World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Neo-fascist Le Pen to face Gaullist Chirac in runoff for president

Vote for National Front leader heightens political crisis in France

ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச லு பென் கோலிச சிராக்கை எதிர்கொள்ளகின்றார்

தேசிய முன்னணியின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாக்குக்கள் பிரான்சின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்குகின்றது
By Peter Schwarz
23 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலின் முதல் கட்டவாக்களிப்பின் முடிவுகள் அரசியல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மே 5ம் திகதி இரண்டாம் கட்ட வாக்களிப்பு நெருங்குகின்றபோதிலும், சகல கருத்துக் கணிப்புகளுக்கும் மாறாக கோலிச ஜாக் சிராக் (Jacques Chirac-Gaullist) எதிர்கொள்ளப்போவது பிரதமரான லியோனல் ஜொஸ்பனை அல்ல, மாறாக அதி வலதுசாரி தேசிய முன்னணியின் தலைவரான ஜோன் மரி லு பென் (Jean-Marie Le Pen) இனையாகும். லு பென் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 17.2% இனை பெற்றுள்ளார். இது ஜொஸ்பனினது 15.9% விட அதிகமானது. சிராக் 19.4% இனை பெற்றுள்ளார்.

பிரான்சின் ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுவதன் 44வருட வரலாற்றில் முதல் தடவையாக, அதிதீவிர வலதுசாரி வேட்பாளர் நாட்டின் அதியுயர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இது 1969 இல் இரண்டு வலதுசாரி வேட்பாளர்களான George Pompidou உம் Alain Poher உம் இரண்டாவது கட்ட தேர்தலில் கலந்துகொண்டதன் பின்னர், முதல் தடவையாக சோசலிச கட்சி வேட்பாளர் ஒருவர் இறுதிக் கட்ட வாக்களிப்பில் போட்டியிட முடியாது போயுள்ளது.

ஜொஸ்பனின் கூட்டு அரசாங்கத்தில் உள்ள பல பிரதிநிதிகள் லு பெனின் வெற்றியை பயங்கரம் எனவும், கலக்கமடையவேண்டியுள்ளது எனவும் விமர்சித்துள்ளனர். சோசலிச கட்சியின் செயலாளரான François Hollande, ''நாட்டிற்கு அதிர்ச்சி'' எனவும், ''மோசமானதும் அநியாயமான தோல்வி'' எனவும் குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான Robert Hue, ''துயரமானதும், ஆத்திரமானதும்'' என கூறியுள்ளார். பசுமைக்கட்சியின் வேட்பாளரான Noel Mamère "யுத்தத்திற்கு பின்னரான பிரான்சின் மோசமான அரசியல் நெருக்கடி" என கூறினார்.

ஜொஸ்பன் தோல்விக்கான பொறுப்பை ஏற்றதுடன், இரண்டாம் கட்ட வாக்களிப்பின் பின்னர் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் இத்தேர்தல் முடிவுகள் ''மனக்கசப்பூட்டுவதாக'' குறிப்பிட்டு தான் பதவியில் இருந்தபோது செய்த முயற்சிகளையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். அவர் தனது தோல்விக்கு காரணம் இடதுசாரிகள் மத்தியில் இருந்த ஒற்றுமைமையின்மையும், வலதுசாரிகளின் வாய்வல்லமையும் என குற்றம்சாட்டினார்.

ஜொஸ்பனின் பொறுப்பு

உண்மையில், லு பெனினது ஆச்சரியமான வெற்றிக்கு காரணம் சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சி, Jean-Pierre Chevènement இன் Civil Block, மற்றும் சிறிய இடது தீவிரவாத கட்சிகளின் ஆளும் இடது கூட்டே காரணமாகும். இத்தேர்தல் முடிவானது, பிரித்தானிய பிரதமரான ரொனி பிளேயருக்கும், ஜேர்மனியினது பிரதமரான ஹெகார்ட் ஷுரோடற்கும் ஒரு இடது மாற்று என சிலரால் புகழப்பட்ட ஜொஸ்பனினது கொள்கைகளுக்கு கிடைத்த அழிவுகரமான தீர்ப்பாகும்.

கோலிசவாதியான அலன் யூப்பே (Alain Juppé) சமூக நலன்களை வெட்ட முயன்றபோது அது பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தினை உருவாக்கியதால் ஒரு வருடத்திற்கு முன்னரே பதவி விலகிய பின்னர் ஜொஸ்பன்1997ல் ஆட்சிக்கு வந்தார். பூகோளமயமாக்கலினதும், ஐரோப்பிய ஒன்றிணைப்பினதும் மத்தியில், படிப்படியான சீர்திருத்தம் மூலம் பரந்துபட்ட மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்தலாம் என்ற நப்பாசையை கவனமாக முன்வைத்ததன் மூலம் ஒரளவு நன்மதிப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் யதார்த்தத்தில் அவரது நடைமுறை வித்தியாசமாக இருந்தது. அது கூடுதலாக வர்த்தக, நிதித்துறையினரினது தேவைகளின் பின்னால் போவதாக இருந்தது.

தனக்கு முந்திய இரண்டு கன்சவேட்டிவ் பிரதமர்கள் ஒன்றிணைந்து தனியார் மயமாக்கியதை விட அதிகமான அரசு நிறுவனங்களை ஜொஸ்பனினது அரசாங்கம் தனியார்மயமாக்கியது. அவர் உறுதியளித்த சீர்திருத்தங்கள் ஒன்றில் நடைமுறைப்படுத்தப்படாது போயின அல்லது அதற்கு எதிரானதாக மாறின. ஜொஸ்பனினது மதிப்பிற்குரிய திட்டமான 35 மணித்தியால வேலைநேரம் என்பது தொடர்பான சட்டமானது, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மாறாக, வேலைப்பாதுகாப்பு நிலைமைகளை இல்லாதொழிப்பதற்கான ஒன்றாகவும், வேலைநிலைமைகளை வசதிக்கேற்ற மாதிரி மாற்றியமைப்பதை அறிமுகப்படுத்துவதாகவும் மாறியது. வேலைப்பழு அதிகரித்ததுடன் ஊதியம் வீழ்ச்சியடைந்தது. வேலையில்லாதவர்களின் தொகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீழ்ச்சியடைந்தபோதிலும், பொருளாதார பாதுகாப்பு இல்லாதுபோனதுடன், பகுதிநேர வேலைகளுக்கும் தற்காலிய வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் அளவு அதிகரித்தது.

ஜொஸ்பனினது இடதுசாரி மாதிரியானது படிப்படியான சீர்திருத்தம் மூலம் வாழ்கைத்தரத்தை உயர்த்தலாம் என்ற நப்பாசையை ஆளும் வர்க்கத்தினது நலன்களினை உயர்த்துவதாக இருந்ததே தவிர, பரந்தபட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ச்சியான சீரழிவிற்குள்ளானது. இத்தேர்தலில் அவரது தோல்வியானது இந் நப்பாசைகள் இல்லாதொழிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பானது, 1969ல் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரிகளின் பாரிய கட்சியாக இருந்தபோது கூடுதலான வாக்குகளை தனக்குரியதாக்கிய பின்னர் சோசலிச கட்சிக்கு கிடைத்த மோசமான வாக்குகளாகும். ஜொஸ்பன் பலம்வாய்ந்த எதிராளர்களை இத்தேர்தலில் எதிர்கொண்டிருக்கிவில்லை. அவரது முக்கிய எதிராளியான தற்போதைய ஜனாதிபதியான சிராக் ஆழமான ஊழல்களுக்குள் உள்ளாகியிருந்ததுடன், 73 வயதான லுபென் 1990ல் அவரது தேசிய முன்னணியானது உடைவுகளுக்குள்ளானதை தொடர்ந்து குறிப்பிடத்தக்க தனது ஆதரவாளர்களை இழந்ததன் பின்னர் அவர் ஒரு அரசியல் நினைவுச்சின்னமாக கருதப்பட்டார்.

முன்னொரு காலத்தில் பலமானதாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான Robert Hue 1970 இல் இருந்து சோசலிசக் கட்சியுடன் விசுவாசமாக இணைந்து இயங்குவதுடன், ஜொஸ்பனைவிட மோசமான இழப்பை சந்திக்கவேண்டியிருந்தது. அக்கட்சியானது 3.4% வாக்குகளுடன் முற்றாக துடைத்துக்கட்டப்பட்டது. (1995 இல் அது 8.7% பெற்றிருந்தது). 16 வேட்பாளர்களுக்குள் Robert Hue 11 வது இடத்தை பெற்றார்.

சிராக்கின் முக்கிய பிரச்சாரமாக இருந்த சட்டமும் ஒழுங்கும், உள்நாட்டின் பாதுகாப்பு என்பதும் இத்தேர்தலில் தீர்க்கரமான பாத்திரம் வகித்தது. ஜொஸ்பன் வலதுபக்கம் திரும்புவதன் மூலம் சிராக்கை வென்றுகொள்ள முயன்றார். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிறு குற்றங்களுக்கும் இளைஞர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும், உள்நாட்டு பாதுகாப்பிற்காக ஒரு ''விஷேட அமைச்சு'' உருவாக்கவேண்டும் எனவும் அழைப்புவிட்டனர். இது பலராலும் அவதானிக்கப்பட்ட, தாம் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக உணரப்பட்ட சமூகத்தட்டினரினது அதிருப்திகளை தனக்கு சாதகமாக திருப்புவதில் நீண்டகாலமாக வித்துவாங்கத்தனம் பெற்ற லு பென் சாதகமான நிலைமையை உருவாக்கிக் கொடுத்தது.

எவ்வாறிருந்தபோதிலும், ஜொஸ்பனின் தோல்வியை தேர்தல் பிரச்சாரத்தின் தந்திரோபாய தோல்வி எனக்குறிப்பிடுவது பிழையானதாகும். அவர் சிராக்கின் சட்டமும் ஒழுங்கும் பிரச்சார வாகனத்தில் ஏறிக்கொண்டது, பரந்துபட்ட மக்களின் பயத்திற்கும் அமைதியின்மைக்கும் காரணமான சமூகப்பிரச்சனைகளுக்கான ஒரு முற்போக்கான தீர்வு அவரிடம் இல்லாததால் ஆகும். பாரியளவு வேலையற்ற இளைஞர்கள் ஒரு ஒழுங்கான எதிர்காலத்திற்கான முன்னோக்கு இல்லாமையும், ஏழ்மையான குடும்பங்கள் சிறிய வீடுகளில் அடைக்கப்பட்டிருப்பதுமான தொழிலாள வர்க்க பகுதிகளில் உள்ள நம்பிக்கையற்ற நிலைமையானது ஜொஸ்பனின் கடந்த ஆட்சிக்காலத்தில் மாற்றமடையவில்லை.

சமூகத் துருவப்படுத்தல்

ஒருவர் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்தமாக நோக்கினால், இடதுசாரி கூட்டினது உடைவிற்கான காரணம் தெளிவாக தெரியும். சமுதாயம் துருவப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் மையம் உடைவதுடன், பரந்தளவிலான மக்கள் இன்னும் தீவிரமான தீர்வினை தேடுகின்றனர்.

ஒருவர் லு பென்னினது வாக்குகளையும், தேசிய முன்னணியின் உடைவிற்கு காரணமான Bruno Mégret இற்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிட்டால், வாக்களிப்பிற்கு சென்றவர்களில் 1/5 பேர் தீவிரவலதுசாரிகளுக்கு வாக்களித்துள்ளமை தெரிகின்றது. இடதுசாரிப் பக்கத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைத்துக்கொள்ளும் 3 கட்சியினர் தேர்தலில் கலந்துகொண்டனர். அவையாவன Arlette Laguiller தலைமையிலான Lutte Ouvrière (LO), Olivier Besancenot தலைமையிலான Ligue Communiste Révolutionnaire (LCR), Daniel Gluckstein இன் Parti des Travailleurs ஆகும். இவர்கள் மொத்தமாக 10.6% வாக்குகளை பெற்றுள்ளனர்.

மேலும், வாக்களிக்க தகுதியானவர்களில் 30% ஆனவர்கள் வாக்களிப்பில் கலந்தகொள்ளவில்லை அல்லது செல்லுபடியாகாமல் வாக்களித்துள்ளனர். இது பிரான்சில் ஒரு உயர்ந்த மட்டமாகும். 7வருடங்களுக்கு முன்னர் 78% ஆனோர் வாக்களிப்பில் கலந்தகொண்டனர். இது அப்போது குறைந்த தொகையாகும்.

இவ்விளைவுகள் சமூகத்துருவப்படுத்தல் போக்கினை பிரதிபலிப்பதுடன், இது சமூக முரண்பாடுகளை ஒடுக்குவதன்மூலம் தற்போதுள்ள சமூக அமைப்பை பாதுகாத்துக் கொள்ளவதை அதிகரித்துவரும் வகையில் பிரச்சனைக்கு உள்ளாக்குகின்றது. சமூக முரண்பாடுகளை ஒடுக்குவதை தனது முக்கிய கடமையாக கொண்ட சமூக ஜனநாயகம் தனது சமூக அடித்தளத்தை இழக்கின்றது.

இவ் அபிவிருத்தியானது பிரான்சிற்கு மட்டும் உரித்தானதல்ல. ஏனெனில் 1990களில் இறுதி இரண்டாவது பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பெரும்பாலானவற்றில் சமூக ஜனநாயகட்சிகள் ஆட்சி செலுத்தின. கடந்த வருடங்களில் ஆஸ்திரியாவிலும், இத்தாலியிலும், டென்மார்க்கிலும், போர்த்துக்கலிலும் மத்திய-வலதுசாரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. பிரான்சில் தேர்தல் நிகழ்ந்தவேளையில் ஜேர்மனியில் இடம்பெற்ற பிராந்திய தேர்தல் ஒன்றில் ஆளும் சமூக ஜனநாயக்கட்சி வரலாற்றில் தனது பாரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இதுவரையில் வலதுசாரிகள் இவ் அபிவிருத்தியால் இலாபமடைந்துகொண்டிருந்தன. இவர்கள் அதிருப்தியும், அமைதியும் அற்ற மக்கள் பிரிவினரை இனவாத, பிற்போக்குவாத திசையை நோக்கி திருப்புவதில் முயற்சி செய்தனர். இவ்வகையில் பிரான்ஸ் ஒரு மாதிரியாகவுள்ளதுடன் லு பென் இத்திசையில் எவ்வாறு செல்வது என்பது தொடர்பாக நன்கு தெரிந்திருக்கின்றார். தேர்தல் அன்று மாலை அவர் திரும்பத்திரும்ப ''சமூக பிரச்சனையில் நான் ஒரு இடதுசாரி எனவும், பொருளாதாரத்தில் ஒரு வலதுசாரி எனவும், எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு பிரெஞ்சு நாட்டுப்பற்றாளன்'' என குறிப்பிட்டார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தட்டினருக்கு விடப்பட்ட வார்த்தை ஜாலமான, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறும் அவரது உரையானது பிரான்சின் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அவர் அதில் ''சமூக அந்தஸ்தற்ற, சமூகத்தில் விலக்கப்பட்ட சிறியவர்களாகிய நீங்கள் கனவுகாண பயப்படவேண்டாம். வலது, இடது திசைகளில் உங்களை பிரிக்க இடமளிக்காதீர்கள்'' எனவும், மேலும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு நேரடியான அழைப்பை பின்வருமாறு விடுத்தார் ''நிலக்கரி, உருக்கு தொழிலாளர்களும், சகல துறையிலுமுள்ள தொழிலாளர்களுமாகிய நீங்கள் மார்ஸ்ட்ரிட்சின் ஐரோப்பிய-பூகோளமயமாக்கலால் அழிக்கப்பட்டுள்ளீர்கள். விவசாயிகளாகிய நீங்கள் ஓய்வூதியம் பெறும் மோசமான நிலைமைக்குள் வாழ்வதுடன், அழிவிற்குள்ளும் தாழ்ச்சிக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளீர்கள். நாங்கள் தான் நகரங்களினதும், நகர்ப்புறங்களினதும், கிராமங்களினதும் பாதுகாப்பின்மையால் முதல் தாக்கப்படுபவர்களாகும்'' எனக் குறிப்பிட்டார்.

லு பென் இரண்டாம் கட்ட வாக்களிப்பில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக உள்ளதாக கருதப்படுகின்றது. எவ்வாறிருந்தபோதிலும், முதல் கட்ட வாக்களிப்பின் முடிவுகள் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச பிரிவுகள் உள்ளடங்கலான பிரான்சின் முற்றுமுழுதான அரசியல், தொலைத்தொடர்பு சாதனங்களின் கட்டுமானத்தின் அரசியல் குருட்டுத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. பரந்த மக்கள் மத்தியில் உள்ள பாரிய ஆத்திரமும், அதிருப்தியும் மற்றும் முது பிற்போக்குவாத அரசியல் அமைப்பும் மதிப்பிழந்துள்ள அளவும் தற்போது எதிர்பார்த்ததிலும் பார்க்க கூடிய போட்டியை உருவாக்கியிருக்கவேண்டும்.

சிராக்கிற்கு வெற்றி கிடைத்தாலும், முழு அரசியல் கட்டமைப்பும் இன்னும் வலதுபக்கம் போகும் என்பதில் எவ்வித ஐயுறவுமில்லை. லு பென்னை தடுப்பதற்காக என கூறி ஏற்கனவே இடது கூட்டினர் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிட்டுள்ளனர். கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள இந்த வலதுசாரி அரசியல்வாதி பதிவியிலிருந்து அகற்றப்பட்டாலும் அல்லது மீண்டும் தெரிவுசெய்யப்பட்டாலும் பிரான்சின் ஜனநாயத்தை பாதுகாத்ததாக அரசியல் கட்டமைப்பால் புகழப்படுவார்.

இத்தேர்தல் முடிவுகளானது ஐந்தாம் குடியரசின் அதிகரித்துவரும் நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். ஜெனரால் டு கோல் (General De Gaulle) ஆல் 1958 இல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பானது அல்ஜீரியாவின் யுத்தத்தின் பின்னர் அதிகரித்துவரும் நெருக்கடியை வெளிப்படுத்திக்காட்டிய பிரான்சை ஒரு உள்நாட்டு யுத்தத்தில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். கடந்த 50 வருடங்களாக பலதடவை அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட பலமான ஜனாதிபதி அரசியல் கொள்கைகளை தீர்மானிக்க முடியாது இருந்தது. ஏனெனில் பாராளுமன்றம் எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

இந்த கூட்டுவாழ்க்கையானது, முதலாவதாக சோசலிசக் கட்சியின் தலைவரான மித்திரோன் ஜனாதிபதியாகவும், வலதுசாரி பிரதமரான சிராக்கும், பின்னர் வலதுசாரி ஜனாதிபதியான சிராக்கும் சோசலிச கட்சியின் ஜொஸ்பன் பிரதமராகவும் இருந்தமை ஒரு அரசியல் முட்டுக்கட்டை என கருதப்பட்டது. 2002 இன் ஜனாதிபதி தேர்தலானது ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 7வருடத்தில் இருந்து 5வருடமாக குறைக்கும் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நிகழ்வதுடன், பாராளுமன்ற தேர்தல்கள் இன்னும் ஒரு மாதத்தில் நிகழவுள்ளது. இது ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தையும் ஒரே கட்சியே கட்டுப்படுத்தவதை உறுதிப்படுத்தும் முயற்சியாகும்.

ஆனால் சிராக்கின் ஆதரவாளர்கள் தற்போது தேசிய முன்னணிக்கு கிடைத்த வாக்குகளின் அதிகரிப்பாலும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இடது வாக்காளர்களின் பாசிச எதிர்ப்பின் பிரதிபலிப்பு விளைவாக கோலிஸ்டுகளுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுத்துவிடும் எனவும், ஒரு புதிய வடிவிலான கூட்டுவாழ்க்கை முறையை உருவாக்கிவிடும் எனவும் பயமடைந்துள்ளனர்.

அரசியல் மோதல் நிலையானது வீதிகளுக்கு மாற்றப்பட்டுவிடும் சமிக்கைகள் ஏற்கனவே காணப்படுகின்றன. லு பென் இனது தேர்தல் வெற்றியானது பாரிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலையே ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி லு பென் இற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்ட வாக்களிப்பிற்கு சற்று முன்னர் வரும் மே முதலாம் திகதி அன்று தேசிய முன்னணிக்கு எதிராக ஒரு பாரிய எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இதற்கு பதிலாக லு பென் தனது ஆதரவாளர்களிடம், அவர்கள் ஒவ்வொரு மே 1ம் திகதியும் செய்வதுபோல் பிரான்சின் தேசிய வீராங்கனையாக Jeanne d'Arc இற்கு மரியாதை செலுத்தும் ஊர்வலத்தில் கலந்தகொள்ளுமாறு அழைப்புவிட்டுள்ளார்.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அரசியல் முன்னோக்கின் நெருக்கடி

இரண்டு வலதுசாரி கட்சிகள் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது கட்ட தேர்வில் கலந்துகொள்ளவது என்பது அது பாரிய மக்கள் திரளின் அரசியல் பார்வையையும், சமூக விருப்பங்களையும் உண்மையாக பிரிதிபலிக்கின்றது என்பதல்ல. சோசலிச கட்சியும் அதன் ஸ்ராலினிச கூட்டான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் மத்தியில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிச உணர்வை குழப்பத்திற்குள்ளாக்குவதிலும், இல்லாதொழிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தன. இதனால் தான் வலதுசாரிகள் அவற்றிற்கு உள்ள உண்மையான பரந்த ஆதரவுடன் ஒப்பிடுகையில் கூடுதலான வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடியாதாக இருந்தது.

பல வாக்காளர்கள் லு பென்னின் பாசிச நோக்கத்திற்கு ஆதரவளிப்பதிலும் பார்க்க தற்போதைய அரசியல் தட்டினருக்கு எதிரான ஒரு எதிர்வாக்கு என்ற அடித்தளத்திலேயே வழங்கியுள்ளனர். தேசிய முன்னணியின் தலைவருக்கு கிடைத்த வாக்குகள் பாரியளவாக இருக்கவில்லை. வாக்களிக்க தகுதியுள்ள 40 இலட்சம் பேரில் 4.8 இலட்சத்தினரே அவருக்கு வாக்களித்தள்ளனர். தேர்தலில் கலந்துகொள்ளாதவர்களை கருத்திற்கு எடுத்தால் இறுதிக்கட்ட வாக்களிப்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களான சிராக்கிற்கும், லு பென்னிற்கும் கிடைத்த வாக்குகள் காற்பகுதியே.

எவ்வாறிருந்தபோதிலும், லு பென்னிற்கு தொழிலாள வர்க்கம் வழங்கிய வாக்குகளை குறைத்து மதிப்பிடுவது படுமோசமான தவறாகும். அவரது தேர்தல் வெற்றியானது பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பாவிலும், ஏன் சர்வதேச ரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் தற்போதுள்ள முக்கிய தலைமை மற்றும் அரசியல் முன்னோக்கின் நெருக்கடியின் அதிகரித்துவரும் பிரதிபலிப்பாகும்.

பலபத்தாண்டுகளாக தொழிலாள வர்க்க இயக்கமானது சமூக ஜனநாய, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆதிக்கத்தினுள் இருந்ததுடன், அவற்றால் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் உணர்மை மீது பாரிய தாக்கத்தை உருவாக்கியிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் என்ற கருத்தானது இல்லாதொழிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2 தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகளினதும் சமூக ஜனநாயத்தினதும் வலது திருப்பமும், இக்கட்சிகள் முதலாளித்துவத்தின் சுதந்திர சந்தை கருத்துகளுக்கு அடிபணிந்து எவ்விதமான சோசலிச கொள்கைகளையும் கைவிட்டதானது, உழைக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வெறுப்பும், அரசியல் குழப்பமும் பாரிய அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

இந்த அரசியல் சீரழிந்த அமைப்புகள் தொடர்ந்தும் ஒரளவு ஆதிக்கத்தை கொண்டிருந்ததற்கான காரணம், சீரழிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச புரட்சிகர மாற்றீட்டை வழங்க ஒரு புதிய தலைமை இல்லாததாலாகும். இது வலதுசாரிகளுக்கு தீவிர எதிர்ப் புரட்சிகரமான நோக்கங்களுக்காக வெறும் வார்த்தை ஜாலங்களால் சமூக துயரங்களை சுரண்டிக் கொள்வதற்கான பாதையை திறந்துவிட்டது.

இந்த அரசியல் குழப்பமானது லு பென்னிற்கு ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களிமும், வேலையற்றவர்களிடமிருந்தும் கிடைத்த குறிப்பிடத்தக்க வாக்குகளாலும், இப்பிரிவினர் கூடியளவு பகிஸ்கரிப்பாலும் பிரதிபலித்தது. எல்லாவற்றிகும் மேலாக லு பென்னின் இயக்கத்தின் உடைவின் மத்தியிலும் கடந்த தேர்தலிலும் பார்க்க, அதாவது 15% இருந்து 17% ஆக அதிகரித்துள்ளது.

லு பென் கூடுதலான வாக்கு வீதத்தை நிலக்கரி சுரங்கங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் ஏழ்மைக்குள்ளாக்கப்பட்ட தொழிலாள வர்க்க பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் பெற்றுள்ளார். இதில் வடக்கிலுள்ள Lille, வடகிழக்கின் Alsace-Lorraine போன்ற பிரதேங்கள் அடங்கும். இவை அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருந்த பிரதேசங்களாகும். அவருக்கு வட ஆபிரிக்க குடியேற்றவாசிகள் வாழும் தென்கிழக்கிலும் கூடியளவு ஆதரவை பெற்றிருந்தார். இவர்கள் தேசிய முன்னணியின் இனவாத பிரசாரத்தின் இலக்காக இருந்தவர்களாகும்.

தொழிலாள வர்க்க பிரதேசங்களில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்களின் தொகை அதிகமாக இருந்தது. குறிப்பிடத்தக்கது, ஸ்ராலினிஸ்டுகளின் ஆதிக்கத்திலிருந்த பாரிசின் புறநகர் பகுதியாகும். Ile de France இல் 32% இனரும், Seine-St. Denis இல் 36% இனரும் வாக்களிக்கவில்லை.

எந்தவொரு வேட்பாளரோ அல்லது கட்சியோ வலதுசாரிகளை தோற்கடிக்கும் அரசியல் முன்னோக்கை தேர்தலில் முன்வைக்க முடியாதிருந்தபோதிலும், மூன்று இடதுசாரி வேட்பாளர்களுக்கு கிடைத்த 3 இலட்சம் வாக்குகள் அப்படியான முன்னோக்கு ஒன்றை தேடுவதை தெளிவாக காட்டுகின்றது. பிரான்சின் வரலாற்றில் முதல் தடவையாக ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் என தம்மை அழைத்துக்கொள்ளும் இருவரான Laguiller (6%) உம் Besancenot (4.3%) உம் பிரான்சில் நீண்ட ஸ்ராலினிச பாரம்பரியமுள்ள கம்யூனிச கட்சி வேட்பாளரைவிட (Robert Hue, 3.4 percent) கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளனர்.

சோவியத் யூனியனின் உடைவிற்கு பின்னர் அக்டோபர் புரட்சியின் மிக முக்கிய தலைவர்களான லெனினிற்கும், ட்ரொட்ஸ்கிக்கும் எதிராக பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சாரம் பிரான்சில் தீவிர வடிவத்தை எடுத்திருந்தது. ஆனால் இது ஒரு மட்டுப்படுத்த தாக்கத்தை கொண்டிருப்பதாக தோற்றமளிக்கின்றது. ட்ரொட்ஸ்கி இன்றுவரை சமூக ஜனநாயத்திற்கும், ஸ்ராலினிசத்திற்கும் எதிரான சோசலிச அரசியல் மாற்றீடாக சரியாக அடையாளம் காணப்படுகின்றார்.

எவ்வாறிருந்தபோதிலும், நான்காம் அகிலத்தை உருவாக்கப்பட்டவரின் அரசியல் நோக்கங்கள் தொடர்பாக தெளிவற்ற கருத்துக்களே நிலவுகின்றன. Laguiller, Besancenot, Gluckstein ஆகியோர் ட்ரொட்ஸ்கி போராடிய அரசியல் முன்னோக்கையோ அல்லது பாரம்பரியத்தையோ பிரதிபலிக்கவில்லை.

Laguiller இன் Lutte Ouvriére இயக்கமானது, பிரான்சில் உள்ள தொழிலாளர்களின் மத்தியில் ஆதரவு பெறுவதை முரண்பாட்டிற்குள்ளாக்கும் என்ற தேசிய சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிலிருந்து நான்காம் அகிலத்தில் அங்கத்துவம் பெறுவதை எப்போதும் நிராகரித்து வந்தது. அவ்வமைப்பின் கருத்துக்கள் தொழிற்சங்கவாத தன்மை உடையது. Laguiller தனது நீண்ட தேர்தல் பிரச்சார உரைகளில் பிரான்சை, ஒரு தீவைப்போல் அல்லது வேறு கிரகத்தில் உள்ளதுபோல் கருதி ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடர்பாகவோ அல்லது மத்திய கிழக்கின் நிலைமை தொடர்பாகவோ அல்லது எந்தவொரு சர்வதேச அபிவிருத்தி தொடர்பாகவோ குறிப்பிடவில்லை.

Besanceno உம் வேறுபட்ட ஸ்ராலினிச, தேசியவாத, குட்டிமுதலாளித்துவ அமைப்புகளுடன் கூட்டிணைந்து கொள்ளவதற்காக நான்காம் அகிலத்தின் சுயாதீனமான பிரிவுகளை கட்டுவதை 1950களில் கைவிட்ட ஐக்கிய செயலகம் எனப்படுவதை சேர்ந்தவராவார். தற்போது Ligue Communiste Révolutionaire, பூகோளமயமாக்கலுக்கான பதிலாக தேசிய அரசை பாதுகாக்கும் கருத்தை கொண்டதும், லியொனல் ஜொஸ்பனினது அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்பை கொண்ட அற்றாக் இயக்கத்துடன் (Attac movement) நெருங்கி இயங்குகின்றது.

Gluckstein வலதுசாரி தொழிற்சங்கமான Force Ouvrière இன் அதிகாரத்துவத்துடன் தொடர்புள்ள அமைப்பின் உறுப்பினராக இருப்பதுடன், சமூக ஜனநாயக அமைப்பின் பிரிவுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளார். இரண்டு தசாப்தங்களாக இவரும் பிரான்சின் சோசலிச கட்சியினுள் முக்கிய பதவிவகித்த லியோனல் ஜொஸ்பனும் இவ்வமைப்பினது அங்கத்தவர்களாகும்.

வலதுசாரி அபாயத்திற்கு எதிரான உண்மையான பதிலானது, ஒரு சர்வதேச வேலைத்திட்டத்னை அடித்தளமாக கொண்டு பிரான்சினதும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் சோசலிச முன்னோக்கில் ஒன்றிணைவதாகும்.

See Also :

பிரான்ஸ்: ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் பியர் சேவனுமோ இன் அரசியல்