World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian state elections reveal hostility to the ruling BJP

இந்திய மாநிலத் தேர்தல் ஆளும் பீ.ஜே.பி. மீதான வெறுப்பை அம்பலப்படுத்தியுள்ளது

By Nanda Wickramasinghe
29 May 2001

Use this version to print

கடந்த மே 10ம் திகதி நான்கு இந்திய மாநிலங்களிலும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழான ஒரு பிராந்தியத்திலும் இடம்பெற்ற தேர்தல்களில், பாரதீய ஜனதா கட்சியும் (BJP) அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. இந்த தோல்வி மூன்று ஆண்டுகளாக தேசிய ரீதியில் ஆட்சியில் இருந்து வந்த ஆளும் கூட்டணியினுள் ஏற்கனவே மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 35 மாநிலங்களிலும் மற்றும் பிராந்தியங்களிலும் ஐந்து இடங்களில் மாத்திரம் தேர்தல் இடம்பெற்றிருந்த போதிலும், பெறுபேறுகள் பீ.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்தாபனம் உட்பட்ட அனைத்தும் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதை பிரதிபலிக்கின்றன. தேர்தல்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் தென்னிந்தியாவின் பிராந்தியமான பாண்டிச்சேரி, இந்தியாவின கிழக்கு மற்றும் வடகிழக்கு பிரதேசத்தில் மேற்கு வங்காளம், அசாம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை காட்டுகிறது. மாநில சட்ட மன்றத்தில், பிராந்தியத்தில் பீ.ஜே.பி.யின் பிரதான கூட்டணியான, முன்னர் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் (DMK), 177 இருந்து 36 வரை ஆசனங்களை இழந்துள்ளது. தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.கருணாநிதி வெறுமனே தனது ஆசனத்தைப் பிடித்துக் கொண்டார். காங்கிரஸ்(ஐ) ஆதரவுடனான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைமையிலான எதிர் கூட்டணி 196 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்காளத்தில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் கடந்த தேர்தல்களில் எதிர்ப்புகள் வளர்ச்சி கண்டுவருவதற்கான அறிகுறிகள் தோன்றிய போதிலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மாநிலத் தேர்தலுக்கு சற்று முன்னர் வரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்த திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்(ஐ) உடன் கூட்டுசேர்ந்து, 294 ஆசனங்களில் 87 ஆசனங்களை வெற்றி கண்டு சமாளித்துக் கொண்டது.

கேரளத்தில், முன்னாள் மாநில சட்டமன்றத்தில் 81 ஆசனங்களைக் கொண்டிருந்த சீ.பி.ஐ-எம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 40 ஆசனங்களை மாத்திரமே பெற்று அதிகாரத்தை இழந்துள்ளது. எவ்வாறெனினும், வெற்றியாளர் பீ.ஜே.பி.யோ அல்லது அதனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றோ அல்ல. ஆனால் தற்போது 99 ஆசனங்களை கொண்டுள்ள காங்கிரஸ்(ஐ) அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும்.

அசாமில், ஏ.ஜி.பி. (அசாம் கனசங் பரிஷாட்) மற்றும் பி.ஜே.பி.யினதும் கூட்டணி 21 ஆசனங்களை இழந்து தற்போது 42 ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ளது. மொத்தத்தில், சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் உட்பட 16 அமைச்சர்கள் தங்களது ஆசனங்களை இழந்துள்ளனர். காங்கிரஸ்(ஐ) தற்போதைய அரசாங்கம் மீதான எதிர்ப்பை சுரண்டிக் கொண்டு 70 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது. மத்திய அரசின் பிராந்தியமான பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி 13 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளதோடு அடுத்த அரசாங்கத்தை அ.இ.அ.தி.மு.க. வுடன் இணைந்து அமைக்கவுள்ளது.

சீரழிவின் பறுமணானது பி.ஜே.பி.யின் சொந்த நடவடிக்கைகளால் அடிக்கோடிடப்பட்டுள்ளது. ஐந்து பிராந்தியங்களிலான பந்தயத்தில், 823 ஆசனங்களில் 13 ஆசனங்களை மாத்திரமே பி.ஜே.பி. வென்றுள்ளது. பி.ஜே.பி., கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் 6 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளதோடு ஆசனங்கள் எதையும் வெற்றி கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல், இதே காலத்தில் இடம்பெற்ற திருச்சினாப்பள்ளி லோக்சபைக்கான (இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபை) தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.விடம் பி.ஜே.பி. தோல்வி கண்டது.

தேர்தல் பெறுபேறுகள் லோக்சபையில் பி.ஜே.பி.யின் நிலைமைக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும் பெறுபேறுகளுக்கான ஒரு முக்கிய காரணம், நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் மீதான வெறுப்பேயாகும். பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குகளின் குறிப்பிடத் தக்க நிலைமைகளை குறுக்கிக் கொள்ளும் முயற்சியாக, தேர்தலுக்கு முன்னர் பி.ஜே.பி. ஐந்து பிராந்தியங்களிலும் பெரியளவில் முன்னிலை வகிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால் பெறுபேறுகள் "தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையேயாகும்" என்பதை கணக்கில் கொள்ளத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்தத் தோல்வி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18 கட்சிகளுக்கிடையில் மத்திய நிலைப்பாட்டில் இருந்து நழுவிச் செல்லும் நிலைமைகளை தீவிரமாக்கியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக திரினமூல் காங்கிரஸ் ஆளும் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்வதற்காக பாதுகாப்பு மாமூல் மீதான டெஹேல்கா அவதூறைப் பற்றிக் கொண்டு பீ.ஜே.பி.யிடம் இருந்து தானாகவே விலகிக் கொண்டது.

பி.ஜே.பி. மாநில ரீதியில் ஏற்படுத்திக் கொண்ட ஒழுங்கிலிருந்து விலகிக் கொண்டு மணிப்பூர் மாநிலத்தின் சமதாக் கட்சித் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க உதவியதன் பின்னர், கடந்த வாரம் சமதாக கட்சி தேசிய கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. இந்த வாரம் தனது 12 லோக்சபா அங்கத்தவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்தும் இருப்பார்கள் என சமதாக் கட்சி அறிவித்திருப்பது வாஜ்பாய் அரசாங்கம் கீழ் சபையின் 543 உறுப்பினர்களில் சிறிய 19 பெரும்பான்மையை இன்னமும் கொண்டுள்ளதை அர்த்தப்படுத்துகிறது.

அடுத்ததாக, அரசாங்கத்தின் மீதான வெறுப்புகளுக்கு தக்கவாறு இயங்கும் அதன் நெருங்கிய கூட்டாளிகளாலும் -இந்து சோவினிச ராஸ்ட்ரீய ஸ்வயம்சவேக் சங் (RSS), சிவசேனா மற்றும் விஷ்வ இந்தி பர்ஷாத்- கூட பி.ஜே.பி. விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தேர்தலைத் தொடர்ந்து, "அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை முக்கியமான திருப்பங்களில் தாக்குவதற்காக" ஆகஸ்ட் வரை நாடுமுழுவதிலும் ஒரு தொடர் கூட்டங்களை தனது அமைப்பு நடாத்தும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டலோபான்ட் தன்கடி அறிவித்துள்ளார்.

பி.ஜே.பி.யின் இணைத் தொழிற் சங்கமான பி.எம்.எஸ் (பாரதீய மஸ்டூர் சங்) கூட "மக்கள் எதிரி மற்றும் தேசிய எதிரி" என முத்திரை குத்துவதோடு வாஜ்பாயின் கொள்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

சந்தை சீர்திருத்தங்கள்

காங்கிரஸ்(ஐ) யால் முன்னெடுக்கப்பட்ட சந்தை மறுசீரமைப்பு கொள்கைகள் மீதான மத்தியதர வர்க்க தட்டினரின் வெறுப்பை சுரண்டிக் கொண்ட பி.ஜே.பி. இந்து தீவிரவாதம் மற்றும் தேசியப் பொருளாதாரக் கொள்கைகளாலும், அடுத்த கூட்டரசாங்கமாக ஆட்சிக்கு வந்தது. எவ்வாறெனினும் பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பெரும் வியாபாரிகளும் சர்வதேச நிதி மூலதனமும் கோரி வந்த கொள்கைகளை அமுலுக்குக் கொண்டுவரத் தொடங்கியதோடு, அதன் பெறுபேறாக சொந்த சமூக அடித்தளத்திலேயே தமது செல்வாக்கை இழந்தது.

பெப்பிரவரியில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து பொருளதார மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது. இது ஏழைகளின் மானியங்களை வெட்டித் தள்ளி, சுங்க வரிகளையும் இறக்குமதி தடைகளையும் தளர்த்தி, ஆட்குறைப்பை துரிதப்படுத்த தொழில் சட்டங்களை மாற்றியமைத்தது. கூட்டுறவு வரிகளை வெட்டியதோடு அரசாங்கக் கூட்டுத்தாபனங்களை விற்றுத் தள்ளுவதையும் துரிதப்படுத்தியது.

அரசாங்கம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறிய விவசாயிகளையும் மின்சாரசபை, தொலைத் தொடர்பு, விமானம் மற்றும் வங்கித் துறைகளில் இடம்பெற்ற வேலை நிறுத்தங்களையும் எதிர்த்தது. தேர்தல் நெருங்கிய சமயத்தில் தொழில் சட்டங்களை மாற்றியமைத்ததற்கு எதிராக பம்பாய் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் ஒன்று இடம்பெற்றது. பாரத அலுமீனியம் கூட்டுத்தாபனத்தின் (BALCO) தொழிலாளர்கள் கம்பனி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக இரண்டுமாத காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக ஆளும் வர்க்கத்தின் பகுதியினர் சிரத்தை கொண்டிருந்த போதிலும், வரவு செலவுத் திட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என வாஜ்பாய் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

தேர்தல் பெறுபேறுகள் காங்கிரஸ்(ஐ) யின் "வெற்றியை" பிரதிநிதித்துவம் செய்வதாக சில விமர்சகர்கள் குற்றம் சாட்டிய போதிலும் சில அண்மைய ஆய்வுகள் அது ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

1996ல் மேற்கு வங்காளத்தில் கடைசியாக இடம்பெற்ற மாநிலத் தேர்தலில், காங்கிரஸ்(ஐ) 82 ஆசனங்களை வென்றதோடு 39.48 வீத வாக்குகளை பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு, கட்சி மாநில ரீதியில் பிளவுண்டு, திரினமூல் காங்கிரசை அமைக்க வழிவகுத்தது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வாக்குகளில் ஒரு தொகையை திரினமூல் பெற்றுக்கொண்ட அதேவேளை, காங்கிரஸ்(ஐ) 8 வீதமான வாக்குகளையும் 20 ஆசனங்களையும் மாத்திரமே பெற்றிருந்தது.

மஹாராஷ்டிராவில் தேசிய காங்கிரஸ் கட்சியும் தமிழ் நாட்டில் தமிழ் மாநில காங்கிரசும் (TMC) அமைக்கப்பட்டதுடன் இது போன்ற மாநில ரீதியிலான பிளவுகள் காங்கிரஸ் (ஐ) யில் ஏனைய மாநிலங்களிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இன, மொழி அடிப்படையில் குறுகிய பிரதேசவாத, சோவினிச உணர்வுகளுக்கு அழைப்பு விடுக்கும் இந்த மாநிலக் கட்சிகள், உள்ளூர் ஆளும் கும்பல்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றன. இதன் பெறுபேறாக, காங்கிரஸ்(ஐ) பல மாநிலங்களிலும் உள்ள மாநிலக் கட்சிகளின் ஆதரவிலேயே கூட்டணியாக இருந்து வந்துள்ளது. இது தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அரசாங்கத்தின் கனிஷ்ட பங்காளியாக இருந்து வருகின்றது.

மேற்கு வங்காளத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி முன்னணி தனது ஆறாவது வெற்றிகரமான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதோடு அதன் தலைவர்கள் தங்கள் வெற்றியைப் பற்றி வாயடித்துக்கொள்ளும் அதே வேளை, ஸ்ராலினிச மற்றும் "இடதுசாரி" கட்சிகளின் கூட்டணிக்கான ஆதரவு -1987ல் ஆகக் கூடிய 260 ஆசனங்களில் இருந்து 1996ல் 203 ஆகவும் இந்த வருடம் 199 ஆகவும்- முறை முறையாக வீழச்சி கண்டுவந்துள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஆசனங்களின் எண்ணிக்கை 1987ல் 188 ஆசனங்களில் இருந்து தற்போது 144 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாலும், இடதுசாரி முன்னணிக்கான ஆதரவு கல்கத்தாவையோ அதைச் சூழவுள்ள நகர்ப்புறங்களையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல, ஆனால் நில மறுசீரமைப்பின் பெறுபேறாக ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை வழங்கியுள்ளனர்.

ஏனைய மாநிலங்களில் உள்ள அரசாங்கங்களைப் போலவே, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதலீடுகளை மேற்கு வங்காளத்துக்குள் ஈர்த்துக் கொள்வதற்காக கழுத்து வெட்டும் போட்டிகளில் ஈடுபட்டுவருவதோடு பெரும் வியாபாரிகள் தட்டினருடன் நெருங்கிய உறவுகொண்டுள்ளது. தேர்தலைத் தொடர்ந்து "வங்காளப் புலி" என ஊடகங்களில் கத்திய பட்டாச்சார்ஜி, இந்தியக் கைத்தொழில் கூட்டமைப்பின் (CII) உயர் பிரதிநிதிகள் குழுவை உடனடியாகச் சந்தித்தார். முதலீடுகளுக்கு உதவுவதன் பேரில் அரசாங்க திட்டங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக புதிய மாநில அமைச்சர்களுக்கு சீ.ஐ.ஐ. அமோக இராப்போசன விருந்தளித்தது. பட்டாச்சார்ஜி "இப்போது வேலை செய்வோம்"! என தனது குறிக்கோளை அறிவித்ததோடு, தனது அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை விட அதிக "நட்புடன் வியாபாரம்" செய்வதாகவும் கூட குறிப்பிட்டார்.

புதிய மாநிலத் தேர்தல்கள் மொத்தத்தில் எல்லா அரசியல் கட்சிகளுடனும் உத்தியோகபூர்வ அரசியலிலும் பரந்த அதிருப்தியையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது. ஒன்றரை தசாப்த காலமாக, அதிகாரத்தில் இருந்த மாநில அரசாங்கங்கள் அவர்களது எதிரிகளால் வழக்கமான முறையில் ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ள அதே வேளை மீண்டும் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் அதே வகையிலான ஊசலாட்டத்துக்கு எதிர் திசையில் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்த போக்கு, 1987ல் தி.மு.க. கூட்டணி 151 மாநில சட்டசபை ஆசனங்களுடன் ஆட்சிக்கு வந்த தமிழ் நாட்டில் அதிகளவில் தோன்றியுள்ளது. 1991ல், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான ஒரு கூட்டணி 164 ஆசனங்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் கவிழ்க்கப்பட்டாலும், 1996ல் 173 ஆசனங்களுடன் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இப்போது அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையை வெற்றி பெற்றுள்ளது.

வாக்காளர்களில் கணிசமான அளவினர் வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டில் அண்மையில் இடம் பெற்ற தேர்தலின் போக்கு, 1984 தொடக்கம் -50 வருடங்களில் மிகக் குறைந்தளவிலான 59.06 வீதத்துக்கு- சீராக வீழ்ச்சி கண்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில், 43 வீதமானவர்களே வாக்களித்துள்ளதோடு மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரையில், 49 வீதமான வாக்குகளே பதிவாகியிருந்தன. அவ்வாறே மேற்கு வங்காளத்தில் வாக்காளர் எண்ணிக்கை 1996 தேர்தலைக் காட்டிலும் 9 சதவீதத்தில் வீழ்ச்சி கண்டு 75.24 வீதமாகியது. 1982ன் பின்னர் ஆகக் குறைந்த வீதம் இதுவாகும்.

தேர்தல் பெறுபேறுகள், தற்போதுள்ள ஆளும் இந்திய வர்க்கத்தின் பகுதிகளின் வித்தியாசமான போட்டி அவசியங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளில் எதற்குமே முறையான சமூக அடிப்படை இல்லாததோடு பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் மீது மேலும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் பகைமையும் வளர்ச்சி கண்டுவருவதை குறிக்கின்றது.