World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Palestinians under military and economic siege

பாலஸ்தீனியர்கள் இராணுவ பொருளாதார முற்றுகையின் கீழ்

By Jean Shaoul
20 August 2001

Use this version to print

இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்கள் மீதான இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளதுடன், மேற்குக்கரையையும் காஸா பிரதேசத்தையும் மீண்டும் ஆக்கிரமிக்கப்போவதாக அச்சுறுத்துகின்றனர்.

வான் ஊர்திகள், F-16 ரக யுத்தவிமானங்கள், டாங்கிகள், கனரகவாகனங்கள், ஆட்டிலறி ஆயுதங்கள் உள்ளடங்கலான நவீன ஆயுதங்கள் உலகின் மிகவும் ஏழ்மையான மக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்றன. கடந்த வாரம் மேற்குகரையின் றமலா நகரத்தின் பொலிஸ் நிலையத்தின் மீது ஒரு தொன் நிறையுள்ள இரண்டு குண்டுகளை போடுவதற்கு F-16 யுத்தவிமானங்களை பாவித்ததுடன், அராபிய கிழக்கு ஜெரூசலேமிலுள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகமான Orient House இனை ஆக்கிரமித்துக் கொண்டதுடன், ஜெனின் நகரத்தின் மீது ஆகாய, தரைமார்க்கமான ஆக்கிரமிப்பை செய்துள்ளதுடன், பெத்தலேமின் மீதான ஆக்கரமிப்புக்கும் படைகள் தயாராக உள்ளன.

பாலஸ்தீன தலைவர்களையும், போராளிகளையும் கொலைசெய்வதற்கான தனது கொள்கைக்கு ஆதரவாக இஸ்ரேல் மிகவும் நவீனமான இலத்திரனியல் கருவிகளின் உதவியையும், கண்காணிப்புக்கும், உளவுக்கும், தனது இலக்கை அடைவதற்கும் வசதியான ஆயுதங்களையும் கொண்டிருக்கின்றது. பாலஸ்தீனத் தலைவர்கள் மீதான அதனது தாக்குதலின் போது பல டசின் கணக்கான மக்களையும், குழந்தைகளையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளது.

இஸ்ரேலின் வன்முறையின் பரிமாணமானது கண்ணீர்புகை குண்டுகளையும், இரப்பர்/பிளாஸ்ரிக் குண்டுகளையும், செவிடாக்கும் கிரனைட்டுக்களையும், துப்பாக்கி சூடுகளும் பயன்படுத்தி 1987 இன் இன்டிபாடா எழுச்சியை ஒடுக்கியதை விட தற்போது மோசமாகியுள்ளது.1987 இன் எழுச்சியின் முதல் நான்கு மாதங்களில் கொல்லப்பட்ட மக்களைவிட தற்போதைய அல்-அக்ஸா இன்டிபாடாவின் முதல் இரண்டு வாரங்களில் கூடுதலானோரை இஸ்ரேலியப் படைகள் கொலை செய்துள்ளனர். இதுவரை 609 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 15,000 பேர் காயமடைந்துள்ளனர்.

சர்வதேச அமைப்புகளான மனித உரிமைகள் கண்காணிப்பு குழு [Human Rights Watch], சர்வதேச மன்னிப்புசபை [Amnesty International] போன்றவை இஸ்ரேல் கண்மூடித்தனமான பலாத்காரத்தை பிரயோகித்தமைக்கும், தன்னிச்சையான கொலைகள், சொத்துக்களை பறிமுதல் செய்தலும் வீடுகளை உடைத்தல் போன்ற கூட்டுத்தண்டனையை பாவிப்பதற்கும், குடியேற்ற வாசிகளால் செய்யப்படும் வன்முறைகளையும் அழிப்புகளையும் கண்டித்துள்ளன.

பொருளாதாரத்தடை

முழு உலகின் கவனமும் இராணுவமோதல்கள் மீதும், இராஜதந்திர சூழ்ச்சிகளின் மீதும் திருப்பப்படுகையில் இஸ்ரேலால் நடாத்தப்படும் பொருளாதார யுத்தம் தொடர்பாகவும், பாலஸ்தீனியர்கள் மீதான அதனது மனித அழிவின் பரிமாணம் தொடர்பாகவும் மிகவும் குறைவாகவே கூறப்படுகின்றது.

இஸ்ரேல் கிட்டத்தட்ட 11 மாதங்களாக பாலஸ்தீனப் பிரதேசங்களை முற்றுகையிட்டுள்ளது. அதனது தரை, ஆகாய, கடல் தடையானது மேற்க்குகரையையும், காஸா பிரதேசத்தையும் வெளி உலகிலிருந்து துண்டித்துள்ளதுடன், அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றையும் துண்டித்துள்ளது. எகிப்துடனானதும் ஜோர்டானுடனானதுமான அதனது எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு வர்த்தகம் கிட்டத்தட்ட இயங்காத நிலையை அடைந்துள்ளதுடன், பாலஸ்தீன பொருட்கள் இஸ்ரேலிய சுங்கச்சாவடிகளில் தடைப்பட்டுகிடக்கின்றன.

இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்கள் உட்புகும் பாதைகளில் உள்ள சோதனைச் சாவடிகளினால் நாளாந்தம் இஸ்ரேலிய கட்டிட நிர்மாணங்களிலும், பண்ணைகளிலும், விடுதிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலைசெய்யும் 120,000 தொழிலாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆக்கரமிக்கப்பட்ட பகுதியினுள்ள உள்ள வீதிகளிலும் உள்ள சோதனைச்சாவடிகளினால் 15 நிமிடம் எடுக்கும் பயணம் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றுமுடிக்ககூடியாத இருந்தால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கின்றது. 200,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளிகள் வேலைக்கு செல்லமுடியாதுள்ளனர்.

காஸாவில் வாழும் பாலஸ்தீனியர்களின் நிலைமை இத்தடைகளால் இன்னும் மோசமடைந்துள்ளது. உலகத்தில் மக்கள் அடர்த்தி கூடிய நகரமான காஸாவில் கிட்டத்தட்ட இயற்கைவளங்கள் ஒன்றும் இல்லாததோடு, சிறியளவான தொழிற்சாலைகளும் இருப்பதுடன், முற்றாக இஸ்ரேலில் தங்கியுள்ளது. இஸ்ரேலின் தடையால் இப்பிரதேசம் ஒரு சிறைபோல் ஆகியுள்ளது.

தமது பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. தடைகளுள்ள பாதைகளால் போக்குவரத்து செய்யாது வேறு பாதைகளால் சுற்றிவருவதால் ஏற்பட்ட செலவின் அதிகரிப்பால் அடிப்படைப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான பஸ்கள் இயங்காது உள்ளதால், இது வேலைக்கு செல்வதை மட்டுமல்லாது தேவைக்கு குடும்ப உறவினர்களையும் சந்திக்கமுடியாது செய்துள்ளது.

பாலஸ்தீனியர்களின் பொருளாதாரத்தை நசுக்குவதன் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை மேலும் பஞ்சத்தினுள்ளும், பலவழிகளில் கடனினுள்ளும் தள்ளியுள்ளது. இன்டிபாடா ஆரம்பித்ததிலிருந்து பாலஸ்தீன நிர்வாகத்திடமிருந்து கிடைக்கும் வரிகளையும், பொருட்களினதும் மூலப்பொருட்களினதும் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தின் மீதான வரி [VAT] போன்றனவற்றை செலுத்தாது உள்ளதால் பாலஸ்தீன நிர்வாகம் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாது உள்ளது. இது பாரிஸ் உடன்படிக்கையை நேரடியாக மீறுவதாகும். அதில் பாலஸ்தீன நிர்வாகத்தின் பெயரால் வசூலிக்கப்படும் பணம் 6 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அண்மைய எழுச்சிக்கு முன்னர் வேலையில்லாத் திண்டாட்டம் உத்தியோகபூர்வமாக 15% ஆக இருந்தது. எவ்வாறிருந்தபோதும் இக்கணக்கெடுப்பு பிழையானது, ஏனெனில் இதனுள் தற்காலிகமான நாள் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். உண்மையான வேலையில்லாதவர்களின் அளவு அண்ணளவாக 30% ஆகும். இது தற்போது 50% இற்கும் அதிகமாகியுள்ளது.

நவம்பர் 2000 ஆண்டளவில் இஸ்ரேலுக்கு வேலைக்கு செல்பவர்களின் வருமான இழப்பால் பாலஸ்தீனப் பொருளாதாரம் நாளாந்தம் 3.4 மில்லியன் டொலரும், வரிக்கொடுப்பனவு நிறுத்தத்தாலும், சுங்கவரி நிறுத்தப்பட்டதாலும் 6 மில்லியன் டொலரும் இழப்பதாக நம்பப்பட்டது. இது புனித நகர்களுக்கு வரும் உல்லாசப்பயணிகளால் கிடைக்கும் முக்கிய வருமான இழப்புடன் இணைந்த மேலதிக இழப்பாகும்.

ஐக்கிய நாடுகளின் படி இரண்டு மாதங்களில் பாலஸ்தீனப் பொருளாதாரத்தின் மொத்த உள்ளூர் உற்பத்தி 10% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அதன் வளர்ச்சி விகிதம் 4% இருந்து -10% ஆகியுள்ளது. மார்ச் மாத இறுதியில் பாலஸ்தீனியர்களின் வருமானம் முந்தியதை விட அரைவாசியாகி உள்ளதுடன், உத்தியோகபூர்வ வேலையற்றவர்களின் தொகை கடந்த செப்டம்பரை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ஒரு குறுகிய காலத்தினுள் இந்தளவிலான வாழ்க்கைத்தரத்தின் வீழ்ச்சியானது ஒன்றுடனும் ஒப்பிடமுடியாததாகும். இது உலகத்தின் மிகவும் ஏழ்மையான மக்களுக்கு நிகழ்கின்றது. 1999 இல் மேற்குகரையின் மக்களின் தனிமனித வருமானம் $2000 ஆக இருந்தது. இது இஸ்ரேலில் $18,300 ஆகும். ஆனால் காஸா பிரதேசத்தில் வாழுபவர்கள் தனிமனித வருமானம் $1000 ஆகும்.

தற்போதைய நிலைமை ஒஸ்லோ உடன்படிக்கையினதும், பாரிஸ் பொருளாதார உடன்பாட்டின் கீழும் பாலஸ்தீனத்தின் பொருளாதாரம் இஸ்ரேலில் எந்தளவிற்கு தங்கியிருக்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வுடன்பாடுகளின் கீழ் சாத்தியமான பாலஸ்தீன பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு திட்டமும் உருவாக்கப்படவில்லை. சுயாட்சியான, மற்றும் ''சுதந்திர'' பாலஸ்தீனம் இஸ்ரேலின் பொருளாதார ஆளுமையின் கீழேயே இருக்கும்.

பாலஸ்தீன அமைச்சுகளின் அறிக்கைகளின்படி 30 இலட்சம் பாலஸ்தீனர்களின் 64% ஆனோர் வறுமையினுள் வாழ்கின்றனர். இது இன்டிபாடாவின் முன்னர் 23% ஆக இருந்தது. இப்போது இரண்டு வயது வந்தவர்களும் நான்கு குழந்தைகளும் உள்ள ஒரு குடும்பத்தினது வருமானம் $434 இற்கும் குறைவானதாக இருந்தால் அது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளது என குறிப்பிடப்பட்டது. மே மாத ஆரம்பத்தில் பாலஸ்தீன நிர்வாகத்தின் வருமானம் மாதாந்தம் $90 மில்லியனில் இருந்து $20 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஐக்கியநாடுகளின் உதவிவழங்கும் நிறுவனம் 5 இலட்சம் மக்களுக்கு மா, அரிசி, எண்ணைய், சீனி, பால் அடங்கிய அடிப்படை உணவுப் பொதிகளை வழங்குகின்றது. எவ்வாறிருந்தபோதும் போசாக்கின்மை அதிகரிப்பதுடன், இது 14% இனை அடைந்துள்ளது. அதிகரித்துவருமளவில் குழந்தைகள் உடலியல் வளர்ச்சி குன்றிய, மூளை அபிவிருத்தி குறைவாக வளர்ச்சிக்குள்ளாவதை காணக்கூடியதாகவுள்ளது.

இஸ்ரேல் ஒரு வஞ்சம் தீர்க்கும் நிலக்கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. அது கிட்டத்தட்ட 400.000 ஒலிவ், எலுமிச்சை (தேசிக்காய்), வாதுமை மரங்களை பிடுங்கியெறிந்துள்ளது. Applied Research Institute of Jerusalem என்னும் நிறுவனமானது பாலஸ்தீன விவசாயப் பொருளாதாரத்தை அழிக்கும் கொள்கை ''கிராமங்களையும், பிராந்தியங்களையும் மூடுதலும் தனிமைப்படுத்துதலும், பழமரங்களை அழித்தலும், தீவைத்தலும், தமது வயல்களை அழிக்க முயலுபவர்களை தடுக்கும் கிராமத்தலைவர்களை பயமுறுத்துதல், கொலைசெய்தல், விவசாயப் பயிர்களையும், கருவிகளையும் அழித்தல், மீன்பிடித் துறைமுகங்களை மூடுதல், மீன்பிடிக்கும் எல்லையை கட்டுப்படுத்தல், பாரியளவில் வளர்ப்பு மிருகங்களையும், பால் உற்பத்தியை கட்டுப்படுத்தலையும்'' உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் உதவி விவசாய அமைச்சரான Dr. Azzem Tbeleh, Globes என்ற வர்த்தக வெளியீட்டிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினராலும், குடியேற்ற வாசிகளாலும் பாலஸ்தீன விவசாயத்துறைக்கு $300 மில்லியன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

பாலஸ்தீனியர்களுக்கான மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன

மூடுதல்களும், தடைகளும், ஊரடங்கு சட்டங்களும் சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளனங்கலான சமூகவாழ்க்கையின் சகலதுறைகளையும் பாதித்துள்ளது. ஒவ்வொரு பயணமும் அபாயகரமானதாகி உள்ளது. மோட்டார் கார்களும், லொறிகளும் தடுக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு பாலஸ்தீனீயர் அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டைவிட்டு வெளியேறினால் அவர் வீட்டிற்கு திரும்பி வருவார் என்பதற்கு உத்தரவாதமில்லை.

நடைமுறையில் இம்மூடுதல்கள் மிகமுக்கியமாக வயதுவந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும், நோயாளிகளுக்கும் மிகவும் கடுமையானதாகவுள்ளது. இத்தடைகளானது 1949 இன் நான்காவது ஜெனீவா தீர்மானத்திற்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானதுடன் மக்களின் உயிர்களினதும், சுகாதாரத்தினதும் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வுடன்படிக்கையின் 17 ஆவது பிரிவில் ''மோதலில் ஈடுபட்டுள்ள இருபகுதியினரும் வெற்றிகொள்ளப்பட்ட, சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள காயமடைந்த, பலவீனமான, வயதானவர்களையும், குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் அவ்விடத்தைவிட்டு அகற்றுவதற்கான உள்ளூர் உடன்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும் எனவும், மதவழிபாட்டு தலங்களுக்கான பாதைகளும், அப்பிராந்தியங்களுக்கு மருத்தவர்களும், மருத்துவ ஆயுதங்களும் செல்வதற்கான பாதை விடப்பட்டிருக்குவேண்டும்'' என குறிப்பிடுகின்றது.

மருத்துவ உதவிதேவைப்பட்ட 17 பாலஸ்தீனீயர்கள் இஸ்ரேலிய சோதனை முகாம்களில் ஏற்பட்ட தாமதத்தால் இறந்துள்ளனர். இது 70% இற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் அடிப்படை மருத்துவ வசதிகளை தவிர ஒன்றுமில்லாத நிலைமைகளுக்குள் கிராமப்புறங்களில் வாழும் நிலைமையின் முழுநிலைமையின் ஒரு பகுதிமட்டுமே.

மேற்குக்கரையின் மத்தியான கிழக்கு ஜெரூசலேமிற்கு செல்ல பாலஸ்தீனர்களுக்கு உரிமையில்லை. இஸ்ரேல் மேற்குகரையை இரண்டு பிரிவாக பிரித்துள்ளது. இது குடும்பங்களை பிரித்துள்ளதுடன், அவர்களுக்கான இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான மருத்துவ வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக அவசரநிலைகளிலும், குழந்தை பிரசவத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலுதவி வாகனங்கள் கூட துப்பாக்கி முனையில் நிறுத்தப்படுகின்றன.

ஒரு சில உதாரணங்கள் எவ்வாறு அடிப்பை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது. நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் மருத்துவ சோதனைகளுக்காகவும், பிரசவத்துக்காவும் சுற்றிச்செல்லும் பாதைத் தடைகளுக்குள்ளால் பலமைல்கள் நடந்து செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். UNRWA இனது அறிக்கைகள் இறந்து பிறப்பது 58% ஆல் அதிகரித்துள்ளதாகவும், இராணுவ சோதனை முகாம்களில் நூற்றுக்கு 4 பிறப்பு நிகழ்வதாக குறிப்பிட்டது. பாலஸ்தீன மருத்துவ உதவிக்குழுவின் அறிக்கையானது வீடுகளில் பிறப்பு விகிதம் 100% ஆல் அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகின்றது. அத்துடன் அவ்வறிக்கை தடுப்பூசி வழங்குவது குறைந்துள்ளதுடன், பெண்கள் குழந்தை பிறப்பதற்கு முன்னான கவனிப்புகளுக்கு செல்வது 52% ஆல் குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இவ்விரண்டு அமைப்புகளும் ஒரு தொடர்ச்சியான நோய்த்தடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளன. இதற்கு சமூகமளிப்பவர்களின் தொகை இன்டிபாடாவின் முதல் நான்கு மாதங்களில் 12% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளமை எதிர்காலத்தில் இன்னும் மோசமான சுகாதார பிரச்சனைகளை உருவாக்கும்.

சிறுநீரக இயக்கமின்மை, புற்றுநோய் தொடர்பான சிகிச்சையை பெற்றுவருபவர்கள் கூட இஸ்ரேலிய சோதனை நிலையங்களில் மணித்தியாலக்கணக்காக வரிசையில் காவல் நிற்கவேண்டியுள்ளது. சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் ஆகக்குறைந்தது 90 வீத சந்தர்ப்பங்களில் விஷேட மருத்துவ உதவி பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதி கிடைத்தாலும், அது இத்துடன் முடியடையவில்லை. 64 வயதான Fatima Sharafi என்னும் பெண் Rafah எல்லையில் காஸாவிற்கு கடக்கும் எல்லையில் மரணமானார். இவர் எகிப்த்தில் நாஸார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று காஸாவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிவரும்போது எல்லையில் பலநாட்கள் காத்திருக்கவேண்டியிருந்தது.

பாலஸ்தீனிய முதலுதவி [Palestinian Red Crescent Society] வாகனங்கள் செல்வதை தடுத்த 164 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக PRCS இன் பல அறிக்கைகள் உள்ளன. உதாரணத்திற்கு கடந்த ஜனவரியில் நான்கு PRCS உத்தியோகத்தர்கள் சோதனைமுகாமில் தடுக்கப்பட்டு வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, உடைகள் களையப்பட்டு, சோதிக்கப்பட்டதுடன், நான்கு மணித்தியாலங்கள் தாக்கப்பட்டனர்.

ஒருபோதும் இல்லாத வன்முறையும், பயமும் உள்ள சூழ்நிலை உருவாக்கப்பட்டமை உளவியல் ரீதியானதும், உணர்மை மீதானதுமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலான நாட்களில் இஸ்ரேலிய போர்விமானங்களும், வானூர்திகளும் சுற்றித்திரிந்து ஒவ்வொருவரையும் உணர்வின் முடிவின் எல்லைக்கு இட்டுச்செல்வதுடன், அடுத்த தாக்குதலை எதிர்நோக்கியிருக்க செய்துள்ளது.

காஸா உளவியல் மருத்துவ திட்டத்திற்கான தலைவரான Dr. Eyad Sarraj "நான் உள்ளடங்கலாக காஸாவில் உள்ள அனைவரும் மனோவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், கூடுதலாக குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பாதுகாப்பான உலகத்தை இழந்துவிட்டனர். அவர்கள் கூரையில்லாத கூண்டுக்குள் வாழ்வதுடன், ஆகாயத்திலிருந்தும், தமது பெற்றோர்களின் கண்களிலிருந்தும் மன அதிர்ச்சியை பெறுகின்றனர். பலர் மிகவும் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவராவது இதனால் படுக்கையில் உள்ளனர். 14, 15 வயதுடையவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் தாம் எதை பார்க்கின்றார்கள் என்பது குறித்து நடிப்பதாலும், எழுதுவதாலும், படங்களை கூறுவதன் மூலமும் தமது மன அதிர்ச்சியுடன் தம்மை பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் ''இஸ்ரேலுடனான மோதல் 'ஒரு பயங்கரமான விளையாட்டாக' வந்துள்ளது. அதனை அவர்கள் கற்களை எறிவதன் மூலம் எடுத்துக்காட்டுகின்றனர்'' எனவும், அவர்கள் இறக்கின்றார்கள், ஆனால் அவர்களுக்கு இறப்பு தொடர்பாக ஒன்றும் தெரியாது என அவதானித்துள்ளார்.

UNRWA இன் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு தெரிந்த ஒரு குழந்தை குறித்து தெரிவித்தார். அது ஒரு 10 வயது பெண் குழந்தை, தான் ஒரு ஊர்வலத்தில் இறக்கதயாராக இருப்பதாகவும், இதன் மூலம் தனது குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கும் என கூறியதாக குறிப்பிட்டார். ஒரு வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், தான் ஒரு தொகையான மன அழுத்தத்தாலும், மனச்சோர்வாலும், உயர் இரத்த அழுத்தத்தாலும், பாலியல் சக்தியற்றவர்களை காண்பதாக குறிப்பிட்டார்.

தொடரும்......