World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Lessons from history: the 2000 elections and the new "irrepressible conflict"

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 தேர்தல்களும் புதிய "கட்டுப்படுத்த முடியாத முரண்பாடுகளும்"

By David North
11 December 2000

Use this version to print | Send this link by email | Email the author

இந்த விரிவுரை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தினால் டிசம்பர் 3ல் அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகும்.

நீங்கள் அறிந்தது போல் இக்கூட்டத்தின் ஆரம்பத் திட்டம் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாக இருந்தது. இந்த விடயத்தை மாற்றுவது என்ற தீர்மானம் இலகுவானதாக இருக்கவில்லை. நான் இந்தச் சந்தர்ப்பத்தை ட்ரொட்ஸ்கியின் கோட்பாடு, அரசியல் பாரம்பரியங்களின் சிறப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு மட்டுமல்லாது வரலாறு ட்ரொட்ஸ்கியை இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத் தலைவர், சிந்தனையாளர் எனவும் இறுதியில் தேர்ந்தெடுக்கும் எனவும் விவாதிக்க இருந்தேன்.

தலைப்பு மாற்றம் எந்த விதத்திலும் எமது இயக்கத்தின் வரலாற்று அடிப்படைகள் மீது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தும் அம்சங்களை குறைத்துவிடும் நோக்கில் அல்லாது எல்லாவற்றுக்கும் மேலாக தனது கடைசி மாதத்தை இப்போது பூர்த்தி செய்து கொண்டுள்ள நூற்றாண்டின் மாபெரும் மூலோபாய படிப்பினைகளைத் தெளிவுபடுத்துவதற்கும் அதனுள் இடம்பெற்று வருகின்றதும் உக்கிரம் கண்டு வருகின்றதுமான போராட்டத்தின் அத்தியாவசியமான சிறப்பு முக்கியத்துவத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையைப் பற்றியும் பாரம்பரியங்களைப் பற்றியும் நான் கூற நினைத்தவை ஒத்தி வைக்கப்பட முடியும். அமெரிக்காவில் இன்று இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் அந்தளவுக்கு பிரமாண்டமான அனைத்துலக அரசியல் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. எமது கருத்தின்படி நவம்பர் 7, 2000 தேர்தலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அந்த நெருக்கடியைப் பற்றி கலந்துரையாட இக்கூட்டம் வழங்கியுள்ள வாய்ப்பை நழுவ விடுவது ஒரு பாரதூரமான தவறாகும். இதை ட்ரொட்ஸ்கி கூட அங்கீகரித்திருப்பார் என நான் எண்ணுகின்றேன். அவரது ஆக்கங்களின் முக்கிய பண்பு என்னவெனில், உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் பெரிதும் முன்னேறிய வெளிப்பாட்டையும், அது காட்டிக்கொண்டுள்ள நிகழ்வுகளையிட்டும் மார்க்சிஸ்டுகளதும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ரீதியில் முன்னேற்றமான பகுதியினரதும் கவனத்தை ஈர்க்கச் செய்வதாக விளங்கியது.

1931 நவம்பரில் ட்ரொட்ஸ்கி ஜேர்மனி சம்பவங்களை தெளிவுபடுத்தினார். அங்கு தொழிலாள வர்க்கத்திற்கும் முன்னேறி வந்து கொண்டிருந்த பாசிச சக்திகளுக்கும் இடையேயான போராட்டம் "அனைத்துலக நிலைமைக்கான திறவுகோல்" (The key to the International Situation) ஆக உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி இது தொடர்பாக எழுதியதாவது: "ஜேர்மன் நெருக்கடிக்கான தீர்வு, அபிவிருத்திகாணப்போகும் திசை ஜேர்மனிக்கு மட்டுமன்றி ஐரோப்பாவினதும் முழு உலகினதும் தலைவிதியை இன்னும் பல வருடங்களுக்கும் தீர்மானிப்பதாக விளங்கும்".

1931ல் ஜேர்மனியில் நிலவிய நிலைமைகளுக்கும் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கும் நிலைமைகளுக்கும் எந்த ஒரு ஒற்றுமையை குறைந்த அளவிலாவது ஒப்பிட்டுக்காட்டுவது அமெரிக்க நெருக்கடியின் பரந்த சிறப்பு முக்கியத்துவத்தை அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவினுள் அறிமுகம் செய்வதற்கு அவசியமாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாட்டையும் பலத்தையும் பற்றிய மாபெரும் நப்பாசைகள் நிலவும் நாடு அமெரிக்காவை விட உலகில் வேறு எங்கும் கிடையாது.

இந்த அமைப்பின் ஸ்திரப்பாட்டையிட்டு அமெரிக்காவினுள் இருந்து வரும் நப்பாசைகள் உலகம் பூராவும் பிரதிபலிக்கின்றது. சந்தைச் சக்தியினதும் மூலதனச் சக்தியினதும் ஒரு மாபெரும் சக்திக்கு உதாரணமாக வேறு எந்த ஒரு நாடும் விளங்கவில்லை. அத்தோடு இது இன்னும் பல இலட்சோப இலட்சம் மக்களின் மனதுகளில் ஜனநாயகத்தின் பூமியாகவும் அளப்பரிய வாய்ப்புகளின் நிலமாகவும் விளங்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விமர்சகர்களாக தம்மை கருதியவர்களில் எத்தனை பேர் இந்த உலக முதலாளித்துவத்தின் கோட்டையில் ஒரு நெருக்கடி உருவாகும் எனவும், அது முழு அமைப்பினதும் ஸ்திரப்பாட்டை பாரதூரமான முறையில் கேள்விக்குள்ளாக்கும் எனவும் நிஜமாக நம்புகின்றனர்?

இதன் உள்நோக்கம் கெளரவக் குறைவை ஏற்படுத்துவது அல்ல. ஆனால் நான் பல மாதங்களுக்கு முன்னர் உங்களுக்கு அமெரிக்கா இந்தளவுக்கு பிரமாண்டமானதும் இந்தளவு அடிப்படையானதுமான ஒரு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அது முழு அரசாங்க அமைப்பையும் பிரச்சினைக்குள்ளாக்கும் எனவும் கூறியிருந்தால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளை பெரிதும் தாராளமாக மதிப்பீடு செய்பவர்கள் உட்பட உங்களில் எத்தனை பேர் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருப்பீர்கள்?

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற எந்த ஒரு தேர்தலையும் போலன்றி ஒரு தேர்தல் இடம்பெற்ற ஒரு மாதத்தின் பின்னர் நாம் இங்கு கூடியுள்ளோம். அத்தோடு அமெரிக்காவில் உள்ள அரசியல் அமைப்பு ஒரு நாடகப் பாணியிலானதும் முற்றிலும் எதிர்பாராததுமான மாற்றங்களுக்கு உள்ளாக முடியும் என்பது இனியும் நினைத்துப் பார்க்க முடியாததொன்றல்ல.

உலக முதலாளித்துவத்தின் கோட்டையினுள்ளேயே ஒரு புரட்சிகர நெருக்கடி ஆரம்பித்துள்ளமையானது- அது இன்றைய அபிவிருத்திகளின் முக்கியமான ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது- உலக நிலைமையினுள் ஒரு அசாதாரணமானதும் அத்தோடு கணித்துப் பார்க்க முடியாத அளவிலான பருமன் கொண்டதொரு காரணியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. நள்ளிரவோடு நள்ளிரவாக அவுஸ்திரேலியா உட்பட்ட ஒவ்வொரு நாடுகளதும் ஆளும்வர்க்கங்களின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் பொருளாதாரக் கோட்பாட்டாளர்களும் தாம் நான்கு கிழமைகளுக்கு முன்னர் கற்பனை செய்தும் பார்க்க முடியாதது எனக் கணித்த ஒரு காரணியை சடுதியாக எதிர்கொண்டுள்ளதாக கண்டுள்ளனர். உலகம் பூராகவும் "உலகின் கடைசி மேலாதிக்க வல்லரசு" ஆக விளங்கிய அமெரிக்க அரசுகளில் அரசியல் ஈடாட்டம் கண்டு, அரசாங்க அமைப்பில் சாத்தியமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சில வேளை ஒரு நிஜமான நெருக்கடியின் பெரிதும் சிறப்பான அம்சம், அதன் வருகை பொதுவாக எதிர்பாராத விதத்திலும் முன் அனுமானிக்கப்படாத வடிவிலும் இடம் பெறுவதாக விளங்கலாம். இது எந்த விதத்திலும் நெருக்கடியை அடியோடு கண்டுகொள்ளவில்லை என்பதாகாது. அமெரிக்காவின் அரசியல் அமைப்பு ஆழமான ஸ்தம்பித நிலையை எட்டிக் கொண்டுள்ளது என குறைந்தது ஒரு அரசியல் ஆய்வு சாதனமாவது வலியுறுத்தி வந்தது. அது உலக சோசலிச வலைத்தளமாகும். (WSWS)

1998 டிசம்பர் அளவில் கிளின்டன் மீதான அரசியல் குற்றச்சாட்டு போராட்டம் அதனது உச்சக் கட்டத்தை அடைந்தபோது, காங்கிரசுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையேயான கொடூரமான போராட்டம், எதிர்வந்து கொண்டுள்ள உள்நாட்டுப் போரின் (Civil War) முன்னெச்சரிக்கை என உலக சோசலிச வலைத்தளம் எச்சரிக்கை செய்தது. ஆனால் அச்சமயத்தில் WSWS வனாந்தர ஒலியாக போயிற்று. எமது பல ஆதரவாளர்கள் கூட எமது போக்கிற்கு எதிராக முறைப்பட்டு கடிதங்கள் எழுதி இருந்தார்கள். நாம் மிகைப்படுத்தி அல்லது பெரிதுபடுத்தி கூறுவதாக அவர்கள் நினைத்தார்கள்.

தேர்தல் நெருக்கடி

2000 நவம்பர் 7ம் திகதி வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் அரைப்பங்கினர் ஏறக்குறைய 100 மில்லியன் அமெரிக்கர்கள் அமெரிக்கத் தரத்தில் கூட பெரிதும் சிறப்பான பிரச்சாரம் இல்லாமலே வாக்களிக்கச் சென்றனர். இறுதி வாரங்களில் பெறுபேறுகள் மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிஜமாக இடம்பெற்றதற்காக எவருமே தயார் செய்திருக்கவில்லை.

விமர்சகர்களில் பலரும் புஷ் வெற்றி பெறுவார் என எதிர்வு கூறி இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்த ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கோரும் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் சகல கைத்தொழில் நகரங்களிலும் எதிர்பார்த்ததை விட பெரிதும் சிறப்பாக வாக்குகளை பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாகியது. "போர்க்கள மாநிலங்கள்" ஆக வர்ணிக்கப்பட்ட மாநிலங்கள் ஏதோ ஒரு வழியில் பெருமளவுக்கு ஜனநாயக் கட்சிக்காரர்களுக்கு தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்தும். (ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு) பெரிதும் நெருக்கமானவையாகக் காட்டப்பட்ட பென்சில்வேனியாகவும் மிச்சிக்கனிலும் ஜனநாயகக் கட்சிக்கு கணிசமான அளவு பெரும்பான்மையுடன் கிடைத்தது.

ஆனால் அல்கோர் புளோரிடா மாநிலத்தினை தட்டிக் கொண்டு விட்டதாக மாலையில் அறிவித்தபோது பெரிதும் ஆச்சரியம் ஏற்பட்டது. இரவு 9 மணியளவில் உப-ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப் போவது போல் தோன்றியது.

இதைத் தொடர்ந்து ஒரு தொகை ஆச்சரியமான சம்பவங்கள் இடம்பெறத் தொடங்கின. அமெரிக்கன் அரசியலில் சில பாரம்பரியங்கள் இன்னமும் இருந்து கொண்டுள்ளன. அதாவது தேர்தல் நாள் இரவில் ஜனாதிபதி வேட்பாளர்களின் குரல், ஒன்றில் வெற்றியை பிரகடனம் செய்வது அல்லது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு அப்பால் கேட்பது இல்லை. இது அதில் ஒன்று. அத்தோடு முற்று முழுதும் சரியான வாக்குச் சீட்டுக்களின் அடிப்படையில் செய்தி ஊடகங்கள் networks புளோரிடா மாநிலம் கோருக்கு வழங்கப்பட்டதாக அறிவித்ததன் பின்னர் டெக்சாஸ் ஆளுனர் புஷ்சின் மாளிகையில் உடனடியாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டது. அவர் பெரிதும் அமைதியோடும் நம்பிக்கையோடும் செய்தி ஊடகங்களின் அனுமானங்களை கணக்கெடுக்காமல் இறுதியில் புளோரிடா மாநிலத்தில் தான் வெற்றி கொள்ளப் போவதாக பிரகடனம் செய்தார்.

புஷ்சின் தோற்றமும் கருத்தும் ஒரு பெரிதும் வினோதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் கூறியதுபோல் பத்திரிகையாளர் மாநாடு தேர்தல் நாளன்றிரவு, பாரம்பரிய இரவுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு போயிற்று. மேலும் புஷ், புளோரிடா வாக்களிப்பையிட்டு செய்தி ஊடகத்தின் மதிப்பீட்டை சவால் செய்ய, முதிர்ச்சியற்றதும் ஒத்திகையற்றதுமான விதத்தில் தோன்றியதோடு மட்டுமல்லாமல் (சீனியர்) புஷ்சின் பிரச்சாரத்தின் செயற்பாட்டாளர்கள் செய்தி ஊடகங்களை கடும் நெருக்குவாரத்துக்கு உள்ளாக்கி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் அழைப்பை மாற்றி, கோரின் பட்டியலில் இருந்து புளோரிட மாநிலத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டது.

இது ஏன் முக்கியமாக விளங்கியது என்பது பின்னர் அம்பலமாக்கப்படும். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் புஷ் கொண்டிருக்கும் அரசியல் வாய்ப்புகள் இறுதியில் செய்தி ஊடகங்கள் புளோரிடா மாநிலத்தை புஷ்சுக்கு என அழைத்ததோடு தொடரவுள்ள போட்டியை கணக்கெடுக்காது, புஷ் தேர்தலில் வெற்றியீட்டி விட்டார் என்ற பொதுஜன அபிப்பிராயத்தை சிருஷ்டித்தது.

புஷ்சின் பத்திரிகையாளர் மாநாட்டின் சிறிது நேரத்தின் பின்னர் புளோரிடா கோரின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக ஒரு அறிவித்தல் வெளியிடப்பட்டது. பல மணித்தியாலங்களின் பின்னர் -காலை 2.00 அல்லது 2.30 மணியளவில் புளோரிடா புஷ்சின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. செய்தி ஊடக தாக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள தீர்மானம் செய்தார்.

புஷ்சுக்கு தொலைபேசியில் பேசிய கோர் அவருக்கு நல்வாழ்த்துக்கள் கூறியதோடு தோல்வியை ஒப்புக் கொண்டு பகிரங்க மண்டபத்துக்கு சென்று உரைநிகழ்த்துவதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அசாதாரணமான சம்பவங்கள் இடம்பெற்றன. கோர் உரைநிகழ்த்த மண்டபத்துக்கு சென்று கொண்டிருக்கையில் புளோரிடாவில் புஷ்சுக்கும் கோருக்கும் இடையேயான வாக்கு வேறுபாட்டின் எண்ணிக்கை துரிதமாக வீழ்ச்சி காணத் தொடங்கியது. அசந்து போன உப -ஜனாதிபதியின் உதவியாளர்கள் செல் தொலைபேசி மூலம் கோருடன் தொடர்பு கொண்டு இந்த உண்மையை அறிவித்ததோடு தோல்வியை ஒப்புக் கொள்வதை வாபஸ் பெறும்படி அவரை தூண்டினர். கோருக்கும் பிரச்சார தலைமையகத்துக்கும் இடையே வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன. இறுதியில் கோர் ஒப்புக் கொண்டு கார் சாரதியை காரை திருப்பிக் கொண்டு ஹோட்டல் அறைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். புஷ்சுடன் தொலைபேசியில் பேசிய கோர் தோல்வியை ஒப்புக்கொள்வதை வாபஸ்பெறுவதாக தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒரு போதும் இடம்பெற்றது இல்லை. நவம்பர் 8 அதிகாலை தெளிவாகிய ஒரே விடயம் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது இன்னமும் தெளிவாகாததே.

அன்று மாலை அமெரிக்க வரலாற்றில் ஒரு போதுமே இடம்பெறாத ஒரு தொகை சம்பவங்களின் ஆரம்பத்தைக் குறித்து நின்றது. புஷ் புளோரிடாவில் வழங்கப்பட்ட 6 மில்லியன் வாக்குகளிலும் அமெரிக்காவில் வழங்கப்பட்ட 100 மில்லியன் வாக்குகளிலும் ஒரு சில நூறு வாக்குகளால் மட்டுமே முன்னணியில் நின்றார். கோர் முழுப் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டிருந்தார். புளோரிடா தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தன. எவ்வாறெனினும் பாம்பீச்சில் உள்ள ஆயிரக் கணக்கான யூதர்கள், கடைகெட்ட யூத எதிர்ப்பாளரான பட் புச்சானனுக்கு வாக்களித்திருந்தனர். நிச்சயம் அவர்கள் ஹிட்லரை புகழ்ந்து பாராட்டும் புச்சானனின் சமீபத்திய நூலினால் பீதியடைந்து இருக்க வேண்டும் என ஒரு அரசியல் கோமாளி சொன்னார். வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்கையில் ஆபிரிக்கன்- அமெரிக்கன் வாக்காளர்கள் அரச பொலிஸ் படையால் துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. பெரிதும் ஜனநாயகக் கட்சி ஆதரவு சுற்றாடலில் உள்ள ஆயிரக் கணக்கான வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்யத் தவறினர்.

இவை வாக்குச் சீட்டுக் கணக்கெடுப்பு மீது தொடர உள்ள நீண்ட போராட்டத்துக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. இப்போராட்டம் கசப்பான அரசியல் போராட்டத்தை அதிகரித்த அளவில் உமிழ்ந்து கொண்டு இருந்தது. இதில் பெரும்பகுதி நீதிமன்றங்களிலேயே தலைவிரித்து ஆடியது. வெள்ளிக்கிழமை அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணை இதன் உச்சக்கட்டமாக விளங்கியது.

நீதிமன்றங்கள் போராட்டத்தின் மாபெரும் களங்களாக அமைந்திருந்த போதிலும் மோதுதல்கள் தேர்தல் அதிகாரிகளை சிண்டிவிட கும்பல்களையும் பயன்படுத்தியது. கும்பல்களை குடியரசுக் கட்சியினர் கூலிக்கு அமர்த்தினர். குடியரசுக் கட்சிக்காரர்கள் இராணுவத்திடம் ஆதரவு கோரி வெளிவெளியாக அழைப்பு விடுத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அரசியலில் இருந்து விலகி நிற்கும் இராணுவ நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என தனது அதிகாரிகளுக்கு அறிவிக்க நேரிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

புளோரிடாவில் வழங்கப்பட்ட முழு வாக்குகளையும் சரியாக கணக்கிட்டால் புளோரிடா மாநிலத்திலும் தேசிய தேர்தலிலும் உதவி ஜனாதிபதி கோர் வெற்றியீட்டி இருப்பார் என்பதை எவரும் பாரதூரமான முறையில் சவால் செய்யமாட்டார்கள் என்று நான் எண்ணுகின்றேன். இது அதிகரித்த அளவில் உண்மையாகி விட்டது. பெரும்பான்மையான தொடர்பு சாதனங்களின் ஆதரவோடு குடியரசுக் கட்சி செய்யும் முயற்சிகள் அத்தகை ஒரு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெறுவதைத் தடுப்பதையே மையமாகக் கொண்டுள்ளன.

நாம் இங்கு கூடும்போது சகலரது பார்வையும் அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பக்கமே திரும்பியுள்ளன. புளோரிடா மாநிலச் செயலாளர் கதறின் ஹறிஸ் புஷ்சின் மோசடியான வெற்றியை ஊர்ஜிதம் செய்யும் ஆரம்ப அத்தாட்சியை புளோரிட மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியதற்கு எதிரான புஷ்சின் மேன்முறையீட்டின் மீது அது தீர்ப்பு வழங்கவுள்ளது. அவர் ஒரு குடியரசுக் கட்சி அதிகாரி. அத்தோடு புளோரிடாவில் புஷ்சின் பிரச்சார இணைத் தலைவர்.

இது தெளிவாகியுள்ள நிலையில் அங்கு இன்னமும் ஆயிரக் கணக்கான வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதோடு வேறும் பல விவகாரங்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஹரிஸ் புஷ்சின் தேர்தல் வெற்றியை அத்தாட்சிப்படுத்தும்படி வலியுறுத்தி வந்தார். இது புளோரிடா உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது இறுதி நிமிடத்தில் ஹரிஸ்சின் புஷ் வெற்றியை ஊர்ஜிதம் செய்வதை எதிர்த்து தீர்ப்பு வழங்கியது.

சட்டப் பிரச்சினைகள் பின்வருமாறு இருந்தன. புளோரிடாவில் இரண்டு சட்டப் புத்தகங்கள் உள்ளன. ஒன்று, வாக்கு ஒரு நாளில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும் என்கிறது. மற்றைய சட்டப் புத்தகம், வாக்குகளை மீளக் கணக்கெடுக்கும் உரிமை உள்ளது என்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் அடிக்கடி இடம்பெறுவது போல் இரண்டில் ஒன்று தன்னும் அதை தெளிவாக குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தின் பணி முரண்பட்டுக் கொண்டுள்ள சட்டரீதியான பணிப்புக்களை எப்படி இணக்கத்துக்கு கொணர முடியும் என்பதேயாகும்.

சட்டத்தின் மூலம் மாநிலச் செயலாளர் காலக்கெடுவை கடைப்பிடிப்பதில் அவரின் தற்துணிவின்படி நடக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். சட்டப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு திகதியைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதற்கு முன்னர் சகல காரணிகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். இந்த விவகாரம் புளோரிடா உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது மாநிலச் செயலாளரை இரத்துச் செய்தது. காலக்கெடு பற்றிய ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை தேர்தலினால் தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளின் அடிப்படைப் பிரச்சினைகளை புறக்கணித்து விட்டதாக அது பிரகடனம் செய்தது.

புளோரிடா உயர்நீதிமன்றம் புளோரிடா அரசியலமைப்பு உரிமை பிரகடனத்தை உதவிக்கு அழைத்தது. அது மக்களுக்கு உரிமைகள் உள்ளதாக பிரகடனம் செய்வதோடு அதை அரசு மீறிநடக்க முடியாது. புளோரிடா உயர் நீதிமன்ற நீதியரசர்கள் "வாக்குரிமை, உரிமைப் பிரகடனத்தில் உள்ளடங்கியுள்ள முதன்மையான உரிமை எனவும் இந்த அடிப்படை உரிமை இல்லாமல் ஏனைய சகலதும் ஒழிந்துவிடும்" எனவும் வலியுறுத்தி இருந்தனர். சர்ச்சைக்கிடமான வாக்குகள் ஒழுங்கான விதத்தில் எண்ணப்படுவதற்கு அனுமதிக்கும் விதத்தில் அத்தாட்சிப்படுத்துவதை தாமதிக்க ஹரிஸ் மறுத்து விட்டமை நீதிமன்றத்தின்படி ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்ற முறையில் அடாவடித்தனமான விதத்தில் அவரின் தற்துணிவை தவறாகப் பயன்படுத்தியதாகும். அத்தோடு அது புளோரிடா அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதுமாகும்.

அமெரிக்க உயர்நீதிமன்றம் தற்சமயம் மீளாய்வு செய்யும் தீர்ப்பு இதுவேயாகும். புளோரிடா உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஊர்ஜிதம் செய்து கோருக்கு சார்பாக ஒரு தீர்ப்பு வழங்கப்படுமிடத்து அது நிச்சயம் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதாக அமைந்துவிடாது. அவருக்கு எதிரான தீர்ப்பு உண்மையில் இப்போக்கினை ஒரு முடிவுக்கு கொணர்வதோடு புஷ் ஜனாதிபதி பதவியில் அமர்வதையும் ஊர்ஜிதம் செய்துவிடும்.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமெரிக்க ஆளும் வர்க்கம் பாரம்பரியமான முதலாளித்துவ- ஜனநாயக, அரசியலமைப்பு மாதிரிகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு எவ்வளவு தூரம் செல்லத் தயாராகி உள்ளது என்பதை அம்பலப்படுத்தும். வாக்கு மோசடிகளை அங்கீகரிக்கவும் வாக்குகளை நசுக்கித் தள்ளவும் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியை அடியோடு சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோத விதிமுறைகள் மூலமும் ஈட்டிக் கொண்ட ஒரு வேட்பாளரை அமர்த்த தயாராகி வருகின்றதா?

முதலாளி வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினரும் சில சமயம் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் ஒரு பெரும்பான்மையினரும் கூட இதைச் செய்யவே தயாராக உள்ளனர். அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரியமான வடிவங்களுக்கு ஆளும் பிரமுகர்களிடையே ஆதரவு பிரமாண்டமான அளவு சிதைந்து போய்விட்டது.

ஒரு பத்திரிகையாளர், ஆளும் வட்டாரங்களில் ஜனநாயகத்தின் பேரில் இருந்து கொண்டுள்ள சிடுமூஞ்சித்தனத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறினார்: "நிச்சயமாக கோர் அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால் அதையிட்டு யாருக்கு கவலை? கோர் புளோரிடாவில் கும்பலால் சுற்றிப் பிடிக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் பொலிசார் அதையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை".

இந்த நெருக்கடியின் தன்மை என்ன?

கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்று வரும் முன்னொரு போதும் இடம்பெறாத சம்பவங்களுக்கு இடையேயும், இரண்டு அரசியல் தலைவர்களும் தொடர்புச் சாதனங்களும் தமது நடவடிக்கைகளுக்கும் வார்த்தைகளுக்கும் நேர் மாறாக அமெரிக்கா ஒரு மாபெரும் அரசியலமைப்பு நெருக்கடியின் மத்தியில் இருந்து கொண்டிருக்கவில்லை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால் அமெரிக்க நிலைமை சில வேளை அவஸ்த்தை நிறைந்ததாக இருக்கலாம் ஆனால் பாரதூரமானது அல்ல என பொதுமக்கள் நம்பச் செய்யப்பட்டு உள்ளனர். அரசியல் இளகிய மனப்பாங்கினை தூவுவதானது மக்களுக்கு தெரியாத முறையில் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முடிந்த மட்டும் ஊர்ஜிதம் செய்யும் ஆளும் பிரமுகர்களின் நலன்களுக்கே சேவகம் செய்கின்றது.

இந்த இளகிய மனப்போக்கு, எஞ்சிக் கிடக்கும் அரசியல் ரீதியில் தளர்ந்து தொங்கும் லிபரல் பத்திரிகைகளில் மட்டுமன்றி மத்தியதர வர்க்க தீவிரவாதத்தின் பல்வேறு வகையறாவைச் சேர்ந்த பிரதிநிதிகளிடையேயும் பிரதிபலித்தது. உதாரணமாக ரால்ப் நாடர் (Ralph Nader) தேர்தலுக்கு பின்னைய நெருக்கடியைப் பற்றி கூறுவதற்கு எதையுமே கொண்டிருக்கவில்லை. மிகவும் அலட்சியமான பாணியில் கருத்து தெரிவிக்கையில் நாடர், புஷ்சுக்கும் கோருக்கும் இடையேயான தகராறு நாணயத்தை சுண்டிவிட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். ஒரு பிரபல இடதுசாரி சிடுமூஞ்சியான அலெக்சாண்டர் கொக்பேர்ண் (Alexander Cockburn) தாம் தேர்தல் பெறுபேறுகளையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். வாஷிங்டனிலான பல வருடகால அரசியல் தணலைக் காட்டிலும் இது ஒன்றும் பாரதூரமானது அல்ல என அவர் கூறிக் கொள்கிறார். கடந்த வாரம் அவர் எழுதும்போது "தணலைப் பற்றி முதலில் ஒரு வார்த்தை. நாம் அதை விரும்புகின்றோம்."

அடுத்து ஸ்பாட்டசிஸ்ட் பத்திரிகையின் பக்கங்களில் அவர்களின் கருத்து வெளியாகி இருந்தது. அவர்களின் பத்திரிகையில் ஒரு பிரதி கிடைக்கும் பேறு எனக்கு கிட்டியுள்ளது. அவர்களின் நிலைப்பாடு பின்வருமாறு தொகுத்துக் கூறப்பட்டுள்ளது: "இக்ககூட்டத்தில் கோர்-புஷ் குடும்பச் சண்டை முதலாளி வர்க்கத்தின் ஒரு அரசியல் நெருக்கடியைக் காட்டிலும் ஒரு தேநீர் சாடி சூறாவளியைப் போன்றது."

அமெரிக்காவில் அறிவுபடைத்த ஒரு அரசியல் போக்காக குறிப்பிடப்படும் தொழிலாளர் உலகக் கட்சி (Workers World Party) எழுதுகையில்: "தற்போதைய தேர்தல் மாற்றங்களுக்கு சமூக அல்லது பொருளாதார நெருக்கடி காரணம் அல்ல" என்றுள்ளது.

இது இவ்வாறிருப்பின் அமெரிக்காவில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் முற்றிலும் தெளிவுபடுத்த முடியாதவையாகும்.

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டில் முதற்தடவையாக ஒரு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றது என்பதை தீர்மானிக்க முடியாது போயுள்ளது. வாக்குகள் அடியோடு துருவப்படுத்துப்பட்ட வாக்காளர்களை அம்பலப்படுத்தியது. கோருக்கும் புஷ்சுக்கும் இடையேயான பிணைப்பு செனட் சபையினதும் மக்கள் பிரதிநிதிகள் சபையினதும் சேர்க்கை மூலம் காட்டப்பட்டது. தேர்தல் சித்திரம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான பிளவினை ஒத்திருக்கின்றது.

தேர்தலுக்கு பின்னைய மோதுதல்கள், இன்றைய அரசியலமைப்பு கட்டுமானத்தினுள் ஒரு நிஜமான ஜனநாயகத் தீர்ப்பை ஈட்டுவது முடியாத காரியம் என்பதை நிரூபித்துள்ளது. மேலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்ட இவர்கள் இவை எவையுமே ஒரு சமூக அல்லது பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புபட்டவை அல்ல! என எமக்கு உறுதி கூறுகின்றார்கள். அத்தகைய ஒரு மதிப்பீடு வரலாற்று அறியாமையினதும் அரசியல் குருட்டுத்தனத்தினதும் கூட்டுக் கலவையின் உற்பத்தியாகும்.

வரலாற்று படிப்பினைகள்

ஒரு வழக்காறான நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது இன்றைய நிலைமையுடன் ஏதேனும் ஒருமைப்பாடு கொண்டுள்ள ஒரே தேர்தல் 1876ம் ஆண்டினதேயாகும். அன்று பொதுஜன வாக்குகளின் எண்ணிக்கைக்கும், மாகாணவாரி தேர்தல் (Electoral college) வாக்குகளுக்கும் இடையே ஒரு பிளவு காணப்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சமுவேல் ரில்டன் அதிகளவிலான பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருந்தார். அவர் உண்மையில் அதிகளவிலான மாகாணவாரி (Electoral college) வாக்குகளையும் கொண்டிருந்தார். ஆனால் ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தின் மூலம் குடியரசுக் கட்சியினர் தெற்கிலிருந்த பழைய அடிமைமுறைக்கு பிரமாண்டமான அரசியல் சலுகைகள் வழங்குவதற்கு கைமாறாக வெள்ளை மாளிகையை வேண்டி நின்றனர். இந்த சாதனங்கள் மூலமே மீளமைப்பு ஒரு முடிவுக்குக் கொணரப்பட்டது.

ஆனால் இன்றைய நெருக்கடியின் சிறப்பு முக்கியத்துவத்தை விளக்க இந்த ஒப்புவமை போதியது அல்ல. அமெரிக்காவில் எந்த ஒரு சிறப்பு முக்கியத்துவமான சம்பவமும் இடம்பெற்று விடவில்லை என உறுதி கூறும் லிபரல்களதும் மத்தியதர வர்க்க இடதுசாரிகளதும் வாதத்தை நான் இங்கு மீண்டும் குறிப்பிட என்னை அனுமதியுங்கள். இவை எல்லாம் முக்கியமானவை அல்ல என அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். ஏனெனில் அமெரிக்காவில் அடிப்படையான சமூக, பொருளாதார நெருக்கடி கிடையாது என்கின்றனர். மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அவர்கள் ஆட்சியில் ஏற சண்டையிட்டுக் கொண்டுள்ளார்கள். எல்லோரும் வெற்றியை வேண்டி நிற்கிறார்கள். ஆனால் முக்கியமானவை இவை எல்லாம் அல்ல.

அவர்கள் உலக சோலிச வலைத் தளத்துக்கு (WSWS) பதிலிறுக்க வேண்டும் எனத் தள்ளப்படின் அவர்கள் அமெரிக்காவினுள் ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கக் கூடிய பாரிய அரசியல் போராட்டத்தை உண்டுபண்ணும் சமூக, பொருளாதார முரண்பாடுகள் இருந்து கொண்டுள்ளது என்ற வாதம் அர்த்தமற்றது எனத் தள்ளுபடி செய்வர் என நான் சந்தேகிக்கின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக 1860பதுகளுக்கு முன்னர் அடிமைமுறைக்கும் சுதந்திர உழைப்புக்கும் இடையே கட்டுப்படுத்த முடியாத மோதல்கள் இருந்து வந்தன. அன்றைய நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது இன்று அமெரிக்காவினுள் என்ன சாத்தியமான சமூக மோதுதல்கள் இருந்து கொண்டுள்ளன என அவர்கள் வாதிக்கலாம்.

அந்தக் கேள்விக்கு ஒரு பதில் வழங்க நான் முயற்சிப்பேன். ஆனால் நான் 1850பதுகளின் அரசியல் மோதுதல்கள் இறுதியாக உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது எப்படி என்பதை இச்சமயத்தில் சுருக்கமாக மீளாய்வு செய்கின்றேன்.

கடந்த தசாப்த காலத்தில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் நலன்கள் மறுமலர்ச்சி செய்யப்படாமை அக்கறைக்குரியதாகும். திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. நூல்கள் எழுதப்பட்டன. அமெரிக்கன், உலக வரலாற்றில் அபூர்வமான இந்த அத்தியாயம் பற்றிய இவற்றில் சில தலைசிறந்தன.

அமெரிக்க உள்நாட்டுப் போர் 19ம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இது தொழிலாளர் வர்க்கத்தின் அபிவிருத்தியில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது. இது மனித இனத்தின் வரலாற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு மாபெரும் வீரம் செறிந்த அத்தியாயம்.

அந்தக்காலப் பகுதியை ஆய்வு செய்வதானது தென் அமெரிக்காவில் அடிமை உழைப்பை அடிப்படையாகக் கொண்டு நிலவிய விசித்திரமானதும் புராதானமானதுமான முதலாளித்துவ வடிவத்துக்கும் கூலி உழைப்பை அடிப்படையாகக் கொண்டு வட அமெரிக்க அரசுகளில் நிலவிய நவீனமயமானதும் சக்திவாய்ந்த வடிவிலானதுமான முதலாளித்துவத்துக்கும் இடையே உருவாக்கப்பட்ட உக்கிரமான மோதுதல் சமூக முரண்பாடுகளை உக்கிரமடைய செய்ததையும், இது அரசியல் அமைப்பை அடியோடு தகர்ந்துபோகச் செய்ததையும் எடுத்துக்காட்டுகின்றது.

அமெரிக்கன் குடியரசின் முதல் 70 வருடகால வரலாற்றில் இந்த இரண்டு உழைப்பு அமைப்புக்களுக்கும் -ஒன்று அடிமை மற்றயது சுதந்திரம்- இடையேயான முரண்பாடுகள், அமெரிக்க அரசுகளின் முழுஅரசியல், சமூக, பொருளாதார, சட்ட அமைப்பின் தவறான தீய போக்கின் அடியில் இருக்கின்றது. சமூக மோதுதல்களால் உருவாக்கப்பட்ட அரசியல் முரண்பாடுகளை அப்போதுள்ள அரசியலமைப்புச் சட்ட அமைப்பினுள் தீர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் ஸ்தாபக தந்தையர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆழமான சமூக முரண்பாடுகளை மனங்கொள்ளாது ஐக்கியத்தை தொடர்ந்தும் காப்பாற்ற ஒரு ஆழமான அவா இருந்து வந்தது. ஆனால் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள் இந்த சமூக முரண்பாடுகளாக உக்கிரம் அடையச் செய்ய தொடர்ந்து சதி செய்தன. இது வன்முறையில் ஈடுபடாமல் எந்த ஒரு அரசியல் தீர்வையும் எட்டுவதையும் சாத்தியம் இல்லாமல் செய்துவிட்டது.

உதாரணமாக அடிமை மாநிலங்களுக்கும் சுதந்திர மாநிலங்களுக்கும் இடையேயான சமபலம், 1803ம் ஆண்டின் லூசியானா (தென்மேற்கு அமெரிக்க மாநிலம்) சம்பவங்களைத் தொடர்ந்து பரந்த அளவிலான புதிய நிலங்களை சேர்த்தது. அமெரிக்காவின் ஆரம்பகாலத் தலைவர்கள் இதை 1820ம் ஆண்டின் மிசூரி சமரசத்தின் மூலம் (Missouri Compromise) தீர்க்க முயன்றனர். அது மேசன் -டிக்சன் எல்லைக் கோட்டை அடிமை மாநிலங்களையும் சுதந்திர மாநிலங்களையும் பிரிக்கும் எல்லையாக குறித்தது. இது சுமார் 30 வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. சிறப்பாக தெற்கினால் தூண்டப்பட்ட மெக்சிக்கன் போரின் பெறுபேறாக அமெரிக்க ஐக்கிய அரசுகளின் விரிவாக்கம் சுதந்திர மாநிலங்களுக்கும் அடிமை மாநிலங்களுக்கும் இடையேயான சமபலத்தை சீர்குலைக்க அச்சுறுத்தியது.

1846ல் டேவிட் வில்மட் (David Wilmot) என்ற பென்சில்வேனியா காங்கிரஸ் உறுப்பினர் (அமெரிக்க) காங்கிரசில் ஓர் ஷரத்தை அறிமுகம் செய்தார். அது மெக்சிக்கன் போரின் மூலம் அமெரிக்கா ஈட்டிக் கொண்ட எந்த ஒரு பிராந்தியத்தையும் அடிமைத் தொழிலுக்கு திறந்து விடக் கூடாது எனக் கோரியது. தென் மாநிலங்கள் இதை வன்மையாக எதிர்த்தன. வில்மட் ஷரத்தின் ஆதரவாளர்களில் ஒருவர் எவரும் அறியாத ஆப்பிரகாம் லிங்கன் (Abraham Lincoln) என்ற பெயரிலான காங்கிரஸ்காரர். அவரது சுருக்கமான காங்கிரஸ் வாழ்க்கையில் அவர் இதற்கு ஆதரவாக ஐந்து வாக்குகளை வழங்கினார் என நான் நம்புகின்றேன். ஆனால் அடிமை மாநிலங்களின் மேலாதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த காங்கிரஸ் இந்த ஷரத்தை ஒரு போதும் ஏற்றது கிடையாது.

இதனால் யூனியனில் (Union) கலிபோர்ணியா ஒரு அடிமை மாநிலமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமா அல்லது சுதந்திர மாநிலமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமா என்பது தொடர்பாக ஒரு பெரும் போராட்டம் வெடித்தது. இறுதியாக ஒரு சமரசம் ஏற்பட்டு கலிபோர்ணியா ஒரு சுதந்திர மாநிலம் ஆகியது. எவ்வாறெனினும் அடிமைச் சொந்தக்காரர்களுடன் பெரும் அரசியல் சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. இதில் Fugitive அடிமைச் சட்டம் என்பதும் ஒன்று. அது வட அமெரிக்காவுக்கு தப்பியோடிய சகல அகதிகளும் அவர்களின் எஜமானர்களிடம் திரும்ப வேண்டும் எனக் கோரியது. வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மக்பேர்ஷன், சமஷ்டி அரசின் தளபதிகள் பொஸ்டன் போன்ற நகரங்களுக்குள் சென்றதைக் கண்டதால் வடக்கில் உருவான ஆத்திரத்தை குறிப்பிட்டுள்ளார். அது ஒரு அடிமையொழிப்பு (Abolitionist) உணர்வைக் கொண்டிருந்தது. பழைய அடிமைகளை பிடித்து அவர்களை தெற்கில் உள்ள அடிமை சொந்தக்காரர்களிடம் திருப்பி அனுப்பியது.

1850பதுகளில் நிலவிய உணர்வினால் இந்த மோதுதல்கள் முழு அரசியல் அமைப்பையும் ஆட்டங்காணச் செய்தது. இருப்பினும் அடிமைத்தளையை எதிர்த்தவர்களும் தெற்கின் ஆதிக்கம் வளர்ச்சி காண்பதையும் எதிர்த்தார்கள். இது ஒரு மிகவும் பயங்கரமான காலப்பகுதியாக விளங்கியது. காங்கிரசில் ஒரு காலப்பகுதி மட்டும் இருந்த ஆப்பிரகாம் லிங்கன் முழு நேர வழக்கறிஞராக விளங்கும் பொருட்டு அரசியலில் இருந்து விலகினார். அவர் வழக்கறிஞர் தொழிலில் பெரிதும் வெற்றியீட்டியதோடு, அரசியலைவிட தனது நோக்கங்களிலும், தேவைகளிலும் வெற்றியடைந்தார்.

பின்னர் அமெரிக்க அரசியல் வாழ்க்கையை தீவிரமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் ஒரு சம்பவம் இடம்பெற்றது. அது 1854ம் ஆண்டின் கன்சாஸ்- நிப்ரஸ்கா (Kansas-Nebraska) சட்டமாகும். இந்த கன்சாஸ்-நிப்ரஸ்கா சட்டம் மேசன்-டிக்சன் (Mason-Dixon Line) எல்லைக் கோட்டுக்கு வடக்கேயுள்ள புதிய பிராந்தியங்களுக்குள் அடிமைத் தொழிலை விஸ்தரிப்பதற்கான ஒரு சாத்தியத்தை திறந்துவிட்டது. இது அமெரிக்க குடியரசின் பண்பை ஆழமாக மறுசீரமைத்தது. இது ஒரு பொருளாதார நிலைப்பாட்டில் சுதந்திர உழைப்பின் நிலையை பாதிக்கச் செய்ததோடு மட்டுமல்லாது, 1776ம் ஆண்டின் புரட்சியின்போது முன்வைக்கப்பட்ட ஜனநாயக சிந்தனைகளுக்கு பங்களிப்புச் செய்த அமெரிக்காவின் நிலையையும் கேள்விக்கு உரியதாக்கியது. கன்சாஸ்-நிபரஸ்கா சட்டம், யூனியனுள் புதிதாக அனுமதிக்கப்பட்ட புதிய பிராந்தியங்களின் தன்மை குடியிருப்பாளர்களின் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படும் எனப் பிரகடனம் செய்தது. அதாவது கன்சாஸ் குடியேற்றக்காரர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரமானதாக இருக்க வேண்டுமா அல்லது அடிமை அரசியலமைப்பாக இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பர். அத்தோடு மாநிலங்கள் யூனியனுள் எப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்டவேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்வர்.

பொதுஜன இறைமை கருத்துப்பாட்டின் பிதாவாக ஜனநாயகக் கட்சித் தலைவரான ஸ்ரீபன் டக்ளஸ் விளங்கினார். வடக்கின் காலநிலை, புவியியல் தன்மைக்கிடையேயும் இந்தச் சட்டத்தின் மூலம் கூட பருத்தி கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அடிமை முறையை வடக்கு நோக்கி விஸ்தரிப்பதற்கு எதுவித வாய்ப்பும் கிட்டாது என்ற வாக்குறுதியை வடக்கிற்கு மீளவும் வழங்க டக்ளஸ் முயன்றார். அத்தோடு இச்சட்டம், மேசன் -டிக்சன் எல்லைக் கோட்டுக்கும் அப்பால் அடிமைத் தொழிலை விஸ்தரிப்பதற்கான பாய்ந்து செல்லும் கதவுகளை திறந்து விட்டுள்ளதாக உணரப்பட்டது. உண்மையில் கன்சாசுக்குள் பெருக்கெடுத்த தென்மாநில அனுதாபிகளின் நடவடிக்கைகள் அடிமைத் தொழிலின் விஸ்தரிப்பையிட்டு அச்சம் கொண்டிருந்தவர்களின் கிலியை ஊர்ஜிதம் செய்யத் தொடங்கியது.

போர்டர் ரூபியன்ஸ் (Border Ruffians) என அழைக்கப்பட்ட மக்கள் மாநிலத்தில் வந்து நிறையத் தொடங்கினார்கள். அவர்கள் சுதந்திரமாக குடியேறியவர்களை தாக்கியதோடு அடிமைத் தொழிலை எதிர்த்தவர்களுக்கு எதிராக வன்முறையிலும் இறங்கினர். வடக்கிலான அரசியல் சூழ்நிலை பெருமளவில் மோசமடையத் தொடங்கியது. பாராளுமன்ற கெளரவ வடிவத்தினுள் அரசியல் கொடுக்கல்வாங்கல்களை செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தும் சகல முயற்சிகளும் வீழ்ச்சி காணத் தொடங்கியது. வடக்கை அதிரச் செய்யும் ஒரு சம்பவம் 1856 மேயில் இடம்பெற்றது. அன்று மதிப்புக்குரிய மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரகரான செனட்சபை உறுப்பினர் செனட்டர் சார்ள்ஸ் சம்னரை (Charles Sumner) ஒரு தென்மாநில காங்கிரஸ் அங்கத்தவன் ஒருவன் ஒரு மூங்கிலும் கையுமாக நெருங்கித் தாக்கியதோடு சம்னட் செனட் சபையிலேயே மரண அவஸ்தைக்கு உள்ளானார். தென்மாநிலங்கள் இந்நடவடிக்கையை பெரிதும் வரவேற்றன. இத்தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் சபை பிரதிநிதிக்கு தென்மாநில ஆதரவாளர்களிடமிருந்து பரிசாக மூங்கில்கள் கிடைத்தன. வட மாநிலங்கள் இதனை அடிமை மாநிலங்களின் காட்டுமிராண்டித்தனத்தின் மற்றொரு வெளிப்பாடாகக் கண்டன.

இதைத் தொடர்ந்து 1857ல் மற்றொரு சம்பவம் நடைபெற்றதோடு அது மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்த இருந்தது. 1820ன் மிசூரி சமரச ஷரத்தின் உள்ளடக்கம், காங்கிரஸ் அடிமைத் தொழிலை விஸ்தரிப்பதை தடுக்கும் உரிமையை கொண்டிருந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் அலைந்தத்தன் பின்னர் 1857ல் டிரெட் ஸ்கொட் (Dred Scott ) என்ற அடிமையினால் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் ஒரு சட்ட மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

டிரெட் ஸ்கொட் ஒரு அடிமையாக இருந்தவர். அவரின் எஜமானனால் வடக்குக்கு கொண்டு செல்லப்பட்டு இலிநோயிசிலும் (Illinois) விஸ்கொன்சிலும் (Wisconsin) வாழ்ந்தவர். இவை இரண்டும் சுதந்திர மாநிலங்கள். அவர் திரும்பவும் தனது எஜமானனுடன் மிசூரிக்கு பயணம் செய்தார். அது ஒரு அடிமை மாநிலமாக இருந்தது. அக்கட்டத்தில் டிரெட் ஸ்கொட் ஒரு அடிமை என்ற விதத்தில் இவ்வழக்கை தாக்கல் செய்தார். தான் ஒரு அடிமையல்லாத மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் இனியும் அடிமையாகக் கணிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தி இருந்தார். 1840பதுகளில் இந்த வழக்கு ஆரம்பமான போதிலும் 1857 வரை அமெரிக்க உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

உயர் நீதிமன்றம் செய்தது, அமெரிக்க அரசியல் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு உள்நாட்டுப் போரை கூடவோ அல்லது குறையவோ தவிர்க்க முடியாததாக்கியது. உயர் நீதிமன்றத்துக்கு பல மாற்று வழிகள் இருந்திருந்தன. அது டிரெட் ஒரு அடிமை; அவர் ஒரு பிரஜை அல்ல, ஆதலால் தனது எஜமானுக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்ய அருகதை கிடையாது எனக் கூறியிருக்க முடியும். உயர்நீதிமன்றம் அதைச் செய்தது. இது போதுமான அளவு கெடுதி மிக்கதாக இருந்தது. ஆனால் அத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது வட மாநிலத்தில் இருந்தார் என்பதற்காக அது அவரது அடிமை அந்தஸ்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது- ஒரு தடவை அடிமையாக இருந்தவன் எப்போதுமே ஒரு அடிமைதான் என தொடர்ந்தும் குறிப்பிட்டது.

உயர்நீதிமன்றம் அந்த அளவுடன்கூட நிறுத்திக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அது அப்படி செய்யவில்லை. இது அமெரிக்காவை புரட்சிகரமாக்கியது. ஒரு அடிமையானவன் ஒரு துண்டு சொத்து (Property) போன்றவராவார். அதனை அதன் சொந்தக்காரர் அமெரிக்காவின் எந்த ஒரு பகுதிக்கும் எடுத்துச் செல்லமுடிவதோடு அது தொடர்ந்தும் ஒரு துண்டு சொத்தாகவே இருந்துவரும் என குறிப்பிட்டது.

இதன் அர்த்தம் என்ன? திகிலூட்டும் நீதி சம்பந்தமான தாக்கங்களுக்கு அப்பால்- அடிமைகள் உண்மையில் மனிதப் பிறவிகளல்ல; ஆனால் சொத்து- உயர் நீதிமன்றம் மிசூறி சமரசங்களை செல்லுபடியற்றதாக்கியது. இது ஒர் இயங்கும் அரசியல் அமைப்பு வரையறைக்குள் விளங்கிய ஒன்றை- அடிமை முறையை விஸ்தரிப்பதை கட்டுப்படுத்தும் காங்கிரஸ் உரிமையை- தூக்கி வீசியது. இது தற்சமயம் அமெரிக்காவிலும் எங்குமே அடிமை முறையை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகள் கிடையாது எனப் பிரகடனம் செய்துள்ளது. சொத்துக்கள் மீது கட்டுப்பாடுகள் நிலவ முடியாது. இந்த அடிப்படையில் உயர்நீதிமன்றம் தென் மாநிலங்களில் அடிமைத்தனத்துக்காக பெரிதும் உக்கிரமாக வக்காலத்து வாங்கும் பிற்போக்கு பகுதியினரின் அபிலாசைகளையும் நோக்கங்களையும் திருப்திப் படுத்தியுள்ளது.

இத்தீர்மானம் வடமாநிலங்களின் பொதுஜன அபிப்பிராயத்துக்கு ஒரு பேரதிர்சியைத் தந்தது. ஆப்பிரகாம் லிங்கன் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை வழக்காறன முறையில் புறக்கணித்த போது உயர் நீதிமன்றம் பல தசாப்த காலங்களுக்கு அவமானம் செய்யப்பட்டது. அடுத்து வந்த உள்நாட்டுப் போரில் இது மிக முக்கியமான உண்மையாக விளங்கியது. இது அமெரிக்கன் அரசியலில் முழுத் தோற்றத்தையும் மாற்றியமைத்தது. இச்சமயத்தில் லிங்கன் கன்சாஸ்- நெப்ரஸ்கா சட்டத்தினால் திரும்பவும் அரசியலினுள் தருவிக்கப்பட்டார். அவர் பொதுஜன இறைமை பற்றிய டக்ளசின் கோட்பாட்டின் உக்கிரமான விமர்சகராக மாறினார். லிங்கனை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்தது போலவே கன்சாஸ்- நெப்ரஸ்காவிற்கும் டிரெட் ஸ்கொட் தீர்மானத்திற்கும் எதிரான பிரதிபலிப்பின் விளைவாக புதிய குடியரசுக் கட்சியின் ஆதரவும் வளர்ந்தது.

இந்த நிகழ்வை ஆய்வு செய்கையில் வரலாற்று இடர்ப்பாடுகள் தமக்கு எதிராக நகர்ந்து கொண்டுள்ளதை உணர்ந்து கொண்டுள்ள ஆளும் வர்க்கங்களின் தன்மையை ஒருவர் காணக்கூடியதாக உள்ளது. வட மாநிலங்களின் வளர்ச்சி காணும் கைத்தொழில், பொருளாதாரப் பலம் தென் மாநிலங்களின் நிலைப்பாட்டில் ஒரு நிஜமான பயமுறுத்தலாக நோக்கப்பட்டது. வரலாறு அடிமைச் சொந்தக்காரர்களுக்கு எதிராக நகர்ந்தபோது இதை எந்தளவுக்கு அதிகமாக அவர்கள் புரிந்து கொள்கின்றார்களோ அந்தளவுக்கு அதிகமாக அவர்கள் அடிமைமுறை இருந்துவந்த இடங்களில் அதைக் கட்டிக் காக்க மட்டுமல்லாது அடிமை முறையை ஓர் சாதகமான அற நீதிமுறையான நன்மையானதாக பிரகடனம் செய்யவும் அதனை விஸ்தரிப்பதற்கு தடையாக உள்ள சகலதையும் அகற்றவும் திடசங்கற்பம் பூண்டனர். தென் மாநிலங்களில் வளர்ச்சி கண்டு வரும் சமூக, பொருளாதார பலவீனங்களின் பேரிலான நேரடி விளைவாக அந்த ஆளும் வர்க்கத்தின் அரசியல் மூர்க்கத்தன்மை அதிகரித்துள்ளது.

டிரெட் ஸ்கொட் தீர்ப்பின் பின்னர் மற்றொரு மாபெரும் சம்பவம் இடம்பெற்றது. லிகொம்ப்டன் அரசியலமைப்பு (Lecompton Constitution) மீதான கருத்து வேறுபாடு தலைதூக்கியது. இது கன்சாசில் (Kansas) சிறுபான்மையினராக விளங்கும் அடிமை குடியேற்றக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்யாத பகுதியினரால் வரையப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டமாகும். ஒரு தரப்புக்குச் சாதகமான தேர்தல் வட்டாரப் பிரிமுறை லீகொம்டன் அரசியலமைப்பு என அழைக்கப்பட்டது. இது ஒரு அடிமை அரசியலமைப்பு முறையாக விளங்கியதோடு கன்சாஸ் மக்கள் மீது இதைத் திணிக்கவும் முயன்றது. இது சம்பந்தமாக ஒரு கசப்பான கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஏனெனில் இதை எழுதியதன் பின்னர் அவர்கள் லீகொம்ப்டன் அரசியலமைப்பு சட்டத்தை கன்சாஸின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஒரு போதும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். ஆதலால் அவர்கள் கன்சாஸ் மக்களால் இது திருத்தி அமைக்கப்படுவதற்காக திருப்பி அனுப்பப்படுவதை தடை செய்யும் ஒரு வழியை கண்டுபிடிக்க சதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரு பிரமாண்டமான போராட்டம் வெடித்தது. கன்சாஸ் மக்கள் இந்த அரசியலமைப்புச் சட்டம் மீது வாக்களிக்கும் உரிமையை கொண்டிருந்தனர். அவர்கள் வாக்குகள் மூலம் இதைத் தோற்கடிக்க முடியும். கன்சாஸின் சுதந்திர குடியேற்றவாசிகளின் தலையில் பலவந்தமாக கட்டியடிக்கும் வழியை கண்டுபிடிக்கும் பொருட்டு பல்வேறு சூழ்ச்சிகளும் தந்திரங்களும் கையாளப்பட்டன. நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியான புச்சானன் இந்தப் பிற்போக்கு முயற்சிகளுக்கு தனது அரசியல் ஆதரவை வழங்கினார். பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவே இந்த லீகொம்ப்டன் அரசியலமைப்புச் சட்டம் இறுதியில் தோல்வி கண்டது. பல வருடங்களின் பின்னர் கன்சாஸ் ஒரு சுதந்திர மாநிலமாக யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

இச்சகல சம்பவங்களும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான வேறுபாடுகளை சமாதான வழியில் தீர்த்துக் கொள்வதற்கான எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத் திட்டமும் இருக்கவில்லை என்பதை அதிகரித்த அளவில் தெளிவுபடுத்தின. 1860ம் ஆண்டளவில் தென் மாநிலங்கள் அடிமை முறை மீதான எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் தெற்கு ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பது வட மாநிலங்களுக்கு பெரிதும் தெளிவாகியது. இது காங்கிரசையும் நீதித் துறையையும் கட்டுப்படுத்தியதோடு, ஜனாதிபதி பதவி பறி போவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டாது.

1860 தேர்தல் முற்றிலும் துருவப்படுத்தப்பட்ட அமெரிக்க அரசுகளை வெளிப்படுத்தியது. குடியரசுக் கட்சி வேட்பாளரான லிங்கனுக்கு 10 தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்குத் தன்னும் கிடைக்கவில்லை. அவரின் வெற்றி சுதந்திர மாநிலங்களின் அமோக ஆதரவிலேயே தங்கி இருந்தது. 1860 நவம்பரில் அவர் தெரிவு செய்யப்பட்டமை உடனடியாக ஒரு பிரிவினைப் பிரகடனத்தின் மூலம் பதிலிறுக்கப்பட்டது. முதலில் தென் கரோலினாவினதும் (South Carolina) பின்னர் ஏனைய சகல தென்மாநிலங்களாலும் இப்பிரகடனம் வெளியிடப்பட்டது. லிங்கன் பதவியை பொறுப்பேற்ற சமயம் தென் மாநிலங்களில் பலவும் ஏற்கனவே கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தன. 1861 அளவில் ஜேம்ஸ் மக்பேர்சனின் வார்த்தைகளில் சொல்வதானால் 1860 தேர்தலில் வாக்களித்ததும் அமெரிக்கர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இருந்து கொண்டிருந்த அரசியலமைப்பு வடிவத்தினுள் தீர்த்து வைக்க முடியாது போனது, போர்க் களத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. 600,000 (6 இலட்சம்) உயிர்களைப் பலிகொடுத்து அடிமை முறை ஒழித்துக் கட்டப்பட்டதோடு, அமெரிக்கா முதலாளித்துவ ஜனநாயத்தின் அடிப்படையில் மீள நிர்மாணிக்கப்பட்டது. அடிமை முறை ஒழிக்கப்பட்டு, முழுச் சனத்தொகைக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

2000ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய அரசுகள்

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்கு முன்னைய நெருக்கடிக்கும் இன்றுள்ள நெருக்கடிக்கும் இடையே ஒரு ஒருமைப்பாட்டைக் காண முடியுமா? உள்நாட்டு யுத்தத்துக்கு இட்டுச் சென்ற "நசுக்கிவிட முடியாத மோதுதல்" களுக்கு அடிப்படையாக விளங்கிய சமூக முரண்பாடுகளுடன் ஒப்பிடக் கூடிய ஏதும் இன்று இருக்கின்றதா?

உறுதியானது என்னவெனில், அத்தகைய ஒரு சமூகமுரண்பாடு இருந்து வருவது தேடிக் கண்டுபிடிக்கப்படாமைக்கு மார்க்சிஸ்டுகள் என தம்மைக் கூறிக் கொள்பவர்களினது உட்பட அரசியல் சிந்தனை மட்டத்தில் இருக்கும் அசாதாரணமான வீழ்ச்சி இதற்கு சாட்சி பகர்கின்றது. ஆனால் அமெரிக்கா இன்று முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சமூக ரீதியில் பெரிதும் துருவப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை. சமூகப் போராட்டம் அரசியல் ரீதியில் தெளிவாக வெளிப்படுத்தப்படாது போயுள்ளமை வர்க்கப் போராட்டம் நடைபெறவில்லை என்று அர்த்தப்படாது. மார்க்ஸ் இதனை "வர்க்கப் போராட்டம் இப்போது ஆரம்பமாகியுள்ளது, இப்போது மூடிமறைக்கப்பட்டது" எனக் குறிப்பிடுகின்றார். இது அமெரிக்காவில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மேல்மட்டத்தின் கீழ் தீவிரம் கண்டுள்ளது.

உண்மையில் அமெரிக்காவில் இருந்து கொண்டுள்ள பாரதூரமான சமூக அசமத்துவ நிலைமையினுள் அரசியல் ரீதியில் நனவான வர்க்கப் போராட்டம் இல்லாமை எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கம் மோசமான சமூக அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளதற்கு சாட்சி பகர்கின்றது. அமெரிக்க கம்பனித் துறையின் சகல பிரமாண்டமான வளங்களும், வெகுஜனங்களை அரசியல், சித்தாந்த ரீதியில் முட்டாள்களாக்க திருப்பப் பட்டுள்ளன. தற்சமயம் வாக்குரிமை மீது இடம்பெறும் தாக்குதல் தொழிலாளர் வர்க்கம் அரசியல் வாழ்க்கையில் சுயாதீனமான முறையில் எந்த ஒரு பங்கும் வகிப்பதினின்றும் அதனை முறைமுறையாகத் தள்ளி வைக்கும் போக்கினது தவிர்க்க முடியாத அரசியல் வெளிப்பாடு மட்டுமேயாகும்.

உயர் நீதிமன்றத்தில் நேற்று இடம் பெற்ற கலந்துரையாடலின் கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்வது முக்கியம். குறிப்பாக கடைகெட்டவரும் காடைத்தனமான பேர்வழியுமான அன்டனின் ஸ்காலியா(Antonin Scalia) வின் நிலைப்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும். அவர் ஒரு குண்டர் கோஷ்டி வழக்கறிஞரின் நேர்மையுடன் வாதிடுகின்றார். கோரின் வழக்கறிஞரான லோரன்ஸ் ட்ரைப் (Laurence Tribe) ஐ விசாரணை செய்கையில் ஸ்காலியா புளோரிடா உயர் நீதிமன்றத்தை நிராகரிப்பதை நியாயப்படுத்தும் சிடுமூஞ்சித்தனமான வாதங்களை முன்வைக்கின்கிறார்.

சில வாதங்கள் சிக்கலானவை. ஆனால் நான் அங்கு தலையெடுத்த விடயங்களை விளக்க முயற்சிக்கின்றேன். ஸ்காலியாவின் சிந்தனை முறையை பற்றி ஒரு கருத்தை வழங்க என்னை அனுமதியுங்கள். இது பிரதம நீதியரசர் வில்லியம் ரென்குவிஸ்ட் (William Rehnquist) உடனும் இணை நீதியரசர் கிளரன்ஸ் தோமசினாலும் பகிர்ந்து (Clarence Thomas) கொள்ளப்பட்டது. அதாவது 9 நீதியரசர்களில் மூன்று நீதியரசர்கள்.

அந்த விடயம் இதுதான்: புளோரிடா உயர் நீதிமன்றம் மாநிலத்தின் செயலாளரின் நடவடிக்கையை நிராகரிக்கும் உரிமையைக் கொண்டுள்ளதா? குடியரசுக் கட்சிக்காரர்கள் காலக்கெடுவை மீற முடியாது என வாதிக்கிறார்கள். அதாவது, புளோரிடா உயர் நீதிமன்றம் இந்த விதிகளை மாற்றிவைக்க உரிமை கிடையாது என்கிறார்கள். புளோரிடா உயர் நிதிமன்றத்தின் வாதம் என்னவெனில் வாக்குரிமை ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. அதை காலக்கெடு விதிப்பது போன்ற நிர்வாக பிரத்தியேகங்களுக்கு கீழ்ப்படுத்தி விட முடியாது.

ஸ்காலியா கீழ்வரும் வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது: புளோரிடாவில் சம்பந்தப்பட்ட விவகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தெரிவு செய்வதாகும். அதாவது வாக்காளர்கள் மாகாணவாரி தேர்தல் (Electoral Collage) விதிமுறைகளுக்கு இணங்க ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பர்.

உங்களில் பலர் இந்த மாகாணவாரி தேர்தல் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இதனை விளக்க இடமளியுங்கள். அமெரிக்கர்கள் அமெரிக்க அரசுகளின் ஜனாதிபதிக்கு நேரடியாக வாக்களிப்பது இல்லை. ஜனாதிபதி தேர்தல் உண்மையில் 51 உள்ளூர் தேர்தல்களின் -50 மாநிலத் தேர்தல்களும் கொலம்பியா மாவட்டத்தில் ஒரு தேர்தலும்- கூட்டு மொத்தமாகும் இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மையைப் பெறும் வேட்பாளர் அந்த மாநிலத்தின் மாகாணவாரி தேர்தல் வாக்குகளை பெறுகின்றார். அத்தோடு இந்த Electoral Votes கண்டிப்பாக, சனத்தொகையை அடிப்படையாகக் கொள்ளாவிடிலும் வீதாசாரமானது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்களைக் காட்டிலும் அதிக மாகாணவாரி வாக்குகளை கொண்டுள்ளன. சிறிய மாநிலங்கள் முறைகேடான விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. ஏனெனில் அவை தமது இரண்டு அமெரிக்க செனட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தன்பாட்டில் ஒரு மாகாணவாரி தேர்தல் வாக்கை பெறுகின்றார்கள். வியோமிங்கில் 250,000 வாக்காளர்கள் ஒரு மாகாணவாரி தேர்தல் வாக்கை பெறும்போது நியூயோக்கில் 500,000 வாக்காளர்களுக்கு ஒரு மாகாணவாரி தேர்தல் வாக்கு கிடைக்கிறது.

இந்த மாகாணவாரி தேர்தல் வாக்கு பாகுபாடு நின்று பிடிப்பது ஏன்? இது அமெரிக்க ஐக்கிய அரசுகளை ஒன்றாகக் கொணரும் பொருட்டு அமைப்பு முறையில் செய்யப்பட்ட சமஷ்டி ஒருங்கின் ஒரு பாகமாகும். சிறிய அரசுகளின் குரல்கள் செவிமடுக்கப்படும் என்பதை உத்தரவாதம் செய்யும் பொருட்டு இது செய்யப்பட்டது. ஜனாதிபதி தெரிவில் ஒரு சில தனித்தன்மையான குரலை மாநிலங்களுக்கு மாகாணவாரி தேர்தல் உத்தரவாதம் செய்கின்றது. இது சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கியமான பாகமாக சமஷ்டி அரசாங்கத்துக்கும் -மாநிலங்களுக்கும் இடையேயான ஒரு சிக்கலான அதிகாரப் பகிர்வாக விளங்கியது.

இந்த மாகாணவாரி தேர்தல் முறையின் பின்னால் மற்றொரு வாதமும் இருக்கின்றது. அது அந்தளவுக்கு மகத்தானது அல்ல. இதனது ஸ்தாபக பிதாக்கள் மக்கள் பிழையான விதத்தில் வாக்களிப்பதற்கான சாத்தியம் இருந்து கொண்டுள்ளதைக் கண்டனர். ஆளும் பிரமுகர்களின் அங்கீகாரத்துக்கு உள்ளாகாத வேட்பாளர்களை அவர்கள் தெரிவு செய்யலாம் என எண்ணினர். இந்த அரசியலமைப்புச் சட்டத்தை வரையும் போது ஒரு நீரோட்டம் இருந்து கொண்டிருந்தது. அது ஆழமான ஜனநாயக எதிர்ப்பைக் கொண்டிருந்தது. அத்தோடு சமுதாயத்தில் உள்ள பெரிதும் வசதி வாய்ப்புகள் நிறைந்த தட்டினரின் பிரதிநிதிகளது நோக்கினைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. இந்த மாகாணவாரி தேர்தல் முறையானது மக்கள் தவறான வழியில் வாக்களிப்பதை ஆளுமை செய்யும், இறுதியாக பாதுகாத்துக் கொள்ளும் சாதனமாக விளங்கியது.

உண்மையில் அது ஒரு போதுமே இடம்பெறவில்லை. மாகாணவாரி தேர்தல் முறையானது ஒரு புதுமையான அராஜகமானதாகத் தொடர்ந்து நிலைத்து வந்தது. இது ஒரு போதுமே சவால் செய்யப்பட்டது கிடையாது. ஏனெனில் மாநிலத் தேர்தலில் வெற்றி கண்ட வேட்பாளர், தனது வேட்பாளர் பட்டியலை மாகாணவாரி தேர்தல் முறைக்கு அனுப்பும் உரிமையைக் கொண்டிருந்தார்.

நான் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட விடயத்துக்கு திரும்ப எனக்கு இடமளியுங்கள். ஸ்காலியா, ஒரு ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தப்பட்ட விடயம் வாக்காளரை தெரிவு செய்வது என்ற பகிடியுடன் தொடங்குகின்றார். அடுத்து அவர் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் வாக்குரிமை கிடையாது எனக் கூறுகின்றார். அவர்கள் மாநில சட்டசபையினால் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆதலால் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புபட்ட விடயங்கள் எதுவும் மக்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல. ஆதலால் உயர் நீதிமன்றம் சட்ட சபையினால் இயற்றப்பட்ட ஒரு சட்டப் புத்தகத்தை நிராகரிக்கும் உரிமைப் பிரகடனத்தை உதவிக்கு அழைத்துக் கொண்டு ஆரம்பிப்பது முற்றிலும் பொருத்தமற்றது. இறுதி ஆய்வில் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் வாக்குரிமைக்கு உரிமை கிடையாது என அவர் வாதிட்டார்.

இது ஏன் டிரெட் ஸ்கொட்டின் ஆவியைத் தட்டி எழுப்புகின்றது. 1857ஐ போன்று ஸ்காலியா அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியை நியாயப்படுத்துவதற்கு புளோரிடா உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான புஷ்சின் மேன்முறையீட்டினால் வழங்கப்பட்ட வாய்ப்பைச் சுருட்டிக் கொள்கின்றார். டிரெட் ஸ்கொட் வழக்கில் உயர் நீதிமன்ற நீதியரசர் றொஜர் டானி அடிமை முறையை அமெரிக்க பூராவும் சட்டபூர்வமானதாக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது போல் ஸ்காலியா இந்த வழக்கினை மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமையான வாக்குரிமைக்கு எதிரான ஒரு தலையடியை தொடுப்பதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். அவர் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒரு ஜனநாயக விரோதமான அர்த்தத்தை அறிமுகம் செய்யவும் சட்டரீதியாக்கவும் பார்க்கிறார்.

நிச்சயமாக மக்கள் ஜனாதிபதிக்கு நேரடியாக வாக்களிப்பது இல்லை. ஆனால் தேர்தல் கல்லூரி தொடர்ந்து நீடித்து வந்தது. ஏனெனில் அதன் பேராளர்களின் (Delegates) சேர்க்கையானது மாநிலங்களிலுள்ள மக்களின் வாக்குகளுடன் தொடர்புபட்டுள்ளது. தேர்தல் கல்லூரி மக்களின் நம்பிக்கையை தலைகீழாக்குவதாக அதன் நடவடிக்கைகள் அமைந்திருப்பின் அமெரிக்க அரசியல் அமைப்பின் ஒரு வினோதமான அராஜகவாதமாக அது நின்று பிடித்திருக்காது.

இது வெறும் ஊக்கத்துக்கு உரிய ஒரு விடயம் அல்ல. அரசியல் ஆத்திரமூட்டல் பேர்வழியாக மாறியுள்ள ஸ்காலியா, உண்மையில் புளோரிடா வாக்குகளின் பெறுபேறுகளை கணக்கெடுக்காது புஷ் ஆதரவாளர்களை தெரிவு செய்யும்படி புளோரிடா சட்டசபையை தூண்டுகின்றார். அதே சமயம் அவர் அமெரிக்கன் ஜனநாயகத்தின் அல்லது ஜனநாயக எதிர்ப்பின் அதிகார வர்க்கத் தட்டினரின் கருத்துப்பாட்டின் அதிகாரத் தன்மையை விபரிக்கின்றார். அது அமெரிக்க ஆளும் வர்க்கப் பிரமுகர்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதையே கொண்டுள்ளது.

இந்த அசாதாரணமான அபிவிருத்திகள் எதைக் குறிக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஸ்காலியா சும்மா கோட்பாடுகளை நெய்து கொண்டுள்ளாரா? அல்லது அமெரிக்காவின் அரசியல் வாழ்க்கையில் இப்போது வெளிப்பாடாகியுள்ள முரண்பாடுகளுக்கு ஒரு சமூக அடிப்படை உள்ளதா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நான் உலக சோசலிச வலைத் தளத்தின் கடைசிச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட எமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து ஒரு பந்தியை இங்கு மேற்கோளாகக் காட்ட விரும்புகின்றேன்.

"அமெரிக்க சமுதாயத்தின் உச்சியில் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் செல்வத்திலும் வருமானத்திலும் செல்வந்தரான சொத்துடமை வர்க்கம் இருக்கின்றது. அமெரிக்கன் குடும்பத்தில் ஒரு சதவீதமான பணக்காரர் செல்வத்தில் 10 ட்ரில்லியன் டாலர்களை- மொத்த தேசிய செல்வத்தில் 40 சதவீதத்தை திரட்டிக் கொண்டுள்ளனர். இந்தக் கோடீஸ்வரர்களின் தேறிய கூட்டுப் பெறுமானம் சனத்தொகையில் 95 சதவீதத்தினரான மக்களின் மொத்த செல்வத்தைக் காட்டிலும் பெரிதாகும்.

"1970 பதுகளின் நடுப்பகுதியில் இருந்து உயர்மட்ட 1 சதவீதத்தினர் தேசிய செல்வத்திலான தமது பங்கை இரட்டித்துக் கொண்டுள்ளனர். 20 சதவீதத்தில் இருந்து 38.9 வீதமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க பங்குமுதல் சந்தை வீழ்ச்சி கண்டு மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட 1929ம் ஆண்டின் பின்னரான அதி உயர்ந்த புள்ளியாகும். மற்றுமோர் ஆய்வின்படி குடியிருப்பாளர்களில் 1 சதவீதத்தினரான செல்வந்தர்கள் அனைத்து பிரமாண்டமான பங்குமுதல் சந்தையின் பங்குகளையும் அனைத்து நிதி கடன் பத்திரங்களில் மூன்றில் இரண்டு பங்கையும் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.

"வருமான அசமத்துவம் சொத்துடமை அசமத்துவம் போல் கடுமையானதாகும். 1999ல் சனத்தொகையில் ஒரு சதவீதத்தினரான செல்வந்தர்கள் வரி செலுத்திய பின்னர் அடிமட்டத்தில் இருந்த 38 சதவீதத்தினர் பெற்ற வருமானத்தைப் பெற்றனர். அதாவது பெரும் வருமானம் கொண்ட 2.7 மில்லியன் அமெரிக்கர்கள் குறைந்த வருமானம் பெற்ற 100 மில்லியன் அமெரிக்கர்களை விட பெருமளவான வருமானம் பெற்றனர். வரிவிதிப்பின் பின்னரான உயர் மட்ட ஒரு சத வீதத்தினரின் சராசரி வருடாந்த வருமானம் 1977ம் ஆண்டில் இருந்து 370 சத வீதத்தினால் -234,700- 868,000 டாலர்கள்- அதிகரித்தது.

"1983-1995 வரையிலான காலப்பகுதி பூராவும் இந்த இரண்டு பிரமுகர்கள் தட்டினரும்- பணக்காரர், உயர் பணக்காரர்- சனத்தொகையின் உயர் மட்ட 5 சதவீதத்தினராக உள்ளனர். நிதி சார்ந்த தேறிய பெறுமானத்தில் அதிகரிப்புக் கொண்ட ஒரே குடும்பம் இதுவே. இந்தப் புள்ளிவிபரத்தை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம்: நேரடியாக 15 வருட காலமாக - றீகன், புஷ், கிளின்டன் என்ற சகல ஜனாதிபதிகளின் காலப்பகுதியில் "சந்தைகளின் மாயாஜாலங்கள்" அமெரிக்க சனத்தொகையில் 95 சத வீதத்தினருக்கு தேறிய நஷ்டத்தைக் கொணர்ந்து. இதேவேளை உச்சத்தில் இருந்த 5 சத வீதத்தினர் மட்டுமே இலாபம் ஈட்டினர்.

"1990கள் பூராவும் ஆளும் வர்க்கத்தினை உழைக்காத வருமானத்துக்கான பைத்தியம் பிடித்துக் கொண்டு இருந்தது. இது தன்னை இலாலாப திரட்சியின் மீதான எந்த ஒரு பிடியில் இருந்தும் விடுவித்துக் கொண்டதாக உணர்ந்தது. தனிப்பட்ட செல்வத்துக்கான அப்பட்டமான முயற்சியானது முன்னைய எந்த ஒரு "தங்க முலாம் சகாப்தத்தையும்" தாண்டிச் செல்கின்றது. கிளின்டன்- கோர் நிர்வாகத்தின் போது CEO (உயர்மட்ட அதிகாரிகள்) வினரின் நஷ்டஈடு 535 சதவீதம் அதிகரித்தது. ஒரு கம்பனி தலைவர் ஒரு சாதாரண தொழிலாளியின் வருமானத்தைக் காட்டிலும் 475 மடங்கு அதிகமாக வருமானம் உழைக்கின்றார். ஒரு தொழிலாளியின் குறைந்த பட்ச சம்பளத்தைக் காட்டிலும் 728 மடங்குகள் வருமானம் பெறுகின்றார். 1990களில் சம்பளங்கள் CEO கள் அனுபவித்த சம்பளங்கள் போனசுகள், பங்குமுதல்கள் போன்று அதிகரித்து இருக்குமேயானால் சராசரித் தொழிலாளியின் உழைப்பு ஆண்டொன்றுக்கு 114,000 டாலர்களாக விளங்கியிருக்கும். ஒரு மணித்தியாலத்துக்கு குறைந்த பட்ச சம்பளம் 24 டாலர்களாக விளங்கியிருக்கும்.

இது சமூக சமத்துவமின்மையைக் காட்டும் ஒரு அதிர்ச்சி தரும் சித்திரமாகும். இத்தகைய ஒரு அசாதாரணமான சமூக துருவப்படுத்தல்களின் மட்டங்களுக்கு மத்தியில் ஜனநாயக வடிவங்கள் கட்டிக்காக்கப்படும் என நம்புவதானது வரலாற்றின் சகல படிப்பினைகளையும் அடியோடு புறக்கணிப்பதாக முடியும். அரசியல் வடிவங்களுக்கும் சமுதாயத்தின் வர்க்க அமைப்புக்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் நிறைந்த இயக்கவியல் பண்பு கொண்டதாகும். ஆனால் நீண்டகாலப் போக்கில் இந்த சமூக அசமத்துவத்தினால் உருவாக்கப்பட்ட சமூக பதட்டங்களை பாரம்பரியமான ஜனநாயக வடிவங்களுள் உள்ளடக்கி வைக்கமுடியாத ஒரு நிலை வருகின்றது. அமெரிக்க சமுதாயம் அந்த நிலையை அடைந்துவிட்டது.

அமெரிக்காவில் இரு கட்சி முறை

அமெரிக்க அரசியல் வாழ்க்கையில் ஒருவினோதமான பண்பு, ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு நின்றுபிடித்துவிட்ட இருகட்சி அமைப்பு முறையாகும். அமெரிக்கன் தொழிலாளர் இயக்கத்தின் மாபெரும்பலவீனம், வரலாற்று ரீதியில் ஒரு சுயாதீனமான அரசியல் கட்சியை ஸ்தாபிக்க முடியாது போய்விட்டதேயாகும். அரசியல் வாழ்க்கை இவ்விரண்டு முதலாளி வர்க்கக் கட்சிகளதும் மேலாதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இதன் மூலம் ஜனநாயகக்கட்சியும் குடியரசுக் கட்சியும் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் நலன்களை கட்டுப்படுத்தி வந்தன.

இந்த நீண்ட வரலாற்றுக் காலப்பகுதியில் இக்கட்சிகள் கணிசமான அளவு மாற்றம்கண்டுள்ளன என்பது உண்மை. இன்றுள்ள குடியரசுக் கட்சி, 1950பதுகளில் ஐசன்ஹோவர் (Eisenhower) காலத்தில் இருந்த கட்சியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றது. அத்தோடு ஆப்பிரகாம் லிங்கனின் காலத்தில் இருந்த கட்சியில் இருந்து இன்னும் வேறுபடுகின்றது. அவ்வாறே ஜனநாயகக் கட்சி பல மாற்றங்களைக் கண்டுள்ளது. சிறப்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைத்தொழில் அமைப்புக்களின் காங்கிரசுகளின் (Congress of Industrial organizations-CIO) தொழிலாளர் அதிகாரத்துவங்களுடன் பிராங்கிளின் டெலனோ ரூஷ்வெல்ட் (Franklin Delano Roosevelt) காலத்தில் இக்கட்சி பல கூட்டுக்களை ஏற்படுத்தியதோடு குறைந்த பட்சம் வடக்கில் தன்னும் பெருமளவுக்கு சமூக தாராண்மை வாதப் பண்பை கடைப்பிடித்தது.

இவ்விரு கட்சிகளதும் வரலாற்றுப் பரிமாணத்தை ஆய்வு செய்வது இந்த அறிக்கையின் உள்ளடக்கத்துக் அப்பாற்பட்டது. அமெரிக்க அரசியலின் ஈர்ப்பு மையம் பெருமளவுக்கு வலதுபுறமாக இழுபட்டுப் போய்விட்டது எனக் கூறியாகவேண்டும். அமெரிக்க முதலாளி வர்க்க அரசியலில் ஆதிக்கம் கொண்ட போக்காக விளங்கிய சமூக தாராண்மை வாதம் (Social Liberalism) ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாக அடியோடு இல்லாமல் போய்விட்டது. இதனை புறநிலை காரணங்களின் அடிப்படையில் நின்று இறுதியாக விளக்கவேண்டும். அமெரிக்க முதலாளித்துவத்தின் பலம் பற்றிய சகல பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இது தொழிலாளர் வர்க்கத்தின் சமூக சீர்திருத்தங்களை வழங்க நீண்ட காலத்துக்கு முன்னரே இலாயக்கற்றுப் போய்விட்டது. இறுதியான முக்கியமான சமூக சட்டவிதிகள் அமுல் செய்யப்பட்டது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னராகும்.

மேலும் கணிசமான எந்த ஒரு சமூக சீர்திருத்தங்களையும் வழங்காமலே தற்போது ஜனநாயகக் கட்சி அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்கின்றது. மறுபுறத்தில் குடியரசுக் கட்சி முன்னொருபோதும் இல்லாத விதத்தில் தீவிர வலதுசாரிகளின் ஒரு அப்பட்டமான அமைப்பாக வந்துவிட்டது. 1980,1990 களின் சந்தைச் செழிப்பின் விளைவாக ஏற்பட்ட செல்வங்களை பெற்றுக்கொண்ட ஆளும் தட்டினரின் ஈவிரக்கமற்ற பகுதியினரின் ஈடுசெய்ய முடியாத பேராசை குடியரசுக் கட்சியிலேயே நேரடியாகப் பிரதிபலிக்கின்றது.

குடியரசுக் கட்சியின் வேலைத் திட்டத்தை ஒருவர் ஒரு வசனத்தில் தொகுத்துக்கூற முயற்சித்தால் அது பின்வருமாறு அமையும்: குடிரசுக் கட்சிக்காரர்கள் உழைப்புச் சுரண்டல், கம்பனி இலாபங்கள், தனிப்பட்ட செல்வதிரட்சி என்பவற்றின் மீதான சகல பொருளாதார, அரசியல், சமூக கட்டுப்பாடுகளான நீக்க கோருகின்றனர்".

இதுவே அவர்களின் வேலைத்திட்டம். தேர்தல் பிரச்சாரம் பூராவும் இவை அப்பட்டமாக முன்வைக்கப்பட்டன. "இரக்கம் நிறைந்த பழமைவாதத்தை" பல்வேறு வகையிலும் பிரகடனம் செய்வதற்கிடையேயும் புஷ் டெக்சாஸ் மாநிலத்தில் 135 மரண தண்டனைகளை நிறைவேற்ற தலைமை தாங்கியுள்ளார். மரண தண்டனை தொடர்பாக முடிவெடுப்பது தமக்கு சமர்பிக்கப்பட்ட மிகவும் முக்கியமான பிரச்சினை என அவர் ஒரு தடவை கூறினார். இது ஒன்றுக்காக அவர் 15 நிமிடங்களுக்கு மேலாக செலவிடுவது கிடையாது என்பது நிரூபிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் எழுப்பப்பட்ட சகல பிரச்சினைகளதும் அடிப்படைப் பிரச்சினையாக சமூக செல்வத்தின் பங்கீடு விளங்கியது. அமெரிக்காவில் தொழிலாள வர்க்க வெகுஜன கட்சி கிடையாது. சகல அரசியல் விவாதங்களும் இரண்டு முதலாளித்துவ, பிற்போக்கு கட்சிகளதும் புகைபோக்கிகள் ஊடாக வெளியேற்றப்படுகின்றன. இருப்பினும் இந்த அந்தஸ்தை வகிக்கும் இவ்விரண்டு கட்சிகளும் அமெரிக்காவில் உள்ள சகல சமூகப் பிரச்சினைகளும் வெளிப்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

சோசலிஸ்டுகள் என்ற முறையில் நாம் எந்த ஒரு முதலாளி வர்க்க கட்சிக்கும் வாக்களிக்கும்படி வக்காலத்து வாங்கவில்லை. நாம் "குறைந்த கெடுதிவாத" அரசியலில் ஈடுபடுவது கிடையாது. அத்தோடு நாம் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான எமது எதிர்ப்பை இது குடியரசுக் கட்சியின் மீதான எதிர்ப்பின் வெறும் பிரதிவிம்பம் எனக்கூறி நியாயப்படுத்தியது கிடையாது. ஆளும் கும்பல்களுக்கு இடையேயான மூலோபாய, வேலைத்திட்ட மோதுதல் போராட்டங்கள் இக்கட்சிகளின் ஊடாக இடம்பெறுகின்றன.

2000 தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சி தன்னை ஒரு மக்கள் கட்சியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றது. "நான் அதிகாரம் படைத்தவர்களுக்காக அல்லாது மக்களுக்காக போராடுகின்றேன்" என கோர் கூறிக் கொள்ளலாம். எவ்வளவுதான் ஈடாட்டம் கண்டவராயும், நேர்மையற்றவராயும் கோர் விளங்கிய போதிலும் அவர் தொழிலாளர்களின் சார்பில் பேசுவதாக கூறிக் கொள்கின்றார். அவர் முன்வைத்த விவகாரங்கள்- வரிகள், சமூகபாதுகாப்பு, வைத்திய உதவி, கல்வி- அவர்களின் நலன்களில் இருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டன. இந்தப் பிரச்சினைகளில் சமூக செல்வத்தை பங்கீடு செய்து வழங்கும் மைய பிரச்சினைகள் தொக்கி நிற்கின்றன.

புஷ்சின் பிரச்சாரமும் தனிப்பட்ட வருமானவரியைக் குறைத்தல், பரம்பரைச் சொத்துவரியை ஒழித்தலாகிய இரண்டு கோரிக்கைகளை மையமாகக்கொண்டிருந்தன. புஷ் இதையிட்டு மானங்கெட்டவராக விளங்கினார். ஒரு விவாதத்தில் அவர் தனது வரி அமெரிக்க சமுதாயத்தின் ஒரு வீதத்தினரான செல்வந்தர்களுக்கு நன்மை பயக்கும் எனத் திரும்பத்திரும்ப குறிப்பிட்டார். "இது ஏன் அப்படி இருக்கக் கூடாது"? எனவும் அவர் வாதிட்டார். "அவர்கள் வரியில் பெரும் பகுதியை செலுத்துகிறார்கள்" என அவர் கூறிக்கொண்டார். புஷ்சின் கொள்கை, சமுதாயத்தின் செல்வந்தர்களான பகுதியினருக்கு செல்வத்தை பெருமளவில் மாற்ற இன்று இடம்பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்தப்படுவதை மையமாகக்கொண்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் கோரின் வேலைத்திட்டத்தில் சாதகமான எந்த ஒரு அம்சத்தையும் காணவில்லை. ஆனால் அவர்கள் புஷ் தமது சமூக, ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு மிரட்டலாக விளங்குவதை இனங்கண்டு கொண்டுள்ளனர். புளோரிடாவிலும் கைத்தொழில் மாநிலங்களிலும் கறுப்பின தொழிலாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக திரண்டுள்ளனர்.

தேர்தல் வரைபடம் ஐக்கிய அமெரிக்காவின் சமூகப் பிளவுகளை தெளிவாகக் காட்டிக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சிக்கான வாக்குகள் பெரும் கைத்தொழில் நகரங்களிலும், பெரும் நகரங்களிலும் கிட்டின. அமெரிக்க பொருளாதார வாழ்வில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும் சகல மாநிலங்களும் -கலிபோர்ணியா, நியூயோர்க், பென்சில்வேனியா, மிச்சிக்கன்- ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்தன. குடியரசுக் கட்சிக்கான வாக்குகள் பெருமளவில் தென் மாநிலங்களிலேயே கிட்டியது. இவை அடிமை முறையியினதும் உயர் மிட்வெஸ்டினதும் (Midwest) முன்னைய கோட்டைகளாக விளங்கியவை. பொதுவாகச் சொன்னால் இவை அமெரிக்காவின் பெரிதும் பின்தங்கிய பகுதிகளாகும்.

தேர்தலுக்கும் அதைத் தொடர்ந்து வந்த மோசடிகளுக்கும் குடியரசுக்கட்சி காட்டிக் கொண்ட அக்கறை பலவிமர்சகர்களால் விளக்கமுடியாது போன அசாதாரணமான முரட்டுத் தன்மையையும் காட்டுமிராண்டித் தனத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது. இந்த முதலாளி வர்க்கப் பகுதியினரின் நோக்கையிட்டு இங்கு மீண்டும் கவனம் செலுத்துவது பெறுமதி வாய்ந்தது.

1980ல் றீகன் நிர்வாகத்தில் பதவி வகித்த போல் கிறேக் றொபேட்ஸ் (Paul Craig Roberts) என்ற ஒரு வலதுசாரி விமர்சகர் எழுதிய கட்டுரையை பற்றி கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன். இந்த தேர்தல் தொட்ர்பாக இடம்பெற்று வரும் தகராறையிட்டு அவர் மனமுடைந்து போயுள்ளார்.

அவர் கூறுவது இதுதான்: "எமது நாடு கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. புவியியல் ரீதியில் பேசும் போது கோர் நாட்டின் ஆறில் ஒரு பங்கை பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஆறில் ஐந்து பகுதி அவரையும் அவரது ஊழல் நிறைந்த கட்சியையும் நிராகரித்து விட்டது. நகர்ப்புற பகுதியின் சனத்தொகை நெரிசல் காரணமாக மாநில ரீதியில் தேர்தல் பெறுபேறுகளை காட்டும் வரைபடம் கோரின் புவியியல் ரீதியான ஆதரவை பெரிது படுத்திக் காட்டுகின்றது.

"மாகாண ரீதியான வாக்களிப்பு வரைபடம் கோருக்கு சிறிய அளவிலேயே ஆதரவைக் காட்டுகின்றது. கோரின் வாக்குகள் ஹஸ்பானிக் மாகாணம், கலிபோர்ணியாவின் கரையோர மாகாணம், வாஷிங்டனின் கரையோர (Puget Sound) மாகாணம், மினெஸ்டா கிறேட்லேக்ஸ் மாநிலங்களின் நகர்ப்புற பகுதிகள், புளோரிடாவின் யூதர் மாகாணங்கள், தென்கிழக்கின் கறுப்பு இன மக்கள் நெருக்கமாக வாழும் மாகாணங்கள், வடகிழக்கின் பெரிதும் நகரமயமான மாகாணங்கள் (பிலடெல்பியா, நியூயோர்க் நகரம், கொனெக்டிகட், மசாசூசெட்ஸ், றேட் தீவு) வேர்மண்ட், மெயினியின் பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

"பூகோள ரீதியில் இந்த வரைபடம் புதிதாகப் புலம்பெயர்ந்தது வந்தவர்கள், வேறுஇனச் சிறுபான்மையினரை சனத்தொகையில் பெருமளவில் கொண்ட ஒரு சில சனநெருக்கடி மிக்க நகர்ப்புற மாகாணங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நாட்டைக் காட்டுகின்றது... ஜனநாயக் கட்சி செல்வாக்கு மிக்க வெள்ளை இன லிபரல்கள், பல்கலைக் கழக துறைகள், வெகுஜனத் தொடர்பு சாதனங்கள், இனவாரி சிறுபான்மையினரைக் கொண்ட ஒரு காட்சியாகும். இது பாரம்பரியமான அமெரிக்க அறநெறி, அடிப்படைக் கொள்கைகள், அமைப்புக்கள், மக்களின் "மேலாதிக்கசக்தியை" தூக்கி வீசுவதற்குதன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒரு புரட்சிக் கட்சியாகும்".

அவர் தொடர்ந்து கூறுவதாவது: "குடிரசுக் கட்சிக்காரர்கள் இந்த கடும்போக்கான ஆதரவு வாக்குகளை ஒருபோதும் பெறமாட்டார்கள். கறுப்பு இனத்தவர்கள் 90-93 சதவீதம் கோருக்கு வாக்களித்தனர். ஹிஸ்பானிக்குகள் தமது வாக்குகளில் 2/3-3/4 க்கும் இடைப்பட்டதை கோருக்கு வழங்கினர். எவ்வளவுக்கு எல்லைகள் தொடர்ந்து திறந்து இருக்குமோ அவ்வளவுக்கு நாடு இழக்கப்பட்டுவிடும்."

குடியரசுக் கட்சிக்காரர்கள் குடிசன ரீதியிலும் சமூக ரீதியிலும் புறநிலை ரீதியில் தமக்கும் எதிராகச் சென்று கொண்டுள்ள ஒரு நாட்டை காண்கிறார்கள். இந்தச் சக்திகள் அதிகரித்த அளவில் அவஸ்தை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையை தமது கைக்குள் போட்டுக்கொள்ள எந்த வழியையும் கையாள திடசங்கற்பம் பூண்டுள்ளனர். வெகுஜனங்களுக்கு அச்சுறுத்தலாக வளர்ச்சி பெறும் நீதித்துறையையும் காங்கிரசையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர இவர்கள் முயற்சிக்கின்றனர்.

உலக அபிவிருத்திகளும் அமெரிக்க நெருக்கடியும்

இந்நிலைமையின் சிறப்பு முக்கியத்துவத்தை கணக்கில்கொள்ளும் போதும், ஒரு பெரும் அரசியலமைப்பு நெருக்கடிக்கான சமூக அல்லது பொருளாதார அடிப்படையே கிடையாது எனக் கூறிக் கொள்பவர்களுக்கு பதிலாகவும் உள்நாட்டுப் போருக்கு (Civil War) முன்னைய தசாப்தத்துக்கும் இன்றைய நிலைமைக்கும் இடையேயான மற்றொரு ஒற்றுமையை இங்கே குறிப்பிட என்னை அனுமதியுங்கள்.

அந்த சகாப்தத்ததின் அரசியல் முரண்பாடுகளின் பின்னால், மிகப் பிரமாண்டமான தன்மையிலான பொருளாதார மாற்றங்கள் விளங்கின. இது அமெரிக்காவில் அசாதாரணமான பொருளாதார மாற்றங்கள் இடம்பெற்ற ஒரு காலப்பகுதியாகும். கைத்தொழில்கள், புகையிரத பாதைகள், தொலைத் தொடர்புகள் உருவாகின. இவை ஒரு நவீன கைத்தொழில் மயமான அமெரிக்காவின் முதல் அடையாளங்களாக விளங்கின.

ஒரு புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான புரூஷ் கட்டனில் (Bruce Catton) இருந்து இங்கு மேற்கோள்காட்ட எனக்கு இடமளியுங்கள்: "பொருளாதாரப் போக்கு தவறற்றதாக விளங்கியது:

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களும் புகையிரத பாதைகளும் நீராவிக் கப்பல்களும், தொலைபேசியும், பண்ணை, பக்டரிகளுக்கான புதிய இயந்திரங்களும் ஒரேயொரு பாதையைக்காட்டி நின்றன. அதாவது தேசிய ஐக்கியத்தையும் சிக்கலான கைத்தொழில் சமுதாயத்தையும் உலகப் பொருளாதாரத்துடனான நெருக்கமான இணைப்பையும் காட்டியது துண்டிக்கப்பட்ட சிறுதுண்ட கிராமப்புற சுயபூர்த்தி, தனிமைப்பட்டவையும் சில சந்தர்ப்பங்களை தவிர தேசிய அனைத்துலக சந்தைகளுக்கான வாணிப ரீதியிலான உற்பத்திகளுக்கு வழிவிட்டுக்கொடுத்தன. கிறிமியாவில் (Crimea) ஒரு யுத்தம் அல்லது பாரிஸ் பங்குசந்தையில் ஒரு பதட்டம் அல்லது பாங்க் ஒப் இங்கிலாந்தின் வட்டி வீதத்தின் வீழ்ச்சி மொனங்காகலை (Monongahela) ஆடைத் தொழிற்சாலைகளையும் பிற்ஸ்பேர்க் (Pittsburgh) இரும்பு ஆலையினையும் அதிரவைக்கும் பூகம்பமாக வெடித்துள்ளது".

1850, 1980, 1990 களும் அமெரிக்காவின் அசாதாரணமான மாற்றங்களை கண்டுள்ளது போல் புதிய தொழில்நுட்பங்களின் புரட்சிகரத் தாக்கங்கள் பூகோளமயமாக்கத்தின் போக்கினை விரைவுபடுத்தியுள்ளது. சமூககட்டமைப்பில் மாற்றங்களும், பாரம்பரியமான மத்தியதர வர்க்கத்தின் அந்தஸ்தின் வீழ்ச்சியும், அமெரிக்க சமுதாயத்தின் பரந்த அளவிலான பாட்டாளி மயமாக்கமும் சமுதாயத்தின் பொருளாதார அடித்தளத்திலான அடிப்படை மாற்றங்களுடன் இணைந்து கொண்டுள்ளன. இந்தப் போக்குகளே அமெரிக்காவில் இன்று வளர்ச்சி கண்டு வரும் நெருக்கடிக்கு மிகவும் சக்திவாய்ந்த ஊக்கத்தை வழங்குகின்றது.

1990களின் ஆரம்ப காலத்தில் சோவியத் யூனியனில் நெருக்கடி விரிசல் கண்ட சமயத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சியாளர்களின் வீழ்ச்சி அது சோசலிசத்தின் வீழ்ச்சியும் அல்ல, அந்நாடுகளில் சோசலிசம் என்றுமே இருக்கவில்லை எனக் கூறியது. இந்த தேசியப் பொருளாதாரங்கள் உலகிலேயே பலவீனமான தேசிய பொருளாதாரங்களாக விளங்கின. இவை பூகோளரீதியான பொருளாதார சக்திகளின் நெருக்குவாரங்களின் கீழ் வீழ்ச்சி கண்டன. உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் புதியதொரு கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்ததை விட சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பாவின் ஏனைய ஸ்ராலினிச ஆட்சிகளதும் வீழ்ச்சி பொருளாதார அபிவிருத்தியின் பூகோளரீதியான போக்குக்களின் பெறுபேறாக விளங்கியது. அத்தோடு அந்நெருக்கடி இறுதியாக உலக ஏகாதிபத்தியத்தின் முன்னேறிய மையங்களின் அத்திவாரங்களையும் ஆட்டிப்படைக்கும்.

இது சிலகாலம் எடுத்தது. உலக முதலாளித்துவத்தின் வெற்றியை பிரகடனம் செய்யும் ஒரு தவிர்க்க முடியாத வெற்றிகரமான காலப்பகுதி இருந்தது. அத்தோடு அந்த வார்த்தைக்கு இணங்க வரலாற்றின் சக்கரங்கள் மெதுவாக அரைக்கின்றன. ஆனால் அவை பெரிதும் நன்றாக அரைகின்றன. பூகோளமய மாக்கத்தின் பொருளாதார போக்கானது சோவியத் யூனியனூடாக சென்றதோடு மாற்றியமைக்க முடியாததாக தெரிந்த ஸ்ராலினிச ஆட்சியின் அமைப்புக்களை ஒரேநாளில் தவிடு பொடியாக்கியது. இன்று அதன் பிரசன்னம் உலக முதலாளித்துவத்தின் முன்னேறிய பகுதியான அமெரிக்காவிலும் கூட உணரச்செய்கின்றது.

எனவேதான் இறுதி ஆய்வுகளில் அமெரிக்க நெருக்கடி ஒரு உலக நெருக்கடியாகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் ஸ்திரப்பாடின்மை கூடவே தீவிரமான பொருளாதார குழப்ப நிலையையும் சேர்த்துக் கொண்டுள்ளது. அரசியல் சம்பவங்கள் ஒரு பாரதூரமான பொருளாதார வீழ்ச்சி போக்கையும் உக்கிரம் அடையச் செய்துள்ளன. இந்தச் சம்பவங்கள் அனைத்துலக அடிப்படையில் எதிரொலிக்காது என்பதை எவர்தான் சந்தேகிக்கமுடியும்?

நான் எனதுபேச்சின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியஒரு அம்சத்தை மீளவும் குறிப்பிட எனக்கு அனுமதிவேண்டும். மார்க்சிசத்தை சந்தேகித்தவர்கள் அல்லது மார்க்சிசத்தின் உறுதியான தன்மையை மறுத்தவர்களும், சோசலிசப் புரட்சிக்கான சகல நம்பிக்கைகளும் இல்லாது போய்விட்டது என பாரிய மக்களுக்கு கூறப்பட்டதும் அமெரிக்காவில் தான்.

இறுதியில் முதலாளித்துவம் உலகில் எங்குதான் பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டாலும் அதனை பிணை எடுப்பதற்கு எப்போதும் Uncle Sam (அமெரிக்காவிற்கான இடுகுறிப் பெயர்) இருந்து வந்தார். பெடரல்றிசேவ் வங்கி ஆப்பை இழுத்ததுதான் தாமதம் நிதிஅலை புரண்டு பாயும். மெக்சிக்கோ வங்குரோத்து கண்டதும் நிதி அங்கு அனுப்பிவைக்கப்படும். ஆசியா தலைமூழ்கிப் போனால் அதை ஈடுசெய்ய ஏதோ ஒன்று செய்யப்படும்.

ஆனால் Uncle Sam வலி வந்தால் என்ன நடக்கும்? அவரை பிணை எடுப்பது யார்? அவரைக் காப்பது யார்? இந்த இருபதாம் நூற்றாண்டினுள் இக் கேள்விகளுக்கு பதிலளிக்க எவரும் அக்கறை காட்டியது கிடையாது. இப்போது நாம் 21ம் நூற்றாண்டினுள் காலடி வைக்கும்போது இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.

இது அவுஸ்திரேலியாவின் ஹொவாட் ஆக இருக்கலாம் அல்லது இங்கிலாந்தின் பிளேயர் ஆக இருக்கலாம் இது உலக முதலாளித்துவத்திற்கு இது நல்லது அல்ல என்பதை இவர்கள் சகலரும் அறிவர். Uncle Sam இடம் பணம் கேட்பதற்கு இது நல்ல நேரமல்ல. அரசியல் அறிவுரைகளை கூட கேட்கமுடியாது. புளோரிடா இழுபறிகளின் பின்னர் ஜிம்மி கார்ட்டரிடம் எவர்தான் ஒரு ஜனநாயக தேர்தலை எப்படி நடாத்துவது எனக் கேட்பர்?

இந்த சம்பவங்கள் பரந்த அளவிலான பொருளாதார விளைவுகளை மட்டும்கொண்டிருக்கவில்லை. ஒரு புரட்சிகர நிலைமையின் அபிவிருத்திக்கான சமூக உளவியலை மாற்றுவதில் ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்கும். இறுதியில் ஒரு புரட்சியின் அபிவிருத்தியில் ஒரு பிரமாண்டமான பாத்திரம் வகிக்கும் நனவான காரணி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

ட்ரொட்ஸ்கி இதனை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு புரட்சிகர நெருக்கடியில் ஒரு புறநிலை சேர்க்கை இருக்கின்றது. இன்றுள்ள சமூக உறவுகளுடன் உற்பத்தி வடிவங்கள் மோதிக்கொள்ளும் போது ஒரு புரட்சிகர சகாப்தம் தோன்றுகின்றது. ஆனால் இந்த புறநிலை முரண்பாடுகள் வெகுஜனங்களின் நனவில் தமக்கான பாதையை கண்டுகொள்ள வேண்டும். மக்கள் புரட்சியைப் பற்றிச் சிந்திக்க தொடங்கவேண்டும். அவர்கள் ஒரு புரட்சியை தேடிநிற்க வேண்டும். புரட்சி நின்று பிடிக்கக் கூடிய பதிலீடு என அவர்கள் நம்ப வேண்டும். அவர்கள் இதன் தேவையை மட்டும் நம்பாது அடிப்படையான சமூக மாற்றங்களின் சாத்தியத்திலும் நம்பிக்கைவைக்க வேண்டும். இறுதி ஆய்வுகளில் முதலாளித்துவ அரசின் சக்தி மட்டும் புரட்சியை தடுப்பது அல்ல. பெரிதும் ஆழமானதும் வரலாற்று ரீதியில் அத்தியாவசியமான மட்டத்துக்கும் பரந்த மக்களிடையே அரசியல் நம்பிக்கையும் உணர்வும் இல்லாததுடன் தாம் தலையீடு செய்யாது சமுதாயத்தில் அடி முதல் தலைவரை அதை மீளமைக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லாதிருப்பதுமாகும். இன்றைய நெருக்கடி சமுதாய நனவில் கணிசமானதும் முன்னேற்றமானதுமான மாற்றங்களுக்கான ஊக்கிகளை வழங்கும்.

இன்று அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்கள் உலக முதலாளித்துவத்தின் விவகாரங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நின்று கொண்டிருந்த ஒரு நீண்ட காலப்பகுதியின் முடிவைக் குறிக்கிறது. அமெரிக்கா தொடர்ந்தும் அந்தப் பாத்திரத்தை வகிக்க முடியாது. அமெரிக்க நெருக்கடி முதலாளித்துவ அமைப்பின் உறுதிப்பாட்டுத் தன்மையை கேள்விக்கிடமாக்கியுள்ளது. இது தொழிலாளர் வர்க்கம் ஒரு தீர்க்கமான வரலாற்று சக்தியாக தலையீடு செய்வதற்கான வாய்ப்பை உண்மையில் திறந்து வைக்கிறது. அடுத்துவருவது இதுவே. இது இன்னமும் அந்தப் புள்ளிக்கு வெளிப்படையாக அபிவிருத்தியடையவில்லை. ஆனால் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம்தனது இருப்பை உணர்ந்து கொள்ளும். இப்போது மக்கள் இந்தப் பிரச்சினை எப்படித் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஏதேனும் கூறவிரும்புகிறார்கள். அடுத்த வாரம் இல்லாதுபோனாலும் அடுத்தமாதம் அல்லது ஆறு மாதங்களின் பின்னர் அல்லது ஒரு வருடத்தின்ங பின்னர் காலம் பெரிதும் நீண்டு சென்றுவிடாது. நாம் அந்த பிரமாண்டமான சமூக சக்தியான அமெரிக்கப் பாட்டாளி வர்க்கத்தின் இயக்கத்தை காணத் தொடங்குவோம்.

நாம் இதன் மூலம் உணர்வது என்ன? நாம் உலகசோசலிச வலைத் தளத்தின் (WSWS) வாசகர் எண்ணிக்கையை விஸ்தரிக்க வேண்டும். நாம் அதிகரித்த அளவில் பெருகி வரும் விசாரணைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எமது ஆய்வுகளின் பேரில் அக்கறை காட்டுவோரை ஒன்றிணைக்கும் சாதனங்களை அபிவிருத்திசெய்ய வேண்டும். புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் ஒரு பரந்ததும் சக்தி வாய்ந்ததுமான அனைத்துலக இயக்கத்தை கட்டி எழுப்ப அக்கறைகாட்ட வேண்டும். இந்த வளர்ச்சிகண்டுவரும் இயக்கத்தின் மூலம் நாம் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியை (Socialist Equality Party) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாகக் கட்டியெழுப்ப வேண்டும். இதுதான் எமது முன்நோக்கு. நாம் அனைத்துலக மார்க்சிச சக்திகளில் பிரமாண்டமான அபிவிருத்தியாக வரையறுக்கப்படும் ஒரு புதிய வரலாற்றுக் காலப் பகுதியினுள் நுழைந்து கொண்டுள்ளோம்.