World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Regional elections in France

A defeat for the camp of the conservative government

பிரான்சில் பிராந்திய தேர்தல்கள்

பழமைவாத அரசாங்க முகாமிற்கு தோல்வி

By Peter Schwarz
25 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறன்று நடைபெற்ற பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களில் பழமைவாத ஆளும் கட்சிகளை மக்கள் தெளிவாக ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்.

முதல் சுற்று வாக்குப்பதிவில், பிரெஞ்சு ஜனாதிபதியின் UMP, (Union for a Popular Movement) கட்சி வலதுசாரி தாராள கட்சியான UDF (Union for the French Democracy) ஆகியவை 34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றன. 2002 தேர்தலில் பதவியிலிருந்து இறக்கப்பட்ட இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் - சோசலிஸ்டுகள் (PS) கம்யூனிஸ்டுகள் (PCF), பசுமைக் கட்சிகள் மற்றும் தீவிரப் போக்கினர் (PRG) ஆகிய கட்சிகள் இணைந்து 40 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. தீவிர வலதுசாரி தேசிய முன்னணி (FN) 15 சதவீத வாக்குகளையும் தீவிர இடதுகளான LO மற்றும் LCR ஆகியவை 5 சதவீத வாக்குகளையும் பெற்றன.

பிராந்திய பாராளுமன்றங்களை அமைப்பதற்கான இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்று வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அந்த வாக்கு பதிவில் குறைந்த பட்சம் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள்தான் போட்டியிட அனுமதிக்கப்படும். பழமைவாத வலதுசாரிகள் பல பிராந்தியங்களில் பதவியை இழப்பார்கள் என்று தற்போது மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரையில் அவர்கள் 22 பிராந்தியங்களில் 14-களில் ஆட்சிபுரிந்து வந்தார்கள்.

அரசாங்கத்திற்கு ஏற்பட்ட தேர்தல் சரிவு UMP முடிவுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கட்சியில் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் ஆகியோர் அடங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிராக்கிற்கு ஆதரவாக, பழமைவாத வலதுசாரி முகாம்களை ஐக்கியப்படுத்தி உருவாக்கப்பட்ட UMP-க்கு தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. ஞாயிறன்று நடந்த வாக்குப் பதிவில் UMP-க்கு 23 சதவீதம் பேர்தான் வாக்களித்தனர். 11 சதவீதம் பேர் வலதுசாரி தாராளவாத UDF-ற்கு வாக்களித்தனர். 2002-ல் UMP-யுடன் UDF இணையவில்லை, தேசிய நாடாளுமன்றத்தில் மிக பலவீனமாக இருந்தது. வாக்குப் பதிவு 61 சதவீதம் இருந்தது (இது முந்திய பிராந்திய தேர்தல்களைவிட சற்று அதிகம்), இதன் பொருள் என்னவென்றால் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் ஏழு பேரில் ஒருவர்தான் UMP கட்சிக்கு வாக்களித்திருக்கின்றனர்.

Poitou - Charentes பிராந்தியத்தில் முடிவுகள் அரசாங்கத்திற்கு தோல்வி ஏற்பட்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. பிரெஞ்சு பிரதமராவதற்கு முன்னர், 14 ஆண்டுகள் பிராந்திய தலைவராக ரப்பரின் பதவி வகித்தார். இந்த பிராந்தியத்தில் இடது கூட்டணிக்கு சாதகமாக பதிவாகியுள்ள 13 சதவீத வாக்குகள் இரண்டாவது சுற்றிலும் அதைக் கடந்து செல்லலாம்.

மக்களது மனநிலைக்கு சோதனைக்களம்

பிராந்தியத் தேர்தல்கள் பொதுமக்களது கருத்துக்கு முக்கியமான சோதனை களம் என்று கருதப்படுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் முதல் தடவையாக இப்போதுதான் முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தேர்தல் நடந்திருக்கிறது.

அந்த நேரத்தில் வியப்பளிக்கும் வகையில், தீவிர வலதுகள் லு பென் தலைமையில் அதிக வாக்குகளை பெற்ற பின்னணியில் இந்தத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அப்போது தேசிய முன்னணியின் தலைவர் சோசலிஸ்ட் வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் முதல் சுற்றில் ஜனாதிபதி சிராக்கை எதிர்த்து நின்றார். இரண்டாவது சுற்றில் ஜோஸ்பனின் இடதுகளும், தீவிர இடது பிரிவுகளும் அப்போது சிராக்கிற்கு ஆதரவாக திரண்டுநின்று அவரை குடியரசின் முக்கியத்துவத்தை உறுதியாக காத்து நிற்பவர் என்று அறிவித்தனர். கோலிசவாதிகள் தலைவர் என்ற வகையில், சிராக் முதல் சுற்றில் 5-ல் ஒரு பங்கு மட்டுமே பெற்றார். இரண்டாவது இறுதி சுற்றில் புதிய ஆதரவுடன் 80 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று நிலைச்சான்றில் பதியவைக்கும் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த புதிய ''வாய்ப்பிற்கான வழியை'' எப்படி சுரண்டிக் கொள்வது என்பதை சிராக் அறிந்திருந்தார். இந்த எதிர்பாராத ஊக்குவிப்பின் காரணமாக தனது செல்வாக்கை பிளவுபட்ட வலதுகளை ஐக்கியபடுத்தி தனது பக்கம் அணிவகுத்து வரச்செய்தார். புதிய அரசியல் உருவாக்கத்துடன் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெற்றுள்ள பிராந்திய தேர்தல் முடிவுகள் 2002 தேர்தலில் வலுவான உறுதியான வலதுசாரி உருவானது மக்களது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட செப்பிடுவித்தைதான் என்பது தெளிவாகிறது. வலதுசாரிகளின் வேலைத் திட்டத்திற்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லை. அவர்களுக்கு முன்னிருந்தவர்களைப்போல் ரஃப்ரன் அரசாங்கமும் வெகுஜன எதிர்ப்பை சந்தித்தது, நலன்புரி அரசு திட்டங்களை வெட்டுகின்ற நடவடிக்கைகளையும், பொதுத் துறையை தனியார்மயமாக்க மேற்கொண்டபோதும், ரஃப்ரனின் அரசிற்கெதிராக வேலை நிறுத்தங்களும், கண்டனப் பேரணிகளும் நடந்தன. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் அரசாங்கத்தின் செல்வாக்கு இவ்வளவுதான் என்று நிரூபித்துவிட்டது.

முந்திய தேர்தல்களைப்போல் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள்மீது மக்களுக்கு ஏற்படும் பரவலான அதிருப்தி மூலம் மீண்டும் தேசிய முன்னணிதான் பயனடைந்துள்ளது. 1998-ல் நடைபெற்ற பிராந்தியத் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடும்போது FN தற்போது 15 சதவித வாக்குகளையும் பெற்றுள்ளது. தீவிர வலதுசாரிகள் 2002 தேர்தல்களோடு ஒப்பிடும்போது 16.5 சதவித வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது சுற்றுவாக்கு பதிவில் 17 பிராந்தியங்களில் FN-ற்கு பிரதிநிதிகள் இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு பிராந்தியத்திலும் FN ஆட்சி அதிகாரத்திற்கு வருவது அரிது.

FN கொள்கைகளில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதன் மூலம் அதன் செல்வாக்கை சிதைத்து விட முடியுமென்று அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் மீறி FN வாக்காளர் ஆதரவை பெற்றிருக்கிறது. பிரெஞ்சு நாட்டு உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோஸி ''சட்டம் காப்பவராகவும்'' ''தேசிய போலீஸ்காரராகவும்'' உருவாக்கப்பட்டார். கிராமப்புறத்திலிருந்து வந்த ரஃப்ரன் பிரான்சின் உயர்ந்த மக்கள் படிக்கின்ற கல்லூரிகளிலிந்து வந்த அரசியல் செல்வந்த தட்டு அகங்கார குழுவினருக்கு பதிலீடு என சித்தரித்துக்காட்டப்பட்டார். தேர்தல்களுக்கு முன்னர் ரஃப்ரன் உணவு விடுதி உரிமையாளர்களுக்கு வரிகளை குறைத்தார் என்றாலும் அவர்களது ஆதரவை அவர் பெற முடியவில்லை. அந்த தரப்பினர் பாரம்பரியமாக FN ஐ ஆதரிப்பவர்கள் ஆவர்.

FN-ற்கு கிடைத்த ஆதரவை விட மிகப்பெருமளவில் வியப்பை உருவாக்கியிருப்பது இரண்டாண்டுகளுக்கு முன்னர் படுதோல்வியை சந்தித்த இடது கட்சிகள் பெற்ற வாக்குகள்தான். 1998 பிராந்திய தேர்தல்களில் பெற்றதைவிட அவர்கள் 6 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்றிருக்கின்றனர் மற்றும் 1997 நாடாளுமன்ற தேர்தல்களில் பெற்ற மொத்த (41 சதவீத) வாக்குகளைவிட தற்போது ஒரு சதவீதம் தான் குறைவாக பெற்றிருக்கின்றனர்.

தனித்தனி பிராந்தியங்களில் பல்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து பல்வேறு இடது கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. எனவே தேசிய அளவில் துல்லியமாக அவர்களது செல்வாக்கை மதிப்பிடமுடியவில்லை. ஆனால் தனிப்பட்ட முடிவுகளை சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளோடு சேர்த்து பார்க்கும்போது அவர்கள், கணிசமான அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். Nord-Pas-de-Calais பிராந்தியத்தில் PCF 10 சதவீதத்திற்கு மேலும், Auvergne பகுதியில் 9 சதவீதத்திற்கு மேலாகவும் Ile-de-France பகுதியில் 7 சதவீதத்திற்கு மேலாகவும் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2002 - ல் அக்கட்சி சராசரியாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றது.

தீவிர இடதுகள்

அதிகாரபூர்வமான இடது கட்சிகளுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பது, அவர்கள் மீது மக்களது நம்பிக்கை மீண்டும் துளிர்த்து விட்டதால் அல்ல, மாற்று எதுவும் ஏற்றுக்கொள்ள இல்லாத நிலையில் என்பதால்தான்.

சென்ற ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்கள், தீவிர இடதுகளுக்கு மிகப் பெருமளவில் வாக்காளர் செல்வாக்கு கிடைக்கும் என்று மதிப்பிட்டன. ஆனால் இப்போது நடந்துள்ள தேர்தல்களில் அண்மை ஆண்டுகளில் அக்கட்சிகளின் செல்வாக்கான 5 சதவித அளவிற்கே நிலை நாட்டப்பட்டிருக்கிறது. 1998 தேர்தல்களில் இந்தக்கட்சிகள் 4.3 சதவித வாக்குகளை பெற்றன. பல வேட்பாளர்களை நிறுத்தின. 1999 தேர்தலில் 5 சதவிதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இக்கட்சிகள் நுழைய முடிந்தது. 2002ல் Arlette Laguiller LO-வும் Olivier Besancenot (LCR)-ம் முதல் சுற்றில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றன. PCF - ஐப்போல் மூன்றுமடங்கு வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

நடப்பு தேர்தல்களில் தாங்கள் குறைவான வாக்கு பெற்றதற்கு, ஜனநாயக விரோத தேர்தல் நடைமுறைகளை இரண்டு கட்சிகளும் பழிபோட்டுள்ளன. தற்போது பிராந்திய தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் விதியின்படி முதல் சுற்றில் 10 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகள், இரண்டாவது சுற்று தேர்தலில் கலந்து கொள்ள முடியாது. இதனால் சிறிய கட்சிகள் இந்தத் தடையை தாண்ட முடியாது. உண்மையிலேயே இந்த புதிய தேர்தல் விதிமுறையின் காரணமாகத்தான், இந்த கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை தேக்க நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் தங்களை நம்பி நிற்கின்ற மக்களை அடிப்படையாகக் கொண்டு எவ்வித அரசியல் முன்முயற்சியைக் காட்டவோ மற்றும்ஒரு நோக்குநிலை வழங்கவோ அவற்றின் இயலாத் தனமை ஆகும்.

2002 ஜனாதிபதி தேர்தலில் LCR கட்சி குடியரசு முன்னணியோடு தன்னை இணைத்துக் கொண்டு சிராக்கிற்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்தது. அந்த நேரத்தில் சுதந்திரமான முன்முயற்சி எதையும் எடுப்பதை நிராகரித்து விட்டு LO கட்சி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.

இந்த ஆண்டு தேர்தலில் இரண்டு அமைப்புக்களும் தேர்தல் கூட்டணி அமைத்தன. பிராந்திய தேர்தல்களுக்காகவும் ஜூனில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களுக்காகவும் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் விரிவான உள்ளடக்கமாய் கொண்ட முன்னோக்கு எதுவுமில்லாமல், அதற்கான சமிக்கைகளுமில்லாமல், குறைந்த பட்ச பொதுவான தரநிலை அடிப்படையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தல் கூட்டணி மேடை - தனது நம்பிக்கைப் பிரகடனத்தை "profession de foi" (declaration of faith) வெளியிட்டது. அது நுனிப்புல் மேய்வதாகவும் உண்மையான உள்ளார்ந்த திட்டமில்லாததாகவும் இருக்கிறது. நடப்பு அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கடந்த கால அரசியல் அனுபவங்களையோ அவர்கள் மதிப்பீடு செய்யவில்லை. புத்தாயிரம் ஆண்டில் மிக முக்கியமான அரசியல் திருப்புமுனை ஈராக் போர் ஆகும், அது பற்றி குறிப்பு எதுவுமில்லை. அதிகாரபூர்வமான இடது கட்சிகள் சந்தித்த தோல்விகள் தொடர்பான படிப்பினைகள் எதையும் உருவாக்குவதற்கு குறைந்த பட்ச முயற்சி கூட செய்யப்படவில்லை. இந்த அனுபவங்கள் அடிப்படையில் பொதுவான கருத்துக்களையும் கூறவில்லை. அவர்களின் கூட்டு முன்முயற்சியுடன் தொடர்புபடுத்துவதில் இலக்குக் கொண்ட எந்தவிதமான அக்கறை உடைய நியாயப்படுத்தலோ அல்லது அறிவிப்பையோ ஒருவர் தேடுவதுகூட வீண் ஆகும்.

அவர்கள் வெளியிட்டுள்ள ஆவணத்தில் சமூக அநீதிகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன மற்றும் பல ''அவரச நடவடிக்கைகளுக்கான'' ஆலோசனைகளும் கூறப்பட்டிருக்கின்றன. இலாபமாக நடக்கும் கம்பெனிகளில் ஆட்குறைப்பு செய்வதற்கு தடை, சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, செல்வந்தர்கள் மீது வரி விதிப்பு, தனியார் மயமாக்குவதற்கு தடை, பொது சேவைகள் விரிவாக்கம், நகர சபைகள், வீடுகட்டும் திட்டங்களை நிறைவேற்றுவது, பாலர் பள்ளிகளை அமைப்பது மற்றும் நலன்புரி வசதிகளை பெருக்குவது ஆகிய ஆலோசனைகளை கூறியிருக்கிறார்கள். அத்தகைய நடவடிக்கைகளை எப்படி செயலுருப்படுத்திக் காட்டுவது என்பது கூறாமல் விடப்பட்டிருக்கிறது. அந்த ஆவணத்தின்படி, தேர்தலில் கலந்து கொள்வது என்பது ''போராட்டத்தை'' ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ''அரசியல் அடையாளமாகவே" பயன்படும்.

நடைமுறையில், அத்தகைய வேலைத் திட்டம் கடந்த ஆண்டுகளில் பிரான்சில் அடிக்கடி இடம்பெறும் தொழிற்சங்கப் போராட்டங்களை ஆதரிப்பதோடுசரி, தொடர்ந்து வரும் சமூக சரிவை தடுத்து நிறுத்த நடவடிக்கை எதுவும் செய்வதில்லை. ஒரு சுதந்திரமான அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்புவதற்காக, தொழிலாளர்களை செயலிழக்க பண்ணும் தொழிற்சங்க அதிகாரத்துவம், சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் இவர்களின் ஆதிக்கப்படியிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான அவசியம் பற்றி எதுவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.

இப்படி கோழைத்தனமான மற்றும் நம்பிக்கை இழந்த முன்னோக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய பரந்த தட்டினரை ஈர்க்கும் மற்றும் ஊக்கப்படுத்தும் தன்மை கொண்டதல்ல என்பது தெளிவானதாகும்.

குறிப்பாக லுத் ஊவ்றியேர், எதிர்காலம் தனக்கு இருண்டிருப்பதாக கருதுவதை மறைக்கவில்லை. சென்ற டிசம்பரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் LCR-வுடன் கூட்டு சேர்ந்து அரசியல் இயக்கம் நடத்துவதை நியாயப்படுத்தி LO தாக்கல் செய்த தீர்மானத்தில்: "வாக்காளர்கள் சமுதாயம் உற்சாகம் குன்றியதாக உள்ளது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அப்படி வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ள உற்சாக குறைவிற்கு காரணம் சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாட்டின் விளைபொருள் மட்டுமல்லாமல், சிராக்-ரஃப்ரன் அரசாங்கம் பகிரங்கமாக தொடுத்து வரும் தாக்குதல்களும் அகந்தை பேச்சும்தான்" என்று குறிப்பிட்டிருக்கிறது.

அந்த தீர்மானத்தில் கட்சி தனது சொந்த செல்வாக்கில் 3 சதவீத வாக்குகளைப் பெறுமென்றும் அதிகமாக இல்லாவிட்டாலும் NF 20 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கணித்திருக்கிறது. அது பின்வரும் வார்த்தைகளின் முடிவுறுகிறது: "நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமென்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக மிக பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டால், அதனால் படுமோசமான விளைவுகள் உருவாகும் என்பதால், அதைத் தடுப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

LCR கட்சியைப் பொறுத்தவரை, LO-வுடன் தேர்தல் கூட்டணி வைத்திருப்பது தற்காலிக அவசர நடவடிக்கை என்றே கருதுகிறது. LCR-ன் நோக்கம் விரிவான ''முதலாளித்துவத்திற்கெதிரான இடது'' அணியை உருவாக்கி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க நிர்வாக பிரிவுகளை உள்ளடக்கிய இடதுசாரி சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுதான். அதே போன்ற நோக்குநிலையின் அடிப்படையில், LCR-உடன் இணைக்கப்பட்ட பிரேசில் நாட்டுக் கட்சி லுலாவின் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து பிரேசில் அரசாங்கத்திற்கு ஒரு அமைச்சரையும் தந்திருக்கிறது, அந்த அமைச்சரது பணிகளை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஸ்பெயின் நாடாளுமன்ற தேர்தல்களைப்போல் பிரான்சின் பிராந்திய தேர்தல்கள் தொழிலாள வர்க்கத்தில் இடது பக்கம் திரும்புவதை எதிரொலிக்கிறது. ஆயினும், அப்படி இடது பக்கம் சாய்வது அரசியல்ரீதியாக முற்போக்கான வழியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவக் கூடிய ஒரு தெளிவான முன்னோக்கைப் பற்றாக்குறையாகக் கொண்டிருக்கிறது.

Top of page