World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்திய

India and Pakistan on threshold of war

இந்தியாவும் பாக்கிஸ்தானும் யுத்தத்தின் வாயிலில்

By Keith Jones
29 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவும் பாக்கிஸ்தானும் யுத்தத்தை எதிர்பார்த்து துருப்புக்களையும் டாங்கிகளையும் ஏவுகணைகளையும் தங்களின் எல்லைகளுக்கு விரைந்து அனுப்பியுள்ளன. இதற்கிடையில் இவ்விரு அணு ஆயுத அரசுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தொடர்ந்து கீழ்நோக்கி இறங்கி வருகின்றன. அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய வல்லரசுகள் வேண்டுகோள்களை விடுத்தும் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி பாக்கிஸ்தானின் ஜனாதிபதி ஜெனரல் பர்வெஸ் முஷாரப்புடன் ஜனவரி 4-6 வரை நடக்க இருக்கும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய (SAARC) உச்சி மாநாட்டின் பொழுது இருதரப்பு பேசசுவார்த்தைகளை நடத்தமாட்டார் என்று இந்தியா பிடிவாதமாக இருந்து வருகின்றது.

வியாழன் அன்று இந்தியா பாக்கிஸ்தான் தூதரக அலுவலர்கள் பாதிப்பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன் பாக்கிஸ்தான் சர்வதேச விமானங்கள் இந்திய வான்வெளியைப் ஜனவரி1 முதல் பயன்படுத்த தடைவிதித்திருப்பதாகவும் கூறியது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவானநேரம் கழித்து பாக்கிஸ்தானும் அதேபோன்ற தடைகளை இந்தியாவிற்கு எதிராக விதித்தது. முன்னதாக, இந்தியா பாக்கிஸ்தானுக்கான அதன் ஹைகமிஷனரை (தூதரை) திரும்ப அழைத்துக்கொண்டதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான பேருந்து மற்றும் இரயில் சேவைகளை புத்தாண்டு முதற்கொண்டு நிறுத்திவிடுவதாக அறிவித்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் படி, இந்த வார இறுதிக்குள் இந்தியாவின் ஆயுதப் படைகள் யுத்த வடிவில் எல்லைகளில் நிறுத்தப்படும். வாஜ்பாயி, கட்சிக் கூட்டத்தில் தமது 77வது பிறந்தநாளைக் குறித்துப் பேசுகையில், இந்தியா மீது "யுத்தத்தை திணிப்பை" பாக்கிஸ்தான் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். "நாம் யுத்தத்தை விரும்பவில்லை" என்று இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் (BJP) வாஜ்பாயி கூறினார். "ஆனால் யுத்தம் எம் மீது திணிக்கப்பட்டால் நாம் அதனை சந்திக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார் அவர்.

பாக்கிஸ்தானிய அரசாங்கமும் இராணுவப் பேச்சாளரும் இதற்கு இணையான போரில் ஈடுபடுபவரது அறிக்கைகளை வெளியிட்டனர். நேற்று பாக்கிஸ்தானின் இராணுவ அரசாங்கத்திற்கான பேச்சாளர் ஜெனரல் ரஷீத் குரேஷி, இந்திய படை எடுப்பை முந்தித்தான் படை எடுக்கும் வண்ணம் பாக்கிஸ்தான் குரோதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க நிர்ப்ந்திக்கப்பட்டிருப்பதை சைகை காட்டினார். "இந்திய அரசாங்கம் தன்னை ஒரு மூலைக்குக் கொண்டுவந்து நிறுத்தி உள்ளது, இப்பொழுது திரும்பிப் போவது அவர்களுக்கு கடினமானதாகும்." தேவைக்கு அதிகமான அளவு இராணுவத்தை நிறுத்துவது மற்றொரு நாட்டால் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் என்றார்."

தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர்கள் உட்பட 14 பேர்களை மரணமடையச் செய்த, பாராளுமன்றத்தின் மீதான டிசம்பர்13 தாக்குதல், பாக்கிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ ஆதரவிலான பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட இரு குழுக்களால் நடத்தப்பட்டது என்று இந்தியா குற்றம் சாட்டுகின்றது. நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் புஷ் நிர்வாகத்தால் பின்பற்றப்பட்ட வசனபாணியிலிருந்து வாசித்துக் காட்டி, அது குற்றம் சாட்டுகிற லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-மொகம்மது ஆகிய இயக்கங்களை பாக்கிஸ்தான் தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும் என்றும் இந்தியா கோரியது. பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் அல்லது "ஆசாத்" காஷ்மீரில் இந்திய-எதிர்ப்பு காஷ்மீரி கொரில்லாக்கள் நடத்தும் பயிற்சி முகாம்களை பாக்கிஸ்தான் மூடிவிட வேண்டும் மற்றும் "இந்திய எதிர்ப்பு-பயங்கரவாதத்தில்" சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் என்றும் கூட கோரியது. இதன் அர்த்தம் இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் தசாப்தகால கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்டுள்ள எந்த குழுவும் ஆகும். பாக்கிஸ்தான் தன்பங்குக்கு இந்தியக் குற்றச்சாட்டை கோபத்துடன் நிராகரித்தது. தாக்குதலை நடத்தியவர்களுக்கும் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கும் ஏதாவது தொடர்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், டிசம்பர் 13 தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-மொகம்மது ஆகிய இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை புதுதில்லி தரவில்லை என்று அது கூறியது. மீண்டும் இந்த வாரம் ஜெனரல் ரஷீத் குரேஷி, பாக்கிஸ்தானுக்கு எதிரான மிகவும் கடுமையான நிலைக்கு ஒரு சாக்காக இந்திய அரசாங்கமோ அல்லது இந்திய பாதுகாப்பு படைகளில் உள்ள நபர்களோ பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை ஒத்திகை பார்த்திருக்கலாம் என்றார். இந்த வாரம் பாக்கிஸ்தானிய அதிகாரிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைத்தனர் மற்றும் ஜெய்ஸ்-இ-மொகம்மது அமைப்பின் தலைவர் மெளலானா மசூது அசார்கைதை அறிவித்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் இந்தியக் கோரிக்கைகளுக்கான பதில் அல்ல என்று இஸ்லாமாபாத் வலியுறுத்தி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், உள்நாட்டுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றனர்.

இந்தியாவின் ஆளும் தட்டு பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கத்தின் போருக்குப் போகாமல் ஓரத்தில் நின்று ஊசாடிக் கொண்டிருக்கும் நிலைதொடர்பாக ஆழமாய்ப் பிளவுபட்டுள்ளனர். இந்து பேரினவாத பி.ஜே.பிக்குள்ளே அந்தந்த மொழிபேசும் பகுதிகள் அந்தந்த நாட்டுடன் சேரவேண்டும் என்ற பிரிவு பெரிதாக இருக்கிறது, அது பாக்கிஸ்தானை அகன்ற இந்தியாவுக்குள் பலவந்தமாகச் சேர்க்க யதார்த்தபூர்வமாக நம்பிக்கை கொள்ளமுடியாது என்றால், எவ்வாறாயினும் இந்தியாவின் தோள்களில் பாக்கிஸ்தானை பெரும் சுமையாக வைத்திருப்பது துடைத்து எறியப்பட வேண்டும் என்கின்றது. பாக்கிஸ்தான் தொடர்பான கடும்போக்கு அணுகுமுறையை, இந்தியாவின் அதிக ஜனத்தொகை மிக்க உத்திரப் பிரதேசம் உள்ளடங்கலான நான்கு மாநிலங்களில் வர இருக்கும் தேர்தல்களில் வெல்வதற்கு கட்சியின் சிறந்த பணயம் என்று பிஜேபி கட்சிக்குள் உள்ள முக்கிய சக்திகள் பார்க்கின்றன.

இந்தியாவின் இராணுவ உயர்மட்டத்தில் உள்ள சக்திகள் கூட இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரையும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பதற்கான அரசாங்கத்தின் அனுமதிக்கு ஒவ்வாதிருக்கின்றனர். (militating). பத்திரிகைச் செய்திகளின்படி, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் கார்கில் பிராந்தியத்தில் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் படைகளுக்கு இடையில் ஏற்பட்ட 1999 மோதல், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையில் யுத்தமானது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தூண்டாது, மட்டுப்படுத்தப்பட்ட அல்லது "திறமை அறியும்" மரபுவழி யுத்தமாக இருப்பதற்கு இடம் இருப்பதாக இந்திய இராணுவத்தை நம்பச் செய்துள்ளது.

காங்கிரசும் ஏனைய பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் போதுமான அளவில் கலந்தாலோசிக்கவில்லை என்ற புகாரை எழுப்பும் அதேவேளை, இதுநாள்வரை அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கின்றன. பாக்கிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை காங்கிரஸ் ஆதரிக்குமா எனக் கேட்டதற்கு, வியாழன் அன்று புதுதில்லி அறிவித்த தடைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று அறிவித்த கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர், கேள்வி கற்பனைக் கருதுகோள் அடிப்படையிலானது என்று விடைதர மறுத்தார்.

மாறாக, பெரும்பாலான பத்திரிகைகள், பிஜேபி அதன் யுத்த நாட்டத்துக்கு இந்தியாவின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதாக மிகக் காட்டமாக, குற்றம்சாட்டின. "பாக்கிஸ்தானுடன் திடீரென யுத்தம் வெடித்திருக்கிறது என கருத்துரைக்கும் வாஜ்பாயி நிர்வாகத்தால் முன்னுக்கு எடுக்கப்படுகின்ற பிடிவாதமாக வற்புறுத்துகின்ற மற்றும் அச்சுறுத்துகின்ற பிரச்சாரம் முடிவுக்கு வரவேண்டும்" என இந்து நாளிதழ், டிசம்பர்27 அன்று தனது முன்னணி தலையங்கத்தில் அறிவித்தது. "....அரசியல்-ராஜதந்திர அல்லது இராணுவ-பொருளாதார அளவீடுகளைக் கொண்டு அளவிடும் ஒவ்வொரு மதிப்பீட்டாலும், தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கும் வழிகளை அகழ்ந்தெடுப்பதில் இந்தியாவின் சுயநலன் இருக்கிறது.... இந்த நேரத்தில் புதுதில்லியோ இஸ்லாமாபாத்தோ உண்மையில் தீர்க்கமான இராணுவ வெற்றியை அடையப்போவதில்லை என்பதை வாஜ்பாயி நிர்வாகம் எவ்வளவு விரைவில் உணருமோ அவ்வளவுக்கு இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லது... சிறுபிள்ளைத்தனமாக இருக்கக் கூடாது."

பாக்கிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவான இந்திய செல்வந்தத் தட்டுக்குள் உள்ளவர்கள், காபூலில் இருந்த நட்பு அரசாங்கத்தை இழந்ததால் முஷாரப் அரசாங்கம் அரசியல் ரீதியாக மற்றும் இராணுவ ரீதியாக பலவீனமாக இருக்கிறது என்று வாதிடுகின்றன்ர். ஆனால் திட்டவட்டமாக அவரது அரசாங்கமும் பாக்கிஸ்தானின் பூகோள அரசியல் நிலையும் பலவீனம் அடைந்து இருப்பதன் காரணமாகத்தான், எந்த ஒரு இந்திய நடவடிக்கையையும் மூர்க்கமான பலத்துடன் எதிர்க்குமாறு முஷாரப் அரசாங்கம் கடும் அழுத்தத்தின் கீழ் உள்ளது. இந்தியாவைத் தடுப்பதற்கு பெரும் விலைதான் தலிபானுக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய அரசுகளை ஆதரிப்பதற்கான தமது முடிவுக்கு பிரதான காரணம் என்று அவரது தேசிய உரையில் குறிப்பிட்டார்.

வாஷிங்டனும் தெற்காசிய யுத்த நெருக்கடியும்

®சம்பர் 13 தாக்குதலை அடுத்து உடனடியாக, அமெரிக்க அரசு அதிகாரிகள் பாக்கிஸ்தானுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு, குறைந்தது ஆசாத் காஷ்மீரில் உள்ள கொரில்லா தளங்களைத் தாக்குவதற்கு பச்சை விளக்கு காட்டுவது போல் காணப்பட்டனர். பின்னர் அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெல், டிசம்பர் 13 சம்பவங்களை இந்தியா-பாக்கிஸ்தான் கூட்டு விணசாரணைக்காக அழைப்பு விடுத்ததன் மூலம் சிவப்புக் கொடி காட்டினார். அண்மைய நாட்களில் வாஷிங்டன், எந்த விதமான இந்திய இராணுவ நடவடிக்கைக்கும் எதிரான அதன் எதிர்ப்பில் என்றுமில்லாத அளவு அழுத்தமாக இருக்கிறது. அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் அவரது அதிகாரிகள் பாக்கிஸ்தானிய சர்வாதிகாரி பர்வெஸ் முஷாரப்பைப் புகழவும் கட்டுப்படுத்தவும் திரும்பத்திரும்ப அழைப்புக்களை விடுத்தனர்.

வெள்ளி அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் புஷ், இந்தியா நடவடிக்கை எடுக்கக் கோரியதற்கு முஷாரப் "செயலூக்கத்துடனும் தீவிரமாகவும்" பதிலிறுத்திருக்கிறார் என்றும் பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகளால் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஐம்பது பேர் கைது செய்யப்பட்டதான அறிவிப்பை இந்தியா கவனிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்கு முந்தியநாள், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ் பீல்ட், இந்திய அச்சுறுத்தலின் பொருட்டு பாக்கிஸ்தான் -ஆப்கான் எல்லையில் இருந்து தனது வீரர்களை அகற்றாமல் இருப்பதற்காக முஷாரப்பை புகழ்ந்தார். அங்கு அவர்கள் அல்கொய்தா போராளிகளை வேட்டையாடுவதில் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர். "இது நாம் நமது கண்களை மிகக் கவனமாகவைத்திருக்க வேண்டிய ஒன்றாகும் மற்றும் இந்த விஷயத்தின் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறை பற்றி தெளிவுபடுத்தியுள்ளது இருபகுதியினருக்கும் தெரிந்ததாகும்" என்று ரம்ஸ் பீல்ட் கூறினார். பாதுகாப்பு செயலாளர், இந்தோ-பாக்கிஸ்தானிய பதட்டங்கள் மேலும் வெடிக்குமானால், பாக்கிஸ்தான் அதன் வான்பிராந்தியத்தை அமெரிக்கா பயன்படுத்துதற்கு மறுக்கலாம் அல்லது மட்டுப்படுத்தலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினார்.

ரம்ஸ் பீல்டினது அல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் அரசுத்துறையில் உள்ள மூலோபாய வல்லுநர்களைப் பொறுத்தமட்டில் பெரிதும் கவலைதரத்தக்கது, இந்திய இராணுவ எதிர்வினை என்று கூறப்படுவதுடன் தெற்காசியாவில் உள்ள சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனால், ஒரேயடியான யுத்தத்தையும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் ஆபத்தையும் தோற்றுவிக்கும் என்பதாக இருக்கிறது. அவர்களது குமுறல் ஒருபுறம் இருக்க, இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய அரசாங்கங்கள் இரண்டும் பலவீனமான ஆட்சிகளாக உள்ளன. அவை அதிதீவிர பேரினவாத மற்றும் மத அடிப்படைவாத சக்திகளுக்கு நன்றிக்கடன் பட்டவைகளாக உள்ளன மற்றும் அவை ஊழல் மிக்க பணத்துக்கு விலைபோகின்ற ஆளும் தட்டுக்களின் சலுகையை உயர்த்திப் பிடிக்கின்றன.

"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" இந்தியா கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அழைப்பில், புஷ் நிர்வாகமானது தானே வரிசையாய் முரண்பாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறது --முரண்பாடுகளை இந்தியாவில் உள்ள இந்து பேரினவாத வலதுகள் விரைந்து சுட்டிக் காட்டுகின்றனர். பயங்கரவாதத்தின்மீது யுத்தம் தொடுக்க அரசுகளுக்கு இடையிலான உறவுகள் சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்ட கொள்கை கோட்பாடுகளை அமெரிக்க ஐக்கிய அரசுகள் மிதித்துத்தள்ள முடியுமானால், ஏன் இந்தியாவால் முடியாது? காபூலுடன் அமெரிக்கா பேசுவது ஒரு புறம் இருக்கட்டும், செப்டம்பர்11 தாக்குதலுக்கு பின் லேடன் பொறுப்பு என்பதற்கான தனது ஆதாரத்தை தலிபான் ஆட்சியாளருக்கு காட்டுதற்கு அமெரிக்கா அருளிரங்கக் கூட முடியாது எனில், ஏன் இந்தியா இஸ்லாமாபாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்? எப்படி இருந்தாலும் பாக்கிஸ்தான் ஆட்சியாளர் தலிபான் ஆட்சியாளர் அதிகாரத்துக்கு வர உதவினர் மற்றும் காஷ்மீரில் இந்திய- எதிர்ப்பு கிளர்ச்சிகளை ஆதரித்துள்ளனர்.

சில அமெரிக்க கொள்கை ஆய்வாளர்கள் --காஷ்மீர் மீது இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான அரைநூற்றாண்டு கால எல்லைத் தகராறுக்கு ஒரு தீர்வினைத் தேடலில் இணைந்து மற்றும் இறுதியில் தெற்காசியாவில் அமைதிக்கு உத்தரவாதம் செய்பவராக செயல்படவுமாக--வாஷிங்டன் தெற்காசியாவில் மிகவும் செயலூக்கமான பாத்திரம் ஆற்ற நிர்பந்திக்கப்படலாம் என கருத்துரைத்துள்ளனர். அமெரிக்கா கருதும் அத்தகைய பாத்திரமாற்ற பல்வேறு தடைகள் உள்ளன. அது பிரதானமாக முடிவில்லாத இராணுவ மற்றும் பொருளாதாரச் சுமைகளைக் கொண்டுவரும். பிராந்திய வல்லரசாக தன்னைக் கருதிக் கொள்ளும் இந்தியா, அத்தகைய எந்தவிதமான வெளியார் தலையீட்டையும் எதிர்க்கும். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் தாங்கள் நீண்டகாலமாக புவிசார்- அரசியல் நலன்களைக் கொண்டிருக்கும் உலகின் இப்பகுதியில் அமெரிக்கா பெரியளவில் வருகை தருவது சிறிதும் விருப்பமில்லாமல் இருக்கும். அதுவும் முக்கியமாக, புஷ் நிர்வாகத்துக்கு அத்தகைய நோக்கங்கள் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை செயற்படுத்த பாக்கிஸ்தானுடைய ஆதரவை உத்தரவாதம் செய்வதில் மிக ஆர்வமுடன் அமெரிக்கா இருந்த அதே வேளை, சுற்றியுள்ள பிராந்தியத்தின் மீது அதன் நடவடிக்கையின் விளைவு தொடர்பாக ஏதாவது சிந்தனையோ அல்லது அக்கறையோ கொண்டிருக்குமானால் சிறிய அளவிலேயே கொண்டிருந்ததுடன் அது மத்திய ஆசியாவில் ஈடுபட்டது. இருப்பினும் ஒன்று நிச்சயம்: புஷ் நிர்வாகமானது, அமெரிக்க இராணுவ பலத்தை புதைசேற்றில் அதாவது இந்தியா-- பாக்கிஸ்தான் தகராறில் அமிழ்ந்துபோகும் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கட்டவிழ்த்து விடவில்லை. அதன் பார்வைகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் சேர்ம இருப்புக்களில்தான் உறுதியாக நிலை நாட்டப்பட்டுள்ளது.

இந்திய-பாக்கிஸ்தான் மோதல்களுக்கான வேர்கள் துணைக்கண்டம் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்யப்பட்டதில் காணப்படுகின்றன. அப்பிரிவினை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும் தோன்றிக் கொண்டிருந்த இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்தாலும் 1947ல் திணிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர்11 க்குப் பின்னர் புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான், நீண்டகாலமாக உள்ளே புழுங்கிக் கொண்டிருந்த மோதலை தெற்காசிய மக்களுக்கான உள்ளுறை ரீதியாக அழிவுகரமான விளைபயன்களுடன், கொதிக்கும் நிலைக்குக் கொண்டு வந்தது.