World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

Whistling in the dark at G7 finance meeting

ஜி-7 நிதிக் கூட்டத்தில் இருளில் விசிலடிப்பு
By Nick Beams
9 October 2001

Use this version to print

குழந்தைகள் இரவில் கல்லறை அருகே நடந்து போவதாக இருந்தால் அவர்கள் பயப்படாமல் இருக்க வேண்டி நேராகப் பார்த்துக் கொண்டு ஒரு ராகத்தை விசிலடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்களிடம் சொல்லப்படுவது வழக்கம். சனிக்கிழமை அன்று நியூயோர்க்கில் கூடவிருக்கும் எழுவர் குழுவின்(ஜி-7) நிதி அமைச்சர்கள் கூட்டம், உலகப் பொருளாதாரம் சம்பந்தமாக பிரதான தொழிற்துறை அரசுகளின் தலைவர்கள் இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பதுபோல் காணப்படுகிறது.

கூட்டம் நடப்பதற்கு முன்னர், ஐரோப்பிய மத்திய வங்கி அவையின் உறுப்பினரும் ஜேர்மன் புண்டெஸ் வங்கியின் தலைவருமான எர்னஸ்ட் வெல்டேக்கெ (Ernst Welteke) கடும் பொருளாதாரக் கீழிறக்கம் மற்றும் நம்பிக்கை பற்றிய நெருக்கடியைப் பொருட்படுத்தாது பேசினார். "உலகில், ஐரோப்பிய மண்டலத்தில் அல்லது ஜேர்மனியில் நான் பொருளாதாரப் பின்னிறக்கத்தைப் பார்க்கவில்லை, தொழில்நுட்ப அர்த்தத்திலும் சரி பொதுவான அர்த்தத்திலும் சரி" என்று பத்திரிகைகளிடம் அவர் சுருங்கக் கூறினார்.

அமெரிக்க கருவூல செயலாளர் போல் ஓ'நெய்ல் (Paul O'Neill) கடந்த வெள்ளி அன்று அமெரிக்கப் பொருளாதாரமானது கிட்டத்தட்ட மூன்றாவது கால் பகுதியில் எதிர்மறை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் கால் ஆண்டு அளவில் அல்லது அவ்வாறே "சீரடைதல் தாமதமாகியுள்ளது" என்று உறுதிப்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். நல்லதே நடக்கும் என்ற கண்ணோட்டத்தைப் பராமரிப்பதில் சக நிதி அமைச்சர்களுடன் அவர் சேர்ந்து கொண்டார். ஓ'நெய்ல் தனது ஜப்பானிய எதிர் அணி சகா, மசாஜூரோ ஷியோக்கா இடம் அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மத்தியில் சீரடையும் என்று கூறினார்.

ஷெய்க்கோவாவும் கூட, நடவடிக்கைகள் மேல் மந்த நிலையை உண்டு பண்ணாமல் இருப்பதற்கு மிக ஆர்வத்துடன் இருந்தார். இருப்பினும், ஜப்பானியப் பொருளாதாரத்திலிருந்து எந்தவிதமான நல்ல செய்தியையும் காணமுடியாததன் காரணமாக- கடந்த பத்தாண்டின் நான்காவது பொருளாதாரப் பின்னிறக்கத்தின் மத்தியில் தற்போது இருக்கையில்- அவர் பிரபல மந்திரத்தை வழங்க முடிவு செய்தார். அவர் செய்தியாளர்களிடம், "உலகப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் பலமாக இருக்கின்றன எனறு வலியுத்துவது பயனுள்ளது" என்றார்.

அதன் பணித்துறை அறிவிப்பில், ஜி-7 கூட்டமானது "பின்னடைவு" என்ற வார்த்தையை ஆர்வத்துடன் தவிர்த்தது மற்றும் எந்தவிதமான கீழிறக்கமும் குறுகிய ஒன்று என உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும் அரசாங்கங்கள் எடுக்கும் என்று மீள உறுதிப்படுத்தலை வழங்கியது.

"கடந்த மாத பயங்கரவாத தாக்குதல்கள் நமது பொருளாதாரங்களில் பலமான வளர்ச்சியின் புதுத் தொடக்கத்தைத் தாமதப்படுத்தியிருக்கக் கூடும் என பணித்துறை அறிவிப்பு கூறியது. பொருளாதாரம் சீரடைதலை வலுப்படுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள குறுகியகால உறுதிப்பாடின்மை இருந்த பொழுதும், நமது எதிர்கால முன்னேற்றம் பற்றி நாம் உறுதியோடு இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் எமது நிதிச் சந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்கொண்டுவருதற்கு எம்மை பலமாக அர்ப்பணித்துள்ளோம். பரிவர்த்தனைச் சந்தைகளை நெருக்கமாக தொடர்ந்து கண்காணிப்போம் மற்றும் பொருத்தமான அளவில் ஒத்துழைப்போம்."

இருப்பினும் திட்டவட்டமாக ஒத்துழைப்புப் பகுதியில்தான் பிரதான பிரச்சினைகளில் சில குடியிருக்கின்றன. தங்களின் வேறுபாடுகளை மறைக்கும் முயற்சியில், அவர்களுடைய கலந்துரையாடல்களுக்குப் பின்னர்- தனித்தனிக் கூட்டங்கள் நடத்தும் கடந்த கால நடைமுறையிலிருந்து புறப்பாடாக, நிதி அமைச்சர்கள் கூட்டுச் செய்தியாளர் மாநாட்டைக் கூட கூட்ட முனைந்தனர். இந்நடவடிக்கை "எப்படி நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் சிந்திக்கும் முறை (எமது) என மீண்டும் தெளிவுபடுத்துகிறது", என ஜேர்மன் நிதி அமைச்சர் ஹான்ஸ் ஐசெல் (Hans Eichel) செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

இருப்பினும், ஸ்தூலமான நடவடிக்கைகள் முன்மொழியப்படவில்லை. ஓ'நெய்ல் அர்ப்பணிப்பை "பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்கொண்டு வரல்" என சொல்வதன் அர்த்தம், உறுப்பினர் நாடுகள் வளர்ச்சியை உண்டுபண்ண உறுதி பூண்டுள்ளன, ஆனால் ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் அவ்வாறு செய்யும் என்பதாகும்.

குறிப்பிட்ட கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக உடன்பாடின்மை கூட்டத்திற்கான தயாரிப்பின் ஆரம்பக் கட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டது. கடந்த வியாழன் அன்று, இன்னும் கூடிய ஒன்றுபடுத்தப்பட்ட ஐரோப்பிய நடவடிக்கைக்கான தெளிவான அழைப்பில், ஓ'நெய்ல் "உலக ரீதியான பொருளாதார மீட்சி" அங்கு இருக்க வேண்டும் என்றார்.. "அமெரிக்கப் பொருளாதாரமானது உலகின் ஏனையவற்றின் பெரும்பான்மையை சுமந்து கொண்டிருக்கிறது, சிறப்பாக கடந்த ஆண்டில்..... நாம் எல்லோரும் ஒருமித்துச் செயல்பட வேண்டும்" என்றார் அவர்.

ஐரோப்பாவில் நிலவும் அக்கறைகள்

அடுத்த ஆண்டு காலப்பகுதிக்கு அதிக செலவீனங்கள் மற்றும் கூடுதலான 130 பில்லியன் டொலர்கள் வரி வெட்டுக்கள் ஆகியவற்றுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அமெரிக்க நிர்வாகமானது ஐரோப்பிய அரசாங்கங்களும் தங்களைப்போல் பின்தொடர வேண்டும் என விரும்புகின்றது. ஆனால், அவை பொதுவான நாணயமான யூரோவுக்கு அடிப்படையாக இருக்கும் 1997 நிதி நிலை ஸ்திரப்பாட்டு ஒப்பந்தத்தைக் கீழறுத்துவிடும் என்று அஞ்சி, அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றன.

கடந்த வாரம் எய்க்கெல் கூட்டு தூண்டுதல் பொதியின் (Stimulus Package) சாத்தியக்கூற்றை நிராகரித்து, "பொதுவாக, அத்தகைய திட்டங்கள் அதிகமாய் எதையும் கொண்டு வருவதில்லை" என்று கூற, அதேவேளை ஜேர்மன் சான்செலர் ஜெராட் ச்ரோடர் ஸ்திரப்பாட்டு ஒப்பந்தத்தைப் பராமரிப்பதற்காக தனது ஆதரவைத் திரும்பத்திரும்பக் கூறினார். ஹான்ஸ் ஐசெல் இன் படி, அதிகரித்த செலவினங்கள் நீண்டகால வட்டி வீதங்களை மேலுக்கு உயர்த்துவதால் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி குறுகியகால வட்டி வீதங்களை வெட்டுவதைத் தடுப்பதால் அது தன்னைத்தானே தோற்கடிப்பதாக இருக்கும். "ஸ்திரப்பாட்டு ஒப்பந்தத்தை மென்மைப்படுத்துவது, வளர்ச்சிக்கு அதன் பங்கை அளிக்க முடியாதிருக்கின்ற பணக் கொள்கைக்கு மறுக்க முடியாத வகையில் வழி வகுக்கும்" என்று அவர் கூறினார்.

பிரான்சின் நிதி அமைச்சர் லோரன்ட் பாபியூஸ் (Laurent Fabius) இந்த நிலைப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டார். ஜி-7 கூட்டத்தில் பேசும்பொழுது அவர் கூறினார்: "ஸ்திரப்பாட்டு ஒப்பந்தத்தை மாற்றுவது திறமானதாகவோ அல்லது சரியானதாகவோ இருக்குமா... அது நமது பொருளாதாரத்தின் மீது எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும், குறிப்பாக நீண்டகால வட்டி வீதங்களில். "செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் வட்டி வீதத்தை அரை சதவீதத்துக்கு வெட்டியதற்காக பாபியூஸ் ஐரோப்பிய மத்திய வங்கியின் நடவடிக்கையைப் புகழ்ந்தார் மற்றும் அங்கு மேலும் வெட்டுக்கள் இருக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்-- ஜி-7 கூட்டத்திற்குப் பின்னர் அவர் உடனடியாக இக்கண்ணோட்டத்தை திரும்பத் திரும்பக் கூறினார்.

"ஐரோப்பிய மத்திய வங்கி ஏற்கனவே வட்டி வீதங்களை வெட்டியுள்ளது, ஆனால் எனது பார்வையில் பணவீக்கம் ஏற்படுவதற்கான அபாய நேர்வு இல்லை, அங்கு நடவடிக்கைகளைக் கையாளுவதற்கு இன்னும் இடம் இருக்கின்றது" என ஓ'நெய்ல் உடனான கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

செப்டம்பர் 11 சம்பவங்களுக்குப் பின்னர் 0.5 சதவீத புள்ளி குறைப்பினைத் தொடர்ந்து, மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி வீத வெட்டிற்கான சிறிய அளவிலான சாத்தியக்கூறு இன்னும் இருப்பதுபோல் தெரிகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் விம் டுய்சென்பேர்க் ஞாயிறு அன்று, தற்போதைய வட்டி வீதம் வங்கியின் இலக்கான பணவீக்கத்திற்கு எதிராகப் போராடுவதுடன் ஒத்திருக்கிறது என்றார். மேலதிக தகவல் எதுவும் இல்லாதிருக்குமாயின் "இந்த பணக்கொள்கை சரியான ஒன்று". பொருளாதாரப் பின்னடைவை எதிர்த்துப் போராட வட்டி வீத வெட்டானது அத்தியாவசியமானது என்ற கருத்துரைப்புகளை நிராகரித்து, டுய்சென்பேர்க் குறைவான பணவீக்கம், பலமான செலுத்துகைச் சமநிலைகளின் சூழல், நிலவும் வரி வெட்டுக்கள் மற்றும் சம்பளம் மட்டுப்படுத்தல் ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டின் இறுதி அளவில் ஐரோப்பியப் பொருளாதாரமானது மேல்நோக்கிய வளர்ச்சி உடையதாக இருக்கும் என்றார்.

பிரதான முதலாளித்துவ அரசுகளின் வங்கிகளும் அரசாங்கங்களும் ஸ்தூலமான நடவடிகைகைகளில் உடன்பாட்டை எட்டுகின்றனவா என்ற பிரச்சினை ஒரு புறம் இருக்க, வட்டிவீத வெட்டுக்கள் என்ற வடிவத்தில் இருந்தாலும் சரி அல்லது அரசாங்கச் செலவீனங்கள் என்ற வடிவத்தில் இருந்தாலும் சரி-- ஏன் தூண்டுதல் நடவடிக்கைகள் பூகோள பொருளாதார கீழிறக்கத்தை திருப்பி விடுவதில் சிறிய அளவில் பாதிப்பபைக் கொண்டிருக்கின்றன என்பதற்கு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன.

பொருளாதார வளர்ச்சி வேகக்குறைவு முந்தைய வட்டி வீத உயர்வால் தூண்டி விடப்பட்டிருக்கவில்லை மாறாக உலகப் பொருளாதாரத்தின் பிரதான மையங்களில் உள்ள அளவுக்கு அதிகமான கொள்திறத்தில் இருந்தே எழுகின்றது என்பது முக்கியமான ஒன்றாகும். இது முறையே இலாபவீதங்களின் வீழ்ச்சிக்கும் தங்களின் சந்தைக்கும் இலாப பங்கீட்டிற்குமான உறுதியான போராட்டமாக, அதிகரித்த பூகோள போட்டிக்கு வழிவகுக்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கின் மிகவும் வெளிப்படையான எடுத்துக்காட்டுகள் உயர் தொழில்நுட்ப தொலைத் தொடர்புகள் மற்றும் விமான தொழிற்துறைகள் ஆகியனவாகும். இவை ஒரு வருடத்திற்கும் மேலாக பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. இருப்பினும், அளவுக்கதிகமான கொள்திறன் இந்த தொழிற்துறைகளுடன் மட்டுப்பட்டிருக்கவில்லை மாறாக கார் உற்பத்தி, மின் அணுவியல், எஃகு இரும்பு, வேதியியல் பொருட்கள் மற்றும் ஏனைய முக்கிய தொழிற்துறைகளுக்கும் இது நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கூட, தூண்டுதல் நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை மீட்டமைக்கும் என்ற கூற்றானது அண்மைய பொருளாதார வரலாற்றை உதாசீனம் செய்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரான ஆசிய நிதி நெருக்கடி வெடிப்பானது, அளவுக்கு அதிகமான கொள்திறத்தின் (Over Capacity) மற்றும் உலகப் பொருளாதாரத்திற்குள்ளேயான பொருளாதாரப் பின்னடைவுப் போக்கின் ஆரம்ப வெளிப்பாடாகும்.

அந்த நேரத்தில் பிரதான தூண்டுதல் நடவடிக்கையை எடுத்ததன் மூலம் அமெரிக்க மத்திய ரிசேர்வ் போர்டு ஒட்டுமொத்த பூகோள பொருளாதாரப் பின்னடைவைத் தடுத்தது.1998ல் வட்டி வீதங்களில் வெட்டு மற்றும் 2000 ஆண்டை அண்மிக்கும் பொழுது பணமாக்கத் திறனில் (liquidity) அதிகரிப்பு, அதிகரித்த மூலதனச் செலவுகளால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் விரைவான வளர்ச்சியைத் தூண்டிவிட்டது மற்றும் நிதிக் குமிழிகளைத் தூண்டி விட்டது. இக்குமிழிகளால் தூண்டப்பட்ட அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் செழுமைக்கு வழிவகுத்தது, ஆசியப் பொருளாதாரங்களை ஊக்குவித்தது மற்றும் ஜப்பானிலும் ஐரோப்பாவிலும் இருந்த குறைந்த பொருளாதார வளர்ச்சியின் பாதிப்புக்களை எதிரிடை செய்தது. 1990களின் முடிவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீத அளவை அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமே கொண்டிருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்க நிதிக் குமிழிகளால் ஆசிய நெருக்கடியில் மேலே காணப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகளை வெல்ல முடியாது மற்றும் அது உடைவதற்கு முன்னரான மற்றும் பின்னிறக்கப் போக்கு மீண்டும் தோன்றுவது பற்றிய வெறும் காலம் பற்றிய பிரச்சினையாகத்தான் இருந்தது. வேறுவார்த்தைகளில் சொன்னால், பணக்கொள்கை --இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மத்திய ரிசேர்வ் போர்டின் ஒன்பது வட்டி வீத வெட்டுக்கள்-- பொருளாதார வளர்ச்சியைப் புதுப்பிப்பதில் குறைந்த பாதிப்பையே கொண்டிருக்கின்றன, அது ஏனெனில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரப் பின்னிறக்க அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் பணக்கொள்கையின் முந்தைய தளர்த்தலின் காரணமாகும், அது தற்போதைய கீழிறக்கத்திற்கான சூழ்நிலைமைகளை உருவாக்க உதவியது.

அதனால் நிதி நடவடிக்கைகளைப் பயன்படுத்தத் திரும்புவது --அதிகரித்த அரசாங்கச் செலவினங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சியைப் புதுப்பிக்க முயல்தல் ஆகும். ஆனால் இங்கும் கூட அண்மைய பொருளாதார வரலாறு அதன் வெற்றியின் சாத்தியம் பற்றிய ஐயப்பாட்டைக் கிளப்புகிறது. கடந்த தசாப்த காலமாக, 1990களின் ஆரம்பத்தில் அதன் நிதிக் குமிழிகளின் பொறிவினைத் தொடர்ந்து, ஜப்பானிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சில 10 நிதிப் பொதியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த காலப்பகுதியில் அரசாங்கச் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கு சமமாக இருப்பினும்கூட, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான ஜப்பானியப் பொருளாதாரமானது, மீண்டும் கீழ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இது உலகின் ஏனைய பகுதிக்கு வரவிருக்கும் திக்கை சுட்டிக் காட்டுவதாக இருக்கக்கூடும்.