World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மருத்துவமும் சுகாதாரமும்

Britain: High Court decision attacks embryo-based medical science

பிரிட்டன்: உயர்நீதிமன்ற தீர்ப்பானது ஆரம்பநிலைக்கரு அடிப்படை மருத்துவ விஞ்ஞானத்தை தாக்குகிறது

By Chris Talbot
8 January 2003

Back to screen version

டிசம்பரில் பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பானது, தம்பதியரின் குழந்தையின் திசு வகையை தீர்மானிக்கும் ஆரம்பநிலைக் கரு சோதனைக் குழாய் (Screening test tube embryos) மருத்துவ முறைக்கு எதிராக அமைந்துள்ளது.

ராஜ், ஷகானா ஹஷ்மி தம்பதியர் கடந்த ஜூலை 2002 இருந்தே கருத்தரிக்க சோதனைக்குழாய் யுக்தியை பின்பற்றி வருகின்றனர். அவர்களின் மூன்று வயது மகனான, ஜெயினின் திசுவகைக்கு ஒத்தவகையில் கருத்தரிக்கும் குழந்தையின் தொப்புள்கொடி அமைவதற்காகத்தான் இந்த யுக்தியின் முயற்சியாக இருக்கிறது. பேற்ரா-தலசீமியா என்ற ஆபத்தான இரத்தக்கோளாறால் அவதிப்படும் ஜெயினுக்கு, மேற்கூறிய திசுவிலிருந்து கல மாற்று (cell transplant) முறையை கையாண்டு குணப்படுத்த மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். சோதனைக்குழாய் (In vitro fertilisation) IVF சிகிச்சை என்ற முறையால் பாதிப்புக்குள்ளான அந்த குழந்தையின் திசு வகையை ஒத்த ஆரம்ப நிலைக் கருவைத் தான் ஷகானா ஹஷ்மியின் கருப்பைக்குள் மீள்பதிப்பு (Re-implanted) செய்து வைக்கப்படும்.

கருக்கலைப்புக்கு எதிரான பிரச்சாரக்குழுவான, "மனித மறுஉற்பத்தி நீதிநெறிகள் பற்றிய விமர்சனக்குழு" (கோர்), (Comment on Reproductive Ethics -Core) உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. ஒரு ஆரம்க நிலைக் கருவை அழிப்பதா வேண்டாமா என்று மருத்துவ ரீதியில் தீர்மானிப்பது நீதிநெறியல்ல என்று நம்பும் கத்தோலிக்க தேவாலய ஆதரவை இக்குழு பெற்றுள்ளது. இக்குழுவின் வாதம் முற்றிலும் மதரீதியாகவும் விஞ்ஞானம் சாரா கருத்து விவாதமாகவும் உள்ளது. உண்டாகும் கருவுக்கு மூளை மற்றும் இதர முக்கிய உடல் உறுப்புகள் வளர்ச்சியடையும் முன்பே, அக்கருவுக்கு ஒரு வளர்ச்சியடைந்த மனிதனாகவும் அதற்கும் ஒரு குழந்தையைப்போல, வயது வந்தவரைப்போல ஒரு வாழ்க்கை உண்டு என்கிறது. தாராளமான நிதியுதவிகளைப் பெற்றுத்தான் கோர் குழுவானது, ஆரம்ப நிலைக்கரு சம்பந்தப்பட்ட மருத்துவ விஞ்ஞானத்தை எதிர்த்து வருகிறது: குறிப்பாக, பரம்பரைக்கல (Stem cell) வளர்ச்சி ஆராய்ச்சியையும் எதிர்க்கிறது.

ஐவிஎஃப் (IVF) சிகிச்சை மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்து ஆரோக்கியமான சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளதால், பிரிட்டனில் ஐவிஎஃப் சிகிச்சைக்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. 1990ல் பாராளுமன்றம் ஒரு சட்ட மூலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அச்சட்ட மூலமானது (The Human Fertilisation and Embryology Authority (HFEA) என்ற நிர்வாகத்தை அமைத்தது. இவ் அமைப்பானது, மருத்துவர்கள் பிரயோகிக்கும் சிகிச்சை முறைகளை கண்காணிக்கும். ஐவிஎஃப் சிகிச்சையில் சில ஆரம்ப நிலைக்கருக்களை தெரிவு செய்வதும் மற்றவைகளை ஒதுக்கித்தள்ளுவதும் அவசியமாக இடம்பெறும் என்ற போக்கைத்தான் கோர் குழுவானது எதிர்க்கின்றது.

கோர் குழுவானது ஒரு சட்டரீதியான நுணுக்கத்தை பயன்படுத்த முடிந்தது. அதாவது, எச் எஃப் இ ஏ (HFEA) அமைப்புக்கு, மற்றொருவரின் தேவைக்காக ஆரம்ப நிலைக் கருவை தேர்வுசெய்யும் அதிகாரம் இல்லை என்றது (இங்கே தேவை ஏற்படுவது அந்த நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு). ஆரம்ப நிலைக் கருக்கள் முறை (Screening embryos) மூலம் மரபணு கோளாறுகளை கண்டுபிடித்து அக்குறைகளுடன் ஒரு குழந்தை பிறப்பதை தடுக்க, இத்துறை மருத்துவர்களுக்கு எச் எஃப் இ ஏ (HFEA) கொடுத்துள்ள உரிமத்தை இவ் வழக்கு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

"முன்று வயது உயிரை காப்பாற்றுவதை காட்டிலும் மதக்கோட்பாடுகளை மதிப்பதுதான் முக்கியம்" என்று மிகத்தெளிவாக மத பிடிவாத கொள்கையை பாதுகாக்கின்றார் கோர் குழுவின் தொடர்பு சாதன பேச்சாளர் ஜோசபின் கிவின்ட்வேல். ஒரு குழந்தையின் உயிருக்காக மற்றொன்றை பலியிடுவது என்பதை கோர் குழுவானது தொடர்ந்து எதிர்த்து வரும், அது எத்தகைய உணர்ச்சிபூர்வமானதாக இருந்தாலும், எந்த சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட திட்டங்களை ஊக்குவிக்கும் போக்குகளையும் எதிர்க்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதோடு க்வின்ட்வேல். "இத்தகைய முடிவை எடுக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படாத குழு உறுப்பினர்கள் என்பதாலும், இப்பிரச்சனையின் முக்கியத்துவம் அறிந்து இதை பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும்." என்கிறார்

ஆனால் இந்த விவாதம் போலியானது. ஏனென்றால், பெரும்பாலான மக்கள் தொகையினர் இந்த வகை ஐவிஎஃப் (IVF) சிகிச்சைக்கு ஆதரவாய் உள்ளனர். கோர் குழு மற்றும் வலதுசாரிகள் ஜனநாயகத்திலோ மற்ற பிரச்சனைகளிலோ ஆர்வம் காட்டுவதில்லை. தேசிய மருத்துவ சேவையை பங்குபோட்டு தனியார்மயமாக்கியபோதும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற போதும், அநேகமாய் ஒட்டுமொத்த ஜனத்தொகையே எதிர்த்தபோதும்கூட, கோர் குழு ஒன்றும் சொல்லவில்லை.

ஆரம்ப நிலைக் கரு (Embryo screening) பரிசோதனை பிரச்சனையை பாராளுமன்றத்தில் ஏன் எழுப்பவேண்டும் என்கிறது கோர் குழு? மருத்துவ தொழில்நுட்பத்தால் அடுத்த பத்து ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சையில் புரட்சி ஏற்பட்டு "பரம்பரைக் கலம்" (Stem cell) மூலம் மனித உடல் சீரமைக்கப்படப்போகின்றது, உடல் உறுப்புகளை வளர்த்து பாதிக்கப்பட்டதற்கு பதிலாக மாற்று உறுப்புக்களை பொருத்தி இயக்கவைக்க முடியுமாதலால், அத்தகைய செயலை எதிர்த்து ஆரம்ப நிலைக் கரு பரிசோதனை பிரச்சனையை முன்னிறுத்தி கோர் குழு பிரச்சாரம் மேற்கொள்கிறது .

பரம்பரைக் கல (Stem cell) ஆராய்ச்சியால் அல்ஷிமர் மற்றும் பார்க்கின்சன் நோயினாலும், முதுகுத்தண்டு பாதிப்பினாலும் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நல்ல சிகிச்சை வாய்ப்பும், குணமும் கிடைக்க வழிசெய்யும். இதன் வளர்ச்சி மிகவும் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், விஞ்ஞானிகள் இதுபற்றி தீவிரமாய் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பரம்பரைக்கல கீற்றுகள் (Stem cell lines) பெறும்பாலும் மனித ஆரம்ப நிலைக் கருவிலிருந்துதான் எடுக்கப்படுகின்றது. கோர் அமைப்பும் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாத ஆதரவாளர்களும், பாராளுமன்றத்தில் இது விவாதிக்கப்படவேண்டும் என்பதை அமெரிக்காவிலும் தங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவார்கள் என நம்புகின்றது.

குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரிப் பிரிவின் கருக்கலைப்பை எதிர்ப்போரின் ஆதரவை பெறவேண்டும் என்பதால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், சென்ற ஆண்டில் இத்தகைய ஆராய்ச்சிக்கு மத்திய நிதியுதவி வழங்குவதில் கடுமையான கட்டுப்பாட்டை கொண்டுவந்தார்.

இதைப்பற்றிய ஒரு பாராளுமன்ற விவாதமானது, தொடர்புச்சாதனங்களின் பிற்போக்கான மனநோய்க்கு சாட்டையாக இருக்கும். இதைப்பற்றிய முன்னோட்டத்தை சென்ற சில தினங்களாக ரேலியன் மதப்பிரிவினரால் (Raelian religious cult) "நகலாக்கம" (Cloning) செய்த மனித சிசுக்கள் "முட்டாள்" பயங்களுடைய விஞ்ஞானிகள் உருவாக்குகின்ற "Designer Babies" உண்டாக்கிய பீதியால், பிளேயர் அரசுக்கும் நெருக்குதல் உண்டாக்கிட முயற்சித்தால், (புஷ் நிர்வாகத்துக்கு உண்டானதைப் போன்று) இங்கும் அப்படிப்பட்ட மருத்துவ பயிற்சிக்கும், ஆரம்ப நிலைக் கரு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக்கும் எதிராக சட்டம் கொண்டுவரப்படலாம்.

பரம்பரைக் கல (Stem cell) ஆராய்ச்சியில் உலகிலேயே பிரிட்டன்தான் முதன்மைப்பெற்று தலைமை வகிக்க முயன்று வருகிறது. புஷ் நிர்வாகத்தின் எதிர்க் கட்சியினரை கவர்ந்து, உயிரியல் தொழில்நுட்ப கார்பரேஷன்களிடம் இதற்கு நிதியுதவி கோரிவருகின்றது. பிரிட்டிஷ் அறிவியல் அமைச்சர் செயின்ஸ்பரி இத்துறையின் ஆராய்ச்சிக்கு அதிக நிதியுதவி தர வாக்குறுதி தந்துள்ளதால், தொழிற் கட்சியின் ஆதரவாளர்களின் வர்த்தக லாபத்தை அதிகரிக்க முடியும் என நம்புகின்றது. கோர் குழுவானது இப் போக்கை பின்தள்ள முயற்சிக்கின்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பைப்பற்றி மருத்துவ கேந்திரங்கள் இதுவரை சிறிய விமர்சனத்தை தான் செய்திருக்கின்றது. பிரிட்டிஷ் மருத்துவ கழகத்தின், நீதிநெறிகள் மற்றும் அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் விவின் நாதன்சன் கூறுகையில், "எல்லா குழந்தைகளையும் நாம் அவர்களுக்காகவே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், அவர்களை தன் சகோதர, சகோதரியை பெரிதும் காப்பற்றக்கூடியவர்கள் என்று மட்டுமே நாம் காணக்கூடாது" என்ற கருத்து தெரிவிப்பானது கோர் அமைப்புக்கு சலுகைகள் காட்டுவதுபோல் அமைந்தாலும், திசுவகை உபயோக முறையை ஆதரித்து வருகிறார். எச் எஃப் இ ஏ (HFEA) வழக்கு தொடர்பாக கொடுத்த வேண்டுகோளில், தற்போதைய அரசு ஆரம்ப நிலைக்கரு சார்ந்த தொழில்நுட்ப முறையை ஆதரித்தும், அரசு எடுத்த தீர்மானத்தை தொடா்பு சாதனங்கள் கவனம் செலுத்தாத முறையில் மாற்றியமைக்க வேண்டும் என்கிறது. உடனடி விளைவு எதுவாயினும் சரி, கோர் குழு போன்ற அபாயமிக்க பிற்போக்கு குழுக்களால் முடக்கப்பட உள்ள விஞ்ஞான மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் சிறிதளவும் குறைக்கப்படக்கூடாது என்பதைத்தான் அமெரிக்காவின் அனுபவம் காட்டுகின்றது.

See Also :

ஆரம்ப நிலைக்கரு (embryo ) :

ஆரம்ப நிலைக்கரு எனப்படுவது(embryo ), கருத்தரித்து எட்டுக்கிழமைகள் வரை வளர்ச்சியடைந்த ஒரு சிசுவின் நிலையை குறிப்பதாகும். எட்டுக்கிழமைகளின் பின் இது fetus என அழைக்கப்படும்.
| Top |

In vitro fertilisation (IVF) :

in Vitro எனப்படுவது, பெண்ணினுடைய சுலகத்திலிருந்து சேகரிக்கப்படும் முட்டைகளை, ஆணினுடைய விந்துடன் ஆய்வு கூடத்திலுள்ள ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்க்கப்படுவதாகும். "in Vitro" என்பதன் இலத்தீன் சொல்லின் அர்த்தம் "in glass" என்பதாகும். இது ஆய்வு கூடத்திலுள்ள கண்ணாடி பாத்திரத்தில் கருத்தரிப்பு(fertilisation) நிகழ்வதைக் குறிக்கின்றது. பொதுவாக எல்லோராலும் இதை பரிசோதனைக்குழாய் குழந்தை ("test-tube baby") என்று அர்த்தப்படுத்தப்படுகிறது.
| Top |

பரம்பரைக் கலம் (Stem cell) :

பரம்பரைக் கலம் என்பது, ஒருவரின் வாழ்நாளின் முழுக் காலப்பகுதியிலும் நடைபெறும் உடலியல் பாகங்களின் வளர்ச்சியை அதாவது வரையறையற்ற காலப்பகுதிகளாக ஒரு பரம்பரைக் கலம் ஆனது அதைப் பிரித்து செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது. அதாவது தானாகவே மறு உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது. சரியான நிலைமையின் கீழ் அல்லது சரியான சமிக்கையில் பரம்பரைக் கலமானது பல வித்தியாசமான கல வகைகளை பிரித்து அவைகளை உருவாக்க கூடியது. அவைகள் ஒன்று சேர்ந்து ஒரு உடலை உற்பத்தி செய்யும். அதாவது பரம்பரைக் கலமானது மனித உடலிலுள்ள கலங்களின் பண்புகளிற்கு ஏற்றவாறு அதாவது இருதயக்கலங்கள், தோல் கலங்கள் அல்லது நரம்பு கலங்களின் வடிவங்களையும் அதற்குரிய சிறப்பான தொழிற்பாடுகளையும் உற்பத்தி செய்து அவற்றை வளர்ச்சியடைந்த கலங்களாக உருவாக்கும்.
| Top |

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved