World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: கலை இலக்கியம்

The Aesthetic Component of Socialism

The attitude of classical Marxism toward art

சோசலிசத்தின் அழகியற் கூறுகள்

கலை பற்றிய பண்டைய மார்க்சிச பார்வை.

A lecture by David Walsh

Use this version to print

பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 9ம் தேதி, சர்வதேச கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில் வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக சோசலிச வலைதளத்தின் கலைத்துறை பத்திரிகை ஆசிரியரும் மார்க்சிச நிலைபாட்டிலிருந்து தற்கால கலை மற்றும் இலக்கியம் பற்றிய பல மற்றும் விமர்சனக் கட்டுரைகளின் ஆசிரியரும் ஆவார்.

நான் இங்கு பேசுவதையிட்டு மிக்க பெருமைப்படுகிறேன். ஒரு புரட்சிகர பத்திரிகையாளனாக கார்ல் மார்க்ஸ் தனது 23 வது வயதில் வெளியிட்ட ஆரம்ப கால புரூசியன் அரசின் தடைகளுக்கெதிரான கருத்துக்களில் இருந்து சிறு குறிப்பை எடுத்துக் காட்டுவதுடன் நான் இப்பேச்சை தொடங்க விரும்புகிறேன்.

அந்த குறிப்புக்களில் இருந்த முக்கியமான அவதானம், ``இந்த தடைகள் உண்மை பற்றிய தீவிர விசாரணைக்கு தடையாக-இடைஞ்சலாக-இருக்கக் கூடாது.`` மேலும் மார்க்ஸ் தன் நயமான பாணியில் பின்வருமாறு வினவுகிறார், ``இடம் வலம் என்று பார்க்காது உண்மையை நோக்கிச் செல்வதல்லவா உண்மையைத் தேடுபவனின் பணி? வரையறுக்கப்பட்ட வடிவத்துக்குள் விசயத்தை சொல்வதை கட்டாயமாக மறக்காமல் இருப்பதென்றால் நான் சொல்லவரும் விசயத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிட மாட்டேனா?``

அவர் தொடர்ந்தார்...``அது என்னை உடைமையாகச் கொண்டிருக்கிறதேயன்றி நான் அதை உடைமையாகக் கொண்டிருக்க வில்லை. என் சொத்துதான் வடிவம் அதுதான் என் ஆன்மாவின் தனித்துவம். Le style c'est l'homme [பாணிதான் மனிதன்] [Style is the man] ஆம் உண்மைதான். சட்டம் என்னை எழுத அனுமதிக்கிறது, என்னுடையதல்லாத பாணியில் மட்டுமே கட்டாயமாக எழுதவேண்டுமாம். எனது ஆன்ம தோற்றத்தைக் காட்டலாம், ஆனால் நான் முதலில் அதை வரையறுக்கப்பட்டவற்றுக்குள் நிர்மாணித்துக் கொள்ள வேண்டுமாம்! இந்த தற்கால துணிபுக்கு எந்த கெளரவமுள்ள மனிதன் தான் வெட்கப்படமாட்டான்...?

``உவப்பூட்டும் சலித்துப் போகாத இயற்கையின் வற்றாத வளங்களை வியந்து போற்றுவாய். ரோசும் வயலற்றைப் போல் மணக்க வேண்டும் என்று நீ கேட்டுக் கொள்ளமாட்டாய் என்றால், எல்லாவற்றையும் விட மிகப்பெரும் வளம் கொண்ட ஆன்மா மட்டும் ஒரே வகையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நான் நகைச்சுவையாக எழுதவிரும்பினால் சட்டம் என்னை காரியமனப் பான்மையுடன் எழுதச் சொல்கிறது. நான் துடுக்காக எழுதவிரும்பினால் சட்டம் என்னை அடக்க ஒடுக்கமாக எழுத ஆணையிடுகிறது. வெளிறல், எல்லாம் வெளிறல்தான், அதுதான் சுதந்திரத்தின் தனி ஒன்றான சட்டப்பூர்வ நிறம். ஒவ்வொரு பனித்துளிகளிலும் சூரியக்கதிர்கள் பட்டுத் தெறித்து வற்றா வர்ணஜால வித்தைகள் காட்டும், ஆனால் இந்த ஆன்மச் சூரியன் மட்டும் அவர்கள் எத்தனை பேர்களாயினும் எத்தனை பொருட்களில் பட்டுத்தெறிப்பினும் ஒரேயொரு உத்தியோகப் பூர்வமான நிறத்தை மட்டும் தரவேண்டுமாம்!``

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதுவதற்கு 5 வருடங்களுக்கு முன்பே 1842ல் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் எமது இயக்கத்தை ஸ்தாபித்தவர்கள், அவர்களுடைய உலகப்பார்வையிலும், கலாச்சாரம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களிலும், கலைபற்றிய வெளிப்பாடுகளிலும், புத்திஜீவித சுதந்திரம் பற்றிய கருத்துக்களிலும், மார்க்சின் இக்கருத்துக்களை தம்மகத்தே கொண்டிருந்தார்கள், இக்கருத்துக்களுடன் உடன்பட்டே இயங்கினார்கள் என்பதைக் குறிப்பிடவும் தேவை என்றால் ஆதாரபூர்வமாக விவாதிக்கவும் விரும்புகிறேன். இந்தப் பண்பே மார்க்சிச பார்வையின் பிரிக்கமுடியாத கூறுகளாகவும் புறநிலையான முக்கியத்துவம் உடையதாகவும் இருந்து வருகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ``சோசலிச நனவின்`` அழகியற் கூறுகளை, அப்படி அழைக்க முடியும் பட்சத்தில் ஒருவர் உருவாக்குவது என்ன என்பதன் ஆரம்ப கட்டத்தையாவது விரிவாக விளக்க முயற்சிப்பதுதான் இங்கு இன்று எமது பிரதான நோக்கமாக இருக்கிறது.

கலைத்துவத்தினதும் புத்திஜீவிதத்தினதும் சுதந்திரத்தை பாதுகாத்தல் மார்க்சியத்துக்கு இன்றியமையாததாக இருப்பின் இன்று நாம் விவாதிக்க கூடியிருப்பது இயல்பற்றதாக எதிர்பாராத நிகழ்வாக ஏன் இருக்கிறது என்று ஒவர் கேட்கலாம். நான் இங்கு முழுமையாக ஆழமாக சொல்லி முடித்துவிட முடியாத வகையில் அக்கேள்விக்கான பதில் ஏராளமான பாகங்களைக் கொண்டது. இருப்பினும் இக்கேள்வி கவனத்திற்குரியது. குறிப்பாக நாம் இன்று கலந்துரையாட இருக்கும் பிரச்சனைகளில் சில தெளிவுகளை உண்டாக்க உதவக் கூடியது.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் கலைக்கும் அரசியலுக்குமான உறவுகள் மிகத்தெளிவான புறநிலைத் தாக்கங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. 1922க்கும் 1923க்கும் இடையில் லியோன் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட இலக்கியமும் புரட்சியும் என்ற நூலில், சோவியத் ஒன்றியத்தில் கலைக்கான இடத்தை பின்வரும் பொதுகூற்றால் வரையறுக்க முடியும் என்று அவர் எழுதினார்.

அக்கூற்றானது:- ``சோவியத் உள்நாட்டு யுத்தத்தில் எதிர்ப்புரட்சியாளர்களை சோவியத் தொழிலாளர்கள் தோற்கடித்திருக்காவிட்டால் சோவியத் அரசு நீடித்து நிலைத்திருக்க முடியாது. ரஷ்ய மார்க்சிஸ்டுகள் பொருளாதார பிரச்சனை பற்றியோ குறைந்த பட்சம் புத்திஜீவி கலாச்சார பிரச்சனைகளைப் பற்றியோ சிந்தித்து கொண்டிருக்க மாட்டார்கள். குறிப்பாக கலைத்தன்மை மலரும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமாயின் கலைத்தன்மையற்ற முறைகளும் உபயோகப்படுத்தப்படல் வேண்டும்.

முதலாளித்துவத்தின் யதார்த்தமும் இதற்குள் அடங்கும். இலக்கியமும் புரட்சியும் என்ற நூலில் முதலாளித்துவ வர்க்கத்தினதும் பாட்டாளிகளினதும் வரலாற்றுக் குறிக்கோளினை விமர்சனமற்ற முறையில் இனம் காணுதலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்யத் தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்த பின்புதான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. முதலாளித்துவ வர்க்கம் சமூகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அதை செல்வமயப்படுத்தலிலும் கல்விமயப்படுத்தலிலும் தான் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டுள்ளது. ஆனால் தொழிலாள வர்க்கத்தினுடைய பிரச்சனைகள் முற்றிலும் மாறுபட்டது.

சோசலிச நோக்குள்ள தொழிலாளர்கள் ``தமது வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் நிவர்த்திக்குப் பிறகு`` அவர்கள் தம் முழுச்சக்தியையும் அரசியல், வரலாறு சம்பந்தமான படிப்பிலும் முழுத்தொழிலாளர் வர்க்கத்தையும் மார்க்சிச அடிப்படையில் பயிற்றுவிப்பதிலும் செலுத்தப்படுகிறது. இக்கடமை பெரிய அளவிலும் அவசரத்தேவையாகவும் இருப்பதால் இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எமது கட்சி காரியாளர்களுக்கும் சேர்த்து பரந்த அளவில் இது உண்மையாகும்.

இன்னொரு வகையிற் சொல்வதானால், சமூக வாழ்வின் எல்லா உறவுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி ஒப்பீட்டளவில் சமமானதாக நிகழ்ந்த பொழுது, பொருளாதார, தத்துவ, கலாச்சார ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் சுய நிர்ணயத் தன்மையின் போக்கு ட்ரொட்ஸ்கியின் வார்த்தையிற் சொல்வதானால் ``பொருளாதார ரீதியாக துர்அதிர்ஷ்டமான வர்க்கமாக`` புரட்சிகர அரசியல் பண்பு கொண்ட வர்க்கமாக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. அவ்வர்க்கத்தின் உச்சகட்ட வெளிப்பாடு ஒரு புரட்சிகர சோசலிச கட்சியில் மட்டுமே காணக்கிடைக்கிறது. நாங்கள் ஒருபக்கம் ஒதுக்குதலை எதிர்த்துப் போராடும் அதேவேளை, அதன் புறநிலை மூலங்களையும் எங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறது. மனித சமூகம் முதலாளித்துவத்தின் கீழ் எல்லாவகையிலும் தானாகவே அபிவிருத்தியடைய முடியும் என்றால் ஒரு சோசலிச புரட்சிக்கான தேவையே இருக்காது. தொழிலாள வர்க்கம் கட்டாயமாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் ஏனெனில் அது கலாச்சாரரீதியாக ஒடுக்கப்படுகிறது (இச்சொல்லின் முழு அர்த்தத்தில்).

சில பொது உண்மைகளுக்கு எதிராக யாருமே தங்கள் கண்களை மூடிக் கொள்ளத் தேவையில்லை அல்லது முடியாது என நான் நினைக்கின்றேன். இருப்பினும் இந்த `கல்விக் கூடலில்` கலாச்சாரப் பிரச்சனை சம்பந்தமாக ஒரு சிறப்புப் பகுதியை ஒதுக்க வேண்டியிருப்பது ஏன் என்பதற்கும் அதையொரு முக்கியமான ஒன்றாக ஏன் நாம் நினைக்கின்றோம் என்பதற்கும் சில வரலாற்று பிரச்சனைகளை நேரடியாக சுட்டிக்காட்டுவதே அநேகமாக பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இத்தகைய விவாதங்களில் நாம் கருத்திற் கொள்ளவேண்டிய விசேஷமான விஷயமொன்று உள்ளது. `சோசலிசத்துக்கான போராட்டமும் கலைப்படைப்பாற்றலின் சுதந்திரத்தைப் பேணுவதற்கான போராட்டமும் பிரிக்க முடியாதது` என்பதை 1847 ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்டபின், இந்நூற்றாண்டின் முதற்கால் பகுதியில் தோன்றிய மிகச்சிறந்த மார்க்சிய போதனையாளர்கள் இயல்பாகவே விளங்கிக் கொண்டிருந்தனர்.

எப்படியிருந்தபோதும் விஞ்ஞான சோசலிசத்தை ஸ்தாபித்ததுடன் சம்பந்தப்படும் `மார்க்ஸ்` என்றொரு தனிமனிதனின் பெயரைத்தான் மீண்டும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. தனது தன்னிகரற்ற எத்தனையோ பண்புகளுடன் ஒரு சிறந்த பண்பாடுள்ள மனிதராகவும் விளங்கினார் மார்க்ஸ். பிரெஞ்சு சோசலிச தலைவரும் மார்க்சின் மருமகனுமான போல் லாபார்க்(Paul Lafargue) தனது நினைவுக் குறிப்புகளில் இவ்வாறு எழுதுகிறார். ``அவர் (மார்க்ஸ்) கெயின் (Heine) கோதே ஆகியோரை மிக ஆழமாக-இதய பூர்வமாக அறிந்து வைத்திருந்தார், பேச்சில் அவர் அடிக்கடி அவர்கள் பற்றி குறிப்பிடுவார். ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் சிறந்த கவிஞர்களின் படைப்புக்களை அவர் தொடர்ந்து வாசித்து வந்தார். ஒவ்வொரு வருடமும் அசிலசை (Aeschylus) கிரேக்க மூலத்தில் அவர் படித்தார். அவர் அசிலசையும் சேக்ஸ்பியரையும் மனித இனம் கண்ட மிகப்பெரிய வியக்கத்ததக்க மேதகளாக எண்ணினார். அவர் சேக்ஸ்பியர் மேல் வைத்திருந்த மரியாதை அளப்பரியது. அவர் சேக்ஸ்பியரை மிகவிரிவாக ஆழ்ந்து படித்தார். முக்கியமில்லாத கதாபாத்திரங்களைக் கூட அவர் நுணுக்கமாக அறிந்திருந்தார். நாவலாசிரியர்களில் செர்வான்ட்ஸ் (Cervantes) பால்சாக் (Balzac) ஆகியோரை அவர், முதலிடத்தில் வைத்திருந்தார். அவர் ஒப்பற்ற கற்பனா சக்திவாய்ந்தவராக விளங்கினார். கவிதையே அவரது முதல் இலக்கிய வெளிப்பாடாக இருந்தது. திருமதி மார்க்ஸ் தனது கணவன் இளமைக்காலத்தில் எழுதிய கவிதைகளை மிகக் கவனமாக பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால் யாருக்கும் அதைக் காட்டியதில்லை. அவரை ஒரு சிறந்த மொழியாளராகவும், பேராசிரியராகவும் கனவு கண்டிருந்த அவரின் குடும்பத்தவர்கள், அக்காலத்தில் ஜேர்மனியில் வெறுக்கப்பட்ட சோலிச கிளர்ச்சியிலும் அரசியற் பொருளாதாரத்திலும் அவர் ஈடுபட்டு தன்னைத்தானே குறைத்துக் கொள்வதாக எண்ணினர்.``

1895ல் கார்ல் காவுத்ஸ்கியின் வேண்டு கோளுக்கிணங்க எலியனார் மார்க்ஸ், மார்க்ஸ் ஹெய்ன் நட்பு பற்றிக் குறிப்பிட்டார். அதில் பகுதி வருமாறு : ``நான் எனது பெற்றோர் இருவரையும் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். ஹெய்னைப் பற்றி அதிகம் பேசுவோம். (நாற்பதுகளின் தொடக்கத்தில்) அவர்கள் அவரை தொடர்ச்சியாய் நெருக்கமாகப் பார்த்தனர். மோர்(மார்க்சின் புனைப்பெயர்) ஹெய்னை ஒரு கவிஞராக மட்டும் போற்றவில்லை, அவருடன் மிக அன்பு கொண்டிருந்தார். ஹெய்னின் எல்லாவித அரசியல் கோளாறுகளுக்காக அவர் வக்காலத்தும் வாங்கினார். கவிஞர்கள் ஒரு தனிவிதமான பழகுவதற்கு கூச்சமானவர்கள் அவர்களை சாதாரணமாக அல்லது அசாதாரணமான நடத்தைத் தரங்களால் எடைபோடக் கூடாது என்று மோர் கூறினார்.

``ஹெய்ன் வழக்கம்போல் ஒருமுறை அவர்களது அறைக்குள் அடிக்கடி ஓடிச்சென்று அவரது கவிதை ``வரிகளை`` படித்துக்காட்டுவார். அப்போது அவர்களது கருத்துக்களையும் கேட்பார். மீண்டும் மீண்டும் மோர் எட்டு வரிகள் கொண்ட `சிறிய விடயம்` பற்றியதையும் விவாதிப்பார், ஆய்வு செய்வார்..

``நான் புரிந்து கொண்டவரையில், அரசியல் ரீதியாக அவர்கள் அபூர்வமாகவே விவாதிப்பார்கள். ஆனால் மோர் நிச்சமாக ஹெய்னை குழந்தையாக நினைத்தார். அவர் அம்மனிதரின் படைப்பை மட்டும் நேசிக்கவில்லை அவரையே நேசித்தார்.``

ஏன் ட்ரொட்ஸ்கியின் விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் கூட ஒருவர் செய்ய வேண்டியது அவரின் சுயசரிதையில் `புத்தகங்களும் ஆரம்பகால முரண்களும்` என்ற பகுதியை படிப்பது. அதில் அவர், எப்படி தான் ஒரு சிறுவனாக இருந்த காலத்தில் புஸ்கின் (Pushin) நெக்கிரசோவ் (Nekrasov) டிக்கன்ஸ் (Dickens) டால்ஸ்டாய் (Tolstoy) ஆகியோரின் எழுத்துக்களில் தீராதகாதல் கொண்டிருந்தார் என்பதை விளக்கியிருக்கிறார். முதலாவது முறையாக தியேட்டருக்குப்(நாடக அரங்கத்திற்கு) போனபோது தனக்கு ஏற்பட்ட ஆழமான தாக்கத்தையும் ரஷ்யாவின் தென் பகுதியைச் சேர்ந்த, சேக்ஸ்பியரை முறைபோக கற்றவராக அறியப்பட்டிருந்த ஒரு குடும்ப நண்பரின் வரவு அவரை எவ்வளவு பாதித்தது என்பதையும் கூட அவர் விளக்கியுள்ளார்.

19ம் நூற்றாண்டின் பாதி தொடக்கம் மார்க்சிய பாரம்பரியத்தின் உன்னத நபர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி, ரோசா லுக்சம்பேர்க், பிரான்ஸ் மெகரிங், ஜியோர்ஜி பிளெகனோவ், லாபார்க், அன்டோனியோ லாபிரியோலோ மற்றும் சிறு சாதனைகள் செய்த கணக்கற்ற நபர்களும் ஒரு அரசியல் செயற்திட்டம் என்பதற்கும் மேலாக ஏராளமான விசயங்களை எமக்கு வழங்கிப் போயுள்ளனர். வேறு வகையில் பார்ப்பது ஒரு குறுகிய பார்வையாக மட்டுமே இருக்க முடியும்.

பெரிய அளவில் பரந்த ஆழமான புத்திஜீவிதத்தை மார்க்சியமே பிரதிபலித்தது. தத்துவம், அரசியற் பொருளாதாரம் வரலாறு, மற்றும் கலைத்துறையிலும் முதலாளித்துவ சமூகத்தின் மிகப்பெரிய சாதனைகளையும் மார்க்சியம் தன்னகத்தே கொண்டுள்ளது என்று நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். முதுலாளித்துவ முரண்பாடுகளுக்கும் வளரும் சிக்கல்களுக்கும் மிக இசைவான விளக்கத்தை மார்க்சியம் தந்தது மட்டுமன்றி, அந்த சிக்கலில் இருந்து வெளியேற ஒரு முன்னேற்றப் பாதையையும் காட்டியது. சோசலிசம் என்ற கருத்து உருவாக்கிய அலையானது சுரண்டலில் இருந்தும், கொடும் துன்பத்தில் இருந்தும், முற்றிலும் விடுபட்ட உலகத்தைப் பற்றிய அதன் ஆழ்ந்த நோக்குடன் அது அனுதாபம் சார்ந்தோ இன்றியோ- புத்திஜீவித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரொலித்தது.

அத்துடன் பெளதீக, சமூக, உளவியல்-அமைப்புகளில் பரந்தளவில் ஆளுமை செலுத்திய ஒவ்வொரு தனிமனிதனதும் செல்வாக்குக்கு ஏதோவொரு வகையில் மார்க்சியமும் உட்பட்டது. இயற்பியல் ஆய்வாகவோ, மனிதவியலாய்வு ஆகவோ அல்லது உளவியல் ஆய்வு துறையாகவோ எத்துறையாயினும் இது பொருந்தும். 1880க்கும் 1914க்கும் இடையில் ஏற்பட்ட சோசலிச இயக்கத்தின் அந்த நாட்களில் மக்களின் புரட்சிகர சுயநனவானது மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது என்பதில் கேள்விக்கிடமில்லை. இவ்வியக்கமே தனது உயர்வெளிப்பாட்டை 1917 அக்டோபர் புரட்சியில் கண்டு கொண்டது.

இக்காலப்பகுதியின் வரலாற்றைப் பற்றி ஒருவர் மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்தால்கூட அவர் நிறைய விஷயங்களை கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கும். பிரி வால்க்ஸ்வுன் (Freie Volksbuhne) என்ற முக்கிய அரங்கை நிறுவிய 1890 ஒன்று கூடலை ஒருவர் எடுத்துக் காட்டலாம். ஒரு வரலாற்றாசிரியனின் வார்த்தைகளில் அதைப்பற்றி சொல்வதானால், `இது பேர்லின் அவான்-கார்டே (Avant - Garde) தலைவர்களையும் சமூக ஜனநாயக தலைவர்களையும் ஒரு பொதுமுயற்சியில் இணைத்தது. அது தொழிலாளர்கள் இலக்கிய விவாதங்களில் இணைந்து கொள்ளும் தொடர் கூட்டங்களை ஏற்படுத்தியது .``

அல்லது பெல்ஜிய தொழிலாளர் கட்சியின் கலைத்துறையை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 1890-92ல் தொழிலாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களில், நவீன ரஷ்ய இலக்கியத்தைக் கற்றல் மற்றும், இப்சன், வானர், போல்க் இசை, சேக்ஸ்பியர், பிளமிஷ் வர்ண ஓவியம், வில்லியம் மோரிஸ் மற்றம் போல் வேர்லெயின் கவிதைகள் ஆகியவற்றைக் கற்றல் முதலியன ஒரு பகுதியாக இருந்தது.

ஜேர்மனியிலும் கூட எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான மாறுபட்ட கேள்விகளைச் சுற்றி கலாச்சாரம் சம்பந்தப்பட்டது உட்பட - தொழிலாளர் ஒன்று கூடலை சமூக ஜனநாயக கட்சி ஒழுங்கமைத்தது. நான் முன்பும் ஒருமுறை குறிப்பிட்டிருந்த அவதானத்திற்கு கொண்டு வந்த விசயமான 10-20 ஆயிரம் பேர்கள் கொண்ட ஒரு சிறிய ஜேர்மன் நகரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு சுற்றுச் சங்கங்கள் முதல் குழுக்கள் வரையிலான கவிதை, நாடக அரங்கு ஆகியவற்றுக்கு தம்மை அர்ப்பணித்த 100 இற்கு மேலான தொழிலாளர் அமைப்புகள் இருந்தன. தொழிலாள வர்க்கத்தை அதனுடைய வரலாற்றுக் கடமைக்கு நகர்த்திச் செல்வதில் கலை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் உடையதாக இருந்ததாக சோசலிஸ்ட்டுகள் கருதினர்.

பிரான்சில் வெளிவந்த (La revolte) லா ரிவோல்ட் என்ற அராஜக வாதிகளின் பத்திரிக்கை பல இணைப்புக்களை -டால்ஸ்டாயின் எழுத்துக்கள், பிளாபர், மாப்பாசன், சொன்வர் சகோதரர்கள், அனாதோல் பிரான்ஸ் மற்றும் சோலா முதலானோரினதும் எழுத்துக்களை - வெளியிட்டு வந்தது. 1894ல் கைப்பற்றப்பட்ட இவ்வெளியீட்டின் சந்தாதாரர்பட்டியல் பிரெஞ்சு புத்தி ஜீவிகளில் பெரும்பான்மையானவர்களைக் கொண்டிருந்தது. காமில் பிசாரோ போல் சினாக் போன்ற ஓவியர்கள் உட்பட, மற்றும் அனாதோல் பிரான்ஸ், ஸ்ரீபன் மலார்மே உட்பட பல்வேறு சிறந்த கலைஞர்களையும் `பின்தங்கிய` கலைஞர்களையும் பிரதிபலிப்பதாக அப்பட்டியல் இருந்தது. அது அக்கால பிரெஞ்சு புத்திஜீவிகள் பற்றிய ஒரு `குறுக்குவெட்டு`பார்வையைத் தந்தது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரெஞ்சு, பெல்ஜிய சமூக கலாச்சார நிலைமைகள் பற்றிய ஒரு உபயோகமான ஆய்வான `கலைஞர்களும் சமூக சீர்திருத்தமும்` பின்வருமாறு குறிப்பிடுகிறது. `` குஸ்டாவ்கான் (பிரபலமான இலக்கிய வாதியும் பின்னால் Dreyfusard ஆனா) 1886ல் தேக்கமான சமகால பிரெஞ்சு சமூகம் பற்றி குறிப்பிடுகையில், `பெருமை கொண்டுள்ள முதலாளித்துவ வாதிகள் கலையிலும், கருத்துக்களிலும், புதிதான எல்லாவற்றையும் தடுத்து வைத்துள்ளார்கள்`. என்றார். இதில் அவர் மிகப் பழைய குற்றச்சாட்டையே எதிரொலித்தார். அக்குற்றச்சாட்டு மற்றவர்களைப் போலவே அவருக்கும் சமூக, கலைகாரணங்களை இணைத்தாக இருந்தது. தற்பொழுது முதலாளித்துவ வாதிகள் மீதான தாக்குதலானது எப்போதும் இல்லாத வகையில் சமூக அக்கறையுடையதாக மாறியுள்ளது. இச்சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் உணர்ந்து இருந்தது மட்டுமின்றி கலைஞர்கள், தங்களைப் போலவே அநீதிக்கு உட்படுத்தப்பட்ட தொழிலாளர் வர்க்கத்துடன் தம்மை அடையாளப்படுத்தத் தொடங்கினார்கள்.``

அரைகுறை உரிமைகள் வழங்கப்பட்டிருந்த சாரிஸ ரஷ்யாவில் கூட இக்காலப்பகுதியில் `பின்தங்கிய` கலைஞர்களுடன் மார்க்சிஸ்ட்டுகள் உறவு கொண்டிருந்தனர். ``இளமையான துன்புறுத்தப்பட்ட (இலக்கிய ரீதியாக) புது இளம் அலை (ட்ரொட்ஸ்கி) ஒன்று அவர்களைப் பேண வந்தது.

சோசலிசஸ்ட்டுகளுக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான உறவானது அதன் மிகச்சிறந்த உதாரணங்களின் போது கூட ஒரு ஒழுங்கமைவுடையதாக முரண்பாடற்றதாக இருந்தது என்று கருதுவது மிகவும் முட்டாள்தனமானது. எப்படி அது சாத்தியமாயிருக்க முடியும்? மரபு ஒழுங்கின்மை வாதம், தனிநபர் வாதம் மற்றும் தன்முனைப்பு வாதம்- திடமான சமூக இருத்தலுடன் சம்பந்தப்பட்ட வகையில்-அவை கலைஞர்கள் வட்டத்தில் தெரியாத-அறியப்படாத ஒரு விடயமாக இருக்கவில்லை. அதேபோல் பிலிஸ்டினிசம் மார்க்சிய இயக்கத்திற்கு தெரியாத ஒன்றாக இருக்கவில்லை. அரசியல், வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பால், முழுமையாக இல்லாவிட்டாலும் கூட, விஞ்ஞானம், கலை, அறிதல் முறைகளுக்கிடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை.

ரஷ்ய (அவான்ட்கார்டே) கலைஞர்கள் பற்றிய விவாதத்தில் சில வருடங்களுக்கு முன்பு இது பற்றி ஏற்கனவே நான் விவாதித்திருக்கிறேன். ``பிம்பங்கள் மூலம் கலைஞன் உலகை அறிந்து கொள்ளும் முறை-உணர்வு நிலை, உடனடி பாதிப்புக்கள் உணர்ச்சிவசம் ஆகியவற்றுடனான கலைஞனின் நெருங்கிய தொடர்பு-உள்ளுணர்வு, நனவுபூர்வமற்ற நிலை என்பன கலைவெளிப்பாட்டில் முக்கியத்துவம் செலுத்துவது-என்பன எல்லாம் கலைஞன் தனது ``சமகாலத்தில் பின்தங்கி`` நிற்கின்றான் என்பதை ஏறத்தாழ உறுதிசெய்கின்றது. அன்றைய அரசியலுக்கு `பின்தங்கி` கலைத்துவ நனவுநிலை காலத்தால் பின்தங்கியுள்ளதாக அல்லது முன்னோக்கியுள்ளதாக எவ்வாறிப்பினும், இது புரட்சி அரசியல் நனவுடன் எந்த நிகழ்ச்சியாலும் மிக அரிதாகவே இணைந்து நிகழ்கிறது.

இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு பார்த்தால் நான் நினைக்கிறேன் ரஷ்யப் புரட்சி நகர்ந்து கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் சோசலிச இயக்கம் - அதேநேரம் அதன் குறிக்கோளின் அக்கைறையுள்ள கலைஞர்களாலும் புத்திஜீவிகளாலும் கூட ``கலைப்படைப்பாற்றலுக்கு`` ஒரு கூட்டாளியாகவும் பாதுகாப்பாளராகவும் மேலும் பொதுவில் புத்திஜீவித விடுதலையின் பரிவான ஆதரவாளராக வரலாற்றில் வெளிப்படுத்தியிருக்கின்றனது.

மார்க்சியம் பற்றிய பரவலான இன்றைய பொதுவான புரிதல் இப்படியா இருக்கிறது? அப்படி நம்புவதற்கு ஒருவன் தன்னை மிக முட்டாளாகக் கருதிக் கொள்ளவேண்டும். குலாக்களை விரட்டி அடித்ததுடன் சுதந்திர சிந்தனையாளர்கள் தண்டிக்கப்படுவதாக இருந்ததுடனும் விமர்சன ரீதியான சிந்தனையும் கலைத்துவமும் மிதித்தழிக்கப்பட்டது என்பதனுடன் சேர்த்து அடையாளம் காணாவிடில் `சுதந்திரமான சிந்தனை` என்ற முட்டாள் தனமான வக்கிரமான அதிகாரத்துவத்தின் முத்திரை குத்தலுடன் தற்கால 'மார்க்சியம்' தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டால், அது பெரும்பாலும் பின்நவீனத்துவம், அடையாள அரசியல் மற்றும் குழப்பமான இடதுசாரிக் குட்டி பூர்சுவாக்கள் முன்வைக்கும் கலைத்துவத்திற்கு எதிரான அனைத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நிலைமையில் இருக்கிறது.

மார்க்சியத்தின் அடையாளம் மற்றும் கருத்தின் மீதான சர்வாதிகார ஒடுக்குமுறை பற்றி வலதுசாரி கருத்தாளர்கள் பின்வருமாறு கூறக்கூடும், ``சுதந்திரத்தைப் பேணுவதான சோசலிஸ்ட்டுகளின் வார்த்தைகள் வெறும் வேஷம்-ஏமாற்று. இவர்கள்தான் அதிகார வெறிகொண்ட தனிமனிதர்கள். தங்களது நோக்கத்தை அடைய எதைவேண்டுமானலும் அவர்கள் வாக்களிப்பர்.`` அவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் வந்ததும் தங்களது உண்மை நிறத்தை வெளிக்காட்டினர்.

வரலாற்று உண்மைகளுடன் முழுவதும் முரண்படாத பட்சத்தில் இது ஒரு வசீகரமான வாதம்தான். அக்டோபர் புரட்சி கலைப்படைப் பாற்றலின் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக காட்சிக் கலைகள், கவிதை மற்றும் திரைப்படத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெயர்களைச் சொன்னால்.... மலேவிச, மாயாகோவ்ஸ்கி, டாட்லின், ஐசன்ஸ்டெய்ன், புடோவ்கின், வெர்டோவ், ஷோன்டாக்கோவிச், ரோட்சென்கோ, போபோவா, ஸ்டெபானோவா, எல் லிசிட்ஸ்கி, மெயர்ஹோல்ட், பேபெல், மெண்டெல் ஸ்டாம் மற்றும் பல்வேறு நபர்களும் - கலைப் பிரபஞ்சத்தைக் கட்டி எழுப்பினார்கள். அதன் நேர்மையான அரசியல் எதிரிகளால் கூட இது மனமின்றி ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. போல்ஷிவிக் கட்சியின் முன்னணி நபர்களான லெனின், ட்ரொட்ஸ்கி, லுனார்சார்ஸ்கி ஆகியோர் கலைப்பணியை ஊக்குவித்ததுடன் ``பாட்டாளிகள் உலகம் மற்றும் செயற்கையான ``புரட்சிகரமான`` தன்மைகளை சோவியத் கலைஞர்கள் மேல் திணிப்பதையும் அவர்கள் எதிர்த்து வந்தனர். ``காட்டிகொடுக்கப்பட்ட புரட்சி`` என்ற புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: ``தொழிலாளர் அரசானது, கூட்டாக எழுச்சி கொள்ளும் போதும் உலகப் புரட்சிக்கான முன்னோக்கை வைத்திருக்கும்போதும் கல்வித்துறை பிரச்சனைகள், தேடல்கள், மற்றும் எவ்வித பரிசோதனைகள் பற்றியும் அது அச்சம் கொள்வதில்லை. இவ்வகையில் மட்டுமே ஒரு புதுக் கலாச்சார ஆர்வத்தை தயார்செய்ய முடியும் என்று அது விளங்கிக்கொண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் முதல்தடவையாக பரந்த மக்கள் கூட்டம் உரத்து சிந்திக்கிறது. அதன் ஒவ்வொரு நிலையிலும் பெருத்த அலை வீசுகிறது. கலைத்துறையின் மிகச்சிறந்த இளம் சக்திகள் மிகவிரைவில் பாதிப்புக்குள்ளாகின்றன`.

ஸ்ராலினிசத்தின் பண்பையும் தோற்றத்தையும் முக்கியத்துவமும் பற்றி ஆய்வதல்ல இங்கு எமது நோக்கம் இருப்பினும் அது, 1920 மத்திய பகுதியில் இருந்து வளர்ந்து வந்த சோவியத் கலாச்சார வாழ்முறையினை ஒடுக்கியதும்-அழித்ததும் இந்நூற்றாண்டின் ஒரு மிகப்பெரிய புத்திஜீவித குற்றம். இந்த அதிகாரத்துவத்தின் உச்சம் ட்ரொட்ஸ்கி அழைத்ததுபோல் ``இலக்கியப் படைப்பாளிகளுக்கான ஒரு வதைமுகாமினை`` உருவாக்கியது. மிகச்சிறந்த கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். மெளனமானார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள்.

இவ் அதிகாரத்துவம் கொலை, ஊழல் மற்றும் சோவியத் யூனியனிலும் வெளியிலும் இருந்து முழுக்கலைஞர்களது சந்ததியையும் பலவீனப்படுத்தல் என்பவற்றை செய்தது மட்டுமின்றி, கலைக்கு மேலான இதன் கொடுங்கோலாட்சியை நியாயப்படுத்த, கொள்கைகளை அது கடன்வாங்கியது மற்றும் கண்டுபிடித்தது. அது ஸ்ராலினது நாட்களில் ``பாட்டாளி வர்க்க கலாச்சாரம்`` ``சோசலிச யதார்த்தவாதம்`` என்பதன் பேரிலிருந்தது. ஸ்ராலினிசத்தின் இக்காலாச்சார தாக்கமானது ரஷ்யாவில் மட்டும் அழிவை ஏற்படுத்தியதென்பதல்ல கிழக்கு ஐரோப்பா, சைனா, எங்கும் அது தன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் 1953ம் ஆண்டு அக்கொடுங்கோலனின் இறப்புடனும் அது முடிந்துவிடவில்லை. பல்வேறு கல்விநிலையங்களில் ``மக்கள் கலை`` என்பதன் மூலத்தில் இதன் கொடிய தாக்கம் இருந்ததை ஒருவர் கண்டுணர முடியும். ஸ்ராலினிசம் மட்டும்தான் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய சக்தி என்பதும் உண்மையில்லைதான். வெவ்வேறு உள்நாட்டு ஜனரஞ்சக பூர்சுவா தேசிய வாதிகளின் கருத்துக்களும் கூட செல்வாக்குச் செலுத்தின. இருப்பினும் அவை ஒரு சிக்கலான கருத்து நிலையில் அல்லது அமைப்பு சம்பந்தப்பட்டவகையில் ஸ்ராலினிசத்தை பூசி மெழுகும் வகையிலேயே அவை இயங்கின.

இலக்கியமும் புரட்சியும்` என்ற புத்தகத்தை ட்ரொட்ஸ்கி எழுதி 75 ஆண்டுகாலம் முடிவதற்குள் புத்திஜீவித படைப்பாற்றலுக்கும் கலைக்கும் எதிரான அனேக கருத்துக்கள் ஏராளமானவை ``மார்க்சியம்`` என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு வந்துள்ளன. இவைபற்றி எல்லாம் இங்கு நாம் விவாதிப்பதன் முக்கியத்துவம், இவ்வகை சீரழிவுகள் ஏமாற்றுத்தனம் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன என்பதிலேயே இருக்கிறது என்பதையும் இங்கு நாம் குறிப்பிட்டுக்காட்ட வேண்டும்.

அனைத்துலக குழுவில் கடந்த பல வருடங்களாக கலையின் உண்மையான மார்க்சிய நோக்கை புதுப்பித்து வருகிறோம். 1980ம் ஆண்டு மத்தியில் தொழிலாளர் புரட்சிகக் கட்சியின் வடிவத்தில் சந்தர்ப்பவாதத்துடன் ஏற்பட்ட பிளவிற்கு பின்பு ஏற்பட்ட மார்க்சிய மறுமலர்ச்சியின் ஒரு கூறாகவே இதை நான் கருதுகிறேன். மார்க்சியத்தின் நவீன வடிவம் - எம் ட்ரொட்ஸ்கிய இயக்கம் - ஏராளமான வெளிப்பாதிப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளது. இன்னொரு வகையிற் சொல்வதானால் ``மார்க்சியம்`` தன்னை மீள்கண்டு பிடிப்புச் செய்துள்ளது.

சந்தர்ப்பவாதிகளுடனான உடைவு எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருந்தாலும் இவ் மறுமலர்ச்சியானது அதனுடன் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. மிகவும் சக்திவாய்ந்த வரலாற்று நிகழ்வுகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இதுவரைகால வரலாற்றில் புரட்சிகர சோசலிச இயக்கத்திற்கு சாத்தியமில்லாதிருந்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் அதிகாரத்துவத்துக்கும் மற்றும் மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பவற்றுடன் இம்மறுமலர்ச்சி இணைந்துள்ளது. மார்க்சிய முகமூடியிட்ட கலை வடிவத்துடன் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதிக்கம், ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்த அதிகாரத்துவத்தினால் எங்கும் பரவியிருந்ததானது, கடந்த அரைநூற்றாண்டு காலமாக மிகவும் நேர்மையான உண்மையான சோசலிஸ்ட்டுகளால் நல்ல வகையானதாக எடுக்கப்படும் அல்லது குறைந்தபட்சம் கேள்விக்குள்ளாக்கப்படாமலும் இருந்து வந்தது என்று நம்புகிறேன்.

நாம் இன்று இப்பொய்யான நாசகர கருத்துகளில் இருந்து விடுவித்துக் கொள்ளக் கூடிய தாயிருப்பதும் மிக புறநிலை முக்கியத்துவமுடைதாயிருக்கிறது. அதிகாரத்துவ இயந்திரங்களுக்கு எதிராக நிற்கும் மற்றும் சுதந்திரமான வரலாற்று தேவைகளின் அடிப்படையில் இயங்கும் வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை குறிக்கும் ஒரு மாற்றமுடியாத போக்காக நாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை இது குறிப்பிட்டுக்காட்டுகிறது. இவ்விஷயம் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு நான் பின்பு வருகிறேன்.

சில கருத்து வேறுபாடுகள்

கலை சம்பந்தமான எமது எழுத்துக்களின் தரத்தை உயர்த்தவும், சமகால கலாச்சாரம் மற்றும் வரலாற்று கேள்விகள் முதலியவற்றை மார்க்சிச பாரம்பரிய வெளிச்சத்தில் அணுகவும், கடந்த பல வருடங்களாக நனவு பூர்வமாக முயற்சி செய்து வந்துள்ளோம் என நான் சொன்னால் அது சுருக்கமான விபரணை மட்டுமே. இன்னும் இன்னும் நாம் செய்யவேண்டியது நிறையவே இருக்கின்றது, இருப்பினும் நாம் செல்லவேண்டிய பாதையின் பெரும்பான்மையான தடைகள் அகற்றப்பட்டுவிட்டன.

நாம் கலை உற்பத்தியின் புறநிலை முக்கியத்துவத்தை அழுத்திக் கூறியதும் கலை அபிவிருத்தி பற்றிய விதிகள் பற்றி கவனம் செலுத்தச் சொன்னதும் அண்மைக்காலத்தில் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. இங்கு அவுஸ்திரேலியாவில் வேர்க்கஸ் நியூஸ் என்ற பத்திரிகையை படித்தவர்கள்- உங்களில் பெரும்பாலானோருக்கு இதுபற்றி தெரிந்திருக்கும். ஒஸ்கார் வைல்டின் உழைப்பினதும் வாழ்க்கையினதும் முக்கியத்துவம் பற்றிய எமது சுருக்கமான கணிப்பீடுகள் கடந்த கோடையில் வெளிவந்தது. இதுபற்றிய தனது கருத்துவேறுபாடுகளை கடந்த ஆகஸ்ட்டில் திரு பிராட் எவான்ஸ் எமது பத்திரிகைக்கு எழுதியிருந்தார்.

நாம் இன்னொரு கடிதத்தில் இதற்கு பதிலளித்தோம். அதற்கு அவர் இன்னுமொரு கடிதத்தில் பதிலளித்திருந்தார். அக் கடிதமானது எமக்கு இடையேயான வேறுபாடுகளின் வெளித்தோற்றத்தை கூர்மையாக வெளிக்காட்டுவதாக உள்ளது என நான் நினைக்கின்றேன்.

நான் இதுபற்றி இன்று பேசவேண்டியிருக்கிறது. ஏனெனில், திரு பிராட் எவான்ஸ் இன் கருத்துக்கள் முழுச் சமூகத்தினது கருத்துக்களினதும் அடையாளமாக இருப்பதாலேயேயாகும். அவருக்கு தனது கருத்துக்களை சொல்ல சகல உரிமையும் இருக்கின்றது. அதேபோல எமக்கும் அந்த உரிமை இருக்கின்றது. எமது கருத்துக்களுக்காக வாதிடுவதில் எமக்கு எந்தவிதமான கூச்சமும் இல்லை. அதேபோல் நாம் பிழையானதும் பிற்போக்கானதும் என நினைக்கும் கருத்துக்களில் இருந்து எமது கருத்துக்களை விலக்கிக் கொள்வதிலும் நாம் பின் நிற்கமாட்டோம்.

வைல்ட் பற்றிய மூலக் கட்டுரையையும், நவம்பரில் நடந்த கடிதப் பரிமாற்றங்களையும் இங்கிருக்கும் பெரும்பான்மையானோர்கள் தெரிந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இருப்பினும் எனது பார்வையில் அவை பற்றி இங்கு சுருக்கமாக விபரிப்பது உபயோகமாக இருக்கும்.

வைல்ட் பற்றிய கட்டுரைக்கு ஏற்கனவே ஒரு வரலாறு இருந்தது. ஏற்கனவே கோடையில் வெளியாகியிருந்த மிகையதார்த்த வாதமும் ஆன்டிரே பிரெட்டனும் என்ற கட்டுரையின் பாதிப்புக்களுடனேயே இக்கட்டுரை எழுதப்பட்டது. இன்றும் பிரெட்டன் ஒரு முக்கியமான மனிதர் என கருதுகிறேன். அரசியல் பிரச்சினைகள் அவரது நிலைப்பாடு - அவரது ஸ்ராலினிச எதிர்ப்பும் ட்ரொஸ்கிக்கும் நான்காம் அகிலத்திற்குமான அவரது ஆதரவும் - அவர் கலை வரலாறு பற்றி அகவய நனவின் முக்கியத்துவத்திற்கு கொடுத்த அழுத்தத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என நான் நம்புகின்றேன். கட்டுக்குள் வராத படைப்பியல் கற்பனை என்பது புரட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமானது என மிக உண்மையாகவும் நேர்மையாகவும் நம்பிய ஒரு சிலரை மட்டுமே வரலாற்றில் எனக்குத் தெரியும்.

நான் வைல்ட்டை நெருங்கிப் பார்த்தபோது இதே கருத்துக்களை அவரிடத்திலும் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். வைல்ட் மிக மோசமான பகட்டாளனாக இருந்தார். அடிக்கடி அவர் ஒருவனை பிழையான வழியில் எரிச்சல்பட வைக்கிறார். பெரும்பான்மையான அவரது கவிதைகள் பொய்த் தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. அவரது பெரும்பான்மையான நாடகங்கள் ஒரு ஆரம்ப கட்ட தீங்கற்ற மலிவான நையாண்டித்தனத்துக்கு மேலேகூடப் போகவில்லை. இருப்பினும், ஒருவர் அவரில் ஏதோ ஒன்று எம்மில் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணுவதை சிலநேரங்களில் உணரமுடியும். குறிப்பாக சோசலிசத்தின் கீழ் மனிதனின் ஆன்மா (The Soul of Man Under Socialism) கலைஞனின் பார்வையில் விமர்சனம் (Critic as Artist), The Picture of Dorian Gray, Salome, De Profundis ஒரு வேளை ஏர்னஸ்டாக இருப்பதன் முக்கியத்துவம் (The Importance of being Earnest) முதலான எழுத்துக்களில் இவற்றைக் காண முடியும்.

கலை வாழ்வையும் இயற்கையையும் பிரதிபலிக்கவில்லை, மாறாக வாழ்வும் இயற்கையும் கலையை பிரதிபலிக்கின்றன என எரிச்சலூட்டும் வகையில் வலியுறுத்தியபோது அதாவது மனிதச் செயலின் பதிவுகளை அவை துளைத்தெடுத்தன எனும்போது அவர் இயங்கியலை நிரூபிக்க முயன்றிருக்கிறார். இது அக்காலப் பகுதியில் வைத்து எண்ணிப் பார்க்கும் பொழுது ஒரு மிக அரிதான செயல். அவரின் இக்கூற்று ஜெர்மன் தத்துவஞானத்தில் மார்க்சும் எங்செல்சும் சுட்டிக்காட்டும் பாயர்பார்க்கின் பொருள் முதல்வாத கருத்தையே எனக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. அதாவது ``இயற்கையில் ... மனித வரலாற்றுக்க முன்பே இருக்கும் இயற்கையில் தான் பயர்பாக் வாழ்கிறார்``. இன்னொரு வகையிற் சொல்வதானால் சிந்தனை, உற்பத்திகளை மனிதன் எதிர்கொள்கையில் சமூக, அல்லது இயற்கை என்ற அவ்வகை உற்பத்தியில் மனிதன் ஈடுபட்டிருப்பினும், அவன் தனது சொந்த செயல்களின் விளைவுகளுடன் அல்லது தனக்கு முற்பட்ட தலைமுறையின் செயல்களின் விளைவுகளுடன் பொதுவாக முரண்பட்டு இயங்குகிறான்.

மீண்டும் வைல்ட் பற்றி எனக்கு பட்ட முக்கிய தன்மை என்னவென்றால் மனிதனின் அகவயச் செயல்பாட்டிற்கு அவர் கொடுத்த அழுத்தமும் மற்றும் மந்தமான பிரதிபலிப்பு என்பதன் ஒரு ஊடகமாக ம்ட்டுமே கலை இருக்கிறது என்பதை அவர் ஆழமாக எதிர்த்தது என்பதுமே. 2ம் அகிலத்தின் சோசலிசத்துக்குள்ளேயே சாத்வீக அல்லது மந்தமான பொருள்முதல்வாத தன்மைகள் இருந்த அக்காலகட்டத்தில் இது ஒரு மிக அரிதான நிகழ்வே. ``வனாந்திரத்தில் ஒருவனின் அழுகைக்குரலின் மூலமாக மட்டுமே கடவுளின் வழிகளைக் கண்டுபிடிக்க முடியும்``. என்று பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தில் வாய்களில் (பொது சனக் கருத்தில் ) திருப்தியுடன் பகிரங்கப் படுத்தப்பட்ட இந்த மனிதன் என்னை மிகவும் பாதிப்பவனாகவும் என் உணர்வைக் கிளறுவனாகவும் இருக்கிறான்.

மேலும் இவ்வகை வெளித்தோற்றங்கள் அனைத்தும் `` கலை கலைக்காகவே `` என்ற வாதத்துடன் இணைத்துப் பார்க்கப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கலைஞன் தனது ``சமகாலத்துக்கான பேச்சாளனாக`` அதன் மதிப்பின் பணிவான ஊடகமாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிடுவதானது வெளிப்படையாகவே முதலாளித்துவ ஒழுங்கமைவில் இருந்து கலைக்கான விடுதலை, உடனடி அரசியல் யதார்த்தம், மற்றும் அதுபோன்ற வற்றில் இருந்து விடுபட்டது என்பதுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளது. அழகியல் மற்றும் கலை என்பது உபயோகமற்றது என்ற கருத்துக்கள், சமூக விதிகளை அதன் தேவைகளை மறுக்கின்ற ஒன்றாகவே வைல்டுக்கு பட்டிருக்கிறது. அவருடைய பார்வையின் எல்லைகள் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள முடியுமாயினும் அவரது இந்த ஆழமான அலட்சியமற்ற மறுப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

ஆகையால் இவை பற்றி நான் எழுதினேன். கூடவே பிராட் எவான்ஸ் பல அம்சங்களில் தனது கருத்து வேறுபாடுகளை எழுதியிருந்தார். நான் புரிந்து கொண்டளவில் அவர் கலை கலைக்காகவே என்ற கருத்தின் உடன்பாட்டாளனாக இருக்க முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட ``குட்டி முதலாளித்துவ`` பார்வை சோசலிஸ்ட்டாக இருத்தல் என்பதுடன் சாத்தியமற்றது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் சொல்கிறார், அவரின் வார்த்தைகளில் சொல்வதானால், கலையானது ``ஒழுக்க நீதிக்கு உட்பட்டவையாக அல்ல சமூக அரசியல் செயலுக்கு`` உட்பட்டவையாக இருத்தல் வேண்டும் என்று.

எனது பார்வையில் மனிதச் செயல்கள் என்ற வட்டத்துக்குள் கலை ஒப்பீட்டளவில் அதன் தன்னிச்சையான விதிகளால் மட்டுமே உருவாக்கமுடியும் என்றே மார்க்சிய விளக்கம் இருக்கிறது என்று திரு பிராட் எவான்ஸ்க்கு எனது பதிலில் அழுத்திக் குறிப்பிட்டிருந்தேன். கலை சமூக மனிதனின் உற்பத்தி, அவனது சமூக நனவின் ஒரு வடிவம் என்பது உண்மைதான். ஆனால் அது வேறு எந்த வடிவத்துக்குள்ளும் குறுக்கி கொள்ளப்பட முடியாதது. ``விஞ்ஞானம், அரசியல், தத்துவம், ஒழுக்கவியல் முதலானவை எடுத்துக்கொள்ளும் விஷயங்களில் பிரச்சனைகளில் இருந்து ஒரு வித்தியாசமான விஷயங்களை பிரச்சனைகளை கலை அணைத்துக் கொள்ளவில்லையா? இல்லை என்றால், சமூக நனவின் பிறவடிவங்களுடன் கலையின் பங்கையும் ஒன்று சேர்ந்ததாக (அதேபோன்றதா) பார்க்க முடியுமென்றால், அல்லது சமூக நனவின் ஏனைய வடிவங்களால் அது பதிலீடுசெய்யப்பட முடியும் என்றால், கலை என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? என நான் அவரைக் கேட்டேன்.

நான் இன்னொரு பந்தியில் எழுதியிருந்தேன் ``நான் நினைக்கிறேன் கலை உள்வெளி உலகங்களுக்கிடையில், துன்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகுக்கும், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் சொல்வதானால், இசைவான முழுமையான வாழ்வுக்கும் உடனடி யாதார்த்த உலகுக்கும் இடையில் சுதந்திரமாக உலாவுகிறது``. மனித வாழ்வின் இருக்கவேண்டிய முறையான இருப்புக்கு ஏற்ப, சுதந்திரத் தேவைகளின் அழகியலின் துணையுடன் மனித உறவுகளை மற்றும் உலகை மாற்றும் போராட்டமானது, மனித நனவின் தோற்றக்காலத்தில் இருந்தே கலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என நான் நினைக்கிறேன்.

என் பார்வையில் கலைவடிவம் சுதந்திரமானதாக புறநிலை முக்கியத்துவமுடைய சக்திவாய்ந்ததாக, ஆன்ம அனுபவங்களை சீரான உணர்வுகளை வளம்பெற செய்யும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

சமீபத்தில் எழுதிய திரு எவான்சின் கடிதத்தில் அவர் தான் ஏற்கனவே எழுதியிருந்த அம்சங்களை திரும்பவும் அழுத்திக் கூறியிருந்தார். ``பல்வேறு சமூகங்கள் கலைக் கர்த்தாக்களின் அழகியல் கண்களை மகிழ்ச்சிப்படுத்துவதைத் தவிர கலைக்கு வேறு எவ்வித நோக்கமும் இல்லை`` என நான் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இதே அர்த்தத்தில் பல்வேறு குறிப்புகளை அவர் எழுதியிருந்தார். உண்மைக்கு சம்பந்தமல்லாத இதுபோன்ற குறிப்புகளின் நோக்கம் பற்றி என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மாசுபட்ட வடிவத்தில் மட்டும் விருப்புக் கொண்ட ``மாசுபடா கலை``பற்றி ஒருபோதும் நான் ஆர்வம் காட்டியதோ வரவேற்றதோ இல்லை. ஆகவே இந்த அனாவசிய கருத்துக்கு பதிலளிக்க நான் என் நேரத்தைச் செலவிடப் போவதில்லை.

கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடியதாக நான் கருதும் இரண்டு பந்திகளை மட்டும் இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

திரு எவான்ஸ் தனது கடிதத்தில் ஓரிடத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: ``நீங்கள் எனக்கெழுதிய பதிலில் 5ம் பக்கத்தில் ``கலை தனக்கு உண்மையாக தனது குறிப்பிட்ட தேவைக்கு உண்மையாக இருக்கும்பொழுது ஒரு சமூகப் புரட்சிக்கு நெருங்கிய பாதைக்கு இயல்பாகவே சமீபித்து வருகிறது`` என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இக்குறிப்பு ஒரு ஆர்வமூட்டும் கருத்துருவை முன் வைக்கிறது. விடயம் ஒரு கூட்டாக வர்க்கத்திற்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிரான ஆர்வத்தை வலியுறுத்தாத பட்சத்தில், எப்படி பாட்டாளிகள் தங்கள் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்? அழகியற் கலையின் தனிமனித ரசனையை நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம் என்ன? கலை வர்க்கப்போரட்டத்தின் யதார்த்த முன்னோக்கை பிரதிநிதித்துவப் படுத்தாவிட்டால், எப்படி பெரும்பான்மையான மக்கள் தம் குறிக்கோளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்? தற்கால அரசு கொடுக்கும் கல்வி கற்றல் மூலமாக பெரும்பான்மையான மக்கள் வர்க்கம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை காத்துக்கொள்வதிலேயே நேரமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு வர்க்கம் பற்றித் தெரிந்து கொள்ள நேரமற்ற நிலையில், கலை மட்டுமே பல்வேறு தொடர்பு சாதனங்கள் மூலம் அதுபற்றி தெரிந்து கொள்ள வழியேற்படுத்தும், கல்வியூட்டும் கருவியாக இருக்க முடியும்``.

அதன் பிறகு அவர் தன் கடிதத்தில் எழுதுகிறார் ``கலைத்துவ வடிவம்`` பற்றி நீங்கள் குறிப்பிடும்பொழுது, சுதந்திரமான சக்திவாய்த புறவய முக்கியத்துவமானது ஆன்ம அனுபவத்தையும் சீரான உணர்வுகளையும் வளம் பெறச் செய்கிறது`` என்கிறீர்கள். உங்களது ``ஆன்ம அனுபவம் `` என்ற சொற்களை மார்க்ஸ் கேள்விப்பட்டால் அவர் உங்களைப் பார்த்து சிரித்திருப்பார்.

``எந்த வகை ஆன்ம அனுபவம் இந்த பொருளாயத (அரசியல் பொருளாதார) அரசை மாற்றியமைக்கப் போகிறது? ஆன்ம அனுபவங்களை புதிய காலத்திற்கு விட்டுவிட்டு பொருளாயத சக்திகள் தான் பொருளாயத உலகை மாற்ற முடியும்``

நான் இந்த இரண்டு பிரச்சனைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நவீன வர்க்கப்போராட்டத்தின் யதார்த்த சித்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டும்தானா கலையின் நோக்கம்? அத்துடன் நகைப்பிற்கிடமாக திரு எவான்ஸ் சொல்லும் ``ஆன்ம அனுபவம்`` சோசலிச போராட்டத்தில் என்ன பங்கு வகிக்கிறது, அப்படி ஏதும் பங்கிருக்கும் பட்சத்தில்?

இவைபற்றி நேரடியாக இன்றி 1920 களில் ட்ரொட்ஸ்கியின் கலை கலாச்சாரம் சம்பந்தமான, முக்கியமாக கலையும் புரட்சியும் பற்றி சுட்டிக்காட்டுவதன் மூலமாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.

 

1920களில் எழுதப்பட்ட ட்ரொஸ்கியின் ஆக்கங்களின் முக்கியத்துவம்.

என்னை பொறுத்த வரையில் ``இலக்கியமும் புரட்சியும்`` தான் இதுவரை காலமும் கலைபற்றிய மார்க்சிய அணுகல் முறையில் தலைசிறந்ததாகும். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றில் கிடைத்தற்கரிதாய் இருக்கிறது அல்லது அச்சடித்தது அனைத்தும் முடிந்துபோய் விட்டிருக்கிறது. எதிர்காலத்தில் அதை நாமே பிரசுரிப்போம் பெரும்பாலும் புதிய மொழிபெயர்ப்புடன்-என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தற்போதிருப்பதும் மிகவும் விரும்பபப்படுவதாக இருக்கிறது.

அது ஒரு தலைசிறந்த படைப்பு. ஆனால் ``இடது`` சாரி எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களால் - ஒருவருக்கு இது எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம் - நிச்சயமாக இது ஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. அழகியல் பிரச்சனைகள் பற்றி மார்க்சிய விமர்சகர்கள் என்று தாங்களே அறிவித்துக் கொள்பவர்கள் அல்லது துறைசார்ந்தோர் ஆகியோரால் எழுதிக் குவிக்கப்பட்டிருப்பதை ஒருவர் பார்த்தாரானால்-இலக்கியமும் புரட்சியும் பற்றியோ அல்லது ட்ரொஸ்கியின் வேறு எழுத்துக்கள் பற்றியோ அங்கு மிக குறைவான எடுத்துக்காட்டுகளை மட்டுமே பார்க்க முடியும்.

ஸ்ராலினிச பேய்த்தனத்துடன் ஒப்பந்தம் கொண்டிருந்த ஜார்ஜ் லூகாக்ஸ் எதிர்ப்பான சில குறிப்புகள் தவிர ட்ரொட்ஸ்கி பற்றிய எந்த குறிப்புகளையும் அவர் எழுதவில்லை. தனது உயிர் பற்றி ஆபத்து என்ற பிரச்சனையே இல்லா ஹெர்பர்ட் மார்க்சிஸ் தனது கலை பற்றிய மார்க்சிய நோக்கு பற்றிய விமர்சனப் பார்வையான ` அழகியல் பரிமாணம் ` என்ற புத்தகத்தில் ட்ரொஸ்கியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டிருந்தார். அல்லது முதலானவர்கள் கூட ட்ரொட்ஸ்கிய அடோர்னோ அல்லது ஹோர்க்கெய்மர் ஆக்கங்கள் பற்றி ஏதும் குறிப்பிட்டிருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அமெரிக்க கல்வித்துறையைச் சேர்ந்த பிரடெரிக் ஜேம்சன் தனது ``மார்க்சியமும் வடிவமும் : இலக்கியம் பற்றிய 20 நூற்றாண்டு இயங்கியற் கோட்பாடுகள்`` என்ற புத்தகத்தில் போகிறபோக்கில் ஒரேயொரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார். காலஞ்சென்ற ரேமண்ட் வில்லியம்ஸ் தனது ``மார்க்சியமும் இலக்கியமும் `` என்ற நூலில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே ``இலக்கியமும் புரட்சியும்` பற்றி தவறான குறிப்பை தந்துள்ளார். இந்த வரிசையில் ஒருவர் கிளிப் ஸ்லாட்டரையும் சேர்க்கலாம். 1980ல் பிரசுரிக்கப்பட்ட அவரது ``மார்க்சியமும் கருத்தியலும் இலக்கியமும்"` என்ற புத்தகத்தில் அவர் ஒரு அத்தியாயத்தையே ``இலக்கியமும் புரட்சியும்`` புத்தகத்திற்கு ஒதுக்கியிருந்தார். ஆனால் ஒரு ஆழமான முக்கியத்துவம் எதுவும் இன்றி அது சிரத்தையற்ற ஒரு பாசாங்கான தன்மையுடையதாகவே இருந்தது.

இந்த முழுமையான ஒதுக்கல் மெளனம் பொதுவாக விஷயத்தை விளக்கினாலும், நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சனையை புரிந்து கொள்ள இது மேலும் உதவும். இந்த புத்தி ஜீவிகள் ஸ்ராலினிசத்தை அல்லது ஸ்ராலினிச கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, அல்லது அவற்றுக்கிசைவாக வேறுபலவற்றுக்குள் இயங்கினர்.

சோவியத் யூனியனில் அதிகாரத்துவத்தின் எழுச்சிக்கு எதிரான மார்க்சிய போராட்டத்தில் எய்யப்பட்ட முதல் கணையாக ``இலக்கியமும் புரட்சியும் `` இருந்தது என்பதை ஒருவர் கவனத்திற் கொள்பவராக இருந்தால், இதன் மேலான விரோதம் வளர்க்கப்பட்டதை இன்றவர் புரிந்துகொள்ளமுடியும். ஸ்ராலினிசத்தால் உருவாக்கப்பட்ட தேசியவாத குட்டி முதலாளித்துவ தட்டுக்கள் மற்றும் சமகால குட்டி முதலாளித்துவ இடதுசாரி தட்டுக்களின் கருத்துக்களில் இருந்தும் இது கலை, சமூகம் மற்றும் இலக்கிய விமர்சனம் பற்றிய உண்மையான வாழ்க்கை சார்பான முற்றிலும் மாறுபட்ட கருத்தை வைக்கிறது. உயர் மார்க்சிய மரபின் இலக்கிய விமர்சனத்தை முன்னெடுத்து அன்று சமகால கலாச்சாரப் பிரச்சனைகள் என்பவற்றுக்கு பாவித்ததன் மூலம், ஆளும் குழுக்களால் முன்வைக்கப்பட்டிருந்த சூழ்நிலைக்கு ட்ரொட்ஸ்கி ஒரு மாற்றத்தை வைத்தார்.

இந்தப் புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலையும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. 1920 கோடையில் அவர் விடுப்பில் இருந்தபோது, சோவியத் அரசின் வெளியீட்டாளர்கள் பிரசுரிக்க இருந்த புரட்சிக்கு முந்திய அவரது இலக்கிய கட்டுரைகளில் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். 1917ல் இருந்து சோவியத் இலக்கிய வாழ்வு சம்பந்தமாக பரிணமித்த அம்முன்னுரை, அளவில் பெருத்தும் 1922ல் கூட முடிக்கப்படாமலும் இருந்தது. அடுத்த கோடையில் அவர் அந்த வேலையை திரும்ப எடுத்துக் கொண்டு, ``இலக்கியமும் புரட்சியும்`` என்ற தலைப்பில் முடித்தார்.

சோவியத் யூனியனின் அதிகாரத்துவத்திற்கு எதிராக பகிரங்கமான சண்டைப் பிரகடனத்தோடு- 1922 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பு என்பவற்றுக்கு முதல் அல்லது அந்த நிகழ்வுகளின் சூழ்நிலையில் இதை ட்ரொட்ஸ்கி எழுதினார். ஏராளமான விபத்துக்களும் கொடும் செயல்களும் நிகழ்ந்த காலப்பகுதி இது. லெனினது அரசியல் வாழ்வின் இறுதிக் காலப்பகுதி: ஸ்ராலின், சினோவியோவ், காமினோவ் ஆகிய மும்மூர்த்திகள் ட்ரொட்ஸ்கி மேல் அவதூற்றுப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட காலப்பகுதி: இத்தாலியில் முசோலினியின் பாசிசக் கட்சி பலப்பட்ட காலப்பகுதி: கம்யூனிஸ்ட் கட்சியின் அமைதிவாத போக்கின் உதவியால் புல்கேரியாவில் ஏற்பட்ட எதிர்ப்புரட்சி நிகழ்ந்த காலப்பகுதி/ரூர் பிரெஞ்சு ஆக்கிரமிப்பால் ஜெர்மனியில் ஏற்பட்ட புரட்சி கர நெருக்கடியின் காலப்பகுதி மற்றும் 1923 இறுதிப்பகுதியில் நிகழ்ந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினதும் ஸ்ராலின் சினோவியேவினதும் அரசியல் பதட்டநிலை படுமோசமான தோல்வி அடைந்த காலப்பகுதி.

ட்ரொட்ஸ்கி இப்படிப்பட்ட ஒரு முக்கியமான காலப்பகுதியில் கலை சம்பந்தமான வேலைக்கு தன்னை அர்ப்பணிக்குமாறு ஒரு தவறான கணிப்பீட்டைச் செய்தார் என்று சிலர் நம்பக்கூடும் என எனக்குத் தெரியும். அது ஒரு மிகக் குறுகிய பார்வை என நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட கருத்தையும் இங்கு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ``இலக்கியமும் புரட்சியும்`` வேறு ஒரு மாற்றீடு இல்லாத தன்னிகரற்ற ஆக்கம். இது வழிகாட்டி நூலாகவும் ஆழமான அறிவிற்கு மூலநூலாகவும் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. இருப்பினும் இதுபற்றி சரியென்ற உறுதிப்படுத்தலை கணிசமான அளவு என்னால் தரமுடியும் என்று நான் நினைக்கிறேன்.

முதலாம் உலகயுத்தத்தின் முடிவிற்கு பிறகு ஏற்பட்ட புரட்சி எழுச்சி போராட்ட அலையின் குறைவு ஒரு தனிமைப்பட்ட தொழிலாளர்களின் அரசாக போல்ஷிவிக் ஆட்சி நீண்ட காலப்பகுதிக்கு முகம் கொடுத்தது. உடல்நலமின்மை தன் செயல்களை முடக்குவதற்கு முதல் லெனின் ரஷ்ய பொருளாதார கலாச்சார பின்தங்கிய தன்மையின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கக் கூடிய புரட்சிகர ஆட்சியின் ஆபத்து பற்றியும் போல்ஷிவிக் கட்சியில் அதன் பிரதிபலிப்புக்கள் பற்றியும் கூட கடுமையாக எச்சரித்தார். இந்தப் பழமைவாத, அதிகாரத்துவ கூறுகளுக்கு எதிரான முதல் போராட்டத்தில், லெனினுடன் ஒரு பங்காளன் என்ற வகையில் லெனினது இறப்புக்குப் பிறகு ட்ரொட்ஸ்கி, கட்சியும் ஆட்சியும் எதிர்கொண்டிருந்த புதிய பிரச்சனைகளை மார்க்சிய வழியில் தீர்க்கும் சவாலை எடுத்துக்கொண்டார்.

சரியான அரசியல் திட்டங்களின் பெருக்கத்தாலோ, அன்றி சில சுலோகங்களை உயர்த்துவதாலோ அல்லது புத்திசாலித்தனமான சில தந்திரோபாயங்களைக் கடைப்பிடிப்பதாலோ மட்டும் சோவியத் யூனியனின் தலைவிதி நிர்ணயிக்கப் படுவதில்லை என்பதை உணர்த்திய ட்ரொட்ஸ்கி கலாச்சாரப் பிரச்சனைகளிலும் ஒரு பகுதி கவனம் செலுத்தினார். 1923 யூலையில் பிரசுரிக்கப்பட்ட ``அன்றாட பிரச்சனைகள்`` என்று பின்பு அழைக்கப்பட்ட முதல் கட்டுரையில், இம்மாதிரியான அணுகுமுறையின் பாலான தன் எரிச்சலை வெளிக்காட்டியிருந்தார். இது இடது எதிர்ப்பை ஒழுங்குபடுத்துவதற்கு முதல் என்பது உண்மைதான், ஆயினும் கூடவே ஆட்சிக்காரர்களின் மேலான ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை பற்றி நேரடியாக இதுபேசவில்லை. இருப்பினும் இது அவரது அக்காலப்பகுதி சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இப்பகுதி ``அரசியலால் மட்டுமல்ல`` என்ற தலையங்கமிடப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கி இச் சொற்றொடரின் முக்கியத்துவத்தை விளக்குவதுடன் தொடங்குகிறார். ''பிரச்சார நோக்கம் கொண்டு எழுதுபவர்கள் பேசுபவர்கள் அனைவராலும் இந்தச் சிறு சிந்தனையானது எடுத்துக் கொள்ளப்பட்டு கவனமாக மனதில் இருத்தப்பட வேண்டியது. காலமாற்றம் மாறிய குரலையும் கொண்டுவருகிறது. எமது கட்சியின் புரட்சிக்கு முந்தைய வரலாறு என்பது புரட்சிகர அரசியலின் வரலாறும் கூட. கட்சி இலக்கியம் கட்சி அமைப்புக்கள் எல்லாமே நேரடி குறுகிய அர்த்தங்களில் அரசியலின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தற்போது தொழிலாளர் வர்க்கம் புரட்சியின் அடிப்படை விளைவுகள் பற்றி மிகத் தெளிவாக விளங்கி உள்ளது. அந்த விளைவுகளின் கதையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று. தொழிலாளர்களின் மனதை இனிமேல் அவை கிளர்ச்சியடையச் செய்யப் போவதில்லை மாறாக அவர்கள் மனதில் இருந்து கடந்தகாலப் படிப்பினையை அழிப்பதற்கே சாத்தியமுள்ளது. எமது முக்கிய பிரச்சனைகள் கலாச்சார, பொருளாதார மீள்கட்டுமானம் பற்றித் திரும்பியுள்ளன.'' (எனது அழுத்தம்)

தங்களுக்கு எந்த நன்மையும் செய்திராத ரஷ்ய முதலாளிகளுடன் ரஷ்ய தொழிலாளர்கள் மிக இலகுவில் முறித்துக் கொண்டார்கள் என ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் மேலும் சொன்னார் ``ஒரு விலையும் செலுத்தாமல் வரலாறு எதையும் இலவசமாய் கொடுத்துவிடுவதில்லை. ஒரு விஷயத்தில் அது குறைத்துக் கேட்டாலும்-அதாவது அரசியலில்-மற்றொரு விஷயத்தில் அது எங்கைைள கூடுதலாக செலுத்த வைக்கிறது-அதாவது கலாச்சாரத்தில்``. சோவியத் யூனியனில் சோசலிச அடித்தளத்தை இடுவதற்கு முக்கிய தடையாக ``அரக்கத்தனம்`` (அவர் மீண்டும் மீண்டும் இப்பெயரடையை உபயோகப்படுத்தினார்) ஆன ஆன்மீக, கலாச்சாரப் பிற்போக்கு வாதம் இருக்கிறது மற்றும் மிகமுக்கியமான இந்த சமூக யதார்த்தங்களில் ஒன்றுதான் வக்கிரமான சுயநலமான விசயஞானமற்ற ஒரு அதிகாரத்துவத் தட்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது என இக்காலப்பகுதியில் தான் எழுதிய எல்லாவற்றிலும் ட்ரொட்ஸ்கி தெளிவாக அடையாளம் கண்டிருந்தார்.

கலாச்சாரம், சமூக வாழ்க்கை சம்பந்தமாக 1920 களின் நடுப்பகுதியில் அவரது முக்கிய எழுத்துக்களான ``இலக்கியமும் புரட்சியும்``, ``அன்றாடப்பிரச்சனைகள்``, ``இளம் தலைமுறையினர், அரசியல் படியுங்கள்!``, ''சோசலிசமும் கலாச்சாரமும்'', ''விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வானொலியும்'' மேலும் பல ஆக்கங்கள் எல்லாமாக மனித உறவுகளை சோசலிச ரீதியில் ஒழுங்கமைப்பதற்கு சாதகமாக மிக ஆழமான தாக்கம் நிறைந்த விவாதங்களை, அசாதாரணமான புற நிலை அறிவை அவை வைத்திருக்கின்றன.

சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சூழ்நிலையை ட்ரொட்ஸ்கி அணுகியவிதம் மிகவும் பாரதூரமானது அல்லது ஸ்ராலினிஸ்ட்டுக்களின் வெற்றிக்கு அவர் விட்டுக்கொடுத்து விட்டார் என்று கருதுவது முற்றிலும் தவறானது. ஆனால் சோவியத் மக்களின் கலாச்சார மட்டத்தின் ஆழமான மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மார்க்சியப் பண்பின் வெற்றியின் சாத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கமுடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தது மட்டுமின்றி, அவர் அந்த மாற்றத்தை உருவாக்கவும் போராடினார். வளர்ந்து வந்த அதிகாரத்துவ புற்றுநோயை மார்க்சிஸ்டுகளால் தவிர்க்க முடியாமற் போனது எமக்குத்தெரியும். ஆனால் அதுவே ட்ரொட்ஸ்கியின் முயற்சிகளுக்கு எதிரான ஒரு வாதமாக இருக்கமுடியாது. சோசலிச கருத்துக்களின் வளர்ச்சிக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒரு மிகச்சிறந்த கருவியாக இருப்பதை இன்று அவருடைய ஆக்கங்கள் நிரூபிக்கின்றன.

தொடரும்......