World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

World Bank and donor countries set the agenda for Sri Lankan government

உலக வங்கியும் கடன் வழங்கும் நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனைகள்

By K. Ratnayake
27 December 2000

Use this version to print

உலக வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இரண்டு நாள் பாரிஸ் கூட்டம், பொதுஜன முன்னணி அரசாங்கத்தை நாட்டின் யுத்தத்துக்கு முடிவு கட்டுமாறும் அரசாங்கத் துறையை மறுசீரமைப்பதை விரைவுபடுத்துமாறும் நலன்புரி சேவைகளையும் கல்வியையும் வெட்டுமாறும் வேண்டியுள்ளது. நாட்டுக்கு ஒரு தொகை புதிய கடன்கள் அவசியப்படின் இதைச் செய்தாக வேண்டும் என டிசம்பர் 18-19ம் திகதிகளில் அது வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அபிவிருத்தி ஒன்றியம் என பெயர்போன இதன் கூட்டத்தில் அரசாங்கம் கடன் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை வைத்திருந்தது. இராணுவச் செலவினங்களாலும் எண்ணெய் விலை உயர்வினாலும் உருவாகியுள்ள நாட்டின் பொருளாதார சங்கடங்களில் இருந்து இதன் மூலம் தலையெடுக்கலாம் என அது நம்பிக்கை கொண்டு இருந்தது. இலங்கையினது அரசியல் ஈடாட்டம் காரணமாகவும் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களை முன்கூட்டியே நடாத்தியதன் காரணமாகவும் கடந்த இரண்டரை வருட காலங்களில் இந்த அபிவிருத்தி ஒன்றியம் கூட்டப்படுவது இதுவே முதற்தடவை.

சாத்தியமான கடன் வழங்குவோரை கவரும் பொருட்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தானே அங்கு ஆஜராகி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்தார். பிரதிநிதி அமைச்சரும் அரசியலமைப்புச்சட்ட அமைச்சருமான ஜீ.எல். பீரிசின் தலைமையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட தூதுக்குழுவும் அங்கு சென்று இருந்தது.

1997ல் இலங்கை 860 மில்லியன் டாலர்களையும் 1998ல் 780 மில்லியன் டாலர்களையும் கடன்வழங்கும் நாடுகளிடம் இருந்து பெற்றது. எவ்வாறெனினும் இந்தக் கடைசிக் கூட்டத்தின் முடிவில் இந்தத் தூதுக் குழு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (ADB) ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட 100 மில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக திட்டவட்டமான எந்த ஒரு வாக்குறுதியும் இல்லாமலே நாடு திரும்பியது.

உலக வங்கியின் தென் ஆசிய பிராந்தியத்துக்கான உதவி தலைவர் நிக்கோ நிஷிமுசு "கடன்வழங்கும் நாடுகளிடையே மனமுறிவு உணர்வு" காணப்படுவதாக அடித்துச் சொன்னார். குமாரதுங்கவின் சமீபத்திய கொள்கை விளக்க அறிக்கையை மேற்கோள் காட்டுகையில் நிஷிமுசு பின்வருமாறு எச்சரித்தார்: "நாடு ஆழ்ந்த நெருக்கடியில் மூழ்கியுள்ளது. அரசாங்க நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் கணக்கெடுக்கப்படுவது கிடையாது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..." என்றார்.

இலங்கை அரசாங்கம், "அபிவிருத்தியின் பங்காளிகள்" இலங்கைக்கு "அறிவும் அபிவிருத்தியும் அவசியமானால் வேண்டிய மேலதிக நிதி வளங்களும்" வளங்குவதற்கு முன்னதாக அது உலக வங்கியின் உத்தேச கட்டுமானங்களை அமுல் செய்ய வேண்டி இருந்ததாக அவர் கூறினார். நிஷிமுசுவின் கருத்துக்கள் பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கி இருக்கும்.

நிஷிமுசுவின் கருத்துக்கள் இந்த இலங்கை அபிவிருத்தி ஒன்றியத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை கோடிட்டுக் காட்டிக் கொண்டுள்ளது. யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வையும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் ஏற்படுவதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியுள்ளது. "நீண்ட காலத்தில் நல்ல பொருளாதார தொழிற்பாடுகள் அத்தியாவசியமான அடிப்படைச் சீர்திருத்தங்களையும் நல்ல நிர்வாகத்தையும் வேண்டி நிற்கின்றது. சமாதானத்தை புனருத்தாரணம் செய்வதோடு சேர்ந்து இலகுவான அரசாங்க விதிமுறைகளையும் அறிமுகம் செய்ய வேண்டும். இந்த அம்சத்தில் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) நாட்டின் அபிவிருத்தியைக் கொண்ட அரசாங்க வரவு செலவுத் திட்டம் பெருமளவுக்கு இராணுவ செலவீனங்களை கொண்டுள்ளதாக விளங்குவதையிட்டு கவலை கொண்டுள்ளது."

இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் "இலங்கை அரச பொருளாதாரம் -2000" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையில் மோசமடைந்து செல்லும் பொருளாதார நிலைமைகளை சுட்டிக் காட்டியது. அரசாங்க வரவு செலவுத் திட்டமும் சென்மதி நிலுவைகளும் திட்டமிடப்படாத பாதுகாப்பு செலவீனங்கள் காரணமாக எழும் அரசாங்க வருமான வீழ்ச்சியாலும் செலவீன அதிகரிப்பாலும் "2000 ஆண்டுகளில் ஒரு கணிசமான அளவு தேய்மானத்தை" காட்டும் என எதிர்பார்க்க இடமுள்ளதாக குறிப்பிட்டது.

2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கம் வரவு செலவுத்திட்டப் பற்றாக் குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5 சதவீதத்துக்கு வரையறுத்துக் கொள்வதென திட்டமிட்டு இருந்தது. ஆனால் இப்புள்ளி 8.7 சத வீதம் வரை வீக்கம் கண்டது. பாதுகாப்பு வரவு செலவுகள் அரசாங்க வருமானத்தின் 36 சத வீதத்தை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6 சதவீதத்தை தின்று ஏப்பமிடுகின்றது.

கடந்த ஏப்பிரல்-மே மாதங்களில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அரசாங்கம் ஒரு தொகை பிரமாண்டமான இராணுவத் தோல்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டதைத் தொடர்ந்து அது பெருமளவிலான ஆயுதக் கொள்வனவுகளில் இறங்கியது. இதனால் 52.34 பில்லியன் ($738m) ரூபாய்களாக திட்டமிடப்பட்டு இருந்த பாதுகாப்பு செலவீனம் 83 பில்லியன் ரூபாய்களாக ($1037 million) அதிகரித்தது. இதே சமயம் மொத்த வரி வருமானம் 2043 மில்லியன் ரூபாய்களால் வீழ்ச்சி கண்டதோடு அரசாங்க நிறுவன விற்பனைகள் மூலம் கிடைக்க வேண்டிய எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 28500 மில்லியன் ரூபாய்கள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியமும் காணப்பட்டது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் வட்டி வீதத்தை குறைப்பதன் மூலம் தனது சாதனைகளை ஜம்பம் அடித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்போது இது உயர்ந்த வட்டி வீதங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றது. "பணச்சந்தைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள" அவை அவசியம் என அது கூறிக் கொள்கின்றது. மத்திய வங்கி அறிக்கை "உயர்ந்த வட்டி வீத காட்சி தொடரும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது. தனியார் முதலீடுகளை குவிக்கும் அதே சமயம் ஒரு நிச்சயமற்ற காலப்பகுதியில் தனியார் முதலீட்டில் ஒரு தேக்கம் காணப்பட்டது" என்றது.

அதிகரித்த அளவிலான பாதுகாப்புச் செலவீனங்களும் எண்ணெய் செலவீனங்களும் நாட்டின் இவ்வாண்டு வர்த்தக பற்றாக்குறையை 1749 மில்லியன் டாலர்களால் அதிகரிக்கச் செய்தன. 1999ஐக் காட்டிலும் இது 1305 மில்லியன் டாலர்கள் அதிகமானது. சென்மதி நிலுவை பற்றாக்குறை கடந்த ஆண்டின் 263 மில்லியன் டாலர்களில் இருந்து இவ்வாண்டு 514 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். மறுபுறத்தில் இலங்கையின் வெளிநாட்டு வைப்புக்கள் 1998, 1999ம் ஆண்டுகளில் ஏற்பட்ட முறையே 7.2%, 11.2% வீழ்ச்சியை விட 2000ல் மேலும் அதிகரிக்கும். 2000ம் ஆண்டின் முதல் 11 மாத காலத்தில் இப்புள்ளி விபரம் 29.1 வீதத்தினால் வீழ்ச்சி கண்டது. அதாவது 1639 மில்லியன் டாலர்களில் இருந்து 1038 மில்லியன் டாலர்களாக வீழ்ச்சி கண்டது. இவ்வாண்டு இறுதியில் இது 800 மில்லியன் டாலர்களாக மேலும் வீழ்ச்சி காணலாம் என சில ஆய்வாளர்கள் கணித்துக் கொண்டுள்ளனர்.

கடந்த ஜூனில் இருந்து இலங்கை மத்திய வங்கி மூன்று தடவைகள் ரூபாவை மதிப்பிறக்கம் செய்துள்ளது. ஆண்டுக்கு 12 சதவீதத்தினால் தேய்வு காணச் செய்துள்ளது. இறக்குமதி விலைகளை அதிகரிக்கச் செய்தது. ரூபாயின் கணக்கில் வெளிநாட்டு கடனின் அளவை வீங்கச் செய்தது. மத்திய வங்கி உயர் அதிகாரிகள் இறுதியாகச் செய்த இரண்டு சதவீத ரூபாவின் மதிப்பிறக்கத்தை (டிசம்பர் 11) நியாயப்படுத்திக் கொண்டனர். "நாம் சுதந்திரமாக மிதக்கும் நிலைக்கு சமீபமாக உள்ளோம்" என அவர்கள் கூறிக் கொண்டனர். ரூபாவின் பெறுமதியை தீர்மானிக்கும் எந்த ஒரு தலையீட்டையும் அரசாங்கம் கைவிட்டு விடலாம் என்பதை இது சமிக்கை செய்கிறது.

இராணுவச் செலவீன அதிகரிப்பு அரசாங்கத் துறை முதலீட்டில் வீழ்ச்சி ஏற்படச் செய்துள்ளது. இது வரவு செலவுத் திட்டத்தில் 8.1 வீதமாக கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் அது 6.7 வீதமாக வீழச்சி கண்டுள்ளது. மே மாதத்தில் ஜனாதிபதி நாட்டை யுத்த நிலைமையில் இருத்தும் தனது நடவடிக்கையின் ஒரு அவசர நடவடிக்கையாக குமாரதுங்க "முன்னுரிமையற்ற திட்டங்களை" கட்டிப் போட்டார். அரசாங்க மூலதனச் செலவீன கணக்கு 17,854 மில்லியன் ரூபாய்களால் வெட்டப்பட்டது.

அரசாங்கம் கிழக்கு ஆசிய நெருக்கடியை தவிர்ப்பதை பற்றி பெரிதாக வாயடித்துக் கொண்டாலும், உள்ளூர் சந்தையை அடிப்படையாகக் கொண்ட உள்நாட்டு புடவைக் கைத்தொழில் மலிவான புடவைகளின் இறக்குமதி காரணமாக ஒரு கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அரசாங்கம் ஆடை பிணை எடுக்கும் திட்டத்தை விஸ்தரிக்கத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது எண்ணெய் விலை உயர்வு ஏனைய கைத்தொழில்களையும் பெருமளவுக்கு பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

உள்நாட்டு பங்குமுதல் சந்தை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே இருந்து வரும் ஸ்திரமற்ற நிலைமையை பிரதிபலிக்கின்றது. நவம்பரில் கொழும்பு பங்குமுதல் சந்தையின் சகல விலைச் சுட்டெண்களும் 12 சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டது. இதே சமயம் மிலங்கா விலைச் சுட்டெண் 15% னால் வீழ்ச்சி கண்டது. முதல் 11 மாத காலத்தில் தேறிய உள்நாட்டு மூலதன வெளிப்பாய்ச்சலானது 3.23 பில்லியன் ரூபாய்களாக விளங்கியது. கடந்த ஆண்டில் (1999) இதே காலப்பகுதியில் இது 392 மில்லியன் ரூபாய்களாக விளங்கியது.

டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பங்குமுதல் விலைச் சுட்டெண்கள் 15.5 புள்ளிகளால் அதிகரித்தது. ஆனால் ஒரு ஆய்வாளர் சுட்டிக்காட்டியது போல் இதற்கான முக்கிய காரணம் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளின் சாத்தியத்தையிட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துக் காணப்பட்டதேயாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே எந்தவிதமான ஆர்வமும் காணப்படவில்லை.

இலங்கை அபிவிருத்தி ஒன்றியத்தின் (Sri Lanka Development Forum-(Paris Group Meeting) கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார பிரச்சினைகளின் சமைகள் தொழிலாளர் வர்க்கத்தின் தலையில் நேரடியாக கட்டியடிக்கப்படும். பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகள் மேலும் பாதிக்கப்படுவர். இந்த ஒன்றியம் (Forum) அரசாங்க துறையை மேலும் மறுசீரமைப்புச் செய்வதையும் சேர்த்துக் கொண்டுள்ளது. ஆதலால் பெருமளவிலான தொழில் வெட்டுக்கான சாத்தியம் இருந்து கொண்டுள்ளது. கல்வித்துறையில் தனியார் துறையின் அதிகரித்த அளவிலான "பங்குபற்றல்" இருந்து கொண்டுள்ளது. அரசாங்கம், ஏழை விவசாயிகளால் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது அவர்களிடையே எதிர்ப்புக்களைத் தூண்டிவிட்டுள்ளது.

"இலங்கை- கைநழுவவிட்ட வாய்ப்புகளை மீள கைப்பற்றுகிறது" என்ற தலைப்பில் ஜூனில் வெளியிடப்பட்ட ஒரு உலக வங்கி அறிக்கையும் இந்த இலங்கை அபிவிருத்தி ஒன்றிய மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலான உதவிகளை வழங்கி வந்த அரசாங்கத்தின் சமுர்த்தி (சுபீட்சம்) திட்டத்தை கேள்விக் குறியாக்கும். இது இந்த நலன்களின் 44 சதவீதம் சனத்தொகையின் செல்வந்தரான 60 சதவீதத்தினருக்கு செல்வதாகக் குறிப்பிட்டுள்ளது. சமுர்த்தி திட்டம் பொருளாதார, அரசியல் இலாபங்களின் பேரில் தவறாக கையாடப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே கிடையாது. ஆனால் உலக வங்கியின் சிபார்சு உயர் வருமான குழுக்களுக்கான நலன்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதேயன்றி நாட்டுப்புறத்தில் உள்ள வறுமையால் பாதிக்கப்பட்ட பெருமளவிலான குடும்பங்களின் செலவீனத்தை அதிகரிப்பது அல்ல.