தன்னையே அவமானம் செய்து கொண்டதோடு நாட்டையும் உள்நாட்டுப் போர் பாதையில் மூழ்கடித்தது. அவ்வாறே கடந்த டிசம்பரில் தன் தீர்ப்பில் அமெரிக்க உயர்நீதிமன்றம் ஆளும் வர்க்கத்தின் வேறுபட்ட கன்னைகளுக்கு இடையேயான மோதுதலில் பெரிதும் பிற்போக்கான பகுதியினருடன் சார்ந்து நின்று கொண்டது. ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடுக்க இந்நெருக்கடியை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொண்டது.

ஆளும் வர்க்கத்தின் பலம்வாய்ந்த பகுதியினர் தமது சொந்த அமைப்புகளின் செல்வாக்கை பாதிக்கும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டமை ஒரு சிந்தனைக்குரிய தோற்றப்பாடாகும். அது தனது சொந்த வழியில் ஆட்சிக்கான புதிய விதிமுறைகளினை நோக்கித் திரும்பியுள்ளது. சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்பும் ஆளும் பிரமுகர்கள் கும்பலுக்கு சட்டம் முக்கியத்துவம் அற்றதாகும்.

"குடியரசுக் கட்சி வலதுசாரிகள் வன்முறைக்கு தயார் செய்கின்றது" என்ற தலைப்பிலான கட்டுரையில் WSWS, வோல் ஸ்ரீட் ஜேர்ணலில் வெளியான "ஈடாட்டம் கண்ட குடியரசுக் கட்சி" என்ற ஆத்திரமூட்டும் தலையங்கத்தைக் கொண்ட ஆசிரியத் தலையங்கத்தை கவனத்தில் கொண்டது. வோல் ஸ்ரீட் ஜேர்ணலின் ஆசிரியத் தலையங்கம் புளோரிடாவில் வாக்குச் சவால்களை நசுக்குவதிலும் வெள்ளை மாளிகையை கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதிலும் குடியரசுக் கட்சிக்காரர்களை சகல பாரம்பரிய அரசியலமைப்பு கட்டுப்பாடுகளையும் கைவிடும்படி கோரியது. ஏனைய விடயங்களோடு இது குடியரசுக் கட்சி மேலாதிக்கம் கொண்ட புளோரிடா சட்டசபையை மாநில உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி தனது சொந்த ஜனாதிபதியை தெரிவு செய்யும்படி கோரியது. புஷ் முகாமுக்கு இது ஆலோசனை தெரிவிக்கையில் "எதிரில் உள்ளதை அடைவதற்கு சிறந்த தயாரிப்பு" ஜனாதிபதி பதவியை அடையச் செய்யும் நடவடிக்கைகளாகும் என்றது. அது முடிவுரையாக கூறியதாவது: "மிருதுவான கையை நீட்டுவது ஆளுனர் புஷ்சின் தன்மையாகும். ஆனால் அவரும் அவரது கட்சியும் அதனுள் ஏதேனும் இரும்பு இருப்பதை காட்டிக் கொண்டால் அவருக்கு பெரிதும் வெற்றி கிட்டும்."

WSWS இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்: "வெள்ளை மாளிகையை கைப்பற்ற குடியரசுக் கட்சியினர் நடாத்தும் போராட்டம் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஏகாதிபத்தியத்தின் லிபரல் இடதுசாரி எதிரிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சீ.ஐ.ஏ. எதிர்ப்பு நடவடிக்கைகளை போன்றதாக இருப்பின் (உதாரணமாக சில்லி) பினோச்சே ரீதியான தீர்வு கடும் ஆய்வுக்குரிய ஒன்றாக இருந்து கொண்டுள்ளது என்பது தெரிய வேண்டும்."

ஆளும் வர்க்கத்தின் எந்த பகுதியினரின் பேச்சாளராக வோல் ஸ்ரீட் ஜேர்ணல் பேசுகின்றதோ, அது உழைக்கும் வெகுஜனங்களிடம் இருந்து அவர்கள் முகம் கொடுக்கும் எதிர்ப்பை லிபரல்களிடம் இருந்தும் ஜனநாயகக் கட்சிக்காரர்களிடம் இருந்தும் வரும் தளதளத்துப் போன எதிர்ப்பாக கொள்ளுமிடத்து பயங்கரமான தவறை இழைக்கின்றார்கள். ஒருவர் பின்வரும் கேள்வியை எழுப்பியாக வேண்டும்: அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த ஆயுதக் குதத்தில் இருந்து வாக்குப் பெட்டியின் மூலம் அடையப்பட்ட அதனது பாரம்பரியமான பொதுஜன இறைமை என்ற பதாகையை அகற்றினால் மக்களின் அந்தஸ்துடன் ஒப்பிட எஞ்சியிருப்பது என்ன?

அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சி சாதாரணமான அல்லது ஆரம்ப நிலையிலுள்ள ஒரு அமெரிக்க பிரச்சினை அல்ல. இது உலக முதலாளித்துவ நெருக்கடியின் மிகவும் உயர்வான வெளிப்பாடாகும். குறுகிய காலத்தில் உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் அதனது முன்னோடியைக் காட்டிலும் ஒரு தலைப்பட்சமானதும் இராணுவ ரீதியிலானதுமான ஒரு வழிமுறையைக் கடைப்பிடிக்கத் தயங்கும் ஒரு அரசாங்கத்துடன் போட்டியிட வேண்டியிருக்கும். எந்த ஒரு ஆழ்ந்த சிந்தனையுள்ள அவதானியும் சட்டவிரோத, ஆத்திரமூட்டல் அடிப்படையில் ஆட்சிக்கு வரும் எந்த ஒரு ஈடாட்டம் கண்ட ஆட்சியாளரும் அதனது அனைத்துலகப் போட்டியாளருக்கு -அது நண்பனாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் ஒரேமாதிரியான விதிமுறைகளைக் கையாளும் என்பதில் சந்தேகம் கொள்ள முடியுமா?

புஷ் நிர்வாகம் ஏவுகணை எதிர்ப்பு உடன்படிக்கையைத் இல்லாதொழிக்கவும், ஒரு ஏவுகணைப் பாதுகாப்பு முறையைக் கட்டியெழுப்பவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு விதிமுறை அனைத்துலக உறவுகளை உடனடியாக ஈடாட்டம் காணச் செய்த, ஒரு புதிய ஆயுதப் போட்டா போட்டிக்கு எண்ணெய் வார்க்கும். இது தற்சமயம் பூகோளத்தில் ராணுவத் தாக்குதல்களுக்கு சாத்தியமான இலக்கைத் தேடி கொலம்பியா, வெனிசூலா தொடக்கம் ஈராக் வரை அலைகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதனது நெருக்கடியினை ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்கள் மீது சுமத்த முயலும். 20ம் நூற்றாண்டின் இந்த அடிப்படை கொள்கை 21ம் நூற்றாண்டில் இன்னும் அதிக சக்தியுடன் கையாளப்படும்.

எவ்வாறெனினும் புதிய நூற்றாண்டில் அமெரிக்காவில் உருவாகும் அரசியல் நெருக்கடியின் பூகோள ரீதியான முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்வதற்கு கடந்த நூற்றாண்டில் அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மீளமதிப்பீடு செய்வது அவசியம்.

தொடரும்.........